Sunday, February 9, 2014

நீத்தல் விண்ணப்பம் - அமுதப் பெரும் கடலே

நீத்தல் விண்ணப்பம் - அமுதப் பெரும் கடலே 


தண்ணீருக்காக எவ்வளவோ கஷ்டப் படுகிறோம்.

இந்த கடல் நீர் அனைத்தும் நல்ல நீராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

அதுவும் தெளிந்த சுத்தமான நீராக இருந்தால் ?

தண்ணீரை விடுங்கள், கடல் முழுவதும் அமுதமாக இருந்தால் ?

அமுதம் கொஞ்சம் கிடைத்தால் கூட போதும். அது கடல் அளவு இருந்தால் ? இறைவனின் அருள், அன்பு, கடல் போல நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.
இருந்தும் நான் அதை விட்டு விட்டு என் புலன்கள் தரும் சிற்றின்பங்களின் பின்னால் அலைகிறேனே , இருந்தும் என்னை கை விட்டு விடாதே என்கிறார் மாணிக்க  வாசகர்.

மனிதனுக்குள் நித்தம் நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார் மணிவாசகர்.

ஒரு புறம் இறை உணர்வு உந்தித் தள்ளுகிறது. மறுபுறம் புலன் ஆசைகள் பற்றி இழுக்கின்றன. இதையும் விட முடியவில்லை, அதையும் விட முடியவில்லை.

தவிப்பு  தொடர்கிறது.

பாடல்

நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்
விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ,
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே,
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.


பொருள் 


நெடுந்தகை = பெருந்தன்மை கொண்டவனே

நீ = நீ

என்னை ஆட்கொள்ள = நீ என்னை ஆட்கொண்ட பின்பும்

யான் = நான்

ஐம் புலன்கள் = என் ஐந்து புலன்களும்

கொண் விடும் தகையேனை  = கொண்டு செல்லும் வழியில் செல்லும் தன்மை
உடையவனாய் இருக்கிறேன்

விடுதி கண்டாய்? - இருந்தும் என்னை கை விட்டு விடாதே

விரவார் வெருவ = பகைவர்கள் அஞ்சும்படி

அடும் = சண்டை இடும்

தகை வேல் வல்ல = வல்லமை பொருந்திய வேலைக் கொண்ட

உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

கடும் தகையேன் = கடுமையான தன்மை கொண்ட நான்

உண்ணும் = உண்ணும்

தெள் நீர் = தெளிந்த நீர்

அமுதப் பெரும் கடலே = அமுதம் நிறைந்த பெரும் கடலே


குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

Saturday, February 8, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் சேலையைத் தருவாய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் சேலையைத் தருவாய் 


ஆண்டாளும் அவள் தோழிகளும் சூரியன் உதிக்கும் முன் குளத்தில் நீராட  வந்தார்கள். துணிகளை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கினார்கள். கண்ணன் அவர்கள் துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு தர மாட்டேன் என்கிறான். அவனிடம் கெஞ்சுகிறாள்  கோதை. "இனிமேல் இந்த குளத்துக்கு குளிக்க வரவே மாட்டோம், தயவு செய்து எங்கள் துணிகளைத் தருவாய் " என்று வேண்டுகிறாள்.

பாடல்

கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே

பொருள்

கோழி = கோழி

அழைப்பதன் முன்னம் = கொக்கரித்து அழைக்கும் முன்

குடைந்து = மூழ்கி

நீராடுவான் போந்தோம் = நீராட வந்தோம்

ஆழியஞ் செல்வ னெழுந்தான் = சூரியனும் இப்போது வந்து விட்டான்

அரவணை மேல்பள்ளி கொண்டாய் = பாம்பணையில் பள்ளி கொண்டவனே

ஏழைமை யாற்றவும் பட்டோம் = ஏழைகளான நாங்கள் ரொம்பவும் கஷ்டப் படுகிறோம்

இனியென்றும் பொய்கைக்கு வாரோம் = இந்தப் குளத்திற்கு வரவே மாட்டோம்

தோழியும் நானும் தொழுதோம் = நானும், என் தோழிகளும் உன்னை தொழுகின்றோம். உடை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் இரண்டு கைகளையும் உயர்த்தி வணங்க முடியாது. எனவே இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு கையை சேர்த்து வணங்கினோம் என்று நயப்பு சொல்வாரும் உண்டு.

துகிலைப் = எங்கள் துணிகளை

பணித்தரு ளாயே = கொடுத்து அருள்வாய்

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர்

கந்தர் அலங்காரம் - கூத்தாட்டும் ஐவர் 


துன்பத்திற்கு காரணம் பாசம் என்று சொல்லப் படுகிறது.

பாசம் எதன் மேல் ?

மனைவி, கணவன், பிள்ளகைள், பெற்றோர், சகோதரன், சகோதரி, என்று நட்பும் உறவும் இவற்றின் மேல் உள்ள பாசம். இதில் ஏற்படும் இழப்பு, இது ஒரு பாசம்.

இதைத்தான் நாம் பொதுவாக பாசம் என்று சொல்லுகிறோம்.

ஆனால், அருணகிரிநாதர் அதைவிட ஆழமான, நாம் அறியாத ஒரு பாசத்தைக் காட்டுகிறார்.

நம் மனம் புலன்கள் மேல் வைக்கின்ற பாசம், பிணைப்பு.

புலன்கள் தரும் இன்பம், இன்பத்தில் பிறக்கும் நினைவுகள், ஞாபகங்கள், அவற்றை விட்டு பிரிய வேண்டுமே என்ற ஏக்கம் இது பாசத்தில் பெரிய பாசம்.

இறக்கும் போது எது அதிகம் கவலை தருகிறது ? இந்த இன்பங்களை , இந்த நினைவுகளை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான் பெரிய கவலை.

மனதுக்கும் புலன்களுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு விடுமானால் வாழ்வில் மிகப் பெரிய இன்பம் கிடக்கும்.

உடல் வேலை செய்ய உணவு வேண்டும். உடல் தனது தேவைக்கு உண்கிறது என்று அந்த உணவின் மேல் பற்று இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். "ஹா, அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு..இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம்" என்று மனம் அதில் இலயிக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது .

உணவு என்பது உடல் தேவை என்பது மாறி உள்ளத் தேவையாகிப் போகிறது.

மனம், புலன், பொருள் (உயிர் உள்ளது, உயிர் அல்லாதது) என்ற இந்த பாசம் மனிதனை பாடாகப் படுத்துகிறது.

இதிலிருந்து என்னை காப்பாற்று என்று முருகனை  வேண்டுகிறார்.

பாடல்

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்

சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

சீர் பிரித்த பின்

கு பாச வாழ்க்கையுள்  கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த 
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய் இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய்  விழ மேருவும் குலங்க விண்ணாரும் உய்ய 

சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடைய  சண்முகனே.

பொருள் 

கு = உலகு
பாச வாழ்க்கையுள் = உலகின் மேல் பாசம் கொண்ட வாழ்க்கையில்
கூத்தாடும்  ஐவரில் = கூத்தாடும் ஐந்து புலன்களும்
கொட்பு = சுழற்சி. ஒரு புலன் ஓய்ந்தால் அடுத்தது தலை தூக்கும். முதலில்  பசிக்கும். உணவு கிடைத்தவுடன், வேறு சுகம் தேடும். 
அடைந்த = அடைந்த 
இப்பாச நெஞ்சனை = இந்த பாச நெஞ்சம் உள்ளவனை
ஈடேற்றுவாய் = கரை ஏற்றுவாய்
இரு நான்கு = எட்டு. அஷ்ட திக்கு
வெற்பும் = மலைகளும்
அப்பாதியாய்  விழ = இரண்டாய் உடைந்து விழ
மேருவும் குலங்க = மேரு மலையும் குலுங்க
விண்ணாரும் உய்ய = தேவர்கள் உய்ய 

சப்பாணி கொட்டிய = சப்பாணி கொட்டிய
கை ஆறிரண்டு உடைய  சண்முகனே = பன்னிரண்டு கைகளை உடைய சண்முகனே


சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க

சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க 


சிவபுராணம் - மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.

அற்புதமான பாடல்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

முதல்  ஐந்து வரிகள் மேலே உள்ளவை.

பெரிய புத்தகங்களை படிக்கும் போது நல்ல கருத்துகள் நடுவிலோ, கடைசியிலோ இருந்தால் ஒரு வேளை நாம் அந்த புத்தகத்தை முழுமையாக படிக்காவிட்டாலோ அல்லது சரியாகப் படிக்கா விட்டாலோ, அந்த நல்ல கருத்தை நாம் அறியாமல் போகலாம்.

அதனால் எடுத்த எடுப்பிலேயே "நமச்சிவாய வாழ்க" என்று ஆரம்பிக்கிறார்.

நீங்கள் திருவாசகம் முழுதும் படிப்பீர்களோ இல்லையோ, முதல் வரியிலேயே நல்லதை சொல்லி ஆரம்பிக்கிறார்.

கம்பரும் அப்படித்தான்  செய்தார்."தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே" என்று முதல்  பாடலிலேயே நம்மையும் சேர்த்து அவனிடம் சரண் அடையச் செய்தார்.

"நமச்சிவாய வாழ்க" என்று சொல்லி விட்டீர்களா ?

சில சமயம் நாம் பெரிய பக்தன் என்று கூட நம் தலையில் அகங்காரம் ஏறி விடும். நான் எத்தனை கோவில் போய் இருக்கிறேன், எவ்வளவு விரதம் இருந்து இருக்கிறேன், எவ்வளவு கோவில்களுக்கு எவ்வளவு நன்கொடை தந்திருக்கிறேன் என்று  பணிவில் கூட, நல்லது செய்வதில் கூட அகங்காரம் வந்து விடலாம்.

எனவே அடுத்து

"நாதன் தாள் வாழ்க" என்று அவன் திருவடிகளைப்  போற்றுகிறார். அடிபணிந்து இருக்க வேண்டும்  என்று சொல்லாமல்  சொல்கிறார்.

நம் வாழ்க்கை சிக்கல் நிறைந்தது. கோவிலுக்குப் போய் இறைவனை வழிபடும்  நேரத்திலும் வீட்டு நினைவு, அலுவலக நினைவு, என்று ஆயிரம் நினைவுகள். அதை எல்லாம் விட்டு விட்டாலும், பக்கத்தில் நிற்கும் பச்சை சேலை மனதை  அலைக் கழிக்கிறது.

அவன் நினைவு எங்கே வருகிறது.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"

எப்போதும் என் நெஞ்சில் இருப்பவன் என்கிறார்.

.....

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் ஆயிரம் அர்த்தங்கள்....

நேரமிருப்பின், மூல நூலைப் படித்துப் பாருங்கள்...

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம்  விளங்கும்.

படித்துப் பாருங்கள்...உருகுகிறதா என்று தெரியும்.....


Friday, February 7, 2014

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல்

தேவாரம் - ஊர் கோபிக்கும் உடல் 


பெரிய மனிதர், நல்லவர்,  படித்தவர், பண்புள்ளவர், பக்திமான் என்று கொண்டாடிய ஊர், உயிர் இந்த உடலை விட்டு போனவுடன் இந்த உடலை எவ்வளவு வெறுப்பார்கள். "என்ன இன்னும் எடுக்கவில்லையா, ஒரு மாதிரி நாத்தம் வருகிறதே, காலாகாலத்தில் எடுங்கள்" என்று இந்த உடல் இங்கே கிடப்பது கூட குற்றம் என்று கோபித்து பேசுவார்கள்.

அந்த நிலை வரும் முன்னால், இந்த உடலைக் கொண்டு சாதிக்க வேண்டியவற்றை சாதித்துக் கொள்ள வேண்டும்.

நாம் நிரந்தரமாக இங்கே இருக்கப் போவது இல்லை.

அது நமக்கு அடிக்கடி மறந்து போய் விடுகிறது.

நாவுக்கரசர் சொல்கிறார்

துன்பம் தரும் இந்த வாழ்வில் என்ன செய்தீர்கள் ? இடுகாட்டுக்கு இந்த உடல் செல்வது உறுதி. அவன் கை விட்டு விட்டால் இந்த உடலை ஊரார் கோபித்து எடுத்துச் செல்லும்படி சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடும்.

பாடல்


 நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்
              சுடலை சேர்வது சொற்பிர மாணமே
              கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
              உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பொருள் 

நடலை  = துன்பம்
வாழ்வு = நிறைந்த வாழ்கையை
கொண் டென்செய்தீர் = கொண்டு என்ன செய்தீர் ?
நாணிலீர் = வெட்கம் இல்லாதவர்களே
சுடலை = சுடுகாடு
சேர்வது  = சென்று அடைவது
சொற்பிர மாணமே = சத்தியமான சொல்லே
கடலின் = பாற்கடலில்
நஞ்சமு துண்டவர் = தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவர்
கைவிட்டால் = கை விட்டு விட்டால்
உடலி னார் = இந்த உடலை
கிடந் தூர்முனி பண்டமே = ஊரார் கோவிக்கும் நிலையில் இருக்கும் இந்த உடல் .


சிவன் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாக உண்டான். 

என்ன அர்த்தம் ?

அவ்வளவு கொடிய விஷத்தையே அவன் ஏற்றுக் கொண்டான். 

நீங்கள் அவ்வளவு கொடியவர்களா என்ன ?

உங்களையும் ஏற்றுக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்லும் கதை அது. 


திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

திருவாசகம் - உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தேன்

நம் ஐந்து புலன்களும் நமக்கு இன்பத்தை தருவதாக ஏமாற்றி நம்மைத் துன்பத்தில் தள்ளி  விடுகின்றன.

நல்லா இருக்கும், சாப்பிடு சாப்பிடு என்று நாக்கு தூண்டி, முதலில் இன்பம் தருவது போல தந்தாலும் பின்னாளில் சர்கரை வியாதி, உடல் பருமன் என்று ஆயிரம் துன்பத்தில் நம்மை கொண்டு செலுத்தி விடுகின்றன.

இப்படி புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருந்ததனால் உன்னை மறந்து விட்டேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரு நீறு பூசி ஒளிவிடும் உடலைக் கொண்டவனே என்று இறைவனை வேண்டுகிறார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற இந்த பதிகம் முழுவதும் நமக்குள் அன்றாடம் நடக்கும் போராட்டங்களை அடிகள் படம் பிடித்து  காட்டுகிறார்.

இந்தப் பாடலில் புலன் இன்பங்களுக்கும், இறைவனை நாடும் நோக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விளக்குகிறார்.

பாடல்

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

பொருள் 

மாறுபட்டு = என்னில் இருந்து மாறுபட்டு

அஞ்சு = ஏன் ஐந்து புலன்களும்

என்னை வஞ்சிப்ப = என்னை வஞ்சனையைச் செய்ய. நல்லது செய்வதாக தொடங்கி தீயதில் தள்ளி விடும் புலன்கள்.  "மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்பார் அடிகள் சிவபுராணத்தில்

யான்  = நான்

உன் மணி மலர்த் தாள் = உன் மலர் போன்ற திருவடிகளை

வேறுபட்டேனை  = விட்டு வேறுபட்டு நின்றேன்

விடுதி கண்டாய்? = என்னை கை விட்டு விடாதே. புலன் இன்பங்களும் வேண்டும், இறைவன் அருளும் வேண்டும். அல்லாடுகிறார் அடிகள். அதையும்  விட முடியவில்லை. இதையும் விட முடியவில்லை.

வினையேன் மனத்தே = வினை உடையவனாகிய என் மனதில்

ஊறும் மட்டே = ஊற்றாக பொங்கி வரும் தேனே. (மட்டு = தேன் ). இறைவனை நினைத்தால் உள்ளத்தில் உவகைத் தேன் ஊற்றெடுத்து பெருக வேண்டும். பெருகும்.

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

நீறு பட்டே = திரு நீறு அணிந்து

ஒளி காட்டும் = ஒளி விடும்

பொன் மேனி நெடுந்தகையே = பொன்னை போன்ற மேனியைக் கொண்ட பெருமை கொண்டவனே