Thursday, September 9, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2

 திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை இந்த ப்ளாகின் கடைசியில் உள்ள இணைய தளத்தில் காணலாம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 




(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள்.



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை "அறிவார்ந்த"
மக்கட்பேறு அல்ல பிற


என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.


"அறிவறிந்த மக்கட்பேறு" என்று கூறுகிறார்.


அது என்ன அறிவறிந்த?


பிறக்கும் போதே எல்லாவற்றையும் யாரும் அறிந்து கொண்டு பிறப்பதில்லை. அறிவான பிள்ளைகளை பெறுவது என்றால் என்ன அர்த்தம்? அது சரி வராது அல்லவா? பிறந்த உடனேயே தெரியுமா ஒரு பிள்ளை அறிவுள்ளதா அல்லது அறிவு இல்லாதாத என்று. பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொன்னார்?


பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரியாது. 


"அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை"


அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மக்கள் என்கிறார்.


பெரும்பாலும் என்ன நடக்கிறது?  எது எல்லாம் அறியத் தேவை இல்லையோ, அவற்றை அறிந்து கொண்டு இருக்கிறோம்.  


யோசித்துப் பாருங்கள், கடந்த ஒரு ஆண்டில் நீங்கள் புதிதாக அறிந்தவற்றில் எத்தனை அறிய வேண்டியவை, எத்தனை வெறும் குப்பைகள் என்று? 


எது எதையோ படித்துக் கொண்டு இருக்கிறோம். 


அவை எல்லாம் அறிவு என்று மண்டைக்குள் திணித்துக் கொண்டு இருக்கிறோம். 

வள்ளுவர் சொல்கிறார் - இரண்டு விடயங்கள்.


ஒன்று எதை அறிய வேண்டும் என்ற அறிவு. 


இரண்டாவது, எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் அறிவு.


இந்த இரண்டும் வேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகளை பெறுவதை விட பெரிய சிறப்பான ஒன்று இல்லை என்று கூறுகிறார். 


பரிமேலழகர் ஒரு படி மேலே [போகிறார். 


" 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது"


அறிவறிந்த என்று கூறியதால் அது ஆண்களையே குறிக்கிறது. பெண்களை அல்ல என்றும் எனவே மக்கட்பேறு என்பது புதல்வர்களைப் பெறுவது என்றும் கூறுகிறார். 


பெண் பிள்ளைகள் தேவை இல்லையா? வள்ளுவரும், பரிமேலழகரும் இப்படி ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்களே என்று கொடி பிடிக்கலாம்.


சிந்திப்போம். 



மனிதர்களுக்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. 


ஒன்று அறிவு, இன்னொன்று உணர்ச்சி. 


இன்றைய அறிவியல் Intelligent quotient (IQ) and Emotional Quotient (EQ) என்று குறிப்பிடுகிறது.  மேலும், வாழ்வில் வெற்றி பெற EQ தான் மிக முக்கியம் என்கிறது. 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். (அது பற்றி மேலும் அளவலாவ ஆர்வம் இருந்தால், பின் தனியே சிந்திப்போம்).


பொதுவாக, ஆண்கள் எதையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் இயல்பு உடையவர்கள். பெண்கள் எதையும் உணர்வு பூர்வமாக அணுகுவார்கள். இதில் சில  விதி விலக்குகள் இருக்கலாம். 


அப்படி அறிவும், உணர்வும் தனித்து இருப்பதால்தான் இல்லறம் இனிமையாக இருக்கிறது. 


இருவரும் தர்க்க ரீதியாக பேசுவோம் என்றாலோ, அல்லது இருவரும் உணர்ச்சி வசப் பட்டு பேசுவோம் என்றாலோ சிக்கல்தான். 


அப்படி என்றால் ஆண்களுக்கு உணர்சிகள் கிடையாதா, பெண்களுக்கு அறிவு கிடையாதா என்று கேட்க்கக் கூடாது. 


பெண்களுக்கு உணர்சிகள் அதிகமாக இருக்கும். சட்டென்று அழ முடியும், உடனுக்குடன்  மன நிலை மாறும், உள்ளுணர்வு அதிகமாக இருக்கும், காரணம் சொல்லத் தெரியாது, ஆனால் முடிவு மட்டும் வரும். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்றால், விளக்கத் தெரியாது. 


ஆண்கள் அப்படி அல்ல. அறிவின் தாக்கம் அதிகம் இருக்கும். உணர்சிகளை தள்ளி வைத்து விட்டு, நீண்ட தொலை நோக்கோடு சிந்திக்க  முடியும் அவர்களால். 


இரண்டும் வேண்டும் வாழ்வில். ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இல்லை. 


"அறிவறிந்த" என்றதனால், அது ஆண் பிள்ளைகளையே குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பெண் பிள்ளைகளை அல்ல என்பது அவர் முடிவு. 


ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.


சரி இல்லை என்று தோன்றினால், பரிமேலழகர் உரையை தள்ளி விட்டு, புது உரை எழுதலாம். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டால், பின் அதுவே நிலைக்கும்.  முயற்சி செய்வதில் தவறில்லை. 






இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு 


நம்மை அறியாமலேயே நாம் நமக்கு செய்து கொள்ளும் நன்மையும் தீமையும் நம்மை சுற்றி உள்ளவர்களை  தேர்ந்து எடுப்பதுதான். 


நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி உள்ளவர்களின் குணம், அறிவு, பழக்க வழக்கங்கள் நம்மை பிடித்துக் கொள்ளும்.. 


படிக்கிற கூட்டத்தோடு இருந்தால், என்ன படிக்கலாம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, இதில் எப்படி சொல்லி இருக்கிறது என்றே எண்ணம் போகும்.


இசை அறிந்தவர்கள் கூட்டத்தில் இருந்தால் பாடல்களின் நயம், இசையின் நுணுக்கம் எல்லாம் தெரிய வரும்.


பக்தி வர வேண்டும் என்றால்?


எந்தக் கூட்டத்தோடு சேர வேண்டும்?  அடியவர்கள் கூட்டத்தில் சேர்ந்தால் பக்தி, இறை உணர்வு, ஆன்ம முன்னேற்றம் எல்லாம் வரும். 


குலசேகராழ்வார் சொல்கிறார் 


"பண்புகளில் சிறந்த திருமாலை, நான்முகன் தன்னுடைய நான்கு நாவினாலும், நான்கு முகத்தில் உள்ள எட்டு கண்களோடும் தொழுது, போற்றி நிற்கின்றான். திருமாலின் நாபிக் கமலம் தோன்ற, திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளை, மலர்கள் இட்டு பக்தி செய்யும் அடிவர்களோடு என்று சேர்ந்து இருப்பேன்"


என்று. 


பாடல் 


எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு


எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்


அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/2.html


(Please click the above link to continue reading)


எம்மாண்பின் அயன் = மாண்புமிகு பிரமன் 


நான்கு நாவி னாலும் = நான்கு நாவினாலும் 


எடுத்தேத்தி = போற்றிப் பாடி 


ஈரிரண்டு  = இரண்டு இரண்டு , நான்கு 


முகமுங் கொண்டு = முகத்தில் 


எம்மாடு மெழிற்  = அனைத்துப் பக்கங்களிலும் 


கண்க ளெட்டி னோடும் = க் கண்கள் எட்டினோடும் 


தொழுதேத்தி = தொழுது போற்றி 


யினிதிறைஞ்ச = இனிமையாக வேண்ட 


நின்ற = நின்ற 


செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற 


அம்மான்றன் = அம்மான் தன் 


மலர்க்கமலக் = தாமரை மலர் போன்ற 


கொப்பூழ் தோன்ற = நாபிக் கமலம் தோன்ற 


அணியரங்கத் தரவணையில் = பாம்பை (ஆதி சேஷன் ) படுக்கையாகக் கொண்டு 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டுள்ள 


அம்மான்றன் =அம்மான் தன்


அடியிணைக்கீழ் = திருவடிகழுக்கு கீழே 


அலர்கள்  = மலர்கள் 


இட்டு = தூவி 


அங்கு = அங்கே 


அடியவரோ டென்று = அடியவரோடு என்று 


கொலோ = அசை நிலை 


அணுகும் நாளே = சேரும் நாளே 


நம்ம whatsapp contact லிஸ்டில் பார்த்தால் தெரியும் எத்தனை பேர் உண்மையான ஆன்மீக தாகம் கொண்டவர்கள் என்று. 


நாம் எத்தனை whatsapp குழுவில் உறுப்பினராக இருக்கிறோம் என்று பார்த்தால் தெரியும், நாம் யாருடைய தொடர்பில் இருக்கிறோம் என்று. 


யாருடன் பழகுகிறோமோ, அவர்கள் குணம் தானே நமக்கும் வரும். 


தெரிந்தெடுத்து பழகுங்கள். நல்லதே நடக்கட்டும். 


Wednesday, September 8, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1 



அது என்ன புதல்வரைப் பெறுதல் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்? அப்படி என்றால் புதல்விகளை பெறுதல் இல்லறத்தில் வராதா? இது ஒரு ஆணாதிக்க சிந்தனை அல்லவா? வள்ளுவர் காலத்தில் அப்படி ஒரு சமுதாயம் இருந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் இன்று பெண்ணுரிமை, சம உரிமை, என்று போராடிக் கொண்டு இருக்கிறோம். இப்ப வந்து, இந்த மாதிரி ஆணாதிக்க சிந்தனை உள்ள நூல்களை பற்றிச் சொல்லி கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று சிலர் கொடி பிடிக்கலாம். 


இந்தத் தலைப்பு பல உரை ஆசிரியர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எப்படியாவது வள்ளுவரை இந்த குற்றச் சாட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள். 


புதல்வர் என்பது தவறு "மக்கட் பேறு" என்று தான் முதல் குறள் ஆரம்பிக்கிறது. அதே போல் முந்தைய அதிகாரத்தில் "நன் கலம் நன் மக்கட் பேறு " என்று தான் முடிந்தது. அங்கு, நன் புதல்வர் பேறு என்று முடியவில்லை. 


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.



எனவே, இந்த அதிகாரத்தின் தலைப்பை "மக்களைப் பெறுதல்" என்று மாற்ற வேண்டும் என்று தமிழ் படித்த அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள். 


எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 


வள்ளுவரை நாம் காப்பாற்ற வேண்டியது இல்லை. நம்மால் முடியவும் முடியாது. 



ஒரு மரம் இருக்கிறது என்றால், அதன் வேர், கிளை, இலை, காய், கனி என்று எல்லாம் இருக்கும். "நாங்கள் மட்டும் ஏன் நிலத்துக்கு அடியிலேயே கிடந்து துன்பப் பட வேண்டும். நாங்களும் இந்த பூ மாதிரி மேலே வருவோம்" என்று வேர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்தால், மரம் பட்டுப் போகும். 


ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் மண்ணுள் புதைந்து தான் கிடக்கும். அது யார் கண்ணுக்கும் தெரியாது.  " முடியாது,  நாங்களும் மேலே வருவோம்" என்று அஸ்திவாரங்கள் தொடங்கினால் ?


ஒரு சமுதாயத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. 


நான் அந்த வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மற்றவர்களை அந்த வேலையை செய்யச் சொல் முடியாது. உன்னால் முடியாது என்றால், சரி. வேறு வேலையைப் பார். அல்லது வேறு வேலை ஒன்றும் தெரியாது என்றால் என்ன செய்வது என்று அவரவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். 



இல்லறம் நடத்தும் பொறுப்பை ஆணிடம் கொடுத்தது நம் சமுதாயம். அவனுக்கு துணை செய்ய மனைவி என்று அமைத்தது. 


அந்த முறை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் அதை மாற்றி "இல்லறப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லலாம். அது வரை சரி.  அப்படி ஒரு சமுதாயத்தை அவர்கள் படைத்துக் காட்டிவிட்டு பின் வள்ளுவர் தவறு என்று சொல்லலாம். அது வரை, வள்ளுவர் காட்டியதுதான் வழி. 



மேலும், பெண் என்பவள் திருமணம் ஆன பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறாள். ஒரு ஆணின் இல்லறக் கடமைகளில் ஒன்று "தென் புலத்தார்" பேணுதல். அதாவது, முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்வது. 


ஏன் பெண்கள் செய்யக் கூடாதா ? ஆண்கள் தான் சிரார்த்தம் செய்ய வேண்டுமா? நாங்களும் மொட்டை போட்டு,  ஈமக் கிரியைகள் செய்வோம், வருடா வருடம் சிரார்த்தம் செய்வோம் என்று ஒரு கூட்டம் கிளம்பலாம். 


சொல்வது எளிது. செய்வது கடினம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 



(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள். ஏற்கனவே ப்ளாக் நீண்டு விட்டதால், இதன் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் காண்போம். 




Monday, September 6, 2021

திருவாசகம் -திருச்சதகம் - வித்தின்றி விளையச் செய்வாய்

திருவாசகம் -திருச்சதகம் -  வித்தின்றி விளையச் செய்வாய் 


இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள் என்று பல கேள்விகள் இருக்கின்றன. 


ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா?


அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். 


எது ஒன்று தோன்றுவதற்கும், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். எனவே, இந்த உலகைப் படைத்தது இறைவன் என்று பக்திமான்கள் கூறுகிறார்கள். 


அவர்கள் அதோடு நின்று விடுகிறார்கள். எதை ஒன்றை தோற்றுவிப்பதற்கும் அதை உண்டாக்கிய ஒருவன் வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தது யார் என்ற பதில் கேள்வி எழும். 


இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை, அவன் தானே தோன்றி விட்டான் என்று கூறினால், இந்த உலகமும் தானே தோன்றியது என்றும் கூறலாம். .


சரி, இறைவன் தோற்றிவித்தான் என்றால் எதில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தான் என்ற கேள்வி வரும். எதில் இருந்தோ என்றால் அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வரும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"நீ உலகை இரண்டு விதத்தில் படைப்பாய். ஒன்று விதை இல்லாமல் விளைவு செய்வாய். இன்னொன்று இருக்கின்ற உலகை வைத்துக் கொண்டு மேலும் பலப் பல செய்வாய். அப்பேற்பட்ட நீ, என்னை உன் கோவில் வாசலில் பித்தனாக நிற்க வைத்தாய். உன் அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டாய். தாம் நட்ட மரம் விஷ மரம் என்று தெரிந்தாலும், நட்டவர்கள், அந்த மரத்தை அழிக்க மாட்டார்கள். நானும் அந்த மாதிரி ஒரு விஷ மரம்தான். என்னையும் அழித்து விடாதே "


என்று உருகுகிறார். 


பாடல்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_6.html


(Please click the above link to continue reading)



விச்ச தின்றியே விளைவு செய்குவாய்‌ 

விண்ணு மண்ணக முழுதும்‌ யாவையும்‌ 

வைச்சு வாங்குவாய்‌ வஞ்ச கப்பெரும்‌ 

_ புலைய னேனையுன்‌ கோவில்‌ வாயிலில்‌ 

பிச்ச னாக்கினாய்‌ பெரிய வன்பருக்‌ 

குரிய னாக்கினாய்‌ தாம்வ ளார்த்ததோர்‌ 

ரச்சு மாமர மர்யி னுங்கொலார்‌ 

நானு. மங்ஙனே யுடைய நாதனே. 


பொருள் 




விச்ச தின்றியே = விதை இன்றியே 


விளைவு செய்குவாய்‌  = விளைய வைப்பாய் 


விண்ணு மண்ணக முழுதும்‌ = விண்ணும், மண்ணும்


யாவையும்‌  = முழுவதும் 


வைச்சு வாங்குவாய்‌ = செய்வாய், பின் அவற்றை உன்னுள் அடங்கப் பண்ணுவாய் 


வஞ்ச கப் = வஞ்சக மனம் கொண்ட 


பெரும்‌  = பெரிய 


புலைய னேனை = கீழான என்னை 


யுன்‌ = உன் 


கோவில்‌ வாயிலில்‌  = கோவில் வாசலில் 


பிச்ச னாக்கினாய்‌  = பித்தனாக்கினாய் 


பெரிய = மதிப்புள்ள 


வன்பருக்‌ குரிய = அன்பருக்கு உரியவன் 


னாக்கினாய்‌ = ஆக்கினாய் 


தாம் வ ளார்த்ததோர்‌  = தாம் வளர்த்த 


ரச்சு = நச்சு 


மாமர மர்யி னுங்கொலார்‌  = மா மரமாயினும் வைத்தவர்கள் அதை கொல்ல மாட்டார்கள் 


நானு. மங்ஙனே யுடைய நாதனே.  = நானும் அப்படித்ததான், எல்லாம் உடைய நாதனே 



என்ன ஒரு பாடல். எவ்வளவு பொருள் செறிவு. 


பிள்ளை பிறந்து வளர்ந்து விட்டான். சேராத இடம் சேர்ந்து, கெட்டுப் போய் விட்டான். பெற்ற தாய், அந்தப் பிள்ளையை வெறுப்பாளா? ஊருக்கு அவன் கெட்டவனாக இருக்கலாம். ஆனால் , அவனைப் பெற்ற தாய்க்கு அவன் செல்லப் பிள்ளைத் தான். 


சிலர் மரம் வைத்து வளர்ப்பார்கள். வளர்ந்த பின்தான் தெரியும், அந்த மரம் நச்சு கனிகளை கொடுக்கும் மரம் என்று. அதற்காக அதை வெட்டி விட மாட்டார்கள். அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். 


அப்படி இருந்தது நம் பண்பாடு. 


இப்போது என்னடா என்றால், சாலை போடுகிறேன், வீடு கட்டுகிறேன், தொழிற்சாலை கட்டப் போகிறேன் என்று நூற்றுக் கணக்கில் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள்.


நச்சு மரத்தை கூட வெட்டாமல் வளர்த்த கருணை நிறைந்த பரம்பரை நம்முடையது. 


இறைவன், ஒன்றும் இல்லாததில் இருந்து இந்த உலகை தோற்றுவித்தான். விதை இல்லாமல் செடி வளர்ப்பவன் என்கிறார் மணிவாசகர். அது எப்படி முடியும் என்றால், நமக்குத் தெரியாது. மணிவாசகருக்கு தெரிந்து இருக்கிறது. 


இல்லை என்றால் வேலை மெனக்கெட்டு "விதை இல்லாமல் விளையச் செய்வாய்" என்று சொல்லுவாரா. நம் அறிவுக்கு எட்டவில்லை. அவ்வளவுதான். 


அது மட்டும் அல்ல, பின்னால் "விண்ணையும் மண்ணையும் வைத்து வாங்குவாய்" என்கிறார். 


இதை சைவ சித்தாந்தம் முதலுர்பவம், புனருற்பவம் என்கிறது. ஆதியில் தொடங்கிய உற்பத்தி, அப்புறம் பின்னால் தோன்றிய உற்பத்தி. 


மெய்கண்டர் உரை எழுதும் போது கூறுவார் 


"பிரபஞ்சம்‌ அகாதியாகலின்‌ அம்முதற்கோடி ஈம்மனோரான்‌ அறியவாராமை 

யானும்‌"

என்றார். நம்மால் அறிய முடியாது என்கிறார். 


நட்ட மரம் நச்சு மரமாயினும் நட்டவர்கள் எப்படி வெட்ட மாட்டார்களோ, அது போல, என்னை நீ தான் படைத்தாய். நான் சரி இல்லை என்றால், அதற்கு நீ தான் பொறுப்பு. எனவே, என்னை ஏற்றுக் கொள் என்கிறார். 


இதெல்லாம் படிக்கணுமா இல்லையா? 





Sunday, September 5, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம் 


இல்லறம் என்பது வீடு பேற்றை நோக்கிய ஒரு படி. அதுவே முடிவு அல்ல. 


வீடு பேறு வேண்டும் என்றால் துறவு வேண்டும். 


துறவு வேண்டும் என்றால் அருள் வேண்டும். 


அருள் வேண்டும் என்றால் அன்பு வேண்டும். 


அன்பு வேண்டும் என்றால் அன்பு செய்ய ஆள் வேண்டும். 


முதலில் கணவன், மனைவி. அவர்களுக்குள் அன்புப் பரிமாற்றம் நிகழும்தானே. என்னதான் சண்டை சச்சரவு என்றாலும் என் மனைவி, என் கணவன் என்ற உரிமையும், அதனால் பிறக்கும் அன்பும் இருக்கும் தானே?


அந்த மேலும் தொடர குழந்தைகள் அவசியம். 


கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், அதில் ஒரு பிரதி பலன் இல்லாமல் இல்லை. ஒன்றை நோக்கிய அன்பு அது. 


பிள்ளையின் பால் செலுத்தும் அன்பு என்பது, அதற்கு அடுத்த கட்டம். ஒரு பிரதி பலனும் எதிர்பாராமல் செய்யும் அன்பு. தன் பிள்ளை என்ற ஒன்றைத் தவிர அதில் ஒரு பிரதி பலன் இல்லை. 


எனவே, வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் புதல்வர்களை பெறுதல் என்ற அதிகாரத்தை வைத்ததார். 


அதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரைப் பாயிரம் மிக ஆழமானது. 


உரைப் பாயிரத்தை இன்று காண்போம். 


உரைப் பாயிரம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_5.html


(Please click the above link to continue reading)


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது."



பொருள் 



தமிழ்தான். அந்தக் காலத்து தமிழ். 


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்":  பொதுவாக இருபிறப்பாளர் என்று அந்தணர்களை குறிப்பது உண்டு. 


நாம் பிறக்கும் போது, நமக்கு ஒரு நோக்கமும் கிடையாது. எதற்காக பிறந்தோம். ஏன் பிறந்தோம் என்று தெரியாது. கொஞ்சம் வளர்ந்து, அறிவு வந்த பின், நான் இன்னது செய்யப் போகிறேன் என்று முடிவு எடுக்கிறோம். ஒரு விரதம் பூணுகிறோம். அப்படி ஒரு விரதம் பூணுவதற்கு அடையாளமாக, அதை எப்போதும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அணியும் நூல் தான் பூணூல். விரதம் பூண்டதை நினைவு படுத்தும் நூல்,பூணூல். 


அந்தக் காலத்தில் அந்தணர், சத்ரியர் மற்றும் வைசியர்கள் பூணூல் அணிந்தார்கள்.  நான்காம் வர்ணத்தவர் அணியவில்லை. 


இப்போது ஆரம்பத்தை வாசிப்போம். 


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்" அதாவது இருபிறப்பாளர் என்று சொல்லப் படும் பிராமண, க்ஷத்ரிய மற்றும் வைசியர் என்ற அந்த மூவாராலும். 


விளங்கி விட்டதா?


மேலே செல்வோம். 


"இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் "  நாம் மூன்று பேருக்கு எப்போதும் கடன் பட்டிருக்கிறோம். அந்தக் கடனை தீர்க்க வேண்டும். அது என்ன மூன்று பேருக்கு உள்ள கடன் என்றால் ....


"முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்."


நமக்கு பல அறிவு நூல்களைத் தந்தவர்கள் முனிவர்கள். அந்த முனிவர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். ரொம்ப வேண்டாம், திருவள்ளுவருக்கு நாம் கடன் பட்டு இருக்கிறோமா இல்லையா? கட்டாயம் கடன் பட்டு இருக்கிறோம். அந்த கடன் எப்படி தீரும் என்றால், அந்த நூல்களை கேட்டு அறிவதால் தீரும். அவர் பாட்டுக்கு எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, நாலு மதிப்பெண் வாங்கினால் போதும் என்று இருக்கக் கூடாது. ஐயம் திரிபு அறக் கற்பதுதான் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு. 


முனிவர் கடன் படிப்பதால் தீரும். 


"தேவர் கடன் வேள்வியால்": நாம் தேவர்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம். மழை, வெயில், என்று பல தேவதைகள் இருக்கின்றன. அவை நமக்குச் செய்யும் உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு வேள்விகள். 


"தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் " நம் முன்னோர்களுக்கு நாம் பட்ட கடனை திருப்பிச் செலுத்துவது என்பது அவர்களுக்கு திவசம்/சிரார்த்தம் என்பன செய்வதன் மூலம். நாம் இன்று இருக்கிறோம் என்றால் நமக்கு முன்னால் எத்தனையோ முன்னோர்கள் வாழ்ந்து இருக்க வேண்டும். 


என் தந்தை, என் தாத்தா, அவருடைய தந்தை, தாத்தா என்று என் பரம்பரை மேல் நோக்கி போய் கொண்டே இருக்கிறது அல்லவா. அத்தனை பேருடைய கூட்டு முயற்சிதான் நான். 


அவர்களுக்கு பட்ட கடனை திருப்பிச் செய்வது என்பது நீர்க்கடன் கழிப்பது என்று சொல்லுவார்கள். அதைச் செய்ய "நல்ல" புதல்வர்கள் வேண்டும். 


பிள்ளை எதற்கு என்றால் சேர்த்து வைத்த சொத்தை அனுபவிக்க என்கிறார்கள். அதற்கு அல்ல பிள்ளைகள். 


அந்த நீர்க் கடனை கழிக்க நல்ல பிள்ளைகளை பெற வேண்டும்.


பிள்ளை வேண்டும் என்றால் மனைவி வேண்டும். 


எனவே, வாழ்கை துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் இந்த அதிகாரத்தை வைக்கிறார் 


இனி அதிகாரத்துக்குள் நுழைவோம். 





Saturday, September 4, 2021

கம்ப இராமாயணம் - கொடியான் வரும்

 கம்ப இராமாயணம் - கொடியான் வரும் 


அசோகவனத்தில் உள்ள சீதை தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள்.



"இந்த இராமன் இருக்கிறானே எவ்வளவு கொடியவன் தெரியுமா. தசரத சக்கரவர்த்தி இறந்த போதும், உலகம் எழும் துயர் கொண்டு இராமனை மீண்டும் நாட்டுக்கு வரும்படி வேண்டியபோதும் வராமல் காட்டுக்குச் சென்ற கல் நெஞ்சக் காரன். அவன் வந்து நம்மை மீட்பான் என்று நீங்கள் (மனமும் உயிரும்) அவனோடு குலாவுகிரீர்களா....அவனை இன்னுமா நம்புகிறீர்கள்" 


என்கிறாள் 


பாடல் 


'முடியா முடி மன்னன் முடிந்திடவும்

படி ஏழும் நெடுந்துயர் பாவிடவும்,

மடியா நெறி வந்துவனம் புகுதும்

கொடியார் வரும் என்று, குலாவுவதோ ?'


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_4.html


(Please click the above link to continue reading)


முடியா = முடிவே இல்லாத 


முடி மன்னன் = முடி தரித்த மன்னன் தசரதன் 


முடிந்திடவும் = இறந்த போதும் 


படி ஏழும் = ஏழு உலகமும் 


நெடும் துயர்   = பெரிய துயர் 


பாவிடவும் = பரவிடவும் 


மடியா  = முடிவற்ற 


நெறி வந்து  = வழியில் வந்து 


வனம் புகுதும் = கானகம் புகுந்ததும் (அறிந்த நீங்கள்) 


கொடியார் வரும்  = கொடியவனான இராமன் வருவான் 


என்று, குலாவுவதோ ?' = என்று அவனோடு கொஞ்சி குலாவுகிரீர்களா? 


சீதை ஏதோ கோபித்து சொல்வது மாதிரி இருக்கும். 


பெண்கள் குணம் அப்படி. 


எதையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லும் இயல்பு. 


அவன் செய்தது சரி என்று அவளுக்குத் தெரியும். தெரியாமலா அவனோடு கானகம் வந்தாள். 


இப்போது பிரிவு.  அவன் வரவில்லையே என்ற ஏக்கம். தவிப்பு. 


யோசித்துப் பார்க்கிறாள். 


அவங்க அப்பா அவ்வளவு சொல்லியும்,உயிரை விட்டபோது கூட இராமன் அவன் கொண்ட கொள்கையில் பின் வாங்கவில்லை. 


உலகமே அவனை வருந்தி அழைத்த போதும் அவன் திரும்பிப் போக வில்லை. 


அவர்களுக்கெல்லாம் இரங்காத அவன், எனக்கு மட்டும் இரங்குவானா? என் மேல் மட்டும் எப்படி அன்பு இருக்கும் என்று கவலைப் படுகிறாள். 


தேவை இல்லாதவற்றை இழுத்து வைத்துக் கொண்டு, தானும் துன்பப்பட்டு, மற்றவர்களையும் துன்பப்படுத்துவது என்பது பெண்ணின் குணம் போலும். 


சந்தேகம். 


சீதைக்கே இருந்திருக்கிறது. இராமன் தன் மேல் காதல் உள்ளவனா என்று. 


"கொடியான்" என்று சொன்னது ஒரு உரிமையில் இருக்கலாம். சந்தேகம் என்னவோ உண்மைதான். 


அது சீதைக்கு வந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. 


சீதைக்கு வந்திருக்கலாம் என்று கம்பன் நினைத்து பாடிய பாடல், சரியாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று நம்மை நம்ப வைக்கிறதே. 


அதுதான் கம்பனின் வெற்றி. 


பாத்திரங்களின் உள் நின்று பேசும் கம்பன். 


இதெல்லாம் படிக்க வேண்டாமா?


Friday, September 3, 2021

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா 


இறைவன் உயிரை எடுத்து உண்டு விடுவானாம். உயிர் + உண்ணி (உண்ணுதல், சாப்பிடுதல்). அதாவது, உயிர்களை தனக்குள் அடக்கிக் கொள்வான் என்று பொருள். 


இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா? எங்கே போய் தேடுவது? 


மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார். நாம் செய்யும் வினகைளை தடுத்து, மறு பிறவி வாராமல் காப்பவன் அவன். 


"நீ எனக்குள்ளே இருக்கிறாய். நான் உன்னை எவ்வாறு காண்பேன், உன்னைப் பார்த்தேன் என்று எப்படி மற்றவர்களிடம் சொல்லி பெருமிதம் கொள்வேன்" என்கிறார். 


பாடல் 


பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாக மதாய்என்

மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப பாகா

செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்

எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_3.html


(Please click the above link to continue reading)


பைந்நாப் = பசிய நாவினை உடைய 


பட = படத்தைக் (பாம்பின் படம்) கொண்ட 


அர = அரவு, பாம்பு, 


ஏர் அல்குல்  = அழகிய அல்குல் உடைய 


உமைபாகம் அதாய்  = உமை அம்மையை பாகமாக உடையவனே 


என் மெய்ந்  = என் உடலில் 


நாள்தொறும் = எப்போதும் 


பிரியா = பிரியாமல் இருப்பவனே 


வினைக் கேடா = வினைகளை அறுப்பவனே 


விடைப பாகா = எருதை வாகனமாகக் கொண்டவனே 


செந்நாவலர் = சிறந்த புலவர் 


பரசும் =போற்றும் 


புகழ்த் = புகழ் கொண்ட 


திருப்பெருந்துறை = திருப்பெருந்துறை என்ற திருத் தலத்தில் 


உறைவாய் = எழுந்து அருளி இருப்பவனே 


எந்நாட்களித்து = உன்னை கண்டு களித்து 


எந்நாள் = எப்போது 


இறு மாக்கேன் = பெருமிதம் கொள்வேன் 


இனி யானே. =இனிமேல் நானே 


நீயோ என்னுள் இருக்கிறாய். உன்னை வெளியில் கண்டதாய் சொல்லி நான் எப்படி பெருமிதம் கொள்வேன். 


"நீர் பெரிய பக்திமான் என்கிறீரே, நீர் கடவுளை கண்டதுண்டா? " என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன். "ஆமாம், நான் பார்த்து இருக்கிறேன்" என்று இறுமாப்போடு சொல்ல முடியாதே. 


கோவிலுக்குப் போவதும், புனித நீராடுவதும் தவறல்ல. இறைவனை தனக்குள்ளே அறிய அவை படிகள். படிகளை ஏற பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், படியே முடிவு என்று ஆகி விடக் கூடாது. 


சாகும் வரை, கோவில் குளம் என்று அலைந்து கொண்டு இருந்தால் என்ன செய்வது? 


நான்காம் வகுப்பு நன்றாக இருக்கிறது என்று ஆயுள் பூராவும் நான்காம் வகுப்பே படித்துக் கொண்டு இருக்க முடியுமா? 


படிப்பவை நம்மை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.