Thursday, March 3, 2022

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

 அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். அவள் மேல் காதல் வருகிறது. அன்பு பிறக்கிறது. ஏன் அவள் மேல் மட்டும் அன்பு, காதல்? மற்ற பெண்கள் எல்லாம் பெண்கள் இல்லையா? 


மற்றவர்களும் பெண்கள் தான். ஆனால், இந்த ஒரு பெண் அவள் மேல் அன்பு செலுத்த என்னைத் தூண்டுகிறாள். நான் என்ன செய்வது? அவளின் அருகாமை அவள் மேல் அன்பு சுரக்கச் செய்கிறது. அவள் எனக்கு காதல் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தாள். 


அந்த ஒரு பார்வை, அந்தச் சின்ன புன்னகை, எல்லாம் அவள் மேல் காதலை மேலும் மேலும் தூண்டி விடுகிறது. 


என்று அவள் மேல் காதல் வந்ததோ, வேறு ஒரு சிந்தனையும் இல்லை. எந்நேரமும் அவள் நினைப்பு தான். 


உலகில் ஏதேதோ நடக்கிறது. எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. 


அவள் அன்பு ஒன்று போதும். ஜன்ம சாபல்யம் அடைந்து விடும். இனி ஒரு பிறவி இல்லை. செய்த அத்தனை பாவங்களும் அவள் அன்பில் கரைந்து போய் விட்டது. இனி பாவம் செய்யவே முடியாது. அவள் அன்பு இருக்கும் போது வேறு என்ன வேண்டும்? ஒரு ஆசையும் இல்லை. ஒரு தேடலும் இல்லை. கடவுளும், மதங்களும், சொர்கமும், வீடு பேறும் எல்லாம் அவளுள் அடக்கம். 


இனி இன்னொரு பெண்ணை பார்க்கும் ஆசை கூட இல்லை. அவளுக்கு மேலா இன்னொரு பெண் இருந்து விடப் போகிறாள்? 


அபிராமி அந்தாதி படிக்கும் போது மனம் கரைந்துதான் போகிறது. 



பாடல் 


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_51.html


(Please click the above link to continue reading)


உமையும்  = அபிராமியும் 


உமையொரு பாகனும் = அவளை தன் உடலில் பாதியாகக் கொண்ட அவனும் 


 ஏக உருவில் வந்து = ஒரே உருவில் வந்து 


இங்கு = இங்கு 


எமையும் = என்னை 


தமக்கு அன்பு செய்ய வைத்தார் = அவர்கள் மேல் அன்பு செய்ய வைத்தார்கள் 


இனி எண்ணுதற்குச் = இனி சிந்தித்து குழம்ப 


சமையங்களும் இல்லை = நேரம் இல்லை, மற்ற கொள்கைகள், மதங்கள் இல்லை 


 ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை = மீண்டும் என்னை பெற்று எடுக்க ஒரு தாயும் இல்லை 



அமையும் = அமைதியுறும் 


அமையுறு தோளியர் = அழகிய தோள்களைக் கொண்ட பெண்கள் 


மேல் வைத்த ஆசையுமே = மேல் வைத்த ஆசையுமே 


புரிந்தால், நல்லது. 


புரியாவிட்டாலும், நல்லது தான். 



No comments:

Post a Comment