Sunday, February 2, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இராமனை கட்டிய சீதை

நாலாயிர  திவ்ய பிரபந்தம் - இராமனை கட்டிய சீதை


அனுமன் சீதையை அசோக வனத்தில் சந்திக்கிறான். அவன் இராமனின் தூதன் என்று எப்படி நிரூபிப்பது ? இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சில விஷயங்களை இராமன் அனுமனிடம் சொல்லி அனுப்பி இருக்கிறான். அவற்றுள் சிலவற்றை அனுமன் சீதையிடம் சொல்கிறான்.

கணவனும் மனைவியும் ஒருவரை மற்றவர் கட்டிப் போட்டு சீண்டி விளையாடுவது ஒரு இனிமையான விஷயம். அப்படி இராமனுக்கும் சீதைக்கும் இடையே நடந்த ஒன்றை அனுமன்  கூறுகிறான்.

"சீதை, ஒரு முறை நீயும் இராமனும் தனிமையில் இருந்தீர்கள். உங்களுக்குள் ஒரு சின்ன போட்டி விளையாட்டு நடந்தது. அதில் யார் வெல்கிறார்களோ அவர்கள் தோற்றவர்களை கட்டிப் போடுவது என்று. நீ வென்றாய். நீ இராமனை கட்டிப் போட வேண்டும். ஆனால் அவனை முரட்டு கயிற்றில் கட்டிப் போட உனக்கு மனம் இல்லை. மல்லிகை பூவால் ஆன ஒரு பூச் சரத்தை எடுத்து அதனால் அவனை கட்டினாய்....இது ஒரு அடையாளம்"


பாடல்


அல்லியம்பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே!
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓரிட வகையில்
மல்லிகை மாமாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

பொருள்

அல்லி = ஒரு வித பூ

அம் பூ = அந்த பூ போன்ற

மலர்க் கோதாய்! = மலர் போன்ற பெண்ணே 

அடிபணிந்தேன் விண்ணப்பம் = உன் அடி பணிந்து

சொல்லுகேன் = சொல்லுகிறேன்

கேட்டருளாய் =     கேட்டு அருள்வாய்

 துணை மலர்க் கண் மடமானே! = ஒன்றோடு ஒன்று துணையாக இருப்பதைப் போன்ற கண்களை கொண்ட  மருட்சி உள்ள மானைப் போன்றவளே

எல்லியம்போது = அம் + எல்லி + போது = அழகிய இரவு வேளையில் 

இனிதிருத்தல் = இனிது இருத்தல். இனிமையாக இருந்த போது 

இருந்தது = நடந்தது 

ஓரிட வகையில் = ஓரிடத்தில்

மல்லிகை மாமாலைகொண்டு = மல்லிகையால் ஆன மாலையை கொண்டு

 அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் = அங்கு கட்டியதும் ஒரு அடையாளம்.

கட்டியது யார், யாரை என்று சொல்லவில்லை. சீதையிடம் சொல்லியதால், சீதை கட்டியதாகக் கொள்ளலாம். அல்லது சீதையைக் கட்டியதாகக் கொள்ளலாம்.

அவர்களுக்குள் இருந்த அந்த இனிய அன்பை வெளிப் படுத்தும் பாடல்.




1 comment:

  1. யார் யாரைக் கட்டினார் என்ற பொருள் நேரடியாக இல்லாதபோது, சீதை இராமனைக் கட்டியதாக உன் விளக்க உரையில் எழுதியது ஏன்?

    ReplyDelete