Sunday, October 12, 2014

கார் நாற்பது - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து

கார் நாற்பது  - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து 


சங்க காலம்.

காற்றாடி (Fan ), குளிர்சாதன (air conditioner , fridge ) போன்றவை இல்லாத காலம்.

வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மரம் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வானம் நோக்கி கை ஏந்தி மழை வேண்டும் காலம்.

புல் எல்லாம் கருகி விட்டது. மூச்சில் அனல் பறக்கும் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்கள் நகர்ந்தன.

வெயில் காலம் போய் விட்டது.

கார் காலம் வந்து விட்டது.

வருகிறேன் என்று சொன்னவன் இன்னும் வரவில்லை.

வானம் மின்னல் வெட்டுகிறது. மழைக்கு கறுத்து இருக்கிறது. அது ஏதோ சேதி சொல்வது போல இருக்கிறது அவளுக்கு.

அவன் சொன்ன சேதியை அந்த மின்னல் அவளிடம்  ஏதோ சொல்கிறது  சொல்கிறது.

என்ன என்று அவளுக்குத்தான் தெரியும்....


பாடல்

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.

பொருள்

கடுங்கதிர் = கடுமையான வெப்பத்தைத் தரும் வெயில் காலம் 

நல்கூரக் = மெலிவு அடைந்து, குறைந்து

கார் செல்வ மெய்த = செல்வத்தை தரும் கார் காலம் வந்தது

நெடுங்காடு = நீண்ட காடு

நேர்சினை யீனக் = அரும்பு விட

கொடுங்குழாய் = வளைந்த ஆபரணங்களை அணிந்தவளே

இன்னே வருவர் = இப்போதே வருவேன் 

நமரென் றெழில்வானம் = நமர் (நம்மவர்) , என்று  எழில் வானம்

மின்னு -= மின்னும்

மவர்தூ துரைத்து =அவர் தூது உரைத்து



Saturday, October 11, 2014

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

சிவ புராணம் - ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற   


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்



------------------------------------//பாகம் 3 //----------------------------------------------------------------------

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற


ஆற்றில் நீர் வரும்போது இரண்டு கரைகளுக்கு உட்பட்டுத் தான் வரும். அதுவே  கரையை உடைக்கும் போது வெள்ளமாகி வரும். 

புலன்கள் மூலம் கிடைக்கும் இன்பம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. சில நாள் இருக்கலாம், சில மணி நேரம் இருக்கலாம், சில நிமிடம் நிலைக்கலாம். எப்படியாயினும்  அதற்கு ஒரு முடிவு, எல்லை உண்டு. 

இறைவனை அறிந்து அதன் மூலம் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை. 

இதையே அபிராமி பட்டரும் , களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை  என்றார்.

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


வெள்ளம் உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் நோக்கிப் பாயும். நாம்  மனதை  ஆணவம், பொறாமை, கோபம், காமம் போன்றவற்றை இட்டு நிரப்பி வைக்காமல்  காலியாக வைத்து இருந்தால் இறை அருள் என்ற வெள்ளம் தானாகவே  ஓடி வந்து நம் உள்ளத்தை நிரப்பும். 

இதையே அடிகள் பின்னொரு இடத்தில் கூறுவார் 

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் 
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் 
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா 
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் 
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே.

அவன் தலையில் ஆகாய கங்கை இருக்கிறது. அது மேலிருந்து கீழே விழுந்து ஓடி வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த அருள் புனல் நம்மை நோக்கி ஓடி வரும். 

அவன் தலையில் கங்கையை வைத்து இருக்கிறான் என்றால் ஏதோ ஆற்றை தலையில் வைத்து இருக்கிறான் என்று கொள்ளக் கூடாது. அது ஒரு குறியீடு. 

வெள்ளம் சரி. ஆனால் வெள்ளம் வந்தால் அது எப்போதும் நாசத்தையே விளைவிக்கும். வீடு வாசல்களை அடித்துக் கொண்டு போய் விடும். பயிர் பச்சைகளை  அழிக்கும். இறைவனின் அருள் வெள்ளமும் அப்படித்தானோ என்று  கேட்டால் , இல்லை. இது வேறு விதமான வெள்ளம். 

"இன்ப வெள்ளம்" என்றார் மணிவாசகர். 

இன்பத்தை மட்டுமே தரும் வெள்ளம். 


அடுத்த சொல் "அத்தா". 

அத்தா என்ற சொல்லுக்கு அப்பா, தந்தை என்று பொருள். 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா 
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
 வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணைய்நல்லூர் அருள்துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!

என்பார் சுந்தரர்.

அடுத்த சொல் "மிக்காய்"

மிகுதியாய்.

அனைத்திலும் அவன் இருக்கிறான். அவற்றைத் தாண்டி மிகுதியாகவும் இருக்கிறான். 



 


Friday, October 10, 2014

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?



துரியோதனன் மற்றும் துச்சாதனன் என்ற இருவரையும் போரில் வென்று, அவர்களின் குருதி வழிய , வெற்றி முரசு கொட்டும் நாளில் தான் என் விரித்த குழலை முடிவேன் என்று சபதம் செய்து விட்டால் பாஞ்சாலி


அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி, 
                 அளகம் தீண்டி, 
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர், 
                 தகாதனவே விளம்புவோரை, 
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங் 
                 குருதி பொழிய, 
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி 
                 எடுத்து முடியேன்!' என்றாள்.

ஆண்டு பதிமூன்று ஆகி விட்டது. தர்மன் சமாதன தூது விடுகிறான் துரியோதனனிடம்.

பாஞ்சாலி தவிக்கிறாள்.

விரித்த தன் கூந்தலை என்று  முடிவது,தான் ஏற்ற சபதம் என்ன ஆகுமோ என்று தவிக்கிறாள்.

கண்ணன் எல்லோரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்டு அறிந்த பின், கடைசியில்  திரௌபதியிடம் , அவளின் எண்ணத்தையும் கேட்க்கிறான்.

"என் குழலைப் பிடித்து , அந்த கண் இல்லாதவன் பெற்ற மகன் துச்சாதனன், என் உடையை களைய நின்ற போது , பஞ்ச பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள், வெற்றி கொள்ளும் சக்கரத்தை கொண்ட கோவிந்தா , அன்றும் என் மானத்தை வேறு யார் காத்தார்கள்  (உனையன்றி ) "

பாடல்

கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன் 
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்; 
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி, 
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

பாடல்

கற்றைக் = அடர்ந்த

குழல் = முடியையைப்

பிடித்து = பிடித்து

கண் இலான் = திருதராஷ்டிரன்

பெற்று எடுத்தோன் = பெற்ற பிள்ளை (துச்சாதனன்)

பற்றித் துகில் உரிய = என் சேலையை பற்றி இழுக்க

பாண்டவரும் பார்த்திருந்தார் = பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள்

கொற்றத் = வெற்றியடையும்

தனித் = தனித்துவமான

திகிரிக் = சக்ராயுதம்

கோவிந்தா! = கோவிந்தா

 நீ அன்றி,= நீ அன்றி
 
அற்றைக்கும் = அன்றும் ("ம்" )

என் மானம் ஆர் வேறு காத்தாரே? = என் மானத்தை யார் காத்தார்கள் ?

இன்றும் என் மானம் நீ காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.




Thursday, October 9, 2014

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம்

வில்லி பாரதம் - மகா பாரத யுத்தம், யார் காரணம் 


மகா பாரத யுத்தம் நடந்தது. பல்லாயிரக்கானவர்கள் மாண்டார்கள்.

இந்த உயிர் இழப்புக்கு யார் காரணம் ?

பொறாமை குணம் கொண்ட துரியோதனனா ?

அவனைக் கண்டு எள்ளி நகையாடிய பாஞ்சாலியா ?

கோப குணம் கொண்ட அர்ஜுனன் மற்றும் பீமனா ?

சூதாடிய தர்மனா ?

வஞ்சனை செய்த சகுனியா ?

வாய் மூடி நின்ற பீஷ்மனா ? துரோணனா ?

வஞ்சத்தை வஞ்சத்தால் முறியடித்த கண்ணனா ?

எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றாலும்...இவை அனைத்திற்கும் பின் நின்றது அறம். அறம் தப்பியவர்களை அறம் தண்டித்தது.

அதை அறம் என்று சொல்லுங்கள், இறை என்று சொல்லுங்கள், இயற்கை என்று சொல்லுங்கள்.

அந்த அறம் நின்று கொன்றது.

போருக்கு முன் கண்ணன் தூது போக நிற்கிறான்.

பாண்டவர்களிடம் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

தர்மன் சமாதனம் வேண்டும் என்கிறான்.

அர்ஜுனனும், பீமனும், நகுலனும் சண்டை வேண்டும் என்கிறார்கள்.

சகாதேவன், "கண்ணா என்னிடம் என்ன கேட்கிறாய். நீ நினைத்தை செய்" என்கிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம்வருகிறான் கண்ணன்.

பாஞ்சாலி கதறுகிறாள்....

"இரணியன் கோபம் கொண்டு தூணைப் பிளந்த போது அதில் இருந்து வந்து பிரகலாதனை காத்தாய். ஆதி மூலமே என்று அழைத்த ஒரு யானைக்குக் கூட அருள் புரிந்தாய் கண்ணா " எனக்கு அருள் புரிய மாட்டாயா என்று கதறுகிறாள்.

பாடல்

'சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்!
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

'சாலக் = அதிகமாக

கனகன் = பொன் நிறம் கொண்ட (கனகம் = பொன்) இரணியன்.

தனி மைந்தனை = சிறந்த மைந்தனை (பிரகலாதனை)

முனிந்த காலத்து = கோபித்த காலத்து

அவன் அறைந்த = அவன் பிளந்த

 கல்-தூணிடை வந்தாய்! = கல் தூணில் இருந்து வந்தாய் (வந்து அவனுக்கு அருள் புரிந்தாய் )


மூலப் பேர் = ஆதி மூலமே என்ற பெயரைக்  

இட்டு = கொண்டு

அழைத்த = கூப்பிட்ட

மும் மத மால் யானைக்கு = யானைக்கு

நீலக் = நீல நிறக்

கிரிபோல் = மலை போல்

முன் நின்ற நெடுமாலே! = முன்னால் வந்து நின்ற நெடிய திருமாலே

என்று ஆரம்பிக்கிறாள்...

அவள் என்ன கூறினாள் என்று மேலும் பார்ப்போம்.



Tuesday, October 7, 2014

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்




Monday, October 6, 2014

திருவிளையாடற் புராணம் - சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன ?

திருவிளையாடற் புராணம் - சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன ?


திருவிளையாடற் புராணம் சாதாரண மனிதர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குக்கிறது.

இறைவன் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான் என்ற நம்பிக்கையைத் தரும் நூல்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் சேர்ந்தார்ப் போல மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்த இறைவனால் வந்தி என்ற வயதான பெண்ணும் அருள் பெற்றாள் .

ஒரு நாள் வைகை கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரையை உயர்த்த வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணை இட்டான்.

வந்தி என்ற ஒரு மூதாட்டி மதுரையில் வாழ்ந்து வந்தாள். கணவனும் இல்லை, பிள்ளைகளும் இல்லை. பிட்டு விற்று வாழ்ந்து வந்தாள் .

அவளுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது.

சூரியன் எந்த பக்கம் உதித்தால் என்ன என்று இருப்பவள்.

வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவில்லை என்றால் பாண்டிய மன்னன் தண்டிப்பானே, நான் என்ன செய்வேன் என்று வருந்துகிறாள்.

பாடல்

பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை 
                                                            என்பது 
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் 
                                                            நாள் 
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து 
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே.

பொருள்

பிட்டு விற்று = பிட்டு விற்று

உண்டு வாழும் = அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கொண்டு வாழும்

பேதையேன் = பேதையேன்

இடும்பை = துன்பம்

என்பது = என்பது

எள் துணை யேனும் இன்றி = எள் அளவும் இன்றி

இரவி எங்கு எழுகென்று = சூரியன் எந்த பக்கம் எழுந்தால் என்ன என்று

இந்நாள் மட்டு  = இன்று வரை

 நின் அருளால்= இறைவா, உன் அருளால்

இங்கு வைகினேற்கு = இங்கு வாழ்ந்து வந்த எனக்கு

இன்று வந்து விட்டது = இன்று வந்து விட்டது 

ஓர் இடையூறு = ஒரு தடங்கல்

ஐய = ஐயா

மீனவன் ஆணை யாலே.= மீன் கொடி கொண்ட பாண்டிய மன்னவனின் ஆணையால்

துன்பம் வரும் போது துன்பம் வந்து விட்டதே என்று வருந்துகிறோம். வந்தி வருந்தியதைப்  போல. அவளுக்குத் தெரியாது, இந்தத் துன்பம் தான் மிகப் பெரிய, கிடைத்தற்கரிய இறைவனை அவள் வீட்டின் வாசலுக்கு கொண்டு வரப் போகிறது என்று.

துன்பம் வரும் போது துவண்டு  போகாதீர்கள்.

யாருக்குத் தெரியும் உங்கள் துன்பம் உங்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறது என்று.

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று இருங்கள்.

துன்பத்தில் கிடந்து வருந்துபவர்களுக்கு , "உங்களுக்கும் ஆறுதல் கிடைக்கும்" என்று மீண்டும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டுவது நம் இலக்கியங்கள்.

இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு நன்மை.




Sunday, October 5, 2014

இராமாயணம் - நல்ல காரியம் செய்யும் முன் நல்ல காரியம் செய்ய வேண்டும்

இராமாயணம் - நல்ல காரியம் செய்யும் முன் நல்ல காரியம் செய்ய வேண்டும் 


நம் வீட்டில் எவ்வளவோ நல்ல காரியங்கள் நடை பெறுகிறது. பிறந்த நாள், திருமண நாள், பிள்ளைகள் பள்ளியில் சாதித்து வரும் நாட்கள், அலுவகலத்தில் பணி உயார்வு, ஊக்கத் தொகை (bonus ) கிடைக்கும் நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் பல நல்ல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

நாமும் அந்த நல்ல நிகழ்வுகளினால் மகிழ்கிறோம்.

அந்த மாதிரி நாட்களில், இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்தினால் நம் இன்பம் இரட்டிப்பாகும்.

ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு, காப்பாரற்ற முதியோர்களுக்கு, ஊனம் உற்றவர்களுக்கு என்று யாருக்காவது அந்த தினங்களில் உதவி செய்யலாம்.

நாம் மகிழும்போது, அந்த மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் இன்னொரு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கும்.

இராமனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது.

புத்தாடை அணிந்து தேர் ஏறப் போகிறான்.

அதற்கு முன்னால் நிறைய தான தர்மங்கள் செய்கிறான் - நல்லவர்களுக்கு.

பாடல்

பல் பதினாயிரம் பசுவும் பைம் பொனும்
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நால் மறைச்
செல்வர்கள் வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான்.


பொருள் 

பல் பதினாயிரம் = பல்லாயிரம்

பசுவும் = பசுவும்

பைம் பொனும் = பொன்னும்

எல்லை இல் நிலனொடு =  எல்லை இல்லாத நிலமும்

மணிகள் யாவையும் = நவரத்தினங்களும்

நல்லவர்க்கு உதவினான் = நல்லவர்களுக்கு தானம் செய்தான்

நவிலும் நால் மறைச் = நான்கு வேதங்களை ஓதும்

செல்வர்கள் = நல்லவர்கள்

வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான் = வாழ்த்துச் சொல்ல தேரில் ஏறினான்

சீதை போன்ற ஒரு அழகான பெண்ணை மணந்து கொள்ளப் போகிறோம் என்றால் எவ்வளவு சந்தோஷம் இருக்கும்.

ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வருமா ?

இராமனுக்கு வந்தது.

அது இராமன்  காட்டிய வழி.

பாடம் படிப்போம்.