Wednesday, November 4, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1


திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.




திருவாசகம் - காணவும் நாணுவேன்

திருவாசகம் - காணவும் நாணுவேன் 


ஒரு நண்பரையோ உறவினரையோ நீண்ட நாள் பார்க்காமல் இருந்து பின் பார்த்தால் நமக்குள்ளே ஒரு நாணம் வரும் அல்லவா ?

எவ்வளவு நாள் ஒன்றாகப் பழகி இருந்தோம், நடுவில் இத்தனை நாள் பார்க்காமல், பேசாமல் இருந்து விட்டோமே. ஒரு கடிதமாவது போட்டிருக்கலாம். ஒரு போன் பண்ணி இருக்கலாம் என்று மனதுக்குள் ஒரு சிறு குறு குறுப்பு ஓடும் அல்லவா ? அது போல

இறைவா, என் வாழ்கையில் எத்தனையோ நிகழ்வுகள். அவற்றிற்கு இடையே உன்னை நான் நினைக்கவும் இல்லை, பார்க்க வரவும் இல்லை. ஒரு வேளை நீ நேரில் வந்து நின்றால் , எனக்கு உன்னை பார்க்க கூச்சமாக இருக்கும் என்கிறார் மணிவாசகர்.

அடடா, நமக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறான் இந்த இறைவன். அவனை ஒரு தரம் போய் பார்க்கவில்லையே. இப்போது எந்த முகத்தோடு அவனை சந்திப்பது என்ற நாணம் எனக்கு வரும் என்கிறார் மணிவாசகர்.

பாடல்



காணும தொழிந்தேன் நின்திருப்
பாதங் கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும
தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந்
துருகுந் தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி
வரினுங் காணவும் நாணுவனே.

சீர் பிரித்த பின்

காணும் அது ஒழிந்தேன்  நின் திருப் பாதங்கள் கண்டு கண் குளிரப் 

பேணும் அது ஒழிந்தேன் பிதற்றும் அது ஒழிந்தேன் பின்னை எம் பெருமானே

தாணுவே அழிந்தேன் நின்னை நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால் 

காணும் அது ஒழிந்தேன் நீயினி வரினும்  காணவும் நாணுவனே.


பொருள்

காணும் அது ஒழிந்தேன் = உன்னை பார்பதையும் விட்டு விட்டேன்

நின் திருப் பாதங்கள் = உன் திருவடிகளை

கண்டு = கண்டு

கண் குளிரப் = கண் குளிர

பேணும் அது ஒழிந்தேன் = போற்றுவதையும் விட்டு விட்டேன்

பிதற்றும் அது ஒழிந்தேன் = உன் பெருமைகளை உன்மந்தம் அடைந்து பேசுவதையும் விட்டு விட்டேன்

பின்னை = அப்புறம்

எம் பெருமானே = எம் பெருமானே

தாணுவே = நிலையானவனே

அழிந்தேன்= நான் கெட்டேன்

நின்னை = உன்னை

நினைந்து உருகும் தன்மை = நினைத்து உருகும் தன்மை

என் புன்மைகளால் = என்னுடைய சிறிய குணங்களால்

காணும் அது ஒழிந்தேன் = கண்டு கொள்ளவும் தவறினேன்

நீ இனி  வரினும் = நீ இனிமேல் வந்தாலும்

காணவும் நாணுவனே.= உன்னை நேரில் பார்பதற்கும் நான் வெட்கப் படுவேன்




Tuesday, November 3, 2015

திருக்குறள் - பெரியோர் துணை

திருக்குறள் - பெரியோர் துணை 


வாழ்க்கையில் முன்னேற நாம் எத்தனையோ புத்தகங்களைப் படிக்கிறோம். மேலும் இப்போது இணைய தளங்களில் எவ்வளவோ அறிவு பொக்கிஷங்கள் கொட்டிக் கிட்டக்கின்றன. Wikdipedia , கூகிள் , ப்ளாகுகள் என்று ஆயிரம் ஆயிரம் வலை தளங்கள் அறிவை நம் இல்லதிற்குள்ளேயே கொண்டு வந்து கொட்டுகின்றன.  உலகில் எதைப் பற்றிய தகவல் வேண்டுமானாலும் சில நொடிகளில் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இருந்தும், நம் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப் போனால், பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

ஏன் ? அறிவு ஒரு தீர்வு இல்லையா ? ஞானம் வழி காட்டாதா ?  பெரியவர்கள் எல்லோரும் ஞானத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொல்லி இருக்கிறார்களே. பின் ஏன், இத்தனை அறிவு இருந்தும் நாம் மகிழ்ச்சியாக இல்லை ?

வாழ்கை சிறக்க வேண்டும் என்றால், படிப்பறிவு, புத்தக அறிவு மட்டும் போதாது.

இன்னும் சொல்லப் போனால், சில சமயம் புத்தகங்கள் நம்மை குழப்பக் கூடும்.  ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களைத் தந்து நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

வாழ்கை சிறக்க வேண்டும் என்றால் இரண்டு விசயங்களை சொல்கிறார் வள்ளுவர் - அற வழியில் செல்ல வேண்டும், இரண்டாவது பெரியவர்களின் துணை வேண்டும்.

பாடல்


அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்

அறனறிந்து = அறத்தினை அறிந்து

மூத்த வறிவுடையார் = மூத்த அறிவுடையார்

கேண்மை = நட்பு

திறனறிந்து = அவர்களின் திறமையினை அறிந்து

தேர்ந்து  கொளல் = தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாப்போம்.

அறன் அறிந்து - அதாவது நமக்கு முதலில் அறம் என்றால் என்ன என்று தெரிய வேண்டும். சும்மா முட்டாளாக இருந்து கொண்டு பெரியவர்களின் துணையை நாடுகிறேன் என்றால் அது உதாவது. அறம் என்றால் என்ன அறிந்து கொண்ட பின், அதில் சிக்கல்கள் வரும், குழப்பங்கள் வரும், அதன் முரண்களில் சிக்கித் தவிப்போம். அப்போது, பெரியோர்களின் துணையை நாட வேண்டும்.

இராமன், அறம் என்ன என்பதை வசிட்டரிடம் இருந்து கற்றுக் கொண்டான். அவன் கற்ற அறம் மாதரையும் தூதரையும் கொல்லக் கூடாது என்பது. தாடகை என்ற ஒரு பெண்  இராம இலக்குவனர்களை கொல்ல எதிர் நிற்கிறாள். அவளைக் கொல்லலாமா , கொல்லக் கூடாதா என்ற குழப்பம் வருகிறது இராமனுக்கு.  அப்போது விஸ்வாமித்திரன் சொல்லக் கேட்டான்.

மூத்த அறிவுடையார் = அது என்ன மூத்த அறிவுடையார் ? எதில் மூத்தவர்கள் ? நம் வீடுகளில் வயதானவர்கள் அடிக்கடி சொல்வதை நாம் கேட்டிருப்போம் "நான் வயசுல பெரியவன் டா ...பெரியவங்க சொன்னா கேக்கணும் " என்று. வயதால் மூத்தால் மட்டும் போதாது.  இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார் "அறிவாலும், சீலத்தாலும், காலத்தாலும் மூத்தவர்கள்" என்று. வயது மட்டுமே போதும் என்றால் கடல் ஆமை மூன்னூறு ஆண்டுகள் வாழும், அது சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அறிவும், ஒழுக்கமும் வேண்டும். அவையும் நம்மை விட அவர்களிடம் அதிகம் இருக்கிறதா என்று பார்த்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். சில பேரிடம் அறிவு இருக்கும். வயதும் இருக்கும். ஒழுக்கம் இருக்காது. மூளை பூராவும் குறுக்கு சால் ஓட்டும். குயுக்தி இருக்கும். குள்ளநரித்தனம் இருக்கும். அவர்கள் பெரியவர்கள் இல்லை.


திறன் அறிந்து = ஒருவர் ஒன்றில் பெரியவர் என்றால் அவர் அனைத்து விஷயத்திலும் பெரியவராக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடம் என்ன திறமை  இருக்கிறது என்று அறிந்து (திறன் அறிந்து) பின் அந்த விஷயத்தில் அவர் சொல்வதை கேட்க்க வேண்டும். 

கேண்மை = திறமை உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள் என்று சொல்லவில்லை. அவர்களிடம் நமக்கு வேண்டிய போது சென்று யோசனை கேட்டுக் கொள்ளச் சொல்லவில்லை. அவர்களது நட்பைப் பெற வேண்டும் என்கிறார்  வள்ளுவர். ஏன் என்றால் அவர்கள் நம்மோடு நட்பாக இருந்தால் நம்மிடம் உள்ள   நிறை குறைகள் அவர்களுக்குத் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி  யோசனை சொல்வார்கள். 

தேர்ந்து கொளல் = தேர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை சிறப்பித்து, உயர்வு செய்து, மரியாதை செய்து அவர்களது நட்பை கொள்ள வேண்டும். 

இந்த ப்ளாகை படித்து விட்டீர்கள்தானே ?

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசியுங்கள்.

உங்கள் நட்பு வட்டாரத்தில் அறிவில், ஒழுக்கத்தில், காலத்தில் உங்களை விட  மூத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று. 

நிறைய பேர் இருந்தால் நல்லது.

இல்லை என்றால், ஏன் இல்லை என்று சிந்தியுங்கள். யார் யாரை துணை கொள்ளலாம் என்று  ஒரு பட்டியல் போடுங்கள். அவர்கள் நட்பைப் பெற முயலுங்கள். 

இப்படி பத்து குறள் சொல்லி இருக்கிறார், பெரியாரை துணை கோடல் என்ற அதிகாரத்தில். 

கொட்டி குவித்து விட்டுப் போய் இருக்கிறார்கள். வெட்டி எடுத்துக் கொண்டு வாருங்கள். 

வாழ்கை சிறக்கும். 

சிறக்கட்டும்.


Thursday, October 29, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக



உலகில் எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. அதை வேண்டியே முயற்சியும் செய்கின்றன. இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

துன்பத்திற்கு மூல காரணம் என்ன ?

காமம் - வெகுளி - மயக்கம் எந்த மூன்றும் தான் துன்பத்திற்கு காரணம்.

காமம் புரிகிறது - ஆசை, பற்று. பொருளின் மேல், புகழின் மேல், பெண்ணின் மேல், இப்படி ஆயிரம் பற்றுகள்.

வெகுளி - கோபம். ஆசைப் பட்டது கிடைக்காவிட்டால் கோபம் வருகிறது. கோபத்திற்கு காரணம் ஆசை.

மயக்கம் - எது சரி, எது தவறு / எது உண்மை, எது பொய் / எது நிரந்தரமானது, எது நிரந்திரம் இல்லாதது என்ற குழப்பம் மயக்கம் எனப்படும்.

இந்த மூன்றும் நம் துன்பத்திற்கு காரணம்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்

என்பார் வள்ளுவர்.

இந்த மூன்றும் எப்படி போகும் ?

ஆசாரியனின் பாதங்களைப் பிடித்தால் காமம், வெகுளி , மயக்கம் என்ற இந்த மூன்றும்  போகும். அவை போய் விட்டால் துன்பம் தானாக ஓடிவிடும்.


அமுதனார் சொல்கிறார்.

"எனக்கும் வருத்தம் இருந்தது. ஆனால், அந்த வருத்தம் இப்போது இல்லை.  போய் விட்டது.

எப்படி தெரியுமா ?

வார்த்தைகளுக்கு எட்டாத பெரும் புகழை உடைய நம் கூத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின் , எனக்கு இராமனுஜரின் புகழைப் பாடும் தைரியம் வந்து விட்டது. இனி மேல் இந்த பிறவி என்ற பெரும் வழியைக் கடந்து விடுவேன். எனக்கு இப்போது எந்த வருத்தமும் இல்லை. "


பாடல்

மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.


பொருள் 


மொழியைக் = வார்த்தைகளை 

கடக்கும் = தாண்டி, வார்த்தைகளுக்கு அடங்காத 

பெரும்புகழான் = பெரிய புகழை உடையவன் 

வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகமான மூன்று குறும்பான 

குழியைக் கடக்கும் = குழியை கடக்க உதவும் 

நம் = நம்முடைய 

கூரத்தாழ் வான்  = கூரத்தாழ்வானை 

சரண் கூடியபின் = சரணம் அடைந்த பின் 

பழியைக் கடத்தும் = பழியை கடக்கும் 

இராமா னுசன் = இராமானுசன் 

புகழ் பாடியல்லா = புகழைப் பாடி 

வழியைக் கடத்தல் = வழியைக் கடப்பது 

எனக்கினி யாதும் வருத்தமன்றே. = எனக்கு + இனி + யாதும் + வருத்தம் + அன்றே 

அது என்ன முக்குறும்பு ? 

குறும்பு என்றாலே செய்வதோ சொல்வதோ ஒன்றாக இருக்கும், ஆனால் அதற்குப் பின்னால்  வேறு ஒன்று இருக்கும். இந்த காம வெகுளி மயக்கம் என்ற மூன்றும்   முதலில் நல்லது போலத் தோன்றினாலும், பின்னாளில் வருத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும். 

முந்தைய பாடலில் இராமனுசன் மேல் தனக்கு அன்பில்லை, பக்தி இல்லை என்று கூறினார். பின் கூரத்தாழ்வானின் சரணம் புகுந்த பின், பயம் தெளிந்து விட்டது. இனி இராமானுஜரின் புகழைப் பாடலாம் என்று நினைக்கிறார்.

அது மட்டும் அல்ல, அபப்டி அவர் புகழ் பாடுவதன் மூலம், இந்த பிறவி என்ற நீண்ட பாதையை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வருகிறது. இனி ஒரு கவலை இல்லை என்கிறார். 

ஆசாரியன் மேல் அவ்வளவு பக்தி. அவ்வளவு நம்பிக்கை.


Monday, October 26, 2015

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். தெய்வத்தை தொழாமல், கணவனை தொழுது எழுவாள். அவள் பெய் என்றால் மழை பெய்யும்.

குறள்

தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
‘பெய்’ என, பெய்யும் மழை.

பொருள்

தெய்வம்= தெய்வத்தை

தொழாஅள் = தொழ மாட்டாள்

கொழுநன் = கணவனை

தொழுது எழுவாள் = தொழுது எழுவாள்

‘பெய்’ என, பெய்யும் மழை.= அவள் பெய் என்றால் மழை பெய்யும்

அஹா, இந்த வள்ளுவர் பெரிய ஆணாதிக்க வர்கத்தை சேர்ந்தவராக இருப்பார் போல் இருக்கிறதே.

மனைவி எதற்காக கணவனை தொழ வேண்டும் ? ஏன் கணவன் மனைவியை தொழக் கூடாது ?

பெண் அடிமை தனத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறதே இந்தக் குறள் என்று கொடி பிடிப்பதற்கு முன்னால் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.


இது யாருக்குச் சொல்லப் பட்ட குறள் ?

பெண்ணுக்கா ? கணவனை தொழுது எழு என்று பெண்ணுக்கு சொல்லவா இந்த குறள் முனைகிறது ?

இல்லை, இது கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

உன் மனைவி உன்னை தெய்வமாக நினைத்து தொழ வேண்டும் என்றால், நீ தெய்வம் போல நடந்து கொள் என்று கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

தெய்வம் என்ன செய்யும் ?

படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலையும் செய்யும்.

மனைவிக்கு வேண்டியதை கொடுத்து, அவளை காப்பாற்றி, அவளுக்கு எதிரான எல்லாவற்றையும்  அழிக்கும் கணவன் , அந்த பெண்ணுக்கு தெய்வம் தான்.

அப்படி ஒரு கணவன் வாய்த்தால் , எந்த பெண்ணும் அவனை தொழத் தயங்க மாட்டாள்.

நிஜமாவே இந்த குறளுக்கு இதுதான் அர்த்தமா ?

வள்ளுவர் கணவன் என்ற சொல்லைப் போடவில்லை. கொழுநன் என்ற சொல்லை உபயோகப் படுத்துகிறார்.

கொழு கொம்பு, கொடியை தாங்குவதைப் போல கணவன் மனைவியை தாங்க வேண்டும் என்ற கருத்து வரும்படி கொழுநன் என்ற சொல்லை இங்கே போடுகிறார் வள்ளுவர்.

அது தொழுது எழுவாள் ? எழுந்த பின் தானே தொழ முடியும் ? தொழத பின் எழுந்தாள் என்றால் படுத்துக் கொண்டே தொழுவதா ?

அதாவது, கணவனுக்கு அருகில் மனைவி படுத்திருக்கிறாள்.

விழிப்பு வந்து விட்டது. எழுந்திருக்கவில்லை. கணவனை பார்க்கிறாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். நாள் எல்லாம் உழைத்த அசதி.

நமக்காகத்தானே இத்தனை பாடு படுகிறான், பாவம்,  என்று அவள் மனதில் ஒரு  அன்பு பிறக்கிறது அவன் மேல். அவளை அறியாமலேயே அவள் கைகள் அவனை  வணங்குகின்றன. இது நீ பெரியவன், நான் தாழ்தவள் என்பதால் வந்தது அல்ல.

எனக்காக நீ எவ்வளவு கஷ்டப் படுகிறாய் என்ற நன்றி உணர்வில் வந்த தொழுதல்.


அதெல்லாம் போகட்டும், கடவுளை தொழ மாட்டாள் என்று எதுக்குச் சொல்லணும்  ?

கணவன் அருகில் படுத்து இருக்கிறான். கணவனும் எழவில்லை. அவளும் இன்னும் எழுந்து நீராடி தூய்மையாக வில்லை. எனவே தெய்வத்தை தொழ முடியாது. கணவன் அருகில் தானே இருக்கிறான் ...அவனை தொழுகிறாள்.


அவ்வளவு அன்யோன்யம் அவர்களுக்குள்ளே.

சரி, அது போகட்டும், அது என்ன பெய் எனப் பெய்யும் மழை ? ஊருக்குள் போய் எந்தப்  பெண்ணிடமாவது மழை பெய்ய சொல்லி பாருங்கள். எந்த பெண் சொன்னாலும் மழை  பெய்யாது. அப்படி என்றால் வள்ளுவர் அப்படி ஒரு உதாரணத்தை ஏன் போட்டார் ?

மழை பெய்தும் கெடுக்கும், காய்ந்தும் கெடுக்கும். வேண்டிய நேரத்தில் பெய்யாது. வேண்டாத நேரத்தில் பெய்து துன்பத்தை கொடுக்கும்.

நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது மழை பெய்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும் ?

அந்த அளவு இனிமையானவள் பெண் - பெய் என்றால் பெய்யும் மழை எவ்வளவு இனிமையோ  அது போன்றவள் பெண்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் ஆணாதிக்க சிந்தனை கொண்டவரா ?

ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்து எடுத்து குறளை வடித்து இருக்கிறார்.








Friday, October 23, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால்

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால் 


நம்மைப் பார்த்து "நீங்கள் யார் " என்று கேட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நம்முடைய வீர தீர பிராதாபங்களை எடுத்து  அடுக்குவோம். நம்மிடம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லாவிட்டாலும்,  நம் பரம்பரையில்  சில பல தலைமுறைகளுக்கு முன்னால் யாராவது எதையாவது சாதித்து இருந்தால் அதைச் சொல்லி நம்மை அதோடு  தொடர்பு படுத்தி பெருமை கொள்வோம்.

அடக்கம் என்பது அணுவளவும்  கிடையாது.

ஆரவமுதனார் சொல்கிறார்

"சொல்லையும் பொருளையும் இசையோடு சேர்த்து, அன்போடு இராமனுஜரை எத்தனையோ பேர் பாடி இருக்கிறார்கள். எனக்கு புத்தி இல்லாமல், கவிதை எழுதி பழகும் நான், இந்தப் பாவி,  இராமானுஜரின் பெருமைகளை பாட முயல்கின்றேன் "

என்ன ஒரு அடக்கம் 


பாடல்

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.


பொருள்

இயலும் = சொல்லும் (சப்தமும்)

பொருளும் = சொல்லின் பொருளும்

இசையத் தொடுத்து = இசையோடு சேர்த்து

ஈன் கவிகளன்பால் = ஈன் + கவிகள் + அன்பால் = ஈனுகின்ற என்றால் பெற்று  எடுக்கின்ற   என்று பொருள். பசு கன்று ஈன்றது என்று சொல்லுமாப் போல். கவிதை  மனதில் கருக் கொண்டு, நாளும் வளர்ந்து பின் ஒரு குழந்தை பிரசவத்தில்  வருவது போல கவியின் மனதில் இருந்து கவிதை பிறக்கிறது. அப்படி, வரும் கவிதையும் , அன்பால்  வந்தது.

மயல்கொண்டு = ஆசை கொண்டு

வாழ்த்தும் = வாழ்த்தும்

இராமா னுசனை = இராமானுஜரை

மதியின்மையால் = அறிவு இல்லாமையால்

பயிலும் கவிகளில் = படித்துக் கொண்டிருக்கும் கவிதையில்

பத்தியில் லாதவென் = பக்தி இல்லாத என்

பாவிநெஞ்சால் = பாவி நெஞ்சால்

முயல்கின் றனன் = முயற்சி செய்கிறேன்

அவன் றன் = அவன் தன்

பெருங் கீர்த்தி = பெரிய புகழை

மொழிந்திடவே = சொல்லி விடவே .


என்னிடம் பக்தியும் இல்லை, அன்பும் இல்லை, கவி பாடும் திறமையும் இல்லை என்று எவ்வளவு தன்னடக்கத்துடன் கூறுகிறார்.






Tuesday, October 20, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும்

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும் 


எதைச் செய்தாலும் குற்றம் காண்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். நல்லவற்றை விட்டு விட்டு , குறைகளையே தேடி கண்டு கொள்ளும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற = எனக்கு உற்ற = எனக்கு கிடைத்த

செல்வம் = செல்வம்

இராமா னுசனென்று = இராமானுஜன் என்று

இசையகில்லா = ஏற்றுக் கொள்ளாத

மனக்குற்ற = மனதில் குற்றம் உள்ள

மாந்தர் = மக்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் புகழே

அவன் = இராமானுஜரின்

மன்னிய = நிலைத்த

சீர் = சிறந்த

தனக்குற்ற = அவனுக்கு உரிய

அன்பர் = அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய திரு நாமங்களை

சாற்றுமென்பா = சாற்றும் + என் + பா = சொல்லும் என் பாடல்கள்

இனக்குற்றம் = இந்த குற்றங்களை

காணகில் லார் = காண மாட்டார்கள்

பத்தி = பக்தி

ஏய்ந்த  இயல்விதென்றே.= ஏற்ற இயல்பு இது என்று சொல்லுவார்கள்

ஏன் பழி போடுகிறார்கள் ? இந்த பாடல்களில் அப்படி என்ன பழி சொல்லும் படி இருக்கிறது ?


அமுதனார், வேதம், சாஸ்திரம், போன்றவற்றில் சொன்னவைகளை எல்லாம் விட்டு விட்டார். இராமானுசர் ஒருவரே எல்லாம் என்று அவரைப் பற்றிக் கொண்டார். ஆசாரியனே எல்லாம் , ஆண்டவன் கூட கிடையாது என்று அவர் கூறியதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பு இல்லை.

ஆசாரியன், குரு இல்லாமல் இறைவனை, உண்மையை அறிய முடியாது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று பாடினார் அருணகிரிநாதர்.

தாயாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

தந்தையாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

ஏன் குருவாய் வருவாய் என்றார் என்றால் குரு தான் நமக்கு இறைவனை காட்ட முடியும்.

தாய்தான் நமக்கு தந்தையை காட்டுகிறாள். "அப்பா பாரு..." என்று பிள்ளைக்கு அப்பாவை அறிமுகப் படுத்துபவள் தாய். தாய் சொல்லாவிட்டால் , தந்தை யார் என்றே தெரியாமல் போய் விடும்.

தந்தை, கைபிடித்து அழைத்துப் போய் பள்ளியில் சேர்த்து குருவை அறிமுகப் படுத்துகிறார். எனவே தான் "தந்தையோடு கல்வி போம்" என்று சொன்னார்கள்.

குருதான், நமக்கு இறைவைனை அறிமுகப் படுத்த வேண்டும்.

அப்படி இராமானுசரையே எல்லாம் என்று கொண்டாடிய என் பாடல்கள் பிழை என்று சொன்னால்  அதுவே கூட அதற்கு புகழ் தான் என்கிறார்.

அது எப்படி பழியே புகழாகும் ?

என்ன பழி போடுகிறார்கள் - ஆசாரியனே எல்லாம் என்று இந்த அமுதனார் கூறுகிறார், ஆண்டவனே ஆசாரியனுக்கு அடுத்தபடிதான் என்று கூறுகிறார் என்றெலாம்  பழி போடுவார்கள்.

அமுதனாருக்கு சந்தோஷம். அது தானே அவருக்கு வேண்டும். இப்படி எல்லோரிடமும் போய் சொல்லி ஆசாரியனின் புகழை  பரப்ப இந்த பழி கூட உதவும் என்கிறார்.

பக்தி உள்ளவர்களுக்கு அது புரியும் என்கிறார். பக்தி உள்ளவர்கள், இராமானுசரின் மேல் அன்பு கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் குறைகளை காண மாட்டார்கள் என்கிறார்.

மாலுமி இல்லாத கப்பல், ஓட்டுனர் இல்லாத வண்டி போல ஆகிவிடும் ஆசாரியன் இல்லாத  வாழ்கை.