Friday, January 27, 2017

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும் வழுவினன்

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை கரையை அடைந்தான். அவனை முதலில் தவறாக நினைத்த குகன் தன்னைத் திருத்திக் கொள்கிறான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், குகன் பரதனிடம் "நீ எதற்காக வந்தாய்" என்று கேட்கிறான்.

அதற்கு பரதன், "உலகம் முழுதும் ஆண்ட தசரதன் ஒரு தவறு செய்து விட்டான். அதை திருத்த இராமனை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

பாடல்

தழுவின புளிஞர் வேந்தன்
    தாமரைச் செங்கணானை
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
    எய்தியது என்னை? ‘என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
    முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
    மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.

பொருள்

தழுவின புளிஞர் வேந்தன் = தழுவிய வேடத் தலைவன்

தாமரைச் செங்கணானை = தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய பரதனை

‘எழுவினும் உயர்ந்த தோளாய்! = பெரிய தூண்/கம்பம் இவற்றை விட உயர்ந்த தோள்களை உடையவனே

எய்தியது என்னை? ‘என்ன = என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய் என்று கேட்டான்

‘முழுது உலகு அளித்த தந்தை = முழு உலகத்தையும் ஆண்ட தந்தை ஆகிய தசரதன்

முந்தையோர் முறையில் = முன்னோர் சென்ற முறையில்

நின்றும் = இருந்து

வழுவினன் = தவறினான்

அதனை நீக்க = அதை சரி செய்ய

மன்னனைக் கொணர்வான் ‘என்றான் = மன்னனான இராமனை கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன் என்றான்

கம்பன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போடுகிறான்.

தவறு செய்தது அரசன் அல்ல. தந்தை.

அரசனின் ஆணை மதிக்கப்பட வேண்டும்...சரியோ தவறோ ...அரசாணைக்கு எல்லோரும்  அடி பணிய வேண்டும். இன்று பரதன் பணியவில்லை என்றால் நாளை பரதனின் ஆணையை யார் பணிவார்கள்.

ஆனால், தந்தை தவறு செய்யலாம். தந்தையின் செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது .

அடுத்து, அரசனை கொணர்வான் வந்தேன் என்றான். அண்ணனை கொணர்வான் என்று சொல்லவில்லை. பரதன் மனதில் இராமன் தான் அரசன். யார் என்ன சொன்னாலும் அவனுக்கு கவலை இல்லை. இராமன் ஒருவன் தான்  அரசன்.


தந்தை நெறி தவறினான் என்று பகிரங்கமாக சொல்லுகிறான். இராமன் அப்படி பேசவில்லை. "அப்பா சொல்ல வேண்டுமா, நீ சொன்னால் போதாதா " என்று கைகேயின் வார்த்தை கேட்ட மாத்திரத்தில் கிளம்பி விட்டான்.

தந்தை செய்தது சரியா தவறா என்று அவன் வாதம் செய்யவில்லை.

அது இராமன் கண்ட அறம் .

ஆனால், பரதனுக்கு யார் சொன்னார்கள் என்பது பற்றி கவலை இல்லை. முறை என்று உண்டு. அறம் என்று ஒன்று உண்டு. யார் சொன்னாலும் அதை மீறக்  கூடாது என்று நினைக்கிறான்.


எது சரி ?

இராமன் எப்போதும் பெரியவர்கள் சொன்னதை கேட்டுத்தான் நடந்திருக்கிறான்...அறம் அல்ல என்று தெரிந்தாலும்.

பெண்ணைக் கொல்வது அறம் அல்ல என்று தெரிந்தாலும், விஸ்வாமித்ரன் சொன்னான் என்பதற்காக  அவளை கொல்கிறான்.

அப்போது இராமன் சொல்லவும் சொல்கிறான் "அறம் அல்லாதவற்றை நீ சொன்னால், நான் செய்வேன் " என்று வாக்கு மூலம் தருகிறான்.

அடுத்து, கைகேயி சொன்னால் என்பதற்காக மூத்த மகன் அரசாள வேண்டும் என்ற நெறியை கை விட்டு கானகம் போகிறான்.

அடுத்து, சபரி சொன்னால் என்பதற்காக ஆராயாமல் சுக்ரீவனோடு நட்பு பாராட்டுகிறான்.

ஆனால் , பரதன் அப்படி அல்ல. யார் என்ன சொன்னாலும், எது அறம் என்பதில் மிகத்  தெளிவாக இருக்கிறான்.

எது சரி ? இராமனின் வழியா ? பரதனின் வழியா ?

கம்பன் அதற்கும் ஒரு தீர்வு சொல்கிறான்.

அது என்ன தீர்வு ?



Wednesday, January 25, 2017

இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர

இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர 


போன பிளாகில் பிறர் மனம் நோகும்படி பேசுவது ஒரு அரக்க குணம் என்று  பார்த்தோம்.இராவணன் நல்லது சொன்னால் கூட மற்றவர்கள் பயப்படுவார்களாம். நல்லது பகரினும் நடுங்கும் நெஞ்சினர் என்பார்  கம்பர்.

இனிமையாக எப்படி பேசுவது என்று வள்ளுவர் கூறுவதையும் முந்தைய பிளாகில் பார்த்தோம். முகத்தை நோக்கி , மலர்ந்த முகத்துடன், இனிய சொற்களை கூற  வள்ளுவர் கூறுவதையும் பார்த்தோம்.

மாற்றாக, இராமன் எப்படி பேசுகிறான் என்று பார்ப்போம்.

இராமன், தெருவில் வருகிறான். நடந்து வருகிறான். எதிரில் யாரோ வயதான குடிமகன். இராமனுக்கு  அவனை யார் என்றே தெரியாது.

அவன் அருகில் சென்று விசாரிக்கிறான்...கருணையோடு, மலர்ந்த முகத்தோடு ...

"உன் மனைவி நலமா ? உன் பிள்ளைகள் படிக்கிறார்களா ? நல்ல வலிமையுடன் இருக்கிறார்களா ?" என்று கேட்கிறான்.

பாடல்

எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.


பொருள்

எதிர் வரும் = எதிரில் வரும்

அவர்களை. = பொது மக்களை

எமையுடை இறைவன் = எங்களை கொண்ட இறைவனாகிய இராமன்

முதிர் தரு கருணையின் = கனிந்த கருணையான

முகமலர் ஒளிரா = முகமாகிய மலர் ஒளிர

‘எது வினை? = வேலை எல்லாம் எப்படி போகிறது

இடர் இலை? = துன்பம் ஒன்றும் இல்லையே

இனிது நும் மனயையும்? = உன் மனைவி இன்பமாக இருக்கிறாளா ?

மதி தரு குமரரும் = அறிவுள்ள பிள்ளைகளும்

வலியர்கொல்?’ எனவே = வலிமையோடு இருக்கிறார்களா ?

என்று  கேட்டான்.

இதில் பல நுட்பமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

முதலாவது, முதிர் தரு கருணையின்....கருணையான முகத்ததோடு. முகத்தில் கருணை  இருக்க வேண்டும். எப்போதும் கடு சிடு என்று இருக்கக் கூடாது.

 இரண்டாவது,"முக மலர் ஒளிர" ...மலர் போல முகம் ஒளிர வேண்டும்.

ஒளிர்தல் என்பது மிக பெரிய  விஷயம்.  இராமன் கானகம்  போகிறான்.அவன் உடலில் இருந்து வெளி வரும் ஒளியில் சூரியனின் ஒளியே மங்கிப் போய் விட்டதாம்.

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்

வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி 

தன் மேனியின் விரிசோதி = இராமனின் மேனியில் இருந்து வரும் ஒளியில் மறைய 

திருவாசகத்தில் சிவனை ஒளி வடிவமாக பல இடங்களில் கூறுகிறார். 

மூன்றாவது, ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று இராமன் அறிந்து அதைப் பற்றி விசாரிக்கிறான்.

மனைவி இன்பமாக இருக்கிறாளா ? வீட்டில் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் எல்லாமே  மகிழ்ச்சியாக இருக்கும். அவள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் மற்றவை மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை.

மதி தரும் மைந்தர் - பிள்ளைகள் படித்து அறிவாளிகளாக இருக்க வேண்டும்.  இளமையில் படிக்காத மகன் வீட்டுக்கு அட்டமத்துச் சனி என்பார் ஒளவையார் 

காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி


படித்தால் மட்டும் போதாது , வலிமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மனத்திலும், உடலிலும் வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அறிவு மட்டும் போதாது. வல்லமையும் வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒருவரிடம் எவ்வளவு அன்போடு அக்கறையோடு விசாரிக்கிறான்.

நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் நாம் எப்போதாவது அப்படி கேட்டது உண்டா ? நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள காவல்காரரை (secuirty ) நாம் அப்படி விசாரித்தது உண்டா ?

யாரிடமும் அன்போடு, இனிமையாக பேசுவோம். அது ஒரு தெய்வீக குணம்.

எளிதானதுதானே ? 

Tuesday, January 24, 2017

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் 


அரக்கர் என்பவர் ஏதோ பெரிய உருவத்துடன், பெரிய பற்களுடன் , கருப்பாய், இருப்பவர்கள் அல்ல.  சில குணங்கள் நம்மை அரக்கர்களாக்கும். சில குணங்கள் நம்மை தெய்வமாக்கும்.

எந்த குணங்கள் அரக்க குணங்கள் ?

வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமை, பணியாமல் இருப்பது, விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமை ஒரு அரக்க குணம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

இனிமையாக பேசாமல் இருப்பது இன்னொரு அரக்க குணம். பேச்சில் இனிமை வேண்டும்.

இராவணன் நல்லது சொன்னால் கூட அருகில் இருப்பவர்கள் பயப்படுவார்களாம்.


பாடல்

அன்னவன் அமைச்சரை நோக்கி, 
     ஆண்டு ஒரு 
நல் மொழி பகரினும் 
     நடுங்கும் சிந்தையர், 
'என்னைகொல் பணி?' 
     என இறைஞ்சுகின்றனர். 
கின்னரர், பெரும் 

    பயம் கிடந்த நெஞ்சினர்.


பொருள்

அன்னவன் = இராவணன்

அமைச்சரை நோக்கி = அமைச்சர்களை பார்த்து

ஆண்டு  = அங்கு

ஒரு = ஒரு

நல் மொழி =நல்ல வார்த்தை

பகரினும் = சொன்னாலும்

நடுங்கும் சிந்தையர் = நடுக்கம் கொள்ளும் மனம் கொண்டவர்

'என்னைகொல் பணி?' = சொன்ன வேலை என்ன

என இறைஞ்சுகின்றனர் = என்று கெஞ்சி, கேட்பார்கள் .

கின்னரர் = தேவர்கள்

பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் = பெரிய பயத்தை உடைய மனம் கொண்டவர்கள்

பேசும் போது இனிமையாக பேச வேண்டும். நல்லது சொல்லும் போது கூட மற்றவர்கள் பயப்படும்படி பேசுவானாம் இராவணன்.

சரி, இராவணன் அப்படி பேசுகிறான். அது கெட்ட குணம்தான்.

எப்படி இனிமையாகப் பேசுவது ?

நமக்கு வாழ்வில் என்ன சிக்கல் , துன்பம், பிரச்சனை வந்தாலும், அதை கேள்வியாக மாற்றி, வள்ளுவரிடம் கேட்டால் அதற்கு அவர் பதில் தருவார்.

எப்படி இனிமையாக பேசுவது ? என்று வள்ளுவரிடம் கேட்டால், அவரிடம் வரும் பதில்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.

ஒருவனின் முகத்தை பார்த்து, இனிது  நோக்கி, நல்ல மனத்தோடு இனிய சொற்களை சொல்லுவதே அறம் என்கிறார்.

இனிய சொல் என்று ஒரு சொல் கிடையாது.

"உடம்பு எப்படி இருக்கிறது " என்ற மூன்று சொல்லை எப்படியும் சொல்லலாம்.

வள்ளுவர் சொல்கிறார்,

வந்தவனின் முகம் பார்த்து அறிய வேண்டும். அவனுக்கு என்ன சிக்கல் என்று. பசித்து வந்து இருக்கிறானா, பொருள் வேண்டி வந்திருக்கிறானா, வேறு ஏதாவது குடும்பச் சிக்கலா ? உடல் ஆரோக்கியம் சரி இல்லையா என்று முகம் பார்த்து அறிய வேண்டும்.

கனிவோடு அவனை பார்க்க வேண்டும். நம் முகத்தில் ஒரு கோபத்தையும், வெறுப்பையும், வைத்துக் கொண்டு என்ன சொன்னாலும் அது இனிய சொல் ஆகாது.

அவனது மனம் மகிழும்படி சொல்ல வேண்டும்.

ஒரு ஆறுதல், ஒரு தைரியம், ஒரு தன்னம்பிக்கை, ஒரு உற்சாகம் வரும்படி பேச வேண்டும்.

சொல் மட்டும் அல்ல. என்ன சொல்கிறோம் என்பது மட்டும் அல்ல, எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.

இராவணன் நல்லது தான் சொன்னான். அவன் சொன்ன விதம் மற்றவர்களை பயம் கொள்ளச் செய்கிறது.

முகம் பார்த்து பேசுங்கள். மற்றவர்கள் மகிழும்படி பேசுங்கள்.

அப்படி பேசாமல் இருப்பது அரக்க குணம்.

இராவணன் அப்படி பேசினான். அவன் ஒரு அரக்கன்.

இராமன் எப்படி பேசினான் ? வள்ளுவர் கூறிய மாதிரி இராமன் பேசினானா ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்.









Sunday, January 22, 2017

நாலடியார் - எது அழகு ?

நாலடியார் - எது அழகு ?


அழகு இதில் இருக்கிறது ?

Beauty Parlor , சிகை அலங்காரம், பல விதமான நவீன உடைகள், உதட்டுச் சாயம், முகத்திற்கு பூசும் பொடிகள், என்று பலவிதங்களில் நம்மை அழகு படுத்திக் கொள்கிறோம்.

இதெல்லாம் அழகா ? நீடித்து நிற்கும் அழகா ?

முடியை எத்தனை அழகு செய்தாலும், வெளியே சென்றவுடன் ஒரு காற்று அடித்தால் கலைந்து விடும்.

எத்தனை powder கள் போட்டாலும், ஒரு வியர்வை, ஒரு மழை வந்தால் கரைந்து விட்டும்.

வெளியே செய்யும் அழகு எல்லாம் சில நிமிடங்கள்தான். மிஞ்சி மிஞ்சி போனால் சில மணி நேரம்.

உண்மையான அழகு எது தெரியுமா - ஒழுக்கத்தைத் தரும் கல்வி அழகே உண்மையான அழகு என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்


குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.


பொருள்

குஞ்சி யழகும் = குஞ்சி என்றால் ஆண்களின் தலை முடி. முடியின் அழகும் 

இராமன் முடி சூட்டாமல் வருகிறான். அவனை தூரத்தில் இருந்து பார்த்த கோசலை நினைக்கிறாள், மஞ்சன புனித நீரால் இராமனின் முடி நனைய வில்லை என்று...


‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
     மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
     ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ

     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.


கொடுந்தானைக் கோட்டழகும் = தானை என்றால் ஆடை. கோட்டம் என்றால் வளைவு.  வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு.

மஞ்சள் அழகும் = மஞ்சளின் அழகும்

அழகல்ல = அழகு அல்ல

நெஞ்சத்து = மனதில்

நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்

என்னும் = என்ற

நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்

கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு


முடி - ஆண்களுக்கு. 

மஞ்சள் - பெண்களுக்கு 

ஆடை - இருவருக்கும் 

எனவே ஆண் பெண் என்ற இருவருக்கும் இந்த வெளி வேடங்களில் அழகு இல்லை. 

கல்வியால் தான் அழகு.

கல்வி என்றால் என்ன ? நிறைய புத்தகங்கள் வாசித்து வருவதும், பட்டங்கள் பெறுவதும் அல்ல  கல்வி.

ஒழுக்கத்துடன் , நல்லவர்களாக வாழ எது வழி காட்டுகிறதோ அதுவே கல்வி. 

ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்து இருந்தாலும், உலகம் அவனை போற்றாது.இராவணன் பெரிய கல்விமான் தான். "நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த" நா வன்மை கொண்டவன் தான். அவனிடம் அறிவு இருந்தது. ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லா கல்வியால் பயன் இல்லை.  

நல்லவர்களாக இருக்க வேண்டும். 

நடுவு நிலைமை பிறழாதவர்களாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டையும் தரும் கல்வியின் அழகே அழகு.

ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாலடியார்.

"நல்லம் யாம்" . நாம் நல்லவர்கள் என்று நம் மனதுக்குத் தெரிய வேண்டும். 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பார் வள்ளுவர். 



அந்த கல்வியில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது ?

மேலும் சிந்திப்போம். 




Saturday, January 21, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான்

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான் 


பரதனைக் காண குகன் வருகிறான். முதலில் ஏதோ இராமன் மேல் கோபம் கொண்டுதான் பரதன் வந்து விட்டான் என்று நினைத்தான். பின், பரதனின் தவ வேடம் கண்டு, தான் நினைத்தது தவறு என்று அறிந்து, பரதனைக் காண குகன் தனியே வருகிறான்.

வரும் குகனை நானே சென்று பார்ப்பேன் என்று பரதன் எழுந்து செல்கிறான்.

குகனை நோக்கி கை கூப்பிய படி வருகிறான் பரதன். அப்படி வந்த பரதனை குகன் வணங்கினான்.  வணங்கிய குகனின் கால்களில் பரதன் விழுந்தான். விழுந்த பரதனை ஒரு தந்தை மகனை எடுத்து அணைப்பது போல எடுத்து அணைத்துக் கொண்டான்.

பாடல்

வந்து, எதிரே தொழுதானை
    வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும்
    அவனும், அவனடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத்
    தழுவினான், தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும்

    வீற்றிருக்கும் சீர்த்தியான்.


பொருள்


வந்து = தனியாக வந்து (வந்தது குகன்)

எதிரே தொழுதானை = எதிரில் தொழுத படி நிற்கும் பரதனை

வணங்கினான் = (குகன்) வணங்கினான்

மலர் இருந்த அந்தணனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

தனை வணங்கும் = தன்னை வணங்கும்படி இருக்கும்

அவனும் = பரதனும்

அவனடி வீழ்ந்தான் = குகனின் காலில் விழுந்தான்

தந்தையினும் களி கூரத் = ஒரு தகப்பனைவிட மிக மகிழ்ந்து

தழுவினான் = தழுவிக் கொண்டான் குகன்

தகவு உடையோர் = தகுதி உடையவர்கள்

சிந்தையினும் = சிந்தனையிலும்

சென்னியினும் = தலையிலும்


வீற்றிருக்கும் சீர்த்தியான் = எப்போதும் இருக்கும் பெருமை கொண்ட குகன்


பரதன் குகனைத் தொழுதான்

குகன் பரதனை வணங்கினான்

பரதன் குகன் காலில் விழுந்தான்

குகன் பரதனை தழுவிக் கொண்டான்

என்ன நடக்கிறது இங்கே ?

பரதன் ஒரு பேரரசின் மன்னன். குகன் ஒரு ஓடம் ஓட்டுபவன்.  ஒரு சக்கரவர்த்தி  ஓடம் ஓட்டுபவனின் காலில் விழுவதை நம்மால் எண்ணிப் பார்க்க முடியுமா ?

பரதன் விழுந்தான்.

பரதனுக்குத் தெரியாதா ?

தெரியும்.

பல விஷயங்கள் இந்த பாடலில் ஒளிந்து இருக்கிறது.

முதலாவது, இறைவனின் முன்னால் எல்லோரும் சமம். உருவம் இராம பக்தர்கள். இதில் பெரியவன் என்ன சிறியவன் என்ன. யாரை யார் தொழுதால் என்ன ? யார் காலில் யார் விழுந்தால் என்ன ? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

இரண்டாவது, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். குகன் பரதனை தழுவிக் கொண்டான்.  வீட்டுப் பெண்மணிகள், தங்கள் வீட்டில் வேலை பார்க்கும்  பெண்களை தழுவிக் கொள்வதை நம்மால் சிந்திக்க முடியுமா ?  வீட்டு வாசலில் காவல் நிற்கும் அந்த காவலாளியை நம்மால் கட்டி அணைக்க முடியுமா ?  கையாவது கொடுப்போமா ?  வியர்வையில் நனைந்து, மீன் வாடை அடைக்கும் குகனை பரதன் தழுவிக் கொண்டான். அன்பும் பக்தியும் வந்து விட்டால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியவன், சின்னவன், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. எல்லோரும் சமம். இது வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது, பக்தர்களுக்குள் வேறுபாடு கிடையாது. இன்று பக்தர்களுக்குள்ளேதான் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது. அவர் பெரியவர். இவர்  பெரியவர். அவர் இத்தனை முறை அந்த கோவிலுக்குப் போய் இருக்கிறார், அவர் மடாதிபதி, சன்னிதானம், தலைவர், குரு , என்று ஆயிரம் பாகுபாடுகள். இதெல்லாம் போக வேண்டும். ஒரே ஒரு முறை பார்த்த குகனும், கூடவே பிறந்த பரதனும் ஒருவருக்கு ஒருவர் சமமாக பழகினார்கள். பக்தியில்  சீனியாரிட்டி எல்லாம் கிடையாது.


நான்காவது, இராமன் குகனை தம்பி என்றான். குகனோ பரதனை மகனாக நினைக்கிறான். ஒரு தந்தை தன் மகனை அணைத்துக் கொண்டாள் எவ்வளவு மகிழ்வானோ , அதை விட மகிழ்ந்தான் குகன். அவ்வளவு அன்பு, வாஞ்சை. பக்தி என்று வந்து விட்டால், அன்புக்கு அளவே இல்லை.

பக்தி செலுத்துவோருக்கு ஒரு பாடம் இந்த பாடல்.



Thursday, January 19, 2017

குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து

 குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து 


பெண்கள் எதையும் நேரடியாகத் சொல்வது இல்லை. கொஞ்சம் சுத்தி வளைத்துத்தான் சொல்லுவது வழக்கம்.

பொருள் தேடி வெளியூர் போகப் போகிறான் தலைவன். மனைவியைப் பிரிந்து , அவள் தரும் அன்பை பிரிந்து பொருள் தேடுவதுதான் உயர்ந்தது என்று செல்லும் அவர்தான் அறிவுள்ளவர் என்றால் அவர் அறிவுள்ளவராகவே இருந்து விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்திவிட்டுப் போகிறேன்.

மனைவி மற்றும் உறவுகளை விட்டு விட்டு அயல் நாட்டுக்குப் போகாதே. அது முட்டாள்தனம் என்று நேராகச் சொல்லி விடலாம். சொல்லவில்லை.

அப்படிச் செய்ற நீதான் புத்திசாலி. நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாள் இந்த குறுந்தொகை கால மனைவி.

பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் போல....

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. 


சீர் பிரித்த பின்

அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோராக
மடவமாக மடந்தை நாமே.

பொருள்


அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

நீங்கி = விட்டுப் பிரிந்து

துணை = மனைவியைத்

துறந்து = விட்டு விலகி

பொருள்வயிற் = பொருள் தேடி

பிரிவோர் = பிரிந்து செல்வோர்

உரவோராயின் = வலிமை உள்ளவர் என்றால்  (உரம் = வலிமை). இங்கே புத்திசாலி, அல்லது அறிவாளி

உரவோர் = புத்திசாலி

உரவோராக = புத்திசாலியாகவே இருந்துவிட்டு போகட்டும்

மடவமாக = மடத்தனம் கொண்ட

மடந்தை நாமே = பெண்கள் நாமே

இதில் உள்ள நுணுக்கமான செய்திகளை பார்க்க வேண்டும்.

அன்பு என்பது நம்மிடம் உறவு உள்ளவர்களிடம் தோன்றும் இரக்கம்.

அருள் என்பது நம்மிடம் உறவு இல்லாதவரிடத்தும் தோன்றும் இரக்கம்.


அருளும் அன்பும் நீங்கி ....

என்கிறாள். மனைவி என்ற அன்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பெண் துன்பப படுகிறாளே  என்ற அருளாவது இருக்க வேண்டாமா என்பது அவள் கேள்வி.


"துணை துறந்து  பொருள்வயிற் பிரிவோர்....."

பணம் சேர்ப்பது ஒன்றுதான் வாழ்வின் குறிக்கோளா ? பணம் வேண்டும்தான். அதற்காக எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோம் என்று  சிந்திக்க வேண்டும் ?

ஆரோக்கியம் ? அன்பு ? உறவு ? அறிவு தேடல் ? என்று எத்தனையோ நல்ல விஷயங்களை  இழந்து விடுகிறோம்.

அயல் நாடு தான் போக வேண்டும் என்று இல்லை.

வீட்டையும், உறவுகளையும் , உடல் ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப் படமால் பணம் பணம்   என்று ஓடி ஓடி சம்பாதிப்பது அறிவான செயல்தானா ?

பொருள் அவசியம் தேவைதான். அதற்காக கொடுக்கும் விலை என்ன என்று யோசிக்கச் சொல்கிறாள். பணம் எல்லாம் சம்பாதித்து விட்டு வந்து பார்த்தால் வயது போயிருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை என்று போயிருப்பார்கள். ஆரோக்கியம் போயிருக்கும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அவள் முடிக்கும் போது , "நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லவில்லை.

"மடவமாக மடந்தை நாமே"

நாமே என்று சொல்கிறாள். யார் இந்த "நாம்" ? எல்லா பெண்களும் அப்படித்தான்  நினைப்பார்கள்.

அருளும், அன்பும், துணையும் அவர்களுக்கு பணத்தை விட முக்கியம்.

அப்படி நினைக்கும் எங்களை உலகம் முட்டாகள் என்று சொல்கிறது. அப்படியே இருந்து விட்டு  போகட்டும். நீங்கள் எல்லாம் புத்திசாலியாகவே இருங்கள் என்கிறாள்.

யார் புத்திசாலி ? யார் முட்டாள் ?

விவாதம் தொடர்கிறது. இன்று வரை விடை கிடைக்கவில்லை.

கொஞ்சம் நிறுத்தி , யோசிப்போம். 


Wednesday, January 18, 2017

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே 


தமயந்தி தனித்து இருக்கிறாள் நளனை நினைத்தபடி. இரவு அவளுக்கு துன்பம் தருகிறது. இரவு முடிகிற பாடாக இல்லை. நீண்டு கொண்டே இருக்கிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். நிலவு மட்டும்தான் இருக்கிறது.

அதனிடம் பேசுகிறாள்.

"ஏய் குளிர்ந்த நிலவே. இளைய நிலவே ! என் குழலின் மேல் விடமால் ஏன் உன் குளிர்ந்த ஒளியை விடாமல் செலுத்துகிறாய் ? இந்த மன்மதன் என் மேல் போர் தொடுக்க உனக்கு இந்த விடியாத இரவை ஆயுதமாக கொடுத்து அன்பினானா " என்று கேட்கிறாள்.

பாடல்


ஈர மதியே ! இளநிலவே ! இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று.


பொருள்

ஈர மதியே ! = குளிர்ந்த நிலவே

இளநிலவே ! = இளமையான நிலவே

இங்ஙனே = இப்படி

சோர்குழலின் = அவிழ்த்து விடப்பட்ட குழலின்

மீதே = மீது

சொரிவதெவன் = பொழிவது ஏன் ?

மாரன் = மன்மதன்

பொரவளித்தான் = போர் அளித்தான். போருக்கு அனுப்பினான்

கண்ணி உனக்குப் = கன்னியாகிய உனக்கு

புலரா = விடியாத

இரவளித்தான்  = இரவை அளித்தான்

அல்லனோ = அல்லவா

இன்று = இன்று

நிலவே நீ  குளிர்ந்த கதிரை பாய்ச்ச வேண்டியவள். என் மேல் மட்டும் ஏன் தீயை  அள்ளி தெளிக்கிறாய் , அப்படிச் செய்யாதே. எனக்கும் குளிர்ச்சியைத் தா  என்று சொல்ல "குளிர்ந்த நிலவே" என்கிறாள்.

நீயும் என்னைப் போல இளமையானவள் தானே. காதலின் பிரிவு என்ன என்று உனக்கும்  தெரியும்தானே. பின் ஏன் என்னை துன்பப் படுத்துகிறாய். போய் விடு என்று சொல்லுவதைப் போல , இளைய நிலவே என்று சொல்லுகிறாள்.


போருக்கு என்னென்னெவோ ஆயுதங்கள் உண்டு. கத்தி, வில், அம்பு என்று. இங்கே மன்மதன் , நிலவை போருக்கு அனுப்புகிறான், இரவு என்ற ஆயுதத்தை  கொடுத்து.

என்ன ஒரு கற்பனை !!