Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.





Sunday, April 12, 2015

இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான்

இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான் 


முன்பெல்லாம் ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால், யாருக்கு அது நிகழ்கிறதோ அவருக்கு , பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

திருமணம் என்றால் மாப்பிளைக்கும், பெண்ணுக்கும் அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் திருமணம், வாழ்க்கை, குழந்தை, சமுதாயப் பொறுப்பு என்பவை பற்றி அறிவுரை, அறவுரை கூறுவார்கள். அது அந்த பையனையும், பெண்ணையும் குடும்ப வாழக்கைக்கு தயார் படுத்தும்.

அதே போல, ஒருவன் முடி சூட்டுகிறான் என்றால் அந்த இராசாவுக்கு மந்திரிகள், சான்றோர் எல்லோரும் அறவுரை சொல்வார்கள்.

சுக்ரீவன் முடி சூட்டப் போகிறான். அவனுக்கு இராமன் அறவுரை சொல்கிறான்.

சுக்ரீவன் குரங்குதான். குரங்குக்குச் சொன்ன அறவுரை என்றாலும் அது நமக்கும் பொருந்தும்தானே.

பாடல்

பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்.

பொருள்

பொன் = பொன்னால் ஆன

மா = சிறந்த

மௌலி = மகுடம்

புனைந்து = அணிந்து

பொய் இலான் = பொய் இல்லாத (இராமனின்)

தன் மானக் கழல் தாழும் வேலையில் = சிறந்த திருவடிகளில் விழுந்து ஆசி பெறும் வேளையில்

நல் மார்பில் =பரந்த நல்ல மார்பில்

தழுவுற்று = (அவனை) தழுவிக் கொண்டு

நாயகன் = இராமன்

சொன்னான் = சொன்னான்

முற்றிய சொல்லின் எல்லையான் = சிறந்த சொல்களின் எல்லையில் உள்ளவன்.

கடைசி வரி சிந்தக்கக் தக்கது.

ஒரு வார்த்தை சொன்னால் அது சிறந்த வார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு மேல்  அதை சிறப்பாக சொல்ல முடியாது என்று இருக்க வேண்டும்.


சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

என்பார் திருவள்ளுவர். 

ஒரு சொல் சொன்னால், அதை விட இன்னொரு சிறந்த சொல் இல்லை என்று இருக்கும்படி  சொல்ல வேண்டும். 

இராமன் முற்றிய சொல்லின் எல்லையான்.  சிறந்த சொற்களின் எல்லை அவன்தான்.  அவனைத் தாண்டி அந்த சொற்களுக்கு வேறு அர்த்தம் இல்லை. 

அவன் சொன்ன அறவுரைகளை பார்ப்போம். 


Saturday, April 11, 2015

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே 


நான் மணிகடிகை  நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துகளை உள்ளடக்கி    இருக்கிறது.

சிறியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் கெட்டவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.

நம்மை விட தாழ்ந்தவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது

எப்போதும் நல்லன அல்லாதவற்றைக் கூறக் கூடாது.


பாடல்

எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

சீர் பிரித்த பின்

எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும் 
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

பொருள்

எள்ளற்க = குறை சொல்லாதே

என்றும் எளியார் = எப்போதும் எளியவரை

என் பெறினும் = என்ன ஆனாலும்

கொள்ளற்க = பெற்றுக் கொள்ளாதே

கொள்ளார்கைம் மேலவா = பெறக் கூடாதவர்களிடம் இருந்து

உள்சுடினும் = உள்ளம் சுடினும்

சீறற்க = கோபம் கொள்ளாதே

சிற்றில் பிறந்தாரை = கீழ் குடியில் பிறந்தவர்களை

கூறற்க = சொல்லதே

கூறல் லவற்றை விரைந்து.= சொல்லக் கூடாதவற்றை

சரி.

இது என்ன பெரிய விஷயமா. மத்தவங்களை கேலி பேசாதே, கெட்டவங்ககிட்ட எதையும் வாங்காதே,  கீழ் குடியில் பிறந்தவர்கள் தவறாக பேசினாலும் சீறி விழாதே, சொல்லக் கூடாததை சொல்லாதே என்பதெல்லாம் ஒரு  அறிவுரையா. இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைக்கலாம்.

கேட்க என்னவோ எளிதாகத்தான் இருக்கிறது.

நடை முறை சிக்கல் எவ்வளவு இருக்கிறது தெரியுமா.

சக்கரவர்த்தியின் மகன். அதுவும் மூத்த மகன். சின்ன பிள்ளையாக இருந்த போது , அரண்மனையில் வேலை பார்த்த ஒரு கூன் விழுந்த கிழவியின் முதுகில் மண் உருண்டை வைத்த அம்பால் அடித்து விளையாடினான்.

அவள் என்ன செய்தாள் ?

பதினாலு வருடம் இராமனையும், அவன் மனைவியியையும், தம்பியையும் காட்டுக்கு  விரட்டினாள். அங்கே சீதை சிறை பிடிக்கப் பட்டு இராவணனிடம் சிறை இருந்தாள். இத்தனையும்  எதனால் ? எளியவள் என்று கூனியை ஏளனம் செய்து அவள் முதுகில் அம்பு அடித்ததால்.

கானகம் போனது இராமனுக்கு வருத்தமா என்றால், ரொம்ப வருந்தினான்.

வருந்தியது மட்டும் அல்ல, சிறியவர்களை இகழாதே. அப்படி இகழ்ந்ததால் நாடிழந்து, காட்டுக்கு வந்து படாத பாடு படுகிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்லி  வருந்தினான் இராமன்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

சிறியர் என்று இகழ்ந்து மற்றவர்களை நோகச் செய்யாதே. இதை மறந்து நாம் ஒரு  தீமை செய்ததால் கூனியின் செயலால் வெந்துயர் கடலில் விழுந்தேன் என்று  நொந்து  கூறுகிறான்.

கேட்க என்னவோ எளிய அறம் தான். எல்லாம் தெரிந்த இராமன் அதை கடை பிடிக்கவில்லை. கஷ்டப் பட்டான். கஷ்டம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இதெலாம் எனக்குத் தெரியாதா என்று அப்படி எளிதாக  தள்ளி விடாதீர்கள்.

சரி, அது மட்டும் அல்ல, 

வள்ளுவர் கூறுகிறார்.....

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்று. 

அளவுக்கு அதிகமாக சேர்த்தால் மயில் இறகு கூட ஒரு வண்டியின் அச்சை முறித்து  விடும்.

இது எங்களுக்குத் தெரியாதா என்று நினைக்கக் கூடாது.

வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எளியவர்கள்தானே என்று ஏளனம் செய்து  சின்ன சின்ன பகைகளை தேடிக் கொண்டால், ஒரு நாள் அவை எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து உன்னை அழித்து விடும் என்கிறார். 

உலகம் யாரை  எப்போது எங்கே கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. 

யாரையும் ஏளனம் செய்யாமல் இருப்பது நலம். 

இராமனுக்கே அந்த கதி என்றால் , நாம் எம்மாத்திரம் ?





Thursday, April 9, 2015

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை 



அது ஒரு சின்ன கிராமம்.

அங்குள்ள மக்கள் காலையில் வயலுக்கு, காட்டுக்கு என்று வேலைக்குப் போய் விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.

அவளுடைய காதலனும் அவள் இருக்கும் வீட்டின் வழியாகத்தான் தினமும் வருவான்.

இன்று ஏனோ இன்னும் வரவில்லை. மாலை மங்கிக் கொண்டே போகிறது. இன்னும் வரவில்லை.

ஒரு வேளை வேறு வழியில் போய் இருப்பானோ ?

ஒரு வேளை அவனுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமோ ?

ஏன் இன்னும் வரவில்லை ?

தவிக்கிறாள் அவள்.

அவன் வருவான், அவனுக்குத் தர வேண்டும் என்று ஆசை ஆசையாக பூக்களைச் சேர்த்து மாலையாக செய்து, அவன் வரும் வழி பார்த்து காத்திருக்கிறாள்.

ஒரு வேளை வர மாட்டானோ ?

இந்த மாலையை என்ன செய்வது ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மாக்கள் = வேலை செய்த பின் மக்கள்

கருவி ஒடுக்கிய = அவர்களின் அரிவாள், மண்வெட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு

மம்மர்கொள் மாலை = மயக்கம் தரும் மாலை நேரத்தில்

மலராய்ந்து பூத்தொடுப்பாள் = ஒவ்வொரு பூவாக தேர்ந்து எடுத்து மாலை தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலை

இட்டுக் = தரையில் நழுவ விட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்க்கு

இம்மாலை என்செய்வ தென்று = இந்த மாலை என்ன செய்வது என்று

காதல், தவிப்பு, ஏக்கம் என்று அனைத்தையும் நாலு வரியில் அடக்கி பல நூற்றாண்டுகளை தாண்டி உங்களை வந்து அடைகிறது இந்தப் பாடல்.

பெயர் தெரியாத, முகம் தெரியாத அந்த பெண்ணின் சோகம்  நம்மையும் என்னவோ செய்கிறது.

காதல் என்றும் பசுமையானதுதான்.





திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?

திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?


சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலோ , அல்லது வீட்டிலேயே கும்பிட்டாலோ சிலருக்கு பக்தி இருக்கும், சிலருக்கு பயம் இருக்கும், சிலருக்கு குழப்பம் இருக்கும்....

யாருக்காவது இறைவன் மேல் அன்பு இருக்கிறதா ?

அன்போடு யார் வழி படுகிறார்கள் ?

இறைவனை வழிபடுதல் என்றால் இந்த அனைத்தையும் வழிபடுதல் என்றே பொருள்.

இந்த உலகம், இதில் உள்ள உயிர்கள் அனைத்தின் தொகுதி இறைவன்.

மரம், செடி, கொடி , மழை, மலை, காதலன், காதலி, பிள்ளைகள், யுத்தம், சத்தம்...எல்லாம்...எல்லாம் ...நிறைந்த ஒன்றுதான் இறைவன்.

அவனை, அவளை, அதை நினைத்தால் அன்பு பிறக்காதா ?

நீங்கள் எதன் மேல் அன்பு செலுத்தினாலும் அது இறைவன் மேல் அன்பு செலுத்தியதாகததான்  அர்த்தம் ஏன் என்றால் அணித்திலும் இறைவன் இருக்கிறான்.

எதிலுமே அன்பு இல்லாதவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

என்பில் அதனை வெயில் போலச் சுடுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவர்.

அன்பில்லாதவனை, அறம் சுடும் எப்படி என்றால் புழுவை வெயில் சுடுவது போல.

அன்பு இல்லாதவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.  அவனைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும்.

பாடல்

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்

வன்புலால் வேலும் அஞ்சேன் = மாமிசம் ஒட்டி இருக்கும் வேலுக்கு அஞ்சேன்

வளைக்கையார் = வளையல் அணிந்த கையை உள்ள பெண்களின்

கடைக்கண் அஞ்சேன் = கண்ணுக்கு அஞ்சேன்

என்பெலாம் = எலும்பு எல்லாம்

உருக = உருக

நோக்கி = பார்த்து

அம்பலத் தாடு கின்ற = அம்பலத்தில் ஆடுகின்ற

என் = என்னுடைய

பொலா மணியை  = துளை இடப்படாத மணியை

ஏத்தி = புகழ்ந்து

இனிதருள் = அவனுடைய இனிய அருளை

பருக மாட்டா = பருகாமல் இருக்கும்

அன்பிலா தவரைக் கண்டால் = மனதில் அன்பு இல்லாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே = நான் அச்சப் படுகிறேன்

அன்பில்லாதவர்களை கண்டால் விலகிப் போங்கள்.

அன்பு செய்யுங்கள். பக்தி வரும் பின்னால்.

அன்பு கருணையாக மாறும்.

கருணை துறவில் கொண்டு விடும்.

துறவு முக்தி தரும்.

ஆரம்பம் அன்புதான்.

அன்பே சிவம்.


Wednesday, April 8, 2015

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க 


கணவன் மனைவி உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. மென்மையானது. காதலும், காமமும் கலந்தது.

கணவன் மனைவி உறவு சிக்கல் நிறைந்ததும் கூட. யார் பெரியவர், யார் வீட்டுக்காக அதிகம் உழைக்கிறார், கருத்து வேறுபாடு வரும்போது எப்படி அவற்றை சரி செய்வது போன்ற சிக்கல்கள் வரமால் இருக்காது.

இந்த கணவன் மனைவி உறவு பற்றி இன்னிலை ஒரு பாடலில் சொல்ல்கிறது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இருவரில் யாரும் மற்றவரை விட உயர்ந்தவர் அல்ல.

ஒருவர் மேல் ஒருவர் விருப்பப்பட வேண்டும்.

அந்த விருப்பம் நிலையானதாக இருக்க வேண்டும்.

அப்படி உயர்வு தாழ்வு இல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் நிலைத்த அன்போடும் விருப்போடும் இருந்து செய்யும் இல்லற செயல்களை உலகம் அறியும்.

அவர்கள் தங்களுக்குள் உள்ள காதலை, காமத்தை ஒரு மென்மையான மலரை கையாள்வது போல கையாள வேண்டும்.

மனைவி வாழ்வின் துணை, வாழ்க்கைக்கு துணை என்று அறிந்து அவளோடு இல்லறம் நடத்த வேண்டும்.


பாடல்


ஒப்புயர்வில் வேட்டோ னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல்
நப்பின்னை ஞால மொருங்கறிக-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.

சீர் பிரித்த பின்

ஒப்பு உயர்வு இல் வேட்டோன் ஒரு நிலைப்பட்டு ஆழ்ந்த செயல்
நப்பின்னை ஞால ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மை உறு  தோற்றத்தே வைத்து துய்க்க 
ஏமக் கிழத்தி அறிந்து 

பொருள்

ஒப்பு = ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள், சமமானவர்கள்

உயர்வு இல் = ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் அல்ல

வேட்டோன் = ஆசைப் பட்டவன், காதலன்

ஒரு நிலைப்பட்டு = ஒரு நிலையில், மனம் அலையாமல்

ஆழ்ந்த செயல் = உறுதியுடன் செய்யும் இல்லறம் சம்பந்தப் பட்ட செயல்கள்

நப்பின்னை  = நப்பின்னை (?) . இதை நப்பினையின் (கண்ணனின் மனைவி ) வாழ்வால் அறியலாம் என்று உரை சொல்கிறார்கள். அவ்வளவு சரியாகப் பட வில்லை.

ஞால = உலகு

ஒருங்கு அறிக = ஒன்றாக அறிக

 துப்பாராய்த் = மனத் தூய்மையுடன்

தூமலரின்  = தூய மலரின்

மென்மை உறு  தோற்றத்தே  = மேனமியான தோற்றத்தை

வைத்து  = மனதில் வைத்து

துய்க்க = இன்பம் அனுபவிக்க

ஏமக் = இல்லத்துக்கு காவலாய் இருக்கும்

கிழத்தி =தலைவியின்

அறிந்து = தன்மை அறிந்து



Tuesday, April 7, 2015

நாலடியார் - இம் என பெய்யும் மழை

நாலடியார் - இம் என பெய்யும் மழை 


காமம் !

காமம் என்றால் ஏதோ பேசக் கூடாத ஒன்று, மறைத்து வைக்கப் படவேண்டியது என்று ஒதுக்கி வைக்கிறோம்.

பெற்றோரும் பிள்ளைகளும், சகோதரனும் சகோதரியும், ஆசிரியரும் மாணவரும் ஒன்றாக படிக்கும் காமம் சம்பந்தப் பட்ட புத்தகம் ஏதேனும் இருக்கிறதா ?

திருக்குறளில் உள்ள காமத்துப் பாலை, ஒரு தகப்பனும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம்.  அதில்  இல்லாத காமம் இல்லை. காதல் , காமம் , ஊடல், பிரிவு, கனவு, நாணம், வெட்கம், கூடல், களவு, ஊர் பேசும் பேச்சு என்று எல்லாம் இருக்கிறது.

இருந்தும், கொஞ்சம் கூட விரசம்  இல்லாதது.

நம் இலக்கியம், காமத்தை விலக்கி வைக்க வில்லை.

அறம் - பொருள் - இன்பம் என்று அறவழியில் நின்று ஈட்டிய பொருளை குடும்ப வாழ்வில் நின்று எப்படி இன்பம் அனுபவிப்பது என்று சொல்கிறது நம் இலக்கியம்.

நாலாடியாரில் வரும் ஒரு பெண்.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

மழைக் காலம்.

"சோ " மழை பெய்கிறது.

இடி மின்னல்.

காதலனின் நினைவு அவளை வாட்டுகிறது.

இந்த இடி சத்தம் ஏதோ இழவு வீட்டில் அடிக்கும் பறை ஒலி போல இருக்கிறது அவளுக்கு.

பிரிவு அவ்வளவு வாட்டுகிறது அவளை.

பாடல்


தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

தம் தமர்  காதலர் தார் சூழ் அணி அகலம் 
விம்ம முயங்கும்  துணை இல்லார்க்கு  - "இம்" என 
பெய்ய எழிலி முழங்கும்  திசை எல்லாம் 
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

பொருள்

தம் = தம்முடைய

தமர் = உறவான

காதலர் = காதலர்

தார் = மாலை

சூழ் = அணிந்த

அணி அகலம் = அணிகலன்களை அணிந்த அகன்ற மார்பில்

விம்ம முயங்கும் = விம்மி எழும் மார்பு அழுந்த கட்டி அணைக்கும்

துணை இல்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு (பிரிந்து இருப்பவர்களுக்கு)

"இம்" என = "இம்" என்ற ஒலியோடு

பெய்ய = பெய்யும்

எழிலி = மழை மேகம் (என்ன அழகான பெயர் சொல்)

முழங்கும்= ஒலிக்கும்

திசை எல்லாம் = எல்லா திசைகளிலும்

நெய்தல் = மழை

அறைந்தன்ன நீர்த்து = பறை அறைவது போல இருக்கிறது