Saturday, September 4, 2021

கம்ப இராமாயணம் - கொடியான் வரும்

 கம்ப இராமாயணம் - கொடியான் வரும் 


அசோகவனத்தில் உள்ள சீதை தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள்.



"இந்த இராமன் இருக்கிறானே எவ்வளவு கொடியவன் தெரியுமா. தசரத சக்கரவர்த்தி இறந்த போதும், உலகம் எழும் துயர் கொண்டு இராமனை மீண்டும் நாட்டுக்கு வரும்படி வேண்டியபோதும் வராமல் காட்டுக்குச் சென்ற கல் நெஞ்சக் காரன். அவன் வந்து நம்மை மீட்பான் என்று நீங்கள் (மனமும் உயிரும்) அவனோடு குலாவுகிரீர்களா....அவனை இன்னுமா நம்புகிறீர்கள்" 


என்கிறாள் 


பாடல் 


'முடியா முடி மன்னன் முடிந்திடவும்

படி ஏழும் நெடுந்துயர் பாவிடவும்,

மடியா நெறி வந்துவனம் புகுதும்

கொடியார் வரும் என்று, குலாவுவதோ ?'


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_4.html


(Please click the above link to continue reading)


முடியா = முடிவே இல்லாத 


முடி மன்னன் = முடி தரித்த மன்னன் தசரதன் 


முடிந்திடவும் = இறந்த போதும் 


படி ஏழும் = ஏழு உலகமும் 


நெடும் துயர்   = பெரிய துயர் 


பாவிடவும் = பரவிடவும் 


மடியா  = முடிவற்ற 


நெறி வந்து  = வழியில் வந்து 


வனம் புகுதும் = கானகம் புகுந்ததும் (அறிந்த நீங்கள்) 


கொடியார் வரும்  = கொடியவனான இராமன் வருவான் 


என்று, குலாவுவதோ ?' = என்று அவனோடு கொஞ்சி குலாவுகிரீர்களா? 


சீதை ஏதோ கோபித்து சொல்வது மாதிரி இருக்கும். 


பெண்கள் குணம் அப்படி. 


எதையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லும் இயல்பு. 


அவன் செய்தது சரி என்று அவளுக்குத் தெரியும். தெரியாமலா அவனோடு கானகம் வந்தாள். 


இப்போது பிரிவு.  அவன் வரவில்லையே என்ற ஏக்கம். தவிப்பு. 


யோசித்துப் பார்க்கிறாள். 


அவங்க அப்பா அவ்வளவு சொல்லியும்,உயிரை விட்டபோது கூட இராமன் அவன் கொண்ட கொள்கையில் பின் வாங்கவில்லை. 


உலகமே அவனை வருந்தி அழைத்த போதும் அவன் திரும்பிப் போக வில்லை. 


அவர்களுக்கெல்லாம் இரங்காத அவன், எனக்கு மட்டும் இரங்குவானா? என் மேல் மட்டும் எப்படி அன்பு இருக்கும் என்று கவலைப் படுகிறாள். 


தேவை இல்லாதவற்றை இழுத்து வைத்துக் கொண்டு, தானும் துன்பப்பட்டு, மற்றவர்களையும் துன்பப்படுத்துவது என்பது பெண்ணின் குணம் போலும். 


சந்தேகம். 


சீதைக்கே இருந்திருக்கிறது. இராமன் தன் மேல் காதல் உள்ளவனா என்று. 


"கொடியான்" என்று சொன்னது ஒரு உரிமையில் இருக்கலாம். சந்தேகம் என்னவோ உண்மைதான். 


அது சீதைக்கு வந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. 


சீதைக்கு வந்திருக்கலாம் என்று கம்பன் நினைத்து பாடிய பாடல், சரியாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று நம்மை நம்ப வைக்கிறதே. 


அதுதான் கம்பனின் வெற்றி. 


பாத்திரங்களின் உள் நின்று பேசும் கம்பன். 


இதெல்லாம் படிக்க வேண்டாமா?


1 comment:

  1. இராமன் கொடியோன் என்று ஒரு நிமிட ஆதங்கத்திலோ, செல்லமாகவோ சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete