அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும்
துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த இடத்தை தந்திருக்கிறது.
நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர்.
அப்படி என்ன துறவிகளுக்குப் பெருமை ?
மனித மனம் மயக்கமுறும் தன்மை கொண்டது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாமல் தடுமாறும் இயல்பு கொண்டது. எது சரி, எது தவறு என்று தெரியாமல் மயங்கும்போது யாரிடம் போய் கேட்பது ? யார் நமக்கு சரியான வழியை காட்டுவார்கள் ?
தனி மனிதன் மட்டும் அல்ல, சில சமயம் சமுதாயமே குழம்பி தவிக்கும் ?
இன்றும் கூட சமுதாயம் அப்படி பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.
உதாரணமாக ஒரே இனத்தில் உள்ளவர்கள் (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ) திருமணம் செய்து கொள்ளலாமா ? துப்பாக்கி வைத்துக் கொள்ளலாமா ? விவாகரத்து சரியான தீர்வா ? என்று பல சிக்கல்களில் கிடந்து உலகம் உழல்கிறது.
யாரை கேட்டு உலகம் தெளிவு பெற முடியும் ?
துறவிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகு பாடு கிடையாது...ஆசை கிடையாது , நாம் செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இலாபமும் இல்லை , நட்டமும் இல்லை.
எனவே, அறிவுரை பெற சமுதாயமும், தனி மனிதர்களும் அவர்களிடம் போய் நின்றார்கள்.
அப்படி அறிவுரை சொல்லத் தக்கவர்கள் யார் என்று அறநெறிச்சாரம் கூறுகிறது.
பாடல்
அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.
சீர் பிரித்த பின்
அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும்-துறந்து அடக்கி
மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற் பட்டவன்.
பொருள்
அறம் கேட்டு = பல அற நூல்களை கேட்டு அறிந்து
அருள் புரிந்து = அருள் புரியும் நோக்கத்தோடு
ஐம்புலன்கள் மாட்டும் = ஐந்து புலன்களின் பால்
இறங்காது = சாராமல்
இருசார் பொருளும் = அகப்பற்றையும் புறப் பற்றியும்
துறந்து = துறந்து
அடக்கி = புலன்களை அடக்கி
மன்னுயிர்க்கு = உயிர்களுக்கு
உய்ந்து போம் = பிறவிப் பிணியில் இருந்து விட்டு வீடு பெற
வாயில் = வழியை
உரைப்பானேல் = உரைப்பவனே
பன்னுதற்குப் = அற உரைகளை சொல்லப்
பாற் பட்டவன் = நல்லவன்
அறவுரை சொல்வதற்கு இத்தனை தகுதிகள் வேண்டும் என்கிறது அறநெறிச் சாரம்.
முதலில் , தெளிந்த அறிவு
இரண்டாவது, புலனடக்கம்
மூன்றாவது, உயிர்கள் மேல் அருள்
நான்காவது , உயிர்கள் வீடு பேறு பெற வேண்டும் என்ற சிந்தனை
இவை நிறைந்தவனே அறவுரை சொல்லச் சிறந்தவன்.
பிறர் சொல்லும் அறிவுரையை கேட்பதன் முன்னம், அவர்களுக்கு இந்த தகுதி இருக்கிறதா என்று பாருங்கள்.