Tuesday, August 30, 2016

இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 2

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 2



இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி

தாய் என உயிர்க்கு நல்கி என்ற வரியின் விளக்கத்தை முந்தைய blog இல் பார்த்தோம்.

மேலும் சிந்திப்போம்.


தருமமும், தகவும், சால்பும், நீ என நின்ற நம்பி!

மூன்று சொற்களால் இராமனை போற்றுகிறான் வாலி.

தருமம், தகவு, சால்பு

தருமம் என்றால் என்ன என்று தெரிகிறது.

அது என்ன தகவு, சால்பு ?

தகவு என்றால் நடுவு நிலைமை.  தர்மத்தின் வழி செல்பவர்கள் கூட சில சமயம் பாசம் அல்லது அறியாமை காரணமாக நடுவு நிலைமை பிறழ்ந்து விடலாம்.  இராமன் நடு நிலை தவறாதவன் என்று வாலி கூறுகிறான்.

சால்பு என்றால் சான்றோர் இயல்பு. சான்றோன் என்றால் கல்வி , கேள்வி மற்றும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.

இதை விட இராமன் செய்தது சரி தான் என்று சொல்ல வேறு என்ன சொல்ல முடியும் ?

இந்த மூன்று குணங்களாகவே இராமன் இருந்தான் என்று வாலி சொல்கிறான் என்றால் என்ன நிகழ்ந்தது ? ஏதோ ஒன்று வாலிக்கு தெரிய வந்திருக்கிறது. இல்லை என்றால், மறைந்து நின்று போட்ட அம்பு மார்பில் துளைக்க, இரத்தம் பெருக்கெடுத்து ஓட , உயிர் போகும் தருணத்தில் , அப்படி அம்பு போட்டவனை வாலி ஏன் புகழ வேண்டும் ?


நெறியினின் நோக்கும் நேர்மை

சில சமயம் பிள்ளைகள் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும், அல்லது கை பேசியில் யாருடனாவது chat பண்ணிக் கொண்டிருக்கும். அப்பா, பிள்ளையை அதட்டி, அதை பிடுங்கி வைத்து, படி என்று அதட்டுவார். கேட்கவில்லை என்றால் திட்டுவார், தேவைப் பட்டால் இரண்டு அடி கூட தருவார்.

பிள்ளை அழும். சந்தோஷமாக இருந்த பிள்ளையை துன்பப் படுத்தி அழ வைப்பதா பெற்றோரின் நோக்கம் ?

இப்போது அழுதாலும் பரவாயில்லை, பிள்ளை பின்னாளில் நன்றாக இருப்பான் என்ற தொலை நோக்கோடு அவர் அப்படி செய்கிறார்.

பிள்ளை , தகப்பனை, ஒரு வில்லனை பார்ப்பது போலத் தான் பார்க்கும்.

அதற்காக , ஒரு தகப்பன் மிரட்டி, திட்டி, அடித்து பிள்ளையை நெறி படுத்தாமல் இருந்து விட முடியுமா ?

இராமன் செய்தது வேதம் சாஸ்திரம் போன்றவற்றில் சொல்லப் பட்ட வழியின் பால் நேர்மையாக சென்றது.

நெறி என்றால் உயர்த்த வழி.

நோக்குதல் , தொலை நோக்கு. இராமன் நினைத்து இருந்தால் வாலியின் உதவி பெற்று சீதையை எளிதாக மீட்டிருக்க முடியும். அது சுய இலாபத்துக்காக நேர்மையை கை விட்டது மாதிரி ஆகி இருக்கும்.

இராமன் செய்தது தொலை நோக்குப் பார்வை.

அதிலும் ஒரு நேர்மையை கடை பிடித்தான் என்றான் வாலி.


நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?

நாய் போன்றவன் நான். எதிலும் குற்றம் காண்பதே என் வேலை. குற்றமற்று பார்க்கும் பார்வை என்னிடம் இல்லை என்கிறான் வாலி. 

கல்வி கேள்விகளில் சிறந்தவன் வாலி.பெரிய சிவ பக்தன். சிறந்த வீரன். 

பின் ஏன் தன்னை நாய் என்று சொல்லிக் கொள்கிறான் ?

நாயிடம் உள்ள ஒரு கெட்ட குணம் என்ன என்றால், எவ்வளவு தான் அதற்கு உயர்ந்த உணவு அளித்து , வீட்டில் சௌகரியமாக வைத்து இருந்தாலும், சில சமயம் அது வெளியில் போகும்போது தெருவில் கிடக்கும்  அசிங்கத்தை ருசி பார்க்கும். அது   நாயின் பிறவிக் குணம். 

எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும், சில சமயம் புத்தி கீழ் நோக்கிப் போவது மனிதர்களின் இயல்பு. 

அதையே வாலி சொல்கிறான். 

தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

தீயவைகளை பொறுத்துக் கொள்வாய் என்று இராமனிடம் வாலி வேண்டுகிறான். 

வாலி என்ன தீமை செய்து விட்டான் ? அவனே "நான் செய்த தீமைகளை பொறுத்துக் கொள் " என்று சொல்லும் அளவுக்கு என்ன தீமை  செய்து விட்டான் ?

ஒரே ஒரு தீமை தான், இராமனை நிற்க வைத்து கேள்வி கேட்டது. 

அரசு அவனுடையதுதான். 

மாயாவியோடு சண்டை போட்டு குகைக்குள் போனபோது , காவலுக்கு நின்ற  சுக்ரீவன், குகையை மூடி விட்டு தானே அரசனாகிவிட்டான். 

குகையில் இருந்து வெளியே வந்த வாலி கோபம் கொண்டது இயற்கை. 

அண்ணன் தம்பி உறவை விடுங்கள். ஒரு அரசன் ஆணையை மீறியது மட்டும் அல்ல, அவனை சிறை வைத்து விட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டால் , எந்த அரசனுக்குத் தான் கோபம் வராது ?

வாலிக்கு சுக்ரீவன் மேல் கோபம் வந்தது. அவனை அடித்து விரட்டினான். 

அது அல்ல அவன் செய்த தீமை. 

இராமன் செய்தது சரி தான் என்று பின்னர் உணர்ந்த வாலி, அதற்கு முன்னால் , உண்மை தெரியாமல் இராமனை கேள்வி கேட்டதற்காக, இராமனை தரக் குறைவாக பேசிய தீமையை குறித்து கூறுகிறான். 

அடுத்து நடந்தது தான் வாலி வதையின் மிக மிக முக்கியமான நிகழ்வு.

அது என்ன நிகழ்வு ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/08/2.html




இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 1

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 1



இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி


இந்தப் பாடலை நாளெல்லாம் வாசித்து வாசித்து உருகலாம்.



இங்கே சில விஷயங்களை சொல்கிறான்.

சொல்பவன் யார் ?

வாலி.

அவன் எப்படிப் பட்டவன் ?

சிறியன சிந்தியாதவன்.

எது சிறியது ?

ஆட்சி, செல்வம், புகழ், அதிகாரம், ஏன் உயிர் இவை எல்லாமே சிறியதுதான்.

இதைப் பற்றியெல்லாம் வாலி சிந்திக்கவில்லை.

பின் ஏதோ உயர்ந்த ஒன்றை சிந்தித்த வாலி, சொல்கிறான்....

"'தாய் என உயிர்க்கு நல்கி,"

தாய் போல உயிர்க்கு நல்கி.

நல்குதல் என்றால் அருள் செய்தல் என்று பொருள்.

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி என்பார் மணிவாசகர்


 விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

தாய் உடலுக்குத் தான் உணவு தருவாள். பாலூட்டி, சோறூட்டி உடலை வளர்ப்பாள் .

உயிரை யார் வளர்ப்பார்கள் ?

இராமன் உயிரை வளர்த்தான் என்கிறான் வாலி.

"உயிர்க்கு நல்கி"

சில சமயம் குழந்தை உணவு உண்ணாமல் அடம் பிடிக்கும். அம்மா, குழந்தையை இழுத்து பிடித்து, தன் கால்களுக்கு நடுவில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு உணவை கட்டாயமாக ஊட்டுவாள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ அந்த அம்மா கருணை இல்லாத அரக்கி போலத் தோன்றும். அந்த கடுமைக்கு பின்னால் உள்ள கருணையை அந்த பிள்ளை கூட உணராது. அம்மா ஒரு இராட்சசி என்றே நினைக்கும். ஆனால், பின்னால் அந்த பிள்ளை அறிவு வளர்ந்த பின், தாயின் அன்பை எண்ணி கண்ணீர் விடும்.

இராமன் செய்தது அறம் அற்ற செயலாகத்தான் தெரியும் வெளியில் இருந்து பார்க்கும் போது.

வாலி கூட அப்படித்தான் நினைத்தான்.

ஆனால், அவன் அறிவு அடைந்தான். இராமனின் கருணையை உணர்ந்தான்.

உடலை வளர்க்கும் தாயே இந்த பாடு படுகிறாள் என்றாள் என்றால், உயிரை வளர்க்க என்ன பாடு பட வேண்டும்.

யாருக்குப் புரியும் ?

(மேலும் சொல்வேன் )

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/1.html

Sunday, August 28, 2016

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்


இராமனின் அம்பால் அடிபட்டு வீழ்ந்த வாலி, முதலில் இராமனின் நாமத்தை அம்பில் கண்டான். பின், இராமனே நேரில் வரக் கண்டான். நேரில் வந்த இராமனை வாலி பலவாறு கேள்வி  கேட்கிறான்.அவன் குற்றச்சாட்டெல்லாம் , ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் , என்பதுதான்.

இராமன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலி ஏற்கவில்லை.

இலக்குவன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலியின் மனம் ஒப்பவில்லை.

அடுத்து என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

ஏதோ நடந்திருக்கிறது.

யாருக்கும் தெரியாது.

ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

கீழே வரும் பாடல் மிக நுண்ணிய பாடல்.

பாடல்

கவி குலத்து அரசும் அன்ன
      கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்
      திறன் அழியச் செய்யான்
புவியுடை அண்ணல்' என்பது
     எண்ணினன் பொருந்தி, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன்
      சென்னியின் இறைஞ்சி, சொன்னான்:

பொருள்

கவி குலத்து அரசும் = குரங்கு கூட்டத்தின் அரசனான வாலி

அன்ன = அந்த

கட்டுரை கருத்தில் கொண்டான் = இராமன் மற்றும் இலக்குவன் சொன்ன கருத்துகளை மனதில் கொண்டான் ;

அவியுறு மனத்தன் ஆகி, = மனதில் பொங்கிய கோபம் அமைதி உற்று

'அறத் திறன் அழியச் செய்யான் = அறத்தின் வலிமையை அழிய விடமாட்டான்

புவியுடை அண்ணல்' = புவியின் அரசனான இராமன்

என்பது எண்ணினன் பொருந்தி = என்று மனதுள் பொருந்தி

முன்னே = முன்பே

செவியுறு கேள்விச் செல்வன் = செவியுற்ற கேள்விச் செல்வனான வாலி

சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: = தலையால் வணங்கிச் சொன்னான்

அறம் என்பது இன்னது என்று யாரும் அறுதியிட்டு கூற முடியாது.

ஈறில் அறம் என்பான்  கம்பன்.

அறம் என்று ஒன்று உண்டு அதை தேவரும் அறிய மாட்டார்கள் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்

இராமன் மறைந்து இருந்து அம்பு போட்டது அறமா , அறம் அற்ற செயலா ?

வாதம் பண்ணிக் கொண்டே வந்த வாலி, திடீரென்று மனம் மாறுகிறான்.

இராமன் செய்தது சரி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் படித்த அறத்தின் படி, மறைந்து நின்று அம்பு போடுவது வில்லறம் பிறழ்ந்த செயல்தான்.

பின், வாலி மனம் மாறக் காரணம் என்ன ?

அம்பு அவன் மார்பில் பட்டு அவன் கேள்விகள் கேட்பது வரை , அவன் கண்ட அறம் அவன் படித்து உணர்ந்த அறம்.

இப்போது , அவன் இராமனிடம் கேட்ட அறம் .

அப்படி என்ன இராமன் சொல்லி விட்டான் ?

நமக்குத் தெரியாது.

கம்பன் நேரடியாகச் சொல்லவில்லை.

உயர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது.

அது மௌனத்தில் உணரப் படவேண்டிய ஒன்று.

காதலி, தன் காதலை , அவளுடைய காதலனுக்கு கண்ணால் சொல்லுவது போல.

ஆயிரம் வார்த்தைகளை ஒரு கண் அசைவு காட்டி விடும்.

ஒரு புன்முறுவல் சொல்லி விடும்.

பக்கம் பக்கமாக வசனம் பேச முடியாது.

இராமன் சொன்னான். வாலி கேட்டான்.


"செவியுறு கேள்விச் செல்வன்"

காதில் கேட்டுக் கொண்ட கேள்வியின் செல்வன் என்று வாலியை கம்பன்  அழைக்கிறான். 

செவியுறு கேள்விச் செல்வன் என்று அவனுக்கு ஒரு அடை மொழி  தருகிறான்.

அவன் என்ன கேட்டான். கேட்ட பின் மனம் மாறினான்.

அவன் கேட்டதில் கொஞ்சம் தான் நாம்  கேட்டோம்.

நேரில் வந்த இராமன் ஏதோ சொல்லி இருக்கிறான். வாலியும் கேட்டிருக்கிறான். 

கேட்ட பின் தலையால் வணங்கி வாலி கூறுகிறான். 

என்ன கூறினான் ?


Friday, August 26, 2016

இராமாயணம் - வாலி வதம் - எண்ணுற்றாய்! என் செய்தாய்?

இராமாயணம் - வாலி வதம்  - எண்ணுற்றாய்! என் செய்தாய்?


இராமனின் அம்பால் அடிபட்டு விழுந்த வாலி, தூரத்தில் இராமன் தன்னை நோக்கி வருவதைக்  கண்டான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான், பின் அவன் நாமத்தை அம்பினில் கண்டான், பின் இராமனே நேரில் வரக் காண்கிறான்.

வானில் உள்ள கார் மேகம், மழை பொழிந்ததால், தரையில் விழுந்து, பல தாமரை மலர்களை மலரச் செய்து, அந்த மேகமே மண்ணில் இறங்கி வந்து கையில் வில் ஏந்தி வந்ததைப் போல வந்த திருமாலைக் கண்டான். தன் உடலில் இருந்து இரத்தம் வழிய, கண்ணில் தீப் பொறி பறக்க, என்ன நினைத்து என்ன செய்தாய் என்று சொல்லத தொடங்குகிறான்.

பாடல்


கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:


பொருள்

கண்ணுற்றான் = கண்டான்

வாலி = வாலி

நீலக் = நீல நிறமும்

கார் முகில் = கரிய நிறமும் கொண்ட மேகம்

கமலம் பூத்து = தாமரை மலர்களை மலரச் செய்து

மண் உற்று = பின் தரை இறங்கி வந்து

வரி வில் ஏந்தி,  = வலிய வில்லை ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல இருந்த

மாலை; = திருமாலை

புண் உற்றது = புண் உள்ள உடலில் இருந்து

அனையசோரி = இரத்தம் வழிய

பொறியொடும் = கண்ணில் தீ பொறி பறக்கும் படி

பொடிப்ப, நோக்கி = கோபத்தோடு நோக்கி

'எண்ணுற்றாய்! என் செய்தாய்!' = என்ன நினைத்து , என்ன செய்தாய்

என்று ஏசுவான் இயம்பலுற்றான் = என்று ஏசுவான் , இயம்பல் உற்றான்


என்ன பொருள்...

மேகம் வானில் இருந்தே மழை பொழிந்து தாமரைக்கு நீர் வார்க்க முடியும்.  இருந்தும் அது இறங்கி வருகிறது.

அவதாரம் என்றால் அருளினால் , மேலிருந்து கீழிறங்கி வருவது என்று அர்த்தம்.

திருமால் நினைத்திருந்தால் , வைகுந்தத்தில் இருந்தே இராவணனை கொன்று  இருக்க முடியும். இராவணனை கொல்வது மட்டும் நோக்கம்  அல்ல. இன்னும் பலப் பல இராவணன்கள் வராமல் இருக்க, இந்த உலகுக்கு வழி காட்ட , மானிடம் வடிவம் தாங்கி இரங்கி , இறங்கி வந்தான்.

கார்மேகம் , தரை மேல் வந்தது போல.

கம்பன் அதில் ஒரு நுட்பம் வைக்கிறான்.

வாலியை பார்க்க வந்தது, அவனுக்கும் அருள் செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறான்.

தாமரைக்கு நீர் வார்த்த மேகம் தரை மேல் வந்தது மாதிரி இராமன் வந்தான்  என்றான் கம்பன்.

கடைசியில் "ஏசுவான் இயம்பல் உற்றான்"  என்கிறான் கம்பன்.

ஏசுவது, இயம்புவது இரண்டும் ஒன்று தானே. எதற்கு இரண்டு வார்த்தைகள்.

ஏசுதல் என்றால் திட்டுதல், வைதல் .

இயம்புதல் என்றால் போற்றுதல், துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே என்பது குற்றாலக் குறவஞ்சி.

வெளியில் இருந்து பார்த்தால் திட்டுவது மாதிரி இருக்கும். அத்தனையும் புகழாரம்.

அம்பு எய்திய இராமன் அப்படியே போய் இருக்கலாம்.

போகவில்லை. ஏன் ?

வாலி தன்னை திட்டுவான் என்று இராமனுக்குத் தெரியாதா ? தெரியும்.

தெரிந்தும் வந்தான்.

ஏன் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_26.html





Thursday, August 25, 2016

பெரிய புராணம் - காலையின் ஒலி

பெரிய புராணம் - காலையின் ஒலி 


அந்தக் காலத்தில் , கல்லூரியில் படிக்கும் போது அதி காலை எழும் வழக்கம் இருந்தது.

ஒரு 4:30 அல்லது 5:00 இருக்கும் , வழக்கமாக எழும் நேரம்.

அதி காலையில் வெளிச்சம் முழுவதுமாக இருக்காது. லேசாக வெளிச்சம் படரும் நேரம்.

சில வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தம், வாசலை பெருக்கும் சத்தம் கேட்கும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதி வண்டியில் செல்வோர் அடிக்கும் bell  ஒலி கேட்கும்.

தினசரி நாள் இதழ் போடும் சத்தம் கேட்கும். கோவிலில் பாட்டு போடுவார்கள் அந்த சத்தம் கேட்கும்.

கொஞ்ச நேரம் ஆன பின் சில வீடுகளில் வானொலி பெட்டி ஒலிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே  போகும். கல்யாணக் காலம் என்றால் , பல கல்யாண மண்டபங்களில் பாட்டு போடுவார்கள்.

இதையே இன்னும் சில நூறு ஆண்டுகள் முன்னோக்கி எடுத்துச் சென்றால் எப்படி இருக்கும் ?

அன்றுள்ள மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் ? என்ன மாதிரி ஒலி எல்லாம் கேட்டிருக்கும் அந்தக் காலத்தில் ?

சேக்கிழார் படம் பிடிக்கிறார்.

அது ஒரு கடலோர கிராமம்.

அதி காலையில், தூரத்தில் கடலின் அலைகள் எழுப்பும் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது.

பொழுது விடிகிறது.

எங்கோ சில வீடுகளில் பாட்டு, நடனம், வேதம் போன்ற கலைகள் நடக்கும். அந்த சப்தம் ஒரு புறம் வருகிறது.

கொஞ்சம் தள்ளி, யானை குட்டிகளை பழக்கப் படுத்துவோர்   எழுப்பும் ஒலி கேட்கிறது.

இன்னொரு பக்கம், சோலையில் வண்டுகள் ரீங்காரமிடும் சப்தம்.

மற்றொரு புறம், குதிரையை பழக்குவோர் எழுப்பும் ஒலி .

சில வீடுகளில் யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைக்கும் ஒலி .

இன்னும் சில இடங்களில் ஆடல் பாடல் இவற்றிற்காக இசைக்கும் வாத்திய ஒலி .

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் கூடி, கடலின் அலை சப்தத்தை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

பாடல்

காலை எழும்பல் கலையின்ஒலி
     களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை எழும்மென் சுரும்பின்ஒலி
     துரகச் செருக்கால் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
     பாடல் ஆடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கிஎழ 
     விளங்கி ஓங்கும் வியப்பினதால்.

பொருள்


காலை = காலையில்

எழும்பல் = எழும் போது

கலையின்ஒலி = ஆடல், பாடல், போன்ற கலைகளின் ஒலி

களிற்றுக் கன்று = யானைக் குட்டியை

வடிக்கும்ஒலி = பழக்கும் ஒலி

சோலை எழும்மென் = பூங்காவில் தோன்றும்

சுரும்பின்ஒலி = வண்டுகளின் ஒலி

துரகச் செருக்கால் சுலவும்ஒலி = பெருமிதம் கொண்ட குதிரைகளை பழக்கும் ஒலி 

பாலை விபஞ்சி பயிலும்ஒலி = பாலை போன்ற யாழ்களை மீட்டும் ஒலி

பாடல் ஆடல் முழவின்ஒலி = ஆடலுக்கும், பாடலுக்கும் வாசிக்கும் மிருதங்கம், மத்தளம் போன்றவற்றின் ஒலி

வேலை ஒலியை விழுங்கிஎழ = கடலின் ஒலியை மிஞ்சி எழ

விளங்கி ஓங்கும் வியப்பினதால்.= ஓங்கி வியக்கும் படி ஒலித்தன

அந்தக் கால கிராமம் கண் முன்னால் படமாக விரிக்கிறதா ?

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ். 

பெரிய புராணத்தைப் படித்துப் பாருங்கள். அத்தனையும் தேன் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_35.html



இராமாயணம் - வாலி வதம் - இராமன் தோற்றம்

இராமாயணம் - வாலி வதம்  - இராமன் தோற்றம் 


இராமனின் அம்பினால் அடிபட்டு கிடக்கும் வாலி, தன் மேல் பாய்ந்த அம்பினை பற்றி இழுத்து அதில் இராமன் என்ற நாமம் எழுதி இருக்கக் காண்கிறான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறான்.

இப்போது அவன் நாமத்தை கண்டான்.

அடுத்து ?

அதுத்தது அந்த இராமனே நேரில் வரக் காண்கிறான்.


பாடல்

‘இறை திறம்பினனால்; என்னே
    இழிந்துேளார் இயற்கை? என்னில்
முறை திறம்பினனால் ‘என்று
    மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை
    மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
    தோன்றினான், வந்து தோன்ற.

பொருள் 


‘இறை திறம்பினனால்; = அரச நீதி தவறினால் (இராமனே)

என்னே இழிந்துேளார் இயற்கை?  = மற்றவர்களின் நிலை என்ன. இராமனே தவறு செய்தால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

என்னில் = என்று

முறை திறம்பினனால் ‘ = வழக்கம் தவறினால் என்ன செய்வது

என்று = என்று

மொழிகின்ற முகத்தான் முன்னர் = சொல்கின்ற வாலியின் முன்
,
மறை திறம்பாத = வேதங்களில் சொல்லப் பட்டதை விட்டு தவறாத

 வாய்மை = உண்மையாக

மன்னர்க்கு  = மாணவர்களுக்கு

முன்னம் சொன்ன = முன்பு சொன்ன

துறை திறம்பாமல் காக்கத் = இடங்கள் தவறாமல் காக்க

தோன்றினான், வந்து தோன்ற.= தோன்றியவன்  தோன்றினான்

வந்தது யார் ?


உணர்ச்சியும் அறிவும் உச்சம் பெட்ற பாடல்.

ஒன்றைப் பார்ப்பவர்கள், மற்றதை மறந்து விட வாய்ப்பு உள்ள பாடல்.

வாலி நினைக்கிறான் -  அரச நீதி தப்பியவன்,  துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான். வில்லறம் , இல்லறம் துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான்.

மறைந்து இருந்து அம்பு தாக்கப்பட்ட அதிர்ச்சியில் உள்ள வாலி , வலியின்  உச்சியில் இருந்து அப்படி பார்க்கிறான்.

அது என்ன இறை திறம்பின்னான் ?

அரசனை இறைவனாகவே நினைத்தார்கள் நமது இலக்கியத்தில்.

ஏன் அப்படி ?

உயிர்களை காப்பது இறைவனின் வேலை. அந்த வேலையை செய்வதால், அரசனையும் இறைவனாகவே நினைத்தார்கள். வள்ளுவர் 'இறை மாட்சி' என்று ஒரு ஒரு அதிகாரமே படைத்தார்.

சரி, அது வாலியின் பார்வை.

கம்பன் எப்படி பார்க்கிறான் ?

வேதம், மனு நீதி இவற்றில் சொல்லப் பட்ட அறங்களை காக்க தோன்றியவன் , அங்கு வந்து தோன்றினான் என்கிறான் கம்பன்.

இராமன் தவறு செய்ததாக கம்பன் நினைத்திருந்ததால் அப்படி ஒரு வரியை  அந்த இடத்தில் போட வேண்டிய அவசியம் இல்லை.

கம்பன் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்.

அடி பட்டவன் வாலி. வலியும் , வேதனையும் அவனுக்குத்தான்.

இராமனே இப்படி செய்தால் மற்றவர்கள் கதி என்ன என்று நினைத்தவன் முன்  தோன்றினான் என்று கம்பன் கூறுகிறான். வாலி  இன்னும் இராமனைப் பார்க்கவில்லை.

இராமன் இன்னும் சற்று நெருங்கி வருகிறான்.

இராமனைப் பற்றி கேள்வி பட்டான்.

அவன் நாமத்தை கண்டான்.

இப்போது இராமனே நேரில் வருகிறான்.

வந்த இராமனை, வாலி எப்படி கண்டான் ?

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_25.html

Wednesday, August 24, 2016

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு 


நம் வீட்டில் எலித் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், நாம் என்ன செய்வோம்.

அவை அண்டாமல் இருக்க எலி பாஷாணம், அல்லது கரப்பான் பூச்சி மருந்து வைப்போம். அவை ஓடி விடும், அல்லது அந்த விஷத்தை தின்று உயிர் விடும்.

நம் தொல்லை தீரும்.

இந்த எலி, கரப்பான் போல நமக்கு ஓயாத தொல்லை தருவது நாம் செய்த பழைய வினைகள்.

அந்த வினைகளை எப்படி விரட்டுவது அல்லது இல்லாமல் ஆக்குவது ? அதற்கு என்று ஏதாவது நஞ்சு இருக்கிறதா என்றால் இருக்கிறது என்கிறது பிரபந்தம்.

"நாராயணா " என்ற நாமமே நம் வல் வினைகளுக்கு எல்லாம் நஞ்சு போன்றது.

வல் வினைகள் நம்மை அண்ட விடாது, அண்டிய வல் வினைகளை களைந்து அவற்றின் மூலம் வரும் துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும்.

பாடல்


மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.

சீர் பிரித்த பின்

மஞ்சு உலாவும் சோலை வண்டு அறையும் மா நீர் மங்கையார் வாள்  கலிகன்றி 

செஞ் சொல்லால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு 
சிக்கெனத் தொண்டீர் 

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லலிலும் நன்றாம் 

நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு நாராயாணா எனும் நாமம்


பொருள்

மஞ்சு = மேகங்கள்

உலாவும் = உலவுகின்ற

சோலை = சோலை

வண்டு அறையும் = வண்டுகள் ரீங்காரமிடும்

மா நீர் = சிறந்த நீர்

மங்கையார் = திருமங்கை ஆழ்வார்

வாள் = வாளை கையில் கொண்ட

கலிகன்றி = திருமங்கை ஆழ்வார்

செஞ் சொல்லால் = சிறந்த சொற்களால்

எடுத்த = செய்த

தெய்வ = தெய்வத்திற்கு சாத்திய

நன் மாலை = நல்ல மாலை

இவை கொண்டு  = இவை கொண்டு

சிக்கெனத் தொண்டீர் = இறுக்கமாக பற்றிக் கொண்டு

துஞ்சும் போது அழைமின் = இறப்பு வரும்போது அழையுங்கள்

துயர் வரில் நினைமின் = துன்பம் வரும்போது நினையுங்கள்

துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்  = துன்பம் வராதபோதும் சொன்னால் நல்லதாம்

நஞ்சுதான் கண்டீர் = விஷம் தான் அறிந்து கொள்ளுங்கள்

நம் உடை வினைக்கு = நம்மை பற்றிக் கொண்டு இருக்கும்

நாராயாணா எனும் நாமம்  = நாராயாணா என்ற நாமம்


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்.

சிக்கெனைப் தொண்டீர் ....இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டுமாம். கைகளால் அல்ல. நாராயணா என்ற நாமம் நமது நாவை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் சொன்ன மாதிரி நாவில் அந்த நாமம்  பற்றிக் கொள்ள வேண்டும். 

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 
          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று வள்ளலார் கூறியது போல , நா , நாராயணா என்ற நாமத்தை மறக்கக் கூடாது. 

அது என்ன சிக்கெனைப் பிடித்தல் ?

அந்த காலத்தில் புத்தகங்கள் படிக்க X போல ஒரு மரத்தில் செய்த பலகை இருக்கும். அதன் நடுவில் புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள். அந்த பலகைக்குப் பெயர் சிக்கு பலகை. புத்தகத்தை எடுத்து விட்டு மூடினால், அது ஒன்றுக்குள் ஒன்று புதைந்து ஒரே கட்டை போல ஆகிவிடும். அப்படி , நாராயாணா என்ற நாமமும், நாவும் ஒன்றோடு ஒன்று  பிணைந்து ஒன்றாக ஆகி விடவேண்டும். 

சிக்கெனைப் பிடித்தேன் என்பார் மணிவாசகர் 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

எப்போதெல்லாம் நினைக்க வேண்டும் , சொல்ல வேண்டும் ?

சாகும் தருவாயில் சொல்ல வேண்டும், துன்பம் வரும் போது சொல்ல வேண்டும்,  துன்பம் வராத போதும் சொல்ல வேண்டும்.

என்ன இது ஒண்ணும் புரியலையே. சாகும் போது சொல்வது, துன்பம் வரும்போது சொல்வது , துன்பம் வராத போது சொல்வது என்றால் என்ன ?


பாடலின் வரிகளை கொஞ்சம் இடம் மாற்றி பொருள் கொள்ள வேண்டும்.


எப்போதும் அந்த நாமத்தை சொல்ல வேண்டும்.

முடியவில்லையா, சரி பரவாயில்லை, துன்பம் வரும்போதாவது சொல்லுங்கள்.

அப்போதும் சொல்லவில்லையா, இறக்கும் தருவாயிலாவது சொல்லுங்கள்.

போகும் இடத்துக்கு புண்ணியம் கிடைக்கும்.

தீய வினைகளுக்கு அது விஷம் போன்றது. இறக்கும் தருவாயில் சொன்னால் கூட, அது வாழ்நாளில் செய்த அத்தனை வினைகளும் அழிந்து போகும்.

சாவு எப்போது வரும், எப்படி வரும், அந்த நேரத்தில் நினைவு இருக்குமா ? தெரியாது. எனவே துன்பம் வராமல் சுகமாக இருக்கும் போதே சொல்லி வையுங்கள். அது உங்கள் நாவில் ஏறி அமர்ந்து கொள்ளும்.

வல் வினைகள் ஓயட்டும்.

வாழ்வில் ஒளி தீபம் வீசட்டும்.

நாராயாணா எனும் நாமம் உங்கள் வாழ்விலும் வசந்தத்தை கொண்டு தரட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_68.html