Wednesday, September 22, 2021

மணிமேகலை - அறவிலை பகர்வோர்

 மணிமேகலை - அறவிலை பகர்வோர் 


சமயம் சார்ந்த பண்டிகைகள், திருமண நாள், பிறந்த நாள் போன்ற நல்ல தினங்களில் வீட்டில் விசேடமாக பலகாரங்கள் செய்து அக்கம் பக்கம், தெரிந்தவர், உறவினர், நண்பர்களுக்கு வழங்குவது வழக்கம். அது நல்ல பழக்கம்தான். 


ஆனால், அது ஏதோ பெரிய அறச் செயல், புண்ணிய காரியம் என்று நினைக்கக் கூடாது. "நாலும் கிழமையும்னா நாலு பேருக்கு வீட்டுல செஞ்ச பலகாரங்களை தவறாமல் அனுப்பி விடுவேன்" என்பதில் பெருமை கொள்ளக் கூடாது. 


மணிமேகலை சொல்கிறது, "பொருள் உள்ளவர்களுக்கு நாம் அளிக்கும் எதுவும் அறத்தை விலை பேசுவது மாதிரித்தான்" என்று. 


ஒரு வியாபாரி மற்றவருக்கு ஒரு பொருளை கொடுக்கிறான் என்றால் அதற்கு காரணம் அதில் அவனுக்கு ஒரு இலாபம் வரும் என்ற எதிர்பார்ப்பு தான். அது ஒரு அறச் செயலா? இல்லையே. அது இலாபம் நோக்கிய வாணிபம். 


அது போல பொருள் உள்ளவர்களுக்கு செய்வது, அவர்களால் பின்னால் நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. அது அறத்தை விலை பேசி விற்பது போல என்கிறது மணிமேகலை. 


பாடல் 


ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_22.html


(click the above link to continue reading)


ஆற்றுநர்க் களிப்போர் = ஆற்றுனற்கு அளிப்போர் = பொருள் உள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள் 


அறவிலை பகர்வோர் = அறத்தினை விலை கூறுபவர்கள் 


ஆற்றா = ஆற்ற முடியாத 


மாக்க ளரும் = மக்களின் கொடிய 


பசி களைவோர் = பசியை போக்குபவர் 


மேற்றே = அவர்கள் கண்ணதே 


யுலகின் = இந்த உலகின் 


மெய்நெறி = உண்மையான வழியில் செல்லும் 


வாழ்க்கை = வாழ்கை 


மண்டிணி = மண்ணால் திணித்து அடர்நத 


ஞாலத்து = உலகில் 


வாழ்வோர்க் கெல்லாம் = வாழ்வோருக்கு எல்லாம் 


உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே = உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - உணவு கொடுத்தவர், உயிரை கொடுத்தவருக்கு சமம். 


உணவைக் கொடுப்பது, உயிரைக் கொடுப்பது மாதிரி. 


உணவு கொடுக்கும் போது ஏதோ உணவைக் கொடுக்கிறோம் என்று நினைக்கக் கூடாது. ஒருவருக்கு உயிரைக் கொடுக்கிறோம் என்று நினைக்க வேண்டும்.  


ஏதோ நாம் கொடுத்த உணவால் அவர் உயிர் பிழைத்தார் என்று அல்ல. நம்மால் அவர் இன்னும் சிறிது காலம் வாழ்வார்  என்று நினைக்க வேண்டும். 


செல்வர்களுக்கும், பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தருவது, அறவிலை பகர்வதுதான்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள் நம்மவர்கள்!



2 comments:

  1. இந்தப் பாடலில், கடைசி வரி பிரபலமானது. அதன் பின்கருத்தை இப்போதுதான் கண்டேன்.

    அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete