Friday, April 20, 2018

திருக்குறள் - நினைத்துப் பார்க்க வேண்டும்

திருக்குறள் - நினைத்துப் பார்க்க வேண்டும் 


கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வந்தால் என்ன செய்வது ?

எவ்வளவுதான் அன்யோன்யமாக இருந்தாலும், எங்காவது ஒரு தவறு நிகழத்தான் செய்கிறது.

கணவனுக்கு இன்னொரு பெண்ணின் மேல் ஏதோ ஈர்ப்பு. கொஞ்சம் நெருங்கி பழகுகிறான். தவறுதான். இருந்தாலும், ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, தவறி விடுகிறான்.

அது மனைவிக்குத் தெரிய வருகிறது. அவளுக்கு தாங்க முடியாத கோபம். அவனின் துரோகத்தை அவளால் சகிக்க முடியவில்லை. அவள் இவ்வளவு நாளாக கட்டி காத்து வந்த கோட்டை தகர்த்த வலியை அவளால் பொறுக்க முடியவில்லை. அனைத்தையும் தீ வைத்து கொளுத்தி விடலாமா என்று நினைக்கிறாள். பிள்ளைகள் எப்படியும் போகட்டும். யார் எப்படி போனால் என்ன என்று கோபத்தின், வெறுப்பின் உச்சியில் இருக்கிறாள் அவள்.

அவள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ? கணவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? அல்லது விவாகரத்து பெற்று தனித்து வேறு வாழ்க்கை தொடங்க வேண்டுமா ? யோசித்துக் கொண்டிருங்கள்.

நெருங்கிய நண்பர்தான். நீண்ட நாள் நண்பர். நீங்கள் அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள். ஏதோ ஒரு ஆசையில், உங்களுக்கு வர வேண்டிய ஒரு வாய்ப்பை அவர் எடுத்துக் கொள்கிறார். அல்லது உங்களிடம் சொல்லாமல்  ஏதோ ஒன்றை செய்து விடுகிறார். உங்களால் அதைத் தாங்க முடியவில்லை. "நீ எல்லாம் ஒரு மனுஷனா, உன்னை போய் நம்பினேனே , என்னைச் சொல்ல வேண்டும் " என்று நட்பை உதறி விட வேண்டுமா ? அல்லது, அந்த செயலை சகித்துப் போக வேண்டுமா ?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

இப்படி வாழ்வில் பல சிக்கல் வரலாம்.

கணவன் மனைவி உறவில்
நண்பர்களுக்குள்
உறவினர்களுக்குள்
தொழில் முதலீடு செய்தவர்களுக்குள்
மேலதிகாரியின் துரோகம்

என்று எத்தனையோ வகைகளில் நாம் வஞ்சிக்கப் படலாம்.

அப்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும் ? உறவை, நட்பை, தொடர்பை  துண்டித்துக் கொள்ள வேண்டுமா ?

இல்லை.

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்


பொருள்

கொன்றன்ன = கொலைக்கு ஒப்பான

இன்னா செயினும் = துன்பம் செய்யினும்

அவர்செய்த = அவர் செய்த

ஒன்று நன்று = நல்லது ஒன்றை

உள்ளக் கெடும் = நினைக்கக் கெடும்

உலகிலேயே ஒருவனுக்கு மிக உயர்ந்தது உயிர் தான். அந்த உயிரை பறிப்பதற்கு ஒப்பான ஒரு காரியத்தைச் செய்யினும், அவர் நமக்கு முன்பு செய்த ஒரு நல்ல காரியத்தை மனதில் நினைத்தால் அந்த தீய காரியத்தால் வந்த  துன்பம் கெடும்.

முதல் உதாரணத்தில், கணவன் செய்தது கொலைக்கு ஒப்பான ஒரு கொடிய காரியம் தான். அவன் செய்த தீய செயலை நினைக்கும் போது , அதற்கு முன் அவன் செய்த நல்ல  காரியங்களை நினைத்தால் , தீய செயலின் துன்பம் கெடும். மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் அவன் எவ்வளவோ நல்லது செய்து இருக்கலாம். எவ்வளவோ அன்பை கொட்டி இருக்கலாம். சுயநலம் இல்லாமல் , தன்னை கரைத்து இருக்கலாம். அதை எண்ணிப் பார்த்தால், இந்தத் தவற்றின் துன்பம் குறையும்.

ஒருவர் செய்த நல்லதை எல்லாம் மறந்து விட்டு, அவர் செய்த ஒரே ஒரு தவறான காரியத்தை மட்டும்  பிடித்துக் கொண்டு மல்லு கட்டக் கூடாது.

அது ஒரு அர்த்தம்.

இன்னொன்று, உறவில் சிக்கல்கள் வரும். தவறுகள் நிகழலாம்.  அது எப்படி சரியாகும் என்றால்,  முன்பு செய்த நல்லதை நினைத்தால். எனவே,  உறவு சரியாக இருக்க வேண்டும் என்றால், நல்லது செய்து கொண்டே இருங்கள். பின்னாளில், ஏதாவது தவறு நிகழ்ந்தால், இந்த நல்லவைகள் , அந்தத் தவற்றின் தாக்கத்தை குறைக்கப் பயன் படும்.

ஒருவர் செய்த தவறை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

உறவுகளில் வரும் பெரும் சிக்கல்களை தீர்க்க ஒண்ணே முக்கால் அடியில் வழி சொல்கிறார் வள்ளுவர்.

யோசித்துப் பாருங்கள். எத்தனை உறவுகளை முறித்துக் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.  இது முன்பே தெரிந்து இருந்தால், அந்த உறவுகள் முறிந்திருக்காது அல்லவா ? இனியேனும் உறவுகள் முறியாமல் பார்த்துக் கொள்ள இந்த குறள் உதவட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_20.html

Sunday, April 15, 2018

திருக்குறள் - அறம், வழி பார்த்து நிற்கும்

திருக்குறள் - அறம், வழி பார்த்து நிற்கும் 


பாடல்

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

பொருள்

கதம் = கோபம்

காத்துக் = தடுத்து நிறுத்தி

கற்றடங்கல் = கற்று அடங்குவான்

ஆற்றுவான் = அந்த வழியில் செல்பவன்

செவ்வி = சரியான நேரம் பார்த்து

அறம்பார்க்கும் = அறம் பார்த்துக் கொண்டிருக்கும்

ஆற்றின் நுழைந்து = வழியைப் பார்த்து நுழையும்

கதம் என்றால் கோபம் என்று எல்லோரும் பொருள் சொல்கிறார்கள். வள்ளுவர் பல இடங்களில் வெகுளி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். பின் ஏன் இங்கே கதம் என்ற சொல்லை பயன் படுத்த வேண்டும் ?

கதம் என்ற சொல் எங்கிருந்து வந்தது ? கோபப் பட்டால் உடம்பு சூடாகும். கண் சிவக்கும்.

உடம்பு கத கதப்பாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் இல்லையா?

கோபம் வந்தால் மட்டும் அல்ல, காமம் வந்தாலும் உடல் கொதிக்கும்.  பொறாமை வந்தால்  "வயிறு எரியும்".  அன்பில் உடம்பு கொதிக்காது. காமத்தில் கொதிக்கும்.  நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் இந்தத் தீயை இவள் எங்கு பெற்றாள் என்பார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

என்னை விட பெரிய ஆள் யார் என்று ஆணவம் வரும்போது, உடல் கொதிக்கும். 

கோபம், காமம், பொறாமை என்ற பல காரணங்களால் உடல் சூடாகலாம். எனவே அவை அனைத்தையும் சேர்த்து "கதம் காத்து" என்றார்.  ஒரு குறளில் எத்தனை குணங்களை சொல்ல முடியும் ? எனவே அனைத்துக்கும் சேர்த்து ஒரே வார்த்தை "கதம்" என்று சொல்லி விட்டார்.  

அடுத்தது, "கற்று அடங்கி"

கல்வி கற்க கற்க அடக்கம் வர வேண்டும்.  அடக்கம் என்றால் மற்றவர்களை பார்த்து  உடல் வளைந்து, வாய் பொத்தி இருப்பது அல்ல. 

புலன்கள் அடங்க வேண்டும். எது சரி, எது தவறு , எது எந்த அளவு சரி என்று அறியும் அறிவு  வேண்டும்.

உணர்ச்சி மிகும் போது அறிவு வேலை செய்யாது.  அறிவு வேலை செய்யாவிட்டால் அவன் முட்டாள் தானே? புலனடக்கம் இல்லாவிட்டால் அறிவு இருந்தும் பயன் இல்லை. 

மேலும், 

நாம் நிரம்ப படித்து விட்டோம் என்ற ஆணவம் வரலாம். எனவே, "கற்று அடங்கல்" என்று கூறினார். 

"ஆற்றுவான்" வழியில் செல்பவன். ஆறு செல்வதற்கு யாரும் பாதை போட்டுக் கொடுப்பதில்லை. அது தன் இயல்பில் செல்கிறது. 

அது போல, இயல்பாக இருப்பவன். கோபம் வரும் , அதை அடக்க முயலுதல், அது மேலும்  சீறிக் கிளம்பும்...அது அல்ல இயல்பு. கோபமே வராமல் இருப்பது. வலிந்து  கட்டுப் படுத்தக் கூடாது. இயல்பாகவே அது அமைய வேண்டும். 

அப்படி இருப்பவன் வீட்டுக்கு வருவதற்கு அறக் கடவுள் நேரத்தையும், வழியையும் பார்த்துக் கொண்டு இருப்பாராம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_27.html



திருவாசகம் - போற்றி

திருவாசகம் - போற்றி 


பாடல்

ஈசனடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பொருள்

ஈசனடிபோற்றி = ஈசன் அடி போற்றி. ஈசனின் திருவடிகளுக்கு வாழ்த்து. ஈசன் என்ற சொல்லுக்கு தலைவன், குரு, இறைவன், அரசன், மூத்தவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஈசன் மனைவி ஈஸ்வரி.

எந்தை அடி போற்றி = என் தந்தையின் அடி போற்றி.

தேசன் அடிபோற்றி = தேசு என்றால் ஒளி. தேசன், ஒளி நிறைந்தவன். பொன்னைப் போல ஒளி நிறைந்தவன் என்பார் சுந்தரர்.

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

 செந்தழல் புரை திரு மேனியும் காட்டி  என்பார் மணிவாசகர்.


முந்திய முதல் நாடு இறுதியும் ஆனாய் ,
மூவரும் அறிகிலர் , யாவர் மற்றறிவார் ,
பண்டனை விரலியும் நீயும் நின் அடியார் ,
பழம் குடில் தொருன் எழுந்தருளிய பரனே ,
செந்தழல் புரை திரு மேனியும் காட்டி ,
அந்தணன் ஆவதும் கட்டி வந்து ஆண்டி ,
ஆரமுதே பள்ளி  எழுந்தருளாயே


சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி = நேயம் என்றால் அன்பு, கருணை, இரக்கம் என்று அர்த்தம். மலம் என்றால் குற்றம், தவறு. நி -மலன் என்றால் குற்றம் இல்லாதவன். கருணை நிறைந்த குற்றமற்றவன்.


மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி =  மாயமாகிய பிறப்பை அறுக்கும் மன்னன் அடி போற்றி. அது என்ன மாயம் ? பிறவி என்பது உண்மை தானே. பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். இதில் இன்ன மாயம் இருக்கிறது?  நாம் தான் பிறக்கிறோம், இறக்கிறோம் , மீண்டும் பிறக்கிறோம் என்பது தெரியாமல் அது நிகழ்கிறது. எனவே மாயப் பிறப்பு. இந்த பிறவி இன்பமானது போலத் தெரியும். ஆனால், துன்பத்தின் இருப்பிடம் இது. அது தெரியாமல் இருப்பதுதான் மாயம்.


சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி = சிறந்த , திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறையும் (வாழும்) நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி = தீராத இன்பம் அருளும் மலை போற்றி

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_15.html




Friday, April 13, 2018

திருக்குறள் - நல்லவை கேட்க

திருக்குறள் - நல்லவை கேட்க 


பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு ஆயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = அந்த அளவுக்கு

ஆன்ற = சிறந்த, மாட்சிமை பட்ட,  நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லது கேட்டால் நமக்கு நல்லது வரும் என்று சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா? நமக்கே தெரியுமே. இந்த மேலோட்டமான அர்த்தம் தவிர இதில் ஆழ்ந்த கருத்துகள் ஏதாவது இருக்குமா?

எனைத்தானும் என்றால் என்ன?

காலம் மற்றும் பொருளால் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

எவ்வளவு நேரம் கேட்கிறோம் என்று அல்ல கணக்கு. ஒரு நாளில் ஒரு சில நிமிடங்கள் கூட போதும். "அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கிறது" என்று அங்கலாய்ப்பதை விட்டு விட்டு, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அது எவ்வளவு சிறிய காலமாக இருந்தாலும், நல்லவற்றை கேட்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நல்லது என்றால் ஏதோ மிகப் பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று அல்ல. சின்ன விஷயம் கூட போதும். நல்லவற்றில் பெரியது சின்னது  என்று விலக்கத் தேவை இல்லை.

அனைத்தானும், அந்த அளவுக்கு பெரிய பெருமை தரும். கேட்டா நிறைய கேக்கணும், இல்லாட்டி கேக்கவே கூடாது என்று நினைக்கக் கூடாது. எவ்வளவு கொஞ்சம் கேட்டாலும், அது நல்லது.

அது மட்டும் அல்ல.

கொஞ்சமாக கேட்டால் , கொஞ்சம் பெருமை. நிறைய கேட்டால் நிறைய பெருமை என்று நாம் நினைக்கலாம். எனவே, நிறைய கேட்க வேண்டும் என்று நாம் முடிவும் எடுக்கலாம்.

ஆனால், வள்ளுவர் சொல்லுகிறார், "ஆன்ற பெருமை தரும்" என்று.

கொஞ்சமாகக் கேட்டாலும், சிறந்த பெருமையைத் தரும் என்கிறார். 

சரி. நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை கேட்கிறோம். படிக்கிறோம். ஆனால், அப்படி ஒன்றும் ஆன்ற பெருமை வந்து சேர்ந்த மாதிரி தெரியவில்லையே.

நிறைய பேர் தினம் தோறும் விடாமல் டிவி யில் பல பெரியவர்கள் சொல்லும் கருத்துகளை கேட்பார்கள். எத்தனை நாள் கேட்டாலும், பெரிய பெருமை ஒன்றும் வந்த சேர்ந்த மாதிரி இல்லையே.

ஒரு வேளை வள்ளுவர் தவறாகச் சொல்லி இருப்பாரோ ? இல்லை, இருக்கட்டும் என்று கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லி இருப்பாரோ ?


நல்லவை கேட்டால் பெருமை வரும்.

நல்லவை அல்லாததை கேட்டால் ?

சிறுமை வரும் தானே ?

தீயதை, வேண்டாததை, தவறானதை எவ்வளவு குறைந்த நேரம் கேட்டாலும், எவ்வளவு  குறைவாக கேட்டாலும், பெரிய தீமை வந்து சேரும் என்பது நாம் சிந்தித்து உணர வேண்டிய கருத்து.

எனைத்தானும் அல்லவை கேட்க
அனைத்தானும் ஆன்ற சிறுமை தரும்

என்பது பெறப்பட்ட குறள் .

நாம் எவ்வளவு வேண்டாதவற்றை கேட்கிறோம் ? அளவு இருக்கிறதா ?

டிவி யில், வாட்சப்பிஸ் , மெயிலில் , தொலைபேசியில், வெட்டி அரட்டை அடிப்பதில், எவ்வளவு தீயவற்றை கேட்கிறோம்.

தீயவை என்றால் ஏதோ கொலை, கொள்ளை செய்ய திட்டம்  தீட்டுவது பற்றிய செய்தி அல்ல.

பயனற்றவை எல்லாமே நல்லவை அல்லாதவை தான்.

இம்மைக்கும், மறுமைக்கும் பயனுள்ளவை நல்லவை.

அது அல்லாதவை, தீயவை.

அப்படி என்றால், நாம் கேட்கும் தீயனவற்றிற்கு எவ்வளவு தீமை வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

நமது நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் சில பேர், நம் தன்னம்பிக்கை தளரும் படி பேசுவார்கள். "உன்னால் முடியாது, அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது " என்று சொல்லுவார்கள். அதை கேட்டு, நம் நம்பிக்கை தளரும்.

பொறாமை கொண்டவர்கள், தன்னம்பிக்கை அற்றவர்கள், புறம் கூறுபவர்கள், பயனற்ற வெற்றுச் சொற்களை பேசுபவர்கள், வதந்திகளை பரப்புவார்கள் என்று நிறைய பேர் இருக்கலாம். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு  நாம் தீய வழியில் செல்ல நேரிடலாம். அல்லது, நாம் செய்யக் கூடியவற்றை செய்யாமல் விடலாம்.

நல்லது அல்லாததை கேட்பதில்லை என்று முடிவு எடுங்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது அல்லாதவற்றை கேட்பதை குறைக்கிறீர்களோ, உங்களுக்கு பெரிய நன்மை வந்து சேரும்.

வெட்டிப் பேச்சை கேட்பதை குறையுங்கள்.

எனவே, அப்படி பேசுவதையும் குறையுங்கள். நீங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுத் தானே ஆக வேண்டும்.

எனவே நல்லதை கேட்பது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு நல்லது , நல்லது  அல்லாததை கேட்காமல் இருப்பது.

வெளியில் உள்ள குப்பையை அள்ளிக் கொண்டு வந்து வீட்டுக்குள் யாராவது போடுவார்களா ?

குப்பைகளை ஏன் மண்டைக்குள் திணிக்க வேண்டும் ?

பட்டியல் போடுங்கள். யார் யார் சொல்வதை எல்லாம் கேட்கப் போவதில்லை என்று. எதையெல்லாம் தவிர்க்கப் போகிறீர்கள் என்று (டிவி சீரியல், வாட்சப் அரட்டை...).

இரண்டையும் செய்தால், இரட்டிப்பு நன்மை.

செய்து பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_13.html

Tuesday, April 10, 2018

திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்

திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்


புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க



"புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க"

புறம் என்றால் வெளியே

சேய்மை என்றால் தூரத்தில் என்று அர்த்தம். அண்மை என்றால் பக்கத்தில் என்று அர்த்தம்.

புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன். அவனுடைய மலர் போன்ற பாதங்கள் வெல்க.

அது என்ன புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன்?

இறைவன் எங்கிருக்கிறான் என்று மனிதன் தேடி அலைகிறான். காடு மேடெல்லாம் ஓடுகிறான். மலை ஏறுகிறான். புண்ணிய தலங்கள் தோறும் செல்கிறான். இங்கெல்லாம் இல்லை என்று கைலாயம், வைகுண்டம் என்று கற்பனை செய்து கொண்டு, இந்த வாழ்வில் அல்ல, இறந்த பின் அங்கே போய்ச் சேர்வேன் என்று நினைக்கிறான்.

ஆனால், இறைவவன் அவனுக்குள்ளேயே இருப்பதை அவன் அறிந்தானில்லை. உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ தொலை தூரத்திற்கு சென்று விடுகிறான்.

இறைவன் அவனை விட்டு விட்டு தூர போவதில்லை. மனிதன் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ போய் விடுகிறான். எனவே, உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு வெளியே வெகு தூரம் போய் விட்டவர்களுக்கு அவன் தூரத்தில் தான் இருப்பான்.

அது மட்டும் அல்ல,  இறைவன் அவனுக்குள் இருக்கிறான் என்று அறிந்தால், அதே இறைவன்  எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பான் என்று அறிவான். தனக்குள் இறைவன் இருப்பதை அறியாதவன் மற்ற உயிர்களுக்குள்ளும் இறைவன்  உறைவதை அறிய மாட்டான்.

தனக்குள் இறைவனை கண்டவன் எங்கும் இறைவனைக் காண்பான். தனக்குள்  இறைவனை காணாதவன் எங்கும் காண மாட்டான். தனக்குள் இல்லாதது போல்  எதற்குள்ளும் இறைவன் இருக்க மாட்டான் என்று நினைப்பான். எனவே, இங்கு உள்ளதை எல்லாம் விட்டு விட்டு வைகுண்டம், கைலாயம், பரமபதம் என்று இறைவனைத் தள்ளி வைக்கிறான்.

இறைவன் தள்ளிப் போவதில்லை. மனிதன் இறைவனை தள்ளி வைக்கிறான்.

புறத்தார்க்கு சேயோன்.

அகத்தாற்கு அண்மையோன்.

"கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க"

இறைவனை எங்கும் காண்பவன் எல்லாவற்றையும் வணங்குவான். இந்த உலகமே  போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியதாக நினைப்பான். எல்லாமே இறைவன்தான் என்று அறிவான். எல்லாம் சிவமயம் என்பது புலப்படும். எதிரில் உள்ளவர்களை பார்த்தால் கரம் குவித்து வணங்குவான். அப்படி வணங்குவது ஏதோ பயத்தினாலோ அல்லது பணிவினாலோ அல்ல. எங்கும் நிறைந்த அந்த சக்தியை அறிந்ததனால். அந்த அறிவினால் பிறந்த ஆனந்தத்தால்.

அந்தத் தரிசனம் பெற்ற அபிராமி பட்டார் கூறுவார் "களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை " என்று ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறார்.


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

விஸ்வரூபம் என்று சொல்கிறார்களே அது என்ன.

ஏதோ ஒருவர் விண்ணுக்கும் மண்ணுக்குமாக  ஒரு நொடியில் வளர்ந்து நிற்பது அல்ல.

இந்த உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் , அனைத்து உயிர்களுக்குள்ளும் உறையும் இறையை தரிசித்தவர் சொல்வதுதான் அந்த உருவம்.

அத்தனை உயிர்களும் ஒன்று சேர்ந்த ஒரு உருவம் ....எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை தலைகள், எத்தனை உருவம்...எல்லாம் சேர்ந்த ஒன்று தான் விஸ்வ ரூபம். அந்தத் தரிசனம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. அறிவு வேண்டுமானால் அதை ஏற்றுக் கொள்ளும். அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.

நானும், நீங்களும், இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் என்ற வேற்றுமை அற்ற தரிசனமே விஸ்வரூப தரிசனம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று அனைத்தையும் ஒன்றாக கண்டான் பாரதி. அது விஸ்வ ரூப தரிசனம்.


நான் வேறு, நீ வேறு என்று இனம் பிரித்துச் சொல்லும் புத்தி உருகி, பெருகி தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரம் என்பார் அருணகிரி.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.

எல்லோரும் ஒன்றென்று உணரும் போது பிறக்கும் மகிழ்ச்சி. பேதங்கள், பிரிவினைகள் மறையும் போது பிறக்கும் ஆனந்தம்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க.

அருகில் உள்ளவர்களை கை கூப்பி வணங்கி விடலாம். அவர்களும் அதை பார்க்க முடியும்.

தள்ளி இருப்பவர்களை, இந்த உலகம் அனைத்தையும் எப்படி வணங்குவது.

கைகளை தலைக்கு மேலே உயர்த்தி எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லலாம். அது எல்லோருக்கும் தெரியாது தான். இருந்தும் நம் மனதுக்குத் தெரியுமே. இந்த உலகம் முழுவதும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று.

அது யாராக இருந்தால் என்ன? எங்கிருந்தால் என்ன? என்ன நிறம், ஜாதி, குலமாக இருந்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான்.

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.

அப்படி பட்ட ஞானம் பெற்றவர்களை மேலும் சிறப்படைய செய்யும் சீரோன் கழல்கள் வெல்க என்கிறார்.

இறை தரிசனத்தின் வெளிப்பாடு.

இது சரிதானா ? இல்லை வலிந்து பொருள் சொல்லும் உத்தியா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.

பொருள்களும் , சக்தியும் ஒன்றுதான். வேறு இல்லை என்று நவீன இயற்பியல் கூறுகிறது.

பொருளை சக்தியாக மாற்றலாம். சக்தியை பொருளாக மாற்றலாம். பொருள் என்று சொன்னால் எல்லா பொருளும் தான். நான், நீங்கள், இந்த கணிப்பொறி, கண்ணாடி, மேஜை,நாற்காலி, காக்கை, குருவி, மேகம், சூரியன், என்று அனைத்தும் சக்தியின் வெளிப்பாடு அல்லது மறு உருவம் என்கிறது நவீன இயற்பியல்.

E = M C^2 = M x C x C

என்பது ஐன்ஸ்டினின் மிக பிரபலமான கோட்பாடு.

E என்பது சக்தி, energy

M என்பது பொருள்

C என்பது ஒரு எண் (ஒளியின் வேகம்).

மாணிக்க வாசகருக்கு நவீன இயற்பியல் தெரியும் என்று சொல்ல வரவில்லை.

அனைத்தும் ஒரு சக்தியின் வடிவம் என்று அவர் சொல்கிறார். நவீன அறிவியலும் சொல்கிறது.

அந்த சக்தியை அவர் வழிபட்டார். நாம் அந்த சக்தியை பல விதங்களில் பயன் படுத்துகிறோம்.

அது ஒரு பார்வை, ஒரு perspective என்ற முறையில் சிந்தித்துப் பார்ப்போமே.

வலிந்து பொருள் சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்று சொல்ல வருகிறேன்.

அதில் ஒரு சுகம் இருக்கிறது. ஒரு ஆனந்தம் இருக்கிறது.

பிரிவினை குறையும் போது மகிழ்ச்சி வருகிறது தானே.

காதலியோடு, மனைவியோடு அன்பு மேலிடும் போது , அவள் வேறு தான் வேறு என்ற பேதம் மறைந்து, இரண்டும் ஒன்றாகும் போது மகிழ்ச்சி வருகிறதா இல்லையா. ஆனால், அது சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விடும்.

பிள்ளைகள் கட்டி அணைக்கும் போது உயிர் உருகுகிறதா இல்லையா ?

பேரப்  பிள்ளைகள் மேலே வந்து விழும் போது, ஈருயிர் ஓருயிராகிறதா இல்லையா? அப்போது எவ்வளவு சந்தோஷம் பிறக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் உடன் பிறப்புகளை பார்க்கும் போது, அவரக்ளை கட்டி அணைத்துக் கொள்ளும் போது ஒன்றிப் போகிறோமா இல்லையா? அதில் ஒரு ஆனந்தம் பிறக்கிறதா இல்லையா ?

இந்த உலகமே நம் துணை, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று தோன்றினால் எவ்வளவு இன்பம் பிறக்கும்.

அந்த இன்பம் மறையவே மறையாது. எங்கெங்கு பார்த்தாலும் என் துணை, என் உடன் பிறப்பு, என் பிள்ளைகள், என் பேரப் பிள்ளைகள் என்றால் அந்த ஆனந்தத்துக்கு  அளவு ஏது.

அதுவே பேரின்பம்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_10.html

Monday, April 9, 2018

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பாடல்

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க"


அது என்ன வேகம் கெடுத்தல்? எதன் வேகத்தை கெடுத்தார் ?

எது வேகாமாகச் செல்கிறதோ, அதன் வேகத்தை குறைக்க வேண்டும். அவ்வளவுதான்.

எது மிக வேகமாகச் செல்லும் ?

அனுமனின் வேகத்திற்கு ஒரு உதாரணம் தேடினார் கம்பர். மின்னல் போல் வேகம் என்று சொல்லலாமா  என்று யோசித்தார். அதுதான் எல்லோரும் சொல்கிறார்களே. அதை விட வேகமான ஒன்றை உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

மனம் தான் மிகுந்த வேகத்தோடு செல்வது. நினைத்த மாத்திரத்தில் சந்திரனுக்கு சென்று விடலாம். ஒரு நொடி கூட ஆகாது. அந்த மனதின் வேகத்தை விட வேகமாகச் சென்றான் என்பார் கம்பர்.

"தன் மனதின் முன் செல்வான் " என்பது கம்பர் வாக்கு.

முந்துஅரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில்வாச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம்பலகடந்து, தன்மனத்தின்முன் செல்வான்
இந்திரன் சிறைஇருந்த வாயிலின் கடை எதிர்ந்தான்.

நமது மனம்தான். மனோ வேகம் என்று சொல்லுவார்கள். இங்கே இருந்து கொண்டே வைகுண்டம் என்று சொன்னால் போதும் வைகுண்டம் போய்  விடும். பாற்கடல், ஆதி சேஷன், பெருமாள், இலக்குமி என்று அங்கே போய் சேர்ந்து விடும்.

கைலாயம் என்று சொன்னால் போதும். உடனே மனம் அங்கே போய் விடும். குளிர்ந்த  மலை உச்சி, சிவன், பார்வதி, காளை வாகனம் என்று.

எந்நேரமும் ஒரு இடத்தில் நிற்காது. இங்கிருக்கும் போது அங்கே ஓடும். அங்கே இருக்கும் போது இங்கே தாவும். அங்கே பிள்ளை என்ன செய்கிறானோ என்று பிள்ளை இருக்கும் இடத்துக்குப் போகும். அங்கே அவர்  என்ன செய்கிறாரோ என்று கணவன் இருக்கும் இடம் ஓடும். அவ இப்ப என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று காதலி இருக்கும் இடம்  நாடும். "அந்தக் காலத்தில் " என்று பின்னோக்கி ஓடும். எனக்கு மட்டும் அது கிடைத்தால் என்று எதிர் காலம் நோக்கி ஓடும்.

ஒரு நாள் அமைதியாகி இருந்து கவனித்துப் பாருங்கள். உங்கள் மனம் என்ன ஓட்டம் ஓடுகிறது என்று தெரியும். இடம் விட்டு இடம் மட்டும் அல்ல, காலம் விட்டு காலமும் ஓடும். கற்பனையான இடங்களுக்குப் போகும்.

அதை கொஞ்சம் வேகத்தை நிறுத்தி, ஒரு நிலையில் வைக்க முடியுமா ?

மிக மிக கடினம்.

அருணகிரிநாதர் , முருகன் அருள் கிடைக்க வில்லை என்று கோவில் கோபுரத்தில் ஏறி  கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். குதித்தும் விட்டார். பாதி வழியில், முருகன் கையில் ஏந்திக்  கொண்டான். அருணகிரிக்கு இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் உபதேசம் செய்தான் முருகன். "சும்மா இரு". உடல் சும்மா இருந்து விடும். மனம் சும்மா இருக்குமா ?

மனதை கட்டுப் படுத்த நினைத்தால் அது இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு ஓடும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமது அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம். எவ்வளவு பரபரப்பு. ஓட்டம். படபடப்பு.

மனைவியோடு அன்பாக இருந்து பேச நேரம் இல்லை.

பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை.

மழையில் நனைய, நல்ல கவிதை வாசிக்க, புல் தரையின் இதம் உணர, மென்மையான இசை கேட்க, உணவை இரசித்து உண்ண , கணவன் தலை கோத , மனைவியின் விரல் பற்றி நடக்க .....எதற்காவது நேரம் இருக்கிறதா ?

ஒரே ஓட்டம் தான்.

வாழ்க்கையே புரியாத போது, இறை எங்கே புரியப் போகிறது?

ஓடும் மனதின் வேகத்தைக் குறைத்து, அதை அலை பாய விடாமல் நிறுத்தி என்னை ஆண்டு கொண்ட தலைவன் அடி வாழ்க.

இதைத்தான் பதஞ்சலியும் தன் யோக சாத்திரத்தில் கூறுவார்

"சித்த விருத்தி நிரோதம்" என்று. யோக சூத்தரத்தின் முதல் சூத்திரம் அது.  ஓடும் மனதை நிலை நிறுத்த வேண்டும்.

அடுத்த வரிக்குப் போவோமா ?

"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க"

வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் தெரியும். சில சமயம் அவசரத்தில் ஈரத் தலையோடு முடியை அவசரமாக முடிந்து கொண்டு போவார்கள். மறு நாள் பார்த்தால், ஒரே சிக்காக இருக்கும். "ஈரத்தோட தலையை முடிந்தால் இப்படித் தான் பிசுக்குப் பிடித்து சிக்கலாக இருக்கும் " என்று அம்மாவிடம் பாட்டு வாங்குவார்கள். அந்த ஈரப் பிசுக்குத் தான் "பிஞ்சு" என்று ஆனது.

சிவன் தலையில் எந்நேரமும் நீர். கங்கை. அதோடு கூட முடி போட்டால் சிக்கல் ஆகி பிசுக்கு பிடிக்காமல் என்ன செய்யும் ?

எனவே "பிஞ்சகன்"

பிறப்பறுக்கும் பிஞ்சகன்.

மரணம் இல்லாமல் வாழ வழி இருக்கிறது. அதற்கு ஒரே வழி பிறக்காமல் இருப்பதுதான். பிறந்தது எல்லாம் இறந்தே தீரும். இறக்காமல் இருக்க வேண்டும் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

"பிரபு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்" என்பார் அபிராமி பட்டர்.

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

என்பது அபிராமி அந்தாதி.

நாம் மறுபடி மறுபடி பிறப்பதால் நமக்கு மட்டுமா துன்பம் ? நம்மை பெறுவதற்கு ஒரு தாய் வேண்டும். அவளுக்கு எவ்வளவு துன்பம்? பிரசவ வேதனை என்றால் சாதாரணமா?  நோய் என்றால் , அடி  கிடி பட்டு விட்டால்  உடம்பில்  ஏதோ ஓரிரண்டு இடத்தில் தான் வலிக்கும். பிள்ளை பெறுவது என்றால் உடம்பு அத்தனையும் வலிக்கும். "அங்கமெல்லாம் நொந்து பெற்றாள் " என்பார் பட்டினத்தார்.  அது அம்மாவுக்கு உண்டான வலி. இந்த பிரம்மன் இருக்கிறானே, நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் நமக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். அவனுக்கு கை வலிக்காதா? எத்தனை தடவைதான் எழுதுவான்?

"இன்னும் ஓர் கருப்பையிலே வாராமல் கா " என்று வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

இந்த பிறவிப் பிணியில்  இருந்து விடுதலை தருபவன் ஈசன்.

பிறப்பறுக்கும் பிஞ்சகன் தன் பெய் கழல்கள் வெல்க


மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_9.html

Thursday, April 5, 2018

திருக்குறள் - மாத்தி யோசி

திருக்குறள் - மாத்தி யோசி 



பாடல்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

பீலிபெய் = மயில் பீலி (தோகை )

சாகாடும் = சகடம், வண்டியின் சக்கரம்

அச்சுஇறும் = அதை இணைக்கும் அச்சு,

அப்பண்டம் = அந்த பண்டம், அதாவது மயில் தோகை

சால = அதிகமாக

மிகுத்துப் = மிகுதியாக

பெயின் = ஏற்றினால்

மயிலின் தோகை மிக மிக மென்மையானது. எடை குறைந்தது. லேசானது. எடை குறைவாகத் தானே இருக்குறது என்று அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும்.

இது அரசர்களுக்குச் சொன்னது.

சின்ன பகைதானே என்று சேர்த்துக் கொண்டே போனால், ஒரு நாள் அந்த சின்ன பகை எல்லாம்  ஒன்றாக சேர்ந்து கொண்டு உன்னை அழித்து விடும் என்று மன்னர்களுக்கு எச்சரிக்கை செய்தார் வள்ளுவர்.

இதனையே நாம் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன ?

நல்ல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே வந்தால், அது பெரிய  தீமையை வீழ்த்தி விடும்.

அது எப்படி ? சில உதாரணங்கள் பார்ப்போம்.


உடல் எடை என்பது பெரும்பாலானோருக்கு ஒரு பெரிய தலை வலி. என்ன செய்தாலும்  அது குறைவது இல்லை. அதிக எடை என்பது ஒரு தீமை தான். அந்தத் தீமையை எப்படி மாற்றுவது ?

சின்ன சின்ன நல்ல விஷயங்களாக செய்து கொண்டே போனால், எடை பருமன் என்பது  முற்றாக வீழ்ந்து விடும்.

முதலில் தினமும் 30 நிமிடம் நடப்பது என்று வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டாம். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம்  நடக்க வேண்டும். ஒரு மாடி, இரண்டு மாடி என்றால் லிப்ட் உபயோகப் படுத்தாமல் படி ஏறி போக வேண்டும். வீடு அல்லது அலுவலகம் ஐந்தாவது மாடியில் இருக்கிறதா ? இரண்டு மாடி ஏறிப் போய் அங்கிருந்து லிப்ட் பிடித்து போகலாம். காரை நிறுத்தி விட்டு, கொஞ்சம் சுத்தி  போகலாம்.

காப்பி டீயில் போடும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைக்க வேண்டும்.

எண்ணெய் பலகாரம், இனிப்பு போன்றவற்றை உண்ண விரும்பினால் ஒன்றுக்கு மேல் சாப்பிடுவது இல்லை என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் அளவை கொஞ்சம் குறைக்க வேண்டும். மூன்று தோசை சாப்பிடும் இடத்தில்  இரண்டு சாப்பிட வேண்டும்.

பணம் சேர்க்க வேண்டும். என்ன செய்யலாம் ?

எவ்வளவோ வெட்டி செலவு இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். வெளியில் சாப்பிடும் அளவை குறைக்க வேண்டும். மாதம் இரண்டு முறை என்றால், ஒரு முறையாக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அவசரப்படாமல், நிதானமாக யோசித்து நல்ல விலையில் பொருள்களை வாங்க வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக   நல்ல விஷயங்களை செய்து கொண்டே வந்தால், பணத் தட்டுப்பாடு என்ற வண்டியின் அச்சு முறிந்து போகும். அதாவது அந்த பிரச்சனை அகன்று விடும்.

பரீட்சைக்கு படிக்க வேண்டுமா. அரட்டை அடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். whatsapp நேரத்தை குறைக்க வேண்டும். ஊர் சுற்றுவதை குறைக்க வேண்டும். இப்படி தவறான வழியில் செல்லும் நேரத்தை குறைத்து அதை படிப்பில் செலவழித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"சால மிகுத்து பெயின்"

சாலை என்றால் அதிகம் என்று பொருள். சால , உறு , தவ, நனி , கூர், கழி என்பன  "அதிகமான" என்ற ஒரு பொருளை குறிக்கும் பல உரிச்சொற்கள்.

சால மிகுத்துப் பெயின் என்று சொல்லும் போது மிக அதிகமாக செய்ய வேண்டும் என்கிறார்.

சின்ன சின்ன நல்ல காரியங்களை மிக அதிகமாச் செய்தால் , தீமை அழிந்து போகும்.

கொஞ்சம் நடக்கனும் , கொஞ்சம் படி ஏற வேண்டும், கொஞ்சம் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், கொஞ்சம் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும் ..இப்படி செய்து வந்தால், எடை அதிகம் என்ற வண்டி அச்சு முறிந்து விடும்.


தினமும் நடக்கிறேன், எடையே குறைய மாட்டேன் என்கிறதே என்று அலுத்துக் கொள்ளக் கூடாது. நடப்பது நல்லது. ஆனால் அது மட்டும் போதாது. நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் முனேற்றம். அவ்வளவுதான்.  ஆனால், நிறைய  விஷயங்களில் அந்த சின்ன சின்ன முன்னேற்றம் இருக்க வேண்டும்.


நாலு டீ குடிக்கும் இடத்தில், மூணு டீ குடிக்கலாம். அந்த மூணு டீயிலும் , முழு  கிளாஸ் குடிப்பதற்கு பதில் , முக்கால் கிளாஸ் குடிக்கலாம். அந்த முக்கால் கிளாஸிலும் , இரண்டு தேக்கரண்டி சர்கரைக்குப் பதில் ஒரு தேக்கரண்டி மட்டும் போட்டுக் கொள்ளலாம். அருகில் உள்ள கடையில் குடிப்பதற்கு பதில் நாலு கடை தள்ளி நடந்து சென்றும் குடித்து விட்டு வரலாம். போகும் போதும் வரும் போதும் லிப்ட் உபயோகிக்காமல் படி இறங்கி ஏறலாம்.

சின்ன சின்ன முன்னேற்றம் என்பது கடினமாக இருக்காது.

யோசித்துப் பாருங்கள்.

எளிய வழியில், பெரிய சிக்கல்களை விடுவிக்கும் வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_5.html