Sunday, February 5, 2017

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்


பிள்ளைகள் ஒரு கால கட்டத்திற்குப் பின், வீட்டை விட்டு போய் விடுவார்கள். மேல் படிப்பு படிக்க வேண்டியோ, அல்லது வேலை நிமித்தமாகவோ அல்லது திருமணம் முடித்தோ வீட்டை விட்டு போக வேண்டியது இருக்கும்.

அவர்கள் போன பின், வீடு கொஞ்சம் வெறிச்சோடித் தான் போய் விடுகிறது.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். பைன் விளையாடிய வீடியோ கேம்ஸ், அவன் பைக், சைக்கிள், புத்தகங்கள் என்று. பெண் பிள்ளையாக இருந்தால் அவளின் துணி மணிகள், அழகு சாதன பொருள்கள், புத்தகங்கள், என்று அவர்களின் பொருள்கள் எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த பொருள்களை தூக்கி வேறு எங்காவது கண் காணாத இடத்தில் வைத்து விடலாம் என்றால் அதுக்கும் மனம் வராது. சரி, அவற்றை பார்காமலாவது இருக்கலாம் என்றால் அதுக்கும் மனம் வராது.

பிள்ளை ஹாஸ்டலில் எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போவோம். அங்கே ஒரு சிறிய கட்டில் இருக்கும். உட்கார கடினமாக ஒரு நாற்காலி இருக்கும். புழங்க அதிகமான இடம் ஒன்றும் இருக்காது. அடடா , பிள்ளை எப்படி இருந்தவன் இங்க வந்து இப்படி துன்பப் படுகிறானே என்று மனம் தவிக்கும். இருந்தாலும் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் அவனுக்கு கஷ்டமாக இருக்குமே என்று "நல்லாதான் இருக்கு " என்று ஒப்புக்குச் சொல்லி விட்டு வருவோம். 

கட்டிக் கொடுத்த பெண்ணைப் பார்க்கப் போனால் அவள் அதிகாலை எழுந்து வீட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். நம் வீட்டில் இருந்தவரை காலையில் சுகமாக படுத்து உறங்கி இருப்பாள். காலைத் தூக்கம் அவளுக்கு ரொம்பப்  பிடிக்கும். 

 என்ன செய்வது. வந்த இடம் அப்படி. பொறுப்புகள் அதிகம். 

எப்படி சுகமாக இருந்த பிள்ளைகள் எப்படி கஷ்டப் படுகின்றனவே என்று மனதுக்குள் அழுவோம். 

வேறு என்னதான் செய்ய முடியும் ?

பிரிவுத்    துன்பம் பெரிய துன்பம்தான்.

இராமனை பிரிந்த பரதன் , அவனைத் தேடிக் கொண்டு கங்கை கரையை அடைகிறான். அங்கே குகனின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், இராமன் இருந்த இடத்தை காட்டும் படி குகனிடம் பரதன் வேண்டுகிறான். குகனும் காட்டுகிறான். 

ஓடோடிச் சென்று இராமன் இருந்த இடத்தை காணுகிறான் பரதன். 

இராமன்  கல்லின் மேல் புற்களை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். அரண்மனையில், ஒரு சக்ரவர்த்தியின் மகன் எப்படி இருந்திருப்பான். அவன் படுக்கை எப்படி இருந்திருக்கும் ? 

இங்கே, கல்லின் மேல் புல்லைப் பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். 

அதைக் கண்ட பரதன் உருகுகிறான்.  

பாடல் 

கார் எனக் கடிது சென்றான்;
     கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
    வைகியபள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரற்பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்.



 பொருள் 

கார் எனக் = நீர் கொண்ட மேகம் போல 

 கடிது சென்றான் = விரைந்து சென்றான் 

கல்லிடைப் படுத்த புல்லின் = கல்லின் மேல் புல்லைப்  பரப்பி

வார் சிலைத் = நீண்ட , நேர்மையான வில்லை 

தடக் கை வள்ளல் = தன்னுடைய கையில் கொண்ட வள்ளல் 

வைகிய = தங்கிய, உறங்கிய 

பள்ளி = படுக்கையைக் 

கண்டான் = கண்டான் 

பார்மிசைப் = தரையின் மேல் 

பதைத்து = பதறி 

வீழ்ந்தான் = வீழ்ந்தான் 

பருவரல் = துன்பம் 

பரவை = கடலில் 

புக்கான் = புகுந்தான் 

வார் மணிப் புனலால் = மணி போன்ற கண்களில் இருந்து 

மண்ணை = மண்ணை 

மண்ணு நீர் = மஞ்சன நீர் 

ஆட்டும் = ஆட்டும் 

கண்ணான் = கண்களை கொண்ட பரதன் 


கார் எனக் கடிது சென்றான்... கார் மேகம் போலச் சென்றான் பரதன். பரதன் கரிய செம்மல். அதுவும் இல்லாமல், பின்னால் மண்ணை தன்னுடைய கண்ணீரால் நீராட்டினான் என்று சொல்லும் போது கார் மேகம் மழை பொழிவது நமக்கு நினைவுக்கு வரும். 

வைகியபள்ளி கண்டான்.... வைகுதல் என்றால் இருத்தல். "உண் " என்றால் ஒன்று படுதல். சேர்ந்து இருந்தல் என்று பொருள். "அம் " விகுதி. 

வை + உண்  + தம் = வைகுண்டம்.  

ஒன்று பட்டு இருத்தல். 

அது இருக்கட்டும் ஒரு புறம்..

நமக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் எவ்வளவு துவண்டு போகிறோம்.

உடல் நோவு, பணக் கஷ்டம், பிள்ளைகள் படிப்பு என்று எவ்வளவோ கவலைப் படுகிறோம். ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பம் என்று அலுத்துக் கொள்கிறோம். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....

சக்கரவர்த்தி திருமகன் இராமன், எல்லாம் இழந்து  காட்டில் வந்து பாறையின் மேல் புல்லை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். நம்மால் ஒரு நாள் மெத்தை இல்லாமல் படுக்க முடியுமா ? 

ஒரு நாள் வீடு வேலை செய்யும் பெண் வரவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இராமனுக்கு அரண்மனையில் எவ்வளவு பணியாட்கள் இருந்திருப்பார்கள். காட்டில் ? 

துன்பம் வரும். அதுவும் வாழ்வில் ஒரு பகுதி.  அந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். இராமனின் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரியது ? 

எல்லாம் பழகிக் கொள்ள வேண்டியதுதான். 

கல்லின் மேல் இராமன் படுத்து இருந்தது மட்டும் அல்ல பரதனின் கவலைக்கு காரணம்.... பின் ?



Wednesday, February 1, 2017

இராமாயணம் - பரதன் குகன் - என் புகழ்கின்றது ஏழை எயினனேன்

இராமாயணம் - பரதன் குகன் -  என் புகழ்கின்றது ஏழை எயினனேன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை அடைந்தான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் எண்ணம் அறிந்து, "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ " என்று பரதனை போற்றுகிறேன்.

குகன்மேலும் தொடர்கிறான்

"வானில் பல நட்சத்திரங்கள், நிலா போன்ற ஒளி விடும் பொருள்கள்  இருக்கின்றன.ஆனாலும், சூரியன் அவற்றின் ஒளியை எல்லாம் மங்கச் செய்து தான் மட்டும் பிரகாசமாய் ஒளி விடுவது போல, பரதா , உன் புகழ் உன் முன்னவர்களின் புகழை எல்லாம் ஒளி மழுங்கச் செய்து விட்டது"

பாடல்

என் புகழ்கின்றது ஏழை
    எயினனேன்? இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை
    ஒளிகளைத் தவிர்க்குமா போல, 
மன் புகழ் பெருமை நுங்கள்
    மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
    உயர் குணத்து உரவு தோளாய்!




பொருள் 

என் புகழ்கின்றது = என்ன சொல்லி புகழ்வேன்

ஏழை எயினனேன்? = ஏழை வேடன்

இரவி என்பான் = சூரியன் என்பவன்

தன் புகழ்க் கற்றை = தன் புகழ் கற்றை  (ஒளி கற்றை என்று கொள்க)

மற்றை = மற்ற நட்சத்திரம், நிலா போன்றவற்றின்

ஒளிகளைத் = ஒளிகளை

தவிர்க்குமா போல = மறைத்து விடுவதைப் போல

மன் புகழ் = நிலைத்து நிற்கும் புகழ்

பெருமை = பெருமை

நுங்கள் = உங்கள்

மரபினோர் = முன்னோர்கள்

புகழ்கள் எல்லாம் = அனைத்துப் புகழையும்

உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் = உன்னுடைய புகழாக ஆக்கிக் கொண்டாய்

உயர் குணத்து = உயர்ந்த குணத்து

உரவு தோளாய்! = வலிமையான தோள்களை கொண்டவனே

தன்னுடைய உயர்ந்த குணத்தால் மற்றவர்களின் புகழை எல்லாம் மழுங்கச் செய்து விட்டான் பரதன்.

அரசை வேண்டாம் என்றான். அது என்னவோ அவனுக்கு உரிய அரசு அல்லதான். அதை திருப்பிக் கொடுத்தது பெரிய உயரிய குணமா ?

வேறு ஏதாவது குணம் இருக்கிறதா ?

பாப்போம்.






Monday, January 30, 2017

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வந்து அரசை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரதன் புறப்பட்டு வருகிறான். வந்த பரதனை முதலில் தவறாக எண்ணிய குகன் அவனின் நோக்கம் அறிந்து தன் தவறை அறிந்து மாற்றிக் கொள்கிறான்.

பரதனை நோக்கி குகன் கூறுகிறான் "தாயின் வரத்தினால் , தந்தை தந்த அரசை தீவினை என்று நினைத்து , அந்த அரசை மீண்டும் இராமனிடம் தர வந்திருக்கும் உன்னைப் பார்த்தால், ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா , தெரியவில்லை "  என்றான்.

பாடல்

தாய் உரை கொண்டு, தாதை
    உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
    புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
    ஆவரோ? தெரியின் அம்மா

பொருள்

தாய் உரை கொண்டு = தாய் கொண்ட வரத்தினால்

தாதை  உதவிய = தந்தை தந்த

தரணி தன்னைத் = உலகம் தன்னை (அரசை)

தீ வினை என்ன = தீவினை என்று

நீத்துச் = விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கிப் = சிந்தனை தோய்ந்த முகத்துடன்

போயினை என்ற போழ்து = கானகம் வந்தாய் என்ற போது

புகழினோய்! = புகழை உடையவனே

தன்மை கண்டால் = உன்னுடைய தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் = ஆயிரம் இராமர்

நின் = உனக்கு

கேழ் = ஒப்பு, சமம்



கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங் கருணை, கேழ் இல் விழுப்பொருள் என்பார் மணிவாசகர். 

ஆவரோ? = ஆவர்களா

தெரியின் அம்மா = தெரியவில்லை அம்மா

ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா என்று.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான்  ?


தனக்கு உரிமை இல்லாத ஒரு அரசை உரியவரிடம் தருவதற்கு வந்திருக்கிறான். அது ஒரு பெரிய பெருமையா ?

இராமன் தனக்கு உரிய அரசை விட்டுக் கொடுத்தான் . அவனை விட பரதன் எப்படி  உயர்ந்தவன் ?

இராமன் தானே விட்டு கொடுக்கவில்லை. தாய் பெற்ற வரத்தால் , தந்தை சொன்னதால் இராமன் பதவியை துறக்க நேர்ந்தது. இராமனுக்கு அது இரண்டுவிதமான கட்டளை...

ஒன்று தந்தையின் கட்டளை.

இன்னொன்று அரச கட்டளை.

மீற முடியாது.

ஆனால், பரதனின் நிலை அப்படி அல்ல.

தாய் கைகேயி பெற்ற வரம். தந்தை மற்றும் அரசன் ஒத்துக் கொண்டு தந்த அரசு. குல குரு, அமைச்சர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

பரதன் அரசை ஏற்றுக் கொண்டால் யாரும் அவனை குறை கூற முடியாது.

யார் என்ன சொன்னாலும், அது தவறு, அறம் அல்ல என்று பரதன் நினைத்தான்.

அவன் மனமும் செயலும் அறத்தின் வழி நின்றது.

அது , அதிகம் படிக்காத குகனுக்குக் கூட தெரிந்தது.

அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பது வள்ளுவம்.

பரதன் மனதில் இருந்தது அவன் முகத்தில் தெரிந்தது.

அதை அறிந்த குகன் "ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்றான்.


Friday, January 27, 2017

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும் வழுவினன்

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை கரையை அடைந்தான். அவனை முதலில் தவறாக நினைத்த குகன் தன்னைத் திருத்திக் கொள்கிறான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், குகன் பரதனிடம் "நீ எதற்காக வந்தாய்" என்று கேட்கிறான்.

அதற்கு பரதன், "உலகம் முழுதும் ஆண்ட தசரதன் ஒரு தவறு செய்து விட்டான். அதை திருத்த இராமனை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

பாடல்

தழுவின புளிஞர் வேந்தன்
    தாமரைச் செங்கணானை
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
    எய்தியது என்னை? ‘என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
    முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
    மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.

பொருள்

தழுவின புளிஞர் வேந்தன் = தழுவிய வேடத் தலைவன்

தாமரைச் செங்கணானை = தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய பரதனை

‘எழுவினும் உயர்ந்த தோளாய்! = பெரிய தூண்/கம்பம் இவற்றை விட உயர்ந்த தோள்களை உடையவனே

எய்தியது என்னை? ‘என்ன = என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய் என்று கேட்டான்

‘முழுது உலகு அளித்த தந்தை = முழு உலகத்தையும் ஆண்ட தந்தை ஆகிய தசரதன்

முந்தையோர் முறையில் = முன்னோர் சென்ற முறையில்

நின்றும் = இருந்து

வழுவினன் = தவறினான்

அதனை நீக்க = அதை சரி செய்ய

மன்னனைக் கொணர்வான் ‘என்றான் = மன்னனான இராமனை கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன் என்றான்

கம்பன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போடுகிறான்.

தவறு செய்தது அரசன் அல்ல. தந்தை.

அரசனின் ஆணை மதிக்கப்பட வேண்டும்...சரியோ தவறோ ...அரசாணைக்கு எல்லோரும்  அடி பணிய வேண்டும். இன்று பரதன் பணியவில்லை என்றால் நாளை பரதனின் ஆணையை யார் பணிவார்கள்.

ஆனால், தந்தை தவறு செய்யலாம். தந்தையின் செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது .

அடுத்து, அரசனை கொணர்வான் வந்தேன் என்றான். அண்ணனை கொணர்வான் என்று சொல்லவில்லை. பரதன் மனதில் இராமன் தான் அரசன். யார் என்ன சொன்னாலும் அவனுக்கு கவலை இல்லை. இராமன் ஒருவன் தான்  அரசன்.


தந்தை நெறி தவறினான் என்று பகிரங்கமாக சொல்லுகிறான். இராமன் அப்படி பேசவில்லை. "அப்பா சொல்ல வேண்டுமா, நீ சொன்னால் போதாதா " என்று கைகேயின் வார்த்தை கேட்ட மாத்திரத்தில் கிளம்பி விட்டான்.

தந்தை செய்தது சரியா தவறா என்று அவன் வாதம் செய்யவில்லை.

அது இராமன் கண்ட அறம் .

ஆனால், பரதனுக்கு யார் சொன்னார்கள் என்பது பற்றி கவலை இல்லை. முறை என்று உண்டு. அறம் என்று ஒன்று உண்டு. யார் சொன்னாலும் அதை மீறக்  கூடாது என்று நினைக்கிறான்.


எது சரி ?

இராமன் எப்போதும் பெரியவர்கள் சொன்னதை கேட்டுத்தான் நடந்திருக்கிறான்...அறம் அல்ல என்று தெரிந்தாலும்.

பெண்ணைக் கொல்வது அறம் அல்ல என்று தெரிந்தாலும், விஸ்வாமித்ரன் சொன்னான் என்பதற்காக  அவளை கொல்கிறான்.

அப்போது இராமன் சொல்லவும் சொல்கிறான் "அறம் அல்லாதவற்றை நீ சொன்னால், நான் செய்வேன் " என்று வாக்கு மூலம் தருகிறான்.

அடுத்து, கைகேயி சொன்னால் என்பதற்காக மூத்த மகன் அரசாள வேண்டும் என்ற நெறியை கை விட்டு கானகம் போகிறான்.

அடுத்து, சபரி சொன்னால் என்பதற்காக ஆராயாமல் சுக்ரீவனோடு நட்பு பாராட்டுகிறான்.

ஆனால் , பரதன் அப்படி அல்ல. யார் என்ன சொன்னாலும், எது அறம் என்பதில் மிகத்  தெளிவாக இருக்கிறான்.

எது சரி ? இராமனின் வழியா ? பரதனின் வழியா ?

கம்பன் அதற்கும் ஒரு தீர்வு சொல்கிறான்.

அது என்ன தீர்வு ?



Wednesday, January 25, 2017

இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர

இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர 


போன பிளாகில் பிறர் மனம் நோகும்படி பேசுவது ஒரு அரக்க குணம் என்று  பார்த்தோம்.இராவணன் நல்லது சொன்னால் கூட மற்றவர்கள் பயப்படுவார்களாம். நல்லது பகரினும் நடுங்கும் நெஞ்சினர் என்பார்  கம்பர்.

இனிமையாக எப்படி பேசுவது என்று வள்ளுவர் கூறுவதையும் முந்தைய பிளாகில் பார்த்தோம். முகத்தை நோக்கி , மலர்ந்த முகத்துடன், இனிய சொற்களை கூற  வள்ளுவர் கூறுவதையும் பார்த்தோம்.

மாற்றாக, இராமன் எப்படி பேசுகிறான் என்று பார்ப்போம்.

இராமன், தெருவில் வருகிறான். நடந்து வருகிறான். எதிரில் யாரோ வயதான குடிமகன். இராமனுக்கு  அவனை யார் என்றே தெரியாது.

அவன் அருகில் சென்று விசாரிக்கிறான்...கருணையோடு, மலர்ந்த முகத்தோடு ...

"உன் மனைவி நலமா ? உன் பிள்ளைகள் படிக்கிறார்களா ? நல்ல வலிமையுடன் இருக்கிறார்களா ?" என்று கேட்கிறான்.

பாடல்

எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.


பொருள்

எதிர் வரும் = எதிரில் வரும்

அவர்களை. = பொது மக்களை

எமையுடை இறைவன் = எங்களை கொண்ட இறைவனாகிய இராமன்

முதிர் தரு கருணையின் = கனிந்த கருணையான

முகமலர் ஒளிரா = முகமாகிய மலர் ஒளிர

‘எது வினை? = வேலை எல்லாம் எப்படி போகிறது

இடர் இலை? = துன்பம் ஒன்றும் இல்லையே

இனிது நும் மனயையும்? = உன் மனைவி இன்பமாக இருக்கிறாளா ?

மதி தரு குமரரும் = அறிவுள்ள பிள்ளைகளும்

வலியர்கொல்?’ எனவே = வலிமையோடு இருக்கிறார்களா ?

என்று  கேட்டான்.

இதில் பல நுட்பமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

முதலாவது, முதிர் தரு கருணையின்....கருணையான முகத்ததோடு. முகத்தில் கருணை  இருக்க வேண்டும். எப்போதும் கடு சிடு என்று இருக்கக் கூடாது.

 இரண்டாவது,"முக மலர் ஒளிர" ...மலர் போல முகம் ஒளிர வேண்டும்.

ஒளிர்தல் என்பது மிக பெரிய  விஷயம்.  இராமன் கானகம்  போகிறான்.அவன் உடலில் இருந்து வெளி வரும் ஒளியில் சூரியனின் ஒளியே மங்கிப் போய் விட்டதாம்.

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்

வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி 

தன் மேனியின் விரிசோதி = இராமனின் மேனியில் இருந்து வரும் ஒளியில் மறைய 

திருவாசகத்தில் சிவனை ஒளி வடிவமாக பல இடங்களில் கூறுகிறார். 

மூன்றாவது, ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று இராமன் அறிந்து அதைப் பற்றி விசாரிக்கிறான்.

மனைவி இன்பமாக இருக்கிறாளா ? வீட்டில் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் எல்லாமே  மகிழ்ச்சியாக இருக்கும். அவள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் மற்றவை மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை.

மதி தரும் மைந்தர் - பிள்ளைகள் படித்து அறிவாளிகளாக இருக்க வேண்டும்.  இளமையில் படிக்காத மகன் வீட்டுக்கு அட்டமத்துச் சனி என்பார் ஒளவையார் 

காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி


படித்தால் மட்டும் போதாது , வலிமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மனத்திலும், உடலிலும் வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அறிவு மட்டும் போதாது. வல்லமையும் வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒருவரிடம் எவ்வளவு அன்போடு அக்கறையோடு விசாரிக்கிறான்.

நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் நாம் எப்போதாவது அப்படி கேட்டது உண்டா ? நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள காவல்காரரை (secuirty ) நாம் அப்படி விசாரித்தது உண்டா ?

யாரிடமும் அன்போடு, இனிமையாக பேசுவோம். அது ஒரு தெய்வீக குணம்.

எளிதானதுதானே ? 

Tuesday, January 24, 2017

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் 


அரக்கர் என்பவர் ஏதோ பெரிய உருவத்துடன், பெரிய பற்களுடன் , கருப்பாய், இருப்பவர்கள் அல்ல.  சில குணங்கள் நம்மை அரக்கர்களாக்கும். சில குணங்கள் நம்மை தெய்வமாக்கும்.

எந்த குணங்கள் அரக்க குணங்கள் ?

வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமை, பணியாமல் இருப்பது, விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமை ஒரு அரக்க குணம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

இனிமையாக பேசாமல் இருப்பது இன்னொரு அரக்க குணம். பேச்சில் இனிமை வேண்டும்.

இராவணன் நல்லது சொன்னால் கூட அருகில் இருப்பவர்கள் பயப்படுவார்களாம்.


பாடல்

அன்னவன் அமைச்சரை நோக்கி, 
     ஆண்டு ஒரு 
நல் மொழி பகரினும் 
     நடுங்கும் சிந்தையர், 
'என்னைகொல் பணி?' 
     என இறைஞ்சுகின்றனர். 
கின்னரர், பெரும் 

    பயம் கிடந்த நெஞ்சினர்.


பொருள்

அன்னவன் = இராவணன்

அமைச்சரை நோக்கி = அமைச்சர்களை பார்த்து

ஆண்டு  = அங்கு

ஒரு = ஒரு

நல் மொழி =நல்ல வார்த்தை

பகரினும் = சொன்னாலும்

நடுங்கும் சிந்தையர் = நடுக்கம் கொள்ளும் மனம் கொண்டவர்

'என்னைகொல் பணி?' = சொன்ன வேலை என்ன

என இறைஞ்சுகின்றனர் = என்று கெஞ்சி, கேட்பார்கள் .

கின்னரர் = தேவர்கள்

பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் = பெரிய பயத்தை உடைய மனம் கொண்டவர்கள்

பேசும் போது இனிமையாக பேச வேண்டும். நல்லது சொல்லும் போது கூட மற்றவர்கள் பயப்படும்படி பேசுவானாம் இராவணன்.

சரி, இராவணன் அப்படி பேசுகிறான். அது கெட்ட குணம்தான்.

எப்படி இனிமையாகப் பேசுவது ?

நமக்கு வாழ்வில் என்ன சிக்கல் , துன்பம், பிரச்சனை வந்தாலும், அதை கேள்வியாக மாற்றி, வள்ளுவரிடம் கேட்டால் அதற்கு அவர் பதில் தருவார்.

எப்படி இனிமையாக பேசுவது ? என்று வள்ளுவரிடம் கேட்டால், அவரிடம் வரும் பதில்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.

ஒருவனின் முகத்தை பார்த்து, இனிது  நோக்கி, நல்ல மனத்தோடு இனிய சொற்களை சொல்லுவதே அறம் என்கிறார்.

இனிய சொல் என்று ஒரு சொல் கிடையாது.

"உடம்பு எப்படி இருக்கிறது " என்ற மூன்று சொல்லை எப்படியும் சொல்லலாம்.

வள்ளுவர் சொல்கிறார்,

வந்தவனின் முகம் பார்த்து அறிய வேண்டும். அவனுக்கு என்ன சிக்கல் என்று. பசித்து வந்து இருக்கிறானா, பொருள் வேண்டி வந்திருக்கிறானா, வேறு ஏதாவது குடும்பச் சிக்கலா ? உடல் ஆரோக்கியம் சரி இல்லையா என்று முகம் பார்த்து அறிய வேண்டும்.

கனிவோடு அவனை பார்க்க வேண்டும். நம் முகத்தில் ஒரு கோபத்தையும், வெறுப்பையும், வைத்துக் கொண்டு என்ன சொன்னாலும் அது இனிய சொல் ஆகாது.

அவனது மனம் மகிழும்படி சொல்ல வேண்டும்.

ஒரு ஆறுதல், ஒரு தைரியம், ஒரு தன்னம்பிக்கை, ஒரு உற்சாகம் வரும்படி பேச வேண்டும்.

சொல் மட்டும் அல்ல. என்ன சொல்கிறோம் என்பது மட்டும் அல்ல, எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.

இராவணன் நல்லது தான் சொன்னான். அவன் சொன்ன விதம் மற்றவர்களை பயம் கொள்ளச் செய்கிறது.

முகம் பார்த்து பேசுங்கள். மற்றவர்கள் மகிழும்படி பேசுங்கள்.

அப்படி பேசாமல் இருப்பது அரக்க குணம்.

இராவணன் அப்படி பேசினான். அவன் ஒரு அரக்கன்.

இராமன் எப்படி பேசினான் ? வள்ளுவர் கூறிய மாதிரி இராமன் பேசினானா ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்.









Sunday, January 22, 2017

நாலடியார் - எது அழகு ?

நாலடியார் - எது அழகு ?


அழகு இதில் இருக்கிறது ?

Beauty Parlor , சிகை அலங்காரம், பல விதமான நவீன உடைகள், உதட்டுச் சாயம், முகத்திற்கு பூசும் பொடிகள், என்று பலவிதங்களில் நம்மை அழகு படுத்திக் கொள்கிறோம்.

இதெல்லாம் அழகா ? நீடித்து நிற்கும் அழகா ?

முடியை எத்தனை அழகு செய்தாலும், வெளியே சென்றவுடன் ஒரு காற்று அடித்தால் கலைந்து விடும்.

எத்தனை powder கள் போட்டாலும், ஒரு வியர்வை, ஒரு மழை வந்தால் கரைந்து விட்டும்.

வெளியே செய்யும் அழகு எல்லாம் சில நிமிடங்கள்தான். மிஞ்சி மிஞ்சி போனால் சில மணி நேரம்.

உண்மையான அழகு எது தெரியுமா - ஒழுக்கத்தைத் தரும் கல்வி அழகே உண்மையான அழகு என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்


குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.


பொருள்

குஞ்சி யழகும் = குஞ்சி என்றால் ஆண்களின் தலை முடி. முடியின் அழகும் 

இராமன் முடி சூட்டாமல் வருகிறான். அவனை தூரத்தில் இருந்து பார்த்த கோசலை நினைக்கிறாள், மஞ்சன புனித நீரால் இராமனின் முடி நனைய வில்லை என்று...


‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
     மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
     ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ

     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.


கொடுந்தானைக் கோட்டழகும் = தானை என்றால் ஆடை. கோட்டம் என்றால் வளைவு.  வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு.

மஞ்சள் அழகும் = மஞ்சளின் அழகும்

அழகல்ல = அழகு அல்ல

நெஞ்சத்து = மனதில்

நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்

என்னும் = என்ற

நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்

கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு


முடி - ஆண்களுக்கு. 

மஞ்சள் - பெண்களுக்கு 

ஆடை - இருவருக்கும் 

எனவே ஆண் பெண் என்ற இருவருக்கும் இந்த வெளி வேடங்களில் அழகு இல்லை. 

கல்வியால் தான் அழகு.

கல்வி என்றால் என்ன ? நிறைய புத்தகங்கள் வாசித்து வருவதும், பட்டங்கள் பெறுவதும் அல்ல  கல்வி.

ஒழுக்கத்துடன் , நல்லவர்களாக வாழ எது வழி காட்டுகிறதோ அதுவே கல்வி. 

ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்து இருந்தாலும், உலகம் அவனை போற்றாது.இராவணன் பெரிய கல்விமான் தான். "நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த" நா வன்மை கொண்டவன் தான். அவனிடம் அறிவு இருந்தது. ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லா கல்வியால் பயன் இல்லை.  

நல்லவர்களாக இருக்க வேண்டும். 

நடுவு நிலைமை பிறழாதவர்களாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டையும் தரும் கல்வியின் அழகே அழகு.

ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாலடியார்.

"நல்லம் யாம்" . நாம் நல்லவர்கள் என்று நம் மனதுக்குத் தெரிய வேண்டும். 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பார் வள்ளுவர். 



அந்த கல்வியில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது ?

மேலும் சிந்திப்போம்.