Sunday, March 8, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள் 


கர்மாக் கொள்கை என்று ஒன்று வைத்து இருக்கிறோம்.

 அதன் மூலம், விதி என்ற ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறோம்.

நாம் முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு நல்லதும் தீயதும் இந்தப் பிறவியில் நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அது தான் நம் விதி என்று ஏற்றுக் கொள்கிறோம்.

 எனவே,நாம் செய்ய வேண்டியது ஒன்றும்  இல்லை. சும்மா இருந்தால் போதும். செய்த வினைகளுக்கு ஏற்ப ஏதோ ஒன்று நடக்கும்.

வாழ்க்கையில் முயற்சியின் பங்கு என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

பாரதி சொல்கிறான்.


சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,

குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.

பொருள்

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; = பழைய வினைகளின் பயன்கள் என்னை தீண்டாது.

“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ? = நானே ஸ்ரீதரன், நானே சிவ குமாரன்

நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன், = நன்றாக இந்த கணத்தில் பிறந்து விட்டேன்

நான்புதியன், = நான் புதியன்

நான்கடவுள் = நான் கடவுள்

நலிவி லாதோன் = எந்தக் குறையும் இல்லாதவன்

என்றிந்த வுலகின்மிசை = என்று இந்த உலகில் வானோர் போலே

இயன்றிடுவார் சித்தரென்பார்; = இயங்கிடுவார், சித்தரென்பார்

பரம தர்மக் குன்றின்மிசை = தர்மம் என்ற குன்றின் மேல்


யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து = ஒரே பாய்ச்சலாக பாய்ந்து


குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார் = குறிப்பு (நோக்கம் ) இல்லாமல், கேடு இல்லாமல், குலைதல் இல்லாமல் இருப்பார்
.

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?


எது நம்முடையது ?

செல்வம் நம்முடையதா ? நேற்று வரை யாரிடமோ இருந்தது ...இன்று நம்மிடம் இருக்கிறது...நாளை யாரிடம் இருக்குமோ ?

நம் மனைவி, கணவன், மக்கள் நம்முடையதா  ? இல்லை, அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அவர்களுக்கென்று ஆசாபாசம் இருக்கிறது,  கனவுகள்,கற்பனைகள் என்று அவர்கள் வாழ்க்கை தனி.

அவர்கள் நம் சொத்து அல்ல.

சரி நம் நிழலாவது நமக்குச் சொந்தமா என்றால் அதுவும் இல்லை.

வெயிலில் நடந்து  போகிறோம்.கால் சுடுகிறது. நம் நிழல் நமக்கு உதவுமா ? உதவாது.

சரி, நம் உடம்பாவது நமக்குச் சொந்தமா என்றால் இல்லை. நாம் சொல்கிறபடி நம் உடல் கேட்குமா ? நரைக்காதே என்றால் கேட்கிறதா ? உதிராதே என்றால் உதிராமல் இருக்கிறதா ?

இந்த உயிர் நம் சொந்தமா ?

போகாதே என்றால் இருக்குமா ? அது பாட்டுக்கு போய் விடுகிறது.

பின் எதுதான் நம் சொந்தம் ?

பாடல்


தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்3
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள்

தன்னது சாயை = தன்னுடைய நிழல்

தனக்குத வாதுகண்டு = தனக்கு உதவாதது கண்டு

என்னது = என்னுடையது

மாடென் றிருப்பர்கள் = செல்வம் என்று இருப்பார்கள்

ஏழைகள் = ஏழைகள்

உன்னுயிர் போம் = உயிர் ஒரு நாள் போய் விடும்

உடல் ஒக்கப் பிறந்தது = உடலோடு கூடவே பிறந்தாலும், உயிர் போய் விடுகிறது.

கண்ணது காணொளி கண்டுகொ ளீரே = கண்ணால் பார்த்து கண்டு கொள்ளுங்கள்



இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - எல்லாம் செய்வது எதனால் ?

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - எல்லாம் செய்வது எதனால் ?


நாம் பல வேலைகள்  செய்கிறோம்.

படிக்கிறோம், தொழில் செய்கிறோம், அலுவகலத்தில் வேலை செய்கிறோம்..இது எல்லாம் எப்படி செய்கிறோம் ?

நம் திறமையாலா ? நம் அறிவாலா ? நம் முயற்சியாலா ?

இல்லை.

 நம்மை விடுங்கள்....

பிரம்மாவும், திருமாலும், சிவனும் எப்படி அவர்களது படைத்தல், காத்தல் , அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்கிறார்கள் ?

அவர்களின் ஆற்றலால் அல்ல....

அறம் , செம்மையான மனம், மற்றும் அருள் - இந்த மூன்றினால் தான் அப்பேற்பட்ட மும்மூர்த்திகளும் தொழில் செய்ய முடிகிறது...

எனவே இராமா, நீ பெரிய சக்ரவர்த்தி ஆகிவிட்டால் என்ன வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும்  செய்து விடலாம் என்று நினைத்து விடாதே....

அறத்திற்கு புறம்பாக ஒன்றும் செய்ய முடியாது
மனதிற்கு வஞ்சனை செய்து ஒன்றும் செய்து விட முடியாது
அருள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

பாடல்

உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,
அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?



பொருள்

உருளும்  = சுற்றும்

நேமியும் = சக்கரமும்

ஒண் கவர் = (மூன்றாகப் ) பிரிந்த , கிளைத்த

எஃகமும் = திரி சூலமும்

மருள் இல் வாணியும் = மயக்கம் இல்லாத வாணியும் (சரஸ்வதி)

வல்லவர் =  இவற்றைக் கொண்ட

மூவர்க்கும் = மூன்று பேருக்கும் (திருமால், சிவன், பிரம்மா)

தெருளும் = தெளிந்த

நல் அறமும் =  நல்ல அறமும்

மனச் செம்மையும் = செம்மையான மனமும் (பொய் இல்லாத, வஞ்சனை இல்லாத, பொறாமை இல்லாத ...)

அருளும் = அருளும்

நீத்தபின் ஆவது உண்டாகுமோ? = விட்டு விட்டால் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது.

 அறம் , குற்றமற்ற மனம், அருள் - இந்த மூன்றும்தான் மிகப் பெரிய காரியங்களை  செய்ய உதவும்.

அறிவோ, பணமோ, செல்வாக்கோ, படை பலமோ, அதிகார பலமோ துணை நிற்காது.

எல்லாம் இருந்தும் இராவணன் அழிந்தான் - அறம் இல்லாத வழியில் சென்றதனால்.

அதிகாரம் வரும்போது அருள் போய் விடுகிறது. நல்லது செய்ய வேண்டும் என்று பதவிக்கு  வருபவர்கள் சுயநலத்தில் இறங்கி விடுகிறார்கள். ஏழைகள் மேல்  அருள் போய் விடுகிறது.

மனதில் வஞ்சம் , துவேஷம் வந்து வந்து விடுகிறது.

இதை மனதில் கொள் என்று இராமனுக்கு உபதேசிக்கிறார் வசிட்டர்.



Saturday, March 7, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம்

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம் 


நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. குளிர்ச்சியாக இருக்கிறது. பால் போல ஒளி தருகிறது.

நாளும் அது வளரும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முழு பௌர்ணமி அன்று மிக மிக அழகாக இருக்கும். கடற்கரையில், முழு நிலவின் அழகை இரசித்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த முழு நிலவு அப்படியே இருக்குமா ?

கொஞ்சம் கொஞ்சமாக தேயும். ஒளி மங்கும். ஒரு நாள் ஒன்றும் இல்லாத அம்மாவாசையாகி விடும். முற்றும் இருண்டு விடும்.

செல்வமும் அது போலத்தான். கொஞ்சம் கொஞ்சமாக வரும். வரும் போது சந்தோஷமாக இருக்கும்.

வாடகை வரும், வட்டி வரும், போட்ட முதல் நாளும் பெருகும் போது மனம் சந்தோஷப் படும்.

அது அப்படியே இருக்கும் என்று நினைக்காதே.

செல்வம் என்றால் "செல்வோம்" என்று தான் அர்த்தம் என்கிறார்  திருமூலர்.

வரும் போகும் செல்வத்தை விட்டு, அவனை நாடுங்கள். பெரு மழை போல அவன் கருணை பெருக்கெடுத்து வரும் என்கிறார்.

பாடல்

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே

 பொருள்

இயக்குறு திங்கள்  = உலவும் திங்கள்

இருட்பிழம் பொக்குந் = இருண்ட பகுதியை ஒக்கும்

துயக்குறு செல்வத்தைச்  = துன்பத்தைத் தரும் செல்வத்தை. துயங்குதல் என்ற சொல்லுக்கு தளர்வைத் தரும், ஆயாசத்தைத் தரும் என்று பொருள்  சொல்லலாம்.செல்வம் தேடித் தேடி தளர்ந்து போவோம்.

அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் விடுதியோ விட்டிடு வாயேல் உடாத வெற்றரை நேர்ந் துயங்குவேன் ஐயோ உன்னருள் அடையநான் இங்கே படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் பாடெலாம் நீ அறியாயோ

என்பார்  வள்ளலார்.

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

என்பார் மணிவாசகர்.

சொல்லவும் வேண்டா = அதைப் பற்றி சொல்லவும் வேண்டாம். பார்த்தாலே தெரியும்

மயக்கற நாடுமின் = மயக்கம் இல்லாமல் நாடுங்கள்

வானவர் கோனைப் = வானவர்களின் அரசனை

பெயற்கொண்டல் போலப் = பெய்யும் முகில் போல

பெருஞ்செல்வ மாமே = பெரும் செல்வம் அதுவே



இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அந்தணரைப் பேணுதி

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அந்தணரைப் பேணுதி 


மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றில் ஆர்வம் இருக்கும். திறமை இருக்கும்.

சிலருக்கு பாட்டு வரும், சிலருக்கு வராது.

சிலருக்கு விளையாட்டு நன்றாக வரும், சிலருக்கு ஒரு எடுத்து வைக்க சோம்பேறித்தனமாக இருக்கும்.

சிலருக்கு உழைக்கப் பிடிக்கும்...அவர்களை கொண்டு போய் ஒரு அறையில் உட்கார வைத்து பெரிய கணக்கு புத்தகங்களைக் கொடுத்து நாள் முழுவதும் உட்கார்ந்து கணக்குப் பாரு என்றால் ஓடி விடுவார்கள்.

இப்படி ஒவ்வொருவர்க்கும் ஒரு குணம் இருக்கும்.

அந்தணர் என்பவர் யார் ?

படிப்பில் ஆர்வம் உள்ளவர், நல்லது கெட்டதுகளை ஆராய்வதில் முனைப்பு உள்ளவர்,  தேடுதல் மனம் படைத்தவர், வருவதை முன்கூட்டியே எப்படி அறிவது என்பதில்   ஆர்வம் உள்ளவர், அற நெறியில்  நிற்பவர்.

இப்படிப் பட்ட அந்தணர்கள் திருமாலை விடவும், சிவனை விடவும், பிரமாவை விடவும், ஐந்து பூதங்களை விடவும் உயர்ந்தவர்கள், அவர்களை மனதால் விரும்பு என்று உபதேசத்தை தொடங்குகிறார் வசிட்டர்.

பாடல்

‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

பொருள்

‘கரிய மாலினும் = கருப்பு நிறம் கொண்ட திருமாலினும்

கண்ணுத லானினும் = நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும்

உரிய தாமரை மேல் உரைவானினும் = தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும்

விரியும் பூதம் ஓர் ஐந்தினும் = நாளும் விரிந்து கொண்டே போகும் ஐந்து பூதங்களை விடவும்

மெய்யினும் = உண்மையைக் காட்டிலும்

பெரியர் அந்தணர் = பெரியவர்கள் அந்தணர்

பேணுதி உள்ளத்தால் = அவர்களை உள்ளத்தால் பேணுதி

பேணுதல் = விரும்புதல், விரும்பி காப்பாற்றுதல் என்றும் கூறுவர்

தந்தை தாய் பேண் 

கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுகன்நிறை கனி பேணி 

பிணை, பேண் என்ற சொற்கள் பெட்பு என்ற ஆசையை குறிக்கும்  என்பார் தொல்காப்பியர் 





பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?


இன்று புதியதாய் பிறந்தோம், சென்றது இனி மீளாது என்று பாரதி சொன்னான். (பார்க்க முந்தைய ப்ளாக்).

அப்படி என்றால் நாம் காலம் காலமாக கர்மா என்று சொல்லிக் கொண்டு வருகிறோமே அது என்ன ஆகும் ?

மறு ஜென்மம், பாவம்  புண்ணியம், இருவினை, எழு பிறப்பு, சொர்க்கம் , நரகம் என்றெல்லாம் சொல்லக்  இருக்கிறோமே அது எல்லாம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழும் அல்லவா ?

பாரதி சொல்கிறான்....



மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே, மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.


பொருள்

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, .... மேலும் மேலும் நடந்தையே நினைத்து அழ வேண்டாம். தவறு செய்து  விட்டேன்,பாவம் செய்து விட்டேன், இதனால் என்ன ஆகுமோ என்று நினைத்து அழாதீர்கள்.



அந்தோ! .... ஐயோ

மேதையில்லா மானுடரே = அறிவு இல்லாத மானிடரே


மேலும் மேலும் = மேலும் மேலும்

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியகாற் றெம்முள் வந்து = புதிய காற்று எம்முள் வந்து

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியவுயிர் விளைத்தல் கண்டீர் = புதிய உயிர் விளைதல் கண்டீர்

ஆன்மாவென்றே = ஆன்மா என்றே

கருமத் தொடர்பை யெண்ணி = கருமத் தொடர்பை எண்ணி. அதாவது நல்லது செய்தால் நல்லது  நடக்கும்,தீமை செய்தால் தீமை நடக்கும், என்ற கருமத் தொடர்பை எண்ணி

அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே! = அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி = மான் போன்ற விழியுடைய சக்தி தேவி

வசப்பட்டுத் = அவள் வசப் பட்டு

தனைமறந்து வாழ்தல் வேண்டும். = தன்னை மறந்து வாழ வேண்டும்

ஆன்மா , கருமம் என்று மயக்கம் கொள்ளாதீர்கள் என்று  சொல்கிறார்.

நம்மால் ஒத்துக் கொள்ள முடியுமா ? எத்தனை வருடத்திய பழக்கம், படிப்பு.

அத்தனையும் வீண் என்று ஒத்துக் கொள்ள ஒரு தைரியம் வேண்டும். நம்மிடம் இருக்கிறதா  ? பாரதியார் அப்படித்தான்  சொல்லுவார்.நாம நம்ம வேலையப்  பார்ப்போம்  என்று கிளம்பி விடாமல் சற்று  சிந்திப்போம்.

ஒரு வேளை நாம் நம்பியவை தவறாக இருந்தால்...இன்றே மாற்றிக் கொள்ளலாமே ?





Friday, March 6, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம் 


ஏன் குப்பை மூட்டையை தூக்கித் திரிகிரீர் என்று பாரதி, குள்ளச் சாமியை பார்த்து கேட்டான்.

அதற்கு, அந்த குள்ளச் சாமி, நானாவது வெளியே குப்பை மூட்டையை தூக்கித் திரிகிறேன். நீயோ, மனதுக்குள் எத்தனை குப்பை மூட்டைகளை தூக்கிக் கொண்டு திரிகிறாய் என்று திருப்பிக் கேட்டார்.

கேட்டது பாரதியிடம் அல்ல...நம்மிடம்.

மேலும் பாரதி சொல்லுகிறார்....

முட்டாள்களே, சென்றது இனி மீண்டு வராது. நீங்கள் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து வருந்துகிறீர்கள். சென்றதைப் பற்றி மறந்து விடுங்கள்.

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் உறுதியாக கொண்டு, தின்று, விளையாடி இன்பமாக  வாழ்வீர்.

பாடல்

சென்றதினி மீளாது; மூடரே நீர்
எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;


பொருள்

படிக்காமல் விட்ட பாடங்கள், வாங்காமல் விட்ட சொத்துகள், செய்த தவறுகள்,  பட்ட அவமானங்கள், அனுபவித்த துன்பங்கள், என்றோ எப்போதோ நடந்துவிட்ட தவறுகள்  என்று பழசை நினைத்தே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்.

இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள்  என்று அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்

சொல்லிக் கொடுத்தவை, படித்தவை, நாமாக நமக்குச் சொல்லிக் கொண்ட அனுபவப் பாடங்கள் நமக்கும் உண்மைக்கும் நடுவே நிற்கின்றன.


நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது.

இறந்த காலத்தை முற்றுமாக மறந்து விடுங்கள். இன்று புதியதாய் பிறந்தோம்  என்று எண்ணிக்  கொள்ளுங்கள்.

வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என்று எண்ணி ஆரம்பியுங்கள்....ஒவ்வொரு நாளும்.

பழைய குப்பைகளை தூக்கிப்  போடுங்கள்.

பிறந்த குழந்தைக்கு எதிர் காலம் மட்டும் தான் உண்டு....அதற்கு இறந்த காலம் என்பது இல்லை.

குழந்தைக்கு எல்லாமே புதிது....இந்த உலகமே புதிது....மனிதர்கள், உறவுகள், பொருள்கள, சப்தங்கள், காட்சிகள் என்று எல்லாமே புதிது....

அது போல, புத்துணர்வு கொண்டு உண்டு, விளையாடி, இன்பமாக இருங்கள்.

இதை விட உயர்ந்த  உபதேசம் கிடைத்து விடுமா என்ன ?