Friday, September 18, 2015

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம்

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம் 


எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, சோதனை செய்து, தர்க ரீதியாக நிரூபணம் செய்ய வேண்டும் என்று மனம் எதிர் பார்க்கிறது.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணி விட முடியுமா ?

எதையுமே ஓரளவுக்கு மேல் ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை. முடிந்த முடிவு தெரிந்த பின்தான் எதையும் செய்வேன் என்று இருந்தால் எதையுமே செய்ய முடியாது.

லட்டை கையில் கொடுத்தால் , அது என்ன, எப்படி இருக்கும்  என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் முகர்ந்து பார்த்து அதன் வாசனையை இரசிக்கலாம். சிறிது வாயில் போட்டு சுவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பிடித்தால் முழு லட்டையும் உண்ண வேண்டியதுதான்.

அதை விட்டு விட்டு, இனிப்பு என்றால் என்ன, அந்த இனிப்பு எப்படி வருகிறது, இந்த மஞ்சள் நிறம் எப்படி வந்தது.  இந்த நறுமணம் எப்படி வருகிறது. அது எப்படி இந்த மூக்கினால் நுகரப் படுகிறது, மனத்தால் அறியப்படுகிறது என்று ஆராய்ச்சியில் இறங்கி, இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வான விடை காணாமல் இந்த லட்டை உண்பது இல்லை என்று இருந்தால் வாழ்வில் எந்த இன்பத்தையும் அனுபவிக்க முடியாது.


ஞான சம்பந்தர் சொல்கிறார்....காரண காரியங்களை ரொம்பவும் சோதிக்க வேண்டாம். சோதியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கி விடாதீர்கள். சோதி வடிவாக இருக்கிறான் அவன். உங்கள் துக்கங்கள் நீங்க மனம் பற்றி வாழுங்கள். அறிவு பற்றாது. அறிவு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.


பாடல்

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

சீர் பிரித்த பின்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்  மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்  சோதி
மா துக்கம்  நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்க  இறையே  வந்து சார்மின்களே.

பொருள் 

ஏதுக்களாலும் = காரணங்களாலும்

எடுத்த மொழியாலும் = தர்க வாதத்தாலும்

மிக்குச் = மிகுதியாக

சோதிக்க வேண்டா = சோதிக்க வேண்டாம்

சுடர் விட்டுளன் = சுடர் வடிவாக உள்ளான்

எங்கள்  சோதி = எங்கள் ஜோதியான அந்த இறைவன்

மா துக்கம்  = பெரிய துக்கம் (பிறவிப் பிணிதான் பெரிய துக்கம்)

நீங்கல் உறுவீர் = நீங்கப் பெறுவீர்

மனம் பற்றி வாழ்மின் = மனம் ஒன்றி வாழ்வீர்

சாதுக்கண் மிக்க  = அன்பு நிறைந்தவர்களே

இறையே  வந்து சார்மின்களே  = இறைவனையே வந்து பற்றுங்கள்


கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அறிவோ எல்லை அற்றது.

வாழ் நாளோ மிகக் குறைவு.

அதிலும், அறிவை சேர்த்துக் கொள்ள செலவழிக்கும் நாட்கள் இன்னும் மிக மிகக் குறைவு.


எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்தாலும், ஒரு சிறு துளியின் ஒரு பகுதியைக் கூட   முழவதும் அறிந்து கொள்ள முடியாது.

என்ன செய்யலாம் ?







பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


அனைத்து உயிர்களும் இன்பம் வேண்டுகின்றன. துன்பம் வேண்டும் உயிர் எதுவும் கிடையாது.

இருந்தும், துன்பம் வரத்தான் செய்கிறது.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, ஏமாற்றங்கள், தோல்விகள், கண்ணீர், என்று ஏதோ ஒன்று அவ்வப்போது தலை காட்டித்தான் போகிறது.

இன்பம் எவ்வளவு வந்தாலும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

துன்பம் வந்தால் ?

கொஞ்சம் துன்பம் வந்தாலும் துவண்டு போகிறோம்.

ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்துகிறோம் ? நான் யாருக்கு என்ன தீமை செய்தேன், எனக்கு ஏன் இது வர வேண்டும் என்று அங்கலாய்கிறோம்.

எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன், நினைக்கிறேன், கோவில் குளங்களுக்குப் போகிறேன், பூஜை புனஸ்காரங்கள் செய்கிறேன்...இருந்தும் எனக்கு ஏன் இந்த சோதனை என்று வருந்துகிறோம்.

சாத்திரங்கள் எல்லாம் பொய்யா ? இதுக்கெலாம் ஒரு அர்த்தம் இல்லையா , கடவுள் ஒன்று   இல்லையா என்று கூட சந்தேகம் வருகிறது.

யாரிடம் போனால் துன்பம் தீரும் என்று பார்க்கிறோம்.

கொஞ்ச பேர் வருந்துவார்கள், பின் அவர்கள் வேலையை பார்த்துகொண்டு போய் விடுவார்கள்.

இன்னும் சில பேர், "நல்லா வேணும் " என்று உள்ளுக்குள் மகிழக் கூட மகிழ்வார்கள்.

யார் துணை ?

நம் சமய இலக்கியங்கள் துன்பத்தை ஏற்றுக் கொள்ள நம்மை பக்குவப் படுத்துகின்றன.

பொதுவாக இலக்கியங்களையும், குறிப்பாக சமய இலக்கியங்களையும் படிக்கும் போது , துன்பம் என்பது ஏதோ நமக்கு மட்டும் வருவது அல்ல, நம் துன்பம் ஒன்றும் அப்படி பெரியது அல்ல, இதைவிட பெரிய பெரிய துன்பங்களை மனிதர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அவற்றிற்கு முன்னால் என் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற ஆறுதல் பிறக்கும்.

மேலும், துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்ற எண்ணம் வரும். துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் வரும்

.
நோய் என்றால் துன்பம். நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்தின் வடிவம் என்கிறார் திருவள்ளுவர்.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.

துன்பம்     வரும்போது அதை அமைதியோடு ஏற்றுக் கொள்வதுதான் தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை எவ்வாறு எதிர் கொள்வது ? துன்பம் வந்து விட்டால் என்ன செய்வது ?

சரி, துன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எனக்கு துன்பம் தா என்று யாராவது வேண்டுவார்களா ?

என்னை கத்தியை எடுத்து வெட்டு, எனக்கு சூடு போடு என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டுவார்கள்.

அப்படி வெட்டுவதன் மூலமும், சூடு போடுவதன் மூலமும் அதை விட பெரிய துன்பம் தீரும் என்றால்.

மருத்துவரிடம் போய் அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுக்கிறோம். என்னை வெட்டு, அறு , ஊசியால் குத்து , தையல் போடு என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி செய்வதற்கு பணம் தருகிறோம். செய்து விட்டால் மருத்துவருக்கு நன்றி சொல்கிறோம்.

ஏன், அறுக்கும், வெட்டும், ஊசி குத்தும் துன்பங்கள், அவற்றை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கும் என்பதால்.

இப்போது யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த துன்பங்கள், அவற்றை விட  ஒரு பெரிய துன்பத்தில் இருந்து உங்களை காக்கும் என்றால், வந்த துன்பத்தை  சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா ?

இறைவன் நமக்குத் துன்பத்தை தருகிறான் என்றால், அதை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கிறான் என்று பொருள். அதற்காக அவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

சொன்னார் - குலசேகர ஆழ்வார்.

பாடல்


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

வித்துவ கோட்டத்தில் உள்ள பெருமாளே, நீ எனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும், அந்த துன்பங்களை தருவதற்குக் காரணமான உன் அருளையே நான் பார்ப்பேன் என்கிறார். மருத்துவன் அறுத்து சுட்டாலும், அவன் மேல் மீளாத காதல் கொண்ட நோயாளன் போல, நீ எனக்கு துன்பங்களைத் தந்தாலும், அதற்கான உன் அருளையே நான் நினைப்பேன் என்கிறார். 


பொருள்

வாளால் அறுத்துச் = கத்தியால் அறுத்து

சுடினும் = புண் புரையோடாமல் இருக்க சூடு வைத்தாலும்

மருத்துவன் பால் = மருத்துவன் மேல்

மாளாத = தீராத

காதல் = காதல் கொண்ட

நோயாளன் போல் = நோயுள்ளவனைப் போல்

மாயத்தால் = மாயத்தால்

மீளாத் துயர் தரினும் = இறுதியே இல்லாத துயரை நீ தரினும்

வித்துவக்கோட்டம்மா நீ = வித்துவக் கோட்டத்தில் உள்ள பெருமானே

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே! = உன் அருளையே நான் அதில் பார்ப்பேன்

பிரபந்தத்தை வாசியுங்கள். வாழ்க்கையில் துன்பங்களை எப்படி ஏற்றுக் கொள்வது, தாங்கிக் கொள்வது என்று புரிபடும்.











Wednesday, September 16, 2015

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து 


உடம்பில் ஒரு பாகத்தில் வலி வந்தால், அந்த பகுதி மட்டும் வலிக்கும். 

கண் வலி என்றால் கண் மட்டும் வலிக்கும். 

கால் வலி என்றால் கால் மட்டும் வலிக்கும். கை வலிக்காது.

ஆனால், இந்த பிரசவ காலமும், பிரசவமும் இருக்கிறதே, உடம்பின் ஒவ்வொரு பாகமும் வலிக்கும், சோர்ந்து போகும். அது மட்டும் அல்ல, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பத்து மாதமும் ஏதோ ஒரு அங்கம் வலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் கால் வலிக்கும், இன்னொரு நாள் முதுகு, இன்னொரு நாள் தலை என்று அங்கமெல்லாம் நோகும்.

பட்டினத்தார், எல்லாம் துறந்தவர், தாயின் அந்த வேதனையை உணர்ந்து பாடுகிறார். 

பாடல் 


ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி”

பொருள் 

ஐயிரண்டு = ஐந்து இரண்டு = பத்து 

திங்களாய் = மாதமாய் 

அங்கமெலாம் = அனைத்து அங்கங்களும் 

நொந்து = சோர்ந்து, சலித்து 

பெற்றுப்  = பிள்ளையைப் பெற்று 

பையலென்ற போதே  = பையுள் என்றால் துன்பம். அந்த பிரசவ வலியோடே 

பரிந்தெடுத்துச் = குழந்தையை அன்போடு எடுத்து 

செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் = கையில் ஏந்தி 

கனக முலை தந்தாளை = தங்கம் போல உயர்ந்த தன் தனங்களைத் தந்தாளை 

எப்பிறப்பிற் காண்பே னினி = இனி எந்தப் பிறப்பில் காண்பேன் 




நந்திக் கலம்பகம் - என்னதே

நந்திக் கலம்பகம் - என்னதே 


காதலையும், காமத்தையும் நேரடியாகச் சொல்வதை விட மறைமுகமாக சொல்வதில் சுவை அதிகம்.

நந்திக் கலம்பகத்தில் ஒரு பாடல்.

தலைவி சொல்கிறாள்....நான் அணிந்திருக்கும் இந்த உடையும் , வளையலும் என்னுடையதே...நந்திவர்மன் என்னோடு இல்லாத போது.

அவ்வளவுதான் பாடல் வரியின் அர்த்தம்.

நந்தி வர்மன் வந்து விட்டால், இந்த ஆடைகளையும், வளையலையும் அவன் எடுத்துக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்கிறாள்.


சொல்லாமல் விட்டதை புரிந்து கொள்ளும் போது, அந்த பெண்ணின் நாணம், தவிப்பு, வெட்கம், பிரிவின் வேதனை, அவன் மேல் அவள் கொண்டிருக்கும் ஆசை அனைத்தும் தெரியும்.

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது

பொருள்

எனதே கலை = கலை என்றால் உடை. என் உடை என்னுடையதுதான்

வளையும் என்னதே = வளையலும் என்னுடையதுதான்

மன்னர் = மன்னவனாகிய

சின = சினம் கொண்ட

ஏறு = எருதினைப் போன்ற

செந்தனிக்கோல்= செம்மையானா, செங்கோல் செலுத்தும்

நந்தி = நந்திவர்மன்

இனவேழம் = யானை போல

கோமறுகில் = வீதியில்

சீறிக் = கோபம் கொண்டு

குருக்கோட்டை வென்றாடும் பூமறுகில் = குருக் கோட்டை என்ற இடத்தில் வெற்றி பெற்று வீதி வழியே

போகாப் பொழுது = செல்லும்  போது

(போகா என்பதை செய்யா என்ற வாய்பாடகாகக் கொண்டால் செல்லும் போது என்று பொருள் தரும். கொய்யாப் பழம் என்று சொல்கிறோம். ஆனால் கொய்து தானே இருக்கிறது. அது போல. கொய்யாப் பழம் என்றால் கொய்த பழம். போகாப் பொழுது என்றால் போன பொழுது.)

இதை இன்னொரு விதமாக யோசித்துப் பார்ப்போம்.

அவன் இருக்கும் போது இந்த உடைகளையும், வளையல்களையும்  அவன் எடுத்துக் கொள்வான் , மற்ற நேரத்தில் அது என்னுடையது தான் என்பது ஒரு பொருள்.

இன்னொரு பொருள், அவன் என்னை விட்டு நீங்கினால், நான் மெலிந்து இந்த வளையலும், உடையும் நழுவி விழுந்து விடும். அவை என்னோடு இருக்காது. அவன் என்னோடு  இருந்தால், அந்த மகிழ்ச்சியில் நான் பூரித்து, இந்த வளையலும், உடையும் என்னோடு ஒட்டி இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

உங்களுக்கு எப்படி சௌகரியமோ , அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.



Monday, September 14, 2015

இராமாயணம் - அறம் அற்ற செயல்கள்

இராமாயணம் - அறம் அற்ற செயல்கள் 


அற வழியில் செல்லுங்கள், ஒழுக்கமாக இருங்கள் என்று சொல்லுவது எளிது. எது அறம் , எது ஒழுக்கம் என்று சொல்லுவது தான் கடினம்.

அறம் என்று ஒன்று உண்டு அது அமரர்கும் அறிய ஒண்ணாதது என்றார் கச்சியப்ப சிவாசாரியார்.

தேவர்களாலும் அறிய முடியாதது என்றால் மனிதர்கள் எப்படி அறிந்து அதன்படி நடப்பது ?

தர்மத்தை நிலை நிறுத்த யுகம் தோறும் யுகம் தோறும் அவதரிப்பேன் என்றான் கண்ணன்.

ஏன் ? ஒரு முறை வந்து நிலை நிறுத்தினால் போதாதா? ஒவ்வொரு யுகத்திலும் ஏன் வர வேண்டும் ?

போதாது.

எல்லா யுகங்களிலும் மனிதர்கள் தர்மம் தவறித்தான் போகிறார்கள். இறைவனே வந்து அதை நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது.


தர்மத்தை யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் ?

நல்லவன், மனத் தூய்மை உள்ளவன் சொன்னால் கேட்பார்கள்.

அதைத் தெரிந்து, கம்பன் பரதன் மூலம் அறத்தை சொல்கிறான்.

இராமன் கானகம் செல்வது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னின்ன பாவங்கள் செய்தோர் செல்லும் நரகத்திற்கு நான் செல்லக் கடவேன் பரதன் பட்டியல் தருகிறான். மொத்தம் 46 பாவங்களைச் சொல்கிறான்.


பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன், = அறம் கெட முயன்றான்

அருள் இல் நெஞ்சினன், = அருள் இல்லாத மனத்தை உடையவன்

பிறன் கடை நின்றவன் = பொருள் வேண்டி மற்றவர்களிடம் சென்றவன்

பிறரைச் சீறினோன், = மற்றவர்கள் மேல் கோபப் பட்டவன்

மறம் கொடு மன் உயிர்  கொன்று வாழ்ந்தவன், = கொலைத் தொழில் ஈடுபட்டு,
உயிர்களை கொன்றவன்

துறந்த மாதவர்க்கு = துறவிகளுக்கு

அருந் துயரம் சூழ்ந்துேளான். ‘= துன்பம் தந்தவன்


அறத்தை கெடுக்க வேண்டாம். கெடுக்க நினைத்தாலே போதும் அதுவே பெரிய பாவம்.

மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர். 

மனதால் கூட அறத்தை சிதைக்க நினைக்கக் கூடாது. 

ஒருவன் தர்மம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை , அதை செய்ய விடாமல்  தடுப்பது கூட அல்ல , தடுக்க நினைப்பது கூட அறம் வழுவிய செயல்தான். 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவஊம் உண்பதுஊம் இன்றிக் கெடும்  

என்பார் வள்ளுவர். கொடுப்பதைப் பற்றி பொறாமை பட்டால் கூட போதும், அதுவே பெரிய பாவம். 

ஒருவன் கோவிலுக்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை போக விடாமல் தடுப்பது, தடுக்க நினைப்பது ஒரு பாவச் செயல். 

அருள் இல்லாமல் இருப்பது ஒரு பாவம். 


அருள் என்றால் என்ன ? நாம் எப்படி அருள் செய்ய முடியும். நாம் படித்த வரை கடவுள் தான் பக்தர்களுக்கு அருள் தர முடியும் ?

வள்ளுவர் சொல்கிறார். 

வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

நம்மை விட பலம் குறைந்தவர்களிடம் நாம் அதிகாரம் செய்யும் போது , நம்மை விட  பலம் நிறைந்தவர்கள் முன் நாம் எப்படி இருந்தோம் என்று நினைத்துப் பார்த்து  செயல்படுவது அருள். 

வேலைக் காரர்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம், நம்மை விட பணத்தில் , அறிவில், அதிகாரத்தில், புகழில் மெலிந்தவர்களிடம் மென்மையாக, பண்புடன் நடந்து கொள்வது அருள். 

உயிர் போனாலும் மற்றவர்களிடம் சென்று எனக்கு அஞ்சு பத்து கொடு என்று கேட்க்கக் கூடாது.  

ஏற்பது இகழ்ச்சி என்றாள் அவ்வை பாட்டி. 


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


பிச்சை எடுத்துதான்  வாழ வேண்டும் என்று விதி இருந்தால், அந்த விதியை எழுதிய  இறைவனும் கெட்டுப் போகட்டும் என்று இறைவன் மேல் சீறுகிறார் வள்ளுவர்.  பிறரிடம் இரந்து வாழ்வது அவ்வளவு கொடுமையானது என்பது அவர் எண்ணம். 

மற்றவர்களிடம் கோபப் பட்டவன் - கோபம் கொள்வது அறம் பிறழ்ந்த செயல் என்பது பரதன் கூற்று. கோபமும் காமமும் தவத்தை அழிக்கும் இரண்டு அரக்கர்கள் என்று சொல்லுவார் கம்பர். 

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். 

நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நாம். 

எப்படி வாழ வேண்டும் என்று காலம் கடந்து வந்து கம்பன் நம்மை கை பிடித்து அழைத்துச்  செல்கிறான். 





Thursday, September 10, 2015

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


எந்த வீட்டுக்கும், காலையில் போய் பார்த்தால் தெரியும்...ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கும். ...

குழந்தைகளை எழுப்புவதும், அவர்களை குளித்து பள்ளிக்குச் செல்ல தயார் பண்ணுவதும், சிற்றுண்டி தயார்  பண்ணுவதும்,  மதிய உணவு தயார் செய்ய  வேண்டும், இதற்கிடையில் தொலை காட்சியில்  ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும், தொலை பேசி வரும்...இப்படி பெரிய களேபரமாய் இருக்கும்.

ஒரு வீட்டில்,இரண்டு அல்லது மூணு பேரை தயார் செய்து அனுப்புவது என்றாலே இவ்வளவு சத்தம், களேபரம்....இந்த உலகையே படைப்பது என்றால் எவ்வளவு சிக்கலான காரியம் ?

இந்த உலகத்தை ஒரு மலர் மலர்வது போல மிக மென்மையாக அபிராமி படைத்தாளாம்.

பூத்தவளே புவனம் பதினான்கையும்

அனைத்து உலகங்களையும் ஒரு மலர் மலர்வது போல் படித்தாள்.

சரி, படைத்தாகி விட்டது. அத்தனை உயிர்களையும் காக்க வேண்டும் அல்லவா. எப்படி மென்மையாக படைத்தாளோ, அதே போல் அனைத்து உயிர்களையும் காக்கின்றாள்.

பூத்த வண்ணம் காத்தவளே. 

நமக்கு வாழ்வில் துன்பம் வரும். வேண்டியது கிடைக்காது. கிடைத்தது கை விட்டுப் போகும்.  நட்டம் வரும். இழப்பு வரும். கிடைக்க வேண்டியது கிடைக்காமல் துன்பப் படுவோம்.

வீட்டில் விசேஷம் என்றால் அம்மா பல பலகாரங்கள் செய்வாள். குழந்தை அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கும்.  தாய் பார்த்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மேலே போனால், பலகாரங்களை எடுத்து உள்ளே வைத்து விடுவாள். "காலியா போச்சு, நாளைக்குத் தருகிறேன் " என்று மறைத்து வைத்து விடுவாள். குழந்தை அழும். அம்மாவுக்குத் தெரியும், அழுதாலும் தர மாட்டாள். குழந்தையின் மேல் உள்ள அன்பால், அதுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று நினைத்து அந்த ருசியான பலகாரங்களை மறைத்து  வைப்பாள்.

அபிராமியும் அப்படித்தான். நமக்குத் தராமல் சிலவற்றை மறைத்து வைக்கிறாள் என்றால் ஏதோ காரணம் இருக்கும்.

"பின் கரந்தவளே" (கரத்தல் = மறைத்து வைத்தல்)

பெண் பல வடிவம் எடுக்கிறாள். அது தாயக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், சகோதரியாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் ஒரே பெண் பல வடிவம் எடுக்கிறாள்.

மகள் சின்னப் பெண்ணாக இருப்பாள்., அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ உடல் நிலை சரி என்றால், திடீரென்று வளர்ந்து பெரிய பெண் போல அவள் வீட்டை நிர்வகிக்க தொடங்கி விடுவாள். அவளே சமையல் செய்வாள். காப்பி போடுவாள். "பாரேன், இந்த பிள்ளைய " என்று பெற்றவர்களே வியப்பார்கள்.

நமக்கு உடல் நிலை சரி என்றால் , மனைவியே தாயாக மாறி பணிவிடை செய்வாள்.

பாட்டியாகவே இருக்கட்டும், பேரன் ஒரு சேலை வாங்கித் தந்தால் , பதினாறு வயது பெண் போல வெட்கப் படுவாள்.

அவளுக்கு வயது இல்லை. எல்லாமாக அவள் இருக்கிறாள்.

பட்டர் பார்க்கிறார்...இந்த அபிராமிக்கு எத்தனை வயது இருக்கும் ? ஒரு சமயம் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி இருக்கா....இன்னொரு சமயம் பார்த்தால் பெரிய பெண் போல இருக்கிறாள்...

"கறை கண்டனுக்கு மூத்தவளே". கண்டத்திலே கறை உள்ளவன் சிவன். அவனை விட மூத்தவள் போல இருக்கிறாள்.

"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே " திருமாலுக்கு இளையவள் போலவும் இருக்கிறாள்.

 இவளை விட்டால் வேறு யார் நமக்கு ?

பாட்டை இன்னொரு தரம் படியுங்கள் ...


பூத்தவளே,

புவனம் பதினான்கையும்

பூத்தவண்ணம் காத்தவளே

பின் கரந்தவளே

கறைகண்டனுக்கு மூத்தவளே

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


(இதற்கு உரை எழுதிய பெரியவர்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கிறார்கள். புவனம் எழா ? அல்லது பதினான்கா ? 

சிவனுக்கு மூத்தவள், திருமாலுக்கு இளையவள் என்றால் சிவன் திருமாலை விட  இளையவனா மூத்தவனா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.  
இது எனக்குத் தோன்றியது. அனைத்தயும் படித்துப் பாருங்கள். பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் )


Tuesday, September 8, 2015

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?

தண்டலையார் சதகம் - எலி அழுதாலும் பூனை விடுமா ?


தண்டலையார் சதகம் என்ற நூலை எழுதியவர் படிக்காசு புலவர்.  இந்த நூல் முழுவதும் இனிமையான எளிமையான தமிழ் பாடல்கள்.

உடம்பில் வலு இருக்கின்ற போது என்னவெல்லாம் செய்கிறோம், சொல்கிறோம்.

சண்டை பிடிக்கிறோம், வாதம் செய்கிறோம், மற்றவர்களின்  உணர்சிகளைப் பற்றி கவலைப் படுவது கிடையாது.

அறச் சிந்தனை கிடையாது.

ஒரு நாள் வரும். படுக்கையில் படுத்து செய்ததெல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்கும் போது , செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யலாம் என்று நினைக்கும் போது, எழுந்திரிக்க முடியாது, பேச முடியாது, நடக்க முடியாது...

இன்னும் கொஞ்ச நாள் ஆரோக்கியம் வேண்டும் என்றால் கிடைக்குமா ? நல்லது செய்து விட்டு வருகிறேன் என்று கிளம்ப முடியுமா ?

முடியாது.

இயலாமையை நினைத்து கண்ணீர் விடலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

பூனை , எலியைப் பிடித்து கொண்டு போகும். எலி என்னதான் அழுதாலும் பூனை விடாது.

அது போல, நம் காலம் முடியும் போது என்னதான் அழுதாலும் மரணம் விடாது.

அதற்கு முன் நல்லது செய்யுங்கள்.

பாடல்

பொலியவளம் பலதழைத்த தண்டலநீ ணெறிபாதம்
     போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர் மறஞ்செய்வீர் நமன்தூதர்
     வந்து கூடி
மெலியஅறைந் திடுபொழுது கலக்கண்ணீர் உகுத்தாலும்
     விடுவ துண்டோ
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித் ததுவிடுமோ
     என்செய் வீரே.          


பொருள்

பொலியவளம் = பொலிவு தரும் வளங்கள்

பலதழைத்த = பல தழைத்து நிற்கும்

 தண்டல = தண்டலை எனும் ஊரில் உள்ள சிவனை

நீ  ணெறிபாதம் = நீண்ட நல் (நெறியில்) செலுத்தும் பாதங்களை

போற்றி  = போற்றி

நாளும் = ஒவ்வொரு நாளும்

வலிய = வல்லமை பெற

வலம் செய்தறியீர் = வலம் செய்து அறியீர் .

மறஞ்செய்வீர் = கொடுமைகள் செய்வீர்

நமன்தூதர் = எமனின் தூதர்கள்

வந்து = வந்து

கூடி = கூட்டமாக

மெலிய = நீங்கள் மெலிவு அடைய

அறைந் திடுபொழுது = கூப்பிடும் போது

கலக்கண்ணீர் உகுத்தாலும் = கலங்கி கண்ணீர் உகுத்தாலும்

விடுவ துண்டோ = விடுவது உண்டோ ?

எலியழுது புலம்பிடினும் = எலி அழுது புலம்பினாலும்

பூனைபிடித் ததுவிடுமோ = பூனை பிடித்தது விடுமோ ?

என்செய் வீரே. = என்ன செய்யப் போகிறீர்கள் ?

நம் ஓலை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே ..நல்லதைச் செய்யுங்கள்




Monday, September 7, 2015

இராமாயணம் - பரதன் - குலப் பழி

இராமாயணம் - பரதன் - குலப் பழி 


ஒரு தவறு செய்யும் முன், அந்தத் தவறு யாரையெல்லாம் பாதிக்கும் என்று நினைக்க வேண்டும்.

நம்மை மட்டும் பாதித்தால் பரவாயில்லை. நம் குடும்பத்தில் உள்ளவர்களை பாதித்தால் அது மோசம். நம் குலத்தையே பாதித்தால் அது இன்னும் மோசம் அல்லவா.

ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அவன் மட்டும் தண்டனை அடைய மாட்டான். அவன் மனைவியும், பிள்ளைகளும் "கொலைகாரன் மனைவி" என்றும் "கொலைகாரன் பிள்ளை" என்றும் தூற்றப் படுவார்கள்.


சில பழிகள், குலத்திற்கே கேடு விளைவிக்கும்.

தனக்கு வந்த அரசால் இந்த சூரிய குலமே பழிச் சொல்லுக்கு ஆளாகும் என்றும் நினைக்கிறான் பரதன்.

கைகேயி அப்படி நினைத்தாள் இல்லை. தீர்க்க சிந்தனை இல்லை.

பாடல்


‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் -

மரதக மலை என வளர்ந்த தோளினான்.


பொருள்

‘இரதம் ஒன்று ஊர்ந்து = இரதத்தில் சென்று

பார் இருளை நீக்கும் = உலகில் உள்ள இருளை நீக்கும்

அவ்வரதனில் = அந்த சூரியனின்

ஒளி பெற மலர்ந்த தொல் குலம் = ஒளி  பெற சிறந்த இந்த சூரிய குலம்

“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால்  = பரதன் என்ற ஒருவனால் பழி அடைந்தது என்று சொல்லும் நிலை வந்து விட்டதே என்று என்று எண்ணி வருந்தினான்


மரதக மலை என வளர்ந்த தோளினான். = மரகத மலை போல வளர்ந்த தோளினை உடைய  பரதன்

இலஞ்சம் வாங்கும்போது, பொய் புரட்டு செய்யும் போது, கொலை , களவு செய்யும் போது  குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். தாய் தந்தையரை நினைக்க வேண்டும்.   குலத்தை நினைக்க வேண்டும்.

தவறான செய்கைகள் , செய்பவனுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்திற்கு மட்டும் அல்ல,  அவன் குலத்துக்கே கெட்ட  பெயரை கொண்டு வந்து சேர்க்கும்.

அதனால் தான் வள்ளுவரும் - "ஈன்றாள் பசிக் காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை " என்றார்.

இந்த அரசை தான் பெற்றுக் கொண்டால் தன் குலத்துக்கே பழி வந்துவிடுமே என்று அஞ்சினான் பரதன்.

அப்படி நினைத்ததால் அவன் உயர்ந்தான்.

அது உயரும் வழி.






Sunday, September 6, 2015

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன்

இராமாயணம் - பரதன் - அன்பு உடையார் போல் அழுகின்றேன் 


அறத்தின் படி வாழ வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நான் ஒழுக்கம் இல்லாமல் வாழ நினைக்கிறேன் என்று யாரும் முனைந்து செயல்படுவதில்லை.

இருந்தும், உலகில் எத்தனையோ அறம் பிறழ்ந்த செயல்கள் நிகழ்கின்றன.

ஏன் ?

அன்பு இல்லாத காரணத்தால்.

சுயநலத்தால்.

என்னிடம் பணம் இருக்கிறது. அதை இலஞ்சமாகக் கொடுத்து எனக்கு வேண்டியதை நான் பெற்றுக் கொள்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம்.

தவறு இருக்கிறது...யாருக்கோ ஞாயமாக கிடைக்க வேண்டியதை நீங்கள், உங்கள் பணத்தின் மூலம் அபகரித்துக் கொள்கிறீர்கள். அந்த முகம் தெரியாத மனிதன் துன்பத்தில் ஆழ்கிறான்.

அந்த மனிதனின் மேல் உங்களுக்கு அன்பு இல்லை. அவன் எக்கேடும் கெட்டு போகட்டும், நான் சுகமாக இருந்தால் சரி என்ற நினைப்புதான் இலஞ்சம் என்ற பெரிய  நோயை கொண்டு வருகிறது.

திருட்டு, கொலை, கற்பழிப்பு என்று எந்த குற்றத்தை எடுத்துக் கொண்டாலும், அடிப்படை அன்பு இல்லாத தன்மைதான்.

அறம் செய் , அறம் செய் என்று சொல்லுவது எளிது. அதற்கு அடிப்படை அன்பு வேண்டும்.

அன்பு இருந்தால் அறம் தானே வரும்.

அறம் அற்ற வழியில் வந்த இராஜியத்தை நினைத்து அழுகிறான் பரதன். அப்படி அழும் போதும் , இதெல்லாம் கண் துடிப்பு என்று உலகம் தன் அன்பை தூற்றுமோ என்று கவலைப் படுகிறான்.

பாடல்


‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன,
நல்லான் அன்றே துஞ்சினன்;
    நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன்
    பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான்! அன்பு

    உடையார்போல் அழுகின்றேன்!‘‘


பொருள்

‘வில் ஆர் தோளான் மேவினன்
    வெம் கானகம் ‘என்ன, = வில்லை உடைய தோள்களை கொண்ட இராமன் கானகம் போனான் என்று


நல்லான் அன்றே துஞ்சினன் = நல்லவனாகிய தசரதன் அன்றே இறந்தான்

நஞ்சே அனையாளைக் = நஞ்சு போன்ற கைகேயியை

கொல்லேன், = நான் கொல்லவில்லை

மாயேன்; = நானும் இறக்கவில்லை

வன் பழியாலே குறைவு அற்றேன் = பழிக்கு ஒன்றும் குறைவு இல்லை

அல்லேனோ யான்! = அப்படிபட்டவன் அல்லவா நான்

அன்பு உடையார்போல் அழுகின்றேன்! = அன்பு உடையவர்களைப் போல நானும் அழுகின்றேன்

அன்பிருந்தால், மற்றவர்கள் படும் துயர் கண்டு அழுகை வரும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

இராமனின் துன்பம் நினைத்து பரதன் அழுதான்.


அதிலும், அந்தத் துயருக்கு நாமே காரணம் என்றால், அந்த அழுகை இன்னும் அதிகமாகும். பரிதாப உணர்ச்சியும், குற்ற உணர்வும் சேர்ந்து அழுகை அதிகமாகும்.

 
அன்பிருக்கும் இடத்தில் அறம் இருக்கும்.

சரி, என்னிடம் அன்பும் இல்லை, அறமும் இல்லை அதனால் என்ன என்று கேட்டால்....அப்படிப் பட்டவர்களை அறம் அழிக்கும் என்கிறார் வள்ளுவர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.

அன்பில்லாதவர்களை அறம் அழிக்கும்.

அன்பு உள்ள இடத்தில் அறம் தழைக்கும்.

பரதன் மனதில் அன்பிருந்தது.


Friday, September 4, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும் - பாகம் 2



வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்

=============== பாகம் 2 =================================================

ஈதல் - அறம்
தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டது - இன்பம்
பரனை நினைத்து இம்மூன்றையும் விடுவது - வீடு பேறு

இது பாடலின் சாரம்.

இதை மேலும் ஆழ்ந்து சிந்தித்தால், ஒன்று புலப்படும்.

இந்த "பரனை நினைத்து" என்ற சொற்றடரை மற்ற மூன்றுக்கும் சேர்த்துப் பார்ப்போம்.

பரனை நினைத்து ஈதல் - அறம்
பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்
பரனை நினைத்து காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே - இன்பம்
பரனை நினைத்து இம் மூன்றையும் விடுதல் - வீடு பேறு


அது என்ன பரனை நினைத்து ஈதல் அறம் ?

பொருளை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டா வெறுப்பாக, எரிச்சலோடும் கொடுக்கலாம். அப்படி கொடுப்பது அறமாகாது.

நாம் பெற்ற பொருள் அவன் தந்தது என்று நினைத்து அதை மற்றவர்களுக்குத் தருவது அறம்.

வரும் போது கொண்டா வந்தோம் ?

இதையே அருணகிரிநாதரும்

"வையிற் கதிர் வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்கு என்றும் நொய்யிர்  பிளவேனும் பகிருங்கள்"

என்றார்.

கொடுக்கும் போது முருகனை நினைத்து, இப்படி ஒரு செல்வத்தை நமக்கு கொடுத்ததற்கும், கொடுத்த செல்வத்தை மற்றவர்களுக்கு தானம் செய்யும் மனதை தந்ததற்கும் அவனை வாழ்த்தி மற்றவர்களுக்குத் ஈதல் வேண்டும் என்கிறார்.


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 

இறைவனை வாழ்த்தி தானம் செய்ய வேண்டும். நான் கொடுக்கிறேன், என் செல்வம், என்ற ஆணவம் இல்லாமல் ஈதல் அறம் .

பரனை நினைத்து தீய வழி விடுத்து சேர்ப்பது - பொருள்

இரை தேடும் போதும் இறையும் தேட வேண்டும். 

செய்யும் செயலில் பக்தி கலக்கும் போது அதில் ஒரு ஆனந்தம், அமைதி பிறக்கிறது.  அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது.  போட்டி பொறாமை  மறைகிறது. இறைச் செயல் என்று நினைத்து செய்யும் போது  அதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற சுயநல கலப்பு மறைகிறது. 

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது 

கணவனும் மனைவியும்  ஒன்றாக இருக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும்  என்கிறார்.

இப்படி ஒரு அன்பான, அழகான, பண்புள்ள, என் மேல் ஆர்வம் உள்ள கணவனையோ, மனைவியையோ தந்த இறைவனுக்கு நன்றி என்று நினைக்க வேண்டும்.  நினைத்துப் பாருங்கள் , உங்கள் துணை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நீங்கள் விரும்படியும் இருக்கலாம், மற்றபடியும் இருக்கலாம். நல்ல ஆரோக்கியத்துடன், அழகுடன், அன்புடன், பண்புடன், உங்கள் நலத்தில்  அக்கறை உள்ள துணை இறைவன் அருளால் அமைவது. நீங்கள்  என்ன செய்து விட முடியும் இங்கே. உங்களுக்கு கிடைத்தது அவன் அருள் . அதை நினைத்து, காதல் செய்யுங்கள். அடுத்த முறை உங்கள் துணையை  அன்போடு பார்க்கும் போது , அவன் அருளை நினைத்துப் பாருங்கள். அதன் சுகமே தனிதான். 

இந்த மூன்றையும் விடுவது என்பது எளிதான காரியம் அல்ல.  வேண்டா வெறுப்பாக  விடுவது ஒரு துறவறம் இல்லை. மருத்துவர் உங்களுக்கு சர்க்கரை வியாதி  என்று சொல்லி விட்டார்.  சர்கரையின் பக்கமே போகக் கூடாது என்று சொல்லி விட்டார்.  அதற்காக நீங்கள் சர்க்கரையை விட்டால் அதன் பெயர்  துறவறம் அல்ல. 

பரனை நினைத்து விடுவது வீடு பேறு.

இவற்றையெல்லாம் விடுவது இவற்றை விட பெரிய ஒன்றை அடைய என்று நினைக்கும் போது,  விடுவது ஒன்றும் பெரிதாகத் தெரியாது. 

பாட்டி பெரிய ஆளு....
 

Wednesday, September 2, 2015

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்

ஔவையார் - வாழ்வின் நோக்கமும் , அதை அடையும் விதமும்


வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருப்பதா வாழ்க்கை ?

வாழ்க்கைக்கு அர்த்தம், நோக்கம் என்று ஒன்று இல்லாமல் போகலாம். இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா ?

எப்படி வாழ்ந்தால் , வாழ்ந்த திருப்தி இருக்கும் ?

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று தோன்றுகிறது.

குழந்தையாக இருக்கும் போது , அப்புறம் சிறுவன் / சிறுமியாக இருக்கும் போது , பின் வாலிபன், இளம் பெண்ணாக இருக்கும் போது , மணம் முடித்த பின், பிள்ளைகள் வந்த பின்...வயதான பின் என்று வாழ்வின் நோக்கங்களும், அர்த்தங்களும், வழிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தை விட்டு அடுத்ததற்கு போகும் போது , முந்தைய கால கட்டத்தில் நாம் உயர்ந்தது, சிறந்தது, முக்கியமானது என்று நினைத்தது எல்லாம் நகைப்புக்கு இடமாகிப் போகிறது.

சொப்பு சட்டியும், பொம்மைகளும் இளைஞனுக்கு அர்த்தம் இல்லாததாகத் தெரிகிறது.

காதலும், அதன் வசீகரங்களும் வயதான கிழவனுக்கு அர்த்தம் இன்றி தோன்றுகிறது.

பின் எது தான் சாஸ்வதம் ?

அவ்வையார் சொல்கிறார் ...

நான்கே நான்கு சொற்களில் மொத்த வாழ்க்கையையும் அடக்கி விட்டார்

அறம் - பொருள் - இன்பம் - வீடு பேறு

இப்படித்தான் வாழ வேண்டும். இதற்கு வெளியே வாழ்க்கை இல்லை.

எது அறம் ? பொருளை எப்படி சேர்க்க வேண்டும் ? இன்பம் என்றால் என்ன ? எப்படி முக்தி அடைவது ?

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்

ஈதல் அறம் = கொடுப்பது அறம்

தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை விட்டு விட்டு சேர்ப்பது பொருள்

எஞ்ஞான்றும் = எப்போதும்

காதல் இருவர் = காதல் கொண்ட இருவர்

கருத்து ஒருமித்து = கருத்து ஒன்று பட்டு

ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஆதரவோடு இருப்பதே இன்பம்

பரனை நினைந்து = இறைவனை நினைத்து

இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. = இந்த மூன்றையும் விட்டு விடுவதே பேரின்ப வீடு.

புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறதா ?

மேலும் சிந்திப்போம்



திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே


சொர்க்கம் நல்லதுதான்.

வீடு பேறு வேண்டும்தான்.

கைலாயம் கையில் கிடைத்தால் சுகம் தான்.

வைகுண்டம், பரமபதம் ..அடடா கிடைத்தால் என்ன சுகம்.

சரி, போகலாமா என்று கேட்டால் யார் வரத் துணிவார்கள் ?

யாராவது, இறைவனிடம் நான் உன்னிடம் வரவேண்டும் என்று வேண்டுகிறார்களா. அப்படியே வேண்டினாலும், சரி வா என்று இறைவன் அழைத்தால் போய் விடுவார்களா ?

இந்த உலகை விட்டுப் பிரிய யாருக்கு மனம் வரும்?

வைகுந்தம் அப்புறம் போகலாம், இந்த பூலோகத்தை அனுபவிப்போம் என்று இங்கேயே இருக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

இந்தச் சிக்கல், நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கே இருந்திருக்கிறது.

இறைவன் நேரில் வந்து, " வா போகலாம் " என்று அழைத்தான். சற்று தயங்கி நின்றார். இறைவன் போய் விட்டான்.

கிடந்து புலம்பித் தவிக்கிறார். ஐயோ, போகவில்லையே என்று.

திருவாசகம் எல்லாமே இந்தப் புலம்பல்தான்.

பாடல்

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழைபொ றுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருள்

மானேர் நோக்கி = மானைப் போன்ற கண்களைக் கொண்ட 

உடையாள் = உடையவளான பார்வதியை 

பங்கா  = பாதியாக கொண்டவனே

மறையீ றறியா = மறை + ஈறு + அறியா = வேதங்கள்  உன்னை முடிவாக அறியா

மறையோனே = மறைந்து இருப்பவனே, மறைகளுக்கு அப்பாற்பட்டவனே

தேனே = தேனே

அமுதே = அமுதே

சிந்தைக் கரியாய் = சிந்தனைகளுக்கு அரியவனே

சிறியேன் பிழைபொ றுக்கும் = சிறியவனான என் பிழைகளைப் பொறுக்கும்

கோனே = தலைவனே

சிறிதே கொடுமை பறைந்தேன் = சிறிய கொடுமைகள் சில சொன்னேன்

சிவமா நகர் = சிவ மாநகர் = கைலாயம்

குறுகப் போனார்  அடியார் = அடியார்கள் சென்றார்கள்

யானும் = நானும்

பொய்யும் = பொய்யும்

புறமே போந்தோமே. = வெளியே நின்று விட்டோம்

இறைவன் , வலிய வந்து ஆட்கொண்டான். இவர் போகவில்லை.

ஏன் போகவில்லை ?

பெரிய வேலையில் இருந்தார். பாண்டியன் அரசவையில் முதல் அமைச்சர் வேலை என்றால் சாதரணமா.

இப்படித்தான் வேலை, குடும்ப பொறுப்பு என்று அதை விட உயர்ந்தவற்றை விட்டு விடுகிறோமோ ?

வள்ளலார் கூட இதைப் பற்றி பேசி இருக்கிறார்...


தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

அம்மா ஒரு தடை. பின்னர் தாரம் ஒரு தடை. பின்னர் பிள்ளைகள்....

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இவை எல்லாம் எப்போதுதான்  தீருவது என்று சோர்கிறார் வள்ளல் பெருமான்.

ஒன்றைச் செய்யும் போது, மற்றது ஏதோ ஒன்றைச் செய்யாமல் விடுகிறோம்.

எதைச் செய்கிறோம் , எதை விடுகிறோம் என்று சிந்திப்போம்.



Sunday, August 30, 2015

இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது

இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது 


தீய செயல்களை, பழி தரும் செயல்களை செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் ஒரு தரம் பழி வந்துவிட்டால் அது எக்காலத்தும் போகாது. பழிச் செயலை செய்தவன் ஆயுளுக்குப் பின்னும் அந்த பழிச் சொல் அவனை விடாது.

நாம் செய்யும் நல்லவைகளை உலகம் எளிதாக மறந்து விடும். ஆனால், நாம் செய்யும் தீய செயல்களை ஒரு போதும் மன்னிக்காது.

இராமன் எவ்வளவோ நல்லது செய்தான். ஆனால் அவன் வாலியை மறைந்து நின்று கொன்றான் என்ற பழிச் சொல் இன்றுவரை போகவில்லை. போகாது.

எனவே தான் வள்ளுவரும்

ஈன்றாள் பசிக் காண்பான் ஆயினும் செய்யற்க ஆன்றோர் பழிக்கும் வினை 

என்றார். சட்ட புத்தகம் ஆயிரம் சொல்லலாம், சாட்சிகள் இல்லாமல் போகலாம், நீதிபதி சரியாக நீதி வழங்காமல் போகலாம்.  சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக் கூடாது.

நாம் மறைந்தாலும் நம் பழிச் செயல் மாறாது.

"மாயா வன் பழி தந்தீர்" என்றான்.  பழி மாயாது. என்றும் நிலைத்து நிற்கும்.

கைகேயிடம் பரதன் கூறுகிறான்.....

"நீ நோய் அல்ல, உன் கணவனின் உயிரை உண்ட பேய். நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாயே.  எனக்கு என்றும் போகாத பழியைத் தேடித் தந்தீர். முலை தந்தீர், பழி தந்தீர். இன்னும் என்னென்ன தரப் போகிறாயோ "

பாடல்

‘நோயீர் அல்லீர்; நும் கணவன்தன்
    உயிர் உண்டீர்;
பேயீரே! நீர் இன்னம் இருக்கப்
    பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்!
    முலை தந்தீர்!
தாயீரே நீர்? இன்னும் எனக்கு
    என் தருவீரே?

பொருள்

‘நோயீர் அல்லீர் = நீ நோய் அல்ல

நும் கணவன்தன் = உன் கணவனின்

உயிர் உண்டீர் =  உயிரை உண்டாய்

பேயீரே! = பேய் போன்றவள் நீ

நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே? = இன்னும் உயிரோடு இருக்கிறாயே

மாயீர்! = சாகவில்லையே இன்னும்

மாயா வன் பழி தந்தீர்! = தீராத கொடுமையான பழியைத் தந்தீர்

முலை தந்தீர்! = என்னை பாலூட்டி வளர்த்தாய்

தாயீரே நீர்? = நீயெல்லாம் ஒரு தாயா ?

இன்னும் எனக்கு என் தருவீரே? = இன்னும் எனக்கு என்னவெல்லாம் தரப் போகிறாயோ ?

பரதன் ஒரு குற்றமும் செய்யவில்லை. வரம் கேட்டது கைகேயி. தந்தவன் தசரதன். உயிர் விட்டவன் தசரதன். கானகம் போனவன் இராமன். இதில் பரதன் எங்கே வந்தான்.

இருந்தாலும், தாய் கேட்ட வரத்தால் தனக்கு ஒரு நன்மை வரும் என்றால், அந்த வரத்தின்  தீமையும் தன்னையே சாரும் என்று அவன் நினைக்கிறான்.

திருட்டுப் பொருளை வாங்குவது மாதிரித்தான். நான் திருடவில்லை என்று சொன்னால்   உலகம் ஏற்றுக் கொள்ளாது.

தவறான வழியில் வரும் செல்வம் தீராத பழியைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் நினைத்தான்.

அப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த உலகம் எப்படி  இருக்கும் ?

உலகம் மாறுகிறதோ இல்லையோ, நாம் மாறுவோமே...



Saturday, August 29, 2015

இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன்

 இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன் 


கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கு அரசு கிடைத்தது. ஆண்டு அனுபவிக்க வேண்டியதுதானே.

என்ன ஆகி விடும் ? சக்ரவர்த்தியை எதிர்த்து யார் என்ன சொல்ல முடியும் ?

பரதன் கவலைப் படுவது அவன் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்களைப் பற்றி அல்ல. பின்னாளில் வருபவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வருந்துகிறான்.

முன்பொரு நாள் அரச குல தர்மத்தை பரதன் சிதைத்தான் என்று வருங்கால சந்ததி பேசுமே என்ற பழிக்கு அஞ்சினான்.

வள்ளுவர் சொல்லுவார்,

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

நல்ல பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம், சரியாக சுத்தப் படுத்தாத பாத்திரத்தில் இட்ட நல்ல பால் போன்றது என்று.

பாத்திரம் சரி இல்லை என்றால், பால் கெட்டுப்  போகும். அந்தப் பாலை உட்கொள்ள முடியாது.  அப்படியே உண்டாலும் அது உண்டவனுக்கு தீமை செய்யும்.  அது போல, பண்பில்லாதவன் பெற்ற செல்வத்தை அவனால் அனுபவிக்க  முடியாது, அப்படியே அனுபவித்தாலும் அது அவனுக்கு தீமையே செய்யும்.

தான் அந்த அரசை பெறுவது ஒரு பண்பில்லாத செயல் என்று எண்ணினான் பரதன்.

தான் வாழும் காலத்திற்கு மட்டும் அல்ல, இன்னும் வரும் காலத்தில் உள்ள மக்கள் என்ன நினைப்பார்களோ என்று பழிக்கு அஞ்சியவன் பரதன்.

பாடல்

‘ “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ?


பொருள்

‘ “சுழியுடைத் = கெட்ட எண்ணம் கொண்ட

தாயுடைக் = தாயின்

கொடிய சூழ்ச்சியால் = கொடிய சூழ்ச்சியால்

வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து = வழி வழியாக கட்டிக் காத்த மரபை கொன்று

ஒரு பழி உடைத்து ஆக்கினன் = ஒரு பழியை செய்தான்

பரதன் = பரதன்

பண்டு” = அந்தக் காலத்தில்

எனும் = என்ற

மொழி உடைத்து ஆக்கலின் = பழிச் சொல்லை ஆக்குவதைத் தவிர

முறைமை வேறு உண்டோ? = வேறு என்ன இருக்கிறது

அரசை ஆள்வதில் உள்ள சுகம் அவனுக்குத் தெரியவில்லை.

அதிக்கரம், செல்வம், பணம், பகட்டு, ஆள் , அம்பு, சேனை ஒன்றும் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதனால் வரும் பழி மட்டும் அவனுக்குத் தெரிகிறது.

மற்றவர்களாய் இருந்தால், சக்கரவர்த்தி பதவியின் சுகம் மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கொஞ்சம் பழி வந்தால் என்ன, ஏதாவது சொல்லி  சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள்.

பரதன் இராமனை விட உயரக் காரணம், அவன் மனம் உயர்ந்ததனால். அவனுடைய பழிக்கு அஞ்சிய குணமும் அவன் மனம் உயர ஒரு காரணம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை மகிழ்விக்க, நாம் செய்யும் தவறை சுட்டி காட்டாமல்  போகலாம். நமக்கு கீழே இருப்பவர்கள், நமக்கு பயந்து நம் தவறுகளை  நமக்கு எடுத்துச் சொல்லாமல் போகலாம்.

நமக்குத் தெரிய வேண்டும்....நல்லது எது , கெட்டது எது என்று. அப்படி அறிந்து அதன் படி   நின்றதால் உயர்ந்தான் பரதன்.



Friday, August 28, 2015

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும்

இராமாயணம் - பரதன் - மாளவும் , மீளவும், ஆளவும் 


வாழ்கையை எப்படி இன்பமாக, வெற்றிகரமாக வாழ்வது ?

ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் வாழ்வில் உயர முடியும்.

நான் தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறேன், தினமும் பல் விளக்குகிறேன், நடை பயிற்சி செய்கிறேன்...யார் பொருளையும் இதுவரை திருடியது கிடையாது ...நான் முன்னேற முடியுமா என்று கேட்கலாம்.

ஒழுக்கம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் சொல்வது இது.

ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுக்கம் என்றால் ஒழுகுவது.

வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏதாவது கீறல் விழுந்தால் அதில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

அதாவது மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல்.

அது, போல உயர்ந்தவர்கள், சான்றோர்கள், படித்தவர்கள் , செய்வதை கண்டு அதன் படி வாழ்வது ஒழுக்கம்.

மேலும், ஒழுக்கம் என்பது துளி போல் விட்டு விட்டு விழுவது அல்ல. விடாமல், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஒழுக்கமும் விடாமல் கடை பிடிப்பது.

பெரியவர்கள் செய்த நல்ல செய்கைகளை விடாமல் கடை பிடித்தால் அது ஒழுக்கம் எனப்படும்.

அப்படி வாழ்ந்தால் , வாழ்க்கையில் கட்டாயம் முன்னேற முடியும் அல்லவா ?

அந்த ஒழுக்கத்தை வாழ்வில் கடை பிடித்தவன் பரதன்.

எப்படி ?

பாடல்

‘மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால்
கோள் அலது அறநெறி; குறை உண்டாகுமோ?

பொருள் 

‘மாளவும் உளன் ஒரு மன்னன் = தன் வாக்கை காப்பாற்றவும், அரச நெறியை காக்கவும் உயிரையே கொடுத்தான் ஒரு மன்னன் (தசரதன்)

வன்சொலால் = கொடிய சொல்லால் (வரத்தால் )

மீளவும் உளன் ஒரு வீரன் = பதினாலு வருடம் கானகம் போய் மீண்டு வர உள்ளான் ஒரு வீரன்

மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன் = பரந்த இந்த உலகை ஆள உள்ளான் பரதன்

ஆயினால் = ஆகையால்

கோள் அலது அறநெறி; =   அறநெறிக்கு ஒரு குற்றம் இல்லை

குறை உண்டாகுமோ? = ஒரு குறையும் இல்லை


நான் இந்த அரசை ஆண்டால் அது அறநெறிக்கு புறம்பானது, குற்றம் உள்ளது என்கிறான்.

தசரதன், இராமன் என்ற இரண்டு பெரியவர்களை எதுத்துக் கொள்கிறான் பரதன்.

சொன்ன சொல்லைக் காக்கவும், அரச நெறியைக் காக்கவும் உயிரைக் கொடுத்து உயர்ந்தவன்  தசரதன்.

தந்தையின் சொல்லை காப்பாற்ற கானகம் போய் தனை உயர்த்திக் கொண்டவன்   இராமன்.


அவர்களை தன் வாழ்வுக்கு உதாரணமாகக் கொள்கிறான் பரதன்.

நம்மை விட வாழ்வில் உயர்ந்தவர்களை , அவர்களின் வாழ்கை முறைகளை கடை பிடிக்க வேண்டும்.

தசரதனும், இராமனும் தங்கள் செயல்கள் உயர்ந்தவர்கள்.

செயற்கரிய செய்வார் பெரியார்,  சிரியர் செயற்கரிய செய்கலாதார் என்று வள்ளுவன்  சொன்னது போல, செயற்கரிய செயல்களை செய்து பெரியவர்களாக  உயர்ந்தவர்கள் தசரதனும், இராமனும்.


அவர்களின் வாழ்கையை முன் உதாரணமாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தவன்  பரதன்.

பரதன் உயர்ந்தது இருக்கட்டும்....

நீங்கள் உயர, யாரை முன் உதாரணமாகக் கொண்டிருக்கிறீர்கள் ?

சிந்திப்போம்.



இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை

இராமாயணம் - தீயவற்றில் ஒரு சுவை 


இன்று இராமாயணம் பேசும் சிலர் , "பரதன் பாட்டன் வீட்டில் இருந்து கொண்டு , தாயை ஏவி விட்டு அரசைப் பெற்றுக் கொண்டான்" என்று கூறுகிறார்கள். இவர்களுடைய கீழ்மையை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றுகிறார்கள்.

பரதன் அப்படிப் பட்டவானா ?

தசரதன் தனக்குத் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி உனக்கு அரசையும் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி சொல்லி முடிக்கும் முன், தன் தலைக்கு மேல் கூப்பிய கைகளை கீழே கொண்டு வந்து இரண்டு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டான் பரதன்.

பாடல்

சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!


பொருள்


சூடின மலர்க் கரம் = தலை மேல் கூப்பிய கரங்கள்

சொல்லின் முன் = கைகேயி சொல்லி முடிக்குமுன்

செவி கூடின;  = அவனின் இரு காதுகளின் பக்கம் வந்து கூடின

புருவங்கள் குனித்துக் = புருவங்கள் வளைந்து

கூத்து நின்று ஆடின = கூத்து ஆடின

உயிர்ப்பினோடு = உயிருடன்

அழல் கொழுந்துகள் ஓடின = நெருப்பு ஆறு ஓடியது

உமிழ்ந்தன = வடித்தன

உதிரம் கண்களே! = கண்கள் இரத்தத்தை

ஒரு இடத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  சில நாள் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை  கொல்கிறார்கள். சில நாள் , காவல் படையும், இராணுவமும் சேர்ந்து தீவிரவாதிகளை  கொல்கின்றன. பத்திரிகைகளும், மற்ற ஊடகங்களும் இவற்றை  நாளும் எடுத்துச் சொல்கின்றன.

இன்று யாரை, யார் கொன்றார்கள் என்று கணக்குத் தருகின்றன.

இவற்றை தினமும் படித்துக் கொண்டிருந்தால், நமக்கு என்ன தோன்றும் ?

நாளடைவில்,  இது ஒரு பெரிய செய்தாகப்  படாது.  நாலைந்து பேர் இறந்தார்கள் என்றால்  , சரி என்று அடுத்த பக்கத்தை புரட்டப் போய் விடுவோம்.

என்ன ஆகிறது என்றால், தீமைகள் மரத்துப் போகிறது நமக்கு. இதெல்லாம் சாதாரணம், எப்போதும் நடப்பதுதான் என்று எடுத்துக் கொண்டு விடுகிறோம்.

தவறுகளுக்கு, தீமைகளுக்கு மனம் பழகி விடுகிறது.

இதற்கு அடுத்த கட்டம், அதிகமான தீமையை தவற்றை எதிர்பார்ப்பது.

ஆயிரம் இரண்டாயிரம் இலஞ்சம் வாங்கினான் என்றால் யாரும் கண்டு கொள்வது இல்லை.  பெரிதாக எதிர் பார்க்கத் தொடங்கி விடுகிறது.

சின்ன இலஞ்சம் வாங்கின யாரையாவது கைது பண்ணினால், "அவனவன் இலட்சம் கோடினு   வாங்கிறான்...அதை விட்டு விட்டு ஆயிரம் ரூபாய் வாங்கினவனை போய்   பிடிச்சிகிட்டு" என்று நமக்கு ஒரு சலிப்பு வந்து விடுகிறது.

இதில் அடுத்த கட்டம் என்ன என்றால், எல்லாரும் தான் வாங்குகிறார்கள், நாமும்  வாங்கினால் என்ன என்று தோன்றும்.

பொய்யில்,  தீமையில்,தவறில் ஒரு சுவாரசியம் வந்து விடுகிறது. ஒரு சுவை வந்து  விடுகிறது.

தவறு செய்வதில் ஆர்வமும், நல்லது செய்பவனை பார்த்தால் ஒரு இளக்காரமும் வந்து  விடுகிறது.

தீயவைகளை காது கொடுத்துக் கூட கேட்கக் கூடாது. கேட்டால் அதில் ஒரு ஆர்வமும், சுவையும் வந்து  விடும்.

கைகேயி சொன்னதை பரதன் முழுதாகக் கூட கேட்கவில்லை.

என்ன வரம், அதன் சாரம் என்ன, அதில் என்ன ஓட்டை இருக்கிறது, எப்படி கேட்டாய், எங்கு கேட்டாய், என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.

ஒரு தவறை முற்றுமாகக் கூட அவனால் கேட்க முடியவில்லை என்றால் அவன்  மனம் எவ்வளவு மென்மையானதாக இருந்திருக்க வேண்டும் ?

பேருந்தில் ஒரு பெண் மானபங்கப் படுத்தப் பட்டாள் என்றால், அதை விலாவாரியாக  விவரிப்பதும், அதை ஒரு வார்த்தை விடாமல் படிப்பதும் கூட ஒரு  வக்கிரம் தான்.

தீயாரை காண்பதுவும் தீதே , அவர் சொல் கேட்பதுவும் தீதே என்றாள் அவ்வை.

பொய் சொல்வதை கேட்பது, புரணி சொல்வதை கேட்பது,  புறம் சொல்வதை கேட்பது,  தவறுகளை விவரித்துக் கூறுவதை கேட்பது ....இவற்றை தவிர்க்க வேண்டும்.

தீயவற்றை மனதுக்குள் போட்டால் அது அங்கேயே தங்கி விடும். அகற்ற வழி இல்லை.

குழந்தைகளை தீயனவற்றை பார்க்கவோ, கேட்கவோ அனுமதிக்காதீர்கள்.

மனம் உயர அது ஒரு வழி.

தீயவற்றை கேட்க்கக் கூசினான் பரதன்.

மேலும் பார்ப்போம்.

 

Wednesday, August 26, 2015

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள்

திருவருட்பா - ஒன்றும் இல்லை என்று சொல்லும் கயவர்கள் 


இறைவன் இல்லை.

பாவ புண்ணியம் இல்லை.

பக்தியும் முக்தியும் சும்மா கட்டுக் கதைகள்.

தவமும், விரதமும் வெட்டி வேலை.

இதையெல்லாம் விட்டு விட்டு, வாழ்க்கையை அனுபவிக்க வாருங்கள்....நன்றாக உண்டு, நல்ல உடை உடுத்து, பெண்களோடு சேர்ந்து கலந்து இன்பம் அனுபவிப்பதுதான் வாழ்க்கை. இது தான் மாம் வாழ்வில் கை மேல் கண்ட பலன். மற்றவை எல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும் கயவர்களின் பால் சேராமல் இருக்க எனக்கு அருள் செய்வாய் என்று முருகனிடம் வேண்டுகிறார் வள்ளலார்.

எல்லாம் பொருளால் ஆனது. பொருள்களைத் தாண்டி எதுவும் இல்லை என்று கூறுபவரக்ளை கயவர்கள் என்கிறார் வள்ளலார்.

இந்த உலகில் பொருள்களைத் தாண்டி வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் அறிய வேண்டும். அப்படி அறியாமல், உலக இன்பமே பேரின்பம் என்று அலையும் கயவர்களோடு என்ன கூட்டு இனியே என்கிறார் வள்ளலார்.

பாடல்

 பரமேது வினைசெயும் பயனேது பதியேது 
         பசுவேது பாச மேது 
         பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது 
         பாவ புண்ணியங்க ளேது 
    வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை 
         மனம்விரும் புணவுண்டு நல் 
         வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு 
         மலர் சூடி விளையாடி மேற் 
    கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரொடு 
         கலந்து மகிழ்கின்ற சுகமே 
         கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங் 
         கயவரைக் கூடா தருள் 
    தரமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
         தலமோங்கு கந்த வேளே 
         தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
         சண்முகத் தெய்வ மணியே. 

பொருள்

 பரமேது = பரம் ஏது ? பரம் என்றால் ஆதி என்று பொருள். பரம்பரை என்றால் ரொம்ப காலமாய் வருவது. பரம சிவன். பர பிரும்மம்.

வினைசெயும் பயனேது = நல் வினை, தீ வினை இவற்றால் விளையும் பயன் ஏது ?

பதியேது = பதி ஏது  ? எல்லாவற்றிற்கும் தலைவன், ஆண்டவன் ஏது  ?

பசுவேது = பசு என்றால் அடிமை. ஆண்டான் அடிமை ஏது  ? கடவுள் , பக்தன் என்பதல்லாம் ஏது  ?

 பாச மேது  = பதிக்கும், பசுவுக்கும் இடையில் உள்ள பாசம் ஏது ?

பத்தியேது  = பக்தி என்றால் என்ன

அடைகின்ற முத்தியேது = அதன் மூலம் அடையும் முக்தி என்றால் என்ன ?

அருளேது = இறைவன் அருள் என்றால் என்ன ?

பாவ புண்ணியங்க ளேது  = பாவ புண்ணியங்கள் என்றால் என்ன ?

வரமேது தவமேது விரதமேது  = வரம், தவம், விரதம் என்றால் என்ன ?

ஒன்றுமிலை = இவையெல்லாம் ஒன்றும் இல்லை

மனம் விரும் புணவுண்டு = மனம் விரும்பும் உணவு உண்டு

 நல் வத்திர மணிந்து = நல்ல துணிகளை அணிந்து

மட மாதர்தமை நாடி = பெண்களை நாடி

நறு மலர் சூடி = வாசனையான மலர்களை சூடி

விளையாடி = விளையாடி

மேற் கரமேவ விட்டு = கையை அவர்கள் மேல் படர விட்டு

முலை தொட்டு  = அந்தப் பெண்களின் மார்புகளைத் தொட்டு

வாழ்ந்தவரொடு = வாழ்ந்து அவரோடு

கலந்து மகிழ்கின்ற சுகமே = கலந்து மகிழ்கின்ற சுகமே 
       
கண்கண்ட சுகமிதே  = கண் கண்ட சுகம் இதே

கைகண்ட பலனெனுங் = இதுவே கை கண்ட பலன் என்று சொல்லும்

கயவரைக் கூடா தருள் = கயவர்களை கூடாமல் இருக்க அருள்

தர = தருவதற்கு

மேவு = இருக்கும்

சென்னையிற் = சென்னையில்

கந்த கோட்டத்துள் = கந்த கோட்டத்தில்

வளர் = வளரும், அல்லது உறையும்

தலமோங்கு கந்த வேளே  = அதற்கு பெருமை செய்யும் கந்த வேளே

 தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.  =  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.

உணவு, உடை, ஆண் பெண் உறவு இவற்றைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லையா ?

சிந்திக்க வேண்டிய விஷயம்.

Tuesday, August 25, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்த  பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.

============== பாகம் 2 =================================================

கைகேயி  மிக நல்லவள். இராமனை தன் மகனாக நினைத்து வளர்த்தவள்.  கூனியின் வார்த்தைகளை கேட்டு தலைகீழாக மாறினாள்.

நம் எல்லோருக்குள்ளும் நல்லதும் கெட்டதும் கலந்து கிடக்கிறது.

நல்லதைப் படித்து, நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்குள் இருக்கும் நல்லவைகள் சுடர் விட்டு எழும்.

கெட்டவர்களோடு சேர்ந்து, கெட்டதைப் படித்தால் கெட்டவைகளே மேலெழுந்து நிற்கும்.

கைகேயி , கூனியொடு சேர்ந்தாள். அவளுக்குள் கிடந்த சாத்தான் உயிர் பெற்றெழுந்தான்.

அவள் பேச்சில் ஆணவம் சொட்டுகிறது....

மைந்தனைப் போக்கினேன்
பார் உனக்கு ஆக்கினேன்

என்று தான் செய்ததாகக் கூறுகிறாள்.

இராமன் வனம் போனான்.  தசரதன் வானம் போனான்.

காரணம் என்ன ?

கைகேயி சொல்கிறாள், "என் பேரில் என்ன தப்பு...நான் ஒரு தவறும் செய்யவில்லை"....

அவன் வரம் தந்தான்

அவன், அந்த வரங்களை நிறைவேற்றுவதாக வாக்கு தந்தான் ....இது தசரதனின் பிழை. என் மேல் ஒரு குற்றமும் இல்லை என்பது போல பேசுகிறாள்.


கூனியின் நட்பு அவளை அப்படி பேச வைத்தது...

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
   தீயார்சொற் கேட்பதுவுந் தீதே-தீயார்
   குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
   டிணங்கி யிருப்பதுவுந் தீது.

தீயாரோடு இணங்கி இருந்தாள். தீயவளாகிப் போனாள்.

அப்போது கூட, அவளின் அடிப்படை நல்ல குணம் போகவில்லை.

இராமனை போக்கினேன் என்று கூறவில்லை.

"மைந்தனைப் போக்கினேன்" என்று கூறுகிறாள்.  அப்போதும் , இராமன் மேல் உள்ள பாசம் போகவில்லை.

மகனே மகனே என்று சொல்லி வளர்ந்த நாக்கு  தவறியும் மாற்றிச் சொல்லவில்லை.

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் கூறியது போல...கைகேயியின் நாக்கு, இராமனை கானகம் அனுப்பிய பின்னும், "மைந்தன்" என்றே கூறியது.

நல்லதை பழக்கப் படுத்தி வையுங்கள். அது உங்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும்.

 சரி,இதைக் கேட்டவுடன் பரதன் என்ன செய்தான் ?









Monday, August 24, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன்

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்து பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.



Sunday, August 23, 2015

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள்

சீவக சிந்தாமணி - சைட் அடித்த பெண்கள் 

(வயது வந்தவர்களுக்கு மட்டும். ஆண் பெண் ஈர்பை கேட்டு முகம் சுளிப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)

பெண்கள் , ஆண்களை விரும்பி பார்ப்பார்களா. பார்ப்பார்கள் என்கிறது சீவக சிந்தாமணி.

அப்படி அவர்கள் பார்க்கும் போது , ஆண்களும் தங்கள் அழகை இரசிக்க வேண்டும் என்று நினைத்து அலங்காரம் பண்ணிக் கொண்டு வருகிறார்களாம்.

ஆண்கள் தங்களை எப்படி இரசிக்கிறார்கள், அப்படி தங்களை இரசிக்கும் ஆண்களை பெண்கள் எப்படி எப்படி இரசிக்கிறார்கள் ....

வாள் போன்ற கூர்மையான கண்களைப் பார்த்து, நாளும் வளரும் மார்புகளைப் பார்த்து, அழகு பொங்கும் இடுப்பை நோக்கி, பண் பாடும் வண்டுகள் வட்டமிடும் மலர்களை சூடிய கூந்தலை நோக்கும் அந்த ஆண்களை பார்த்து விருப்போடு நின்றார்கள் வளை அணிந்த அந்தப் பெண்கள்



பாடல்

வாண்மதர் மழைக்க ணோக்கி
வருமுலைத் தடமு நோக்கிக்
காண்வர வகன்ற வல்குற்
கண்விருப் புற்று நோக்கிப்
பாணுவண் டாற்றுங் கோலச்
சிகழிகைப் படியு நோக்கி
யாண்விருப் புற்று நின்றா
ரவ்வளைத் தோளி னாரே.

சீர் பிரித்த பின்

வாள் மதர் மழைக் கண் நோக்கி 
வரு முலைத்  தடமும் நோக்கிக்
காண் வரவு அ கன்ற அல்குல் 
கண் விருப்புற்று நோக்கிப்
பாணு வண்து ஆற்றும் கோலச்
சிகழிகைப் படியும்  நோக்கி
ஆண் விருப்புற்று நின்றா
அவ் வளைத் தோளினாரே.

பொருள்

வாள் = வாள் போன்ற கூர்மையான

மதர் = மதர்ப்பு என்ற சொல்லுக்கு செழிப்பு, இறுமாப்பு, உள்ளக்களிப்பு; ஆசைப்பெருக்கம்; அழகு; வலிமை; மிகுதி; புலவி என்று பல பொருள்கள் உண்டு. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

மழைக் கண் நோக்கி = மழை போன்ற குளிர்ச்சியான கண்களை நோக்கி, மழை தரும் மேகம் போன்ற கரிய கண்களை நோக்கி, நீரில் மிதக்கும் கண்களை நோக்கி

வரு முலைத்  தடமும் நோக்கிக் = வரு முலை  - வினைத்தொகை. வந்த, வருகின்ற, வரும். அந்தப் பெண்களின் மார்புகளை நோக்கி

காண் = காணக் கூடிய அழகான

வரவு அகன்ற அல்குல் = பரந்த இடுப்பு (அவ்வளவு தான் சொல்ல முடியும்)

கண் விருப்புற்று நோக்கிப் = கண்ணால் விருப்புடன் நோக்கி

பாணு = பண் பாடும்

வண்டு  ஆற்றும் = வண்டு ஆடும்

கோலச் சிகழிகைப் படியும்  நோக்கி = அழகிய முடியையும் நோக்கி

ஆண் விருப்புற்று நின்றார் = ஆண்கள் விரும்பும்படி நின்றார் . ஆண்கள்மேல் விருப்புற்று நின்றார்

அவ் வளைத் தோளினாரே. = அந்த வளையல் அணிந்த தோள்களை கொண்ட பெண்களே

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்




இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்

இராமாயணம் - பரதன் - தீயன இராமனே செய்யுமேல்


நான் பெற்ற இரு வரத்தால், இராமன் கானகம் போனான், உன் தந்தை வானகம் போனான்,  நீ அரசு பெற்றாய் என்றாள் கைகேயி பரதனிடம்.

பரதனுக்குப் புரியவில்லை. இராமன் ஏன் கானகம் போனான் என்று. தசரதன் ஏன் இராமனை கானகம் அனுப்பினான் ? அவன் என்ன தவறு செய்தான் ? இராமன் தவறு செய்ய மாட்டானே. அப்படியே அவன் தவறு செய்து இருந்தாலும், அது ஒரு தாய் அவளுடைய பிள்ளைக்கு செய்யும் தீமை போல அல்லவா இருக்கும்.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால், அதை பிடித்து இழுத்து, தன் கால்களுக்கு இடையில் அமுக்கி, அதன் வாயை வலு கட்டாயாமாகத் திறந்து மருந்தைப் புகட்டுவாள் . வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் ஏதோ கொடுமை செய்வது போலத் தெரியும். பிள்ளை குணமாக வேண்டுமே என்று அவள் அப்படிச் செய்வாள். அது போல, இராமன் தீமையே செய்திருந்தாலும், அது நல்லதற்கே அன்றி வேறு ஒன்றும் அதில் தீமை இருக்காது என்று பரதன் நம்பினான்.

பாடல்

‘தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?

ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

பொருள்

‘தீயன = தீமையை

இராமனே செய்யுமேல் = இராமனே செய்திருந்தாலும்

அவை = அவை

தாய் செயல் அல்லவோ = ஒரு தாயின் செயல் போன்றது அல்லவா

தலத்துளோர்க்கு எலாம்? = இந்த பூ உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம்

போயது  = இராமன் கானகம் போனது

தாதை விண் புக்க பின்னரோ? = தந்தையாகிய தசரதன் வானகம் போன பின்பா


ஆயதன் முன்னரோ?  = அல்லது அதன் முன்பா

அருளுவீர்’ என்றான் = அருள் கொண்டு சொல்லுங்கள் என்று கைகேயி பரதன்  கெஞ்சிக் கேட்கிறான்.

இன்று பிள்ளைகள் பெற்றோரோ ஆசிரியரோ, மற்ற பெரியவர்களோ ஏதாவது  கண்டித்துச்  சொன்னால், அவர்களை அந்த பிள்ளைகள் விரோதிகளைப் போல பார்க்கிறார்கள். அவர்கள் தங்களது நன்மைக்குத் தான் சொல்கிறார்கள் செய்கிறார்கள்  என்ற நம்பிக்கை இல்லை.

பெரியவர்கள் மேல், பெற்றவர்கள் மேல், ஆசிரியர்கள் மேல் பிள்ளைகளுக்கு நம்பிக்கை இல்லை.

நீ என்ன சொல்வது. நான் என்ன கேட்பது என்று இருக்கிறார்கள்.

எது சொன்னாலும் காரணம் கேட்கிறார்கள். சந்தேகம், நம்பிக்கை இன்மை பெரிதும் வளர்ந்து  விட்டது.

இராமன் மேல் பரதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இராமன் தவறு செய்ய மாட்டான். அப்படியே அவன் செய்தது தவறு போலத் தோன்றினாலும், அது  தவறாக இருக்காது.  அது ஒரு நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறான்.

இப்படி ஒரு நம்பிக்கை பெற்றவர்கள் மேலும், ஆசிரியர்கள் மேலும், பெரியவர்கள் மேலும்  பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்கள் உயர்வார்களா இல்லையா ?

பரதன் உயர்ந்தான் என்று வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கம்பன் சொல்கிறான்.

பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளர்க்க பரதன் கதை உதவும்.

சொல்லி வையுங்கள்.

விதை போடுவது உங்கள் வேலை. போடுங்கள்.

வளரும் , பலன் தரும் என்று நம்புங்கள்.

பரதன் நம்பினான். நீங்களும் நம்புங்கள்.

நம்புவதைத் தவிர வேறு என்னதான் வழி இருக்கிறது ?





Saturday, August 22, 2015

பிரபந்தம் - மூப்பு வருமுன்

பிரபந்தம் - மூப்பு வருமுன் 




மூப்பு என்பது ஏதோ ஒரு நாளில் வருவது இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் மூப்பு அடைந்து கொண்டே இருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக வயது எறிக் கொண்டே போகிறது.

அங்கங்கே சில பல நரை முடிகள். கண்ணாடியின் வலிமை (பவர்) ஏறிக் கொண்டே போகும். காது கொஞ்சம் கொஞ்சம் கேட்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்லில் பிரச்னை. 

இருந்தும், ஏதோ மூப்பு என்பது பின்னாளில் வரும் ஒன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

இதைப் படிக்கும் இந்த நேரத்திலும் உங்கள் வயது ஏறிக் கொண்டிருக்கிறது. 

மூப்பு வருவதற்கு முன் எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன ஒரு நாளில் வரும் ஒன்றா என்ன. 

மேலும், மூப்பு வந்த பின், நம் உடல் நம் வசம் இருக்காது.  நட என்றால் கால்கள் நடக்காது. முட்டு வலிக்கும். பேசலாம் என்றால் இருமல் வந்து தடுக்கும். பிறர் சொல்வது காதில் சரியாக விழாது. 

தள்ளிப் போடாதீர்கள். கை கால்கள் மற்றும் ஏனைய புலன்கள் நன்றாக இருக்கும் போது நல்ல விஷயங்களை செய்து விடுங்கள். 

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்.....

பாடல்  

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.

சீர் பிரித்த பின் 

முற்ற மூத்துக் கோல் துணையாக  முன்னடி நோக்கி வளைந்து,
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் ,
பெற்ற தாய் போல்வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு, உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

பொருள் 

முற்ற மூத்துக் = ரொம்பவும் வயதாகி 

கோல் துணையாக = கோலைத் துணையாகக் கொண்டு 

முன்னடி நோக்கி வளைந்து = முதுகு காலை பார்க்கப் போவது போல வளைந்து 

இற்ற கால் போல் = உடைந்த காலால் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி 

தள்ளி = தள்ளித் தள்ளி நடந்து 

மெள்ள இருந்து = கொஞ்ச தூரம் நடந்தவுடன், மேலே நடக்க முடியாமல் ஓய்வு எடுத்து 

அங்கு = அன்று 

இளையா முன் = மூச்சு இரைத்து வலிமை குன்றும் முன் 
,
பெற்ற தாய் போல்வந்த = பெற்ற தாய் போல வடிவு கொண்டு வந்த 

பேய்ச்சி = பூதகி என்ற அரக்கியின் 

பெரு முலை ஊடு = பெருத்த முலைகளின் ஊடே 

உயிரை = அவளின் உயிரை 

வற்ற வாங்கி = ஒட்ட உறிஞ்சி வாங்கி 

உண்ட வாயான் = உண்ட வாயை கொண்ட கண்ணனை 

வதரி வணங்குதுமே = பத்ரி நாத்தில் வணங்குவோமே 


மூப்பை அறிந்து கொள்ளுங்கள். அது என்றோ வருவது இல்லை.  நாளும் வருவது. ஒவ்வொரு நொடியும் வருவது. 

புலன்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே நல்லதைச் செய்யுங்கள். 

Friday, August 21, 2015

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?

இராமாயணம் - பரதன் - ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பாட்டனார் வீட்டில் இருந்து வருகிறான் பரதன். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. நேராக வந்து தாயைப் பார்க்கிறான்.

தான் கேட்ட வரத்தால் தசரதன் மாண்டான், இராமன் கானகம் போனான், நீ அரசு பெற்றாய் என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள் கைகேயி.

அதைக் கேட்ட பரதன் துடித்துப்  போகிறான்.

"உன் சூழ்ச்சியினால் என் தந்தை இறந்து போனான், என் அண்ணன் கானகம் போனான்,  என்ற சொல்லைக் கேட்ட பின்னும், உன் வாயைக் கிழிக்காமல் இருக்கிறேனே...உலகில் உள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் ...பரதனுக்கும் இந்த அரசை ஆள வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் போல என்று தானே சொல்லுவார்கள் " என்று நினைத்து துடிக்கிறான்.


பாடல்

‘மாண்டனன் எந்தை என் தன்முன் மாதவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டில் என் வாய்; அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்?


பொருள் 

‘மாண்டனன் எந்தை = என் தந்தை இறந்தான்

என் தன்முன்  = எனக்கு முன் பிறந்தவன்

மாதவம் = பெரிய தவம் செய்ய

பூண்டனன் = தவ வேடம் பூண்டு கானகம் சென்றான்

நின் கொடும் புணர்ப்பினால் = உன்னுடைய பெரிய சூழ்ச்சியால்

என்றால் = என்று

கீண்டில் என் வாய் = கிழிக்க வில்லையே உன் வாயையை

அது கேட்டும் நின்ற யான் = இவற்றை கேட்டும் ஒன்றும் செய்யாமல் இருந்த நான்

ஆண்டனனே அன்றே அரசை ஆசையால்? = இந்த அரசை ஆசையால் ஆண்டதற்கு சமம் என்று ஆகும் அல்லவா ?

ஒரு தவற்றை நாமே செய்ய வேண்டும் என்று இல்லை.  நமக்காக மற்றவர்கள் செய்யும் போது அதை தட்டிக் கேட்காமல் இருந்தாலே அந்தத் தவற்றை நாமே செய்தது போலத்தான்.

ஒரு அலுவலகம், ஒரு நிறுவனம், ஒரு அரசு நடக்கிறது என்றால் அதன் தலைமையில் உள்ளவர்கள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. அவர்களுக்கு கீழே உள்ளவர்களும் ஒழுங்காக இருக்கிறார்களா என்று அந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அங்கு நடக்கும் தவறுகள் அவர்களே செய்தது மாதரித்தான்.

பிரதம மந்திரி நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு கீழே உள்ள மந்திரிகளும்  நல்லவர்களாக இருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, யாரோ ஒரு தவறைச் செய்து அதன் மூலம் நமக்கு ஒரு பலன்  கிடைக்கும் என்றால், அதையும் விலக்க வேண்டும்.

 பரதன் சொல்லிச்  வரம் கேட்கவில்லை கைகேயி

இருந்தாலும், அந்த வரத்தால் வரும் நன்மை தனக்கு வேண்டாம் என்று ஒதுக்குகிறான் பரதன்.

யார் செய்த தவறில் இருந்தும் நமக்கு ஒரு நன்மை வரும் என்றாலும், அது வேண்டாம் என்றே  வைக்க வேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏன் பரதன் கோடி இராமர்களை விட உயர்ந்தான் என்று தெரிகிறதா ?

இன்னும் வரும்


இராமாயணம் - பரதன் - தவறான வழியில் வந்த செல்வம்

இராமாயணம் - பரதன் - தவறான  வழியில் வந்த செல்வம் 


தவறான வழியில் வரும் செல்வத்தை வெறுத்து ஒதுக்க வேண்டும். 

இன்று சிக்கல் என்ன என்றால் தவறு செய்ய யாருக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை. மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் கொஞ்சம் இருக்கிறது. மத்தபடி தவறான வழியில் செல்வம் சேர்க்க நிறைய பேர் தயார்தான்.

ஓட்டுக்கு காசு என்றால் வாங்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களை பார்க்கலாம். 

உழைக்காமல், இலவசமாக ஏதாவது கிடைக்கிறது என்றால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அதைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். 

தவறு செய்வதில் சுகமும் சுவையும் வந்து விட்டது. 

இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் ஒரு கலை என்றே ஆகி விட்டது இந்த நாட்டில். 

எப்படி சாமர்த்தியமாக கொடுப்பது, எப்படி மாட்டிக் கொள்ளாமல் வாங்குவதில்  போட்டி நிலவுகிறது. 

இதற்கு வேறு வேறு பெயர்கள் - அன்பளிப்பு, capitation fee , நன்கொடை ,lobby என்று. 

தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் கொடுத்தாலும், எப்படி கொடுத்தாலும் தொடக் கூடாது. 

அயோத்தியின் அரசாட்சி பொறுப்பை கைகேயி கேட்ட வரத்தால் தசரதன் பரதனுக்கு கொடுத்தான். 

அதை, பரதன் ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் அவன் மேல் குறை காண முடியாது. 

தனக்கு சொந்தமில்லாத ஒன்றை யார் தந்தாலும் எடுத்துக் கொள்ளக் கூடாது அதை "தீ வினை" என்று ஒதுக்கி விட்டான் பரதன். நாம் என்றால் "தீ வினை" செய்வது போல அதை எடுத்துக் கொண்டிருப்போம். தீ வினையை யார் ஒதுக்கிறார்கள் ?

சற்று நேரம் யோசித்துப் பார்ப்போம். 

பதவி என்றால் ஏதோ சாதாரண பதவி இல்லை. சக்கரவர்த்தி பதவி. முடி சூடிக் கொண்டால், பரதனை எதிர்த்து யார் பேச முடியும். அளவற்ற செல்வத்துக்கு அதிபதி ஆகி இருக்கலாம். 

 பரதனுக்கு தகாத வழியில் வரும் செல்வத்தின் மேல் துளியும் ஆசை இல்லை. அதை வெறுத்தான்.

எல்லோரும் அப்படி இருந்தால், இந்த நாட்டில் கறுப்பு பணம் இருக்குமா, கொள்ளை, திருட்டு, இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், கோர்ட்டு, வாய்தா, வக்கீல் என்று இதெல்லாம் இருக்குமா ? தனக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் ஆசை வைக்காமல் இருக்கும் ஒரு நல்ல குணம் ஒன்று இருந்தால் எவ்வளவு  நன்மை என்று யோசித்துப் பாருங்கள்.


‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!


பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

மனத் தூய்மை என்றால் அது பரதன் தான் !