Monday, October 8, 2012

கம்பராமாயணம் - மழைகண்


கம்பராமாயணம் - மழைகண்


பெயர் சொற்கள் இரண்டு வகைப்படும். இடுகுறிப் பெயர், காரணப் பெயர்.

காரணப் பெயர் என்பது ஒரு காரணத்தால் வரும் பெயர். நாற்காலி என்பது காரணப் பெயர். நான்கு கால்கள் இருப்பதால் அது நாற்காலி.
அலைகடல், தோய்தயிர், என்பது எல்லாம் காரணப் பெயர்கள். 

ஒரு காரணமும் இல்லாமல், ஒரு பொருளுக்கு பெயர் இட்டு வழங்கினால், அதற்க்கு இடுகுறிப் பெயர். மரம், செடி என்பன உதாரணம். 

மழை கண் என்பது பொதுவாக ஒரு இடுகுறிப் பெயர்.

எப்போதும் மழை போல் பொழிந்து கொண்டு இருக்கும் கண் யாருக்கும் இருக்காது.

ஒரு உதாரணத்திற்கு சொல்வார்கள் மழை கண் என்று.

அழகுக்காக சொல்வதும் உண்டு.

எப்போதாவது சில பல நீர் துளிகள் வரலாம். அதனால் மழைக் கண் என்பதை காரணப் பெயராக கொள்ள முடியாது. 

ஆனால், ஒரே ஒரு ஆளுக்கு, மழை கண் என்பது காரணப் பெயராக இருந்ததாக கம்பன் சொல்கிறான்.

சீதை அசோக வனத்தில் இருக்கிறாள். கண்கள் நீர் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. நிற்காமல் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஏதோ அணைக் கட்டில் பெரிய ஓட்டை விழுந்தால் எப்படி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டே இருக்குமோ, அது போல் அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 

பாடல்

Sunday, October 7, 2012

இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்


இன்னிலை - சிற்றின்பம் மூலம் பேரின்பம்


ஆணும் பெண்ணும் இல்லறத்தில் கூடி காதல் இன்பம் அனுபவிப்பது இறுதியில் பேரின்பம் அடைய ஒரு வழி.

இல்லற இன்பமே இறுதி அல்ல.

கசப்பு மருந்தை நேரடியாக அப்படியே உண்பது கடினம்.

அதன் மேல் சிறிது சர்க்கரை தடவித் தந்தால், உண்பது எளிது, நோயும் குணமாகும்.

 மருந்தை கொடுத்தால் அதன் மேல் உள்ள சர்கரையையை மட்டும் ருசித்து விட்டு, மருந்தை தூக்கி எறிந்து விடுவது எவ்வளவு புத்திசாலித்தனமோ அதுபோல் இல்லற இன்பத்தை மட்டும் அனுபவிப்பது.

காதல் இன்பம் வேண்டும். ஆனால் அது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். 

பாடல் 

அபிராமி அந்தாதி - எது தவம்


அபிராமி அந்தாதி - எது தவம்


குழந்தை பிறந்தபின் ஒரு தாயின் மார்புகள் பெரிதாவது இயற்கை. குழந்தைக்கு உணவு தரவேண்டி இயற்கை அப்படி ஒரு மாற்றத்தை பெண்ணின் உடலில் உண்டாக்குகிறது. 

அபிராமி இந்த உலகுக்குத் தாய். அவளுக்குத்தான் எத்தனை குழந்தைகள். எத்தனை யுகங்களாய் உணவளித்து வருகிறாள். அபிராமி பட்டர் அவளின் மார்புகளை பார்க்கிறார். கவர்ச்சி அல்ல, கருணை அவருக்குத் தெரிகிறது. அவளை அவர் தாயகப் பார்க்கிறார். 

சிறிய இடை, பட்டுச் சேலை, பெரிய மார்புகள், அதன் மேல் தவழும் முத்து மணி மாலை, தலையில் பிச்சிபூ, கரு கரு என்று முடி, கண் மூன்று...பார்த்துக்கொண்டே இருக்கலாம்...இதை விட வேறு தவம் என்ன இருக்கிறது ?

பாடல்

Saturday, October 6, 2012

திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


திருக் குற்றாலக் குறவஞ்சி - மன்மதனின் சேனை


மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.

அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள். 

அந்தப் பெண்கள். வில் போன்ற புருவத்தை வளைத்து, மீன் போன்ற கண்களில் வேல் போன்ற பார்வையை தீட்டி, தங்கள் கொலுசு என்ற பறை முழங்க சண்டைக்கு வருகிறார்கள். 

இனிமையான கற்பனை கொண்ட அந்தப் பாடல் 

அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்

அபிராமி அந்தாதி - நஞ்சை அமுது ஆக்கியவள்


நாம் சில சமயம் நல்லது நினைத்து செய்யும் காரியங்கள் வேறு விதமாக முடிந்து விடுவது உண்டு. 

அமுதம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள்.

அமுதோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது.

என்ன செய்வது ?
நமக்கு அமுதம் வேண்டும், நஞ்சு வேண்டாம்.

பொருள்களும், உறவுகளும் வேண்டும்...அவற்றினால் வரும் துன்பம் வேண்டாம்.

ஐயோ, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று மனிதன் இறைவனிடம் சென்று புலம்புகிறான்.

அவன் அளவற்ற அருளாளன்.

நஞ்சை எடுத்து விழுங்கி விட்டான்.

நம் துன்பங்களை எல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் மனைவி, அபிராமி, அவனை விடவும் அன்பு மிகுந்தவள். அவன் அருந்திய நஞ்சை அவன் தொண்டையில் நிறுத்தினாள். அந்த நஞ்சை அமுதமாக மாற்றினாள். 

"அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை" அவள்.

அவள் ரொம்ப அழகானவள்.

அழகு என்றால் இப்படி அப்படி அல்ல.

பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அபிராமி பட்டார் அவள் அழகில் வைத்த கண் எடுக்காமல், எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

அவளுடைய கண், புருவம், இதழ், கழுத்து என்று பார்த்துக் கொண்டே வந்தவர், அவளின் மார்பக அழகில் லயித்துப் போகிறார். காமம் கடந்த, காதல் கடந்த, அந்த அழகில் தன்னை மறந்து கரைகிறார்.

இந்த பெரிய மார்புகளை அந்த சிறிய இடை எப்படி தான் தாங்குகிறதோ என்று வருந்துகிறார். 

"...முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல்.." மருங்குல்  என்றால் இடை. 

அவள் உண்ணா முலை அம்மை. ஞான சம்பந்தருக்கு, ஞானப் பால், கிண்ணத்தில் கொடுத்தாள். அவளின் மார்பகங்கள் செப்புக் கலசத்தை கவிழ்த்து வைத்த மாதிரி இருக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று உரசுகின்றன. 

"..செப்பு உரை செய்யும் புணர் முலையாள் ..." 

அபிராமி பட்டர் எதையும் மறைக்க வில்லை. அவளின் கண்ணை மட்டும் பார்த்தேன், முகத்தை மட்டும் பார்த்தேன் என்று பொய் சொல்லவில்லை. அவர் அம்பிகையை அணு அணுவாக பார்த்து ரசிக்கிறார். அவளின் அழகில் தன்னை மறக்கிறார். 
 
அவள் எங்கே இருக்கிறாள் ? அவளுடைய விலாசம் ஏதாவது இருந்தால் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாம். அவள் நம் மனத்தின் உள்ளே இருக்கிறாள். 

சிப்பியின் உள்ளே மறைந்திருக்கும் முத்து மணி போல், நம் மனத்தின் உள்ளே மறைந்திருக்கும் மணி அவள். மன + உள் + மணி = மனோன்மணி 

அவள் சுந்தரி - அழகானவள்.

அந்தரி - அந்தரத்தில் இருப்பவள். 

பாடல்

Friday, October 5, 2012

திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


திணைமாலை நூற்றைம்பது - மனம் காத்தவள்


டேய், அவ என்ன அவ்வளவு அழகா ? ஏதோ இருக்கா. அதுக்காக இப்படி கிடந்து உருகிற...

போடா, உனக்குத் தெரியாது...அவளோட அழகு...

சரிப்பா, எங்களுக்குத் தெரியாது...நீ தான் சொல்லேன்...

சொல்றேன் கேளு...அவளோட புருவம் இருக்கே, அது நிலவில் இநருந்து இரண்டு கீற்றை வெட்டி எடுத்து வைத்தது மாதிரி இருக்கும். அவ பார்வை இருக்கே, வேல் மாதிரி, அவ்வளவு கூர்மை....

டேய்..உனக்கே இது ரொம்ப ஓவரா படல....

இல்லடா...அவ எங்கேயோ இருக்க வேண்டியவ...அவங்க வீட்டுல அவ அருமை தெரியாம அவளை பள்ளிகூடத்துக்குப் போ, கடைக்குப் போ, வயகாட்டுக்குப் போ என்று அந்த தேவதைய போட்டு வேலை வாங்குறாங்க...பாவம்டா அவ...

ஆனா ஒண்ணுடா, அப்படி அனுப்புனதுலையும் ஒரு நல்லது நடந்துருக்கு...அவளை வயலைப் பாத்துக்க அனுபிச்சாங்க, இப்ப அவ என் மனசப் பாத்துகிரா....

அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


ஒரு நாள் அவன் திடீரென்று மயக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறான்.  

சுற்றிலும் பார்த்தால் கடல். 

ஒரே தண்ணீர். கரை காண முடியாத கடல் நடுவே தத்தளிக்கிறான்.

எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை.

பசி ஒரு புறம்.
சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்.

உப்பு கரிக்கும் கடல் நீர் மறு புறம்.

தாகம் வேறு வாட்டுகிறது.

தூக்கம் இல்லை.

பத்தா குறைக்கு அவனுக்கு கண் தெரியாது. கண் தெரிந்தாலே கரை காண முடியா கடல். கண் வேறு தெரியா விட்டால் என்ன எப்படி இருக்கும்.  

கடைசியில் ஒரு கட்டை கையில் தட்டுப் படுகிறது. அப்பாட, அதைப் பற்றிக் கொண்டு நீந்தி கரை சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறான் . அந்தோ, அந்த கட்டையும், ஒரே பாசி படிந்து இருக்கிறது. பிடிக்க பிடிக்க வழுக்கிக் கொண்டே போகிறது. 

என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டு இருக்கும் போது, அவள், அவள் தான் அபிராமி, அவன் மேல் பரிதாபப் பட்டு, அவளின் திருவடியையை நீட்டுகிறாள்.

அவன் அதை பிடித்துக் கொள்கிறான். உயிர் தந்த அந்த திருவடியையை தன் மேலை மேல் வைத்துக் கொண்டாடுகிறான். 

அந்தக் கடலிலும், அந்த நேரத்திலும், அந்த பாதத்தின் மென்மை அவனுக்குத் தெரிகிறது. அதன் சிவந்த நிறம். அதில் இருந்து வரும் இனிய வாசம்....அவளை நிமர்ந்து பார்க்கிறான். 

அவளின் அன்பு அவனை சிலிக்க வைக்கிறது. " உன் அன்பை நான் என்ன வென்று சொல்வேன் " என்று உருகுகிறான். 

பாடல் 
 

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

பொருள்:

ஆசைக்கடலில் = ஆசை என்ற கடலில்

அகப்பட்டு = சிக்கிக் கொண்டு

அருளற்ற = அருள் ஏதும் இல்லாத

அந்தகன் = குருடன்

கைப் = குருடனின் கை

பாசத்தில் = இரண்டு அர்த்தம் சொல்லலாம். ஒன்று, பாசி படிந்த இடங்களை 

பிடித்து கரை ஏற நினைக்கிறான். முடிய வில்லை. இன்னொரு பொருள்,  
பொருள்கள்  மேல், உறவுகளின் மேல் பாசம். ஆசைக் கடல், அதன் நடுவில் 
பாசம் என்னும் கடல்.

அல்லற்பட = கஷ்டப் பட்டுக் கொண்டு 

இருந்தேனை = இருந்தவனை

நின் பாதம் என்னும் = உன்னுடைய திருவடிகள் என்ற 

வாசக் கமலம் = வாசமான தாமரை மலர்களை

தலை மேல் = என்னுடைய தலையின் மேல்

வலிய வைத்து = நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட = என்னை ஆண்டு கொண்ட 

நேசத்தை = உன்னுடைய அன்பை

என் சொல்லுகேன் = என்ன என்று சொல்வேன்

ஈசர் பாகத்து = ஈசனின் ஒரு பாகம் கொண்ட

நேரிழையே = சிறந்த அணிகலன்களை அணிந்தவளே

இந்த பாடலுக்கு பொருள் எழுதிய பெரியவர்கள், "அந்தகன் கை பாசத்திடை அல்லல் படும் வேளை" என்ற வரிக்கு அந்தகன் என்றால் எமன். அவனுடைய பாசக் கயிற்றில் கட்டப் பட்டு அல்லல் படும் நேரம் என்று பொருள் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ளுங்கள்.