Wednesday, February 25, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3


பாரதியார், அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீ யார்" என்று கேட்கிறார்.

பாடல்

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பொருள்

நீ யார். உனக்கு உள்ள திறமை என்ன ? நீ என்ன உணர்வாய் ? ஏன் கந்தை சுற்றி திரிகிறாய் ? தேவனைப் போல ஏன் விழிக்கிறாய் ? சின்ன பையன்களோடும் நாய்களோடும்  ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் ? புத்தனைப் போல இருக்கிறாயே நீ யார் ? பரம சிவன் போல இருக்கிறாய் ....ஆவலோடு நிற்கிறாய் ....நீ அறிந்தது எல்லாம் எனக்கு உணரத்த வேண்டும்

என்று பாரதியார் அவனை வேண்டுகிறார்.

நாம் அறிவை சேர்ப்பது பொருள் தேட, சுகம் தேட, மேலும் அறிவைத் தேட.

நம் அறிவை நாம் எதற்கு உபயோகப் படுத்துகிறோம் ?

யாருக்கோ பயன் படுத்துகிறோம்.  அவர் நமக்கு சம்பளம் தருகிறார். நாம் படித்தது  அத்தனையும் பொருள் தேடவே சென்று விடுகிறது. பொருள் தேடுவதைத் தவிர   வேறு ஏதாவது நாம் செய்கிறோமா நம் அறிவை வைத்து.

குள்ளச் சாமி, பெரிய ஞானி. பாரதி குரு என்று ஏற்றுக் கொண்ட ஞானி. அவர் கந்தை  கட்டி அலைகிறார்.

பெரிய ஆட்களோடு சகவாசம் இல்லை....சின்னப் பையன்களோடும், நாய்களோடும்  விளையாடுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடு ! பொருள் மேல் பற்று இல்லை. அறிவின் மேல் பற்று இல்லை.  உறவுகளின் மேல் பற்று இல்லை. ஒரே விளையாட்டு தான்...


Tuesday, February 24, 2015

இராமாயணம் - நயனங்கள் பனிப்ப நின்றான்

இராமாயணம் - நயனங்கள் பனிப்ப நின்றான் 


வாக்கு தவறிய சுக்ரீவனை கண்டு எச்சரிக்க கோபத்தோடு வந்த இலக்குவன் முன் பகலில் வந்த நிலவு போல தாரை வந்து நின்றாள்.

கழுத்தில் தாலி இல்லை, வேறு ஒரு அணிகலன்கள் எதுவும் அணியவில்லை, பூ சூடவில்லை, குங்குமம் இல்லை, கழுத்து வரை உடலை முழுவதும் போர்த்து ஆடை அணிந்து கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட இலக்குவனின் கண்கள் நீரை வார்த்தன.

பாடல்

மங்கல அணியை நீக்கி,
    மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி,
    குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக்
    கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்,
    நயனங்கள் பனிப்ப நின்றான்.


பொருள் 

மங்கல அணியை நீக்கி = மங்கல அணியான தாலியை நீக்கி

மணி அணி துறந்து = உயர்ந்த மணிகள் சேர்ந்த அணிகலன்களை துறந்து

வாசக் கொங்கு அலர் கோதை மாற்றி = வாசம் உள்ள மலர்கள் கொண்ட மாலையை அணியாமல்

குங்குமம் சாந்தம் கொட்டாப் = குங்குமச் சாந்தை பூசாத

பொங்குவெம் முலைகள் = பொங்கும், வெம்மையான முலைகள்

 பூகக் கழுத்தொடு = மறையும் படி கழுத்துவரை

மறையப் போர்த்த = மறையும் படி ஆடையைப் போர்த்து

நங்கையைக் கண்ட வள்ளல் = பெண்ணைக் கண்ட வள்ளல்

நயனங்கள் பனிப்ப நின்றான் = கண்கள் நனையும் படி நின்றான்

ஒரு ஆண் , அழகான பெண்ணைப் பார்க்கும் போது அவனுள் என்னவெல்லாம் நிகழலாம்  என்று கம்பன் பல இடங்களில் காட்டுகிறான்.

சீதையை கண்ட இராமன்,
அகலிகையைக் கண்ட இராமன்,
தாரையைக் கண்ட இலக்குவன்,
சீதையைக் கண்ட இராவணன்

ஒரு அழகான பெண்ணை கண்டது இராம, இலக்குவ, இராவணனின் மனம் எப்படி வேலை செய்கிறது என்று கம்பன் காட்டுகிறான்.


பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2 


புதுவை நகரில் பாரதியார் இருந்த காலம். உபநிடதங்களில் தமிழாக்கத்தை திருத்திக் கொண்டிருந்த ஒரு மதிய வேளை. யாரும் இல்லாத் தெரு. அங்கே குள்ளமாக ஒரு ஆள் வந்தான். பார்த்தால் அழுக்கு நிறைந்து, ஒரு குப்பை கோணியை சுமந்து வருகிறான். அவன் கண்ணில் ஒரு ஒளி . அவன் தான் தன் குரு என்று பாரதி கண்டு கொள்கிறான்....ஒரு பிச்சைக்காரனை போன்ற தோற்றம் உள்ள ஒருவனை குரு என்று அடையாளம் கண்டு கொள்ள ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட ஒருவரால் தான் முடியும்.

பாரதி ஓடிச் சென்று அந்த குள்ளச் சாமியின் கையைப் பற்றிக் கொள்கிறார்.



அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.


அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு பாரதி சொல்கிறான் 

"சிலர் உன்னை ஞானி என்கிறார்கள், சிலர் உன்னை பித்தன் என்கிறார்கள், வேறு சிலரோ  உன்னை சித்தி பெற்ற யோகி என்கிறார்கள், நீ யார் என்று எனக்குச் சொல் " 

ஞானிகள் தங்களை அடையாளம் காட்ட மாட்டார்கள். 

அடியாளம் காட்டுபவர்கள் ஞானியாக  இருக்க மாட்டார்கள். 

அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு அவர்கள் தென் படுவார்கள். 

ஞானியை பித்தன் என்றும் இந்த உலகம் சொல்லி இகழ்ந்து இருக்கிறது.

ஞானிகள் அதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். 

"நீங்கள் யார் " என்று நம்மை யாராவது கேட்டால் நாம் எவ்வளவு சொல்வோம் நம்மைப் பற்றி ...

இந்த குள்ளச் சாமியிடம் பாரதி "எனக்கு நின்னை உணர்த்துவாய்" என்று கேட்டவுடன்  அந்த குள்ளச் சாமி என்ன செய்தார் தெரியுமா ?


Monday, February 23, 2015

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே 


திருச் சதகம் என்பது 100 பாடல்களை கொண்டது. பத்து தொகுதிகளாக உள்ளது.

மணி வாசகர் உருகி உருகி எழுதி இருக்கிறார்.

முடிந்தால் அனைத்தையும் எழுத ஆசை.

முதல் பாடல்.

என் உடலில் வியர்வை அரும்பி, உடல் விதிர் விதிர்த்து, என் தலைமேல் கைவைத்து உன் திருவடிகளை , கண்ணீர் ததும்ப, வெதும்ப, உள்ளத்தில் பொய்யை விட்டு, உன்னை போற்றி, ஒழுக்கத்தை கை விட மாட்டேன்....என்னை கொஞ்சம் கண்டு கொள்ளேன் " என்று உள்ளம் உருகுகிறார்.


பாடல்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, `போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

பொருள்

மெய் தான் அரும்பி = உடலில் வியர்வை அரும்பி

விதிர்விதிர்த்து = நடு நடுங்கி

உன் = உன்னுடைய

விரை ஆர் = மனம் பொருந்திய

கழற்கு = திருவடிகளுக்கு

என் = என்னுடைய

கை தான் தலை வைத்து =  கையை தலைமேல் வைத்து

கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி

வெதும்பி = வெதும்பி

உள்ளம் = உள்ளமானது

பொய் தான் தவிர்ந்து = பொய்யை விடுத்து

உன்னை = உன்னை

`போற்றி, சய, சய, போற்றி!' = போற்றி,  சய சய போற்றி

என்னும் = என்ற

கை தான் நெகிழவிடேன் = கை என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தை கை விட மாட்டேன்

உடையாய்! = உடையவனே

என்னைக் கண்டுகொள்ளே = என்னை கண்டு பின் (ஆட் ) கொள்வாய் 

வழிபாடு எப்படி இருக்க வேண்டும் ?

உடலால், மொழியால், உள்ளத்தால்

"மெய் தான் அரும்பி, 
விதிர்விதிர்த்து, 
என் கை தான் தலை வைத்து, 
கண்ணீர் ததும்பி"

இது எல்லாம் உடல் மூலம் பக்தி செலுத்துவது.

"உள்ளத்தில் பொய்யை விட்டு"

இது மனதால் பக்தி செய்வது

"போற்றி, சய, சய, போற்றி!" 

இது வாக்கால் பக்தி செய்வது

மூன்று கரணங்களாலும் வழி படுவது என்றால் இதுதான்.

இன்னொன்று,

வழிபடும்போது கையை தலைக்கு மேல் உயர்த்தி வழிபட வேண்டும்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 

என்பார் அடிகள் திருவாசகத்தில்

தலைக்கு மேல் கையை உயர்த்தி ஏன் வழிபட வேண்டும் ?



Sunday, February 22, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 1 


பாரதியார் !

சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் பாடல்களைப் பாடியதால், அவரை  ஒரு தேசியக் கவி, புரட்சிக் கவி, என்று மக்கள் இனம் கண்டார்கள்.

பெண் விடுதலைக் கவிஞர் என்றும் அறியப்பட்டார்.

அவருடைய பாடல்கள் மிக மிக எளிமையாக இருந்ததால் அவற்றில் ஒரு ஆழம் இல்லையோ என்று எண்ணியவர்களும் உண்டு. கவிதை என்றால் அதில் அர்த்தம் புரியாத வார்த்தைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

பாரதியாரின் அதிகம் அறியாத இன்னொரு முகம் அவரின் ஆன்மீக முகம்.

அதைக் கண்டு சிலிர்த்துப் போனேன்.

முதலில் அவரின் குரு தரிசனம் என்ற பாடல்.

மாணவன் எப்போது தயாராகி விட்டானோ அப்போது குரு அவன் முன் தோன்றுவார்  என்பது நம் மத நம்பிக்கை. (when the student is ready, the Master will appear)

பாரதியார் குருவை தேடித்  தவிக்கிறார்.

ஆழ்ந்த ஆன்மீக தாகம்  இருக்கிறது.யாரிடம் போனால் அந்த தாகம் தீரும் என்று தவித்துக்  கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் முன் ஒரு குரு  தோன்றினார்.அந்த குருவின் தரிசனத்தைப் பற்றி  கூறுகிறார்.

என்ன ஒரு ஆழமான அருமையான கவிதை.


பாடல்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.

சீர் பிரித்த பின்

அன்று ஒரு நாள்  புதுவை நகர் தனிலே கீர்த்தி
அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்ற பெயர் வீதியில் ஓர் சிறிய வீட்டில்,
இராஜா ராமையன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநி டத்தை
மொழி பெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனை வேண்டிக் கொள்ள யான் சென்று ஆங்கண் 
இருக்கையிலே ...அங்குவந்தான் குள்ளச் சாமி.

பொருள்

பாரதியார் புதுச் சேரியில் இருந்த காலம். அங்கு இராஜ இராமையன் என்ற நாகை  நகரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர்  இருந்தார்.அவரின் தந்தை உபநிடதங்களை  தமிழில் மொழி பெயர்த்து வைத்து இருந்தார். இராஜ இராமையன், அந்த மொழி பெயர்ப்பை பாரதியிடம் கொடுத்து பிழை திருத்தித் தரச் சொன்னார்.

பாரதியும், தினமும் அதை படித்து பிழை திருத்திக் கொண்டு இருக்கும் போது , ஒரு நாள்

குள்ளச் சாமி அங்கு வந்தான்.



Thursday, February 19, 2015

இராமாயணம் - தாயரை நினைந்து நைந்தான்.

இராமாயணம் - தாயரை நினைந்து நைந்தான்.


கோபத்தோடு வந்த  இலக்குவன் முன் தாரை வந்து நிற்கிறாள். "நீ எப்படி இராமனை விட்டு பிரிந்து வந்தாய்" என்று கேட்டாள்.

அப்படி கேட்டதும் இலக்குவனுக்கு கோபம் எல்லாம் போய் விட்டது. அண்ணனை நினைத்த உடன் சீற்றம் போய் , அருள்  வந்தது. அருளோடு தாரையைப் பார்த்தான். நிலவு போல் இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் இலக்குவனுக்கு அவன் தாயின் நினைவு வந்தது. நம் அம்மாவும் இப்படித்தானே விதைவைக் கோலத்தில் சோகமாக இருப்பாள் என்று எண்ணினான்...வருந்தினான்


பாடல்


ஆர் கொலோ உரைசெய்தார்? ‘என்று
    அருள்வர, சீற்றம் அஃக,
பார்குலாம் முழுவெண் திங்கள்,
    பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை,
    இறைமுகம் எடுத்து நோக்கி,
தார்குலாம் அலங்கல் மார்பன்,
    தாயரை நினைந்து நைந்தான்.

பொருள்

இந்த மாதிரி பாடல்களுக்கு உரை எழுதுவது, அதுவும் நான் எழுதுவது , அந்தப்  பாடலுக்கு  செய்யும் அவமரியாதை என்றே நினைக்கிறேன். எவ்வளவு அழகான பாடல் , எளிமையான , தெளிவான சொற்கள்,  ஆற்றொழுக்கான நடை....அடடா...

இருப்பினும், எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்...

ஆர் கொலோ = யார் அது

உரைசெய்தார்? ‘என்று = சொன்னது என்று

அருள்வர = அருள் வர

சீற்றம் அஃக = சீற்றம் விலக

பார்குலாம் = உலகுக்கு எல்லாம்

முழுவெண் திங்கள் = முழுமையான பௌர்ணமி நிலவு

பகல்வந்த படிவம் போலும் = பகலில் வந்தது போல

ஏர்குலாம் முகத்தினாளை = அழகான முகம் கொண்ட தாரையை

இறைமுகம் எடுத்து நோக்கி = தன் முகத்தை எடுத்து நோக்கி

தார்குலாம் = மலர்களால் தொடுக்கப் பட்ட 

அலங்கல் = மாலையை அணிந்த

மார்பன் =  மார்பை உடைய இலக்குவன்

தாயரை நினைந்து நைந்தான்.= தன்னுடைய தாய் மார்களை நினைத்து நைந்தான்

இந்த பாடலில் சில நுணுக்கம் உள்ளது.

கணவனை இழந்த தாரை விதவை கோலத்தில் வருகிறாள். அவளைப் பார்த்து முழு  நிலவு மாதிரி இருக்கிறாள் என்று கம்பன் வர்ணிக்கிறான். இது சரியா.  சோகத்தில் இருக்கும் பெண்ணை, விதவையான ஒரு பெண்ணை வர்ணிப்பது அவ்வளவு  சரியா என்று கேட்டால் சரி இல்லை தான்.

ஆனால், கம்பன்  அதில் நுணுக்கம் செய்கிறான்.

"முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும்"

பகலில் வந்த நிலவு போல என்று கூறுகிறான்.

நிலவு தான்,

அழகு தான்,

ஆனால் அது   பகலில் வந்தால் எப்படி ஒளி குன்றி, அழகு தெரியாமல் இருக்குமோ  அப்படி இருந்தது என்கிறான்.

அதே போல இன்னொரு வரி,  இலக்குவன் மாலை அணிந்து இருந்தான் என்று சொன்னது.

"தார்குலாம் அலங்கல் மார்பன்"

அண்ணியைக் காணோம். அண்ணன் துயரத்தில் இருக்கிறான். சுக்ரீவன் சொன்ன சொல்லை  காப்பாற்றவில்லையே என்ற கோபம்.  இவற்றிற்கு நடுவில்  மாலை அணிந்து கொண்டு வருவானா ? கம்பன் எப்படி அப்படி சொல்லலாம் ?

இலக்குவன் ஊருக்குள் வரும்போது மாலை அணிந்து வரவில்லை.

அவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த போது , அன்னணனின் பெயரைச் சொன்னதும்   கோபம் மாறி அருள் பிறந்த போது , விதைவையான தாரையைப்  பார்த்ததும் தன் தாயை நினைந்து வருந்திய அவனின் உயர்ந்த குண நலன்களை  பாராட்டி , அவனுக்கு கம்பன் அணிவித்த மாலை அது என்று நயப்புச்  சொல்வார்கள்.

மனைவியை பிரிந்து இருக்கிறான். வாலிபன். அழகான பெண்ணைப் பார்த்தவுடன்  மனைவின் நினைப்பு வரவில்லை. தாயின் நினைவு வந்தது என்றால்  அவனுக்கு ஒரு மாலை போட வேண்டாமா ?

அண்ணன் மேல், தாயின் மேல் அன்பு கொண்ட ஒரு பாத்திரத்தை படைத்துக்  காட்டுகிறான்  கம்பன். வருங்கால சந்ததிகள், இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு ஒரு உதாரணம்  தருகிறான்.

இவற்றை எல்லாம்  சிறு வயதில் சொல்லித் தந்தால் பிள்ளைகள் மனதில் உயர்ந்த  விஷயங்கள் எளிதில்  பதியும்.

நாமும் படிக்கவில்லை. நம் பிள்ளைகளுக்கும் சொல்லித்  தரவில்லை.


Wednesday, February 18, 2015

ஆசாரக் கோவை - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை  - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?


நீங்கள் நன்றாக உன்னித்து கவனித்துப் பார்த்தால் தெரியும், உங்கள் மனம் எப்போதும் ஒரு நிலையில் இல்லை என்று.

இன்னும் ஆழமாக கவனித்தால் இன்னொன்றும் புரியும்....உங்கள் மன நிலை ஒரு சக்கரம் போல மாறி மாறி சில எண்ணங்களில், குணங்களில் சுழல்வது புரியும்.

இந்த மன நிலையை நம் முன்னவர்கள் மூன்றாகப்  பிரித்தார்கள்.

- சாத்வீகம்
- ராஜசம்
- தாமசம்

நம்முடைய அனைத்து மன நிலைகளையும் இந்த மூன்றுக்குள் அடக்கி விடலாம்.

 சரி,இந்த மூன்று மன நிலைகளும் எப்படி வருகின்றன ? எது இவற்றை மாற்றுகிறது ?

நம் உணவு
நாம் விடும் மூச்சு
கால நிலை

கால நிலை நம் மனதை பாதிக்கிறது என்று நம் முன்னவர்கள்  .கண்டு  அறிந்தார்கள்.

சில எண்ணங்கள்  மாலையிலும்,இரவிலும்  வரும்.

சில எண்ணங்கள் காலையில் வரும். சில  மதியம்.

சிந்தித்துப்  பாருங்கள்.

மதியம், மண்டையைப்  பிளக்கும் வெயிலில் காதலிக்கு முத்தம் தந்தால் எப்படி   இருக்கும் என்று. அப்படி ஒரு எண்ணமே  வராது.

சரி....காலம் நம் மன நிலையை மாற்றுகிறது என்றே வைத்துக்  .கொள்வோம் அதனால் என்ன இப்ப ?

 .வருகிறேன் ....

காலம் நம் மன நிலையை மாற்றும் என்றால், அது ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்கு மாறும் போது ஒரு குழப்பமான மன நிலை  தோன்றும்.

இரவு முடிந்து பகல் தோன்றும் போது , பகல் முடிந்து இரவு தோன்றும் போது ஒரு குழப்பமான மன நிலை தோன்றும்.

ஒன்றிலிருந்து மற்றதுக்குப் போகும்போது சில சலனங்கள் இருக்கும்.

மாலை கொஞ்சம்  மயக்கும்.ஏன் ?

அது போலத்தான் காலையும்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் நேரத்தை  சந்தி நேரம் என்றார்கள்.

இந்த நேரத்தில் வந்தனம் பண்ணுவது சந்தியா வந்தனம் என்று  பெயர்.

பல சந்திகள் இருந்தாலும், இரண்டு சந்திகள்  முக்கியமானவை ...ஒன்று காலைச் சந்தி, மற்றது மாலைச் சந்தி.

இந்த இரண்டு சந்தி வேளையிலும் மனம் மிக அதிகமான அளவில் சலனத்துக்கு உள்ளாகும்.

அந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர , நம் முன்னவர்கள், அந்த நேரத்தில் வழிபாடு பண்ணச்  சொன்னார்கள்.

சிந்தனையை ஒரு கட்டுக்குள்  வைக்கச் சொன்னார்கள்.

குழப்பமான நேரத்தில் மனம் போன வழியில் போனால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். அதை தடுத்து, மனதை நிலைப் படுத்த ஏற்பட்டது தான் சந்தியா வந்தனங்களும் , காலை , மாலை  வழிபாடுகளும்.

இஸ்லாமியர்கள் ஐந்து முறை  .தொழுகிறார்கள். ஐந்து சந்தி உண்டு.

ஆசாரக் கோவை இந்த வழிபாட்டைப் பற்றிச்  சொல்கிறது.

பாடல்

 நாள் அந்தி, கோல் தின்று, கண் கழீஇ, தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.

பொருள்  -  சுருக்கம்

காலையில் பல் துலக்கி, முகம் கழுவி தெய்வத்தை தான் அறிந்தவாறு தொழுது எழுக. மாலையில் நின்று தொழுவது சரி  அல்ல.  பழி.

பொருள்

நாள் அந்தி = அதிகாலையில்

கோல் தின்று = ஆலம்  குச்சி,அரசம் குச்சி இவற்றால் பல் துலக்கி

கண் கழீஇ = கண் கழுவி (முகம் கழுவி )

தெய்வத்தைத் = தெய்வத்தை

தான் அறியுமாற்றால் = நீங்கள் அறிந்த படி (மற்றவர்கள் சொன்ன படி அல்ல)

தொழுது எழுக! = தொழுது எழுக

அல்கு அந்தி = அல்கு என்றால் இரவு. அல்கு அந்தி என்றால்  மாலையில்

நின்று தொழுதல் பழி = நின்றபடி இறைவனை தொழக் கூடாது. அமர்ந்துதான் தொழ வேண்டும்.

நல்லது நிறைய  சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.

செய்கிறோமோ இல்லையோ, தெரிந்தாவது கொள்வோம்.