Thursday, February 15, 2018

கம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி

கம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி 


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தான் மாரீசன். இராவணன் கேட்பவனாகத் தெரியவில்லை.

காமம் ஒரு பக்கம். கோபம் மறு பக்கம். அவன் அறிவை மழுங்க அடித்தது.

மாரீசனை  கோபித்து ஏசுகிறான்.

கடைசியில் மாரீசன் தளர்ந்து போய்

"உன் நன்மைக்காக சொன்னேன். எனக்கு அழிவு வரும் என்று நினைத்து பயந்து அல்ல நான் சொன்னது. அழிவு வரும் காலத்தில், நல்லது சொன்னாலும் கெட்டது போலத்  தெரியும். தீய வழியில் செல்பவனே , நான் என்ன செய்ய வேண்டும் சொல் " என்றான்.

பாடல்

*
உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின் 
     உணர்த்தினேன்; மற்று, 
என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் 
     இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே, நாசம் 
     வந்து உற்ற போது? 
புன்மையின் நின்ற நீராய்! 
     செய்வது புகல்தி' என்றான்.
*


பொருள்

உன்வயின் உறுதி நோக்கி = உன் அழிவை நினைத்து

உண்மையின் உணர்த்தினேன் = உண்மையை உணர்த்தினேன்

மற்று = மற்றபடி

என்வயின் இறுதி நோக்கி = என் அழிவை நினைத்து

அச்சத்தால் = பயத்தால்

இசைத்தேன் அல்லேன் = சொல்லவில்லை

நன்மையும் = நல்லது கூட

தீமை அன்றே = தீமை போல தெரியும் அல்லவா ?

நாசம் வந்து உற்ற போது? = நாசம் வந்தபோது

புன்மையின் நின்ற நீராய்! = தீய வழியில் செல்பவனே

செய்வது புகல்தி' என்றான் = நான் என்ன செய்ய வேண்டும் சொல் என்றான்.

உன்னிப்பாக கவனிக்க வேண்டியது, நமக்கு மற்றவர்கள் சொல்வது எரிச்சலும் கோபமும் தந்தால், ஒரு நிமிடம் நிதானமாக யோசிக்க வேண்டும்.  ஏன் கோபம் வருகிறது? ஏன் எரிச்சல் வருகிறது. சொன்னதில் நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா என்று.

மாரீசன் அவ்வளவு நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னான்.

இராவணன் மண்டையில் ஏறவே இல்லை. ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து இருந்தால், மிகப் பெரிய அழிவில் இருந்து தப்பி இருக்கலாம்.

காமம் கண்ணை மறைத்தது.

சிந்தனையில் தெளிவு வேண்டும்.

ஆயிரம் புத்தகம் படிக்கலாம். ஆயிரம் சொற் பொழிவு கேட்கலாம். மனதில் அழுக்கு இருந்தால், நல்லவை எதுவும் உள்ளே போகாது.

இராவணன் படிக்காத புத்தகமா ? கேட்காத அறிவுரையா? மாரீசன் வரை சொல்லிப் பார்த்தாகி விட்டது.

எனக்கு வேண்டியது சீதை என்று இராவணன் பிடிவாதமாக இருந்தான்.

இராவணனை விடுங்கள்.நடந்து முடிந்த கதை.

நம் கதையைப் பார்ப்போம்.

எவ்வளவு வாசிக்கிறோம். எவ்வளவு கேட்கிறோம். வாசித்தது, கேட்டது படி நடக்கிறோமா ? ஏதேதோ சாக்கு போக்கி சொல்லி, நாம் நினைத்தபடி தான் வாழ்கிறோம்.

அதெல்லாம் சரிப்படாது, நடை முறைக்கு ஒத்து வராது, practical இல்லை, என்று மெத்த படித்த மேதாவிகள் போல அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் சென்று விடுகிறோம்.

நமக்கு இராவணனுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா ?

அவனுக்கு சீதை, நமக்கு வேறு ஏதோ ஒன்று.

பொருள் தான் மாறுகிறதே தவிர, செயல் , மனம் எல்லாம் ஒன்று தான்.

அற நூல்களை கற்றும் கேட்டும் அதன் படி நடக்காமல் இருப்பது அரக்க குணம்.

நல்லவைகளை ஒதுக்காதீர்க்கள்.

அவற்றை வாழ்வோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை சிறக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post_46.html




நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே 


நமது வாழ்நாளில் பெரும் பகுதி பொருள் திரட்டவே போய் விடுகிறது. முன்பெல்லாம் ஆண்கள் தான் பொருள் தேடி அலைந்தார்கள். இப்போது பெண்களும். பெண்கள் நேரடியாக பொருள் தேடாவிட்டாலும், அந்த தேடலுக்கு பெரும் உதவி செய்கிறார்கள். எனவே, ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து விடுகிறார்கள்.

சரி. பொருள் வேண்டும் தானே. சாப்பிடணும், உடை, உறை , மருத்துவம், பிள்ளைகள் படிப்பு இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா ?

வேண்டும் தான். வேலை செய்யத்தான் வேண்டும். ஆனால், வேலை மட்டும் செய்தால் போதுமா ? மேல் அதிகாரியை வணங்க வேண்டும்.  அவர் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு சண்டை பிடிக்கக் கூடாது. கீழே வேலை செய்பவர்களை அணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி பலப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதுதானா வாழ்க்கை ? பல் இளிப்பதும் , பணம் சம்பாதிப்பதும் மட்டும் தானா வாழ்க்கை?

"உன் நேரத்தை, திறமையை பணம் சம்பாதிக்க வேண்டி செல்வர்கள் வீட்டு வாசலில் பழியாக கிடக்காதே. அதை இறை தேடவும் செலவழி என்கிறார்" பிள்ளை பெருமாள் ஐயங்கார்.


பாடல்

சென்றுசென்றுசெல்வஞ்செருக்குவார்வாயிறொறு
நின்றுநின்றுதூங்குமடநெஞ்சமே - யின்றமிழைக்
கூறைக்குஞ்சோற்றுக்குங்கூறாதே பேறாகச்
சேறைக்குநாயகன்பேர்செப்பு.


பொருள்


சென்று சென்று = ஒவ்வொரு இடமாகச் சென்று

செல்வம் = பணம் , பொருள்

செருக்குவார் = ஆணவம் கொண்டோர்

வாயில் தொரும் = வாசல் படி எல்லாம்

நின்று நின்று = நின்று நின்று

தூங்கு = காத்து கிட

மட நெஞ்சமே = மட நெஞ்சமே

இன்தமிழை = இனிமையான தமிழை

கூரைக்கும் = வீட்டுக்கும்

சோற்றுக்கும் = சோற்றுக்கும்

கூறாதே = கூறாமல்

பேறாக = பெரும் பேறு தரும்

சேறை = திருச் சேறை

நாயகன் = நாயகனாக விளங்கும்

பேர் = நாமத்தை

செப்பு = கூறு


சரி, இந்த ஊருக்கு சேறை என்று ஏன் பெயர் வந்தது ?

ஊழிக் காலத்தில், உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி போய் விட்டதாம். எது போனாலும் போகட்டும், வேதங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ப்ரம்ம தேவர், ஒரு பெரிய பானை செய்து, அதற்குள் இந்த வேதங்கள் எழுதப் பட்ட ஓலை சுவடிகளை வைத்து விடலாம் என்று எண்ணினார். பானை செய்ய பல  இடங்களில் மண் எடுத்தார். பானை சரியாக வரவில்லை. கடைசியில்  இந்த இடத்தில் எடுத்த சேறு (மண்) தான் சரியாக வந்ததாம். எனவே, இந்த இடம் சேறை அல்லது திருச் சேறை என்று அழைக்கப்பட்டது.




இந்த ஒரு தலத்தில் தான் பெருமாள் ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார். வேறு எங்கும் இப்படி ஒரு காட்சி கிடையாது. ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்ற ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள்
          துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
          என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்
          திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
ஐ யறிவும் கொண்டானுக் காளாணார்க்
          காளாமென் அன்பு தானே (1584)
                        பெரியதிருமொழி 7-4-7

இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

கும்பகோணம், திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது. நாச்சியார் கோவிலுக்குப் பக்கம்.

இன்னும் கொஞ்சம் சிறப்புகள் உண்டு. நேரில் போய் பாருங்கள். கொஞ்சம் சுவாரசியம்  இருக்கட்டும்.

சரிதானே !

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_15.html


Wednesday, February 14, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர் - பாகம் 2


பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

இந்த ஊர் எங்கே இருக்கிறது? இந்த ஊரின் சிறப்புகள் என்ன?


திரு அழுந்தூர் என்று கூறப் பட்டாலும், இதன் ஆதிப் பெயர் தேரழுந்தூர். 

ஒரு முறை ஒரு கந்தர்வன் , தேவர்களுக்கு எதிராக தவறான ஒரு தீர்ப்பு சொன்னானாம். அதனால் கோபம் கொண்ட தேவர்கள், பறக்கும் அவன் தேர் தரையில் அழுந்திப் போக என்று சாபம் கொடுத்து விட்டார்களாம். அந்த தேர் அழுந்திய ஊர்  , தேர் அழுந்தூர் என்று ஆகி, தேரழுந்தூர் என்று ஆகி, அழுந்தூர் என்று ஆகி, பின்னர் திரு அழுந்தூர் என்று ஆகிவிட்டது. 

அதெல்லாம் விடுங்கள். 

இந்த ஊருக்கு இன்னொரு முக்கிய , மிக மிக முக்கிய சிறப்பு உண்டு. 

கவி சக்கரவர்த்தி கம்பன் இந்த ஊரில் தான் பிறந்தாராம். அந்த ஊர் மண்ணை மிதித்தால் உடல் சிலிர்க்கும் அல்லவா. ஒரு காலத்தில், கம்பர் இந்த ஊரில்  இருந்திருக்கிறார் , இந்த மண்ணில் நடந்திருக்கிறார் என்று நினைக்கும் போது  எவ்வளவு பெருமையாக , மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு இங்கே மணி மண்டபம் இருக்கிறது. 

அதற்கும் மேலாக, கம்பரின் மனைவிக்கும் ஒரு ஒரு சிலை இருக்கிறது. கம்பரின் மனைவியை  நாம் நினைத்தாவது பார்த்தது உண்டா?


*“கம்பன் பிறந்தவூர், 
காவிரி தங்குமூர்          
கும்பமுனி சாபம் குலைந்தவூர் 
செம்பதுமத்தாதகத்து நாண்முகனும் தாதையும் 
தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

என்ற புலவர் புராணம், இந்த ஊர் கம்பர் பிறந்த ஊர் என்று சொல்லும். 

இந்த ஊரில், பெரிய குளங்கள் இருக்கின்றன. அதில் அன்னப் பறவைகள் வசிக்கின்றன. அன்ன குஞ்சுகள், குளத்தில், அதன் கூட்டில் உறங்குகின்றன. அதன் பெற்றோர் இரை தேடி போய் இருக்கிறார்கள். இதற்கிடையில் அந்த குஞ்சுகள் பசியால் விழித்து அழுகின்றன. அந்த சத்தத்தில் , குழம்பிப் போய் அந்த குளத்தில் உள்ள  மீன்கள் அங்கும் இங்கும் தாவுகின்றனவாம். 

குளம்  என்றா சொன்னேன். தவறு. திருத்திக் கொள்ளுங்கள். குளம் இல்லையாம். நிலமாம். அங்குள்ள நிலங்களில் அவ்வளவு தண்ணீர் இருந்ததாம். நிலத்தில் உள்ள தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாடுமாம். அன்னம் கூடு கட்டி வசிக்குமாம். 

பெரிய திருமொழி காட்டும் தேரழுந்தூர் அது. 

  வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி
          அடியேன் மனம் புகுந்தென்
     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்
          நின்றார் நின்ற ஊர் போலும்
     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
          போனகாதல் பெடையோடும்
     அள்ளல் செறுவில் கயல் நாடும்
          அணியார் வயல் சூழ் அழுந்தூரே
                   (1591) பெரியதிருமொழி 7-5-4

ஒரு போக விளைச்சலுக்கு , மற்ற மாநிலத்தை தண்ணீருக்காக எதிர் நோக்கி இருக்கும் இன்றைய நிலையை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

ஒரு காலத்தில் நீர் அவ்வளவு இருந்தது. 

அப்படிப்பட்ட நீர் உள்ள நிலங்கள் சூழ்ந்த இடம் , தேரழுந்தூர். 

இந்த திரு தலத்தை பிரபந்தம் அப்படி கொண்டாடுகிறது. 45 பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

*கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,

அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,

சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,

மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.*

(2066)

*தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,

பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,


நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.*

(2077)


இந்த இடம் எங்கே இருக்கிறது தெரியுமா ?

மாயவரத்துக்கு பக்கத்தில் , 2 km  தொலைவில். 

மாயவரம் பக்கம் போனால். ஒரு எட்டு போய்விட்டு வாருங்கள். 

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2.html

Tuesday, February 13, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்


குழந்தை முதன் முதலாக எழுந்து நடை பயிலும் போது, தத்தி தடுமாறும். அருகில் தந்தை நிற்பார். இருந்தும் பிடிக்க மாட்டார். பிள்ளை தவிக்கும்.  அப்பா எங்கேயோ ரொம்ப தள்ளி இருப்பது போலத் தோன்றும். நான் இவ்வளவு துன்பப்         பிள்ளை சில சமயம் கீழே கூட விழும். கீழே விழுந்து தலை அடி போகிறது என்றால் தாவி வந்து தடுத்து விடுவார். குழந்தை நினைக்கும் , இந்த அப்பா இருந்து என்ன பிரயோஜனம், நான் இவ்வளவு துன்பப் படும்போது உதவி செய்யாமல் கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறாரே. அவருக்கு என் மேல் பாசமே இல்லையா என்று?

தந்தைக்குத் தெரியும். குழந்தை தடுமாறுகிறது. தள்ளாடுகிறது என்று. எப்போதும் குழந்தையின் கையை பிடித்துக் கொண்டே இருந்தால் , ஒரு காலும் பிள்ளை சுயமாக நடக்காது. தன் காலில் ஒரு போதும் அது நிற்காது. தானே எழுந்து, தத்தி தடுமாறி விழுந்து எழுந்தரித்தால் , பின் அது தானே நடக்க ஆரம்பிக்கும். ஓடும், தாவும். விளையாடும்.

முதலில் அந்த கீழே விழுந்து சின்ன சின்ன அடி பட்டால்தான் , பின்னாளில் தைரியமாக , சொந்த காலில் நிற்க முடியும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

அவன் எங்கேயோ இல்லை. நமக்கு மிக அருகிலேயே இருக்கிறான். நாம் தான் , இருக்கும் இடத்தை விட்டு விட்டு  எங்கெல்லாமோ தேடி அலைகிறோம்.

 வினைகள் உங்களைப் படுத்துகிறதா ? வாழ்க்கை உங்களை வாட்டுகிறதா ? கவலைப் படாதீர்கள். எங்கேயோ இருப்பது போலத் தோன்றும் திருமால், எங்கேயோ, பாற்கடலில், வைகுந்தத்தில் இல்லை, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கிறான்.  என்கிறான். 

இந்த தேரழுந்தூர் எங்கே இருக்கிறது ? அதன் பெயர் காரணம் என்ன? அதன் மற்ற சிறப்புகள் என்ன ?

நாளை பார்ப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_13.html

Monday, February 12, 2018

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம் 


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆசைகள் நம்மிடம் இருந்து எழுகின்றன. அவற்றை நாம் அடக்க வேண்டும். ஆசையை தவிர்க்க வேண்டும் என்று.

உண்மையில் அப்படியா நடக்கிறது ? நாம் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரத்தில் இருப்போம்.

டிவி இல் நல்ல கார் ஒன்றின் விளம்பரம் போகும். அடடா நமக்கு அந்த மாதிரி ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறோம். ஆசை எங்கிருந்து வந்தது ? டீ வி யில் இருந்து நமக்குள் வந்தது.

அந்த பொண்ணு கட்டி இருக்கிற புடவை மாதிரி, அந்த நகை மாதிரி, அந்த மாதிரி வீடு, அந்த மாதிரி உடல் அமைப்பு, என்று வெளி உலகம் நமக்குள் ஆசையை தூண்டுகின்றது. நம்மால் அவற்றை கட்டுப் படுத்த முடியுமா ? ஒவ்வொரு புலன்கள் வழியாகவும் , பாம்பு , அதன் புற்றினுள் நுழைவது மாதிரி சத்தம் இல்லாமல் நுழைந்து விடுகின்றன. நுழைந்த பாம்பு சும்மா இருக்குமா ? கடித்து விஷம் தலைக்கு ஏறி துன்பம் தரும் அல்லவா அது போல துன்பப் படுகிறேன் என்கிறார் மணிவாசகர். ஒரு தலை பாம்பு அல்ல, ஐந்து தலை பாம்பாம். ஐந்து புலன்கள் வழியாகவும் உள்ளே நுழைந்து விடுகின்றன என்கிறார்.

அந்த ஐந்து தலை நாகத்திடம் இருந்து என்னை காப்பாற்று. கை விட்டு விடாதே என்று கதறுகிறார். எனக்கு உன்னை வழிபாடு செய்யக் கூடத் தெரியாது என்கிறார்

பாடல்



பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
    என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
    முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
    வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
    பொதும்புறவே 

பொருள்


பரம்பரனே = பரம் என்றால் உயர்ந்த. பரம பதம். பரம்பரை. பரம் + பரம்பரனே. எல்லாவற்றிற்கு உயர்ந்தவனே

நின் = உன்னுடைய

பழஅடி யாரொடும் = பழைய அடியாரோடு கூட

என்படிறு = படிறு என்றால் குற்றம். என் குறையுள்ள, குற்றம் உள்ள பக்தியையும்

விரும்பும் = விரும்பி ஏற்றுக் கொள்ளும்

அரனே = பாம்பை அணிந்தவனே

விட் டிடுதிகண் டாய் = விட்டு விடாதே

முயற்கறையின் = முயலின் மேல் உள்ள கறை போல

அரும்பு = அரும்பு போன்ற பிறை நிலவையும்அ

அர  =  அரவம்

நேர்வைத் தணிந்தாய் = சமமாக பாவித்து அணிந்தாய்

 பிறவி = பிறவியில்

ஐவாயரவம் = ஐந்து வாயுள்ள அரவம்

பொரும்  - என்னோடு சண்டை செய்யும்

பெருமான் = பெருமானே

என் = என்னுடைய

மனம் = மனம்

அஞ்சி = அச்சம் கொண்டு

பொதும்புறவே = புகலிடம் தேடி அலைகிறதே


ஆசை, ஐந்து தலை நாகம் போல படம் எடுத்து வந்து ஆடுகிறது. பயமாக இருக்கிறது என்கிறார்.


உன்னை வேண்டினால் நீ ஏற்றுக் கொள்வாய். ஆனால், எனக்கோ எப்படி பக்தி செய்வது என்றே தெரியவில்லை.

இருந்தும், உன் பழைய அடியார்களின் பக்தியை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ அப்படியே என் பக்தியையும் ஏற்றுக் கொள் என்கிறார்.

நிலவில் கறை இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அது எப்படி இருக்கிறதாம் ? வெள்ளை வெளேர் என்று இருக்கும் முயலின் உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சில அழுக்குகள் இருக்குமே அது போல இருக்கிறதாம்.


என்ன சொல்ல வருகிறார்.

கறை உள்ள சந்திரனை உன் தலை மேல் வைத்துக் கொண்டிருக்கிறாய். குறைகளை மன்னித்து  ஏற்றுக் கொள்வது உன் இயல்பு. என் குறையையும் மன்னித்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறார்.


ஆசை , பாம்பைப் போல வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.. ஆனால், நீதான்  பாம்பை கழுத்தில் சுத்தி வைத்திருக்கிறாயே. உனக்கு என்ன பயம். இந்த ஆசை என்ற பாம்பிடம் இருந்து என்னை காப்பாற்று என்கிறார்.

ஆசை வரும் போது பயப்பட வேண்டும்.

இது நம்மை பின்னாளில் என்னவெல்லாம் சிக்கலில் இழுத்து விடப் போகிறதோ என்று பதற வேண்டும்.

வீடு வேண்டும் என்று ஆசைப் பட்டால், எவ்வளவு துன்பங்களை சகிக்க வேண்டி இருக்கும் ?


ஆசையால் அழியாதவர் யார் இருக்கிறார்கள். ஆசை மனதில் எழும் போது , ஐந்து தலை நாகம் படம் எடுப்பதாக உணர்ந்தால் அந்த ஆசையை எப்படி கையாள வேண்டும் என்று நாம் அறிவோம்.

மணிவாசகம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_12.html






Friday, February 9, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை 


உறவினர்கள் என்றால் ஏதோ கல்யாணம் , வீடு பால் காய்ச்சுவது, போன்ற விழாக்களுக்கு போவது, பரிசு கொடுப்பது, உண்பது, புகை படம் எடுத்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது.

இப்போது கொஞ்சம் மேலே போய் whatsapp , facebook என்று தொடர்பு கொள்கிறார்கள்.

உறவு, நட்பு என்பதெல்லாம் வேறு நிலையில் வைத்து பார்க்கப் பட வேண்டியவை.

இராவணன் தவறு செய்ய நினைக்கிறான் என்று அறிந்த மாரீசன், அவனுக்கு நல்ல அறிவுரைகள் கூறுகிறான். நமக்கு என்ன என்று இருந்து விடவில்லை.

அது ஒரு செய்தி.

இன்னோர் செய்தி என்ன என்றால், ஒருவன் தவறு செய்தால், அது அவனோடு முடியும் கதை அல்ல. அவன் குடும்பத்தையும், உறவினர்களையும் பாதிக்கும்.

இப்போது செய்திகளில் பார்க்கிரோம். ஒரு பெரிய நிலையில் உள்ள ஒருவர், தவறு செய்து விடுகிறார். அவரை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அவரின் மனைவி, பிள்ளைகள் எவ்வளவு துன்பப் படுவார்கள். அக்கம் பக்கம் பேச முடியுமா ? தலை காட்ட முடியுமா ? அவரின் பிள்ளைகள் பள்ளிக் கூடம் போனால், அவர்களின் நண்பர்கள் பரிகாசம் செய்ய மாட்டார்களா ?

"அவன் பிள்ளை தான நீ, அப்படித்தான் செய்வ " என்று செய்யாத தவறுக்கும் பழி ஏற்க வேண்டி இருக்கும்.

மாரீசன் சொல்கிறான்

"இராவணா , நீ மட்டும் அல்ல , உன் உறவினர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள். நீ சொல்வதைக் கேட்டு என் மனம் பட படக்கிறது . விஷத்தை ஒருவர் குடிக்கும் போது அருகில் நின்று, நல்லது தான் குடியுங்கள் என்று யாராவது சொல்வார்களா "

என்று சொல்கிறான்.

பாடல்

"உஞ்சு பிழையாய் உறவினோடும்" 
     என உன்னா, 
நெஞ்சு பறைபோதும்; அது 
     நீ நினையகில்லாய்; 
அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து 
     அருகு நின்றார், 
நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" 
     எனலும் நன்றோ?

பொருள்

"உஞ்சு பிழையாய் = தப்பிப் பிழைக்க மாட்டாய். உய்தல் , உய்து என்பது உஞ்சு என்று ஆனது.

உறவினோடும் = நீ மட்டும் அல்ல, உன் உறவினர்களும்

என உன்னா = என்று நினைக்க மாட்டாய்

நெஞ்சு பறைபோதும் = என் மனம் பறை அடிப்பது போல அடித்துக் கொள்கிறது

அது நீ நினையகில்லாய் = அதைப் பற்றி நீ நினைக்க மாட்டேன் என்கிறாய்

அஞ்சும் எனது ஆர் உயிர் = என் உயிர் அஞ்சுகிறது

அறிந்து = அறிந்து கொண்ட பின்

அருகு நின்றார் =  அருகில் நிற்பவர்கள்

நஞ்சு நுகர்வாரை = நஞ்சை அருந்துபவர்களை

 "இது நன்று" = இது நல்லது என்று

  எனலும் நன்றோ? = என்று நினைப்பதும் சரி தானா ?

பிறர் பொருளை நஞ்சாக நினைக்க வேண்டும்.

ஊரை கொள்ளை அடிப்பவன், திருடுபவன், எல்லோரும் மற்றவர்கள் பொருளை அமுதாக அல்லவா  நினைக்கிறார்கள்.

அது நஞ்சு என்றால் தொடுவார்களா ?

தொட்டவன் இராவணன்.

இராமாயணம் கதை அல்ல. வாழ்க்கையை சொல்லித்தரும் அறம்.

 நான் அங்கங்கே சில பாடல்களை விட்டு விட்டுச் செல்கிறேன்.

நேரம் கிடைப்பின் அவற்றை எல்லாம் தேடிப் பிடித்து படியுங்கள்.

Thursday, February 8, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அன்றோ ?

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அன்றோ ?


நமக்கு துன்பம் வரும் போது, யாரை எல்லாமோ நொந்து கொள்கிறோம்.

அரசாங்கம் சரி இல்லை, மருத்துவர் சரி இல்லை, அலுவலக நிர்வாக முறை சரி இல்லை, மக்கள் யாரும் சரி இல்லை, ஒருத்தருக்கும் பொறுப்பு என்பதே இல்லை என்று யார் யாரையோ நொந்து கொள்கிறோம்.

ஒன்றும் கிடைக்காவிட்டால் ஆண்டவனை நொந்து கொள்கிறோம். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு கடவுளா என்று இறைவன் மேல் கோபம் கொள்கிறோம்.

நம் தவறு என்ன என்று யோசிப்பதே இல்லை.

நமது எல்லா துன்பங்களுக்கும் காரணம், எங்கோ எப்போதோ நாம் செய்த தவறு என்று உணரும் அறிவு வேண்டும்.

நம் சோம்பேறித்தனம், நம் அறிவீனம், நம் அறம் பிறழ்ந்த செயல்கள், நம் பொறாமை, கோபம், காமம் என்று எத்தனையோ குறைகள் , தவறுகள் நம்மிடம் இருக்கும். அதில் இருந்துதான் நமது ஒவ்வொரு பிரச்சனையும் பிறக்கின்றன.

மாரீசன் சொல்கிறான்

"உனக்கு சொந்த அறிவும் இல்லை. சொற் புத்தியும் இல்லை. இராமன் போருக்கு செல்ல மாலை எடுத்து அணியுமுன் அவன் எதிரிகள் இறந்து போவார்கள். இந்த சீதையை மானிடப் பெண் என்றா நினைக்கிறாய். அவள் அரக்கர்கள் செய்த பாவத்தின் வடிவம் "

பாடல்


'யாதும் அறியாய்; உரை கொளாய்; 
     இகல் இராமன்  
கோதை புனையாமுன், உயிர் 
     கொள்ளைபடும் அன்றே; 
பேதை மதியால், "இஃது ஓர் பெண் 
     உருவம்" என்றாய்; 
சீதை உருவோ? நிருதர் தீவினை 
     அது அன்றோ?

பொருள்


'யாதும் அறியாய் = நீ ஒன்றையும் அறிய மாட்டாய்

உரை கொளாய் = நல்லது சொன்னாலும் கேட்க மாட்டாய்

இகல் இராமன் = பகை கொண்ட இராமன்

கோதை = மாலை

புனையாமுன் = புனைவதற்கு முன் (போருக்கு போவதற்கு முன் மாலை அணிவது வழக்கம்)

உயிர் கொள்ளைபடும் அன்றே; = பகைவர்கள் உயிர் போய் விடும்

பேதை மதியால், = உன் அறிவீனத்தால்

 "இஃது ஓர் பெண் உருவம்" என்றாய்;  = சீதையை ஒரு பெண் உருவம் என்று சொல்கிறாய்

சீதை உருவோ? = சீதை ஒரு உருவமா ?

நிருதர் = அரக்கர்கள்

 தீவினை = செய்த தீவினை

அது அன்றோ? = அது அல்லவா ?

சிலர் செய்த பாவம், சாலை ஒர புளிய மரமாய் நிற்கும். காரில் வேகமாக சென்று அதில்   முட்டி சாவார்கள். அது புளிய மரம் இல்லை. அவன் செய்த வினை.

சிலருக்கு அலுவலக அதிகாரியாக, சிலருக்கு கொடுமைக்கார மாமியாராக,  சிலருக்கு ஆலை எரி போன்ற அயலானாக, சிலருக்கு படிக்காத பிள்ளையையாக , அடங்காத மனைவியாக, பொறுப்பற்ற கணவனாக எப்படி எப்படியோ வந்து நிற்கும்.

செய்த வினை.

இராவணனும் அரக்கர்களும் செய்த வினை, சீதை வடிவில் வந்து நின்றது.

துன்பம் வரும் போது மற்றவர்களை நோகாதீர்கள். செய்த வினை என்று நினையுங்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த சோதனை, துக்கம் என்று தோன்றும். நாம் யார் குடியை கெடுத்தோம், யாருக்கு மனசார தீங்கு செய்தோம்...என்ற எண்ணம் தோன்றும்.

பட்டினத்தார் சொல்கிறார்.

இந்த பிறவியில் செய்த தீங்கு என்று ஒன்றும் இல்லை. ஒரு வேளை முற்பிறவியில் செய்த தீவினை தான் இங்கே வந்து சேர்ந்ததா என்று நினைக்கிறார்.

என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே 
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு 
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே

நல்லதை நினையுங்கள். நல்லதை செய்யுங்கள்.

நல்லதே நடக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_8.html