Friday, June 20, 2014

திருத் தெள்ளேணம் - கண்களில் நீர்த் திரையாட

திருத் தெள்ளேணம் - கண்களில் நீர்த் திரையாட 


என்றாவது நமக்கு கிடைத்து இருக்கும் செல்வங்களுக்காக நாம் மகிழ்ந்தது உண்டா ? ஊனம் இல்லாத உடல், பெரும்பாலும் ஊனம் இல்லா மனம், கல்வி, உறவு, நட்பு, குழந்தைகள், சண்டை இல்லாத நாடு, மிக உயர்ந்த தமிழ் மொழி வாசிக்கும், இரசிக்கும் அறிவு ....கொஞ்சம் பொருட் செல்வம், குழந்தைகள், கணவன்/மனைவி.....


இவற்றையெல்லாம் அடைய நாம் என்ன செய்து விட்டோம் ?

இத்தனையும் இலவசமாக நமக்குத் தரப் பட்டு இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயம்.

இவற்றையும் தாண்டி, இறை அருளும் தனக்குக் கிடைத்தது என்று எண்ணி மனிவாசகர் உருகுகிறார்....

இறைவன் சந்நிதியில் நிற்கிறார்....கண்ணீர் ததும்புகிறது...

 இடையில் நாக பாம்பை கட்டிய எம் பிரான், இந்த உலகில் மலையின் மேல் விளையாடிய  பெண்ணான பார்வதியை தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டு, இங்கு வந்து என்னை ஆட் கொண்ட திறத்தை நினைக்கும் போது , மனதில் ஒளி  விடுகிறது, கண்களில் நீர் திரையாடுகிறது....அதை எண்ணி ஆனந்த கூத்தாடுவோம்  என்கிறார்.

பாடல்

அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாட உள்ளொளி யாடஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பொருள்

அரையாடு நாகம் = இடுப்பில் ஆடுகின்ற நாகம். அரை என்றால் இடுப்பு. அரை என்றால் பாதி. உடம்பின் பாதியில் அமைந்தது இடுப்பு.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து "


அசைத்தபிரான் = அணிந்த பிரான். பிரியாதவன் என்பதன் மரூவு பிரான்

அவனியின் மேல் = இந்த உலகில்

வரையாடு மங்கை = வரை என்றால் மலை. மலை மகள் பார்வதி. அவள் சிறுமியாக இருக்கும் போது அந்த மலையில் தானே விளையாடி இருப்பாள் ?


தன் பங்கொடும் = தன் உடலில் பாதியை கொண்டு

வந் தாண்டதிறம் = வந்து ஆட்கொண்ட திறனை

உரையாட = சொல்ல

உள்ளொளி யாட = உள்ளத்தில் ஒளி ஆட

ஒண்மாமலர்க் கண்களில் = பெரிய மலர் போன்ற கண்களில்

நீர்த் திரையாடு = நீர் திரையாட

மாபாடித் = அதைப் பாடி

தெள்ளேணங் கொட்டாமோ. = தெள்ளேணம் கொட்டாமோ (ஒருவித கும்மி பாட்டு )

பாடலின் ஆழ்ந்த அர்த்தம் ஒருபுறம் இருக்க, தமிழ் எப்படி விளையாடுகிறது. 

நன்றிப் பெருக்கில் உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் திரையாடுகிறது....


இராமாயணம் - பேசாத கிளியும் பாடாத குயிலும்

இராமாயணம் - பேசாத கிளியும் பாடாத குயிலும் 


இடம் மாறினால் மனம் மாறுமா ? சீதையின் நினைவால் வாடிய இராவணன் அரண்மனையை விட்டு பூஞ்சோலை அடைந்தான்.

அவன் காமம் அவனை விட்டு போவதாக இல்லை.

அந்த சோலையில் அவனுக்கு அமைதி கிடைத்ததா ?

அங்கு அவன் பட்ட அவஸ்த்தையை கம்பர் விவரிக்கிறார்....


அந்த சோலையில் குயில்களும், கிளிகளும், அன்னங்களும் உண்டு. அவை இனிமையாக பேச மற்றும் பாடக் கூடியவை. இராவணன் இருக்கும் நிலையை பார்த்து, எங்கே வாய் திறந்தால் அவன் கோவித்துக் கொள்வானோ என்று அவைகளும் வாய் மூடி மெளனமாக இருந்தன.


பாடல்

கனிகளின், மலரின் வந்த
    கள் உண்டு, களிகொள் அன்னம்,
வனிதையர் மழலை இன்சொல்
    கிள்ளையும், குயிலும், வண்டும்,
இனியன மிழற்றுகின்ற யாவையும்,
    ‘இலங்கை வேந்தன்
முனியும் ‘என்று அவிந்த வாய,
    மூங்கையர் போன்ற அன்றே.

பொருள்

கனிகளின் = கனிகளில்

மலரின் = மலர்களில்

வந்த = இருந்து வந்த

கள் உண்டு = தேனை உண்டு

களிகொள் = இன்பம் கொண்ட

அன்னம் = அன்னப் பறவைகள்

வனிதையர்  = பெண்களின்

மழலை இன்சொல் = குழந்தை போல பேசும் இனிய சொற்களை கொண்ட

கிள்ளையும் = கிளிகளும்

குயிலும் = குயில்களும்

வண்டும் = வண்டுகளும்

இனியன மிழற்றுகின்ற யாவையும் = இனிமையான சப்தம் தரும் எல்லாம்

‘இலங்கை வேந்தன் = இலங்கை வேந்தன்

முனியும் ‘ = கோவிப்பான்

என்று = என்று

அவிந்த வாய = வாயை மூடிக் கொண்டு

மூங்கையர் போன்ற அன்றே = ஊமைகளைப் போல இருந்தன



மலை மேல் ஏறி நின்றாலும் காமம் சுடும் 

நீரில் மூழ்கினாலும் காமம் சுடும். 

இந்த காமத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது ? இதை எப்படி சமாளிப்பது  ?

பின்னால் கம்பர் சொல்கிறார்....




Wednesday, June 18, 2014

கம்ப இராமாயணம் - இன்ன ஆறு செய்வென்

கம்ப இராமாயணம் - இன்ன ஆறு செய்வென்

சீதையின் எண்ணம் இராவணனை வாட்டுகிறது.

என்ன செய்வது என்று தெரியவில்லை ....யாருக்கு .... நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவைக் கொண்ட இராவணனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அரண்மனையில் இருக்கப் பிடிக்கவில்லை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள சோலைக்குப் போகிறான்.

பாடல்


அன்ன காலை, அங்குநின்று எழுந்து, 
     அழுங்கு சிந்தையான், 
'இன்ன ஆறு செய்வென்' என்று, ஓர் 
     எண் இலான், இரங்குவான்; 
பன்னு கோடி தீப மாலை, 
     பாலை யாழ் பழித்த சொல் 
பொன்னனார், எடுக்க, அங்கு, 
     ஓர் சோலையூடு போயினான்.


பொருள்

அன்ன காலை, = அந்த நேரத்தில்

அங்கு நின்று எழுந்து = அங்கிருந்து எழுந்து நின்று

அழுங்கு சிந்தையான்,= நொந்த சிந்தனையுடன்

'இன்ன ஆறு செய்வென்' என்று, = என்ன செய்வது என்று

ஓர்  எண் இலான் = ஒரு எண்ணம் இல்லாதவன் 

இரங்குவான்; = வருந்துவான்

பன்னு கோடி தீப மாலை,= நிறைய தீபங்களை ஏந்திய

பாலை யாழ் = பாலை யாழ் என்ற இசைக் கருவியை

 பழித்த சொல் = பழித்த இனிய குரலை உடைய

பொன்னனார், = பொன் போன்ற மேனி கொண்ட பெண்கள்

எடுக்க = ஏந்தி வர

அங்கு = அங்கு உள்ள

ஓர் சோலையூடு போயினான் = ஒரு சோலைக்குச் சென்றான்

அழகான பெண்கள் ஆயிரம் உண்டு அவன் அரண்மனையில்.

அவனுக்கு சீதை தான் வேண்டும்.

விதி.

காமம் மனதில் குடி ஏறும்போது என்ன செய்வது என்று   தெரிவதில்லை. வாழ்வில்  இது வரை பெற்றது எல்லாம் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை.

எத்தனை சீதைகளோ

எத்தனை இராவனன்களோ .....


கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள்

கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள் 


கடலில் கப்பல் போவதை பார்த்து இருக்கிறீர்களா ?

ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள், நீரில் மிதந்து போகும்.

கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம்.

அந்த வெள்ளம் தேங்கியது மட்டும் அல்ல, போர்களம் நிறைந்து வெளியில் போகிறது.

அந்த வெள்ளத்தில் இறந்த யானைகள் அடித்துச் செல்லப் படுகின்றன.

அப்படி அந்த இரத்த வெள்ளத்தில் யானைகள் மிதந்து போவது கடலில் கப்பல்கள் மிதந்து போவதைப் போல இருக்கிறதாம்.

பாடல்

உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
     கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்.

பொருள்

உடலின்மேல் = (யானைகள் தங்கள் ) உடலின் மேல்

பலகாயஞ் = பல காயங்களை கொண்டு

சொரிந்து = (இரத்தம்) கொட்ட

பின்கால் = பின்னால்

உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை = உடல் பதித்து உதிரம் ஒழுகி யானைகள்

கடலின்மேல் = கடலின் மேல்

கலந்தொடரப் = கப்பல்கள் , தொடர

பின்னே செல்லுங் = ஒன்றன் பின் ஒன்று செல்லும்

கலம்போன்று  = கப்பல்கள் போல

தோன்றுவன = தோன்றின

காண்மின் காண்மின்.= காணுங்கள் , காணுங்கள்



Tuesday, June 17, 2014

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும்

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும் 


எவ்வளவு படிச்சவரு...அவரு போய் இந்த பொண்ணு விஷயத்தில இப்படி நடந்துகிட்டாரே...என்று சில பேரை பற்றி செய்தித்தாளில் படிக்கும் போது நாம் வியந்திருக்கிறோம்.

பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பு படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. உலகு அறிந்த அறிவுடையவர்களும் நிலை தளரும் இடம் அது என்கிறார் ஜெயங்கொண்டார்.

பாடல்

புடைபட இளமுலை வளர்தொறும்
     பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து 
இடைபடு வதுபட அருளுவீர் 
   இடுகதவு உயர்கடை திறமினோ.

பொருள்

சீரை பல விதங்களில் பிரித்தும் சேர்த்தும் இரசிக்க வேண்டிய பாடல்


புடைபட = பக்கங்கள் திரண்டு வளர்ந்த

இளமுலை = இளமையான மார்புகள்

வளர்தொறும் = நாளும் வளரும் போது

பொறைஅறி வுடையரும் = பொறுமையும், அறிவும் உள்ளவர்களும்

நிலைதளர்ந்து = தங்கள் நிலை தளர்ந்து

இடை படுவது பட = பெண்களே , உங்கள் இடை எந்த பாடு படுமோ அந்த அளவு அவர்களும் பட. மார்புகள் நாளும் வளர்வதால் இடை பாரம் தாங்காமல்  வருந்தும்.அது போல பொறை உடை அறிவுடையவர்களும் வருந்தாவர்கள்.

இன்பமும் இல்லாமல், துன்பமும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் கிடந்து தவிப்பது - பட. பட என்றால் பட்டுப் போக. விலகிப் போக.

இடையை நோக்கிய துன்பங்கள் பட்டுப் போக...என்று பலப் பல அர்த்தங்கள் சொல்லிக் கொண்டே  போகலாம்.

அருளுவீர் = அந்த துன்பங்கள் எல்லாம் அற்றுப் போக அருள் தருவீர்

இடுகதவு = உங்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள கதவு

 உயர்கடை திறமினோ.= உயர்ந்த வாசலில் உள்ளது, அதைத் திறவுங்கள்.

சொல்லுக்கும் ஜொள்ளுக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

சட்டை எல்லாம் நனைகிறது.....


கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள்

கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள் 


நாம் உண்மையை மற்றவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியுமா.

ஞானம் சொல்லித் தந்து வருமா ?

ஒருவர் எவ்வளவுதான் கற்று அறிந்த ஞானியாக இருந்தாலும், கற்ற அனைத்தையும் இன்னொருவருக்கு தந்து விட முடியுமா ?

முடியாது என்கிறார் அருணகிரி நாதர்.

"கரவாகிய கல்வி உளார்"  கரவு என்றால் மறைத்தல் என்று பொருள். அறிந்தவர்கள் அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லித்  .தருவது இல்லை. அது கல்வியின் இயற்கை குணம். கல்வியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருவன் தன்னை  திடப் படுத்திக் கொள்ள நினைப்பான். தான் நிலைத்த பின் மற்றவர்களுக்கு தரலாம் என்ற எண்ணம் வரும். அவன் எப்போது திருப்தி அடைந்து, மற்றவர்களுக்குத் தருவது ?


அது மட்டும் அல்ல, தனக்குத் தெரிந்த அனைத்தையும் இன்னொருவனுக்கு சொல்லுவது என்றால், கேட்பவனின் தகுதி பார்க்க வேண்டும். குரங்கு கை பூ மாலையாகப் போய் விடக் கூடாது.

இறைவா, தன்னிடம் உள்ள கல்வியை மறைத்து மீதியை மற்றவர்களுக்குத் தரும் கல்வியாளர்களிடம் சென்று என்னை நிற்க வைக்காமல் நீயே எனக்கு உபதேசம் செய். தலைவா, குமரா, படைகளைக் கொண்டவனே, சிவ யோகம் தரும் தயை  உள்ளவனே என்று முருகனிடம் உருகுகிறார் அருணகிரி.

பாடல்


கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

சீர் பிரித்த பின் 


கரவாகிய கல்வி உளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ 
குரவா குமரா குலிச ஆயுதம் 
குஞ்சரவா சிவ யோக தயா பரனே 

பொருள் 


கரவாகிய கல்வி உளார் = மறைக்கக் கூடிய கல்வியை உடையவர்கள் 

கடை சென்று = வாசலில் சென்று 

இரவா வகை = வேண்டாது இருக்கும்படி 

மெய்ப் பொருள் ஈகுவையோ = மெய்யான பொருளை நீயே எனக்குத் தா 

குரவா = தலைவா 

குமரா = குமரா 

குலிச ஆயுதம் = குலிசம் என்ற ஆயுதம் தாங்கிய 
 
குஞ்சரவா = குஞ்சரவா 

சிவ யோக தயா பரனே = சிவ யோகத்தைத் தரக்கூடிய அன்புள்ளவனே 

 

Monday, June 16, 2014

இராமாயணம் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே

இராமாயணம் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே 


சூர்பனகை சீதையின் அழகை எல்லாம் சொன்ன பின் , இராவணன் மனம் சீதையின் பால் செல்கிறது.

காமம் அவனை வாட்டுகிறது. காம நோயால் நொந்து போகிறான்.

காதல் (கம்பன் காதல் என்றே சொல்கிறான். காமம் என்று அல்ல) அவன் மனதில் நூறு கோடியாகப் பூத்தது. மஞ்சத்தில் போய் விழுகிறான். எட்டு திசை யானைகளை வென்ற அவன் உடல் தேய்கிறது, உள்ளம் நைகிறது, ஆவி வேகிறது...

காதல் படுத்தும் பாடு

பாடல்


நூக்கல் ஆகலாத காதல் நூறு 
     நூறு கோடி ஆய்ப் 
பூக்க, வாச வாடை வீசு சீத நீர் 
     பொதிந்த மென் 
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் 
     எட்டும் வென்ற தோள், 
ஆக்கை, தேய, உள்ளம் நைய, 
     ஆவி வேவது ஆயினான்.

பொருள்

நூக்கல் ஆகலாத =விட்டு விலக முடியாத

 காதல் = காதல்

நூறு நூறு கோடி ஆய்ப் = நூறு நூறு கோடியாக

பூக்க = அவன் மனதில் பூக்க

வாச = வாசம் கொண்டு

வாடை வீசு = வீசும் வாடைக் காற்று

சீத நீர் = குளிர்ந்த நீர்த் துளிகளைக்

பொதிந்த மென் = கொண்ட மேகங்களால் ஆன

சேக்கை = படுக்கை

வீ = மலர்கள்

கரிந்து = கரிந்து (காமச் சூட்டில் )

திக்கயங்கள் = திக்கு யானைகள் 

எட்டும் வென்ற தோள் = எட்டையும் வென்ற தோள்கள்

ஆக்கை, தேய = கொண்ட அவன் உடல் தேய

உள்ளம் நைய = உள்ளம் நொந்து போக

ஆவி வேவது = ஆவி வேக

ஆயினான் = அவன் மாறினான்

எவ்வளவு பெரிய வீரனையும் காதல்/காமம் உருக்கிப் போடுகிறது.