Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



Wednesday, November 19, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?


இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்ததால், சுக்ரீவன் மீது கோபம் கொண்டு இலக்குவன் அவனோடு சண்டை பிடிக்க மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானரங்கள் எல்லாம் தாரையிடம் வந்து அவளிடம் யோசனை கேட்டு நின்றன.

ஒரு பெண். ஒரு அரசை எப்படி செலுத்தி இருக்கிறாள் என்று கம்பன்  காட்டுகிறான்.

தன் முன்னால் பயந்து நடுங்கி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து தாரை சொல்லுகிறாள்

"வாலியின் உயிரை காலனுக்குக் கொடுத்து, வற்றாத செல்வத்தை உங்களுக்குக் கொடுத்த இராமனும் இலக்குவனும் ஊருக்கு வெளியே சும்மா உட்கார்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களா ? இப்படி உதவி செய்தவர்களை புறக்கணிப்பது உங்களுக்கு தகுமா ?"

என்று அவர்களை கடிந்து கூறுகிறாள் .

பாடல்

'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

பொருள்

'வாலி ஆர் உயிர்  = வாலியின் உயிரை

காலனும் வாங்க = காலன் வாங்க

விற் கோலி = வில்லை வளைத்து 

வாலிய செல்வம் கொடுத்தவர் = வற்றாத செல்வம் கொடுத்தவர் (அல்லது வாலியின் அந்த செல்வத்தை கொடுத்தவர் )

போலுமால் = அவர்கள்

உம் புறத்து = உங்கள் ஊருக்கு வெளியே

இருப்பார்! = (சும்மா) இருப்பார்கள் என்று (நினைத்து அவர்களை புறக்கணிப்பது )

இது சாலுமால் = இது சரியா ?

உங்கள் தன்மையினோர்க்கு எலாம் =உங்களைப் போன்றோருக்கு எல்லாம்

நன்றி மறப்பது நன்றன்று என்பார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்பதும் அவர் வாக்கு.

நன்றி மறவாமையை அறமாகச் சொன்னவர்கள் நம் முன்னவர்கள்.

மேலும் சிந்திப்போம். 



திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !


மிக மிக ஆழமான வரிகள்.

இதில் முதல் வரியைப் பார்ப்போம்.

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்

"வெவ்வேறு விதமாக மாறும் இந்த உடம்பினுள் கிடக்க என்னால் முடியாது "

உங்கள் உடம்பைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?

உங்கள் உடம்பை உங்களுக்கு பிடிக்குமா ?

தங்கள் உடலை பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள் ? அந்த உடலைத் தான் எப்படி எல்லாம் பாதுகாக்கிறோம் ?

சோப்பு, பவுடர், உதட்டுச் சாயம், முடி திருத்தம், உடற் பயிற்சி, என்று இந்த உடலை எப்படி எல்லாம் மெருகு ஏற்ற முடியுமோ அப்படியெல்லாம் அழகு படுத்துகிறோம்.

இந்த உடல் மூலம்தானே நாம் அத்தனை அனுபவங்களையும் பெறுகிறோம்.

புலன் இன்பங்களை அனுபவிக்கத்தானே இந்த பாடு படுகிறோம்.

ஆனால், சற்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த உடலால் சுகமா ? இந்த சுகம் நிரந்தரமா ? இன்பம் போல் தோன்றும் இந்த இந்த இன்பம் எவ்வளவு நாள் கூட வரும் ? இதன் முடிவு என்ன ?

வயதாகும். உடல் தளரும். நினைவு தப்பிப் போகும். இருமலும் சளியும் வந்து சேரும். கண் பார்வை மங்கும். தோல் சுருங்கும். எலும்பு வளையும். காது கேட்காது. படுக்கையை விட்டு எழுந்திருப்பதே பெரிய வேலையாகிப் போகும்.

மறதி வந்து, சேர்த்து வைத்த அனுபவம் எல்லாம் செல்லாக் காசாகிப் போகும்.

மனைவி யார், கணவன் யார், பிள்ளை யார், பெற்றோர் யார் என்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்க  வேண்டி இருக்கும்.

அருகில் நிற்பவர்கள் எல்லாம், "கால காலத்தில் போய் சேர்ந்தால் நல்லது ..." என்று சொல்லும் நாள் வரும்.

இந்த உடம்பு சுகமா ?

இந்த உடம்பு மாறிக் கொண்டே இருக்கிறது. குழந்தையாக, சிறுவன்/சிறுமியாக, குமரன்/குமரியாக, வயதாகி, கிழவன்/கிழவியாக....நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில், நோய் நொடி வந்து படுத்து விடுகிறது.

நாளும் வயதாகிக் கொண்டே இருக்கும் இந்த உடலுக்கா இந்த பாடு ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்

வேறு வேறு விதமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடம்பினுள் அடை பட்டு கிடக்க என்னால் முடியாது என்கிறார் மணிவாசகர். இந்த உடலை சிறையாக நினைக்கிறார். நம் உயிரை, எண்ணங்களை, நான் என்ற என்னை அடைத்து வைக்கும் சிறை இந்த உடல். நான் என்பது இந்த உடல் அல்ல என்று நினைத்தால் இந்த உடலின் பாரம் தெரியும் ?

"இங்கு யார் சுமந்து இருப்பார் இச்சரக்கை" என்பார் காளமேகம்.



முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே


முதுகைப் பிடித்துக் கொண்டு, கையால் தடவி தடவி , முன்னால் ஒரு கோலை ஊன்றிக் கொண்டு , உடல் நடுங்கி, கண் சுழன்று, இருமலோடு, இவர் எங்க அப்பா,  பெரிசு, என்று இளையவர் திட்டுமுன் , பத்ரிநாதனை வணங்குங்கள்  என்றார் ஆழ்வார். 

உடலினுள் அடை பட்டுக் கிடக்க முடியாது  என்கிறார்.

எது அடை பட்டுக் கிடக்கிறது ? உயிரா ? ஆன்மாவா ? நினைவுகளா ?

மாறும் உடலில் மாறாமால் இருக்கும் நான் யார் ?

சின்ன பிள்ளையாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

இளைஞனாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

கிழவனாக மாறும் போதும் நான் என்று சொல்வேன்.

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது...நான் என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.

அது எது ?

உடலில் அடை பட்டு கிடைக்கவில்லை என்றால் அது எங்கு போகும் ?

அடைத்தது யார் ? விடுவிப்பது யார் ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்


Sunday, November 16, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும் 


இராமனுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராமன் இலக்குவனை அனுப்பி சுக்ரீவனை மிரட்டி வரச் சொல்கிறான்.

இலக்குவனும் மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானர சேனைகள் என்ன செய்வது என்று அறியாமல் அங்கும் இங்கும் ஓடி கடைசியில்  அனுமனிடம் வந்து சேர்கின்றன.

அனுமன் அவர்களை அழைத்துக் கொண்டு தாரையிடம் செல்கிறான்.

எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள்.

அவள் மேலும் சொல்கிறாள் (முதலில் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம் )

"மீண்டும் ஒன்று சொல்லுவாள்.  படைகளை கூட்டுங்கள் என்று இராமன் சொன்ன நாள் தப்பினால் , உங்கள் நாளும் தப்பும், என்று நான் பல முறை சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை. இப்போது குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள். பாருங்க என்ன நடக்கப் போகிறது என்று "

பாடல்


மீட்டும் ஒன்று
      விளம்புகின்றாள்: ' ''படை
கூட்டும்'' என்று, உமைக்
      கொற்றவன், ''கூறிய
நாள் திறம்பின், உம்
      நாள் திறம்பும்'' எனக்
கேட்டிலீர்; இனிக்
      காண்டிர்; கிடைத்திரால்.

பொருள்

மீட்டும்  = மீண்டும்

ஒன்று  விளம்புகின்றாள்: = ஒன்று கூறுவாள்

' ''படை கூட்டும்'' என்று, = படைகளை கூட்டுங்கள் என்று

உமைக்  கொற்றவன், = சீதையின் கணவன்

 ''கூறிய நாள் திறம்பின், = கூறிய நாள் தவறிப் போனால்

உம்  நாள் திறம்பும்'' = உங்கள் வாழ் நாளும் தவறிப் போகும்

எனக் = என்று

கேட்டிலீர்;  = சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை

இனிக் காண்டிர்; = இனி என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்

கிடைத்திரால்.= நன்றாக கிடைத்தீர்கள்

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,  தாரை, நடை முறை ஆட்சியில் ஈடு பட்டிருக்கிறாள் .  இராமனுக்கு தந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றால்  அரசுக்கு துன்பம் வரும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறது. வீரகளை பல முறை அவள் எச்சரிக்கை செய்திருக்கிறாள்.

இப்போது எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள். அவள் அவர்களை கோபித்து திட்டுகிறாள்.

மேலும் சொல்லுவாள் ....



Tuesday, November 11, 2014

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை 


சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர்.


ஆண்டவன் - பக்தன்;
ஆண்டான் - அடிமை;
நாயகன் - நாயகி என்று பல மன நிலைகளில் ஆண்டவனை அடியவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள்.

இறைவனை நண்பனாக கொண்டாடியவர் சுந்தரர். இறைவனை வேலை சொல்வது, தனக்காக மனைவியிடம் தூது போகச் சொல்வது என்று மிக மிக உரிமையுடன் ஒரு உயிர் நண்பனைப் போல இறைவனோடு பழகுகிறார்.

அது மட்டும் அல்ல, இடையில் சில கிண்டல் வேறு. 

தெரியாம வந்து இவர் கிட்ட மாட்டிகிட்டோமே என்று நையாண்டி செய்வது போல சுந்தரர் சில பாடல்களைப் பாடி இருக்கிறார்.

பிறப்பதும் இல்லை. மூப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இருக்கும் இடமோ சுடு காடு. அது மட்டும் அல்ல திரு வேள்விக்குடி மற்றும் திருத் துருத்தி என்ற இடங்களில் வசிக்கிறார். சரி, உடையாவது சரியாக உடுத்துகிராரா என்றால் அதுவும் இல்லை. அவர் இடையில் கட்டுவது பாம்பை. முன்னாலேயே தெரிந்து இருந்தால் இவர்கிட்ட மாட்டி இருக்க மாட்டோம் என்று நையாண்டிப் பொருளில் பாடிய பாடல் இது: 

பாடல்

மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; 
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், 
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் 
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! 

பொருள்

மூப்பதும் இல்லை = வயதாகி மூப்பு அடைவதும் இல்லை

பிறப்பதும் இல்லை = பிறப்பதும் இல்லை

இறப்பது இல்லை = பிறப்பும் இல்லை, மூப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை.

சேர்ப்பு அது காட்டு அகத்து = சேர்ந்து இருக்கும் இடம் சுடு காடு

ஊரினும் ஆக = வாழும் ஊர்

சிந்திக்கின் = யோசித்துப் பார்த்தால்

அல்லால் = மேலும்

காப்பது வேள்விக்குடி , தண்துருத்தி = காவல் செய்து இருப்பது வேள்விக் குடி மற்றும் குளிர்ந்த திருபந்துருத்தி

எம் கோன் = எங்கள் அரசன்

அரைமேல் = இடுப்பின் மேல்

ஆர்ப்பது நாகம் = படம் எடுத்து ஆடுவது நாகப் பாம்பு

அறிந்தோமேல்  = இது தெரிந்து இருந்தால் 

நாம் இவர்க்கு ஆட்படோமே! = நாம் இவருக்கு ஆட் பட்டோமே.



Monday, November 10, 2014

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம்

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம் 


அது ஒரு பெரிய குளம்.

அது ஒரு கார் காலம்.

அந்த குளத்தின் நடுவில் ஒரு குவளை மலர் மலர்ந்து நிற்கிறது. கழுத்தளவு நீரில் நின்று கொண்டு என்ன இது தவம் ?

யாருக்காக இந்த தவம் ?

ஓ ....புரிந்து விட்டது....கூர்மையான வேலைக் கொண்ட, வண்டுகள் ரீங்காரம் இடும், குதிரையின் மேல் செல்லும் பாண்டிய மன்னனின் மார்பில் மாலையாக மாற இந்த குவளை மலர் ஒற்றைக் காலில் இந்த குளிர்ந்த நீரில் தவம் இருக்கிறது.

பாடல்

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டு இருக்கப் பெற்ற குணம்

பொருள்

கார் = கார் காலத்தில்

நறு = நறு மணம் பொருந்திய

நீலம் = குவளை மலர்

கடிக் = பெரிய

கயத்து = குளத்தில்

வைகலும் = தினமும்

நீர்நிலை நின்ற = நீர் நிலையில் நின்று

தவம்கொலோ = எதற்க்காக தவம் செய்கிறாய்

கூர் நுனை வேல் = கூர்மையான முனை கொண்ட வேலைக் கொண்ட

வண்டு இருக்கும் = வண்டு இருக்கும்

நக்க தார் = மலர்ந்த மாலையைக் கொண்ட (நக்க = மலர்ந்த; தார் = மாலை )

வாமான் = தாவி செல்லும் குதிரை

வழுதியால் = பாண்டிய மன்னனால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம் = அவனோடு இருக்க வேண்டி


இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்வதனால், அந்த மாதிரி தவம் இருந்ததால், அவன் மார்பில் இருக்கப் பெற்றது.



Saturday, November 8, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா 


தாரை சொல்ல சொல்ல கேளாமல் சுக்ரீவனோடு போரிட்டு இராம பாணத்தால் வாலி இறந்து போனான்.

தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள். அவள் புலம்பலிலும் அறிவின் தீட்சண்யம் தெரியும்.

"நான் இங்கு துன்பத்தில் கிடந்து நைந்து போகிறேன். நீயோ உண்மையான வானோர்கள் உள்ள நாட்டிற்கு சென்று விட்டாய். நான் உன் உயிர் என்று நீ என்னிடம் சொல்லி இருக்கிறாய். ஆனால், இன்றோ நான் இருக்கும்போது நீ எப்படி செல்ல முடியும் . ஒரு வேளை நீ சொன்னது பொய்யோ. ஆனால், நீ பொய் சொல்ல மாட்டாயே...."

பாடல்

நையா நின்றனன் நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திருநாடு மேவினாய்;
ஐயா! ‘நீ எனது ஆவி ‘என்றதும்
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா!

பொருள்

‘நையா நின்றனன் நான் =நைந்து நின்றேன் நான்

இருந்து இங்ஙன் = இங்கிருந்து

மெய் = மெய்யான

வானோர்  = வானவர்கள்

திருநாடு மேவினாய் = திரு நாட்டிற்கு சென்றாய்

ஐயா! = ஐயா

‘நீ எனது ஆவி ‘என்றதும் = என்னிடம் நீ "நீ என் ஆவி" என்று கூறியது

பொய்யோ? = பொய்யோ ?

 பொய் உரையாத புண்ணியா! = பொய் சொல்லாத புண்ணியனே

தாரைக்கும் வாலிக்கும் உள்ள அன்பின் ஆழம் தெரிகிறது. வாலி, தாரையை உயிருக்கு உயிராக நேசித்து இருக்கிறான்.

நான் உன் உயிர் என்று நீ (வாலி) சொன்னது பொய்யானால், நீ எப்படி பொய் புகலாத வானவர் நாடு போவாய் (மெய் வானோர் திரு நாடு மேவினாய்)

வாலியின் சிறப்பு, வாலிக்கும் தனக்கும் உள்ள அன்பின்   நெருக்கம்,  வாலியைப் பிரிந்த துயரம் எல்லாம் அவளின் புலம்பலில் காணக் கிடைக்கும்.

மேலும் பார்ப்போம்.