Tuesday, January 17, 2017

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும்

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும் 


பணிவு இல்லாதது. ஆணவம் கொள்வது. தான் தான் உயர்ந்தவன் என்று எப்போதும் எண்ணிக் கொள்வது இறைவனின் குணம் என்று நேற்றுப் பார்த்தோம். அது ஒரு அரக்க குணம்.

அப்படியானால் பணிவது தெய்வ குணமா  என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதற்கு அருணகிரிநாதர் விடை தருகிறார்.

வள்ளியின் பாதங்களை பிடிக்கிறான் முருகன். அது மட்டும் அல்ல, "நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்கிறேன்" என்று கூறுகிறான். அவள் மீது கொண்ட மோகத்தால் அதுவும் தணியாத மோகத்தால் என்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்



 திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

பொருள்


திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே

என் மனம் கடினமானது. கல் போன்றது. அதில் உன் திருவடித் தாமரை மலருமா ?

மலராது.

ஆனால், நீ நினைத்தால் முடியும் . ஏன் என்றால் நீ உன் அடியவர்களிடத்தில்  அன்பும்,  கருணையும் கொண்டவன். நீ நினைத்தால் உன் திருவடிகள் என் மனதில் பதியும் என்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிகிறான் . பணிந்து, நீ எனக்கு இட்ட வேலை என்ன  என்று கேட்கிறான்.

தனக்காக எவ்வளவு துன்பங்களை தாங்கி கொண்டவள் அவள் என்று நினைக்கிறான்.

காடு மேடெல்லாம் அலைந்து அவள் கால் வலிக்காதா ? கல்லும் முள்ளும் குத்தி  அவள் கால் நோகாதா என்று நினைத்தது அவள் பாதங்களை பிடிக்கிறான்.

நீ கஷ்டப் பட்டது எல்லாம் போதும். ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல் என்று  அவளை வேண்டி நிற்கிறான்.

ஒவ்வொரு வீட்டிலும் இது நடந்தால் குடும்பம் எப்படி இருக்கும் ?

மனைவியின் தியாகங்களை, துன்பங்களை கணவன் அறிந்து அவள் மேல் கருணை கொண்டு, அவள் பாதங்களை பிடித்து , அவள் மேல் காதல் கொண்டால்  தாம்பத்தியம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மனைவியின் காலை நான் பிடிப்பதா என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் இனி வரும் தலை முறைகளுக்கும்  அருணகிரிநாதர் பாடம் சொல்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிந்தான். அவள் இட்ட கட்டளையை கேட்டான். அவள் மேல் தீராத மோகம் கொண்டான்.

ஒரு புறம்  இராவணன்....படுக்கை அறையிலும் வணங்கா முடி.

இன்னோரும் புறம் முருகன்...வள்ளியின் பாதம் பணியும் , அவளின் ஆணையை கேட்கும் முருகன்.

இலக்கியம் படிப்பதில் உள்ள இன்பம் இதுதான்.

பணிந்து பாருங்கள்.  சொர்கம் தெரியும்.



இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான்

இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான் 


இராமனை கண்டு அவனை மீண்டும் அழைத்து வந்து மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க என்னை பரதன் அவனைத் தேடி வருகிறான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் தோற்றத்தைக் கண்டு தன் தவற்றை உணர்ந்து கொள்கிறான்.

"பரதனுக்கு ஏதோ ஒரு துன்பம் இருக்கிறது. அவனுக்கு இராமன் மேல் கொண்ட அன்பு குறையவில்லை. அவனைப் போலவே இவனும் தவ வேடம் கொண்டு இருக்கிறான். படை வீரர்களே , நீங்கள் இங்கு வழியை பத்திரமாக பார்த்துக் கொண்டு இருங்கள். நான் மட்டும் போய் அவனைப் போய் பார்த்து விட்டு வருகிறேன் " என்று குகன் தனியே கிளம்பினான்.

பாடல்

உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
    உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
    கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்;
    காமின்கள் நெறி; “ என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
    ஒரு தனியே தான் வந்தான்.

பொருள்


உண்டு இடுக்கண் ஒன்று; உடையான் = துன்பம் ஒன்று உடையான்

உலையாத அன்புடையான் = மாறாத அன்பு உடையான்

கொண்ட தவவேடமே = இராமன் கொண்ட தவ வேடமே

கொண்டிருந்தான் = இவனும் கொண்டிருக்கிறான்

குறிப்பு எல்லாம் = இந்த குறிப்பை எல்லாம்

கண்டு = பார்த்து

உணர்ந்து  = உணர்ந்து

பெயர்கின்றேன் = செல்கிறேன் (அவனைக் காண)

காமின்கள் நெறி; = வழியைப் காவல் காத்துக் கொண்டு இருங்கள்

“ என்னாத் = என்று தன் படைகளிடம் கூறி விட்டு

தண் துறை = குளிர்ந்த துறையில்

ஓர் நாவாயில் = ஒரு படகில்

ஒரு தனியே தான் வந்தான் = தனியே தான் மட்டும் வந்தான்


வாழ்க்கையை அறிவின் மூலமே அறிந்து செலுத்தி விட முயல்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு  அறிவியல் பூர்வமான, தர்க ரீதியான வாதம் செய்கிறோம்.  வாழ்வில் சில விஷயங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு, அறிவியலுக்கு அப்பாற்பட்டு, தர்கத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. 

அன்பு, துன்பம், காதல், பக்தி, பாசம், போன்றவை அறிவுக்கு அப்பாற்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், இவற்றை அறிவு கொண்டு ஆராய முற்பட்டால் தவறாகவே முடியும். 

முதலில் பரதனை தவறாக எடை போடுகிறான். படையோடு வந்திருக்கிறான், இராமனோடு சண்டை போடவே வந்திருக்கிறான் என்று அவன் அறிவு  சொல்கிறது. சண்டைக்குத் தயாராகி விட்டான். 

பின் , அவனைக் கண்டதும் அவன் எண்ணம் மாறுகிறது. தான் பரதனை பற்றி  நினைத்தது தவறு என்று எண்ணுகிறான். 


"கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்" 

என்கிறான். 

கண்டு அறிந்து பெயர்கிறேன் என்று சொல்லவில்லை. கண்டு உணர்ந்து செல்கிறேன் என்கிறான். 

அன்பை உணர முடியும். அறிய முடியாது.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து என்பார் மணிவாசகர் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து

என்பது திருவாசகம்.

பரதனின் உலையாத அன்பை குகன் உணர்ந்தான்.

அவன் உணர்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்தில் உள்ள வீரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை போருக்கு தயாராக்கி விட்டான் குகன். ஒரு வேளை அவர்கள் பரதனுக்கு ஏதாவது தீங்கு செய்து விட்டால் என்று அஞ்சி, அவர்களை "நீங்கள் வழியை பார்த்துக் கொண்டு இங்கே இருங்கள் " என்று சொல்லிவிட்டு தான் மட்டும் போகிறான். 


குகன் கண்ட பரதனை மற்ற வீரர்களும் கண்டார்கள். குகனுக்கு மட்டும் பரதனின் நிலையை உணர முடிந்தது. மற்றவர்களால் முடியவில்லை. 

உலகத்தில் உள்ள பொருள்களும் சம்பவங்களும் ஒன்று தான் என்றாலும், பார்ப்பவரின்  பக்குவத்தில் இருக்கிறது எல்லாம். 

கல்லென்று நினைப்பவனுக்கு கல். அதைத் தாண்டி ஏதோ இருக்கிறது என்று உணர்பவனுக்கு  , ஏதோ இருக்கிறது. 

என்ன இருக்கிறது , காண்பி, விளக்கு என்றால் முடிவது இல்லை. 

உணரலாம். அறிய முடியாது. 

Sunday, January 15, 2017

இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்

இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்


இராவணனிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தன. இருந்தாலும், அவனை அரக்கன் என்று தான் உலகம் கூறுகிறது. அவன் தம்பி வீடணனை விபீஷண ஆழ்வார் என்று உலகம் கொண்டாடுகிறது. குலம் ஒன்றுதான். ஒருவன் அரக்கன், இன்னொருவன்   சிறந்த பக்திமான். இவை பிறப்பினால் வருவது இல்லை.

பின் எதனால் வருகிறது ? ஏதோ சில குணங்களால் வருகிறது. அவை என்னென்ன குணங்கள் ? அந்த குணங்கள் இருப்பவர்கள் அரக்கர்கள் தான் அவர்கள் பிறப்பால் எந்த குலமானாலும்.

அப்படி என்றால் அந்த குணங்களை கட்டாயம் தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து வாழ வேண்டும் அல்லவா ?

அவற்றை தவிர்த்து வாழ்ந்தால் தான் நாம் அரக்கர்களாக மாட்டோம்.

முதல் அரக்க குணம்...அன்பை காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது. இராவணனுக்குள் அன்பு இருக்கிறது. மகன் இறந்த போது கல்லும் கறையும்படி அழுகிறான். இருந்தும் அதை அவன் வெளிப் படுத்துவதில்லை. எப்போதும் ஒரு முரட்டுத்தனம். ஒரு  நெகிழ்வு கிடையாது, நேசிப்பவர்களுக்காக விட்டு கொடுப்பது கிடையாது. அது கூட ஒரு தோல்வி என்று நினைப்பது.

பாடல்

புலியின் அதள் உடையானும், பொன் ஆடை
    புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
    யாவர் இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள்,
    சேய் அரிக்கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
    மகுடம் நிரை வயங்க, மன்னோ.


பொருள்

புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை அணிந்த சிவனும்

பொன் ஆடை புனைந்தானும் = பொன் ஆடை அணிந்த திருமாலும்

பூவினானும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

நலியும் வலத்தார் அல்லர் = இராவணனை நலிய வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் அல்ல

தேவரின் = தேவர்களில்

இங்கு = இங்கு

யாவர் இனி நாட்டல் ஆவார்? = யார் அவனை வெற்றி கொள்ள முடியும்

மெலியும் இடை = நாளும் மெலிகின்ற இடை

தடிக்கும் முலை = நாளும் பூரிப்படையும் மார்பகங்கள்

வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள்

சேய் அரிக்கண்,= சிவந்த வரிகளைக் கொண்ட கண்கள்

வென்றி மாதர் = எவரையும் வெல்லும் பெண்கள்

வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட புணர்ச்சியிலும்

வணங்காத மகுடம் = வணங்காத மகுடம்

நிரை = வரிசை

வயங்க = ஒளிவீசும்

மன்னோ = அசைச் சொற்கள்

படுக்கையிலும், பெண்களிடம் வணங்காத முடி கொண்டவன்.

தான் தான் பெரிய ஆள். சக்ரவர்த்தி. வீரன் என்று மனைவியோடு தனித்து இருக்கும் போதும்  வணங்காத முடி.

படுக்கை அறையிலேயே விட்டு கொடுக்காதவன் மற்ற இடத்தில் பணிந்து விடுவானா ?

தான் தான் பெரிய ஆள், எல்லோரும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம்.

சரி, பணியாதது, விட்டுக் கொடுக்காதது அரக்க குணம் என்றால், விட்டு கொடுப்பது, மனைவியிடம் தனிமையில் பணிவது தெய்வ குணமா ?

ஆம் என்கிறார் அருணகிரிநாதர்.

ஒரு முறை அல்ல பல முறை...

அவை என்ன என்று அடுத்த பிளாக்கில் பார்ப்போமா ?



இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?

இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?


இராமனை மீண்டும் அழைத்து வந்து ஆட்சியை ஒப்படைக்க நினைத்து பரதன் வருகிறான். அவன் ஏதோ இராமன் மேல் படை எடுத்து வருவதாக எண்ணி பரதன் மேல் போர் தொடுக்க துணிகிறான் குகன். பரதன் அருகில் வந்த பின், அவனுடைய தோற்றத்தைக் கண்டு தான் நினைத்தது தவறென்று நினைக்கிறான் குகன்.

"பரதனைப் பார்த்தால் இராமனைப் போல இருக்கிறான். பக்கத்தில் இருக்கும் சத்ருகன் , இலக்குவனைப் போல இருக்கிறான். பாரதனோ ஒரு முனிவன் போல தவ வேடம் கொண்டு நிற்கிறான். துன்பத்தில் தோய்ந்த முகம். இராமன் இருக்கும் திசை பார்த்து தொழுகிறேன். இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா ?"

என்று எண்ணுகிறான்.

பாடல்

நம்பியும் என் நாயகனை
    ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
    தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
    திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
    இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்.

பொருள்

நம்பியும் = ஆடவர்களில் சிறந்தவனான பரதனும்

என் நாயகனை = என் நாயகனான இராமனை

ஒக்கின்றான்; = போல இருக்கிறான்

அயல் நின்றான் = அருகில் நிற்கும் சத்ருக்கனன்

தம்பியையும் ஒக்கின்றான் = இலக்குவனைப் போல இருக்கின்றான்

தவம் வேடம் தலைநின்றான் = தவ வேடம் புனைந்து நிற்கின்றான்

துன்பம் ஒரு முடிவு இல்லை = அளவற்ற துன்பத்தில் இருக்கிறான்

திசை நோக்கித் தொழுகின்றான்= இராமன் இருக்கும் திசையைப் பார்த்து வணங்குகிறான்

எம்பெருமான் = என்னுடைய பெருமானாகிய இராமனின்

பின்பிறந்தார் = பின்னால் பிறந்தவர்கள்

இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான் = தவறு இழைப்பார்களா ? (மாட்டார்கள்)


குகன் பரதனை பற்றி தவறாக நினைத்து இருந்தான். என்னதான் இராமன்  என்னை  தம்பி என்று சொன்னாலும், நான் தவறு செய்து விட்டேனே. பரதனை தவறாக  நினைத்து விட்டேனே. இராமனுக்குப் பின் பிறந்தவர்கள் எப்படி தவறு செய்வார்கள். நான் இராமானுக்குப் பின் பிறக்கவில்லை. அதனால் தான்  இந்த தவற்றை செய்து விட்டேன் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.

இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றால் என்ன  அர்த்தம் ?

ஒன்று, இராமனின் நல்ல குணங்களை பார்த்து அவர்களும் அதைப் பின் பற்றுவார்கள் என்று ஒரு பொருள்.. இராமாயணம் என்றாலே அது தானே. இராமன் + அயனம். அயனம் என்றால் பாதை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று  சூரியனின் பாதையை சொல்லுவதைப் போல.  இராமன் பின் பிறந்தவர்கள் இராமன் வழி நடப்பார்கள். தவறு செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது, தவறு செய்தால் இராமானுக்குப் பிடிக்காது. அவன் மனம் வருந்தும் என்று  நினைத்து தவறு செய்ய மாட்டார்கள். கானகம் செல்லும் படி தசரதன் ஆணை இட்டதும், இராமன் கிளம்பி விட்டான். இலக்குவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கோபம் கொள்கிறான். கொந்தளிக்கிறான். இராமன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கேட்கவில்லை.

இறுதியாக, பெரியவர்கள் சொல்வதை கேட்பது என் கொள்கை. உனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை என்று வருந்திச் சொன்னவுடன், தன் சினத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இராமன் பின்னாலேயே கிளம்பி விடுகிறான்  இலக்குவன்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பாடம் இங்கே நடக்கிறது.

தவறு செய்யும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு வரும். பொய் சொல்ல, பிறர் பொருளை  எடுத்துக் கொள்ள, கோபம் கொள்ள, இன்ன பிற தீய செயல்களில் ஈடுபட  சந்தர்ப்பம் வரும்.

பிள்ளைகள் இரண்டு விதமாய் தங்களை தடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று, பெற்றோருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், அடி பின்னி விடுவார்கள் எனவே   செய்யக் கூடாது என்பது ஒரு வழி.

இரண்டாவது, நான் இதைத் செய்தால் என் பெற்றோர்கள் வருந்துவார்கள். அவர்களை நான் வருத்தம்  கொள்ளச் செய்யக் கூடாது என்று நினைத்து செய்யாமல் இருப்பது இரண்டாவது வழி.

இரண்டாவது வழி எப்போதும் துணை நிற்கும். எத்தனை நாள் பிள்ளையை அடிக்க முடியும் ?

ஆனால்,பிள்ளைகள் அப்படி நினைக்க வேண்டும் என்றால் பிள்ளைகள் மேல் அன்பைக் கொட்டி வளர்க்க வேண்டும். எப்போதும் கண்டிப்பு என்றால், பிள்ளைகள் சலித்துப் போவார்கள்.

இராமனின் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் அந்தத் தவறு இராமனுக்கு வருத்தம் தரும் என்ற காரணத்தால்.

இராமனின் ஆளுமை, அவன் தோற்றம், அவன் நடத்தை எல்லாம் அவனைச் சேர்ந்தவர்களை  அவன் மேல் அன்பு கொள்ளச் செய்கிறது. எனவே, அவர்கள் தவறு செய்யய மாட்டார்கள்.

இந்த 'பின் பிறந்தார்' என்பதை சற்று விரித்து பொருள் கொண்டால் , இராமனை பின் பற்றப் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

இராமனை வணங்குபவர்கள், அவன் காட்டிய வழியைப் பின் பற்றுபவர்கள் தவறு செய்ய  மாட்டார்கள் என்பது முடிவு.

அப்படியே தவறு செய்தாலும், உணர்ந்து வருந்தி திருத்திக் கொள்வார்கள். குகனைப் போல.

பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு ?


Saturday, January 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை 


வெளியே எங்காவது போக வேண்டும் என்றால் நாம் எப்படி கிளம்புவோம் ?

தலை சீவி, கொஞ்சம் பவுடர் போட்டு, நல்ல உடை அணிந்து செல்வோம். பெரிதாக அலங்காரம் பண்ணாவிட்டாலும் பார்க்கும் படியாகவாவது செல்லுவோம் அல்லவா ?

பரதன், ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் கிளம்பி இராமனைப் பார்க்கப் போகிறான். மந்திரிகள் புடை சூழ, படை பின்னால் வர, மற்ற பெரியவர்கள், குல குரு , எல்லோரும் வருகிறார்கள். ஒரு அரசனுக்கு உரிய அலங்காரம் வேண்டும் அல்லவா. ஒரு பட்டு உடை, கிரீடம், இடுப்பில் வாள் , குளித்து முழுகி சுத்தமாக வந்திருப்பான் அல்லவா ?

இராமனைத் தேடி வரும் பரதனை , கங்கையின் மறு கரையில் உள்ள குகன் காண்கிறான்.

துணுக்குறுகிறான்.

மர பட்டையால் ஆன உடை அணிந்து இருக்கிறான். உடம்பு எல்லாம் ஒரே தூசி. உடம்பில் ஒரு ஒளி இல்லை.  முகத்தில் சிரிப்பு ஒரு துளியும் இல்லை. அவன் நிலையைப் பார்த்தால் கல் கூட கனிந்து விடும். அவனைப் பார்த்த குகன் மனம் நெகிழ்கிறான். அவன் கையில் உள்ள வில் அவனை அறியாமலேயே நழுவி விழுகிறது.

பாடல்

வற்கலையின் உடையானை
    மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
    நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
    துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்று ஒழிந்தான்.


பொருள்

வற்கலையின் உடையானை = வற்கலை என்றால் மரவுரி.

மாசு அடைந்த மெய்யானை = உடல் எல்லாம் ஒரே அழுக்கு. தூசி.

நல் கலை இல் மதி என்ன = கலை என்றால் நிலவின் பிறை. பிறை இல்லாத சந்திரன் எப்படி ஒளி மழுங்கி இருக்குமோ அப்படி இருந்தான்.

நகை இழந்த முகத்தானைக் = சிரிப்பை தொலைத்த முகம்

கல் கனியக் = கல்லும் கனியும்

கனிகின்ற துயரானைக் = துன்பத்தினால் மனம் கனியை போல நெகிழ்ந்து நிற்க

கண் உற்றான் = குகன் கண்டான்

வில் கையின் நின்று இடைவீழ = வில் கையில் இருந்து கீழே விழுந்தது

விம்முற்று = விம்மலுற்று

நின்று ஒழிந்தான் = நின்றான்

இராமன் மர உரி அணைந்து சென்றான் என்று அறிந்த பரதன், தானும் மர உரி அணிந்து வருகிறான்.

ஒரு வேளை நல்ல பட்டு உடை அணிந்து வந்தால் , அதைப் பார்க்கும் இராமன், ஒருவேளை தனக்கு இந்த ஆடம்பரங்களில் ஆசை இருக்கும் என்று நினைத்து விடலாம் , அப்படி நினைத்து அரசை தன்னிடமே கொடுத்து விடலாம் என்று  நினைத்து பரதனும் மர உரி அணிந்து வந்தான்.

இதில் ஒரு பாடம் நமக்கு இருக்கிறது.

பெரியவர்களை பார்க்கப் போகும் போது , எளிமையாக போக வேண்டும்.

நம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடை, நகை நட்டுகளை போட்டுக் கொண்டு அவர்கள் முன் போய் நிற்கக் கூடாது. பெரியவர்களை சுற்றி உள்ளவர்கள் எளிமையாக இருப்பார்கள். நாம் மட்டும் படோபடமாக சென்றால் , தனித்துப் போவோம். நம் செல்வத்தை, செல்வாக்கை காட்டும் இடம் அது அல்ல.

இன்னும் சொல்லப் போனால், அலுவலகத்தில் ஒரு மேலதிகாரியை பார்க்கப் போனால், அவரை விட உயர்ந்த ஆடை, கைக்கடிகாரம் இவற்றை அணிந்து சென்றால் அவருக்கு என்ன தோன்றும் ? என்னை விட இவன் உயர்ந்தவன் என்று  என்னிடமே காட்டுகிறானா என்று நினைக்கலாம். அல்லது, ஏற்கனவே நிறைய வசதி இருக்கும் போல ...இவனுக்கு கொடுக்க வேண்டிய பதவி உயர்வை, சம்பள உயர்வை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று நினைக்கலாம்.

கம்பர் அப்படிச் சொல்லவில்லை. நாம் சிந்திக்கலாமே.


"கல் கனியக் கனிகின்ற துயரானைக்"

பிறக்கும் போது மென்மையாக உள்ள மனம் நாளடைவில் கெட்டிப் பட்டுப் போகிறது. கல்லாய் போன மனதில் அன்பு, அருள், ஈரம், பக்தி என்று ஒன்றும்  இருக்காது. 

மனதில் இறைவன் திருவடி பாடியவேண்டும் என்றால் , மனம் மென்மையாக இருக்க வேண்டும். கல்லில் எப்படி எதுவும் படியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர் 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

மனம் உருக வேண்டும். 

இராமன் நிலை நினைத்து பரதனின் மனம் உருகுகிறது. கல்லும் கனியும் படி அவன் மனம் உருகுகிறது. 

வில் கையின் நின்று இடைவீழ,

அதைக் கண்ட குகனின் கையில் இருந்த வில் நழுவி விழுந்தது. மனம் வேறு ஒன்றைப் பற்றும் போது கை தானாகவே தன் பிடிப்பை நெகிழ விடும்.

சிவ பெருமானை காண்கிறார் மாணிக்க வாசகர். கை கூப்பி வணங்க வேண்டும். வணங்கவும் செய்கிறார். இருந்தும், அது ஒரு உண்மையான பக்தி அல்ல என்று அவர் நினைக்கிறார். கை கூப்பி வணங்க வேண்டும் என்றால் ஒரு முயற்சி வேண்டும். மனம் இறைவன் பால் இலயித்து விட்டால், கை நெகிழ்ந்து விடும். அதை உயர்த்தி இறைவனை வணங்க முடியாது. என்னால் அப்படி முடியவில்லையே என்று உருகுகிறார் மணிவாசகர். 


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 


ஆனால் குகன் ஒரு படி மேலே போகிறான். அவன் கை நெகிழ்ந்து வில் கையை விட்டு  விழுந்து விடுகிறது. 


மணிவாசகரால் கையை நெகிழ விட முடியவில்லை. குகன் கை நெகிழ்ந்தது. 


அப்படி நெகிழ்ந்த குகன் , பரதனை தவறாக நினைத்து விட்டேனே என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான். 

எப்படி தெரியுமா ?







Friday, January 13, 2017

இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்

இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்


இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டான் என்று நினைத்து பரதன் மேல் போர் தொடுக்க தயாராக நிற்கிறான் குகன். இராமன் மேல் அன்பு கொண்டவன் குகன் என்று மந்திரியாகிய சுமந்திரன் சொல்லக் கேட்டு, குகன் மேல் அன்பு கொண்டு அவனைக் காண எழுகிறான் பரதன்.

அவன் எழுந்தவுடன் அவனுடன் சத்ருக்கணும் கிளம்புகிறான். அருகில் வரும் அவர்களைக் கண்டு துணுக்குறுகிறான் குகன்.

பாடல்

என்று எழுந்த தம்பியொடும்,
     எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
     குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
     நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
     துண்ணென்றான்.

பொருள்

என்று எழுந்த தம்பியொடும் = கூடவே எழுந்த தம்பியோடும் (சத்ருக்கனன்)

எழுகின்ற காதலொடும் = மனதில் எழுகின்ற காதலோடும்

குன்று எழுந்து சென்றது எனக் = பெரிய குன்று எழுந்து சென்றது போல

குளிர் = குழறிந்த

கங்கைக் கரை = கங்கையாற்றின் கரையை

குறுகி = அடைந்து, நெருங்கி

நின்றவனை நோக்கினான் = நின்ற பரதனை நோக்கினான்

திரு மேனி நிலை உணர்ந்தான் = பரதனின் உடல் இருக்கும் நிலையை உணர்ந்தான்

துன்று = நெருங்கிய

கரு = கருமையான

நறுங் = நறுமணம் வீசும்

குஞ்சி = தலை முடியை உடைய

எயினர் = வேடர்

கோன் = அரசன்

துண்ணென்றான் = துணுக்குறான்



என்று எழுந்த தம்பியொடும் - "நீயும் என்னுடன் வா" என்று சத்ருகனனிடம் பரதன்  சொல்லவில்லை. பரதன் எழுந்தவுடன், அவன் கூடவே சத்ருக்கனனும் எழுந்தான். குறிப்பறிந்து செய்தான். 

பிறர் உள்ளத்தில் இருப்பதை அறிபவனை தெய்வத்தோடு ஒப்பிட்டு கூறுகிறார் வள்ளுவர். 

ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

ஏன் என்றால், சொல்லாமலேயே, மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் தெய்வம் ஒன்றுக்குத்தான் உண்டு. அரசன், மேலதிகாரி, ஆசிரியர், துணைவன், துணைவி, பிள்ளைகள் , பெற்றோர் யாராயிருந்தாலும் அவர்களின் மனதில் உள்ளதை அறிந்து  செயல்படுபவன் உயர்ந்தவன். 

சொல்லாமலேயே செய்ய வேண்டும். 

சிலர் , சொன்ன பின் செய்வார்கள். 

வேறு சிலர் சொன்ன பின்னும் செய்ய மாட்டார்கள். 

உயர்வில் இருந்து தாழ்வுக்கு தர வரிசை அப்படியே. 

பரதனின் உள்ளக் குறிப்பை சத்ருக்கன் அறிந்தான். 

பயிற்சி செய்து பாருங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களிடம், உங்கள் மேல் அன்பு கொண்டவர்களிடம், நீங்கள் அன்பு செய்பவர்களிடம் அவர்கள் கேட்காமலேயே , சொல்லாமலேயே அவர்களின் மனதை அறிந்து ஏதாவது   செய்து பாருங்கள் . வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று தெரியும். 

"உனக்கு பிடிக்கும் என்று இதை வாங்கி வந்தேன்"

"உங்களுக்கு பிடிக்கும் என்று இதைச் செய்தேன் "

என்று செய்து பாருங்கள். 

"துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்"

இதில் துன் என்ற சொல் மிக சுவாரசியமானது.

துன் என்றால் நெருக்குதல்.

துன்னியார் = நண்பர்
துன்னார் = பகைவர்
துன்னர் = தையல்காரர். இரண்டு துண்டு துணிகளை ஒன்றாக சேர்ப்பதால்
துன்னு = உடம்போடு ஒட்டிய தசை

அருகில் வந்த பரதனைக் கண்டு குகன் துணுக்குற்றான்

ஏன் ?

Thursday, January 12, 2017

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்


கணவன் வெளியூருக்குப் போகிறான் என்றால், மனைவிக்கு ஒரு இனம் தெரியாத கவலையும் பயமும் வந்து விடும்.

நேரா நேரத்துக்கு சாப்பிடணுமே , மறக்காம மருந்து சாப்பிடணுமே ,நல்ல சாப்பாடு கிடைக்குமா, அங்கு குளிருமா ? ரொம்ப சூடா இருக்குமா ? பத்திரமா போயிட்டு பத்திரமா வரணுமே என்று ஆயிரம் சஞ்சலம் மனதுக்குள்.

இந்தக் கவலை இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே பெண்ணுக்கு இந்தக் கவலை தான்.

பொருள் தேடி தலைவன் வெளியூர் செல்ல  வேண்டும். பிரிவு அவளை வருத்துகிறது.

பிரிவு  மட்டும் அல்ல, அவன் படப் போகும் துன்பங்களும் அவளை நெகிழ வைக்கிறது. என்னால் தானே அவன் இவ்வளவு துன்பப் படுகிறான் என்று நினைத்து அவள் உருகுகிறாள்.

அவள் அதிகம் வெளிய போனவள் அல்ல.  உலகம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.எல்லாம் கேள்விப் பட்டதுதான்.

அவன் போகப் போகும் பாலைவனத்தைப் பற்றி அவள் மிரள்கிறாள்.

அந்தப் பாலைவனம் அவள் கண் முன்னே விரிகிறது.

அது ஒரு சுட்டெரிக்கும் மணல் வெளி. மருத்துத்துக் கூட ஒரு மரம் கிடையாது.

அங்கங்கே பெரிய பாறைகள்  இருக்கிறது. பாறைகளுக்குப் பின்னால் கள்ளர்கள்,  வழிப்பறி செய்பவர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

யாராவது அந்த வழியே போனால், உடனே ஒரு விசில் அடிப்பார்கள். அந்த விசில் சத்தத்தை கேட்டு  அங்கே அலைந்து கொண்டிருக்கும் சில காட்டு விலங்குகள் வெருண்டு  ஓடும். விசில் சத்தம் கேட்டு மற்ற கள்வர்களும் வந்து விடுவார்கள். எல்லோரும்  ஒன்று சேர்ந்து வழிப்போக்கர்களை மிரட்டி அவர்களிடம் உள்ள பொருளை பறித்துக்  கொள்வார்கள்.

அப்படிப் பட்ட கொடிய பாலைவனத்தின் வழியே அவன் போக வேண்டியது இருக்கும் என்று கேட்ட உடனையே  கண்களில் நீர் ததும்பி  விட்டது.

பாடல்

கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை யத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.

பொருள்

கடுகி = விரைந்து

அதரலைக்குங் = அதர் என்றால் வழி.  வழியில் வருவோரை

கல்சூழ் = கற்கள் சூழ்ந்த

பதுக்கை = பதுங்கும் இடங்களைக் கொண்ட

விடுவி லெயினர்தம் =  விடு + வில் + எயினர் + தம் = வில்லில் இருந்து அமபை விடுகின்ற எயினர்களுடைய

 வீளையோர்த் தோடும் = வீளை  + ஓரத்து + ஓடும் = விசில் சப்தத்தை கேட்டு ஓடும்

நெடுவிடை = நெடு + விடை. விடை என்றால் காளை  மாடு. அஞ்சி நீண்ட தூரம் ஓடும் காளை மாடுகளைக் கொண்ட

அந்தம் = கடைசிவரை

செலவுரைப்பக் கேட்டே = செல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட உடனேயே

வடுவிடை = வடு மாங்காய் போன்ற கண்களை உடைய அவளின்

மெல்கின கண் = மெண்மையாக, மெளனமாக நீரை வெடித்தன . மெல்கின கண் என்றால் , கண்கள் மென்மையாகின என்று பொருள். எப்படி மென்மையாகும் ?

நாலு வரிக்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டம்.