Tuesday, March 26, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3



அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் இரண்டு அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று மூன்றாவது அடி


வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை

அந்த ஆனந்தத்தேன் எங்கு விளைந்தது தெரியுமா ?

தனிமையில் விளைந்தது.....

எப்படிப்பட்ட தனிமை 

வெறும் தனிமை...

அது என்ன வெறும் தனிமை...?

தனிமைக்கும் , வெறும் தனிமைக்கும் என்ன வித்தியாசம் ? 

நீங்க உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கு ஒரு விடுமுறை தினத்தன்று போகிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம் ? அங்க யார் இருப்பா ? யாரும் இருக்க மாட்டார்கள். வாசலில் ஒரு காவல் காரன் மட்டும் தனியா இருப்பான்.

அவன் தனியாகவா இருக்கிறான் ? பள்ளிக் கூட கட்டிடம் , அங்கு உள்ள மரம் செடி கோடி எல்லாம் இருக்கிறதே ...எப்படி தனியாக இருப்பான் ?  

தனி என்றால் வேறு மனிதர்கள் யாரும் இல்லாமல் என்று குறிப்பு. அதாவது தன்  இனம் இல்லாதது தனிமை.  அந்த புகை வண்டி நிலையத்திற்கு சென்றேன்..ஒரே ஒரு என்ஜின் மட்டும் தனியா நின்று கொண்டிருந்தது என்று சொல்லுவோமே அத போல. 

இனம் இல்லாதது தனிமை. மற்ற பொருள்களும் இல்லை என்றால் ? ஏதுமற்ற தனிமை? 

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை, மரம் செடி கொடிகள் இல்லை, தரை இல்லை, காற்று இல்லை, வெளிச்சம் இல்லை அந்த காவல் காரன் மட்டும் இருந்தான் என்றால் அது வெறும் தனி 


அந்த வெறும் தனிமையில் விழைந்தது பாழ்... பாழ் என்றால் ஒன்றும் இல்லாதது....

அதோ தெரிகிறதே அது ஒரு பாழடைந்த கட்டிடம், அது ஒரு பாழ் நிலம் (பாலை நிலம்) என்று கூறுவது போல. 

பாழ் நிலம், என்றால் அதை அடுத்து வேறு எதாவது இருக்கும். 

அருணகிரி சொல்லுகிறார் ...

வெறும் பாழ் 

அப்படி என்றால் அந்த பாழை தாண்டி ஒன்று இல்லை.

வெறும் பாழ் பெற்ற வெறும் தனிமை.....


அந்த வெட்ட வெளியில் விளைந்த பாழில் இருந்து விளைந்த ஆனந்தத் தேன் 


என்னய்யா இது பாழ், தனிமை, தேன் அது இதுனு போட்டு ஒரே குழப்பமா இருக்கே..இது எல்ல்லாம் யாரு சொன்னா ? இதை எல்லாம் எப்படி நம்புறது ? 

அதையும் சொல்கிறார் அருணகிரிநாதர் 











சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து


சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து 


முதலிலேயே சொல்லி விடுகிறேன்...இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

சிலபதிகாரத்தில், கானல் வரிப் பாடல்

அது ஒரு கடற்கரை உள்ள ஊர். கடற்கரை காற்று நீர்த் திவலைகளை சுமந்து வந்து உங்கள் முகத்தோடு உரசிப் போகும். வெண்மையான மணர் பரப்பு.

கரையின் கன்னத்தில் ஓயாமல் முத்தமிடும் அலைகள்.

அந்த கடற்கரையில் வலம்புரி சங்குகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலைந்ததால், கடற்கரை மணலில் வரி வரியாக கோடு  விழுகிறது. .

அந்த கடற்கையில் நிறைய புன்னை மரங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்த புன்னை மரங்கள் பூத்து குலுங்குகின்றன.

காற்றடிக்கும் போது, புன்னை மலர்கள் உதிர்கின்றன. புன்னை மரங்கள் பூமிக்கு பூவால் அர்ச்சனை செய்வது போல் இருக்கிறது.

சங்கு வரைந்த கோடுகள், தடங்கள் எல்லாம் இந்த பூக்கள் விழுந்து மறைந்து விட்டன.

காதலனும் காதலியும் ஒருன்றாக இருக்கும் போது ஏற்படும் சில பல தடங்களை ஆடையிட்டு மறைப்பதில்லையா...அது மாதிரி..

அந்த கடற் கரையில் அவனும் அவளும் நாளும் பேசாமல் பேசியது அந்த கடலுக்கு மட்டும் தெரியும்.

இன்று அவள் இல்லை. வரவில்லை. அவன் மட்டும் தனித்து இருக்கிறான்.

இருக்கப் பிடிக்கவில்லை. போகலாம் என்றால் , போய் தான் என்ன செய்ய ?

காதலும் கருணையும் கலந்த அவள் கண்களை காணாமல் அவன் வாடுகிறான்.

இந்த கவலை நோய்க்கு என்னதான் மருந்து ? ஒரே ஒரு மருந்து இருக்கிறது...அதுவும் அவ கிட்டதான் இருக்கு....

பாடல்

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
    தோற்ற மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
    போர்க்குங் கானல்
நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
    தீர்க்கும் போலும்.

பொருள்


Monday, March 25, 2013

சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும்


சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும் 


அவள்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா ?

தோழி: ம்ம்..சொல்லு...என்ன விஷயம்

அவள்: அவனுக்கு வர வர என் மேலே அன்பே இல்லைன்னு தோணுது

தோழி: ஏன், என்ன ஆச்சு ...

அவள்: அப்ப எல்லாம் என் பின்னாடி எப்படி சுத்துவான் ? இப்ப என்னடானா , கண்டுக்க கூட மாட்டேங்கிறான்....

தோழி: அப்படி எல்லாம் இருக்காது...அவனுக்கு என்ன பிரச்சனையோ....கொஞ்சம் பொறு...

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

சீர் பிரித்தபின்


காதலராகி கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யான் அறியோம் ஐய 
மாதரார் கண்ணும் மதி நிழல் நீரினை கொண்டு மலர்ந்த நிலப் 
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகார் எம்மூர் 

பொருள்

காதலராகி = காதலராகி

கழிக் கானற் = மிக விரும்பி காண்பதற்கு


கையுறை = பரிசு பொருள்கள்

 கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு என் பின் வந்தார்

ஏதிலர் தாமாகி = (இன்னைக்கு என்னடா என்றால் ), ஏதோ அயலானைப் போல

யாம் இரப்ப நிற்பதை = நான் விரும்பி வேண்டி நின்றாலும்

 யான் அறியோம் ஐய = அறியாதவர் போல் நிற்கிறார்

மாதரார் கண்ணும் = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலை

 நீரினை கொண்டு = நீரில் கொண்டு

 மலர்ந்த = மலர்ந்த

 நிலப் போதும் = மலர்களை (போது = மலர் )

அறியாது = எது என்று அறியாது

வண்டு ஊசலாடும் = வண்டு ஊசலாடும்

புகார் எம்மூர் = புகார் எங்கள் ஊர்

வண்டுகள் பெண்களின் முகத்திற்கும், நிலவின் நிழல் சேர்ந்த நீரில் உள்ள மலருக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும்  வண்டுகள் உள்ள ஊர் எங்கள் ஊர்.

அந்த வண்டு மாதிரி இந்த தலைவனும், நான் என்று நினைத்து வேறு எவ பின்னாடியோ போய் விட்டானோ என்பது தொக்கி நிற்கும் பொருள்.



திருக்குறள் - தீச்சொல்


திருக்குறள் - தீச்சொல் 


சில குறள்கள் கொஞ்சம் வளைந்து செல்வது போல் இருக்கும். Curved ball என்று சொல்லுவார்களே அந்த மாதிரி

அப்படி ஒரு குறள்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும் .

சீர் பிரித்தபின்

ஒன்றானும் தீச் சொல் பொருட் பயன் உண்டாயின் 
நன்று ஆகாதாகி விடும் 

நாம் ஒருவருக்கு எவ்வளவோ நன்மை செய்திருப்போம். ஆனால், ஒரே ஒரு தீச் சொல் அவரிடம் சொல்லி, அதுவும் பலித்து விட்டால், இது வரை செய்த நன்மை எல்லாம் போய் விடும். சொன்ன தீச் சொல் பொருட் பயன் உண்டாயின், (இதுவரை செய்தது எல்லாம் ) நன்று இல்லை என்று ஆகி விடும்.  அந்த தீமையை மட்டுமே அவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள்.

இன்னொரு பொருள்

ஒரே ஒரு தீச் சொல் சொல்லி, அதன் மூலம் நமக்கு பொருட் பயன் ஏற்பட்டால் , அந்த பயன் நல்லது அல்ல. இங்கே தீச் சொல் என்பதை பொய் என்று கொள்ளலாம் . பொய் சொல்லி பணம் சம்பாதித்தால், அது நன்மை பயக்காது என்று ஒரு பொருள்.


இன்னொரு பொருள்

தீச் சொல் சொல்லி பொருள் சேர்த்தால், நாம் செய்த மற்ற அறங்கள், நல்லவை எல்லாம்  ஆகாதாகி விடும்.. "இவன் எப்படி சொத்து சேர்த்து இப்படி நல்லது எல்லாம்  செய்றானு எனக்குத் தெரியாதா " என்று உலகம் ஏசத் தலைப்படும்


தீச் சொல் என்பது பொய், புறம் சொல்லுவது, புண் படுத்துவது,  திரித்துக் கூறுவது, பயனில்லாத சொல் என்று பலவகைப்படும்

எனவே, தீச்சொல் பற்றி மிக மிக கவனமாய் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு சொல், இதுவரை செய்த நல்லவை எல்லாவற்றையும் அழித்துவிடும்.

ஒரு தீச் சொல் உங்களின் வாழ்நாள் பூராவும் சேர்த்த நல்லவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது .

வள்ளுவர் எச்சரிக்கிறார்....

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 2 


அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

நேற்று இந்தப் பாடலின் முதல் வரியை சிந்தித்தோம்.. இன்று இரண்டாவது வரி. 


ஞானத்தின் உச்சியில் இருந்து பார்கிறார் அருணகிரி. என்ன தெரிகிறது ?

அளியில் விளைந்த  


அளி என்ற சொல்லுக்கு அன்பில் விளைந்த அருள் என்று பொருள். ஆங்கிலத்தில் "grace" என்று சொல்லலாம்.

அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை 


சாலை, வீடுகள், கட்டிடங்கள் என்று தெரிந்து கொண்டிருந்த ஒரு ஊர், மலை மேல் ஏறி நின்று பார்த்தால் எப்படி இருக்கும் ? அங்கொரு மலை, இங்கொரு குளம், சற்று தள்ளி வளைந்தோடும் ஒரு நதி, இந்த பக்கம் கொஞ்சம் பசுமையான வயல்கள் என்று பார்க்க மிக அழகாக இருக்கும் அல்லவா ?

வாழ்க்கையோடு நாளும் ஒட்டி, உறவாடி அதில் அமிழ்ந்து கிடந்தால் அதில் உள்ள சின்ன சின்ன  விஷயங்கள் கூட பெரிதாய் தெரியும். ஞானம் ஏற ஏற...அதே வாழ்க்கை மிக இனிமையாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

அன்பில் விளைந்த ஆனந்தத் தேனை....ஆனந்தமான தேன்....

தேன் எப்படி இருக்கும் ? இனிக்குமா, கசக்குமா ? இனிக்கும் என்றால் எப்படி இனிக்கும் ? சர்க்கரை மாதிரி இருக்குமா ? பால்கோவா மாதிரி இருக்குமா என்று கேட்டால்  எப்படி ? அதை அறிய வேண்டும் என்றால் அதை சுவைத்துப் பார்க்க வேண்டும். அந்தத் தேன் எங்கு கிடைக்கும் ? ஞானத்தின் உச்சியில் கிடைக்கும்.




Sunday, March 24, 2013

இராமாயணம் - அழியா அழகு


இராமாயணம் - அழியா அழகு 


வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


இராமன், இலக்குவன், சீதை மூவரும் கானகம் போகிறார்கள். 

இராமன் மேல் வெயில் அடிக்கிறது. கம்பனுக்குத் தாங்க முடியவில்லை. இந்த பகலவன் இராமனை இப்படி சுடுகிறானே என்று தவிக்கிறான். 

பகலவனுக்கு ஆயிரம் பெயர்  இருக்கிறது. சூரியன், ஞாயிறு, பகலவன், ஆதவன் என்று ஆயிரம் பெயர் இருந்தாலும், கம்பன் "வெய்யோன்" என்று குறிப்பிடுகிறான். வெய்யோன் என்றால் கொடியவன் என்று பொருள் 

வெய்யோனின் ஒளி இராமனின் மேல் படுகிறது. மற்றவர்கள் மேல் பட்ட ஒளி பிரதிபலிக்கும். இராமன் மேல் பட்ட ஒளி, அவன் மேனியின் ஒளியில் மறைந்து போனதாம். 

சூரியனின் மேல் டார்ச் லைட் அடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி சூரியனின் ஒளி இராமனின் மேனி ஒளியில் மழுங்கிப் போனது.

கம்பன் இன்னும் மெருகு ஏத்துகிறான் பாடலுக்கு.

சூரியனில் இருந்து வருவது ஒளி; இராமனின் மேனியில் இருந்து வருவது சோதி. ஜோதி என்பது ஒரு ஆன்மீக அர்த்தம் கொண்டது. விளக்கில் உள்ளதும் நெருப்புதான், சிகரட் லைட்டரில் உள்ளதும் நெருப்புதான் என்றாலும் விளக்கில் உள்ளதை ஜோதி என்று சொல்லுவது மாதிரி.

வெய்யோனின் ஒளி வெறும் ஒளி அவ்வளவுதான். இராமனின் உடலில் இருந்து புறப்படுவதோ விரி ஜோதி...வினைத்தொகை...விரிந்த விரிகின்ற இன்னும் விரியும் ஜோதி. 

அடுத்த இரண்டு வரி சீதைக்கும் இலக்குவனுக்கும். பொய்யோ என்னும் இடை உள்ள சீதை, இளையவனான இலக்குவனோடும் போனான். 

போனவன் யார் ? அவர் எப்படி இருப்பான் ?

அவன் மேனி வண்ணம் சொல்ல வேண்டும்.

கறுப்பாக  இருக்கிறான். கறுப்புக்கு எதை உதாரணம் சொல்லலாம் என்று யோசிக்கிறான் கம்பன். 

கண் மை நல்ல கறுப்பு தானே ...அதை சொல்லலாம் என்று நினைத்தான். இருந்தாலும் சந்தேகம் ....

மையோ ? 

என்று கேள்வியோடு கேட்க்கிறான்.

சரி இல்லை. மை ரொம்ப மலிவான பொருள். இராமனை அப்படி ஒரு மலிவான பொருளுக்கு உதாரணம் சொல்ல முடியாது என்று நினைத்து 

மரகதமோ ?

என்று கேட்கிறான். இல்லையே, மரகதம் ஒரு சின்ன பொருள். இராமனின் அழகை எப்படி ஒரு சின்ன பொருள் உவமையாக கொள்ள முடியும் ? மேலும், அது எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். இராமன் உருவம் அப்படியா? நாளும் ஒரு புதுமை தெரியுமே...அப்ப வேற என்ன சொல்லலாம் என்று சிந்திக்கிறான் ...
 
மறி கடலோ ?


அலை பாயும் கடலோ ? ம்ம்ம்.அது தான் சரி...இராமனின் அழகு போல் பரந்து விரிந்தது ...ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் ....அது தான் சரி...என்று நினைக்கிறான்...அப்புறமும் அவனுக்கு திருப்தி இல்லை..இந்த கடல் எவ்வளவு பெரிதாய் இருந்தால் என்ன ? ஒரே உப்புத் தண்ணீர் ...இந்த கடலால் என்ன பிரயோஜனம் ? மேலும் இந்த கடல் ஒரே இடத்தில் தானே இருக்கிறது...இராமன் அப்படியா ? கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவானே...அப்படி எது இருக்கும் ?

கறுப்பாகவும் இருக்க வேண்டும், நாளும் நாளும் மாறிக் கொண்டும் இருக்க வேண்டும், இருக்கும் இடம் தேடி வந்து உதவி செய்ய வேண்டும் ? அப்படி என்ன இருக்கிறது ?

ஹா..மழை முகில் அது தான் சரி....கறுப்பா இருக்கு, மாறிக் கொண்டே இருக்கிறது, உயிர் வாழ வழி செய்கிறது, நாம் இருக்கும் இடம் தேடி வருகிறது... மழை முகில் தான் சரி என்று நினைக்கிறான்....

அப்புறமும் திருப்தி இல்லை...மழை சில சமயம் வரும், சில சமயம் வராது.இராமன் அப்படி இல்லையே...எப்போதும் வருவானே...மேலும் முகில் சில சமயம் அதிக மழை பெய்தும் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும்...இராமன் கருணை அப்படி அல்லவே....

பின் என்னதான் சொல்லுவது...

ஐயோ எனக்கு ஒண்ணும் தெரியவில்லையே என்று தவித்து "ஐயோ " என்று வாய்விட்டே அலறிவிட்டான்..கம்பன். 

அறிவு ஆண்டவனை பற்றி சொல்ல நினைத்து சொல்ல முயற்சி செய்து கலைத்து போனது....அறிவு நின்ற இடத்தில் உணர்வு மேலிட்டது...."ஐயோ" என்பது உணர்வின் வெளிப்பாடு...ஆண்டவனை உணர முடியும்...அறிய முடியாது..என்பதை சொல்லாமல் சொல்லும் அற்புதமான பாடல் ....

 சரி, உணர்வு மேலிட்டது...ஐயோ என்று சொல்லிவிட்டான்...இன்னும் திருப்தி இல்லை....

சில பேருக்கு உடல் அழகாக வடிவமாக இருக்கும்...வடிவம் ஒரு அழகுதான்....ஆனால் அதுவே அழகாக ஆகி விட முடியாது...உடல் அழகோடு உள்ள அழகும் சேர வேண்டும்...மேலும் வடிவம் என்பது வயது ஆக ஆக மாறிக் கொண்டே போகும்.கூன் விழும் முடி நரைக்கும் பல் விழும்...வடிவு மாறும் ....ஆனால் இராமனின் வடிவு காலத்தால் அழியாதது....

இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.

எவ்வளவு இனிமையான பாடல்....இப்படி 12,000 பாடல் இருக்கிறது கம்ப இராமாயணத்தில்...

நேரம் கிடைக்கும் போது மூல நூலை படித்துப் பாருங்கள். நிறைய பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். அதையும் படியுங்கள். 

திகட்டாத தேன் தமிழ் பாடல்கள்....






கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 1 

அருன்ணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம். 

அதில்   ஒரு பாடல் 

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம் 

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

விளக்க உரை