Wednesday, June 5, 2024

பழமொழி - தோள் மேல் தலை வைத்து

 பழமொழி - தோள் மேல் தலை வைத்து 


ஆணின் காதலை படம் பிடிப்பது கடினமான செயல். ஆணின் காதல் என்பது அவனின் உணர்சிகளை விட அவனை சார்ந்தவர்களின் உணர்ச்சி பற்றியே இருக்கிறது. 


மனைவி, மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம், உடன் பிறப்புகளின் நலம் என்று போகும் அவன் காதல். நாலு காசு சம்பாதித்து தந்துவிட்டால் அது அவன் காதலை சொல்லும் என்பது அவன் எண்ணம். 


பழமொழி காட்டும் காதலன். 


காதலியை பிரிந்து ஏதோ ஒரு ஊரில் இருக்கிறான். வேலை நிமித்தம் அவளைப் பிரிந்து இருக்கிறான். 


அவளைப் பிரிந்த ஏக்கம் அவனுக்கு இல்லை. அவனைப் பிரிந்ததால் அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான். அவளின் வருத்தம் அவனுக்குப் பெரிதாகப் படுகிறது. என்னால் அல்லவா அவள் வருந்துகிறாள். அவள் வருந்தும்படி செய்து விட்டேனே என்று இவன் வருந்துகிறான். 


"மாலைப் பொழுதில், சிவந்த கண்களில் வழிகின்ற நீரை, தன்னுடைய மெலிந்த விரல்களால் தொட்டு, அதை சுண்டி விட்டு, அந்த நீர் பதிந்த விரலால் சுவற்றில் ஒன்று இரண்டு என்று கோடு போட்டு நான் அவளை விட்டுப் பிரிந்து எத்தனை நாள் இருக்கும் என்று நான் செய்த குற்றத்தை கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பாளோ"


என்று அவன் மனம் நினைக்கிறது. 


பாடல் 


செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்

மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்

நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்

தோள்வைத் தணைமேற் கிடந்து.


பொருள் 


செல்சுடர் = செல்கின்ற சுடர். மறைகின்ற சூரியன்.. மாலை வேளை. 


நோக்கிச் = பார்த்து 


சிதரரிக்கண் = சிதறிய, பரந்த, சிவந்த கண்கள் 


கொண்டநீர் = வழிந்த கண்ணீர் 


மெல்விரல் = மெலிந்த விரல்களால் 


ஊழ்தெறியா  = எடுத்து எறிந்து 


விம்மித் = விம்மல் கொண்டு 


தன் = தன்னுடைய 


மெல்விரலின் = மென்மையான விரலினால் 


நாள் வைத்து = எத்தனை நாள் ஆயிற்று என்று கணக்குப் போட்டு 


நங்குற்றம் = நான் அவளைப் பிரிந்து வந்த குற்றத்தை 


எண்ணுங்கொல் = நினைத்துப் பார்பாளோ 


அந்தோ = ஐயோ 


தன் = தன்னுடைய 


தோள் = தோளின் மேல் 


வைத் தணை = தலையை, தலையணை போல் வைத்து 


மேற் கிடந்து = அந்தக் கையின் மேல் கிடந்து 


கையை மடக்கி தலைக்கு வைத்து, சோகத்தில் கண்ணீர் விட்டு மெலிந்து கிடக்கிறாள். 


அவளின் சோகம் அவனை அப்படியே உருக வைக்கிறது. 


யாருக்காக நாம் வருந்துவது? அவளுக்காகவா? அவனுக்காகவா? 



No comments:

Post a Comment