Wednesday, August 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அருங்கேடன் என்பது அறிக

 திருக்குறள் - தீவினையச்சம் -  அருங்கேடன் என்பது அறிக


ஒருவனுக்கு துன்பம் வருமா இல்லையா என்று துல்ல்லியமாக கூற முடியும். யாருக்குத் துன்பம் வரும், யாருக்கு துன்பம் வராது என்று கணிக்க முடியும். உங்களுக்கு எதிர்காலத்தில் துன்பம் வருமா என்று அறிய வேண்டுமா? மேலும், அந்தத் துன்பங்கள் வராமல் தடுக்க வேண்டுமா?


வள்ளுவர் வழி சொல்கிறார். 


"தீய வழிகளில் சென்று மற்றவர்களுக்கு ஒருவன் துன்பம் செய்யாமல் இருப்பான் என்றால் அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது"


பாடல் 


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_2.html


(please click the above link to continue reading)



அருங்கேடன் = அருமை + கேட்டினை உடையவன் 


என்பது = என்று 


அறிக = அறிந்து கொள்க 


 மருங்கோடித் = தவறான வழியில் சென்று 


தீவினை = தீய வினைகளை 


செய்யான் = செய்யாதவன் 


எனின் = என்றால் 


அருங்கேடன்  என்றால் என்ன?  ஒரு பொருள் அருமையானது என்றாது கிடைப்பதற்கு அரிதானது என்று பொருள். ஒருவன் அருங்கேடன் என்றால் அவனுக்கு கெடுதல் அரிதாக வரும். அதாவது வராது என்று பொருள். 


எப்போது வராது என்றால் 


மருங்கோடி தீயன செய்யான் எனில். 


மருங்கு என்றால் பக்கம். ஒரு பக்கமாகச் சென்று. அதாவது, அற வழி என்ற நேர் வழியை விட்டு, வேறு பக்கம் சென்று, மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பான் என்றால், அவனுக்கு ஒருக் காலும் தீமை வராது என்கிறார். 


இந்த மருங்கு என்ற சொல் பல இடங்களில் பல விட அர்த்தங்களில் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்


என்ற திருக்குறளில் மருங்கு என்பது சுற்றத்தார் என்ற பொருளில் வந்துள்ளது. 


செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்


என்ற நாலடியாரில், மருங்கு என்ற சொல் அடையாளம் என்ற பொருளில் வந்துள்ளது. மின்னல் போல் செல்வம் அடையாளம் இல்லாமல் சென்று விடும் என்ற அர்த்தத்தில். 


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்படும்.

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னந்தனியிருப்பாக்கு இதுபோலும் தவம் இல்லையே


என்ற அபிராமி அந்தாதியில் மருங்கு என்பது வயிறு, அல்லது இடை என்ற பொருளில் வந்துள்ளது. 


அது ஒரு சுவாரசியமான வார்த்தை. 


எப்படி ஒரு சொல் சம்பந்தமே இல்லாத வெவேறு பொருள் கொள்கிறது?


சிந்தித்துப் பார்த்தால் அடிநாதமாக உள்ள பொருள் விளங்கும்.


மருங்கு என்றால் பக்கம் என்று பார்த்தோம். 


உடம்பின் இரண்டு பக்கமும் இருப்பது இடுப்பு. எனவே மருங்கு, இடுப்பு என்ற பொருள் கொண்டது. 


அக்கம் பக்கம் இருப்பவர் சுற்றத்தார். எப்போதும் நமக்கு பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றத்தார். நம்மை விட்டுப் போய் விட மாட்டார்கள். எனவே, மருங்குடையார் என்று அவர்கள் அழைக்கபடுகிரார்கள். 


செல்வம் எப்போதும் நம் பக்கம் இருக்காது. இன்று நம் பக்கம் இருக்கும், நாளை வேறொருவர் பக்கம் போய் விடும். எப்ப எந்தப் பக்கம் இருக்கும் என்று தெரியாததால் அதை மருங்கற கெட்டு விடும் என்கிறது நாலடியார். 





Tuesday, August 1, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - தாம் வேண்டிக் கொண்டார் நட்பு


வயக்காட்டில் நீர் பாய்ச்சுவார்கள். ஓடை வழி வரும் அந்த நீர் சில சமயம் அந்த ஓடையின் கரையை உடைத்துக் கொண்டு வெளியே செல்லும்.  சில சமயம் வயலுக்கு பாய்ச்சிய நீர், வரப்பில் எங்கேனும் விரிசல் இருந்தால் அந்த வழியாக வெளியே ஓடிவிடும். 


நீர் இப்படி வெளியே போகிறதே என்று கோபித்துக் கொண்டு, யாரும் மீண்டும் கரையையோ, வரப்பையோ எடுத்துக் கட்டாமல் இருக்க மாட்டார்கள். அது எத்தனை தரம் உடைந்தாலும், அத்தனை தரமும் சரி செய்வார்கள். 


அது போல, ஆராய்ந்து நட்பு கொண்டவர்கள், நண்பர்கள் எத்தனை முறை பிழை செய்தாலும், அவர்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். 


பாடல் 


செறுத்தோறு உடைப்பினும், செம் புனலோடு ஊடார்,

மறுத்தும் சிறைசெய்வர், நீர் நசைஇ வாழ்நர்;-

வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே,

தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post.html


(please click the above link to continue reading)



செறுத்தோறு = செறுத்தல் என்றால் அடக்குதல், தடுத்தல் என்று பொருள். இங்கே, ஒவ்வொரு முறையும் கரையை  


 உடைப்பினும் = உடைத்துக் கொண்டு வெளியே சென்றாலும் 


செம் புனலோடு = செம்மையான நீரோடு (சிறந்த நீரோடு) 


ஊடார் = யாரும் கோபம் கொள்ள மாட்டார்கள் 


மறுத்தும் = மீண்டும் 


 சிறைசெய்வர் = அணை கட்டுவார்கள் வரப்பை எடுத்துக் கட்டுவார்கள். 


நீர் = தண்ணீரை 


நசைஇ வாழ்நர் = விரும்பி, அண்டி வாழ்பவர்கள் 


வெறுப்ப வெறுப்பச் = மீண்டும் மீண்டும் வெறுக்கத் தக்க செயல்களை 


 செயினும் = செய்தாலும் 


பொறுப்பரே = பொறுத்துக் கொள்வார்களே 


தாம் = அவர்களே 


வேண்டிக்  = விரும்பி 


கொண்டார் தொடர்பு = கொண்டவர்களின் தொடர்பை 


நண்பர்கள் தவறு செய்வார்கள். நாம் விரும்பாத காரியங்களை செய்வார்கள்.  அதற்காக அவர்களை விட்டு விட முடியாது. 


இது உறவுக்கும் பொருந்தும். 


புதிதாக வரும் உறவுகள் சில சிக்கலாக இருக்கும். சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். வெட்டி விட முடியாது. 


நட்பு, உறவு என்றால் சில சமயம் அப்படித்தான் இருக்கும். சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும். 



Monday, July 31, 2023

திருக்குறள் - தன் மேல் காதல்

 திருக்குறள் - தன் மேல் காதல் 


நாம் ஏன் பிறருக்கு தீமை செய்கிறோம்?  


நம்மை நாம் காதலிக்காததால் என்கிறார் வள்ளுவர். 


இது என்ன புதுக் கதை? நம்மை நாம் காதலிப்பதா? 


உலகிலேயே நமக்கு மிக நெருக்காமான நபர் யார் என்றால் அது நாம்தான். நம்மையே நாம் விரும்புகிறோமா? நம் அழகு, அறிவு, திறமை, குணம், பேச்சு, நடை, உடை, பாவனை...இதில் எவ்வளவு நாம் நம்மை விரும்புகிறோம்?


நம்மில் நமக்கு பிடிக்காத குணங்கள் எவ்வளவு இருக்கிறது? 


நாம் நம்மை காதலிக்க ஆரம்பித்துவிட்டால், அந்தக் காதல் மற்றவர்கள் மேலும் படரும். எனக்கு எது துன்பம் தருகிறதோ, அது மற்றவர்களுக்கும் துன்பம் தரும் என்று நான் சிந்திப்பேன். அந்தத் துன்பத்தை மற்றவர்களுக்கு தர மாட்டேன். 


அடிப்படை என்ன என்றால், நாம் நம்மை காதலிப்பது இல்லை. 


பாடல் 


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_31.html


(please click the above link to continue reading)


தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தானே 


காதலன் ஆயின் = காதல் செய்வான் என்றால் 


எனைத்தொன்றும் = எவ்வளவு சிறிய அளவாயினும் 


துன்னற்க = செய்யாமல் இருக்க 


தீவினைப் பால் = தீயவினைகளின் பக்கம், தீய வினைகளின் பகுதியில் 


நீ உன்னை விரும்புகிறாயா, அப்படி என்றால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதே என்கிறார்.


ஏன்?


பிறருக்கு தீங்கு செய்தால் அந்த தீமையின் பலன் உனக்கு வரும். நீ வருத்தப்படுவாய். அந்த வருத்தத்தை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. காரணம், நீ உன்னை விரும்பிகிறாய். 


மாற்றாக, உனக்கு உன் மேல் விருப்பு இல்லை என்றால், உனக்கு ஒரு துன்பம் வந்தாலும், நீ அதை சகித்துக் கொள்வாய். நீ ஒருவனை அடிக்கிறாய். அவன் உன்னை பதிலுக்கு அடிக்கிறான். நீ என்ன நினைப்பாய்?  நான் அடித்தேன், பதிலுக்கு அடித்தான் என்று அதற்கு ஒரு சமாதனம் சொல்வாய். அடியின் வலியும், அவமானமும் பெரிதாகத் தெரியாது. 


முதலில் நீ உன்னை காதலிக்கத் தொடங்கு. நீ உன்னை விரும்புபவன் என்றால் மற்றவர்களுக்கு ஒரு சிறிதும் துன்பம் நினைக்காதே. 


இன்று முதல் நமக்கு ஒரு புது காதலன், காதலி கிடைத்தார் என்று எண்ணிக் கொள்வோம். நம்மையே நாம் விரும்ப ஆரம்பிப்போம்.  


எவ்வளவு இனிமையான விடயம். 



Sunday, July 30, 2023

நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல்

 நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல் 


தமிழ் இலக்கியம் என்பது ஏதோ பொழுது போக்க, நேரத்தை செலவழிக்க என்று எழுதப்பட்ட இலக்கியம் அல்ல. வாழ்வைகூர்ந்து நோக்கி, அதை செம்மைப் படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதை அழகாக, எளிமையாக சொன்னவை நம் இலக்கியங்கள். 


அப்படிப்பட்ட ஒன்று தான் நாலடியார். நான்கே வரிகளில் வாழக்கைக்கு தேவையான நல்ல விடயங்களை எடுத்துச் சொல்லும் நூல். 


நண்பர்களை ஆராய்ந்து, தேர்ந்து எடுக்க வேண்டும். அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவரை நட்பாகக் கொள்ளக் கூடாது. 


சரி, ஒருவரை ஆராய்ந்து நட்பாகக் கொண்டுவிட்டோம் என்றால், பின்னாளில் அவர்களிடம் சில குறை வந்தாலும், அவர்கள் நமக்கு வேண்டாதவற்றை செய்தாலும், பொறுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல் வெட்டி விடக் கூடாது. அப்படி செய்து கொண்டே போனால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள். குறை எல்லோரிடமும் உண்டு என்கிறது இந்த முதல் பாடல். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_30.html


(pl click the above link to continue reading)


நல்லார் = இவர் நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாமே 


நனி  = மிகவும் 


விரும்பிக் = விருப்பத்துடன்  


கொண்டாரை = நட்பாக்கி கொண்டவர்களை 


அல்லார் எனினும் =  அவர்கள் அப்படிப்பட்டவர் என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும் = அதை வெளியே காட்டாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லுக்கு உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு = நீருக்கு நுரை உண்டு 


புல் இதழ் = புன்மையான பூ இதழ் 


பூவிற்கும் உண்டு = பூவிற்கும் உண்டு 


அதாவது,


நாம் விரும்பி உண்ணக் கூடிய து சாதம், சோறு. அது நெல்லில் இருந்து வருகிறது. அந்த நெல்லில் உமி இருக்கும். அரிசியின் மேல் இருக்கும் தோலுக்கு உமி என்று பெயர். அதை உரித்தால் உள்ளே நெல் இருக்கும். உரித்த பின், அந்த தோலை, உமியை தூர எறிந்து விட வேண்டியதுதான். அதனால் பயன் இல்லை. உமி இருக்கிறதே என்பதற்காக நெல்லை ஒதுக்கி விட முடியுமா? ஒதுக்கினால்,  அரிசி கிடைக்காது, சோறு கிடையாது. பட்டினிதான். 


அதே போல், தாகத்தைத் தணிக்கும் நீர். அதில் சில சமயம் நுரை இருக்கும். நுரையை குடிக்க முடியாது. அது கொஞ்சம் இடைஞ்சல்தான். நுரை இருக்கிறதே என்று நீரை வேண்டாம் என்று ஒதுக்க முடியுமா? 


ஆசையோடு நாம் தலையில் வைக்கும் பூவில் சில சமயம் சில இதழ்கள் வாடி, கருகிப் போய் இருக்கும். ஒரு இதழ் கருகிப் போய் இருக்கிறதே என்பதற்காக அந்த பூவையே வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும். 


எல்லா நல்லவற்றிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். 


அதற்காக அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடக் கூடாது. 


அதை போல் நண்பர்களிலும் சில குறைபாடுகள் இருக்கும். அதை வெளியே சொல்லாமல், அவர்களை பொறுத்து நட்பை விட்டு விடக் கூடாது. 



Thursday, July 27, 2023

திருக்குறள் - நிழல் போல்

 திருக்குறள் - நிழல் போல் 


இந்த அற நூல்கள், நியாயம், தர்மம் என்பதில் எல்லாம் ஒரு நம்பிக்கை குறைந்து வரும் காலம் இது. 


தவறு செய்கிறவன் நன்றாக இருக்கிறான். நல்லது செய்பவன் துன்பப்படுகிறான். இதுதான் நடைமுறையில் காணக் கிடைக்கிறது. யாருக்கு நம்பிக்கை வரும்?


வள்ளுவர் சொல்கிறார்....அப்படி எண்ணாதே என்று. ஒருவனுடைய நிழல் எப்படி அவனை விட்டுப் போகாதோ, அது போல் ஒருவன் செய்த தீவனை அவனை விட்டு ஒரு போதும் நீங்காது. காத்திருக்கும். சரியான காலத்தில் தண்டிக்கும்.


பாடல்  

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)



தீயவை = தீய வினைகளை 


செய்தார் = செய்தவர் 


கெடுதல் = கட்டாயம் கேட்டினை அடைவர்  என்பது 


நிழல்தன்னை = ஒருவனுடைய நிழல் 


வீயாது = விடாமல், நீங்காமல் 


அடி = அவன் அடிக்கீழேயே 


உறைந் தற்று = சேர்ந்து இருப்பது போன்றது 


உடம்போடு நிழல் இருப்பது எவ்வளவு உறுதியோ அது போல ஒருவனோடு அவன் வினையும் இருப்பது உறுதி என்கிறார். 


இதில் பல நுணுக்கங்கள் இருக்கிறது. 


ஒன்று, சில சமயம் நிழல் சிறிதாக, காணமல் போய் விடுவது உண்டு. ஆகா, நாம் தப்பி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. உச்சி வேளை சென்ற பின், மாலையில் அதே நிழல் மிக நீண்டு வரும். உடம்பில் வலு இருக்கும் போது, செல்வம் இருக்கும் போது, அதிகாரம் இருக்கும் போது செய்யும் தவறுகள், பின்னால் பெரிதாக வந்து தாக்கும். 


இரண்டாவது, ஒருவனுடைய நிழல் அவனைப் போலவே இருக்கும். அவன் நிழல் யானை போலவோ, குதிரை போலவோ இருக்காது. அதே போல், அவன் செய்த வினைகளுக்கு தக்கவாறு பலன் கிடைக்கும். கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது. 


மூன்றாவது, இரவில், வெளிச்சம் இல்லாத போது நிழல் தெரியாது. மறைந்து வாழ்ந்து விடலாம் என்று சிலர் நினைக்கலாம். என்றோ ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் போது, அந்த நிழல் உடனே வெளிப்படும். இத்தனை நாள், நேரம் மறைந்து இருந்த நிழல் உடனே வெளிப்படும் என்பது சர்வ நிச்சயம். அது போல, வினைகளுக்கு பயன் உண்டு என்பது சர்வ நிச்சயம். சில சமயம் அப்படி இல்லாதது போல தோன்றலாம். கட்டாயம் திரும்பி வரும். 


எனவே, உடனடியாக தண்டனை இல்லை என்று நினைத்து தீவினை செய்ய நினைக்கக் கூடாது. கட்டாயம் அது திரும்பி வரும் என்று நினைத்தால் தீ வினை செய்ய அச்சம் வரும். 


நான் இன்று ஒருவனை அடிக்கிறேன், திட்டுகிறேன் என்றால், அந்த அடியும், திட்டும் எனக்கு ஒரு நாள் திரும்பி கட்டாயம் வரும் என்றால் அதை நான் செய்வேனா?







Wednesday, July 26, 2023

பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்

 பழமொழி - நீரற நீர்ச்சார் வறும்


பிறவித் துன்பம் என்பது பெரும் துன்பம்.  


எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர். 


மீண்டு இங்கு வாரா நெறி என்பார் வள்ளுவக் கடவுள். 


இந்தப் பிறவித் தொடரை அறுப்பது எப்படி?


வீட்டில் திரி போட்டு விளக்கு ஏற்றுவதை பார்த்து இருப்போம். விளக்கு என்றால் என்ன என்பதையே அறியாத ஒரு தலைமுறைக்குள் வந்து விட்டோம். 


அந்த விளக்கு எரிய வேண்டும் என்றால், விளக்கு வேண்டும், திரி வேண்டும், எண்ணெய் வேண்டும். இவை இல்லாமல் விளக்கு எரியாது. இன்றைய தலை முறையினருக்கு சொல்லுவது என்றால் லைட் எரிய வேண்டும் என்றால் பல்பு, எலெக்ட்ரிசிட்டி, வயர் இந்த மூன்றும் வேண்டும். 


நம் பிறவி நிகழ வேண்டும் என்றால் அதற்கு வினை வேண்டும். வினைதான் நம் பிறவிக்கு காராணம். 


அந்த வினையை மூன்றாகப் பிரிக்கிறார்கள். நாம் சேர்த்து வைத்த வினை, இப்போது செய்கின்ற வினை, இந்த இரண்டையும் சேர்த்து அதில் இருந்து நாம் அனுபவிக்கும் வினை. இந்த வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 


இதில் நல் வினையும் அடங்கும், தீ வினையும் அடங்கும். 


வினையை அறுத்தால், பிறவி அறும். 


எப்படி எண்ணெய், திரி இவற்றை நீக்கினால் சுடர் எரிவது நின்று போகுமோ அது போல. 


ஒரு குளத்தில் மீன், தவளை, ஆமை என்று உயிரினங்கள் வசிக்கும். குளத்துக்கு நீர் வருவது நின்று போனால், கொஞ்ச காலத்தில் குளத்தில் உள்ள உயிர்கள் அழிந்து போகும் அல்லவா. அது போல. 


பாடல் 


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக

எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்

சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்

'நீரற நீர்ச்சார் வறும்'.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_26.html


(click the above link to continue reading)


திரியும் = திரி 


இடிஞ்சிலும் = விளக்கு, அகல் 


நெய்யும் = நெய் 


சார்வாக = அவற்றைச் சார்ந்து 


எரியும் = எரியும் 


சுடரே = சுடர், தீபம் 


அனைத்தாய்த் = அது போல 


 தெரியுங்கால் = ஆராய்ந்து தெளியும் போது 


சார்வற = சார்பு அற்றுப் போக 


ஓடிப் = சென்ற பின் 


பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும் 


அஃதேபோல் = அதைப் போல 


'நீரற = நீர் வருவது நின்று போனால் 


நீர்ச்சார் வறும் = நீர் + சார்வு + அறும்  = நீரை சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள் அற்றுப் போய் விடும். 


'நீரற நீர்ச்சார் வறும்' என்பது பழமொழி. நீர் இல்லாவிட்டால், உயிரினங்கள் அழியும் என்ற பழமொழியை வைத்துக் கொண்டு, ஒரு பாடம் சொல்கிறது இந்தப் பாடல். 


எல்லோருக்கும் தெரிந்த ஒன்று பழமொழி. தெரியாத ஒன்று எப்படி பிறவித் தொடரை அறுப்பது என்பது. எவ்வளவு எளிமையாக விளக்குகிறது இந்தப் பாடல் 


(Some of my readers feel even my simple Tamil is challenging to them. To help them, I am giving a small English version:


A lamp can glow only with the lamp, and the wick. Life will be sustained only if there is water. Same way, our birth - death - rebirth will happen due to our karmas or actions. If we do good things, we will be born to enjoy the fruits of those and if we do bad things, we will be born to suffer those bad acts).







Tuesday, July 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நினது உருவா 


கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு விடயத்தில் வாக்குவாதம் நிகழும். அப்போது குழந்தை அழுதால், இருவரும் தங்கள் சண்டையை மறந்து விட்டு, பிள்ளையை தூக்க ஓடுவார்கள் இல்லையா? 


அது போல 


ஒரு சமயம் ஆதி சேடனுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரு வாக்குவாதம் வந்தது...பெருமாளுக்கு சேவை செய்வதில் யார் உயர்ந்தவர் என்று. இரண்டு அடியவர்களுக்கு இடையில் போட்டி என்றால், ஆண்டவன் என்ன செய்வான் பாவம். இருவரையும் சமாதனம் செய்ய தான் ஒரு குழந்தை வடிவம் எடுத்தாராம். அந்த குழந்தை வடிவைப் பார்த்ததும், இருவரும், தங்கள் போட்டியை மறந்து, அந்தக் குழந்தையை எடுத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டார்களாம். இப்படி ஒரு கதை கருட புராணத்தில் இருக்கிறது. குழந்தை வடிவம் கொண்ட பெருமாள் "பால சயன" வடிவில் திருச் சிறுபுலியூர் என்ற இடத்தில் சேவை சாதிக்கிறார். 


திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தின் மேல் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார். 


இறைவன் எந்த வடிவம் கொண்டவன்?  அவனுக்கு என்று ஒரு உருவம் இருக்கிறதா?  அப்படி என்றால் நம் சிற்றறிவால் அவனை கண்டு கொள்ள முடியுமா?  முடியாது என்பது சமய முடிவு. 


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் ...


"பெருமாளே நீ எந்த வடிவு உள்ளவன்?  மேகம் போன்றவனா? தீ போன்றவனா? நீரா? மலையா ? அல்லது வேறு ஏதாவது உருவமா?  உன் உருவம் உன் உருவம் தான். அதற்கு இணையாக எதைச் சொல்வது? திருமகள் விரும்பும் அருள் நிறைந்தவனே, உன் திருவடிகளே சரணம்" 


என்று. 


பாடல் 


கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,


பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,


திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,


அருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


கருமாமுகி லுருவா! = கரு + மா + முகில் + உருவா = கருமையான பெரிய மேக உருவமா? 


கனலுருவா! = கனல் + உருவா = தீயின் உருவமா? 


புனலுருவா = புனல் + உருவா = நீரின் உருவமா? 


பெருமால்வரை யுருவா! = பெரு + மால் + வரை + உருவா? = பெரிய மலை போன்ற உருவமா? 


பிறவுருவா! = வேறு ஏதேனும் உருவமா?  


நினதுருவா = உன்னுடைய உருவமா ?



திருமாமகள் = அழகிய திருமகள் 


மருவும் = சேரும் 


சிறு புலியூர்ச் = சிறு புலியூர் 


சல சயனத்து = சயனித்து இருப்பவனே 



அருமாகட லமுதே! = அமுதம் நிறைந்த கடல் போன்றவனே 


உன தடியே = உனது அடிகளே 


சர ணாமே. = சரண் நாமே 


மேகத்தை நாம் பார்த்தால், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அது போல காட்சி அளிக்கும். மான் போல, மயில் போல என்று எப்படி வேண்டுமானாலும் அது தோன்றும். அது மட்டும் அல்ல, பார்த்துக் கொண்டு இருக்கும் போதே உருவம் மாறும். 


அதற்கென்று ஒரு உருவம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் சொல்ல முடியாது. 


அது போல இறைவனும். இருக்கு, ஆனால் இல்லை. 


தீச் சுடரும், நீரும் அப்படித்தான். உருவம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் இது இன்ன வடிவம் என்று கூற முடியாது. 


மலையும் அப்படித்தான். நாம் அதை பார்த்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருந்தால், அதன் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். இங்கிருந்து பார்த்தால் ஒரு வடிவம், கொஞ்ச தூரம் போய் அங்கிருந்து பார்த்தால் வேறு வடிவம். 


நான் சொல்லும் வடிவம் தான் சரி என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். 


அங்கிருந்து பார்த்தால் அப்படி. இங்கிருந்து பார்த்தால் இப்படி. நேற்று பார்த்தால் ஒரு மாதிரி. இன்று வேறு மாதிரி. 


இதை நம்மால் பற்ற முடியாது. 


அறிவினால் இதை ஆராய்ந்து அறிய முடியாது. 


அன்பினால் திருமகள் அவனைப் பற்றி விட்டாள் என்கிறார் ஆழ்வார். எனவே, நமக்கும் அதுதான் வழி என்று அவன் திருவடிகளை சரண் அடைகிறார் அவர். 


அன்பினாலும், பக்தியாலும் உணர முடியும் என்று கூறுகிறாரோ?