Monday, May 4, 2015

திருக்குறள் - ஒழுக்கம் - பாகம் 1

திருக்குறள் - ஒழுக்கம்  - பாகம் 1 


பாடல்

நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க 
மென்று மிடும்பை தரும்.

பொருள்

(http://interestingtamilpoems.blogspot.in/2015/05/1.html)

நன்றிக்கு = நல்லவற்றிற்கு

வித்தாகு = விதையாகும்

நல்லொழுக்கந் = நல்ல ஒழுக்கம்

தீயொழுக்க = தீய ஒழுக்கம்


மென்று மிடும்பை தரும் = என்றும் இடும்பைத் தரும். இடும்பு = துன்பம்

நல்லொழுக்கம் நன்மை பயக்கும். தீய ஒழுக்கம் தீமை பயக்கும்.

மேலோட்டமான அர்த்தம் அவ்வளவுதான்.

ஆழ்ந்து சிந்தித்தால் பல அர்த்தங்கள் தோன்றும்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்....

நன்மைக்கு விதையாகும் நல்ல ஒழுக்கம்.  அது ஏன் விதை ?

விதை மிக மிகச் சிறியது. ஆனால் அது வளர்ந்து பெரிதானால் , அதில் இருந்து ஒரு ஆல மரம், அரச மரம் கூட வரும். இந்த சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய  மரமா என்று வியப்போம்.

அது மட்டும் அல்ல, அந்தப் பெரிய மரத்தில் இருந்து பல பழங்கள் தோன்றும். அதில் இருந்து ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றும்.

ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால் அதில் இருந்து ஆயிரக் கணக்கில் பலன் உண்டாகும்.

மேலும், விதை மரமாகிறது. மரத்தில் இருந்து இன்னொரு விதை உண்டாகிறது. இது விதைக்கும் , அந்த மரத்திற்கும் கிடைத்த பலன். மரம் பெரிதாக இருக்கும் போது அதில் பல பறவைகள் வந்து கூடு கட்டி வசிக்கும். அதன் நிழலில் பலர் இளைப்பாறுவார்கள். அதன் இலையும், கிளையும் பயன் படும். இப்படி, விதை தனக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் பயன் தருவதைப் போல நல்ல ஒழுக்கம் நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் பயன் தரும்.

மேலும், ஒரு விதை  மரமாகி, அதில் இருந்து காயாகி, கனியாகி பின் ஒரு விதையாகி மீண்டும் ஒரு மரமாகி..இப்படி பல நூற்றாண்டுகளுக்கு அது பயணிக்கும். முதல் விதை மறைந்து போன பின்னும் அதன் பலன் காலம் கடந்தும் நிற்கும்.

அது போல, ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால் அது இன்று மட்டும் அல்ல, பல நூற்றாண்டுகள் தாண்டியும் நிற்கும்.

எப்படி ?

ஒருவன் நல்ல ஒழுக்கத்துடன் படித்து, கடுமையாக உழைத்து ஒரு மருந்தை கண்டு பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குப் பின்னும், காலம் காலமாக  அந்த மருந்து மற்றவர்களின் நோயைத் தீர்த்து சுகம் அளிக்கும். அது போல, நம்முடைய நல்ல ஒழுக்கம் நம்மையும் தாண்டி, பலருக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பலன் தரும்.

இது   பற்றி மேலும் சிந்திப்போம்.







Sunday, May 3, 2015

இராமாயணம் - இராமன் ஏன் பிறந்தான் ?

இராமாயணம் - இராமன் ஏன் பிறந்தான் ?




காலம் செல்லச் செல்ல , மனிதன் எது சரி , எது தவறு என்று தடுமாறத் தொடங்குகிறான்.

அறம் எது, மறம் எது என்பதில் குழப்பம் வந்து விடுகிறது. சமுதாயம் வழி தெரியாமல் தவிக்கத் தொடங்குகிறது.

நல்லவர்கள் துன்பப் படுவதும், கெட்டவர்கள் இன்பமாக இருப்பதும் மக்களை குழப்பத் தொடங்குகின்றன.

பதவியில் இருக்கும் கெட்டவர்கள் சட்டங்களை தங்கள் வசதிக்கு மாற்றுவார்கள்.

தீவினைகள் வளர்ந்து கொண்டே போகும்.

அறம் நாளும் சோதனைக்கு உள்ளாகும்.

தீமையின் அளவு அதிகமாகும் போது, அது, அதன் பளுவாலேயே நசுங்கி அழியும்.

அந்த மாதிரி சமயத்தில் மக்களை தீய வழியில் இருந்து மாற்றி நல் வழி படுத்த  அவதாரங்கள் நிகழ்கின்றன. பெரியவர்கள் தோன்றுவார்கள்.

தீவினை செய்த தீவினையாலும், அறம் செய்த நல்லவைகளாலும் இராமன் தோன்றினான்.


பாடல்


‘விரிந்திடு தீவினை செய்த
   வெவ்விய தீவினையாலும்.
அருங் கடை இல் மறை அறைந்த
   அறம் செய்த அறத்தாலும்.
இருங் கடகக் கரதலத்து இவ்
   எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க்
   கவுசலை என்பாள் பயந்தாள்.

பொருள்
( http://interestingtamilpoems.blogspot.in/2015/05/blog-post.html
)

‘விரிந்திடு = நாளும் பெருகிக் கொண்டே செல்லும்

தீவினை = தீய செயல்கள்

செய்த = செய்த

வெவ்விய தீவினையாலும் = பெரிய தீய வினைகளாலும்

அருங் = அருமையான, பெருமையான

கடை இல் = முடிவு இல்லாத

மறை அறைந்த = வேதங்கள் சொன்ன

அறம் செய்த அறத்தாலும். = அறம் செய்த அறத்தாலும்

இருங் கடகக் கரதலத்து = கடகம் என்ற ஆபரணம் அணிந்த கைகள்

இவ் = இந்த

எழுத அரிய திருமேனிக் = எழுத முடியாத அழகைக் கொண்ட

கருங்கடலைச் = கரிய கடல் போன்ற மேனி கொண்ட இராமனை

செங் கனி வாய்க் = சிவந்த இதழ்களை கொண்ட

கவுசலை என்பாள் பயந்தாள் = கௌசலை என்பவள் பெற்றாள்

தீமை செய்த தீமையாலும்
நன்மை செய்த நன்மையாலும் இராமன் பிறந்தான்.

அழகான பொருள் நிறைந்த பாடல்




Friday, May 1, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை - பாகம் 2

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை - பாகம் 2


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.




================ பாகம் 2 ================================================

உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும், ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணை அழகானவள்  என்று சொல்லுவது மட்டும் நடக்கவே நடக்காது. 

இங்கு, தோழியர்கள் "முத்தைப் போன்ற வெண்மையான புன்னகை உள்ள பெண்ணே"  என்று கூறுகிறார்கள். இது நடக்கவே நடக்க முடியாத ஒன்று. 

அதற்கு ஒரு காரணமும் பின்னால் சொல்கிறார் மணிவாசகர்....

"சித்தம் அழகியோர்" சித்தம் அழகானால் பொறாமை போகும், மற்றவர்களை மனம் நிறைய புகழ முடியும். 

உடல் மட்டும் அழகாக இருந்தால் போதாது சித்தமும் அழகாக இருக்க வேண்டும். 

உடல் அழகாக இருக்க என்னனமோ செய்கிறோம். உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, நல்ல உடைகள், வண்ணச் சாயங்கள், முடி திருத்துதல், என்று ஆயிரம் செய்கிறோம். 

என்றாவது நம் சித்தம் அழகாக இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்து இருக்கிறோமா ?

அதை எப்படி அழகு படுத்துவது ?

சித்தம் கோணல் மாணலாக இருக்கிறது. அதை சரி செய்ய முயல வேண்டும்...உயர்ந்த கருத்துகளை படிக்க வேண்டும், நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும்.  கண்ணாடி முன் நின்று உடலை அழகு படுத்துவது போல  கேள்வி  கேட்டு, சிந்தனை செய்து மனதையும் அழகு படுத்த வேண்டும். 

பொறாமை, கோபம், காமம், களவு, சோம்பேறித்தனம், அறியாமை  என்று ஆயிரம் அழுக்குகள் நம் சித்தத்தின் மேல் படிந்து கிடக்கிறது.  அவற்றை எல்லாம் விலக்கி , சித்தத்தை அழகு படுத்த வேண்டும். 


அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய்,

பேச்சு தித்திக்க வேண்டும். நம் பேச்சு மற்றவர்களுக்கு இனிமை தருகிறதா என்று  சிந்திக்க வேண்டும். சிலர் பேசினால் கசக்கும், உரைக்கும், கரிக்கும்....அப்படி இருக்கக் கூடாது....பேச்சு தித்திக்க வேண்டும்.

இந்தப் பெண்ணின் பேச்சு தித்ததாம்...ஏன் ? அத்தன், ஆனந்தன், அமுதன் என்று இறைவனின்  பெருமைகளை கூறி கூறி அவள் பேச்சு தித்திப்பாக இருந்தது.

எதைப் பேசினாலும் தித்திப்பாக பேசி பழகுங்கள்.

சித்தம் அழகானால், அதில் இருந்து வெளிப்படும் பேச்சும் தித்திப்பாக இருக்கும்.


சித்தம் அழகாகும் போது சிரிப்பும் அழகாகும். முத்தைப் போன்ற சிரிப்பு பிறக்கும்.  

முத்தில் அப்படி என்ன சிறப்பு ? பட்டை தீட்டாமலேயே ஒளி விடுவது முத்து. இயற்கையாகவே  அதற்கு ஒளி உண்டு. 

சித்தம் அழகாகும் போது முகம் மலர்ந்து சிரிப்பும் அழாக மாறும். 

பேச்சு அழகாக மாறும். 

இன்று முதல் சித்தத்தை அழகு செய்யத் தொடங்குங்கள். 

மன மாசுகளை அகற்றுங்கள். 

சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை 

சித்தம் அழகானால் இறைவன் வெளிப் படுவான்...இறை உணர்வு தானே தோன்றும். 

பாடினால் ஒரு வேளை சித்தம் அழகாகுமோ ?



Wednesday, April 29, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.



Sunday, April 26, 2015

வில்லி பாரதம் - கோபமும் தவமே

வில்லி பாரதம் - கோபமும் தவமே 


தவம் என்பது தன்னை மறந்து ஒன்றில் ஒன்றுவது.

யோகம் என்பது இணைவது. சேர்ப்பது.

நாம் பிரிந்து , சிதைந்து கிடக்கிறோம்.

மனம் ஆயிரம் துண்டுகளாய் சிதறிக் கிடக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது சரியில்லை, இது முடியாது, அதை செய்யலாம் ஆனால் உலகம் ஒத்துக் கொள்ளுமா என்று மனம் ஆயிரம் துண்டுகளாய் இருக்கிறது.

மனமும் உடலும் பிரிந்து கிடக்கிறது.

மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல முடிகிறதா ? செய்ய முடிகிறதா  ?

மனம் ஒரு புறம் இழுக்கிறது ...உடல் இன்னொரு புறம் இழுக்கிறது ...கிடந்து அலைகிறோம் .

ஒன்றாகச் சேர்ப்பது தவம், யோகம்.

கோபமும் ஒரு விதத்தில் தவம் தான்.

முழுமையாகச் செய்தால் எதுவும் தவம் தான்...

கோபம் உள்ளவன் தன்னை மறக்கிறான்...

கோபம் தணிந்த பின் "நானா அப்படிச் சொன்னேன் ? நானா அப்படி செய்தேன்  " என்று வியந்து கேட்கிறான். அவன் செய்யவில்லை என்றால் யார் செய்தது...

நான் இல்லாத இடம் அது.

கோபம் மட்டும்தான் இருக்கும். தன்னை மறந்த இடம்.

மகாவீரர் , கோபமும் ஒரு வித தியானம் என்று கூறுகிறார்.

கோபம் வரும் போது "இது சரி இல்லை, நான் கோபப் படக் கூடாது" என்று நீங்கள் இடையில் வராதீர்கள்.

கோபம் மட்டுமே  இருக்கட்டும்.

பாரத்தில் துருவாசர் என்று ஒரு முனிவர் இருந்தார். கோபத்திற்கு  .பெயர் போனவர்.

கோபம் வந்தால் உடனே சாபம் தான். அவர் கோபத்திற்கு எல்லோரும்  பயந்தார்கள்.

அவருக்கு கோபமே ஒரு தவம்.

 கோபத்திலும், சாபத்திலும் அவர் தவம்  வளரும்.

ஒரு நாள் அவரை துரியோதனன் சந்தித்து ,  உபசரித்தான். அப்போது அவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் "

"எனக்கு என்ன வேண்டும்...நீங்கள் இங்கு வந்து என்னை மகிழ்வித்தது போல  பாண்டவர்களையும்  மகிழ்விக்க வேண்டும் " என்று கேட்டான்.

பாண்டவர்கள் துர்வாசரை உபசரிக்க முடியாமல் அவரின் கோபத்திற்கு ஆளானாவர்கள்...துர்வாசர் சபிப்பார் என்பது அவன் எண்ணம்.

துர்வாசர் பாண்டவர்கள் கானகத்தில் இருக்கும் இடத்திற்கு வருகிறார். ....

பாடல்    

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும், 
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன், 
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ, 
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான், 
                           அந்த அடவியின்வாய்.


பொருள்

சாபத்தாலும் = சாபம் தருவதினாலும்

சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும் = சாபம் தருவதினால் வரும் தவத்தாலும்


கோபத்தாலும் = கோபத்தாலும்

பேர் படைத்த = பெயர் பெற்ற

கொடிய முனிவன் துருவாசன் = முனிவனான துருவாசன்

தீபத்தால் மெய் வகுத்தனையான் =  தீபத்தால் செய்த உடல் போன்றவன். உடல் தீபம் போல ஜொலிக்கும். கோபம் என்ற தீயால் உடல் ஜொலிக்கும். கோபாக்கினி.

திகழ் = புகழ் பெற்ற

பல் முனிவர் புடை சூழ = பல முனிவர்கள் புடை சூழ

ஆபத்தால் வந்து அடைந்தவர்போல் = ஆபத்து வந்தது போல

அடைந்தான் = அடைந்தான்

அந்த அடவியின்வாய் = அந்த காட்டுக்கு (பாண்டவர்கள் இருக்கும் கானகத்திற்கு)

தன்னை மறக்கும் எதுவும் தவம்தான்....

பக்தியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கலவியாக இருந்தாலும்...கோபமாக  இருந்தாலும்.

பாரதத்தில் இப்படி ஆயிரம் இருக்கிறது....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.





Saturday, April 25, 2015

பட்டினத்தார் - கடவுள் நாள்

பட்டினத்தார் - கடவுள் நாள் 


சில வார்த்தைகள் நம்மை அப்படியே திகைக்க வைக்கும். இப்படியும் இருக்குமா என்று ஒரு வார்த்தை நம்மை கட்டிப் போட்டு விடும்...அப்படி ஒரு பிரயோகம் "கடவுள் நாள்".

கடவுள் நாள் என்றால் என்ன ? கடவுளைப் போல உயர்ந்த நாள்...

எந்த நாள் ?

காலம் கடவுள் போன்றது.

மிக உயர்ந்தது. கிடைக்காது. அருமையானது.

அந்தக் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம் ?

ஏதோ அது நம்மிடம் மிக மிக அதிகமாக இருப்பது போல, அதை அனாவசியமாக செலவு செய்கிறோம்.

மீண்டும் மீண்டும் அதே இட்லி, தோசை, அரிசிச் சோறு, உப்புமா, காபி, டீ என்று சாப்பிடதையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ....

அதே சட்டை, சேலை, சுடிதார் என்று போட்ட உடைகளையே மீண்டும் மீண்டும் போட்டு

திருப்பி திருப்பி அதே பேச்சு, அரட்டை, பொய்கள்...

அதே வீடு, அதே அலுவலகம், அதே பிள்ளைகள், அதே கணவன், மனைவி என்று அவர்களையே திருப்பி திருப்பி பார்த்து, அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் கேட்டு ....

இப்படி நம் வாழ்வில் நடப்பது எல்லாம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

இதில் புதியதாய் என்ன இருக்கிறது...ஏதோ ஒன்றிரண்டு புதியதாய் இருக்கலாம் நாளடைவில் அதுவும் இதே சக்கரத்துக்குள் வந்து விடும்....

சலிப்பு வரவில்லையா ?

எத்தனை நாள் இதையே செய்து கொண்டு இருப்பது ?

எப்போது இதில் சலிப்பு வந்து இதை விடுவது ?

காலம் கடவுள் போன்றது...அதை இப்படி வீணடிக்கலாமா ?


பாடல்

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்


பொருள்


இத்தனை நாளும் செய்ததையே செய்து, செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து வாழ் நாளை எல்லாம்   வீணாக்கி விட்டேனே என்று வருந்துகிறார் பட்டினத்தார்....

நாம் என்ன செய்தோம் என்று நாமும் யோசிப்போமே....


Monday, April 20, 2015

வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம்

வில்லி பாரதம் -  பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம் 


நாத்திகம் இன்று நேற்று வந்தது அல்ல. மகாபாரத காலத்தில் இருந்தே இருக்கிறது.

அஸ்வமேத யாகம் முடிந்தபின் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

எல்லோரும் கண்ணனுக்கே என்று கூறினார்கள் - சிசுபாலனைத் தவிர.

சிசுபாலன் கண்ணனுக்கு முதல் மரியாதை தரக் கூடாது என்று கூறி வாதாடுகிறான்.

ஒரு தாய் போல முலைப் பால் தர வந்த பூதனை என்ற அரக்கியை இரக்கம் இல்லாமல் கொன்றவன் கண்ணன். பால், நெய், வெண்ணை முதலியவைகளை திருடித் தின்றவன் கண்ணன். அதற்காக உரலில் கட்டுண்டு அழுதவன் கண்ணன். அவனுக்கா முதல் மரியாதை என்று வெகுண்டு எழுகிறான்.

பாடல்

'ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
                               தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
                                உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
                                நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
                                இருந்து அழுதான்!


(http://interestingtamilpoems.blogspot.in/2015/04/blog-post_31.html)

பொருள்

'ஈன்ற = பெற்ற

தாய் = தாயின்

வடிவம் கொண்டு = வடிவம் கொண்டு

உளம் உருகி = உள்ளம் உருகி

இணை = இணையான

முலைத் தடத்து அணைத்து = மார்போடு அனைத்து

அமுதம் போன்ற பால் கொடுப்ப = அமுதம் போன்ற பால் கொடுக்க முனைந்த போது

பொழி முலைப் பாலோ = பொழிந்த முலைப் பாலோடு

பூதனை = பூதனை என்ற அரக்கியின்

உயிர்கொலோ, நுகர்ந்தான் = உயிரையும் சேர்த்து உறிஞ்சினான்

சான்ற பேர் உரலால் = பெரிய உரலால்

உறிதொறும் = உறிகள் தோறும்

எட்டாத் தயிருடன் = எட்டாத தயிருடன்

நறு நெய் = நல்ல நெய்

பால்  = பால்

அருந்தி = அருந்தி

ஆன்ற தாய் = சிறந்த தாயான யசோதை

கண்டு = கண்டு வருந்தி

வடத்தினின் பிணிப்ப = கயிறால் கட்ட

அணி உரலுடன் = உரலுடன்

இருந்து அழுதான்! = இருந்து அழுதான்


உலகளந்த பெருமாள் , சிசுபாலன் கண்ணுக்கு, திருடனாகத் தெரிந்தார்.

உலகம் அவரவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

ஆணவம் தலைக்கு ஏறினால் அருகில் உள்ள ஆண்டவன் கூடத் தெரியாது.