Tuesday, September 22, 2015

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை 


ஒரு நாள் நம் உடையை சரியாக இஸ்திரி (iron ) போடாமல் போட்டுக்கொண்டு வெளியே செல்ல முடியுமா ? கசங்கின ஆடையை உடுத்திச் செல்வோமா ?

உடம்பை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள், அல்லது தொள தொள என்று தொங்கும் ஆடைகளை நம்மால் உடுக்க முடியுமா ? எவ்வளவு சங்கடப் படுவோம் ?

சகர்வர்த்தியின் பிள்ளைகள் , இராமனும், சீதையும், இலக்குவனும் மர உறி உடுத்துச் சென்றார்கள்.

அது உடலோடு சரியாகப் பொருந்தாது. மெத்தென்று மென்மையாக இருக்காது. அங்கங்கே குத்தும். உரசும். எரிச்சல் தரும்.

அப்பா சொன்னார் , என்ற ஒரே காரணத்துக்காக இராமன் மர உரி உடுத்து கானகம் போனான்.

கணவன் போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக சீதை மாற உரி உடுத்து, அவன் பின் கானகம் போனாள் .

அண்ணன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக இலக்குவன் சென்றான்.

இவர்கள் சென்றதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அப்பாவின் மேல் உள்ள மரியாதை, கணவன் மேல் உள்ள காதல், அண்ணன் மேல் உள்ள பாசம் என்று.

அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வர  பரதனும் மர உரி உடுத்து கானகம் போனான்.

அறத்தை நிலை நாட்ட மட்டுமே அவன் சென்றான்.

மந்திரிகளை விட்டு அழைத்து வரச் சொல்லி இருக்கலாம்.

அல்லது அவனே கூட சாதாரண ஆடை அணிந்து சென்றிருக்கலாம். அதை விடுத்து அவனும் மர உரி உடுத்துச் சென்றான்.


பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். பரதனைப் பார்த்து அவர் கேட்கிறார்

"நீ முடி சூடி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. முடியெல்லாம் சரியாக சீவாமல் சடை பிடித்துப் போய் இருக்கிறது. இப்படி மர உரி உடுத்து இங்கு எதைத் தேடி வந்தாய் " என்று.

பாடல்


‘எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான்.

பொருள் 

‘எடுத்த மா முடி = உன் தாய் எடுத்துக் கொடுத்த பெரிய மணி முடியை

சூடி = தலையில் அணிந்து

நின்பால் = உன்னிடம்

இயைந்து = அனுசரித்து வந்த

அடுத்த பேர் அரசு ஆண்டிலை = அந்த பெரிய அரசை நீ ஆளவில்லை

ஐய! நீ = ஐயனாகிய நீ

முடித்த = தலையை வாராமல் முடித்து

வார் சடைக் கற்றையை  = சடை கற்றையை

மூசு =  மொய்க்கும்

தூசு = தூசு என்றால் ஆடை

உடுத்து  = உடுத்து

நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான். = இந்த கானகத்திற்கு வந்ததன் காரணம் என்ன ?

மூசு தூசு என்றால் உடலை சுற்றி இருக்கும் ஆடை. பொருந்தாத ஆடை. மர உரி.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏதோ பேருக்கு போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தவன் அல்ல பரதன்.

வருத்ததோடு, சிரத்தையோடு போனவன்.

தவறுக்கு வருந்தி பிராயாசிதம் தேடி போனவன்.



Saturday, September 19, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே 


பெரிய பெரிய மகான்கள் தோன்றிய பூமி  இது.எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்களிடம் இருந்து அந்த நல்ல விஷயங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அதை சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லாமல் போனால் அந்த பெரிய உண்மைகள் நாளடைவில் மறைந்து போகும். அது மட்டும்  அல்ல,அதை கண்டு சொன்ன அந்த மகான்களின் பேரும் பெருமையும் மறைந்து போகும்.

தான் கற்ற திவ்ய மந்திரங்களை எல்லோரும் உய்ய ஊருக்கே சொன்னவர் இராமானுஜர்.

அதனால், அதை பெற்றவர்கள்  வாழ்ந்தார்கள்.

அந்த உண்மைகள் நிலைத்தன.

அந்த மந்திரங்களை கண்டு சொன்ன பெரியவர்களின் பெயரும் நிலைத்தது.

அப்பேற்பட்ட மகான் இராமானுஜர். அவரின் பாதார விந்தங்களைச் சேர அவருடைய நாமங்களைச் சொல்லுவோம்.

பாடல்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


பொருள்

(மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.  இந்த பாசுரத்தில் பல இடத்தில் மன்னு என்ற வார்த்தை  வருகிறது. மன்னு புகழ் கோசலை மணி வயிறு வாய்த்தவன் )


பூமன்னு = பூவில் நிலைத்து வாசம் செய்யும்

மாது = திருமகள்

பொருந்திய  மார்பன் = பொருத்தமாக வந்து சேர்ந்த மார்பை உடையவன்

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நிலைத்து நிற்கும் பாடல்களை தந்த

மாறன்  = நம்மாழ்வார்

அடிபணிந் துய்ந் தவன் = திருவடிகளை பணிந்து உயர்ந்தவன்

பல்கலையோர் = பல கலைகளை கற்ற பெரியோர்

தாம்மன்ன = அவர்கள் நிலைத்து நிற்க

வந்த = வந்த

இராம னுசன் = இராமானுசன்

சர ணாரவிந்தம் = திருவடித் தாமரைகளை

நாம்மன்னி = நாம் என்றும் நிலையாக அடைந்து

வாழநெஞ்சே!  = வாழ்வதற்கு நெஞ்சே

சொல்லுவோம்  = சொல்லுவோம்

அவன் நாமங்களே = அவனுடைய நாமாங்களையே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்ன மாதிரி ,

இராமானுஜர் திருவடிகளை அடைய அவருடைய நாமங்களே துணை



திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே 


சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி  அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.

இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.

ஞான சம்பந்தர் கூறுகிறார்.....

வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.

இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


பொருள்

வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க

வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள்  வாழ்க

வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்

வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்

ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்

அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்

வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்

அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?

அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி  புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.

எவ்வளவு பெரிய  மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.





திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே


Friday, September 18, 2015

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம்

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம் 


எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, சோதனை செய்து, தர்க ரீதியாக நிரூபணம் செய்ய வேண்டும் என்று மனம் எதிர் பார்க்கிறது.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணி விட முடியுமா ?

எதையுமே ஓரளவுக்கு மேல் ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை. முடிந்த முடிவு தெரிந்த பின்தான் எதையும் செய்வேன் என்று இருந்தால் எதையுமே செய்ய முடியாது.

லட்டை கையில் கொடுத்தால் , அது என்ன, எப்படி இருக்கும்  என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் முகர்ந்து பார்த்து அதன் வாசனையை இரசிக்கலாம். சிறிது வாயில் போட்டு சுவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பிடித்தால் முழு லட்டையும் உண்ண வேண்டியதுதான்.

அதை விட்டு விட்டு, இனிப்பு என்றால் என்ன, அந்த இனிப்பு எப்படி வருகிறது, இந்த மஞ்சள் நிறம் எப்படி வந்தது.  இந்த நறுமணம் எப்படி வருகிறது. அது எப்படி இந்த மூக்கினால் நுகரப் படுகிறது, மனத்தால் அறியப்படுகிறது என்று ஆராய்ச்சியில் இறங்கி, இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வான விடை காணாமல் இந்த லட்டை உண்பது இல்லை என்று இருந்தால் வாழ்வில் எந்த இன்பத்தையும் அனுபவிக்க முடியாது.


ஞான சம்பந்தர் சொல்கிறார்....காரண காரியங்களை ரொம்பவும் சோதிக்க வேண்டாம். சோதியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கி விடாதீர்கள். சோதி வடிவாக இருக்கிறான் அவன். உங்கள் துக்கங்கள் நீங்க மனம் பற்றி வாழுங்கள். அறிவு பற்றாது. அறிவு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.


பாடல்

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

சீர் பிரித்த பின்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்  மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்  சோதி
மா துக்கம்  நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்க  இறையே  வந்து சார்மின்களே.

பொருள் 

ஏதுக்களாலும் = காரணங்களாலும்

எடுத்த மொழியாலும் = தர்க வாதத்தாலும்

மிக்குச் = மிகுதியாக

சோதிக்க வேண்டா = சோதிக்க வேண்டாம்

சுடர் விட்டுளன் = சுடர் வடிவாக உள்ளான்

எங்கள்  சோதி = எங்கள் ஜோதியான அந்த இறைவன்

மா துக்கம்  = பெரிய துக்கம் (பிறவிப் பிணிதான் பெரிய துக்கம்)

நீங்கல் உறுவீர் = நீங்கப் பெறுவீர்

மனம் பற்றி வாழ்மின் = மனம் ஒன்றி வாழ்வீர்

சாதுக்கண் மிக்க  = அன்பு நிறைந்தவர்களே

இறையே  வந்து சார்மின்களே  = இறைவனையே வந்து பற்றுங்கள்


கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அறிவோ எல்லை அற்றது.

வாழ் நாளோ மிகக் குறைவு.

அதிலும், அறிவை சேர்த்துக் கொள்ள செலவழிக்கும் நாட்கள் இன்னும் மிக மிகக் குறைவு.


எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்தாலும், ஒரு சிறு துளியின் ஒரு பகுதியைக் கூட   முழவதும் அறிந்து கொள்ள முடியாது.

என்ன செய்யலாம் ?







பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


அனைத்து உயிர்களும் இன்பம் வேண்டுகின்றன. துன்பம் வேண்டும் உயிர் எதுவும் கிடையாது.

இருந்தும், துன்பம் வரத்தான் செய்கிறது.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, ஏமாற்றங்கள், தோல்விகள், கண்ணீர், என்று ஏதோ ஒன்று அவ்வப்போது தலை காட்டித்தான் போகிறது.

இன்பம் எவ்வளவு வந்தாலும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

துன்பம் வந்தால் ?

கொஞ்சம் துன்பம் வந்தாலும் துவண்டு போகிறோம்.

ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்துகிறோம் ? நான் யாருக்கு என்ன தீமை செய்தேன், எனக்கு ஏன் இது வர வேண்டும் என்று அங்கலாய்கிறோம்.

எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன், நினைக்கிறேன், கோவில் குளங்களுக்குப் போகிறேன், பூஜை புனஸ்காரங்கள் செய்கிறேன்...இருந்தும் எனக்கு ஏன் இந்த சோதனை என்று வருந்துகிறோம்.

சாத்திரங்கள் எல்லாம் பொய்யா ? இதுக்கெலாம் ஒரு அர்த்தம் இல்லையா , கடவுள் ஒன்று   இல்லையா என்று கூட சந்தேகம் வருகிறது.

யாரிடம் போனால் துன்பம் தீரும் என்று பார்க்கிறோம்.

கொஞ்ச பேர் வருந்துவார்கள், பின் அவர்கள் வேலையை பார்த்துகொண்டு போய் விடுவார்கள்.

இன்னும் சில பேர், "நல்லா வேணும் " என்று உள்ளுக்குள் மகிழக் கூட மகிழ்வார்கள்.

யார் துணை ?

நம் சமய இலக்கியங்கள் துன்பத்தை ஏற்றுக் கொள்ள நம்மை பக்குவப் படுத்துகின்றன.

பொதுவாக இலக்கியங்களையும், குறிப்பாக சமய இலக்கியங்களையும் படிக்கும் போது , துன்பம் என்பது ஏதோ நமக்கு மட்டும் வருவது அல்ல, நம் துன்பம் ஒன்றும் அப்படி பெரியது அல்ல, இதைவிட பெரிய பெரிய துன்பங்களை மனிதர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அவற்றிற்கு முன்னால் என் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற ஆறுதல் பிறக்கும்.

மேலும், துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்ற எண்ணம் வரும். துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் வரும்

.
நோய் என்றால் துன்பம். நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்தின் வடிவம் என்கிறார் திருவள்ளுவர்.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.

துன்பம்     வரும்போது அதை அமைதியோடு ஏற்றுக் கொள்வதுதான் தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை எவ்வாறு எதிர் கொள்வது ? துன்பம் வந்து விட்டால் என்ன செய்வது ?

சரி, துன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எனக்கு துன்பம் தா என்று யாராவது வேண்டுவார்களா ?

என்னை கத்தியை எடுத்து வெட்டு, எனக்கு சூடு போடு என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டுவார்கள்.

அப்படி வெட்டுவதன் மூலமும், சூடு போடுவதன் மூலமும் அதை விட பெரிய துன்பம் தீரும் என்றால்.

மருத்துவரிடம் போய் அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுக்கிறோம். என்னை வெட்டு, அறு , ஊசியால் குத்து , தையல் போடு என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி செய்வதற்கு பணம் தருகிறோம். செய்து விட்டால் மருத்துவருக்கு நன்றி சொல்கிறோம்.

ஏன், அறுக்கும், வெட்டும், ஊசி குத்தும் துன்பங்கள், அவற்றை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கும் என்பதால்.

இப்போது யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த துன்பங்கள், அவற்றை விட  ஒரு பெரிய துன்பத்தில் இருந்து உங்களை காக்கும் என்றால், வந்த துன்பத்தை  சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா ?

இறைவன் நமக்குத் துன்பத்தை தருகிறான் என்றால், அதை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கிறான் என்று பொருள். அதற்காக அவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

சொன்னார் - குலசேகர ஆழ்வார்.

பாடல்


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

வித்துவ கோட்டத்தில் உள்ள பெருமாளே, நீ எனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும், அந்த துன்பங்களை தருவதற்குக் காரணமான உன் அருளையே நான் பார்ப்பேன் என்கிறார். மருத்துவன் அறுத்து சுட்டாலும், அவன் மேல் மீளாத காதல் கொண்ட நோயாளன் போல, நீ எனக்கு துன்பங்களைத் தந்தாலும், அதற்கான உன் அருளையே நான் நினைப்பேன் என்கிறார். 


பொருள்

வாளால் அறுத்துச் = கத்தியால் அறுத்து

சுடினும் = புண் புரையோடாமல் இருக்க சூடு வைத்தாலும்

மருத்துவன் பால் = மருத்துவன் மேல்

மாளாத = தீராத

காதல் = காதல் கொண்ட

நோயாளன் போல் = நோயுள்ளவனைப் போல்

மாயத்தால் = மாயத்தால்

மீளாத் துயர் தரினும் = இறுதியே இல்லாத துயரை நீ தரினும்

வித்துவக்கோட்டம்மா நீ = வித்துவக் கோட்டத்தில் உள்ள பெருமானே

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே! = உன் அருளையே நான் அதில் பார்ப்பேன்

பிரபந்தத்தை வாசியுங்கள். வாழ்க்கையில் துன்பங்களை எப்படி ஏற்றுக் கொள்வது, தாங்கிக் கொள்வது என்று புரிபடும்.











Wednesday, September 16, 2015

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து 


உடம்பில் ஒரு பாகத்தில் வலி வந்தால், அந்த பகுதி மட்டும் வலிக்கும். 

கண் வலி என்றால் கண் மட்டும் வலிக்கும். 

கால் வலி என்றால் கால் மட்டும் வலிக்கும். கை வலிக்காது.

ஆனால், இந்த பிரசவ காலமும், பிரசவமும் இருக்கிறதே, உடம்பின் ஒவ்வொரு பாகமும் வலிக்கும், சோர்ந்து போகும். அது மட்டும் அல்ல, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பத்து மாதமும் ஏதோ ஒரு அங்கம் வலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் கால் வலிக்கும், இன்னொரு நாள் முதுகு, இன்னொரு நாள் தலை என்று அங்கமெல்லாம் நோகும்.

பட்டினத்தார், எல்லாம் துறந்தவர், தாயின் அந்த வேதனையை உணர்ந்து பாடுகிறார். 

பாடல் 


ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி”

பொருள் 

ஐயிரண்டு = ஐந்து இரண்டு = பத்து 

திங்களாய் = மாதமாய் 

அங்கமெலாம் = அனைத்து அங்கங்களும் 

நொந்து = சோர்ந்து, சலித்து 

பெற்றுப்  = பிள்ளையைப் பெற்று 

பையலென்ற போதே  = பையுள் என்றால் துன்பம். அந்த பிரசவ வலியோடே 

பரிந்தெடுத்துச் = குழந்தையை அன்போடு எடுத்து 

செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் = கையில் ஏந்தி 

கனக முலை தந்தாளை = தங்கம் போல உயர்ந்த தன் தனங்களைத் தந்தாளை 

எப்பிறப்பிற் காண்பே னினி = இனி எந்தப் பிறப்பில் காண்பேன்