Monday, February 3, 2014

திருவாசகம் - ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்

திருவாசகம் - ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் 


ஆசை ஒரு புறம்.

அச்சம் மறு புறம்.

புலன்கள் நம்மை அதன் போக்கில் இழுத்துச் செல்கின்றன. அப்படி செல்லும் போது அதனால் என்ன தீங்கு  வருமோ என்று அச்சமும் கூடவே வருகிறது.

தலை அங்கும் இங்கும் அலைகிறது. பார்த்தால் ஏதோ இரண்டு தலை இருப்பது மாதிரி தோன்றும். ஆசைக்கு ஒரு தலை. அச்சத்திற்கு ஒரு தலை.

மணிவாசகருக்கு இரண்டு தலை. நமக்கு எத்தனை தலையோ.

அவர் சொல்கிறார்,

"என்  குற்றங்களை யார் பொறுப்பார்கள் ? உன் திருவருள் எப்படியோ என்று பயந்து வேர்த்து நிற்கின்ற என்னை  நீ கை விட்டு  விடாதே, பகைவர்கள் அஞ்சும்படி ஒலி எழுப்புகின்ற மணிகளை உடைய மாலையை அணிந்தவனே, திரு உத்திர கோசமங்கை என்ற ஊரின் தலைவனே, ஐம்புலன்கள் என்னை ஈர்க்கின்றன ஒரு புறம், உன் திருவடியை அதனால் விட்டு விட்டுப் போய் விடுவேனோ என்ற அச்சம் மறுபுறம் என்னை இரு புறமும் வாட்டி எடுக்கிறது"

பாடல்

தீர்க்கின்ற ஆறு என் பிழையை, `நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

பொருள் 

தீர்க்கின்ற  ஆறு = எப்படி தீர்ப்பது

என் பிழையை, = என் பிழைகளை

`நின் சீர் அருள் என்கொல் என்று = உன்னுடைய சிறந்த அருள் என்ன என்று

வேர்க்கின்ற = வேர்த்து இருக்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடுவாயா

விரவார் வெருவ = பகைவர்கள் அஞ்சும்படி

ஆர்க்கின்ற = ஒலி எழுப்பும்

தார் = மாலை அணிந்த

விடை = எருதின் மேல் அமர்ந்த

உத்தர கோச மங்கைக்கு அரசே = உத்தர கோச மங்கைக்கு அரசே

ஈர்க்கின்ற = என்னை ஈர்க்கின்ற

அஞ்சொடு  = ஐந்து புலன்களும்

அச்சம் = அச்சம் மறு புறம் இருந்தாலும்

வினையேனை இருதலையே! = வினை உடைய  நான் இரண்டு பக்கமும் கிடந்து அல்லல் படுகிறேன் 

நாலடியார் - இளமை நிலையாமை

நாலடியார் - இளமை நிலையாமை 


இளமை என்றும் நம்மோடு இருக்காது. போன பின் , ஐயோ உடம்பில் இளமை இருந்த போது அதைச் செய்து இருக்கலாமே, இதைச் செய்து இருக்கலாமே என்று வருந்துவதால் பயனில்லை.

உடலில் இரத்தம் சூடாக இருக்கும் போது, காம வழிப் பட்டு, அதன் பின்னாலே போனவர்களுக்கு மெய் வழி காணும் வழி இல்லை.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள் 

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தை தடுமாறும்.

கோல்ஊன்றிச்= கோல் ஊன்றி. உடல் தளரும்

சோர்ந்த நடையினராய்ப் = மிடுக்கான நடை போய் தளர்ந்த நடை வரும்

பல் கழன்று = பல் விழுந்து

பண்டம் = உடல்

பழிகாறும் = பழிக்கு ஆளாகும்

இல்செறிந்து = வீட்டில் இருந்து

காம நெறிபடருங் = காம வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே

ஏம நெறிபடரு மாறு = உண்மையான மெய் வழியில் செல்லும் பாதை


திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?

திருக்குறள் - பெண்ணுக்கு காமம் இருக்குமா ?


நம் இலக்கியங்கள் எப்போதும் பெண்ணாசை பற்றியே பேசுகிறது. ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள காதல், காமம், ஆசை பற்றியே பேசுகிறது.

பெண்ணுக்கு காமம் , காதல் , ஆசை இவை எல்லாம் இருக்காதா ? பின் ஏன் அது பெரிதாகப் பேசப் படவில்லை ?

பெண்ணுக்கும் இவை எல்லாம் உண்டு. அவர்களும் ஜொள்ளு விடுவார்கள் - மனதுக்குள். வெளியே தெரியாது.

அவர்களுக்குள்ளும் காமம் கடல் போல் கொந்தளிக்கும். அலை வந்து கரை  அரிக்கும்.காமம் நீர் சுழல் போல் மனதை உள் இழுக்கும். கரை காணாமல் தட்டுத் தடுமாற வைக்கும்.

இருந்தாலும் அதை எப்படித்தான் வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே அமுக்கரையாக வைத்துக் கொள்கிறார்களோ தெரியாது.

எவ்வளவு கஷ்டம் மனதில் தோன்றும் காதலை வெளியே சொல்லாமல் இருப்பது.

ஆண்களைப் போல பெண்களால் அன்பை அவ்வளவு எளிதாக சொல்ல  முடிவதில்லை.இதை  ஆண்கள் புரிந்து கொள்வதும் இல்லை. "சொன்னாத் தானே தெரியும் "  என்று அடம்  பிடிக்கிறார்கள்.

பெண்களால் சொல்ல முடிவதில்லை.

அப்படி சொல்லாமல் இருப்பது தான் அவர்களின் பெருமை. அவர்களின் சிறப்பு.

அப்படி ஆசையையும் காமத்தையும் மனதில் அடக்கி வைத்திருக்கும் பெண்ணின் அந்த  குணத்தைப் போல மிகச் சிறந்த குணம் வேறு ஒன்றும் கிடையாது என்கிறார்  வள்ளுவர்.


பாடல்

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். 

பொருள்

கடலன்ன = கடல் போல. கடல் போல என்றால் கடலின் ஆழம், கடலின் மிகப் பெரிய அளவு, கடலின் வற்றாத தன்மை, கடலின் மர்மங்கள், கடலின் சலனம், கடலின் அமைதி, கரை காண முடியாத தூரங்கள்...இப்படி பலப் பல 


காம = காமம்.

உழந்தும் = அடைந்தும் 

மடலேறாப் = மடலேறுதல் என்றால் அந்தக் காலத்தில் ஆண்கள் ஓலையால் செய்த குதிரை மேல் ஏறி காதலியின் வீட்டின் முன்னால் தர்ணா செய்வது...அவளை எனக்கு  கட்டிக் கொடு என்று.


பெண்ணிற் = பெண்ணைப் போல

பெருந்தக்கது இல் = பெரிய (குணம்) இல்லை.

அடக்கம் பெண்ணின் இயல்பு. அவளுக்குள்ளும் காதலும் காமமும் உண்டு. அதை  வெளியே சொல்லாதது அவளின் இயல்பு. அதுவே அவளின் சிறப்பும் கூட.

இங்கே ஒரு காதலன் நினைக்கிறான்....இந்த காதல் என்னை என்ன பாடு படுத்துகிறது. அவளையும் அப்படி படுத்தும் தானே. ஆனால் வெளியே ஒன்றும் சொல்லாமல்  எப்படித்தான் இருக்கிறாளோ என்று வியக்கிறான்....

அவன் மட்டுமா ?



Sunday, February 2, 2014

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று

கந்தர் அலங்காரம் - தப்பிப் போன ஒன்று




பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்

கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.

சூரபத்மனும் அவன் தம்பிகளும் மூன்று பெரிய மலையை செய்தார்கள். அவை பறக்கும் மலைகள். எங்கெல்லாம் மனிதர்களும் தேவர்களும் கூட்டமாக இருக்கிறார்களோ, அப்படியே பறந்து வந்து அவர்கள் மேல் அமர்ந்து விடும் அந்த மலைகள். அவற்றின் கீழே அகப்பட்டவர்கள் நசுங்கி உயிர் விட வேண்டியது தான். 

முருகன் தன் வேலாயுதத்தால் அந்த மலைகளை பொடிப் பொடியாகச் செய்தான். 

அது ஏதோ கதை என்று நினைத்துத்  தள்ளி விடாதீர்கள். 

நம் மனம் என்ன செய்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

வீட்டில் நாம் அமர்ந்து இருந்தாலும், அது எங்கே நம்மிடம் இருக்கிறது. அது பாட்டுக்கு  ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

கற்பனையில், கனவில், மிதந்து கொண்டிருக்கிறது. நம்மிடம் கேட்டு விட்டா அது  போகிறது ? நம்மை விட்டு தப்பித்து ஓடிப் போய் விடுகிறது. 

டிவி யில் ஒரு நல்ல அயல் நாட்டைப் பார்த்தால் அங்கே போய் விடுகிறது, அழகான  பெண்ணை/ஆணைப் பார்த்தால் அவர்கள் கூட இருந்தால் என்ன என்று  அவர்கள் பின்னே போய் விடுகிறது....நல்ல கார், சிறந்த உடை, சுவையான உணவு ...எதைக் கண்டாலும் அதன் மேல் போய் உட்கார்ந்து கொள்கிறது  நம் மனம்....சூரபத்மனின் பறக்கும் மலைகளைப் போல. 

அவன் மலைகளாவது அவன் கட்டுப் பாட்டில் இருந்தது. 

நம் மனம் நம் கட்டுப் பாட்டிலா இருக்கிறது. 

அது பாட்டுக்கு எந்தப் பெண்ணை கண்டாலும் அவர்கள் பின்னால் போய் விடுகிறது. மலையை பொடிப் பொடியாக செய்தது போல என் ஆசை மலைகளைத் தகர்த்து எனக்கு  ஞானம் தருவாய் என்று  வேண்டுகிறார்.


பாடல் 

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே.


சீர் பிரித்த பின் 

பொட்டாக வெற்பைப் பொருத கந்தா தப்பிப் போன ஒன்றற்கு 
எட்டாத ஞான கலை தருவாய் இருங் காம விடாய் 
பட்டார் உயிரை திருகி பருகி பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே 


பொருள் 

பொட்டாக = கண்ணுக்குத் தெரியாத  துகளாக.பூச்சி பொட்டு இருக்கப் போகிறது என்று சொல்வார்களே. பூச்சி கண்ணுக்குத் தெரியும். பொட்டு கண்ணுக்குத் தெரியாத சின்ன உயிரினம்.  

ஆசா நிகளம் துகளான பின் பேசா அநுபூதி பிறந்ததுவே 

என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில் 


வெற்பைப் = மலைகளை 

பொருத = சண்டையிட்ட 

கந்தா = கந்தக் கடவுளே 

தப்பிப் போன ஒன்றற்கு = என்னை விட்டு தப்பிப் போன ஒன்றான (என் மனதை )
எட்டாத = அறிய முடியாத 

ஞான கலை தருவாய் = ஞானத்தை தருவாய் 

இருங் = வலிய  

காம விடாய்  = காமம் என்ற தாகம் 

பட்டார் = அடைந்தோர் 

உயிரை  = உயிரை 

திருகி பருகி பசி தணிக்கும் = திருகி, பருகி, பசி தணிக்கும் 
கட்டாரி வேல் விழியார் = கட்டாரி என்றால் குத்தீட்டி. அது போன்ற வேல் போன்ற விழிகளை கொண்ட பெண்களின் 

வலைக்கே மனம் கட்டுண்டதே  = வலையில் கட்டுப்பட்ட மனதை 




இராமாயணம் - பரந்த மார்பும் , சிறிய கண்ணும்

இராமாயணம் - பரந்த மார்பும் , சிறிய கண்ணும் 


இராமனை காண்கிறாள் சூர்பனகை. அவன் அழகு அவளை மயக்குகிறது. அவனுடைய கண்கள் தாமரை மலரைப் போல மலர்ந்து சிவந்து அழகாக இருக்கிறது. கரிய பெரிய மலை போல பெரிய தோற்றம். அவன் தோள்கள் அத்தனை அழகு. அவனுடைய இரண்டு தோள்களையும் ஒரு சேர பார்க்க நினைக்கிறாள் சூர்பனகை. முடியவில்லை. பரந்த மார்புகள் அவனுக்கு. ஒரு சமயத்தில் ஒரு தோளைத்தான் பார்க்க முடிகிறது. ஒரு தோளில் இருந்து கண்ணை எடுத்தால்தான் இன்னொரு தோளை பார்க்க முடியும். ஒரு தோளுக்கும் இன்னொரு தோளுக்கும் அவ்வளவு தூரம்.

ஐயோ, என் கண்கள் பெரிதாக இருந்தால் இரண்டு தோள்களையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாமே என்று வருந்துகிறாள்.


பாடல்

தாள் உயர் தாமரைத் 
     தளங்கள் தம்மொடும் 
கேள் உயர் நாட்டத்துக் 
     கிரியின் தோற்றத்தான் 
தோளொடு தோள் செலத் 
     தொடர்ந்து நோக்குறின், 
நீளிய அல்ல கண்; 
     நெடியமார்பு!' என்பாள்.

பொருள்

தாள் உயர் தாமரைத் = நீண்ட தண்டினை உடைய தாமரை

தளங்கள் தம்மொடும் கேள் = மலரின் இதழ்களைப் போல அவன் கண்கள்

 உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான் = உயர்ந்த மலையைப் போல கம்பீரமான உருவம் கொண்டவன்

தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் = ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றால்

நீளிய அல்ல கண் = என் கண்கள் அவ்வளவு நீண்டது அல்ல

நெடியமார்பு!' என்பாள் = அவனுடைய மார்புகளோ பரந்து விரிந்தவை என்று கூறுவாள்.


ஜொள்ளுகள் பல ரகம். அதில் இது ஒரு இரகம். 

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இராமனை கட்டிய சீதை

நாலாயிர  திவ்ய பிரபந்தம் - இராமனை கட்டிய சீதை


அனுமன் சீதையை அசோக வனத்தில் சந்திக்கிறான். அவன் இராமனின் தூதன் என்று எப்படி நிரூபிப்பது ? இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சில விஷயங்களை இராமன் அனுமனிடம் சொல்லி அனுப்பி இருக்கிறான். அவற்றுள் சிலவற்றை அனுமன் சீதையிடம் சொல்கிறான்.

கணவனும் மனைவியும் ஒருவரை மற்றவர் கட்டிப் போட்டு சீண்டி விளையாடுவது ஒரு இனிமையான விஷயம். அப்படி இராமனுக்கும் சீதைக்கும் இடையே நடந்த ஒன்றை அனுமன்  கூறுகிறான்.

"சீதை, ஒரு முறை நீயும் இராமனும் தனிமையில் இருந்தீர்கள். உங்களுக்குள் ஒரு சின்ன போட்டி விளையாட்டு நடந்தது. அதில் யார் வெல்கிறார்களோ அவர்கள் தோற்றவர்களை கட்டிப் போடுவது என்று. நீ வென்றாய். நீ இராமனை கட்டிப் போட வேண்டும். ஆனால் அவனை முரட்டு கயிற்றில் கட்டிப் போட உனக்கு மனம் இல்லை. மல்லிகை பூவால் ஆன ஒரு பூச் சரத்தை எடுத்து அதனால் அவனை கட்டினாய்....இது ஒரு அடையாளம்"


பாடல்


அல்லியம்பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே!
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓரிட வகையில்
மல்லிகை மாமாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

பொருள்

அல்லி = ஒரு வித பூ

அம் பூ = அந்த பூ போன்ற

மலர்க் கோதாய்! = மலர் போன்ற பெண்ணே 

அடிபணிந்தேன் விண்ணப்பம் = உன் அடி பணிந்து

சொல்லுகேன் = சொல்லுகிறேன்

கேட்டருளாய் =     கேட்டு அருள்வாய்

 துணை மலர்க் கண் மடமானே! = ஒன்றோடு ஒன்று துணையாக இருப்பதைப் போன்ற கண்களை கொண்ட  மருட்சி உள்ள மானைப் போன்றவளே

எல்லியம்போது = அம் + எல்லி + போது = அழகிய இரவு வேளையில் 

இனிதிருத்தல் = இனிது இருத்தல். இனிமையாக இருந்த போது 

இருந்தது = நடந்தது 

ஓரிட வகையில் = ஓரிடத்தில்

மல்லிகை மாமாலைகொண்டு = மல்லிகையால் ஆன மாலையை கொண்டு

 அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் = அங்கு கட்டியதும் ஒரு அடையாளம்.

கட்டியது யார், யாரை என்று சொல்லவில்லை. சீதையிடம் சொல்லியதால், சீதை கட்டியதாகக் கொள்ளலாம். அல்லது சீதையைக் கட்டியதாகக் கொள்ளலாம்.

அவர்களுக்குள் இருந்த அந்த இனிய அன்பை வெளிப் படுத்தும் பாடல்.




திருவாசகம் - பொய்யவனேனைப் பொத்திக்கொண்ட மெய்யவனே

திருவாசகம் - பொய்யவனேனைப்  பொத்திக்கொண்ட மெய்யவனே


அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.

ஆலகால விஷம் வந்தது.

என்ன  செய்வது என்று தவித்தார்கள்.

சிவன் அந்த விஷத்தை தான் அருந்தி அவர்களை காப்பாற்றினான்.

இது கதை.

கதை சொல்லும் கருத்து என்ன ?

நாம் செய்யும் தவறுகளை இறைவன் தனக்குள் எடுத்து மறைத்து வைத்து நம்மை காப்பாற்றுவான். விஷத்தை தனக்குள் மறைத்து வைத்து தேவர்களையும் அசுரர்களையும்  காத்தது போல.

இதை நினைவு படுத்துகிறார் மணிவாசகர்.

நான் பொய்யானவன் தான். ஆனால் விஷத்தை எடுத்து பொத்தி வைத்துக் கொண்டதைப் போல என் பொய்களையும் பொத்தி வைத்துக் கொண்டு என் பிறவி பிணியை போக்கி அருள்வாய் என்று  வேண்டுகிறார்.


பாடல்


பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.


பொருள் 

பொய்யவனேனைப் = பொய்யே உருவான என்னை

பொருள் என ஆண்டு = ஒரு பொருளாக மதித்து

ஒன்று பொத்திக்கொண்ட = என் தவறுகளை மறைத்து (பொத்தி வைத்து)

மெய்யவனே =  மெய்யானவனே

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விட மாட்டாயே

விடம் உண் மிடற்று =  நஞ்சை உண்டு உன் கழுத்தில் அதை அடக்கி அதனால் உன் கழுத்து

மையவனே = கருத்தவனே 

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = நிலைத்து இருக்கும் உத்தரகோச மங்கைக்கு அரசனே

செய்யவனே = சிவந்த உருவம் கொண்டவனே

சிவனே = மங்கலமானவனே

சிறியேன் = சிறியவனான என்னை

பவம் = பிறவிப்  பிணி

தீர்ப்பவனே = தீர்பவனே