Sunday, September 28, 2014

கலித்தொகை - இளமையும், வாழ்கையும்

கலித்தொகை - இளமையும், வாழ்கையும் 


இளமை கொஞ்ச காலம்தான் இருக்கும். அந்த நேரத்தில்தான் பொருள் தேடவும் வேண்டி இருக்கிறது. பொருள் தேடப் போனால் மனைவியை விட்டு பிரிந்து போக வேண்டும். பொருள் தேடி வந்த பின் கணவன் மனைவி இருவரும் வயதாகிப் போகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போகிறது.

பொருள் இல்லாமலும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

என்ன தான் செய்வது.

இந்த சிக்கல் காலம் காலமாய் தொடர்கிறது.

கலித்தொகை, அப்படி ஒரு தலைவனையும் தலைவியையும் படம் பிடித்து காட்டுகிறது.

தலைவன் பொருள் தேடப் போனான். தனக்கோ, தன் குடும்பத்திற்கோ அல்ல...வறுமையினால் தங்களிடம் வந்து பொருள் வேண்டுவோருக்கு கொடுக்க தலைவன் பொருள் தேடப் போனான். அப்படி பொருள் தேடப் போன தலைவனே, நீ தேடிக் கொண்டு வரும் பொருள் பெரிய பொருளாகுமா ? உன் கற்பு மாறாத மனைவியின் இளமை என்ற ஒரு பொருள் போய் விடுமே. அதை விட நீ தேடிக் கொண்டு வரும் பொருள் பெரியதா என்று கேட்பது போல இருக்கிறது இந்தப் பாடல்.


பாடல்  

தொலைவாகி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென
மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ
நிலைஇய கற்பினா ணீநீப்பின் வாழாதாண்
முலையாகம் பிரியாமை பொருளாயி னல்லதை

சீர் பிரித்தபின்

தொலைவாகி இரந்தோருக்கு ஒன்று ஈயாமை இழிவென 
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருளாகுமோ ?
நிலை இய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் 
முலை அகம் பிரியாமை பொருளாயின் அல்லதை

பொருள்

தொலைவாகி = அயல் நாடு சென்று

இரந்தோருக்கு = உன்னிடம் யாசகம் கேட்போருக்கு

ஒன்று ஈயாமை = ஒன்று கொடுத்து உதாவமல் இருப்பது

இழிவென = இழிவான செயல் என்று எண்ணி

மலை இறந்து = மலைகளைத் தாண்டி

செயல் சூழ்ந்த = வேலை செய்து கொண்டு வரும்

பொருள் பொருளாகுமோ ? = பொருள் ஒரு பொருளாகுமோ ?

நிலை இய கற்பினாள் = நிலைத்த கற்பினை உடைய

நீ நீப்பின் வாழாதாள் = உன்னை விட்டு நீங்கினாள் உயிர் வாழதவளான உன் மனைவியின்

முலை அகம் பிரியாமை = இளமையான அழகான மார்புகளை விட்டு பிரியாமல் இருக்கும் அந்த இன்பத்தை விட 

பொருளாயின் அல்லதை = சிறந்த பொருள் அல்லாத பொருள்களை


நீ கொண்டு வரும் பொருள் ஒன்றும் பெரிதல்ல, மனைவியோடு ஒன்றாக இருந்து வாழ்வதே பெரிது என்று சொல்வது போல அமைந்து  இருக்கிறது.

கலித் தொகையைப் பற்றி கூறும்போது "கற்றறிந்தோர் ஏற்றும் கலி" என்று கூறுவார்கள்.

இந்த பாடலில் எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.


1. இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று சொல்வது இழிவு என்று நம் சமுதாயம்  நினைத்து வாழ்ந்திருக்கிறது. கைகேயின் மனதை மாற்ற நினைத்த கூனி கூறுவாள் "அடியே கைகேயி, நாளை இராமன் முடி சூடினால், அரண்மனை  செல்வம் அனைத்தும் கோசலையிடம்  போய் விடும். உன்னிடம்  உதவி என்று  வருபவர்களுக்கு நீ என்ன சொல்லுவாய் , கோசலையிடம் போய் நீ கையேந்தி நிற்பாயா, அல்லது உன்னிடம் உதவி என்று வருபவர்களிடம் நீ பதிலுக்கு இல்லை என்று  சொல்லுவாயா அல்லது அந்த நிலையை நினைத்து இதயம் வெடித்து இறப்பாயா" என்று கேட்கிறாள். கைகேயியால் நினைத்துப்  பார்க்க முடியவில்லை அந்த மாதிரி ஒரு நிலையை.


‘தூண்டும் இன்னலும் வறுமையும்
    தொடர்தரத் துயரால்
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு,
    இரு நிதி, அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதியோ?
    விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ?
    எங்ஙனம் வாழ்தி?


இந்த மண் மீது பிறக்கும் போது கொண்டு வந்தது ஒன்றும் இல்லை. இந்த உலகை விட்டு போகும் போது கொண்டு போகப் போவதும் ஒன்றும் இல்லை. இதற்கிடையில் கிடைத்த செல்வம் எல்லாம் சிவன் கொடுத்தது என்று எண்ணி மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு என்னத்தச் சொல்ல என்று வருந்துகிறார் பட்டினத்தடிகள்.


பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.


இதையே சொல்ல வந்த வள்ளுவரும், 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 

2. பொருள் தேடும் புறத்திணையும், தலைவன் தலைவி அன்போடு ஒன்றி வாழும் அகத்திணையும் ஒன்றாக்கிக் காட்டுகிறது இந்தப் பாடல்.


3. எது முக்கியம் ? பொருள் பொருள் என்று நாளும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து  விட்டு நிற்கிறோம். பொருள் வேண்டியதுதான். அதற்காக உறவுகளை  உதறித் தள்ள வேண்டியது இல்லை. பொருள் எதற்க்காக சேர்கிறோம்  ? உறவுகளுக்காகத்தானே ? 

4. ஒரு பிச்சைகாரன் நம்மிடம் பிச்சை கேட்டால் பொதுவாக நாம் என்ன சொல்லுவோம் " சில்லறை இல்லை" என்று சொல்லுகிறோம். இல்லை என்று சொல்லுபவனிடம்  நாமும் இல்லை என்று சொல்கிறோம். அது இழிவு என்று நினைத்து  வாழ்ந்தது நம் சமுதாயம்.  கொடுத்து வாழ்ந்த சமுதாயம். 


5. பொருள் தேடும் போது இளமை போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது  என்று அறிவுறுத்துகிறது.

நல்ல பாடல் தானே ?


Saturday, September 27, 2014

இராமாயணம் - அறம் வெல்லும் பாவம் தோற்கும்

இராமாயணம் - அறம் வெல்லும் பாவம் தோற்கும்


அறம் வெல்லும். பாவம் தோற்கும் என்று அத்தனை இலக்கியங்களும் ஒருசேர அறிவிக்கின்றன.

இருந்தும் மனிதன் அறம் அல்லாத வழியில் சென்று வென்று விடலாம் என்று நினைக்கிறான்.

அனுமன் இலங்கையை அடைகிறான்.

இலங்கா தேவி என்ற பெண் இலங்கையை காவல் காத்து வருகிறாள். அவள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே போக முடியாது.

அவள் அனுமனை தடுத்து நிறுத்துகிறாள்.

அனுமனுக்கும் அவளுக்கும் வாக்குவாதம் நிகழ்கிறது.

இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். ஒருவரை மற்றவர் ஓங்கி அடிப்பது, யார் தாங்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறார்களோ அவர்கள் மற்றவர் சொற்படி கேட்க வேண்டும் என்பது அந்த முடிவு.

முதலில் இலங்கா தேவி அடிக்கிறாள். அனுமன் திணறினாலும் சுதாரித்துக் கொள்கிறான்.

பின் அனுமன் அடித்த அடியில் இலங்கா தேவி கீழே விழுந்து விடுகிறாள்.

 எழுந்து சொல்லுவாள்.

" என்னை பிரமன் இலங்கையின் காவலுக்கு நியமித்தான். அப்போது அவனிடம் எவ்வளவு காலம் காவல் காக்க வேண்டும் என்று கேட்டேன். என்று ஒரு குரங்கு உன்னை அடித்து  வீழ்துகிறதோ,அன்றுவரை காவல் காத்து வா. என்று ஒரு குரங்கு உன்னை வீழ்த்துகிறதோ அன்றிலிருந்து இலங்கையின் அழிவு தொடங்கி விடும்" என்று கூறினான்.

என்று சொன்ன பின், மேலும் சொல்லுவாள்...

அவன் கூறிய மாதிரியே நடந்தது. இன்று ஒரு குரங்கின் கையால் நான் விழுந்தேன். அறம் வெல்லும். பாவம் தோற்கும்...இதை சொல்லவும் வேண்டுமோ ? நீ எண்ணிய எண்ணிய வண்ணம் முடிக்கும் ஆற்றல்  உள்ளவன். பொன்மயமான இந்த நகரினுள் நீ போகலாம்" என்று கூறி அவனை வணங்கி விடை பெற்றாள் 

பாடல்

அன்னதேமுடிந்தது ஐய!
     'அறம்வெல்லும் பாவம் தோற்கும்'
என்னும் ஈதுஇயம்ப வேண்டும்
     தகையதோ ?இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம்முற்றும்,
     உனக்கும்முற்றாதது உண்டோ ?
பொன்நகர் புகுதிஎன்னாப் புகழ்ந்து
     அவள்இறைஞ்சிப் போனாள்.

பொருள்

அன்னதேமுடிந்தது ஐய! = ஐயனே, அன்று பிரமா சொன்ன மாதிரியே நடந்தது

'அறம்வெல்லும் பாவம் தோற்கும்' = அறம் வெல்லும் பாவம் தோற்கும்

என்னும் ஈது = என்ற இந்த சத்ய வாக்கு

இயம்ப வேண்டும் தகையதோ ? = சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றா

இனி மற்று உன்னால் = இனி உன்னால்

உன்னிய எல்லாம்முற்றும் = எண்ணிய படி எல்லாம் நடக்கும்

உனக்கும்முற்றாதது உண்டோ ? = உன்னால் முடியாதது ஒன்று உண்டா ?

பொன்நகர் புகுதிஎன்னாப் புகழ்ந்து = பொன்மயமான இந்த இலங்கை நகரினுள் நீ செல்லலாம் என்று அனுமனை புகழ்ந்து

அவள்இறைஞ்சிப் போனாள் = அவள் வணங்கி போனாள்


அறம் வெல்லும் ! வென்று கொண்டு இருக்கிறது. இனியும் வெல்லும். 

தாயுமானவர் பாடல் - பெற்றவளுக்கே தெரியும்

தாயுமானவர் பாடல் - பெற்றவளுக்கே தெரியும் 


பிள்ளை பெறுவதின் வலி ஒரு தாய்க்குத் தான் தெரியும்.  பிள்ளை பெறாத பெண் அந்த வலியை அறிய மாட்டாள். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவளுக்கு அது  புரியாது.

அது போல

பேரானந்தம் அடைந்தவர்களுக்கே உள்ளம் நெகிழ்வதும், கண்ணீர் மல்குவதும்  உண்டாகும்.மற்றவர்கள் நெஞ்சம் கல் நெஞ்சமாகவே  இருக்கும்.

பாடல்

பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை
பெறாப்பேதை யறிவாளோ பேரா னந்தம்
உற்றவர்க்கே கண்ணீர்கம் பலையுண் டாகும்
உறாதவரே கல்நெஞ்ச முடைய ராவார்.

பொருள்

பெற்றவட்கே = பெற்றவளுக்கே

தெரியுமந்த = தெரியும் அந்த

வருத்தம் = வருத்தம்

பிள்ளை பெறாப் பேதை யறிவாளோ = பிள்ளை பெறாத பேதைப் பெண் அறிவாளோ (அந்த வலி) 


பேரா னந்தம் = பேரானந்தம்

உற்றவர்க்கே =அடைந்தவர்களுக்கே

கண்ணீர் கம்பலையுண் டாகும் = கண்ணீரும் கம்பலையும் உண்டாகும்

உறாதவரே = அது  அடையாதவர்கள்

கல் நெஞ்சமுடைய ராவார் = கல் நெஞ்சம் உடையவர்களே



Friday, September 26, 2014

திருக்குறள் - நீத்தார் பெருமை - நூல்களின் முடிவு

திருக்குறள் - நீத்தார் பெருமை - நூல்களின் முடிவு 



நம் நாடு, குறிப்பாக நம் தமிழ் சமுதாயம்  துறவிகளை கொண்டாடிய அளவு  வேறு எந்த நாடாவது, சமுதாயமாவது கொண்டாடி இருக்கிறதா என்று தெரியவில்லை.

துறவறம் ஏன் பெரிய விஷயம் ?

நீத்தார் பெருமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார்.  அது போக துறவற இயல் என்று ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கிறார்.

ஏன் இவ்வளவு முக்கியத்வம் ?

அறம் முக்கியமானது என்று நமக்குத் தெரிகிறது. அற வழியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஆனால், எது அறம் என்று யார் எடுத்துச் சொல்வது ?

அப்படியே சொன்னாலும், சொல்லும் அந்த ஆளை நாம் எப்படி நம்புவது. அவன் சரியாகச் சொல்கிறானா ? அவனுக்கு இதில் ஏதாவது ஆதாயம் இருக்குமா என்று சிந்திப்போம்.

வாழ்க்கையில் எத்தனை சாமியார்களை பார்க்கிறோம். பெரிய பெரிய மடங்கள், பணம், ஆள், அம்பு, சேனை, கார், சொத்துக்கள்....இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது ?

எல்லாம் துறந்தவனுக்கு எதிலும் நாட்டம் இல்லை....

அவர்கள் அறத்தை உள்ளது உள்ளபடியே எடுத்துச் சொல்வார்கள் என்பதால் நீத்தார் (துறந்தார் ) மேல் அப்படி ஒரு மதிப்பு.

அது அப்படியே இருக்கட்டும்.

நாம் எவ்வளவோ பணம் செலவழிக்கிறோம். உணவு, உடை என்ற அடிப்படை தேவைகள் தவிர எவ்வளவோ செலவழிக்கிறோம்....கார் வாங்குகிறோம், வீடு, நகை, அயல் நாடுகளுக்கு ஊர் சுற்றுகிறோம்...

அதில், நல்லவர்களை சென்று காண, அவர்கள் சொல்வதை கேட்க எவ்வளவு செலவழிக்கிறோம் ?

நாம் செலவழிக்கும் பணத்திற்கு அதிக பட்ச நன்மை என்றால் அது நல்லவர்களை கண்டு அவர்கள் சொல்வதை  கேட்பது  தான் என்பது உலகியல் உள்ள அனைத்து நூல்களின் முடிவு என்கிறது வள்ளுவம்.


பாடல்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.

பொருள்

ஒழுக்கத்து = ஒழுக்கத்தின் வழி நின்று

நீத்தார் பெருமை = பற்றுகளை நீக்கியவர்களது பெருமை

விழுப்பத்து = சிறந்த பொருள்கள் அனைத்திலும்

வேண்டும் = அதுவே வேண்டும்

பனுவற் றுணிவு.= என்பது அனைத்து நூல்களின் முடிவு


குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.


Thursday, September 25, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 5

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 5


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....

--------------------------------------பாகம் 5 -----------------------------------------------------------------------

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


தொடக்கம், நடு , முடிவு என்று மூன்றுமாக இருப்பவன். இவை இல்லாமலும் இருப்பவன். 

அது எப்படி ? 

அவனே தொடக்கம், நடு முடிவு என்று இருக்கிறான், இவை இல்லாமலும் இருக்கிறான் என்பது எப்படி சாத்தியமாகும் ?


தொடக்கம், நடு , முடிவு என்பது காலத்தின் பரிணாமம். அவன் காலத்தை கடந்தவன். காலம் இல்லாத ஒன்றுக்கு தொடக்கம், நடு , முடிவு எப்படி இருக்கும். 

குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

சற்று நிதானமாக சிந்திப்போம். 

காலம் என்பது என்ன ? காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? 

காதலிக்காக காத்து இருக்கும் போது ஒரு நிமிடம் கூட யுகம் போல இருக்கிறது. 

காதலியுடன் இருக்கும் போது யுகம் கூட நிமிடம் போல பறந்து விடுகிறது. 

எப்படி ? இது எதனால் நிகழ்கிறது ?

மனம் ஒன்றிப் போகும் போது காலம் நின்று  போகிறது. யுகம் கூட  நொடியாக உறைந்து போகிறது. 

மனம் ஒன்றாத போது காலம் நீண்டு கொண்டே போகிறது என்பது புரிகிறது அல்லவா ?

ஞானிகளுக்கு கடந்த காலம், எதிர் காலம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறார்கள். 

நாமோ, ஒன்று இறந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நாம் நிகழ் காலத்தில்  வாழ்வதே இல்லை. 

மனம் ஒன்று பட்டவர்களுக்கு அவன் ஆதி, அந்தம், நடு அல்லாதவன். 

மனம் ஒன்று படாதவர்களுக்கு அவன் ஆதி, அந்தம் நடுவாகி நின்றவன். 

மேலும் சிந்திப்போம் 




Wednesday, September 24, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 4

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 4


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....





Tuesday, September 23, 2014

இராமாயணம் - அங்கதன் தூது - இராவணன் செய்த பிழைகள்

இராமாயணம் - அங்கதன் தூது - இராவணன் செய்த பிழைகள் 


மாற்றான் மனைவியை கவர்ந்த ஒரு பிழை தான் இராவணன் செய்தானா ? வேறு ஒரு பிழையுமே செய்யவில்லையா ?

இலக்குவன் பட்டியல் போடுகிறான்

சீதையை சிறையில் வைத்தான்
தேவர்களுக்கு துன்பம் செய்தான்
பூமியில் உள்ள நலவர்களுக்கு துன்பத்தை தந்தான்
உயிர்களை கொன்று தின்றான்
பேராசையினால் உலகம் அனைத்தையும் தானே ஆண்டான்
இந்திரனின் செல்வங்களை கவர்ந்து கொண்டான்

பாடல்

‘தேசியைச் சிறையில் வைத்தான்;
    தேவரை இடுக்கண் செய்தான்;
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்;
    மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
ஆசையின் அளவும், எல்லா
    உலகமும் தானே ஆள்வான்,
வாசவன் திருவும் கொண்டான்;
    வழி அலா வழிமேல் செல்வான்.

பொருள்

‘தேசியைச் = ஒளி பொருந்தியவளை (சீதை)

சிறையில் வைத்தான்;= சிறையில் வைத்தான்

தேவரை இடுக்கண் செய்தான் = தேவர்களுக்கு துன்பம் செய்தான்

பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் =  பூவுலகில் உள்ள நல்லவர்களுக்கு துன்பத்தைத் தந்தான்

மன்னுயிர் புடைத்துத் தின்றான் = உயிர்களை புடைத்துத் தின்றான்

ஆசையின் அளவும் = அளவற்ற ஆசையினால்

எல்லா உலகமும் தானே ஆள்வான் = மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரமால், தானே ஆண்டான்

வாசவன் திருவும் கொண்டான் = இந்திரனின் செல்வங்களைப் எடுத்துக் கொண்டான்

வழி அலா வழிமேல் செல்வான் = வழி அல்லா வழி மேல் சென்றான்


சொல்லுக்குப் பொருள் பார்த்தாகி  விட்டது.

அதன் உள் இருக்கும் அர்த்தத்தை பார்க்க வேண்டாமா ?

இராவணனின் அழிவு ஏன் வந்தது ?

அதற்கு முன்னால் , இராமாயணம் என்ற காவியம் எப்படி காலங்களை தாண்டி நிற்கிறது.

அது ஒரு கதை என்று எடுத்துக் கொண்டால், அப்படி ஒன்றும் பிரமாதமான கதை இல்லை. கதா நாயகனின் மனைவியியை வில்லன் கவர்ந்து சென்று விட்டான். கதாநாயகன் வில்லனை அழித்து தன் மனைவியை மீட்டான். இதுதான் கதை. இதில் என்ன பிரமாதம் இருக்கிறது. 

இராமாயணம் காலம் கடந்து நிற்பதற்கு காரணம், அது வாழ்க்கைக்கு வேண்டிய அறங்களை எடுத்துச் சொல்லுவதால். 

இராமாயணம் முழுவதும் திருக்குறளைப் பார்க்கலாம். 


இராவணன் ஏன் அழிந்தான் ?


மற்றவர்களுக்கு கேடு நினைத்தான், அதனால் அழிந்தான். 

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

மறந்தும் கூட மற்றவர்களுக்கு துன்பம் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால், அறக் கடவுள் அப்படி நினைப்பவனுக்கு கேடு நினைக்கும். 

அதாவது அறம் பிறழ்ந்தவர்களை அறம்  அழிக்கும்.


இராவணன், தேவர்களுக்கு கெடுதல் நினைத்தான். மண்ணில் உள்ள நல்லவர்களுக்கு கெடுதல் நினைத்தான். அனைத்து உயிர்களுக்கும் கெடுதல் நினைத்தான். 

அவனை அறம்  அழித்தது. 

ஒரு அரசனின் செல்வத்தை, பெருமையை அழிக்க எதிரிகள் வேண்டாம். அவனுடைய  குடிமக்கள் துன்பப் பட்டு ஆற்ற முடியாமல் அழுதால் அதுவே செல்வத்தை தேய்க்கும்  படை என்றார் வள்ளுவர். 


அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
 செல்வத்தைத் தேய்க்கும் படை

தேவர்களும், நல்லவர்களும், மற்றைய உயிர்களும் அழுத கண்ணீர் அவன் செல்வத்தை தேய்த்தது 

வழி அல்லாத வழியில் சென்றான் என்றார் கம்பர்.


நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் 
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் 
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு 
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 

என்பார் மணிவாசகர்.

நெறியல்லா நெறி என்பது தீ நெறி.