Thursday, April 9, 2015

திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?

திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?


சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலோ , அல்லது வீட்டிலேயே கும்பிட்டாலோ சிலருக்கு பக்தி இருக்கும், சிலருக்கு பயம் இருக்கும், சிலருக்கு குழப்பம் இருக்கும்....

யாருக்காவது இறைவன் மேல் அன்பு இருக்கிறதா ?

அன்போடு யார் வழி படுகிறார்கள் ?

இறைவனை வழிபடுதல் என்றால் இந்த அனைத்தையும் வழிபடுதல் என்றே பொருள்.

இந்த உலகம், இதில் உள்ள உயிர்கள் அனைத்தின் தொகுதி இறைவன்.

மரம், செடி, கொடி , மழை, மலை, காதலன், காதலி, பிள்ளைகள், யுத்தம், சத்தம்...எல்லாம்...எல்லாம் ...நிறைந்த ஒன்றுதான் இறைவன்.

அவனை, அவளை, அதை நினைத்தால் அன்பு பிறக்காதா ?

நீங்கள் எதன் மேல் அன்பு செலுத்தினாலும் அது இறைவன் மேல் அன்பு செலுத்தியதாகததான்  அர்த்தம் ஏன் என்றால் அணித்திலும் இறைவன் இருக்கிறான்.

எதிலுமே அன்பு இல்லாதவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

என்பில் அதனை வெயில் போலச் சுடுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவர்.

அன்பில்லாதவனை, அறம் சுடும் எப்படி என்றால் புழுவை வெயில் சுடுவது போல.

அன்பு இல்லாதவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.  அவனைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும்.

பாடல்

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்

வன்புலால் வேலும் அஞ்சேன் = மாமிசம் ஒட்டி இருக்கும் வேலுக்கு அஞ்சேன்

வளைக்கையார் = வளையல் அணிந்த கையை உள்ள பெண்களின்

கடைக்கண் அஞ்சேன் = கண்ணுக்கு அஞ்சேன்

என்பெலாம் = எலும்பு எல்லாம்

உருக = உருக

நோக்கி = பார்த்து

அம்பலத் தாடு கின்ற = அம்பலத்தில் ஆடுகின்ற

என் = என்னுடைய

பொலா மணியை  = துளை இடப்படாத மணியை

ஏத்தி = புகழ்ந்து

இனிதருள் = அவனுடைய இனிய அருளை

பருக மாட்டா = பருகாமல் இருக்கும்

அன்பிலா தவரைக் கண்டால் = மனதில் அன்பு இல்லாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே = நான் அச்சப் படுகிறேன்

அன்பில்லாதவர்களை கண்டால் விலகிப் போங்கள்.

அன்பு செய்யுங்கள். பக்தி வரும் பின்னால்.

அன்பு கருணையாக மாறும்.

கருணை துறவில் கொண்டு விடும்.

துறவு முக்தி தரும்.

ஆரம்பம் அன்புதான்.

அன்பே சிவம்.


Wednesday, April 8, 2015

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க 


கணவன் மனைவி உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. மென்மையானது. காதலும், காமமும் கலந்தது.

கணவன் மனைவி உறவு சிக்கல் நிறைந்ததும் கூட. யார் பெரியவர், யார் வீட்டுக்காக அதிகம் உழைக்கிறார், கருத்து வேறுபாடு வரும்போது எப்படி அவற்றை சரி செய்வது போன்ற சிக்கல்கள் வரமால் இருக்காது.

இந்த கணவன் மனைவி உறவு பற்றி இன்னிலை ஒரு பாடலில் சொல்ல்கிறது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இருவரில் யாரும் மற்றவரை விட உயர்ந்தவர் அல்ல.

ஒருவர் மேல் ஒருவர் விருப்பப்பட வேண்டும்.

அந்த விருப்பம் நிலையானதாக இருக்க வேண்டும்.

அப்படி உயர்வு தாழ்வு இல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் நிலைத்த அன்போடும் விருப்போடும் இருந்து செய்யும் இல்லற செயல்களை உலகம் அறியும்.

அவர்கள் தங்களுக்குள் உள்ள காதலை, காமத்தை ஒரு மென்மையான மலரை கையாள்வது போல கையாள வேண்டும்.

மனைவி வாழ்வின் துணை, வாழ்க்கைக்கு துணை என்று அறிந்து அவளோடு இல்லறம் நடத்த வேண்டும்.


பாடல்


ஒப்புயர்வில் வேட்டோ னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல்
நப்பின்னை ஞால மொருங்கறிக-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.

சீர் பிரித்த பின்

ஒப்பு உயர்வு இல் வேட்டோன் ஒரு நிலைப்பட்டு ஆழ்ந்த செயல்
நப்பின்னை ஞால ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மை உறு  தோற்றத்தே வைத்து துய்க்க 
ஏமக் கிழத்தி அறிந்து 

பொருள்

ஒப்பு = ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள், சமமானவர்கள்

உயர்வு இல் = ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் அல்ல

வேட்டோன் = ஆசைப் பட்டவன், காதலன்

ஒரு நிலைப்பட்டு = ஒரு நிலையில், மனம் அலையாமல்

ஆழ்ந்த செயல் = உறுதியுடன் செய்யும் இல்லறம் சம்பந்தப் பட்ட செயல்கள்

நப்பின்னை  = நப்பின்னை (?) . இதை நப்பினையின் (கண்ணனின் மனைவி ) வாழ்வால் அறியலாம் என்று உரை சொல்கிறார்கள். அவ்வளவு சரியாகப் பட வில்லை.

ஞால = உலகு

ஒருங்கு அறிக = ஒன்றாக அறிக

 துப்பாராய்த் = மனத் தூய்மையுடன்

தூமலரின்  = தூய மலரின்

மென்மை உறு  தோற்றத்தே  = மேனமியான தோற்றத்தை

வைத்து  = மனதில் வைத்து

துய்க்க = இன்பம் அனுபவிக்க

ஏமக் = இல்லத்துக்கு காவலாய் இருக்கும்

கிழத்தி =தலைவியின்

அறிந்து = தன்மை அறிந்து



Tuesday, April 7, 2015

நாலடியார் - இம் என பெய்யும் மழை

நாலடியார் - இம் என பெய்யும் மழை 


காமம் !

காமம் என்றால் ஏதோ பேசக் கூடாத ஒன்று, மறைத்து வைக்கப் படவேண்டியது என்று ஒதுக்கி வைக்கிறோம்.

பெற்றோரும் பிள்ளைகளும், சகோதரனும் சகோதரியும், ஆசிரியரும் மாணவரும் ஒன்றாக படிக்கும் காமம் சம்பந்தப் பட்ட புத்தகம் ஏதேனும் இருக்கிறதா ?

திருக்குறளில் உள்ள காமத்துப் பாலை, ஒரு தகப்பனும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம்.  அதில்  இல்லாத காமம் இல்லை. காதல் , காமம் , ஊடல், பிரிவு, கனவு, நாணம், வெட்கம், கூடல், களவு, ஊர் பேசும் பேச்சு என்று எல்லாம் இருக்கிறது.

இருந்தும், கொஞ்சம் கூட விரசம்  இல்லாதது.

நம் இலக்கியம், காமத்தை விலக்கி வைக்க வில்லை.

அறம் - பொருள் - இன்பம் என்று அறவழியில் நின்று ஈட்டிய பொருளை குடும்ப வாழ்வில் நின்று எப்படி இன்பம் அனுபவிப்பது என்று சொல்கிறது நம் இலக்கியம்.

நாலாடியாரில் வரும் ஒரு பெண்.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

மழைக் காலம்.

"சோ " மழை பெய்கிறது.

இடி மின்னல்.

காதலனின் நினைவு அவளை வாட்டுகிறது.

இந்த இடி சத்தம் ஏதோ இழவு வீட்டில் அடிக்கும் பறை ஒலி போல இருக்கிறது அவளுக்கு.

பிரிவு அவ்வளவு வாட்டுகிறது அவளை.

பாடல்


தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

தம் தமர்  காதலர் தார் சூழ் அணி அகலம் 
விம்ம முயங்கும்  துணை இல்லார்க்கு  - "இம்" என 
பெய்ய எழிலி முழங்கும்  திசை எல்லாம் 
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

பொருள்

தம் = தம்முடைய

தமர் = உறவான

காதலர் = காதலர்

தார் = மாலை

சூழ் = அணிந்த

அணி அகலம் = அணிகலன்களை அணிந்த அகன்ற மார்பில்

விம்ம முயங்கும் = விம்மி எழும் மார்பு அழுந்த கட்டி அணைக்கும்

துணை இல்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு (பிரிந்து இருப்பவர்களுக்கு)

"இம்" என = "இம்" என்ற ஒலியோடு

பெய்ய = பெய்யும்

எழிலி = மழை மேகம் (என்ன அழகான பெயர் சொல்)

முழங்கும்= ஒலிக்கும்

திசை எல்லாம் = எல்லா திசைகளிலும்

நெய்தல் = மழை

அறைந்தன்ன நீர்த்து = பறை அறைவது போல இருக்கிறது





Monday, April 6, 2015

தேவாரம் - அப்புறம் செய்யலாம்

தேவாரம் - அப்புறம் செய்யலாம் 


அப்புறம் செய்யலாம் , அப்புறம் செய்யலாம் என்று எவ்வளவோ நல்ல காரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

"நிறைய படிக்கணும்...எங்க நேரம் இருக்கு...எல்லாம் retire ஆனதுக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன் ..."

"போகணும்...காசி, இராமேஸ்வரம்..இப்படி நாலு தலங்களுக்கு போகணும். எங்க நேரம் இருக்கு....பிள்ளைங்க படிப்பு, அவங்க பள்ளிக் கூடம் ...எல்லாம் முடிந்த பின் போகணும்..."

இப்படி பலவற்றை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்...

பின்னாளில், நாம் நினைக்கும் நாள் வரை நாம் இருக்க வேண்டுமே ? நாம் செல்லும் நாள் என்றென்று நமக்குத் தெரியாதே ? நாம் நினைத்து வைத்த நாளை வராமலே போய் விட்டால் ?

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார் வள்ளுவர். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைத்து நல்லது செய்வதை தள்ளிப் போடாதீர்கள்.

நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்த உடம்பை சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம். எத்தனை நாள் இந்த உடம்பு நம்மோடு இருக்கும் ? நாயோ, நரியோ, தீயோ, கொண்டு செல்லும் உடல் இது. இதன் மேலா இத்தனை ஆசை ? இத்தனை பற்று. இதற்காகவா நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறீர்கள் ?

வறியவர்களுக்கு, இல்லை என்று வந்தவர்களுக்கு சோறும் நீரும் நல்ல வார்த்தை சிலதும் சொல்லுங்கள். அப்படி செய்யும் நல்லவர்கள் வணங்கும் தலம் கேதாரிநாத்.


பாடல்

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

பொருள்

பறியே = உடலையே

சுமந் து = சுமந்து 

உழல்வீர் = துன்பப் படுவீர் 

பறி = இந்த உடலானது

நரி கீறுவ தறியீர் = நரி கீறுவது அறியீர்

குறி = குறித்த நாளில்

கூவிய = சொல்லிய படி

கூற்றங்கொளு நாளால் = எமன் வந்து உங்கள் உயிரை கொண்டு செல்லும் நாளில்

அறம் உளவே = அறம் (செய்ய) முடியுமா ?. முடியாது

அறிவானிலும் அறிவான் = நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொன்னால் அறிவது எது ? அறிந்து கொள்ளப் படுவது எது ? அறியும் செயல் எது ? அறிவுக்கு அப்பால் நின்று நம் அறிவை செலுத்துபவன்

நல நறுநீரொடு =நல்ல தூய்மையான நீரோடு 

சோறு = சோறும்

கிறிபேசி = நல்ல வார்த்தைகள் பேசி

நின் றிடுவார் = எப்போதும் மற்றவர்களுக்கு வழங்கும் அவர்கள்

தொழு கேதாரமெ னீரே = தொழும் தலம் கேதாரம் என்ற தலமாகும்.


இந்த கோடை விடுமுறைக்கு குளிர்ச்சியாக கேதாரநாத் சென்று வாருங்கள். 

பின்னால் முடியுமோ என்னவோ ?

Sunday, April 5, 2015

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும்

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும் 


நம் புலன்களுக்கு இன்பம் தருவன பல.

அவற்றில் சில, ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும். இசை, காதுக்கு மட்டும் இன்பம் தரும். அதை தொட முடியாது, நுகர முடியாது.

நல்ல உடை கண்ணுக்கும், உடலுக்கும் இன்பம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும், அணியும் போது உடலுக்கும் சுகமாக இருக்கும்.

லட்டு - பார்க்க அழகாக இருக்கும், வாயில் போட்டால் சுவையாக இருக்கும். அதில் உள்ள ஏலக்காய் , கிராம்பு போன்றவை நல்ல மணத்தைத் தந்து மூக்குக்கும் இன்பம் தரும்.

இப்படி ஒரு புலனுக்கு, இரு புலனுக்கு , மூன்று புலனுக்கு என்று இன்பம் தரும் பொருள்கள் உள்ளன.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் ஒன்று உண்டா  என்றால் , உண்டு.

அது ஆணுக்கு பெண்ணும், பெண்ணும் ஆணும் தரும் இன்பம்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

என்பார் திருவள்ளுவர்.  கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், தொட்டு அறியும்  ஐந்து புலன்களுக்கு இன்பமும் வளையல் அணிந்த அவளிடம் உள்ளது என்கிறார் வள்ளுவர்.

அது ஆணுக்கும் பொருந்தும்.

ஆணும் , பெண்ணும் சேர்ந்து அடையும் அந்த சிற்றின்பம் , பேரின்பத்திற்கு வழி வகுக்கும் என்கிறது இன்னிலை என்ற நூல்.

திருமணம் ஆன புதிதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காமத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அது குறையும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக முக்தி அடைய உதவுவார்கள்.

காம விருந்து படைத்த கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாவார்கள். எப்போது என்றால், கலவி இன்பத்தில் குற்றம் ஏதும் வந்து விடாமல்,  அளவு கடக்காமல் இருந்தால். குற்றம் வராமல் என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ நாடாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்தல்.

அப்படி குற்றம் இல்லமால், அளவோடு காமத்தை சுகிப்பவர்கள்,பின்னாளில் முக்தி அடைய ஒருவருக்கு ஒருவர் துணையாவார்.

அந்த சிற்றின்பமே அவர்களுக்கு ஒரு படகு போல அமைந்து முக்தி கரை சேர்க்கும்.

இளைமையில், மணம் புரிந்த போது இருந்த இளமையும் அழகும் அதன் மூலம் கிடைக்கும் கலவி இன்பமும், கசப்பான மருந்துக்கு இனிப்பு தடவி தருவது போல.

பாடல்

துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.

பொருள்

துணையென்ப = துணை என்று சொல்லுவார்கள்

காம விருந்துய்ப்பார் = காம விருந்து உய்ப்பார் (அடைவார்)

தோமில் = குற்றம் இல்லாமல்

இணைவிழைச்சின் = கலவி இன்பத்தில்

மிக்காகா ராகல் = அளவுக்கு அதிகமாக போகாமல் இருந்தால்

புணைதழீஇக் = ஆற்றைக் கடக்க உதவும் புணை போல (படகு போல )

கூட்டுங் கடுமிசையான்  = கசப்பான மருந்தை

கட்டியிற் கொண்டற்றால் = கற்கண்டு கொண்டு அதன் ஆற்றாலால் (கசப்பை மறைப்பது போல )

வேட்டபோழ் தாகு மணி = மனந்த போது உண்டான அழகு

சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி வகுக்கும். 


தேவாரம் - மண்ணாவது திண்ணம்

தேவாரம் - மண்ணாவது திண்ணம் 



கேதாரம். கேதர்நாத் என்று அழைக்கப்படும் தலம் . புது டெல்லிக்கு அருகில் உள்ள தலம் . பனிபடர்ந்த மலைச் சாரலில் அமைந்த தலம் .

இந்த வாழ்வு ஒரு மாயம். நிலைத்து இருப்பது போலத் தோன்றும். சட்டென்று ஒரு நாள் மாயமாய் மறைந்து விடும்.

"அவரா ? நேத்து வரை நல்லாத்தான இருந்தாரு ...என்ன ஆச்சு " என்று கேட்கும் படி ஆகும்.

படுத்தவர் எழுந்திருக்கவில்லை....ஏன் ? அது தான் magic ...மாயம்.

கடைசியாய் விட்ட மூச்சை உள்ளே இழுக்க முடியவில்லை...ஏன் ? மாயம்.

அன்போடு இருந்த பிள்ளைகளும் மனைவியும் அன்பு மாறுவார்கள்...ஏன் ? மாயாஜாலாம்.

இந்த உடல் மண்ணாவது உறுதியிலும் உறுதி.

இந்த பிறவி நாளும் பாழாகிக் கொண்டு இருக்கிறது. வேலை, உணவு, படிப்பு, சம்பளம், சேமிப்பு என்று செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்தோமே, என்ன நிகழ்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவு நாளை வீணாகக் கழித்து விட்டோம் என்றும் தெரியும்.

இந்த உடல் உணவு போட்டு வளர்த்தது. பசி, அதனால் உணவு , அதனால் வளர்ந்த உடல் இது. பசி என்ற நோய் செய்த உடல் இது. நோயில் வளர்ந்த உடல்.

இருக்கும் வரை குறையாமல் அறம் செய்யுங்கள். "தாழாது அறம் செய்யுங்கள்". வருடத்துக்கு ஒரு முறை நன்கொடை கொடுத்தாலும் பரவாயில்லை. அதை குறைத்து விடாதீர்கள். தாழாது செய்யுங்கள்.

திருமாலும், பிரமனும் கீழும் மேலும் அறிய நின்றவன் இருக்கும் இடம் திருக் கேதாரம்.

பாடல்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே.                                            - (சுந்தரர்)

பொருள்

வாழ்வாவது மாயம் = இந்த வாழக்கை ஒரு மாயம்

மிது மண்ணாவது திண்ணம் = இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் = பாழாகிறது இந்த பிறவிக் கடல்

பசிநோய்செய்த பறிதான் = இந்த உடல் (பறி ) பசி என்ற நோய் செய்தது

தாழாதறஞ் செய்ம்மின் = குறையாமல் அறம் செய்யுங்கள்

தடங் கண்ணான் = தாமரைக் கண்ணன் (திருமால்)

மல ரோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

கீழ்மேலுற = கீழும் மேலும் செல்ல

நின்றான் = நின்றவன்

திருக் கேதாரமெ னீரே = திருக் கேதாரம் என்று சொல்லுங்கள்

பசி நோய் செய்த பறிதான் என்பதற்கு தாய் தந்தையரின் காமப் பசியில் விழைந்தது இந்த உடல் என்றும் கொள்ளலாம்.

நேரம் இருப்பின், கேதார்நாத் ஒரு முறை சென்று வாருங்கள்.

சுந்தரரும், ஞான சம்பந்தரும் சென்றிருக்கிறார்கள்.

 

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் 


இராமாயணம் என்றால் என்ன ?

இராமன் + அயனம் = அயனம் என்றால் வழி. உத்தராயணம், தக்ஷினாணயம் என்று சூரியனின் வழியைச் சொல்லுவது போல, இராமனின் வழியை சொல்லுவது இராமாயணம்.

எது அவன் வழி ? அவன் நடந்து சென்ற பாதை எது ? அதில் போய் அவன் எதை அடைந்தான் ?

"நல் அறம் நிறுத்த" நல்ல அறங்களை நிலை நிறுத்த அவன் வந்தான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனித குலம் எது சரி , எது தவறு என்று தெரியாமல் தவிக்கின்ற நேரத்தில் எல்லாம் அற வழியை காண்பிக்க பெரியவர்கள் தோன்றுகிறார்கள்.

வெயில் அதிகமா இருந்தால் மழை வருவது போல.

இருள் அதிகமாக இருந்தால் பகல் வருவது போல.

காலம் காலமாய் இது நிகழ்கிறது.

அப்படி வந்தவன் இராமன். அவனை பலர் புரிந்து கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல, இன்றும்.

யாருக்கு அவன் புரிவான் ?

"ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் " - ஒருங்குதல் என்றால் ஒன்று படுத்தல், சேர்தல், இணைதல், கூடுதல், குவிதல், ஒருபடியாதல், அழிதல் மற்றும்  ஒடுங்குதல்  என்று பல பொருள் உள்ளது. உணர்வு ஒன்று பட்டால், அவனை உணரலாம். உணரலாம் என்று தான் சொன்னாரே தவிர அறியலாம் என்று சொல்லவில்லை. இறை என்பது ஒரு உணர்ச்சி. அது ஒரு பொருள் இல்லை. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்.

விராதன் என்ற அரக்கன் இராமனோடு சண்டை இட வருகிறான். அந்த இடத்தில் இராமனைப் பற்றி கம்பர்  கூறுகிறார்.

பாடல்


ஓம் அராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை,  நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அதுகொடு எற்ற வரலும்.


பொருள் 

ஓம் அராமரை = ஓம் என்ற பிரணவத்தின் பொருளான அந்த இராமனை

ஒருங்கும் = ஒன்று படும்

உணர்வோர் உணர்வுறும் = உணர்வுகளை உடையவர்கள் உணரும்

நாமர் ஆம் அவரை = நாமம் கொண்ட அவரை

நல் அறம் நிறுத்த = நல்ல அறங்களை நிலை நிறுத்த

நணுகித் = ஒன்று சேர்ந்து, அருகில் வந்து, அணுகி.

தாம் அரா அணை துறந்து = தன்னுடைய பாம்பணையை துறந்து

 தரை நின்றவரை, = தரையின் மேல் நின்ற அவரை

ஓர் = ஒரு

மா மராமரம் = பெரிய மரா மரத்தை

இறுத்து = பெயர்த்து எடுத்து

அதுகொடு எற்ற வரலும் = அதைக் கொண்டு போருக்கு வரும் போது

அரக்கரகளுக்கு இறைவன் எதிரில் நின்றபோதும் தெரிவது இல்லை.

இறைவனை அறியாதவர்கள் தான் அரக்கர்களோ ?