Thursday, June 6, 2024

திருக்குறள் - தவத்தின் வலிமை

 திருக்குறள் - தவத்தின் வலிமை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/06/blog-post_6.html



நமக்கு ரொம்ப வேண்டிய ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அது கணவன்/மனைவி/பிள்ளைகள்/உடன் பிறப்பு/நண்பர்கள் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் உடல் நலம் தேற வேண்டும் என்று நாம் விரும்புவோம் அல்லவா?  


அதே போல் பிள்ளைகளுக்கு நல்ல வேலை, நல்ல துணை, என்று நாம் விரும்புவோம். 


அப்படி ஒரு சக்தி நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும்?  


அது ஒரு புறம் இருக்க, நமக்கு வேண்டாதவர்கள் நலத்தை நாம் விரும்ப மாட்டோம். 


இந்த இரண்டையும் செய்யும் வல்லமை கொண்டது தவம்.


வேண்டியவர்களுக்கு நல்லது, வேண்டாதவர்களுக்கு துன்பம் என்ற இரண்டையும் தர வல்லது தவம். 


பாடல் 


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்


பொருள் 


ஒன்னார்த் = நமக்கு வேண்டாதவர்கள் 


தெறலும் = கெடுதலும் 


உவந்தாரை = நமக்கு வேண்டியவர்களுக்கு 


ஆக்கலும் = நன்மையையும் 


எண்ணின் = எண்ணினால் 


தவத்தான் வரும் = தவ வலிமையால் வரும். 


இது மேலோட்டமான பொருள். 


இதில் பரிமிலழகர் சில நுணுக்கமான விடயங்களை சொல்கிறார். 


அவை என்ன என்று பார்ப்போம். 


தவம் செய்பவர்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று இருக்குமா?  அவர்களோ முற்றும் துறந்த முனிவர்கள். அவர்களுக்கு எது வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பேதம்?  அப்படி இருக்க வள்ளுவர் அப்படி சொல்வாரா ?  


இரண்டாவது, அப்படியே வேண்டியவர், வேண்டாதவர் என்று இருந்தாலும், வேண்டாதவர்கள் நாசமாக போக வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களா? அப்படி நினைத்தால் அவர்கள் தவம் என்ன தவம்?


இந்த இரண்டு கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை சொல்கிறார். 


வேண்டியவர்களுக்கு நல்லதும், வேண்டாதவர்களுக்கு தீயதும் தவத்தால் ஆகும் என்கிறது குறள். தவம் செய்பவர்களால் அல்ல. 


"தவத்தான் வரும்" என்பது குறள். தவ வலிமையை தவத்தின் மேல் ஏற்றிச் சொல்கிறார். தவம் செய்பவர்கள் மேல் அல்ல. 


"எண்ணின்" - எண்ணினால் வரும். அவர்கள் அப்படி எண்ண மாட்டார்கள். ஒரு வேளை அப்படி நினைத்தால், அவர்கள் செய்த தவம் அவர்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றது என்கிறார். 


தவ வலிமை உள்ளவர்கள் மனம் கோணும் படி நடக்கக் கூடாது. ஏன் என்றால், அவர்கள் மனதில் தோன்றினால், அவர்கள் செய்த தவம் அந்த எண்ணத்தை உண்மையாக்கிவிடும்.


தவம் செய்யுங்கள். எல்லோருக்கும் நல்லது நினையுங்கள். உங்கள் தவத்தால் அவர்களுக்கு, நீங்கள் நினைத்தது போல நடக்கும் என்பது குறள்.



No comments:

Post a Comment