Thursday, March 10, 2016

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம்

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம் 




அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்


உலகத்தில் ஒரே ஒரு கதை தான் உண்டு. மீதி அத்தனை கதையும் அந்த மூலக் கதையின் கருவை எடுத்துக் கொண்டு, பெயர்களை, சூழ்நிலைகளை மாற்றி மாற்றி எழுதுவதுதான்.

அது என்ன கதை.

ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான். அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ஒரு நாள் அவனுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்தது. தன்னுடைய நல்ல குணங்களைக் கொண்டு அவன் அந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தான்.

இந்த ஒரு கதை தான் உண்டு.

அது இராமாயணமாகட்டும் , பாரதமாகட்டும், எந்த தமிழ், ஆங்கிலப் படமாக இருந்தாலும் , இது ஒன்று தான் கதை.

கதைக்கு ஒரு கதாநாயகன் இருப்பான், அவனுக்கு துணையாக ஒரு நாயகி, அவர்களுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு ஒரு எதிரி அல்லது வில்லன். வில்லனின் கொடுமைகளை வென்று எடுப்பதுதான் கதை.

ஆனால்,

இதிலிருந்து மாறுபட்டு, மிக மிக மாறுபட்டு எழுதப் பட்ட கதை சிலப்பதிகாரம்.

உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

கோவலன், கண்ணகியை மணந்தான். பின் மாதவியிடம் காதல் வசப்பட்டான். செல்வத்தை இழந்தான். பின் கோவலனும் கண்ணகியும் மதுரை சென்றார்கள். பொய் பழி சுமத்தப் பட்டு கோவலன் கொலையுண்டான். அதனால் சினந்த கண்ணகி மதுரையை தீகிரையாக்கினாள்.

கோவலன் கதாநாயகன்.
கண்ணகி கதாநாயகி.

வில்லன் யார் ?

கோவலனுக்கு வில்லன் யார் ? மாதவியா ? அவள் மேல் அவன் கொண்ட காதலா ?  தான் தப்பிக்க கோவலனைக் கை காட்டி விட்ட பொற்கொல்லனா ? தவறான தீர்ப்பு சொன்ன பாண்டியனா ?

யாரும் இல்லை. கோவலன் அங்கு வருவான் என்று போர்கொல்லன்னுக்குத் தெரியாது. அவனுக்கு கோவலன் மேல் பகை இல்லை.

விதி.

விதிதான் வில்லன் என்று கொள்ளலாம்.

நம் தமிழ் இலக்கியம் விதியை வெகுவாக நம்பி இருக்கிறது.

ஊழ் என்று அவர்கள் அழைத்தார்கள். வினை என்றும் கூறப் பட்டது.

திருக்குறள், கம்ப இராமாயணம் என்று எங்கு பார்த்தாலும் விதியின் பலம் நம்பப் பட்டது.


அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கை எழுத்தே என்பார் அருணகிரிநாதர்.

விதியை நம்பாத  இலக்குவன் கூட பின்னாளில், சீதை அவனை கடிந்து பொன் மான் பின்னே அனுப்பிய   போது , விதியின் போக்கை எண்ணி நொந்து சென்றான்.

சிலப்பதிகாரம் மூன்று அறத்தை முன்னிறுத்தி காப்பியம் சொல்கிறது.


1. அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
2. உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
3. ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.  அரசியல் என்றால் இந்த பொறுப்பும் அரசியல் தான். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவது மட்டும் அரசியல் அல்ல.

அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது.  உயிர்களைக் காப்பது.

அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ?  அரசன் தவறு செய்தால் அவனை யார்   தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும்.  இதை எல்லா சட்ட சபையிலும், பார்லிமென்ட்டிலும், நிறுவனகளின் தலைமை இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.

நல்ல குணம் உள்ள பெண்களை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். பெண் குணம் கெட்டால் சமுதாயம் சீரழிந்து போகும். எனவே, ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால், அது நல்ல பெண்களை போற்றியே ஆக வேண்டும்.

ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும்.

இந்த மூன்று கருத்துக்களை கொண்டு பின்னப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.

அதிலிருந்து சில பாடல்களை வரும் நாட்களில் சிந்திப்போம்.

(for other poems , http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_10.html )

Wednesday, March 9, 2016

அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு

 அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு 


பாடல்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை = குயில் போல இருப்பாள் கடம்பா அடவியில் (அடவி என்றால் காடு)


கோல வியன்  = அழகிய

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை = மயில் போல இருப்பாள் இமய மலையில்

வந்து உதித்த  = வந்து உதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில் = மலையின் மேல் வெயில் போல இருப்பாள்

கமலத்தின்மீது அன்னமாம் = தாமரை மலரின் மேல் தோன்றும் அன்னப் பறவை போல இருப்பாள்

கயிலாயருக்கு = கயிலை மலையில் இருக்கும் சிவனுக்கு

அன்று இமவான் அளித்த கனங்குழையே = அன்று ஒரு நாள் இமவான் அளித்த

பாடல் இவ்வளவுதான். 

இதில் என்ன இருக்கிறது ? 

மயில் போல, குயில் போல, அன்னம் போல , வெயில் போல, அன்னம் போல இருக்கிறாள்  அபிராமி என்று கூறுகிறார். இதில் புதுமையான விஷயம் ஒன்று இல்லை என்றே தோன்றும்.

பொறுங்கள். 

மிக மிக ஆழமான, நுண்ணியமான செய்தியை கூறுகிறார் பட்டர்.

நாம் பேசும் போது , அந்த சப்தம் நமக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கிறது  அல்லவா ?

நாம் மனதுக்குள் பேச முடியும் அல்லவா ? மாணவர்களை மனதுக்குள் படியுங்கள் என்று சொன்னால் அவர்கள் படிப்பார்கள். ஒவ்வொரு எழுத்தாய் , ஒவ்வொரு வார்த்தையாய் வாசிப்பார்கள்.  அந்த வார்த்தைகளின் சப்தம் அவர்களுக்கு கேட்க்கும் , அருகில் இருப்பவர்களுக்கு கேட்க்காது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம்.  அக்ஷரம் இல்லாமல் வார்த்தைகள் இல்லாமல்  சொல்ல வேண்டியதை நினைக்க முடியும். ஒலி வடிவம் இல்லை ஆனால்  அந்த வார்த்தைகள் தரும் அர்த்தம் மொத்தமும் உள்ளே ஓடும். 

அதற்கும் முந்தைய நிலை இருக்கிறது. அந்த நிலையில் சப்தம் தோன்றும்.  சொல்பவருக்கே கூட  தெரியாது. 

இதை  சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நாலு விதமான நிலை என்று சொல்லுவார்கள். 

சூக்குமை...சூட்சுமமானது. நமக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது. மூலாதாரத்தில்  இது தோன்றும். 

அடுத்த நிலை பைசந்தி, வார்த்தை முழுதுமாக உருவாவிட்டாலும் அது தோன்றுவது  தெரியும். நாபிக் கமலத்தில் இருக்கும் இது. 

அடுத்த நிலை மத்திமை - தொண்டையில் இருப்பது. மூச்சுக் காற்றுடன் சேர்ந்து ஒலி வடிவம் இருக்கும். நமக்கு கேட்கும். மற்றவர்களுக்கு கேட்காது. ஆரூடம் சொல்பவர்கள் இந்த ஒலியை கேட்க்கும் சக்தி படைத்தவர்கள். நாம் வாய் விட்டு சொல்லாமலே மனதுக்குள் ஒலிக்கும் அந்த ஒலியை அவர்களால் கேட்க முடியும். நாம் நம்மைப் பற்றி நினைப்பதை, கேட்க நினைப்பதை அவர்கள் நம்மிடம் இருந்தே கேட்டுக் கொள்ளவார்கள். நாம் நினைப்போம், இது எப்படி  அவர்களுக்குத் தெரிந்தது , நாம் சொல்லவே இல்லையே என்று.  
மந்திரங்களை இந்த இடத்தில் சொல்ல முடியும். அதற்கு அசபா மந்திரம் என்று பெயர். 

இதைத்தான் ஔவையார் 

குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’

என்பார் 

வைகரி - இறுதியாக வெளிப்படுவது. நமக்கும் மற்றவர்களுக்கும் கேட்கும். 

சூக்குமையில் இருக்கும் போது , வாக்கு ஒளி வடிவில் இருக்கும்.    மேலே எழுந்து வரும் போது அது ஒலி வடிவம் பெறும்.


குயிலாய் இருக்கும் = குயில் கூவுவது கேட்கும். இது வெளிப்பட்ட சப்தம். குயில் இருக்கும் இடம் தெரியாது. ஒளி வடிவம் இல்லை.


மயிலாய் இருக்கும் = மயில் பார்பதற்கு உகந்தது.  அழகாய் இருக்கும். ஒளி வடிவமானது.


வந்து உதித்த = உதித்தல் என்றால், இருப்பது வெளிப்படுவது. சூரியன் உதிப்பான். சூரியன் தோன்றினான் என்று சொல்லக் கூடாது.

வெயிலாய் இருக்கும் = மயில் சற்று மயக்கமான உருவைத் தரும். நீளமும், பசுமையும், இடை இடை வெளியும் விட்டு, அசையும் போது அதன் அழகு தெரியும், ஆனால் முழுவதும் தெரியாது. ;ஆனால், வெயில் தெளிவாகத் தெரியும்.

கமலத்தின்மீது அன்னமாம் = ஞான முக்தி அடைந்தவர்களை அன்னம் என்று குறிப்பிடுவார்கள். அன்னத்திற்கு வட மொழியில் ஹம்சம் என்று பெயர்.

இராம கிருஷ்ண பரம ஹம்சர்.

ஞானம் என்பது உண்மையையும் , உண்மை அல்லாததையும் கண்டு தெளிவது. எனவே ஞானிகளை ஹம்சர் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த உண்மைகளை அறியும் போது ஞானம் பிறக்கும் என்று பட்டர் கூறுகிறார்.


இந்த மயில் , குயில் எல்லாம் உண்மையா ? வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

வானத்தில் மயில் ஆடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய், மயில் குயில் ஆச்சுதடி  


என்பார் குதம்பைச் சித்தர்.

அபிராமி அந்தாதி ஒரு ஞானப் பெட்டகம்.

ஆழ்ந்து படிக்க வேண்டும்.


For other entries: http://interestingtamilpoems.blogspot.com/2016/03/blog-post_9.html

Monday, February 29, 2016

திருக்குறள் - இல்வாழ்வான் கடமை - பாகம் 3

திருக்குறள் - இல்வாழ்வான் கடமை - பாகம் 3


பிரமச்சாரி, வானப்ரஸ்தம் சென்றவன், துறவிகள் என்று முதலில் காக்க வேண்டிய மூவரைச் சொன்னார்.

அடுத்தது,

துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்ற மூவரைச் சொன்னார்.

அடுத்த குறளில் 5 பேரைச் சொல்கிறார்.


பாடல்

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

பொருள்

தென்புலத்தார் = தென் திசையில் உள்ளவர்கள்

தெய்வம் = தெய்வம்

விருந்து = விருந்து

ஒக்கல் = சுற்றத்தார்

தான் = தான்

என்று ஆங்கு = என்று அங்கு

ஐம்புலத்து ஆறு = ஐந்து இடங்களில் உள்ளவர்களை

ஓம்பல் தலை = காப்பது சிறந்தது


ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தென் புலத்தார் - இது இறந்த நம் முன்னோர்களைக் குறிக்கும். அவரக்ளுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் போன்ற  கடமைகளைச் செய்ய வேண்டும்.

தெய்வம் = தெய்வத்தை போற்றுவது, கோவில்களில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு உதவி செய்வது இதில் அடங்கும்.

விருந்தினர் = விருந்து என்றால் புதியது என்று அர்த்தம். புதியதாய் தன் இல்லத்திற்கு வந்தவர்களை போற்றி உபசரித்தல் இல்லறத்தில் உள்ளவனின் கடமை. இந்த விருந்து இரண்டு வகைப் படும். ஒன்று தெரிந்து வருவது. இன்னொன்று தெரியாமல்  வருவது.  தெரியாமல் என்றால் நமக்கு முன் பின் தெரியாதவர்  நம் இல்லத்திற்கு வந்தால் அவரை வரவேற்று உபசரிக்க வேண்டியது இல்லறத்தில் உள்ளவனின் கடமை.


ஒக்கல் = சுற்றத்தார். உறவினர்களுக்கு வேண்டிய , முடிந்த உதவிகளைச் செய்வது. இந்த சுற்றத்தில் மனைவியும், பிள்ளைகளும் கூட அடங்குவர்.

அப்படி என்றால்   நான் என் மனைவிக்கு ஒரு புடவை வாங்கித் தந்தால் அது ஒரு  அறமா என்றால் அதுவும் ஒரு அறம் தான்.

மனைவி மற்றும் பிள்ளைகளின் நியாமான ஆசைகளை தேவைகளை நிறைவேற்ற வேண்டியது  ஒரு இல்லறத்தானின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர்.  மனைவி என்பவள் நம் தேவைக்கு இருப்பவள் என்று இல்லாமல், அவளின் தேவைகளையும்  பூர்த்தி செய்வது அறத்தின் பாற்பட்டது.

தான் = தனக்குத் தானே செய்து கொள்வது. இது தான் உள்ளதிற்குள்ளேயே ஆழ்ந்த  சிந்தனை கொண்ட கருத்து. ஒருவன் தனக்குத் தானே வேண்டியவற்றை, நல்லனவற்றை செய்து கொள்ளுதலும் அறமே என்கிறார் வள்ளுவர்.

அது எப்படி அறமாகும் ?

மேலே சொல்லப் பட்ட அனைத்து அறங்களையும் செய்வதற்கு இல்லறத்தில் இருப்பவன்  நல்ல நிலையில் இருந்தால் தானே முடியும். அவன் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தால் அவன் எங்கே விருந்தினரை உபசரிக்க முடியும், உறவினர்களுக்கு உதவ முடியும் ? எனவே ஒருவன் தன்னைத் தான் பேணி பாதுகாத்துக் கொள்வதும் இல்லறமே.

அது சுயநலம் இல்லை. இல்லறத்தில் இருப்பவனே அறத்தின் ஆணி வேர். அவன் நன்றாக இருந்தால் தான் சமுதாயத்தில் அறம் நிலைக்கும். எனவே, தன்னையும்  சேர்த்துச் சொன்னார் வள்ளுவர்.

திருக்குறளில் மூன்று பாலை வரிசை படுத்திய  முறையாகட்டும்,அவற்றுள் அதிகாரங்களை  வரிசைப் படுத்திய முறையாகட்டும், ஒவ்வொரு அதிக்கரத்திலும்  உள்ள குறள்களை வரிசைப் படுத்திய முறையாகட்டும், ஒவ்வொரு குறளிலும் உள்ள வார்த்தைகளை வரிசைப் படுத்திய முறையாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு முறைமை இருப்பதைக்  காணலாம்.

இங்கே 5 பேரைச் சொன்னார்.

தென் புலத்தார்
தெய்வம்
விருந்து
சுற்றம்
தான்

என்ற ஐந்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு காரணம் இருக்கிறது. ஏன் இந்த வரிசையை மாற்றிச் சொல்லி இருக்கக் கூடாதா ?

தென் புலத்தாரும், தெய்வமும் கண்ணுக்குத் தெரியாதவர்கள். ஒரு நம்பிக்கையில்  செய்வது தான். யாருக்குத் தெரியும் அவர்களுக்குச் செய்யும் தர்மங்கள் அவர்களை சென்று அடையும் என்று.

சுற்றமும், தானும் ...இவர்களுக்குச் செய்யும் தர்மத்தில் ஒரு சுயநலம் இருக்கிறது. என் அண்ணன் தம்பிக்கு, அக்காள் தங்கைக்கு, மனைவி மக்களுக்கு நான் செய்வது ஒரு சுயநலத்தின் பாற்பட்டது.

எனவே இந்த இரண்டுக்கும் மத்தியில்  விருந்தை வைத்தார்.

மேலும், தனக்குச் செய்து கொள்ள வேண்டியதை கடைசியில் வைத்தார். இல்லை என்றால், தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மம் என்று சொல்லி, இன்னும்  எனக்கே மிஞ்சவில்லை, நான் எப்படி மற்றவர்களுக்குச் செய்ய முடியும் என்று  செய்யாமலே இருந்து விடுவான்.

சுயநலம் வேண்டும், ஆனால் அது கடைசியில் வர வேண்டும்.

பிதுர்களுக்கு, தெய்வத்திற்கு, விருந்தினருக்கு, சுற்றத்தாருக்கு செய்த பின் தனக்கு செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உணவு கொஞ்சம் கம்மியாக இருந்தால், முதலில் விருந்தினருக்கு தர வேண்டும். அவர் உண்டது போக மீதம் இருந்தால் மனைவி மக்களுக்குத் தர வேண்டும். அவர்கள் உண்ட பின் மீதம் இருந்தால் , எவ்வளவு இருக்கிறதோ அதை தான் உண்ண வேண்டும்.

முதலில் எனக்குப் போடு என்று உள்ளதை எல்லாம் உண்டு முடித்து விடக் கூடாது.

இல்லறம் என்று சொல்லும் போது கணவனும் மனைவியும் சேர்ந்ததுதான் இல்லறம்.

எனவே, கடைசியில் உள்ளதை கணவனும் மனைவியும் பகிர்ந்து உண்ணலாம்.

இப்படி அறத்தை சொன்ன இன்னொரு மொழி இருக்குமா உலகில் ?


அது என்ன "ஐம்புலத்து ஆறு"

புலம் என்றால் இடம். இந்த ஐந்தும் அறம் செய்யும் இடங்கள். ஆறு என்றால் வழி. இந்த ஐந்து இடத்திலும் நல்ல வழியில் அறம் செய்ய வேண்டும்.

தனக்கு உள்ள வருமானத்தை ஐந்தாகப் பிரித்து இந்த வழியில் செலவு செய்ய வேண்டும். அப்படி என்றால் அரசனுக்கு தரவேண்டிய வரியை ஏன் வள்ளுவர் சொல்லாமல் விட்டார் ? வரி செலுத்துவது தர்மம் இல்லையா என்று கேட்டால், நாம் செலுத்தாவிட்டாலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். தர்மம், அறம் என்பது நாம் மனம் வைத்துச் செய்வது. வரி, நாம் மனம் வைக்காவிட்டாலும், அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதை இந்த பட்டியலில்  சேர்க்கவில்லை.

இல்லறம் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, எத்தனை சமுதாய நோக்கு உடையது என்று குறள் காட்டுகிறது.

அறிவோம். அறியத் தருவோம்.










Saturday, February 27, 2016

திருக்குறள் - இல் வாழ்பவனின் கடமை

திருக்குறள் - இல் வாழ்பவனின் கடமை 


முந்தைய குறளில் பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவர்கள், துறவிகள் இந்த மூவருக்கும் உதவி செய்வது இல்லறத்தில் ஈடு பட்டவர்களின் கடமை என்று கூறப் பட்டதைப் பார்த்தோம்.

அடுத்த மூன்று கடமைகளை இங்கு சொல்கிறார் வள்ளுவர்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

துறந்தார்
துவ்வாதார்
இறந்தார்

ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

துறந்தார் - அது தான் முந்தைய குறளிலேயே சொல்லியாச்சே துறவிகளுக்கு உதவி செய்யணும்னு. அப்புறம் என்ன மீண்டும் துறந்தார்னு இந்த குறள்ல வேற ?

முந்தைய குறள் , தானே துறந்தவர்கள்.

இந்த குறளில் பிறரால் துறக்கப் பட்டவர்கள், அல்லது கை விடப் பட்டவர்கள். யாருமற்றவர்கள். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது ஒவ்வொரு இல்லறத்தானின் கடமை ஆகும்.

அடுத்தது துவ்வாதார். அது என்ன துவ்வாதார் ?

உயிர்கள் எப்போதும் இன்பங்களை துய்க்க விரும்பும். இன்பங்களை அனுபவிக்க விரும்பும். இன்பத்தை விரும்பாத உயிர் எது. அப்படி இன்பத்தை அனுபவிக்க  முடியாதவர்கள் துவ்வாதார்.


அது யார் இன்பத்தை அனுபவிக்க முடியாதவர்கள் என்றால் அது ஒரு பட்டியல் போடலாம்.

முதலாவது, வறுமை உற்றவர்கள். கையில் செல்வம் இல்லாமையால் இன்பங்களை அனுபவிக்க முடியாமல் இருப்பவர்கள். இன்பங்கள் என்றால் ஏதோ ஆடம்பரமான   இன்பங்கள் அல்ல. நல்ல உணவு, நீர், சுத்தமான உடை, இருக்க இடம், பாதுகாப்பு போன்ற அடிப்படை இன்பங்களை கூட அனுபவிக்க முடியாதவர்கள்.

நம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை பள்ளியில் படிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .  பள்ளியில் கட்ட வேண்டிய கட்டணத்தை கட்ட பணம்  இல்லாமல் இருக்கலாம். கற்பதனால் வரும் இன்பத்தை அந்தக் குழந்தை பெற முடியாமல் போகலாம். அதற்கு உதவி செய்வது.

இரண்டாவது, உடல் ஊனம் அடைந்தவர்கள். கண் இல்லை என்றால் நல்ல காட்சியை பார்க்க முடியுமா? தெருவில் பயமின்றி நடக்க முடியுமா, கால் இல்லாதவன் , நோய் வாய் பட்டவர்கள் இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவர்களுக்கு  இல் வாழ்வான் துணையாக இருக்க வேண்டும்.

மூன்றாவது, மன நோய் கொண்டவர். மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள், அதீதமான துக்கத்தால் மன நிலை  பாதிக்கப் பட்டோர் போன்றோருக்கு இல்வாழ்வான்  துணை செய்ய வேண்டும்.

அடுத்ததாக , இறந்தார்.

இறந்தாருக்கு எப்படி உதவி செய்ய முடியும் ?

அதாவது, அனாதையாக இறந்தவருக்கு ஈமக் கடன் செய்ய வேண்டியது ஒரு இல்லறத்தானின் கடமை.

சடாயு இறந்த போது , அவருக்கு இராமன் அவருக்கு ஈமக் கடன் செய்தான். சடாயுவை தன் தந்தையாகவே நினைத்து அவருக்கு ஈமக் கடன் செய்தான்.


இந்தனம் எனைய என்ன கார் 
     அகில் ஈட்டத்தோடும் 
சந்தனம் குவித்து, வேண்டும் 
     தருப்பையும் திருத்தி, பூவும் 
சிந்தினன்; மணலின் வேதி 
    தீது அற இயற்றி, தெண் நீர் 
தந்தனன்; தாதை தன்னைத் தடக் 
     கையான் எடுத்துச் சார்வான்,

மீதிக் கடமைகளை அடுத்த குறளில் பார்ப்போம்.


Friday, February 26, 2016

திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?

திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?


இது என்ன கேள்வி ?

கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.

இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.

திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?

இருக்கிறது.

பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.


திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.

இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.

அது என்ன பதினொரு கடமைகள் ?

இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?

மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.

முதல் குறள்

பாடல்

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்

இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு

நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக

நின்ற துணை = துணையாக

அது யார் மூன்று பேர் ?

- பிரமச்சாரி
-  இல்லத்தைத் துறந்து மனைவியோடு வனம் சென்றவன்
- முற்றும் துறந்த துறவி

இந்த மூன்று பேருக்கும், இல்லத்தில் மனைவியோடு இருப்பவன் உதவி செய்ய வேண்டும்.

சரி, ஒரு பிரமச்சாரி தவறான வழியில்  போகிறான் என்றால் அதற்கும் உதவி செய்ய வேண்டுமா ?

இல்லை,

"நல்லாற்றின் "

நல்ல வழி என்று பொருள். அவர்கள் நல்ல வழியில் போக உதவி செய்ய வேண்டும்.

திருமணம் முடிக்காத ஒருவன் உங்கள் இல்லத்திற்கு வந்தால், அவனுக்கு உணவு  அளிக்க வேண்டியது உங்கள் கடமை, நீங்கள் இல்லறத்தில் இருந்தால்.

திருமணம் முடித்தவன் , திருமணம் முடிக்காத ஒருவன் வீட்டுக்குப் போனால் அந்த பிரமச்சாரி இவனுக்கு உணவு அளிக்க வேண்டியது கடமை இல்லை.

இதை வேறு ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

நம் குழந்தைகள் படிப்பிற்காக அல்லது புதிதாக வேலை பொறுப்பை ஏற்று வெளி நாட்டில்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை யாராவது  பொறுப்பாக பார்த்துக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா ?

அதே போல், நாம் இருக்கும் இடத்தில் , நமக்குத் தெரிந்த பிரமசாரிகள் யாராவது இருந்தால்  அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

அடுத்தது இல்லத்தை துறந்த கணவன் மற்றும் மனைவி. இவர்களையும் ஒரு இல் வாழ்வான்  காக்க வேண்டும்.

ஏன் ?

வயதான தம்பதிகளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்கலாம். அல்லது பிள்ளைகளால் கை விடப் பட்டவர்களாக  இருக்கலாம் அல்லது பிள்ளைகள் வெளி நாட்டில்  இருக்கலாம். அப்படிப்பட்ட தம்பதிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள  முடியாதவர்கள். அவர்களை இல்வாழ்வான் பாதுகாக்க வேண்டும்.

நம் வீட்டுக்கு அருகில் அப்படி யாராவது இருந்தால், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை  செய்ய வேண்டும்.

மூன்றாவது, முற்றும் துறந்த துறவிகள்.

துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த மதிப்பு தந்து வந்திருக்கிறது.

ஏன் என்றால், ஒரு துறவி தான் சுயநலக் கலப்பு இல்லாமல், அறத்தை மக்களுக்கு  எடுத்துச் சொல்ல முடியும். அறம் வாழ வேண்டும் என்றால் துறவிகளை  போற்ற வேண்டும்.

இது முதல் மூன்று கடமைகள்.

இன்னும் வரும்.


  

Thursday, February 11, 2016

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்




நின்ற சொல்லரநீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.


தலைவன் உன்னை விட்டு பிரிந்து போகப் போகிறான் என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

அவர்களுக்குள் இன்னும் திருமணம் ஆகவில்லை. காதல்தான்.

அவனுக்கு, அவள் மேல் உள்ள காதலை விட, அவளுக்கு, அவன் மேல் உள்ள காதல்  அதிகம். அது மட்டும் அல்ல, அவன் தன்னை அளவு கடந்து நேசிக்கிறான்  என்றும் அவள் நினைக்கிறாள். மேலும், அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியாது என்பதையும் அவன் அறிவான் என்றும் நினைக்கிறாள்.


இவை எல்லாம் உண்மையா ? தெரியாது.

அவன் தன்னை விட்டுப் பிரிந்து போகப் போகிறான் என்று சொன்னவுடன், தலைவி  உருகுகிறாள்.

அப்படியெல்லாம் இருக்காது.

"அவன் எப்போதும் என் தோள்களை விட்டுப் பிரிய மாட்டான். இந்த உலகுக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவன் எனக்கு முக்கியம் என்பதை அவன் அறிவான். அவனை விட்டுப் பிரிந்தால், நான் வாடிப் போய்விடுவேன் என்பது அவனுக்குத் தெரியும். எனவே  அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான்"

சீர் பிரித்த பின்

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் 
என்றும் என் தோள் பிரிவு அறியலரே 
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின்ற்றி அமையா உலகம் போலத்
தம் இன்றி அமையா நன்மை நயந்து அருளி 
நறு நுதல் பசத்தல் அஞ்சி 


சிறுமை உறுபவோ செய்வது அறியலரே 

பொருள் 

நின்ற சொல்லர் = நிலைத்த சொல்லை உடையவர். பேச்சு மாறாதவர். ஒன்று சொன்னால், அதில் எப்போதும் நிலையாக நிற்பவர்

நீடு தோன்று இனியர் = எப்போதும் இனிமையானவர். நீடு என்பதற்கு நீண்ட நாட்களாக என்று பொருள் கொள்ளலாம். நீண்ட நாள் இனிமையாக இருப்பவர் என்பதால், இப்போதும் அந்த இனிமை மாறமாட்டார் என்ற பொருள் மறைந்து நிற்கிறது.

என்றும் = எப்போதும்

என் தோள் = என் தோள்களை

பிரிவு அறியலரே = பிரிவு என்ன என்றால் அறியாதவர். பிரிந்தால் அல்லவா , பிரிவு என்ன என்பதை அறிய

தாமரைத் = தாமரை மலரின்

தண் = குளிர்ந்த

தாது = மகரந்தமும்

ஊதி = பறந்து

மீமிசைச் = மேலே சென்று

சாந்தின் தொடுத்த = சந்தன மரத்தில் உள்ள

தீந் தேன் போலப் = சுவையான தேனைப் போல

புரைய மன்ற = புரை என்றால் உயர்ந்த என்று பொருள். புரைய மன்ற என்றால் உயர்ந்தது அன்றோ

புரையோர் கேண்மை = உயர்ந்தவர் நட்பு

நீரின்ற்றி அமையா உலகம் போலத் = தண்ணீர் இல்லாமல் இயங்க முடியாத உலகம் போல. பயிர் வளர்க, உயிர் வளர்க நீர் எவ்வளவு முக்கியமோ அவன் எனக்கு அவ்வளவு முக்கியம். நீர் இல்லாவிட்டால், பயிர் வாடி, வதங்கி கருகி விடும். அது போல, அவன் இன்றி நான் வாடி வதங்கி இறந்து போய் விடுவேன். மழைத் துளி விழுந்தவுடன் செடிகள் சிலிர்த்து புத்துயிர் பெற்று விளங்கும். அது போல, அவன் வந்தால் நான் மலர்ந்து, சிலிர்த்து புதுப் பொலிவுடன் இருப்பேன்.

தம் இன்றி = அவர் இன்றி

அமையா = என்னால் உயிர் வாழ முடியாது

நன்மை நயந்து அருளி = என் மேல் அன்பு வைத்து நன்மையை விரும்பி அருளிச் செய்த

நறு நுதல் = என் நெற்றி

பசத்தல் அஞ்சி = பசலை நிறம் அடைவதை நினைத்து



சிறுமை உறுபவோ = என்னை விட்டுப் பிரியும் அந்த சிறிய செயலை

செய்வது அறியலரே = செய்வது எப்படி என்று அறிய மாட்டார்

தன்னை விட்டு அவன் பிரியப் போகிறான் என்ற கவலையால் இவற்றை சொல்கிறாள்  என்பது பாட்டில் நேரடியாக இல்லை. அது ஊடாடும் சோகம்.

கவிதை என்பது வார்த்தைகளைத் தாண்டி, வரிகளைத் தாண்டி, உள்ளாடும் உணர்வு.

அந்த உணர்வு , இந்தக் கவிதையில் உங்களுக்குப் புரிந்தால், நீங்கள் பாக்கியசாலிகள்.



Sunday, February 7, 2016

பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி

பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி




பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

பிரபந்தம் போன்ற நூல்களை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிக்கக் கூடாது. மனனம் செய்து திருப்பிப் படிப்பது என்றால் அதற்கு நாம் எதற்கு ? ஒரு ஒலிப் பதிவு நாடா (tape recorder) போதுமே. ஒரு முறை பதிவு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அது அப்படியே பாடும்.

பெரியாழ்வார் சொல்கிறார்....இந்த பல்லாண்டு பாடல்களை நவில வேண்டும் என்று.

"நவின்றுரைப் பார்"

நவின்று உரைப்பார்.

அது என்ன நவில்தல் ?

நவில்தல் என்றால் அறிந்து கொள்ள வேண்டும் என்று வாசிப்பது . சும்மா மேலோட்டமாக வாசித்துக் கொண்டு போவது அல்ல. ஒரு நூலின் ஆழ்ந்த பொருளை  அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு வாசிப்பதற்கு நவில்தல் என்று பெயர்.

திருவள்ளுவர் சொல்லுவார் ....


 நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (783)

நவில் தொரும் நூல் நயம் போலும் பயில் தொரும் பண்புடையாளர் தொடர்பு.

ஒரு நூலை நவில நவில எப்படி அதில் புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ, அது போல நல்லவர்களின் தொடர்பு புது புது நன்மைகளை  தரும் என்கிறார்.

திருப்பல்லாண்டை நவில வேண்டும். ஆழ்ந்து கற்க வேண்டும்.

இது ஒரு செய்தி.

அறிய வேண்டும், கற்க வேண்டும் என்றால் எதை அறிய வேண்டும் ? எதை கற்க வேண்டும் என்ற கேள்வி வரும்.

அதற்கும் அவர் விடை தருகிறார்.

"நல்லாண் டென்று நவின்று "

இது நமக்கு நல்லது என்று அறிந்து கொண்டு.

பெரியாழ்வார் சொன்னார் என்பதற்காக கற்க வேண்டாம், அது பெருமாள் மேல் பாடப் பட்ட  பாடல் என்பதால் கற்க வேண்டாம், உங்களுக்கு நல்லது என்று அறிந்து  கொள்ளுங்கள்  என்கிறார்.

சரி, ஆழ்ந்து படித்து, அதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டாயிற்று, அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் அதை அறிந்தால் போதாது. அறியாத மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

"நல்லாண் டென்று நவின்றுரைப் பார்"

நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்

நமக்கு நல்லது என்று அறிந்து (நவின்று) உரைப்பார்

எதை உரைப்பார்கள் ?

"நமோ நாராய ணாயவென்று"

நமோ நாராயாணாய  என்று

இப்போது பாடலை முழுதும் பார்ப்போம்

பாடல்

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

சீர் பிரித்தபின் 


பல்லாண்டு என்று  பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராய ணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர்  பல்லாண்டே




பொருள்




பல்லாண்டு என்று = பல்லாண்டு என்று 

பவித்திரனை = பவித்தரமானவனை 

பரமேட்டியை = பரம ஏட்டில் பரம பதத்தில் உள்ளவனை 

சார்ங்கம் என்னும் = சார்ங்கம் என்ற 

வில் ஆண்டான் தன்னை = வில்லை ஆண்டவனை 

வில்லிபுத்தூர் விட்டுசித்தன் = ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற ஊரில் இருந்த விஷ்ணு சித்தன் என்ற நான் 

விரும்பிய சொல் = விரும்பிய இந்த பல்லாண்டு என்ற பாடல்களை 

நல் ஆண்டு என்று = நல்லது என்று 

நவின்று = கற்று உணர்ந்து 

உரைப்பார் = மற்றவர்களுக்கு சொல்லுவார் 

நமோ நாராய ணாய என்று = நமோ நாராய ணாய என்று

பல்லாண்டும் = பல ஆண்டுகள் 

பரமாத்மனைச் = பரமாத்மனை, பெருமாளை 

சூழ்ந்து இருந்து ஏத்துவர்  பல்லாண்டே = சுற்றி இருந்து புகழ்வர் பல்லாண்டே 

இந்தப் பாசுரத்தோடு திருப்பலாண்டு நிறைவு பெறுகிறது 

இந்தத் திருப்பலாண்டு ஒரு புரட்சிகரமான வெளிப்பாடு. 

பொதுவாக வாழ்த்துபவர், வாழ்த்து பெறுபவரை விட உயர்ந்தவராக இருக்க வேண்டும். 

பெற்றோர், பிள்ளைகளை வாழ்தலாம், ஆசிரியர் மாணவனை வாழ்தலாம்...ஆனால் மாணவன் ஆசிரியரை வாழ்துவது என்பது நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. 

பெருமாள், பெரியாழ்வாரை விட எந்த விதத்தில் குறைந்தவர். இருந்தும் பெரியாழ்வார் "நீ பல்லாண்டு வாழ்க" என்று வாழ்துகிறார். அது மட்டும் அல்ல, அவர் பெருமாளை மட்டும் அல்ல, பெருமாளையும், ஸ்ரீதேவியையும், சங்கு , மற்றும் சக்ரத்தையும்  வாழ்துகிறார். 

அது எப்படி சரியாகும் ?

பக்தியின் உச்ச கட்டம் - அன்பு மட்டுமே நிறைந்த மனம். வாழ்த்த வயது, அறிவு போன்ற  தகுதி எதுவும் வேண்டாம்....அன்பு மட்டும் இருந்தால் போதும். அது ஒன்றே தகுதி.

வைணவர்கள்தான், வாழ்த்த அன்பைத் தவிர வேறு ஒரு தகுதியும் வேண்டாம் என்று   முன் மொழிந்தவர்கள். 

இனிமேல், வாழ்த்த தகுதியை பார்க்காதீர்கள். 

இது ஒரு செய்தி.

மற்றொன்று, எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று தான் மனிதன் பறக்கிறான். 

கோவிலுக்குப் போனால், ஏழைகளை விட பணக்காரன் தான் அதிக ம் கேட்கிறான். அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சைக் காரனைப் போல கடவுளிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறான். 

இருப்பது போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை. 

இத்தனை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல மனம் வருவது இல்லை. இன்னும் தா, இன்னும் தா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

"நீ இதுவரை எனக்கு தந்ததற்கு நன்றி. போதும். நீ உன் மனைவி மற்றும் சொத்துக்களோடு நல்லா இரு" என்று கடவுளிடம்  கூறிய முதல் ஆள் பெரியாழ்வார். 

திருப்தி படுங்கள். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லுங்கள். கொடுத்தவனை வாழ்த்துங்கள்.

எல்லாம் நல்லபடியா நடக்கும்.