Tuesday, November 23, 2021

அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே

 அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே


பயமாக இருந்தால் இன்னொருத்தர் கையை பிடித்துக் கொண்டால் பயம் போய்விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது. அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும், இருக்கும் இருக்கையின் கைப் பிடியை இறுகப் பற்றிக் கொள்கிறோம் அல்லவா? 


அன்பை வெளிப்படுத்த கை குலுக்குகிறோம்.


மனைவி/கணவன் மேல் அன்பு மேலீட்டால் அவர்கள் கையைப் பற்றிக் கொள்கிறோம். 


சில சமயம், காலையும் பற்றிக் கொள்ளலாம். பாதத்தை பற்றிக் கொல்வதும் ஒரு சுகம் தான். 


சிவனுக்கு குறை வந்தால், அபிராமியின் பாதங்களைப் பற்றி தன் தலை மேல் வைத்துக் கொள்வாராம். 


இதில் யார் பெரியவர், சிறியவர் என்பதல்ல கேள்வி. 


அளவு கடந்த பாசம். காதல். 


தலை மேல் வைத்துக் கொல்வதற்கு முன், அந்த சிவந்த பாதங்களை தொட்டு தன் மடி மேல் வைத்து இருப்பார். அதை மென்மையாக வருடி கொடுத்து இருப்பார். (பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்று முருகனைப் பற்றிச் சொல்வார் அருணகிரி), அந்தப் பாதங்களுக்கு முத்தம் தந்திருப்பார். இன்னும் இன்னும் காதல் ஏற, அந்தப் பாதங்களை தன் தலை மேல் வைத்து இருப்பார். 


இதை என்னவென்று சொல்லுவது? 


பக்தியை கடந்த, அன்யோன்யம். நெருக்கம். உருக்கம். 


அவள் பாதத்தை தூக்கி தலை மேல் வைத்தவுடன் அவருக்கு அவருடைய குறை எல்லாம் தீர்ந்த மாதிரி இருந்ததாம். 


பாடல் 


என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?

தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_23.html


Please click the above link to continue reading




என்குறை தீர = என்னுடைய குறைகள் தீர வேண்டி 


நின்று =உன் முன் நின்று 


ஏத்துகின்றேன் = உன்னைப் போற்றுகின்றேன் 


இனி யான் பிறக்கின் = இனிமேல் நான் பிறவி எடுத்தால் 


நின்குறையே அன்றி = அது உன் குறை.  உன் பக்தனுக்கு நீ முக்தி தராவிட்டால் அது உன் தப்புத்தான் 


யார் குறை காண் = வேற யாருடைய குறை? 


இரு நீள்விசும்பின் = இருண்ட நீண்ட வானத்தில் 


மின்குறை காட்டி = பளிச்சென்று குறைந்த நேரம் காட்டி மறைந்து விடும் மின்னலைப் போல 


மெலிகின்ற நேரிடை = மெலிந்த நேர்த்தியான இடையை உடையவளே 


மெல்லியலாய் = மென்மையானவளே 


தன்குறை தீர = தன்னுடைய குறைகள் தீர 


எங்கோன் = எங்கள் தலைவர் சிவ பெருமான் 


சடைமேல்வைத்த = தன்னுடைய தலைமேல் வைத்துக்கொண்ட 


தாமரையே.  = தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடையவளே 


அனுபவம் இருந்தால் அன்றிப்  புரியாது. 


"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆட்கொண்ட நேசத்தை என் சொல்வேன்" 


என்பார் பட்டர்.


அபிராமி அந்தாதி படித்தால் பாட்டை விட்டுவிடவேண்டும்.  அவர் காட்டும் அந்த நிகழ்வுக்குப் போய் விட வேண்டும். அந்த மன நிலையைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


மற்ற பாடல்கள் போல் சொல்லுக்கு பொருள் சொல்லி புரிந்து கொள்ளும் பாடல்கள் அல்ல அவை. 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எப்படி சொல்லி விளங்க வைப்பது. 


ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லாம் புரிந்து விடும். 


அபிராமி அந்தாதி கற்கண்டு போல. சொன்னால் புரியாது. மனதுக்குள் போட்டுக் கொண்டால் தித்திக்கும். 


வேறு என்ன சொல்ல?






2 comments:

  1. அற்பதமான பாடலும் அதன் விளக்கமும். சிலவற்றை மனதில் வைத்து அசை போட்டு அனுபவிக்க வேண்டும்.அப்பொழுது தான் பாடலின் ரசம் பாடுவரின் உள்ளம் புரியும்.

    ReplyDelete
  2. அபிராமி அந்தாதி - மனதை எப்படி நேரடியாக இந்தப் பாடல்கள் தொடுகின்றன! அவற்றை அனுபவிக்கும் வாய்ப்புத் தந்ததற்கு நன்றி.

    ReplyDelete