Tuesday, October 13, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து 


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....



Wednesday, October 7, 2015

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?


வாழ்வில் பெரிய சாதனைகளை செய்ய என்ன செய்ய வேண்டும் ? வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

ஆண்டாண்டு காலமாய் இதைப்  பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது ?

கடின உழைப்பு, அதிர்ஷ்டம், சூழ்நிலை, தொலை நோக்கு பார்வை, மனிதர்களை வழி நடத்தும் தலைமை குணம், என்று எத்தனையோ சொல்கிறார்கள்.

ஆனால், இவை இல்லாதவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படிக்காமல், கல்லூரிக்கு கூட போகாத பெரிய பெரிய பணக்காரர்கள் உண்டு. அவர்களிடம் கை கட்டி வேலை செய்யும் பெரிய படிப்பு படித்தவர்கள் உண்டு.

அப்படி என்றால் சாதனையாளர்களிடம் பொதுவாக காணப் படுவது எது ? எல்லா சாதனையாளர்களும் செய்யும் ஒன்று என்ன ?

அபிராமி பட்டர் சொல்கிறார் - அப்படி சாதித்த பெரியவர்கள் எல்லோரும் அபிராமியை போற்றினார்கள்.

சாதித்தவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் பணம் சேர்த்தவர்கள், சண்டை பிடித்து நாடுகளை பிடித்தவர்கள் அல்ல. அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே....

பட்டியல் தருகிறார் பட்டர் ...

பாடல்

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


பொருள்

ஆதித்தன் = சூரியன்

அம்புலி = சந்திரன்

அங்கி = அக்கினி கடவுள்

குபேரன் = செல்வத்தின் அதிபதியான குபேரன்

அமரர் தம் கோன் = தேவர்களின் தலைவனான இந்திரன்

போதிற் பிரமன் = மலரில் இருக்கும் பிரமன் (போது = மலர்)

புராரி = முப்புரங்களை எரித்த சிவன்

முராரி = திருமால்

பொதியமுனி = அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் = பெரிய படைகளை கொண்ட கந்தன்

கணபதி = கணங்களுக்கு அதிபதியான கணபதி

காமன் = அழகில் சிறந்த மன்மதன்

முதல் = அவர்களில் இருந்து


சாதித்த புண்ணியர் = இன்று வரை உள்ள சாதனை செய்த புண்ணியம் செய்தவர்கள்

எண்ணிலர் = கணக்கில் அடங்காதவர்கள்

போற்றுவர் தையலையே = போற்றுவார்கள் அபிராமியையே

செல்வம் வேண்டுமா ? செல்வத்தின் அதிபதியான குபேரன் அபிராமியை போற்றுகிறான்.

பதவி வேண்டுமா ? தேவ லோகத்தின் தலைவனான இந்திரன் அவளைப் போற்றுகிறான்.

வீரம் வேண்டுமா ? சிறந்த சேனாதிபதியான முருகன் அவளைப் போற்றுகிறான்.

அறிவு விடுமா ? அகத்தியர் அவளைப் போற்றுகிறார். 

அழகு வேண்டுமா ? அழகிற் சிறந்த மன்மதன் அவளைப் போற்றுகிறான் 

உலகை வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டுமா ? சூரியன் அவளைப் போற்றுகிறான். 

மக்கள் மேல் கருணை செலுத்த வேண்டுமா ? குளிர்ந்த சந்திரன் அவளைப் போற்றுகிறான்.

அவர்கள் எல்லாம் அவளைப் போற்றி அந்த நிலையை அடைந்தனர். 

எல்லா பெண்ணுக்குள்ளும் அபிராமியின் ஒரு பகுதி உண்டு. 

பூத்தவளே , புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே என்பார் பட்டர்.

உலகில் உயிர்களை கொண்டு வந்து அவற்றை காக்கும் எந்த பெண்ணும் அபிராமியின் அம்சம்தான். 

பெண்ணைப் போற்றுங்கள். பெருமை வரும்.

அபிராமி....அபிராமி...அபிராமி....

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதி படித்து, அருஞ்சொற் பொருள் புரிந்து அறிந்து கொள்வது அல்ல.

அதையும் தாண்டி, பட்டரின் மனம் உணர்ந்து பாடல்களை உணர வேண்டும். 



Sunday, October 4, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?


எதுவரை அறத்தை கடை பிடிக்கலாம் ?

உயிருக்கே ஆபத்து என்றாலும் அறத்தை கடை பிடிக்க வேண்டுமா ? உயிரை விட்டு விட்டு அறத்தை தூக்கிப் பிடித்து என்ன பயன் ? தற்காப்புக்காக அறத்தை மீறலாமா ?

நம் சட்டங்கள் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்று அனுமதி அளிக்கிறது.  தன்னைக் கொல்ல வருபவனை கொல்லுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

நம் உயிருக்கு ஆபத்து என்றால் கூட சில சமயம் பொறுத்துக் கொள்ளலாம். நாம் மிகுந்த அன்பு செலுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் அறமாவது மண்ணாவது என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

மனைவியின் உயிர், பிள்ளையின் உயிர், கணவனின் உயிருக்கு ஆபத்து என்றால் யார் அறத்தைப் பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்கள் ?

இராமன் சிந்தித்தான். தன் உயிருக்கு மட்டும் அல்ல, உயிரினும் மேலான தம்பியின் உயிருக்கு ஆபத்து என்ற போதும் அவன் அறத்தை மீறவில்லை.

தாடகை கோபத்தோடு வருகிறாள். கையில் சூலத்தை ஏந்திக் கொண்டு வேகமாக வருகிறாள். சூலத்தை இராம இலக்குவனர்களின் மேல் எறியப் போகிறாள்.

விஸ்வாமித்திரன் சொல்கிறான், "அவளைக் கொல் " என்று.

இராமன் பேசாமல் நிற்கிறான். பெண்ணைக் கொல்வது அறம் அன்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.

எவ்வளவுதான் கொடியவள் என்றாலும் பெண் என்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.

பாடல்

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள். தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும். பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து. நான்மறை அந்தணன் கூறுவான்.

பொருள்

வெறிந்த  = மணம் வீசும். இங்கே நாற்றம் எடுக்கும் என்ற பொருளில் வந்தது.

செம் மயிர் = சிவந்த மயிர். எண்ணெய் போடாமல் செம்பட்டையாக இருந்த முடி.

வெள் எயிற்றாள் = வெண்மையான பற்களைக் காட்டிக் கொண்டு வருகிறாள் தாடகை

தனை = அவளை

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் = சூலாயுதத்தை எறிந்து இராம இலக்குவனர்களை கொல்லுவேன் என்று ஏந்திக் கொண்டு வந்த போதும்


பார்க்கிலாச் = அதை கண்டு கொள்ளாத

செறிந்த தாரவன் = அடர்ந்த மலர்களை கொண்டு செய்த மாலையை அணிந்த இராமன் (தார் = மாலை)

சிந்தைக் கருத்து எலாம் = சிந்தனையின் ஓட்டம், அவன் கருத்து எல்லாம்

அறிந்து = அறிந்து கொண்ட

நான்மறை அந்தணன் கூறுவான் = நான்கு வேதங்களை ஓதிய அந்தணனாகிய விஸ்வாமித்திரன் கூறுவான்.


விஸ்வாமித்திரன் அந்தணன் அல்ல. அவன் ஒரு அரசன். அது கம்பனுக்கும் தெரியும்.  இருந்தும் தேடி எடுத்து அந்தணன் என்ற சொல்லைப் போடுகிறான்.

அந்தணன் என்போன் அறவோன். அற வழியில் நிற்பவன் அந்தணன். இங்கே விஸ்வாமித்திரன் அற வழியில்  நின்று அறத்தைக் கூறுகிறான் என்ற பொருள் பட  அவனை அந்தணன் என்று அழைக்கிறான் கம்பன்.

அது மட்டும் அல்ல, அற வழியில் நிற்போர் எல்லாம் அந்தணர் தாம்.

பரிமேல் அழகர் கூறுவார் அந்தணர் என்பது காரணப் பெயர் என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சுகமான காலத்தில், ஆபத்து இல்லாத காலத்தில் எல்லோரும் அறத்தை கடை பிடிப்பார்கள்.

கொல்ல வரும் அரக்கி, சூலத்தொடும் கோபத்தோடும் எதிரில் நிற்கும் போது ?

அது இராமன் காட்டிய வழி....

இதற்காகவும் இராமாயணம் படிக்க வேண்டும்.


Saturday, October 3, 2015

தேவாரம் - பின்னை எண்ணார்

தேவாரம் - பின்னை எண்ணார் 


யாரிடமாவது நாம் உதவி வேண்டிப் போனால், கேட்ட உடனேயே எத்தனை பேர் அந்த உதவியை நமக்குச் செய்து விடுவார்கள் ?

மறவர்களை விடுங்கள், "கொஞ்சம் தண்ணி  வேண்டும்" என்று கேட்டால் எத்தனை பிள்ளைகள் உடனேயே கொண்டு வந்து கொடுக்கும் ?  "நான் busy யா இருக்கேன்...நீயே போய் எடுத்துக்கோ" என்று பதில் வரும். இல்லைனா "இதோ வரேன் " என்று பதில் மட்டும் வரும்...ஆள் வர நாள் ஆகும்.

புடவை வேண்டும், நகை வேண்டும் என்று மனைவி ஆசைப் பட்டு கேட்டால் எத்தனை கணவன்மார் உடனேயே வாங்கித் தந்து விடுவார்கள் ?  "பார்க்கலாம், தீபாவளிக்கு வாங்கலாம், பொங்கலுக்கு வாங்கலாம் " என்று தள்ளிப் போடும் கணவர்கள் தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என்று வீட்டில் வேலை பார்க்கும் பணியாள் கேட்டால் நாம் உடனே கொடுத்து விடுவோமா ? எந்த முதலாளியும் தருவது கிடையாது.

உலகம் அப்படி.

கேட்ட உடன் கொடுக்காவிட்டால்,  சாதாரண மனிதர்களுக்கும்  இறைவனுக்கும் என்ன வித்தியாசம் ?

பக்தா , என்னிடம் கேட்டாயா...பார்க்கலாம், அப்புறம் தருகிறேன்...அடுத்த தீபாவளிக்குத் தருகிறேன் ...என்று இறைவன் தள்ளிப் போடுவது இல்லை. கேட்ட உடனேயே  தந்து விடுவான் என்கிறார் நாவுக்கரசர்.


பாடல்

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

சீர் பிரித்த பின்


உன்னி வானவர் ஓதிய சிந்தையில் 
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் 
தன்னை நோக்கித் தொழுது எழுவார்கு எல்லாம் 
பின்னை எண்ணார் பெருமான் அடிகளே 

பொருள்

உன்னி = மனதில் எண்ணி

வானவர் = தேவர்கள்

ஓதிய = தினம் போற்றிய

சிந்தையில் = மனதில்

கன்னல் தேன் = கரும்புச் சாற்றில் தேன் கலந்தார் போல தித்திப்பவர்

கடவூரின் மயானத்தார் = திருக் கடவூர் மயானம் என்ற ஊரில் உள்ளவர்

தன்னை நோக்கித் = தன்னை நோக்கித்

தொழுது எழுவார்கு எல்லாம் = தொழுது எழுவார்கெல்லாம்

பின்னை எண்ணார்  = பின்னால் தரலாம் என்று நினைக்க மாட்டார்

பெருமான் அடிகளே = பெருமான் அடிகளே

அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போடும் குணம் கிடையாது.

கேட்டவுடன் , இந்தா பிடி , என்று உடனே வழங்குவார்.

நானும் தான் எவ்வளவோ கேட்கிறேன். எங்கே தருகிறார். இதெல்லாம் சும்மா என்று  நினைக்கத் தோன்றும்.

நீங்கள் கேட்பதைத் தரமாட்டார். உங்களுக்கு எனது நல்லதோ அதைத் தருவார். அதையும் உடனே தருவார்.

உங்களுக்குத் தெரியுமா , உங்களுக்கு எது நல்லது என்று ? அல்லது இறைவனை விட உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா ?

இந்தப் பெண் தான் வேண்டும், அவள் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்று  வேண்டி விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்..."இதையா கட்டிக் கொண்டேன் " என்று வருந்துகிறான்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ  என்பார் மணிவாசகர்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

நீங்கள் தொழுது எழுங்கள். உங்களுக்கு வேண்டியதை அவன் உடனே செய்வான்.




(எழுது)

Wednesday, September 30, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம்  - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? 



விஸ்வாமித்திரன், பலப் பல காரணங்களைச் சொல்லி , தாடகையை "கொல் " என்றான் இராமனிடம்.

என்னதான் கொடுமைக் காரியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். பெண்ணைக் கொல்வது என்பது வில் அறத்திற்கு ஏற்றது அன்று என்று இராமன் நினைக்கிறான்.

பெண்ணைக் கொல்வது சரியல்ல என்று இராமனுக்குத் தெரியும். அப்படித்தான் வசிட்டர் அவனுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால், விச்வாமிதரனோ பெண்ணைக் கொல் என்கிறார்.

செய்தாலும் பிழை. செய்யாவிட்டாலும் பிழை. எப்படியும் அறத்தினின்று பிறழத்தான் போகிறான் இராமன்.

பாடல்

அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.

பொருள்

அண்ணல் முனிவற்கு = முனிவனான விச்வாமித்திரனுக்கு

அது கருத்துஎனினும் = தாடைகையை கொல்வது தான் கருத்து என்றாலும்

‘ஆவி உண்’  = அவள் உயிரை உண்டு வா

என.  = என்று

வடிக் கணை = வடிவான அம்பை

தொடுக்கிலன்; = அவள் மேல் விடவில்லை

உயிர்க்கே = உயிருக்கு

துண்ணெனும் = துன்பம் தரும், நடுக்கம் தரும்

வினைத்தொழில் = தொழிலை

தொடங்கியுளளேனும். = அவள் தொடங்கி இருந்தாலும்

‘பெண்’ என = அவள் ஒரு பெண் என்று

மனத்திடை பெருந்தகை நினைந்தான்.= மனதில் பெருந்தகையான இராமன் நினைத்தான்

பள்ளிக் கூடத்தில் பாடம் படித்து விட்டு வெளி வருகிறோம்.

படித்ததை எல்லாம் அப்படியே நடை முறையில் செயல் படுத்த முடியாது என்பதைக் காட்டும் இடங்கள் இவை.

இராமன் செயல் படமால் பேசாமல் நிற்கிறான்.

அடுத்து என்ன நடந்தது என்று பார்பதற்கு முன்னால் , தாடகை போன்ற ஒரு அரக்கியிடம் கூட  கருணையோடு நடந்து கொண்ட இராமன் சீதையை துன்பப் படுத்தியது  ஏன் என்ற கேள்வியும் சிலர் மனதில் எழலாம்.

சீதையை தீ குளிக்க சொன்னது. அவளை காட்டில் கொண்டு போய் விட்டது எல்லாம்  சரியா போன்ற கேள்விகளும் மனதில் எழலாம்.

அவற்றையும் சிந்திப்போம்.



Sunday, September 27, 2015

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?

திருக்கடைகாப்பு - இறைவன் எங்கு இருக்கிறான் ?


வயிற்று வலி, பல் வலி என்று உடலுக்கு ஏதாவது ஒரு வலி வந்து விட்டால்,  "கடவுளே, இந்த வலி தாங்க முடியவில்லையே, இந்த வலியில் இருந்து என்னை காப்பாற்று, உன் கோவிலுக்கு வருகிறேன், மொட்டை போடுகிறேன், அபிஷேகம் பண்ணுகிறேன்..."என்று எல்லா தெய்வத்தையும் வேண்டுவோம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட தாங்க முடியாத வலி வரும்போது இறைவனை நினைக்கிறான்.

உடல் வலி என்று இல்லை, எந்த நோவு வந்தாலும் ...பணக் கஷ்டம், நெருங்கிய உறவுகளுக்கு உடல் நிலை சரி இல்லை, காதலில் தோல்வி, பரிட்சையில் தோல்வி என்று எத்தனையோ நோவுகள் வருகின்றன.

அத்தனை நோவிலும் மனிதன் கடவுளை இரகசியமாகவேனும் நினைக்கிறான்.

ஞானசம்பந்தரிடம் கடவுள் எங்கு இருக்கிறான் என்று கேட்ட போது , வலி உள்ளவன் வாயில் கடவுள் இருக்கிறான் என்றார்.

பெருமாளே என்னை காப்பாற்று...

முருகா என் பிள்ளையை காப்பாற்று...

பிள்ளையாரப்பா என் கணவனை காப்பாற்று ...

என்று அவரவர் , தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரை சொல்லிச் வேண்டுகிறார்கள்.

சத்தியமாக அவர்கள் இறைவனை நம்புகிறார்கள்...எப்போதும் இல்லாவிட்டாலும் அந்த நோவு உள்ள பொழுதிலேனும் நம்புகிறார்கள்.

அவர்கள் வாயில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான் என்றார் ஞான சம்பந்தர்.

பாடல்


நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.


பொருள்

நுண்ணியான் = மிக மிக நுட்பமானவன்

மிகப்பெரியான் = மிக மிக பெரியவன்

நோவுளார் வாயுளான் = அப்பேற்பட்ட இறைவன், வலி உள்ளவர்கள் வாயில் இருப்பவன்


தண்ணியான் = குளிர்ச்சியானவன்

வெய்யான் = வேப்பமானவன்

அந் தலைமேலான் = தலைக்கு மேலே உள்ளவன்

மனத்துளான் = மனதுக்கு உள்ளேயும் உள்ளவன்

திண்ணியான் = உறுதியானவன்

செங்காட்டங் குடியான் = செங்காட்டங்குடி என்ற ஊரில் உள்ளவன்

செஞ் சடை = சிறந்த சடை

மதியக் கண்ணியான் = நிலவை ஆபரணமாக  தலையில் அணிந்தவன்

கண்ணுதலான் = நெற்றியில் கண் உள்ளவன்  (நுதல் = நெற்றி)

கணபதீச் சரத்தானே. = கணபதிச்சீரம் என்ற ஊரில் உள்ளவனே

என்கிறார்.

அது என்ன தலைக்கு மேல் உள்ளவன், மனதுக்கு உள்ளே உள்ளவன் ?



இறைவன் இரண்டு இடத்தில் இருக்கிறான் என்று மணிவாசகர் சொல்கிறார்.

தலைக்கு மேலே சில அங்குல உயரத்தில். இதயத்தின் உள்ளே.


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

நெஞ்சுக்கு நேரே இரண்டு கையையும் சேர்த்து கூப்பி வணங்குவது ஒரு முறை. 

தலைக்கு மேலே இரண்டு கைகளையும் உயர்த்தி ஒன்றாகச் சேர்த்து வணங்குவது இன்னொரு  முறை.

தலைக்கு மேலே கையை உயர்த்தி வணங்குபவர்களை உயரச் செய்வான் அவன் என்கிறார்  மணிவாசகப் பெருந்தகை. 

செய்து பாருங்கள். 

நெஞ்சுக்கு நேரே கை கூப்புவதற்கும், தலைக்கு மேலே கை கூப்புவதற்கும் வித்தியாசம்  தெரிகிறதா என்று செய்து பாருங்கள். 

ஞான சம்பந்தரும், மாணிக்க வாசகரும் சொல்லுகிறார்கள். 


Saturday, September 26, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி 


நம் மனம் நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் அமைதியாக இரு என்றால் இருக்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும்.

மனதை கட்டுப் படுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை.

மனம் இருப்பதால்தானே மனிதன் !

பெரிய பெரிய மகான்கள் எல்லாம் ரொம்ப பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள்.

மனம் , அது தன் பாட்டுக்கு  வேலை செய்கிறது. அதனால் தான்  நம்மாழ்வார் முதலிலேயே தன் மனதுக்கு சொல்லி விடுகிறார்...அவனை தொழுது எழு என்  மனமே என்று

உடனே மனம் கேட்கும்,  எதற்கு அவனை நான்  தொழ வேண்டும் என்று ? அவன் என்ன அப்படி என்ன பெரிய ஆளா என்று ?

மனதுக்கு சமாதனம் சொல்கிறார்....அவன் யார் தெரியுமா ...

அதற்கு மேல் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த நலன்களை  கொண்டவன், மயக்கம் இல்லாத மதி நலம் தருபவன் அவன், அமரர்களுக்கு அவன் அதிபதி, நம்  துன்பங்களை எல்லாம் போக்குபவன் அவன்..எனவே அவனை தொழுது ஏழு என் மனமே "

என்று மனதுக்கு சொல்கிறார்.

" உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் 
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "


இங்கே, திருவரங்கதமுதனார், இராமானுஜரைப் பற்றி கூறும் போது ,

"என் மனமே, உன்னை நான் அடி பணிகின்றேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களின் தொடர்பை விடுத்து, இராமானுசரிடம் அன்பு கொள்ளவோர் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு  "

பாடல்

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள்

பேரியல்நெஞ்சே!  = பெரிய மனமே

அடி பணிந்தேனுன்னைப் = உன்னை அடி பணிந்தேன்

பேய்ப் பிறவிப் = பேய் போன்ற பிறவி கொண்ட

பூரிய ரோடுள்ள = மக்களோடு உள்ள

சுற்றம் புலத்திப்  = உறவை நீக்கி

பொருவருஞ்சீர் = ஒப்பற்ற குணங்கள் உடைய

ஆரியன்= ஆரியன்

செம்மை = சிறந்த

இராமானுச = இராமானுசன்

முனிக் கன்பு செய்யும் = முனிவனுக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடை யார் = சீரிய பேறு உடையவர்கள்

அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே = அடிக்கு கீழ் என்னை சேர்ததற்கே.