Sunday, February 4, 2018

அகநானூறு - நீங்குதல் மறந்தே

அகநானூறு - நீங்குதல் மறந்தே 


பொருளாதாரம் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

பல வீடுகளில் கணவன் காலையில் ஒரு ஏழு அல்லது எட்டு மணிக்கு வேலைக்குப் போனால் இரவு வரும் போது எட்டு அல்லது ஒன்பது ஆகி விடும். அலுவலக நேரம் போக நிறைய நேரம் போக்குவரத்தில் போய் விடுகிறது.

இரவு வந்த பின், களைப்புதான் இருக்கும். போதா குறைக்கு பல நேரங்களில் conference call என்று வீட்டுக்கு வந்த பின்னும் வேலை தொடரும்.

வேலை இல்லாவிட்டாலும், அலுவலக சிந்தனையில் இருப்பார்கள்.

கொடுமை என்ன என்றால், பெண்களும் இப்போது வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைக்கு மேல் , வீட்டு வேலையும் அவர்களுக்கு சேர்ந்து கொள்கிறது.

கணவன் மனைவிக்கு இடையில் அன்பை பரிமாறிக் கொள்ள நேரம் இல்லை.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் செலவழிக்க நேரம் இல்லை.

ஓடி ஓடி சம்பாதித்து, களைத்த பின், அந்த சம்பாதித்த பணத்தை மருத்துவரிடம் தந்துவிட்டு ....என்ன ஆயிற்று நம் வாழ்க்கைக்கு என்று ஏங்குவதே முடிவாக இருக்கும்.

இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனை இல்லை.

சங்க காலம் தொட்டு நிகழ்வதுதான்.

அக நானூறில் ஒரு பாடல்.

அது ஒரு வறண்ட பாலை நிலம். மழை பெய்து ஆண்டு பல ஆகி விட்டன. பச்சை நிறமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்.

அந்த பொட்டை காட்டில் , ஒரு பெரிய மரம். அதுவும் பட்டுப் போய் இருக்கிறது. மரத்தின் அடி பாகத்தில் ஒரு பெரிய ஓட்டை. அதன் மூலம் வெப்பக் காற்று வீசும் போது ஊய்ய்ய் என்று சத்தம் வருகிறது.

மரத்தின் உச்சியில் ஒரு பருந்து கூடு. அதில் வாழும் இரண்டு பருந்துகள். அடிக்கடி தின்று விட்டு போட்ட மிச்ச மாமிச துண்டுகளில் இருந்து மாமிச வாடை அடித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கூண்டில்.

அடிக்கிற வெயிலிலும், உலர்ந்த காற்றிலும், அந்த பருந்துகளின் இறக்கையில் தீப் பிடித்தது போல  ஒரு தோற்றம்.

அந்தக் காட்டின் வழி சென்று, பொருள் தேடி வர நினைக்கிறான் கணவன்.

அவனுக்குள் ஒரு சஞ்சலம்.

மனைவியை விட்டு பிரிய வேண்டும். அவளின் அன்பு, அவளின் காதல், அவள் அணைப்பு தரும் சுகம் , இவற்றை எல்லாம் விட்டு விட்டுப் போகவும் மனம் இல்லை. பொருள் பெரிதா, மனைவியோடு இருந்து அவள் தரும் அன்பு பெரிதா என்ற கேள்வி அவன் முன் நிற்கிறது.

அவன் என்ன முடிவு செய்தான் ?

பாடல்

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
2
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி   5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
3
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது,                 10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.

பொருள் 

ஆள் வழக்கு அற்ற  = ஆள் அரவம் அற்ற


சுரத்திடைக் = காட்டு வழியில், காட்டின் இடையில்

கதிர் தெற = வெயில் மண்டைய பிளக்க

நீள் = நீண்ட, இங்கு அதிக

எரி பரந்த = அனல் பறக்கும்

நெடுந் = நெடிய, உயரமான

தாள் = அடி , அடி மரம்

யாத்து = 'யா ' என்ற மரத்தின்

போழ் வளி முழங்கும் = அடி மரத்தில் போகும் காற்று முழக்கம் செய்ய

புல்லென் = பொலிவற்ற (இலை , பூ இல்லாத)

உயர்சினை = சினை என்றால் உறுப்பு. இங்கே கிளை. உயர்ந்த கிளையில்


முடை நசை = மாமிச  நாற்றம் அடிக்கும்

இருக்கைப் = இருக்கும் இடம். கூடு

பெடை முகம் நோக்கி = பெண் பருந்தின் முகம் நோக்கி

ஊன் பதித்தன்ன = மாமிச துண்டை ஒட்டி வைத்தது போல

வெருவரு = அச்சம் தரும்

செஞ் செவி = சிவந்த காதுகளை கொண்ட

எருவைச் = பருந்து

சேவல் = சேவல்

கரிபு  = கரிந்து

சிறை  = சிறகு

தீய = தீய்ந்து போகும் படி

வேனில் நீடிய = உயர்ந்த மூங்கில்

வேய்  உயர் நனந்தலை = அகன்ற பெரிய காடுகளில்

நீ = நீ , தலைவன் தன் நெஞ்சுக்கு சொல்லுகிறான்

உழந்து எய்தும்  = கஷ்டப்பட்டு   அடையும்

செய்வினைப் = வேலை செய்ததால் கிடைக்கும்

பொருட் பிணி = ஈட்டிய பொருள்கள், செல்வங்கள்

பல் இதழ் = பல இதழ்கள் கொண்ட (மலர் போன்ற )

மழைக் கண்  = மழை போன்ற குளிர்ச்சியான கண்கள்

மாஅயோள்வயின் = மாநிறம் போன்ற அவளை

பிரியின் = பிரிந்த பின்

புணர்வது ஆயின் = அடைவது என்றால் (செல்வத்தை)

பிரியாது = அவளை விட்டுப் பிரியாமல்

ஏந்து முலை  = எடுப்பான மார்பகங்கள்

முற்றம் வீங்க = அன்பினால் நிறைவடைய

பல் ஊழ் = பல முறை

சேயிழை  = சிவந்த அணிகலன்களை   அணிந்த பெண்

தெளிர்ப்பக் = ஒலிக்க ,  அவள்அ கட்டி அணைக்கும் போது கேட்கும் வளையல் சத்தமும், உன்னை கண்டவுடன் ஆர்வமாக ஓடி வரும் அவளின் கொலுசு சத்தமும்

கவைஇ, நாளும் = நாள் தோறும்

மனைமுதல் = வீட்டில் இருந்து (உள்ளூரிலேயே இருந்து )

வினையொடும் = வேலை செய்து

உவப்ப = மகிழ்ச்சியோடு இரு

நினை = அது பற்றி நினை

மாண் நெஞ்சம்! = சிறந்த நெஞ்சே

நீங்குதல் மறந்தே = அவளை விட்டு நீங்குதலை மறந்தே

பொருள் தேவைதான். பொருளை விட சிறந்தது மனைவியின் அன்பு.

அப்படி சிறப்பாக நினைக்க வேண்டும் - கணவன்.

அது சிறப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும் - மனைவி.

 அன்புக்கும் நேரம் ஒதுக்குங்கள். வாழ்வு இனிக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_4.html



Friday, February 2, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - அறம் நோனார் ஈண்டார்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - அறம் நோனார் ஈண்டார் 


சீதையை சூழ்ச்சியால் கவர வேண்டும் என்று கூறிய இராவணனுக்கு  , மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

ஒவ்வொருவனும் நினைக்கிறான்...தான் சிறந்தவன், பலசாலி, அறிவுள்ளவன், எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன் என்று.

இராவணன் பெரிய பலசாலி. அறிவுள்ளவன். பக்திமான். எல்லாம் தான். கம்பன் இராவணனை மிக உயர்வாகவே காட்டுகிறான்.

இப்பேற்பட்ட நான், ஒரு மானிட பெண் மேல் ஆசைப்பட்டது என்ன தவறு. நான் அவளை தூக்கி வந்து விட்டால், என்னை யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறான். அவன் பலம் அவனுக்கு அந்த ஆணவத்தைத் தந்தது.

மாரீசன் சொல்கிறான். அடேய் இராவணா , உன்னை விடவும் பலசாலிகள் இதற்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். நீ தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ? அற வழியில் நில்லாதவர்கள் எவ்வளவோ பேர். அவர்கள் பேர் கூட வரலாற்றில் இல்லை. நீயும் அந்த வழியில் சென்று விடாதே என்று பதறுகிறான்.

இரணியனிடம் , பிரகலாதன் இதையே கூறினான். கேட்டார் யார் ?


"இறந்தவர்கள் இறந்தவர்களாக இருக்கட்டும். நீ அவர்கள் வழியில் செல்ல வேண்டாம். அந்தத் தவறை செய்தால் , நீ தப்பும் வழி இல்லை. உனக்கு முன் , உன்னை விட பெரிய பல சாலிகள் எவ்வளவோ பேர் இருந்தார்கள். அறத்தை பேணாதவர்கள் நிலைத்து நின்றவர் யாரும் இல்லை "

பாடல்

'மாண்டார், மாண்டார்; நீ இனி 
     மாள்வார் தொழில் செய்ய 
வேண்டா, வேண்டா; செய்திடின், 
     உய்வான் விதி உண்டோ? 
ஆண்டார் ஆண்டார் எத்தனை 
     என்கேன்? அறம் நோனார், 
ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? 
     எல்லாம் இலர் அன்றோ?

பொருள்

'மாண்டார், மாண்டார்; = இறந்தவர்கள்நீ இறந்தவர்கள்

இனி = இனி மேல்

மாள்வார் தொழில் = இறப்பவர்களின் தொழிலை

செய்ய வேண்டா, வேண்டா = செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம்

செய்திடின் = செய்தால்

உய்வான் = தப்பும்

விதி உண்டோ? = வழி இருக்கிறதா ?

ஆண்டார் ஆண்டார் எத்தனை = உனக்கு முன் ஆண்டவர்கள் எத்தனை பேர்

என்கேன்? = என்று கேட்கிறேன்

அறம் நோனார் = அறத்தை நோன்பாக கொள்ளாதவர்கள்

ஈண்டார்; ஈண்டு ஆர் = இங்கு யார், இங்கு யார்

நின்றவர்? = நிலைத்து நின்றவர்

எல்லாம் இலர் அன்றோ? = ஒருவரும் இல்லை அன்றோ ?

மாண்டார் , மாண்டார் : அதற்கு என்ன அர்த்தம். இறந்தவர்கள் இறந்தவர்கள் என்றால்  என்ன அர்த்தம் ?

என்ன செய்தாலும், இந்த உடல் ஒரு நாள் மாளத்தான் போகிறது. இறப்பு என்பது  உடம்புக்கு உண்டு. அற வழியில் நின்றாலும், நிற்கவிட்டாலும் உடல் இறந்தே தீரும்.

அற வழியில் நின்றால், உடல் இறக்கும். புகழ் இறக்காது . நிலைத்து வாழும். அற வழியில் நில்லாதார் உடல் இறக்கும் போது , அவர்கள் புகழும் இறந்து போகும். உடனே இல்லாவிட்டாலும், சிறிது காலத்தில் மறைந்து போகும்.

வாழ்தல் என்பதே புகழோடு வாழ்தல் என்று தான் பெரியவர்கள் கொள்வார்கள்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

இசை என்றால் புகழ். புகழ் இல்லாமால் வாழ்பவர்கள், வாழாதவர்களே என்கிறார் வள்ளுவர்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம். பையனோ பெண்ணோ வீட்டில் பெரிய சுமையை தூக்க நினைக்கும் போது , அருகில் உள்ள பெற்றோர்கள் பதறுவார்கள்.

"பாத்து பாத்து ..மெல்லமா " என்று.

எதுக்கு இரண்டு தடவை சொல்ல வேண்டும். பதற்றம். ஒரு வேளை பிள்ளை அந்த சுமையை தூக்கி , அது கீழே விழுந்து பிள்ளைக்கு அடி கிடி பட்டுவிடுமோ என்ற பதற்றம்.

தவறு நடந்து விடக் கூடாதே என்ற பதற்றம், பயம்.

மாரீசனுக்குத் தெரிகிறது. இராவணன் செய்ய நினைப்பது தவறு என்று. மாண்டார், மாண்டார்....ஆண்டார், ஆண்டார் என்று சொன்னதையே திரும்பிச் சொல்லி தன் பதற்றத்தை காட்டுகிறான். செஞ்சு தொலைச்சுருவானோ என்ற பயத்தில்.

இராவணன் மேல் உள்ள பாசம், அவன் செய்ய நினைக்கும் செயலில் உள்ள பாவம்  அவனை புலம்ப வைக்கிறது.

"மாள்வார் தொழில்" ..புகழ் அடைய விரும்பாதவர் செயல். மாள்தல் என்றால் புகழ் அழிதல்.

நிறைய பேர் நினைக்கிறார்கள். பாவம் செய்து விட்டால், ஏதாவது பிரயாச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று. தான தர்மம் செய்து, கோவிலுக்குப் போய் , புனித நீர் ஆடி பாவத்தை தொலைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அறத்தை கொன்றவர்களுக்கு அதில் இருந்து தப்பும் வழியே இல்லை என்கிறான் மாரீசன்.

"செய்திடின்,  உய்வான் விதி உண்டோ? " என்று கேட்கிறான்.

தவம் செய்து, தான தர்மம் செய்து பாவத்தை போக்கிக் கொள்ள முடியாது என்கிறான்.


"அறம் நோனார்,  ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? "

அறத்தை, நோன்பு நோற்பது போல பக்தியோடு கடை பிடிக்க வேண்டும். ஏதோ , ஏனோ தானோ என்று கடை பிடிக்கக் கூடாது.

அறத்தை நோன்பாக நோற்கவில்லையென்றால் , புகழ் நிற்காது.

மாரீசன் இராவணனுக்குச் சொன்னதாக, கம்பர் நமக்குச் சொல்கிறார்.

கேட்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_2.html

Thursday, February 1, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள் 


சீதையை சூழ்ச்சியால் கவர்வோம் என்ற இராவணனின் எண்ணத்தை மறுத்து மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

"நான் சொல்வதை மீறி வேறு ஏதாவது செய்தால், உனக்கு தீ வினையும், பழியும் வந்து சேரும். இராமனின் பாணங்கள் உன் சந்ததியையே அழித்து விடும் " என்கிறான்.

பாடல்

'செய்தாயேனும், தீவினையோடும் 
     பழி அல்லால் 
எய்தாது, எய்தாது; எய்தின், இராமன், 
     உலகு ஈன்றான், 
வைதால் அன்ன வாளிகள் கொண்டு, 
     உன் வழியோடும் 
கொய்தான் அன்றே, கொற்றம் 
     முடித்து, உன் குழு எல்லாம்?

பொருள்


'செய்தாயேனும்,  = நான்தீ சொல்வதற்கு மாறாக நீ செய்தால்

வினையோடும் = வினையுடன்

பழி அல்லால் = பழியைத் தவிர

எய்தாது எய்தாது = வேறு கிடைக்காது ;

எய்தின் = ஒரு வேளை நீ சீதையை தூக்கிக் கொண்டு வந்து விட்டால்

இராமன் = இராமன்

உலகு ஈன்றான் = உலகைப் படைத்தவன்
,
வைதால் அன்ன = சாபம் போன்ற வாளிகள் (அம்புகள்)

கொண்டு = அவற்றின் மூலம்

உன் வழியோடும் = உன் சந்ததிகளோடு

கொய்தான் அன்றே   = கொய்து எடுத்து விடுவான்

கொற்றம் முடித்து = உன் அரசாட்சியை முடித்து

உன் குழு எல்லாம் = உன் குழு எல்லாம்


அவன் பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.அது என்ன பழி, பாவம் ?

பழி என்பது இந்த பிறவியில் நம்மை வருந்துவது.

பாவம் என்பது தொடர்ந்து மறு பிறப்பிலும் வருவது.

இராவணா, நீ செய்யப் போகும் காரியம்  "தீவினையோடும்
பழி " இரண்டையும் தரும் என்கிறான். தீவினையும் வரும், பழியும் வரும். என்பது பொருள்.

இராமனின் அம்புகள் உன்னையும், உன் அரசையும், உன் குலத்தையும் அழித்து விடும் என்று சொல்ல வந்த கம்பன் அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறான்.

"வைதால் அன்ன " . வைதல் என்றால் திட்டுதல். இங்கே சாபம் என்ற பொருளில் வருகிறது. முனிவர்களின் சாபம் எவ்வளவு கடுமையானதோ அவ்வளவு கடுமையானது இராமனின் அம்புகள். பற்றாமல் போகாது.

"கொய்தான் அன்றே " அன்றே கொய்து விட்டான். அது எப்படி , இனிமேல் தானே நடக்கப் போகிறது. கொய்தான் என்று இறந்த காலத்தில் சொல்லமுடியும் ?

கொய்வான் என்று அல்லவா சொல்ல வேண்டும்.

கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

எதை எப்படி சொல்ல வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது.  இலக்கணம் இப்படித்தான் சொல்ல வேண்டும் சொல்கிறது. சில சமயம், இலக்கணத்தை மீறி, பொருளின் சுவை கருதி, சிலவற்றை சொல்வது உண்டு. பெரிய கவிஞர்கள் , ஞானிகள் அவ்வாறு சொல்லும் போது , அதற்கு வழு அமைதி என்று பெயர்.

வழு என்றால் குற்றம். அமைதி என்றால் , அந்த வழுவை ஏற்றுக் கொள்ளுவது.

திருவாசகத்தில் "மெய்யா, விமலா விடைப்பாகா " என்று மணிவாசகர் கூறுவார். விடை (எருது)யை மேய்ப்பவன் இடையன். யானையை செலுத்துபவன் பாகன் என்று அழைக்கப்படுவான். ஆனால் , மணிவாசகர், விடை பாகா  என்கிறார்.

அது வழு, அமைதி.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து என்று சொல்லும் போது , அரையில் அசைத்து என்று சொல்ல வேண்டும்.  அரை என்றால் இடுப்பு. (உடம்பில் பாதியில் உள்ளது. அரை, பாதி). அரைக்கு அசைத்து என்று சொன்னது வழு அமைதி.

அது போல, கொய்தான் என்பது வழு அமைதி.

அது மட்டும் அல்ல. கொய்வான் என்று சொன்னால், கொய்வானா மாட்டானா என்ற சந்தேகம் வரலாம். கொய்தான் என்று இறந்த காலத்தில் கூறுவதால், அது ஏற்கனவே நடந்த மாதிரி அவ்வளவு உறுதியானது என்று பொருள்.

மாரீசன் சொல்கிறான், தவறான வழியில் சென்றால், அழியப் போவது நீ மட்டும் அல்ல, உன் குலமும் , முன் சந்ததியும், உன் அரசும், உன் நட்பும் உறவும் அழியும் என்கிறான்.

உனக்கு அழிவு இந்த பிறவியில் மட்டும் அல்ல, அடுத்து வரும் பிறவியிலும் தொடரும் என்கிறான்.

தவறு செய்பவன், அதன் விளைவு தனக்கு மட்டும் தான் வரும், வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பான். அது தவறு, தவறு செய்பவன் அந்த தவறின் மூலம் தன் பிள்ளைகள், மனைவி, பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோருக்கும் துன்பத்தை வரவழைப்பான்.

இராவணன் வாழ்வில் அப்படியே நடந்தது. பிள்ளையை இழந்தான். உடன் பிறந்த சகோதர்களை இழந்தான். மாமன், மைத்துனனை இழந்தான். அரசை இழந்தான்.

என்னை யார் என்ன செய்ய முடியும் என்று இராவணன் நினைத்திருப்பான்.

அறம் தவறியதால் , இராவணனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை  என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

சொல்லித் தாருங்கள் , தெரியாதவர்களுக்கு. பிள்ளைகளுக்கு. நல்ல செய்தியை  நாலு பேருக்கு தெரியும்படி சொல்லுங்கள்.

குற்றங்கள் குறையும். நாடு அமைதியுறும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post.html

Wednesday, January 31, 2018

திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்

திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன் 


பக்திக்கு தடையாக இருப்பது பல. அதில் முதலாவதாக இருப்பது உணவு.

சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தால், வேறு எதிலும் மனம் ஓடாது.

தமிழிலே நோய் என்றும் பிணி என்றும் இரண்டு சொல் உண்டு.

நோய் என்றால் மருந்து உண்டால் போய் விடும்.

பிணி என்ன செய்தாலும் போகாது.

பிறவிப் பிணி என்பார்கள்.

பசி பிணி.

காலையில் ஆறு மணிக்கு ஆறு இட்லி உள்ளே தள்ளினாலும், பனிரெண்டு மணிக்கு மீண்டும் பசிக்கும்.

பசிக்கு சாப்பிட்டால் பரவாயில்லை. ருசிக்கு சாப்பிட ஆரம்பித்ததால் வந்தது வினை. மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

அதிகம் சாப்பிட சாப்பிட புத்தி மந்திக்கிறது. நோய் வந்து சேர்கிறது. பின் அதற்கு வைத்தியம் என்று வாழ் நாள் கழிகிறது.

சாப்பாட்டின் மேல் உள்ள ஆசையை விட முடியவில்லையே என் செய்வேன் என்று வருந்துகிறார் வள்ளலார்.

"பால் சோறு என்றால் வயிறு முட்ட சாப்பிடுவேன். அதற்கு மேல் ஒன்றிரண்டு வாழைப் பழம், பலா சுளைகளையும் உள்ளே தள்ளுவேன். பழத்தின் தோலைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். வால் மட்டும் தான் எனக்கு எல்லை. இருந்தால் குரங்கு போல வனத்தில் இருந்திருப்பேன் " என்கிறார்.


பாடல்



பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச் 
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின் 
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் 
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய். 


பொருள்


பாலிலே கலந்த சோறெனில் = எல்லாரும் சோற்றில் பாலை இட்டு பிசைவார்கள். இவர், பாலில் சோற்றை இடுகிறார். அவ்வளவு ஆர்வம், சாப்பாட்டில்.

விரைந்தே = வேகமாக சென்று. வேறு யாரும் நமக்கு முன்னால் சாப்பிட்டு விடுவார்களோ என்று  முந்திக் கொண்டு

பத்தியால் = ஆர்வத்தால்

ஒருபெரு வயிற்றுச் சாலிலே = சால் என்றால் அண்டா போன்ற பெரிய பாத்திரம். அண்டா போன்ற பெரிய வயிற்றிலே

அடைக்கத் தடைபடேன் = வயிறு நிறைய சாப்பிடுவேன் என்று சொல்லவில்லை. வயிற்றல் அடைக்க தடை சொல்ல மாட்டேன். எவ்வளவு போட்டாலும், அமுக்கி அமுக்கி அடைத்துக் கொள்வேன். போதும், வேண்டாம் என்று தடை சொல்ல மாட்டேன்.


வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = தகுதியான வாழை, மா, பலா முதலிய பழங்களை

தோலிலே எனினும் = அவற்றின் தோலாக இருந்தாலும்

கிள்ளிஓர் சிறிதும் = கிள்ளி ஒரு சிறிது கூட

சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = பக்கத்தில் இருப்பவருக்கு தரத் துணிய மாட்டேன்

வாலிலேன் = வால் இல்லை

இருக்கில் = இருந்திருந்தால்

வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

என்செய்வேன் எந்தாய் = என்செய்வேன், என் தந்தையே

சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆனால், கொடுக்கும் குணம் குறையும். எல்லாம் எனக்கே வேண்டும் என்று பேராசை வரும்.

நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால்.

இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும் ? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம், மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.

ஒருத்தனுக்கு கொடுத்தால், பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.

எனவே தான் ஒளவை , அறம் செய்ய விரும்பு என்றால். பயம் போக வேண்டும்.

வள்ளலார் கூறுகிறார், பழத்தின் தோலை கூட மற்றவர்களுக்குத் தர துணிய மாட்டேன் என்று.

எல்லோரிடமும் இரக்கம் இருக்கும். அன்பு இருக்கும். கருணை இருக்கும். ஆனால், ஆயிரம் ரூபாய் நன்கொடை தர மனம் வராது. அன்பு இல்லாமல் அல்ல. துணிவு இல்லாதாதால்.

பக்தி, இறை உணர்வு வர வேண்டும் என்றால் சாப்பாட்டின் மேல் உள்ள ஆர்வம் குறைய வேண்டும்.


உணவின் அளவை குறைத்துப் பாருங்கள்.

மனம் உறுதி பெறுவதை உணர்வீர்கள்.

உடல் உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.

பசி என்றால் என்ன என்று அறிவீர்கள். மற்றவர்களின் பசியை உணர்வீர்கள். உதவும் எண்ணம் மேலோங்கும்.

கருணை பிறக்கும்.

அது உங்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

செல்லட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_53.html





இராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவர் ?

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவர் ?


சூழ்ச்சியால் சீதையை கவர மாரீசனின் உதவியை நாடுகிறான் இராவணன். அப்படி செய்வது தவறு என்று இராவணனுக்கு , மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

"தண்ணீரை திருடியவர்கள், நாடு கவர்ந்தவர்கள், முறை இல்லாமல் வரி கொண்டவர்கள், மற்றவன் மனைவியை கவர்ந்து கொண்டவர்கள் போன்ற இவர்களை அறம் கொல்லும் . தீயவர்கள் யாரும் தப்பிப் பிழைக்க முடியாது " என்கிறான்

பாடல்

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்,
    நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்கு
    ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர்
    தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார்
    எவர்? ஐயா!


பொருள்

நாரம் கொண்டார் = நீரை எடுத்துக் கொண்டவர்கள்

நாடு கவர்ந்தார் = நாட்டினை கவர்ந்து கொண்டவர்கள்

நடை அல்லா = வழி முறை இல்லாத

வாரம் கொண்டார் = வரி கொண்டவர்கள்

மற்று ஒருவற்கு  ஆய் = மற்றவர்க்கு என்று ஆகி

மனை வாழும் = அவர்கள் இல்லத்தில் வாழும்

தாரம் கொண்டார் = தாரத்தை அபகரித்துக் கொண்டவர்கள்

என்று இவர் தம்மைத் = என்ற இவர்களை

 தருமம் தான் = அறம் தான்

ஈரும் கண்டாய்! = இறுதியை காணும் , அழிக்கும்

கண்டகர்  = தீயவர்

உய்ந்தார் எவர்? ஐயா! = தப்பியவர்கள் யார் ஐயா ? (யாரும் இல்லை )

நார என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள்  உண்டு.அதில் முக்கியமான அர்த்தம் "நீர்"  என்பது. (ஆத்மா என்பது இன்னொரு அர்த்தம்) .

அயனம் என்றால் வழி என்று  நமக்குத்  .தெரியும். சூரியன் , பூமியின் வட பகுதியில் சஞ்சரிக்கும் நேரத்துக்கு உத்தராயணம் என்று பெயர். தென் பகுதியில் இருக்கும் நேரத்துக்கு தட்சிணாயனம் என்று பெயர். (உத்திரம் = வடக்கு)

இராமன் வழி என்பதைக் காட்ட இராமாயணம்.

நீரின் வழி வந்ததால், நாரம் + அயனம் = நாராயணம் , நாராயணன்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.

நாரம் கொண்டார் என்றார் நீரைப் பறித்துக் கொண்டவர்கள் என்று பொருள்.

நாம் ஒரு பட்டியல் இடுகிறோம் என்றால், எதை முதலில் சொல்ல வேண்டும், எதை இறுதியில் சொல்ல வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும் . அந்த முறைப்படிதான் சொல்ல வேண்டும். மனம் போன போக்கில் பட்டியல் போடக் கூடாது.

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று பட்டியல் போட வேண்டும்.

தீமைகளை பட்டியல் போட வந்த கம்பர், முதலில் நீரை திருடியவர்களை முதலில் சொல்கிறார். உள்ளதற்குள் பெரிய தீமை அது.

இன்று மாநிலங்கள் நீருக்காக அடித்துக் கொள்கின்றன. வரும் நாட்களில் நீரை காரணமாக் கொண்டு பெரும் போர்கள் நிகழலாம். நீர் உயிர் வாழ இன்றி அமையாதது.  அதை திருடியவன் பெரிய திருடன்.

அடுத்தது, நாட்டை கவர்ந்து கொண்டவர்கள். தன் பலத்தால் மற்றவர்கள் நாட்டை பறித்துக் கொண்டவர்கள்.

அரசாங்கம் சக்தி வாய்ந்தது. குடி மக்கள் பலம் இல்லாதவர்கள். அரசாங்கம் முறையாக வரி வசூலிக்க வேண்டும். அடக்கு முறையால், முறையற்ற வரி வசூலித்தால்  அது பெரிய தீமை.

அடுத்த தீமையாக, மற்றவன் மனைவியை அபகரிப்பது. பலம் பொருந்தியவன், பலம் இல்லாதவனின் மனைவியை கவர்ந்து கொள்ள முடியும்.  அப்படி செய்தால், சமுதாயம் சீரழியும். குடும்பங்கள் சிதையும்.

பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் என்பார் வள்ளுவர்.

மாற்றான் மனைவியோடு தனிமையில் இருப்பவனுக்கு பக்கத்தில் சாத்தான் இருப்பான் என்கிறார் நபிகள் நாயகம்.

இப்படி தீமை செய்பவர்களை யார் என்ன செய்யமுடியும் ?

ஒரு அரசே தவறான முறையில் தண்ணீர் தராவிட்டால், முறையற்ற வழியில் வரி வசூலித்தால்  என்ன செய்ய முடியும் ?

யாரிடம் முறையிடுவது ?

மாரீசன் சொல்கிறான் - தர்மம் அவர்களின் இறுதியைக் காணும் என்று. தர்மம் அவர்களை அழிக்கும் என்கிறார் கம்பர், மாரீசன் மூலம்.

யாருக்குப் பயப்படாவிட்டாலும் தர்மத்திற்கு பயப்பட வேண்டும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_31.html






Monday, January 29, 2018

திருக்குறள் - நட்பு - ஊதியம்

திருக்குறள் - நட்பு - ஊதியம்



ஒருவருக்கு ஊதியம் என்பது பேதையரின் நட்பை விடுவது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்

ஊதியம் = ஊதியம், பேறு ,

என்பது = என்பது

ஒருவற்குப் = ஒருவருக்கு

பேதையார் = அறிவில்லாதவர்

கேண்மை = நட்பை

ஒரீஇ விடல் = விலக்குதல் , விட்டு விடுதல்


அவ்வளவுதான் அர்த்தம்.

அறிவில்லாதவர் சேர்க்கையை விட்டு விட்டால் எப்படி நமக்கு அது ஊதியமாகும் ?

ஊதியம் என்றால் என்ன ?

இப்போதைக்கு வருமானம், சம்பளம், இலாபம் என்று வைத்துக் கொள்வோம். பின் மற்றவரை சேர்க்கலாம்.

நமக்கு  ஊதியம் வேண்டும் என்றால் என்ன  செய்ய வேண்டும் ?

நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும்.

அறிவில்லாதவர்களுடன் சேர்ந்தால் இது எல்லாம் நடக்காது என்கிறார்.

எப்படி என்று  பார்ப்போம்.

நல்ல கோர்ஸில் சேர்ந்து படிக்க வேண்டும். எது நல்ல கோர்ஸ் ?

நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். எது நல்ல கல்லூரி ?

நல்ல நிறுவனத்தில் சேர வேண்டும். எது நல்ல நிறுவனம் ?

இப்படி நிறைய கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தால் தான் நல்ல ஊதியம் கிடைக்கும். அது,  மூடர்களோடு சேர்ந்தால் கிடைக்காது.

இரண்டாவது, அறிவற்ற பேதைகள் தங்கள் நேரத்தை வீணடிப்பது மாத்திரம் அல்ல,  நமது நேரத்தையும் சேர்த்து வீணடித்து விடுவார்கள். நல்ல ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு அவர்களால் நழுவிப் போய் விடும்.

மூன்றாவது, அவர்கள் தவறான வழியில் செல்லும் போது , அவர்களோடு சேர்ந்த நம்மையும்  உலகம் தவறாகத்தான் நினைக்கும். காட்டில் வேங்கை மரம் தீப் பிடித்து எரியும். அதோடு கூட , அருகில் உள்ள சந்தன மரமும் சேர்ந்து எரியும் . தீயவர்களோடு, அறிவற்ற மூடர்களோடு சேர்ந்து திரிந்தால் உலகம் நம்மையும் அப்படித்தான் பார்க்கும்.

மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.



நான்காவது, அறிவுள்ளவர்களோடு சேரும் போது , அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று ஒரு உத்வேகம், உற்சாகம் பிறக்கும். அது நம்மை நல் வழிப் படுத்தும்.

உங்களுக்கு ஊதியம் வேண்டுமா ? அறிவற்ற பேதைகளின் சகவாசத்தை விடுங்கள். நாளடைவில் உங்கள் ஊதியம் தானாக உயர்கிறதா என்று பாருங்கள்.

அறிவற்ற பேதைகள் நேரில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

Whatsapp , Facebook போன்றவற்றின் மூலமும் நமது பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.

வெட்டி அரட்டை. தேவையில்லாத forward , அர்த்தம் இல்லாத விவாதங்கள் என்று காலம் போய் விடும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அறிவற்றவர்களின் நடப்பை எல்லா விதத்திலும் தவிர்க்க வேண்டும். அதுவே நல்ல ஊதியம் காண வழி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/01/blog-post_79.html



அது மட்டும் அல்ல, நாமும் அப்படி ஒரு நண்பராய் மற்றவர்களுக்கு இருக்க வேண்டும்.





இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி 


நமக்கு வாய்த்த செல்வம், புகழ் , பதவி, அதிகாரம் எல்லாம் நம் அறிவினாலும், திறமையினாலும் வந்தது என்று நாம் நினைக்கிறோம். நான் செய்தது,  என் திறமைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறோம்.

இராவணன் அடையாத செல்வம் இல்லை.

கல்வி  - நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
வீரம் - ஏனை திக்கோடு உலகு அனைத்தும் சென்றடக்கிய புய வலியும்
ஆயுள் - முக்கோடி வாழ் நாளும்
தவம் - முயன்றுடைய பெரும் தவமும்

இவை எல்லாம் எப்படி வந்தன ? இராவணன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவனுடைய தவம் மற்றும் திறமையால் வந்தது என்று.

மாரீசன் சொல்கிறான் , "இவை எல்லாம் உன் திறமையினாலோ, தவத்தாலோ, வீரத்தாலோ வந்தது அல்ல. அறத்தினால் வந்தது. நீ அறம் வழுவினால், இவை அனைத்தும் போய் விடும் " என்று அறிவுரை கூறுகிறான்.

பாடல்

'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய்,
மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்!-
அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும்
புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ?

பொருள்

'திறத் திறனாலே = மிகப் பெரிய திறமையால்

செய் தவம் = செய்த தவத்தால்

முற்றித் = முழுவதுமான

திரு உற்றாய் = செல்வத்தைப் பெற்றாய்

மறத் திறனாலோ? = அதர்மத்தினாலா ?

சொல்லுதி = சொல்லுகிறாய்

சொல் ஆய் = ஆயிந்த சொற்களை கொண்ட

மறை வல்லோய்! = வேதங்களில் வல்லவனே

அறத் திறனாலே = அறத்தினால்

எய்தினை அன்றோ? = அடைந்தாய் அல்லவா

அது = எ அவற்றை

நீயும் = நீயும்

புறத் திறனாலே = அறத்திற்கு புறம்பான செய்கையால்

பின்னும்  = பின்னால் அவற்றை

இழக்கப் புகுவாயோ? = இழக்கப் போகிறாயா ?

அற வழியில் சென்றால் செல்வம் நிலைக்கும். அறம் அல்லாத வழியில் சென்றால் செல்வம் போகும்.

இன்றைய சூழ்நிலையில் அரசியலில், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் , பணம் மட்டும் இருந்தால் போதும், எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்று தவறு மேல் தவறு செய்கிறார்கள்.

இராவணனிடம் இல்லாத வீரமா, செல்வமா, புகழா, படையா...

தோற்று, அவமானப் பட்டு, கடைசியில் இறந்தும் போனான்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி முறை.

அது சொல்லும் அறத்தை விட்டு விட்டு கதையை பிடித்துக் கொள்ளக் கூடாது.

கதையை விட்டு விட்டு அறத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீரையும் பாலையும் பிரித்தால் மட்டும் போதாது, பாலைப் பருக வேண்டும். நீரை அல்ல.

இராமாயணத்தில் ஒவ்வொரு பாட்டிலும், ஒரு பாடம் இருக்கிறது.

மாரீசன் என்ற அரக்கன் இராவணன் என்ற இன்னொரு அரக்கனுக்கு சொன்ன அறிவுரை இது....

நினைத்துப் பார்த்திருப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_29.html