Saturday, June 1, 2024

திருக்குறள் - தவம் - தானமா? தவமா?

திருக்குறள் - தவம் - தானமா? தவமா?


தவம் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்றால் எல்லோரும் தவம் செய்ய வேண்டியதுதானே? ஏன் சிலர் மட்டும் செய்கிறார்கள், பலர் செய்வது இல்லை?  


வள்ளுவர் யோசிக்கிறார். இல்லறத்தில் இருந்து எவ்வளவோ கஷ்டப்படுவதை விட, கொஞ்ச நாள் தவம் செய்தால் பெரிய பலன்கள் கிடைக்கும் என்றால் எல்லோரும் தவம் செய்யலாமே ? ஏன் செய்வது இல்லை என்று. 


தவம் செய்யும் துறவிகளுக்கு உதவி செய்யும் ஆர்வத்தில் இல்லறத்தில் உள்ளவர்கள் தவம் செய்வதை மறந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்


பொருள் 


துறந்தார்க்குத் = முற்றும் துறந்த முனிவர்களுக்கு 


துப்புரவு வேண்டி  = அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து இவற்றை தருவதற்காக 


மறந்தார்கொல் =  தாங்கள் தவம் செய்வதை மறந்து விட்டார்கள் போல 


மற்றை யவர்கள் = இல்லறத்தில் இருக்கும் மற்றவர்கள் 


தவம் = தவம் (மறந்தார் கொல் தவம் என்று படிக்க வேண்டும்) 


இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தவம் செய்து அதில் வரும் இன்பத்தை விட தவம் செய்யும் முனிவர்களுக்கு உதவி செய்வதில் பெரிய இன்பம். அந்த இன்பத்திலேயே தாங்கள் தவம் செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் போல இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


ஒரு வேளை மறக்காமல் இருந்திருந்திருந்தால் அவர்களும் தவம் செய்யப் போய் இருப்பார்களோ என்னவோ என்பது தொக்கி நிற்கும் செய்தி. 


எனவே, ஒன்று தவம் செய்ய வேண்டும், இல்லை என்றால் தவம் செய்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


தானும் தவம் செய்யாமல், தவம் செய்பவர்களுக்கும் உதவாமல் இருப்பது சிறந்த குணம் அல்ல. 



No comments:

Post a Comment