Monday, May 7, 2012

கம்ப இராமாயணம் - அது தான் வந்துட்டோம்ல


கம்ப இராமாயணம் - எங்க போவோம்? 

கம்பன் படைத்த பாத்திரங்களில் சொல் வன்மை படைத்த பாத்திரங்கள் அனுமனும் விச்வாமித்ரனும்.

அவர்கள் வாயிலாக கம்பன் சொல்லில் விளையாடுகிறான்.

தசரதன் அரண்மனைக்கு விஸ்வாமித்திரன் வந்திருக்கிறான். "என்ன விஷயம்" என்று தசரதன் கேட்கிறான்.

விஸ்வாமித்திரன் பதில் சொல்கிறான்

"என்னை போன்ற முனிவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் எங்க போவோம் ?

சிவனிடம் போவோம், இல்லேன்னா திருமாலிடம் போவோம், இல்லேன்னா பிரமனிடம் போவோம்,
அதுவும் இல்லைனா இந்திரனிடம் போவோம், இல்லேனா அயோத்திக்குப் போவோம்" என்று வந்த காரியத்தை சொல்கிறான்.

அதாவது எனக்கு ஒரு கஷ்டம் இருக்கிறது, அதை தீர்க்க வேண்டி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து விட்டு இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறான்.


என் அனைய முனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையரானால்.
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும்.
பாற்கடலும். பதும பீடத்து
அந் நகரும். கற்பக நாட்டு அணி நகரும்.
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும். அல்லாது. புகல் உண்டோ?-
இகல் கடந்த புலவு வேலோய்!

என் அனைய = என்னை போன்ற

முனிவரரும் = முனிவர்களும்

இமையவரும் = வானவர்களும்

இடையூறு = துன்பம்

ஒன்று உடையரானால் = ஒன்று உண்டானால்

பல் நகமும் நகு = பல் தெரியும்படி பளிச்சென சிரிக்கும் (நகமும் = நகும் = சிரிக்கும்)

வெள்ளிப் பனிவரையும். = வெள்ளியை உருக்கி வார்த்தார் போல்
இருக்கும் பனிமலை (கைலாய மலை)

பாற்கடலும். = பாற்கடலும் (திருமால்)

பதும பீடத்து = தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் (பிரம்மாவும்)

அந் நகரும். = அந்த சத்ய லோகமும்

கற்பக = கற்பக மரம் உள்ள

நாட்டு அணி நகரும் = இந்திர லோகமும்

மணி மாட = மாடங்களில் உயர்ந்த மணிகள் பொருத்தப்பட்ட

அயோத்தி என்னும் = அயோத்தி என்ற

பொன் நகரும். = பொன் போன்ற நகரும்

அல்லாது. = அன்றி

புகல் உண்டோ? = வேறு போக்கிடம் ஏது?

இகல் =பகை

கடந்த = கடந்த, வென்ற

புலவு வேலோய்! = இரத்தம் தோய்ந்த வேலை உடையவனே

நீ எல்லாரையும் விட பெரிய ஆளு. உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என்று எவ்வளவு நாசுக்காக ஐஸ் வைக்கிறான்.



சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


அசதி ஆடல் என்று தமிழ் பக்தி இலக்கியத்தில் ஒரு பகுதி.

இறைவன் மேல் அதீத அன்பின் காரணமாக அவனை கிண்டல் செய்வது, கேலி செய்வது, நண்பன் போல் நினைத்து பாடுவது என்று உண்டு.

சுந்தரர் அப்படி பாடியவர்.

காளமேகம் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

இரட்டை புலவர்கள் பாடி இருக்கிறார்கள் ('கூறு சங்கு கொட்டோசை அல்லாமால் சோறு கண்ட மூளி யார் சொல்' என்று சிவன் கோவிலில் கொட்டு சப்தம் தான் இருக்கிறது, சோறு இல்லை என்று கேலி செய்து பாடி இருக்கிறார்கள்).

இராமன் கானகம் போனது மிக மிக துக்ககரமான ஒரு நிகழ்ச்சி. 

உலகமே அழுதது என்பான் கம்பன். 

தாயின் வயிற்றில் இருந்த கரு அழுதது என்பான்.

அந்த நிகழ்ச்சியை ஒரு கேலிப் பாட்டாக பாடுகிறார் இளங்கோ அடிகள். 

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சிலப்பதிகாரம் கம்ப இராமாயணத்திற்கு முன்னால் எழுதப்பட்ட காப்பியம்.

"இராமா, நீ ஏன் காட்டிலும் மேட்டிலும் கல்லும் முள்ளும் குத்த கானகம் போனாய் தெரியுமா ?

அன்று, மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, அவனை ஏமாற்றி, ஓரடியால் பூவுலகும், மற்றோரடியால் மேலுலகும் அளந்து பின் மூன்றாவது அடி அவன் தலை மேலேயே வைத்து, உன்னை நம்பி நீயே அளந்து எடுத்துக்கொள் என்றவனை நீ ஏமாற்றினாய்..அந்த பாவம் இன்று நீ, இந்த மண் எல்லாம் கால் நோவ நடக்கிறாய்" என்று இளங்கோ அடிகள் பாடுகிறார். 

(ஏன் கல்லும் முள்ளும் குத்திற்று? 

ரதன் பாதுகையை வாங்கி கொண்டு சென்று விட்டான். 

காலணி இல்லை.)


அந்தப் பாடல் 

Sunday, May 6, 2012

திரு ஞான சம்பந்தர் - பிறவி நோய்க்கு மருந்து


திரு ஞான சம்பந்தர் - பிறவி நோய்க்கு மருந்து


நல்லது நினைத்து தான் எல்லாம் தொடங்குகிறோம்.

நல்லதோடு சேர்ந்து சில அல்லாதனவும் நடக்கத்தான் செய்கிறது.

அமிழ்தம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள். 

அமிழ்தோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது. 

நல்லதை நமக்களித்து, அல்லாததை அவன் ஏற்றுக் கொண்டான்.

அவன் திருவடி பணிந்தால் இந்த பிறவி என்னும் நோய் தீரும் என்கிறார் திரு ஞான சம்பந்தர்

கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


யுத்த காண்டம். 

இராவணன் களம் புகுகிறான். தேரில் வருகிறான். 

இராமன் தரையில் நிற்கிறான். 

அனுமன் இராமனை தன் தோளில் ஏற்றி கொள்கிறான். 

சாதாரண நிகழ்வு தான். 

ஆனாலும் கம்பன் யார் யார் எல்லாம் எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டார்கள் இதனால் என்று கற்பனை செய்கிறான்.

உலகளந்த பெருமானை தன் தோளில் தாங்கிய அனுமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

திருமாலை தூக்கிச் சுமந்த கருடனுக்கு பொறாமை.

மாலோனை தாங்கிய ஆதி சேஷனுக்கு தலை நடுக்கம். 

நம்மால் தான் முடியும் என்றிருந்தோம், அனுமன் இராமனை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டானே என்று.

மாணியாய் உலகு அளந்த நாள்அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்மற்றை அனந்தனும்தலை நடுக்குற்றான்.

மாணியாய் = மாவலிக்காக

உலகு அளந்த நாள் = அன்று உலகு அளந்த நாள்

அவனுடை வடிவை = அவனுடைய வடிவை (குள்ள உருவமா ? உலகளந்த பெரிய உருவமா ?)

ஆணியாய் = ஆழமாக, தெளிவாக

உணர் மாருதி = உணர்ந்த மாருதி

அதிசயம் உற்றான் = அதிசயம் அடைந்தான். அவ்வளவு பெரிய ஆளை நம் தோளில் தூக்கி விட்டோமே என்று அவனுக்கு ஆச்சரியம்

காணி ஆகப் = காணி என்றால் பரம்பரை உரிமை. பிறப்பால் கிடைக்கும் உரிமை.

பண்டு உடையனாம் = முன்பே உடைய

ஒரு தனிக் கலுழன் = கலுழன் என்றால் கருடன். ஒரு தனிச் சிறப்பு மிக்க கருடனும்

நாணினான் = வெட்கம் அடைந்தான்

மற்றை அனந்தனும் = ஆதி சேடனும்

தலை நடுக்குற்றான். = தலை நடுக்கம் கொண்டான்


திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

திரு ஞான சம்பந்தர் - உள்ளம் கவர் கள்வன்

இவர் ஏழாம் நூன்றாண்டில் வாழ்ந்த நாயன்மார். 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

சீர்காழி இவர் பிறந்த ஊர். இவருக்குப் பின் வந்த ஆதி சங்கரர், அவருடைய சௌந்தர்ய லஹரியில் ஞான சம்பந்தரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பெரிய புராணத்தில் பாதி இவரைப் பற்றி பேசுகிறது. அதனால், பெரிய புராணத்தை பிள்ளை புராணம் என்று கூட கூறுவார்கள்.

இவர் எழுதிய பாடல்களின் தொகுப்புக்கு திருகடைகாப்பு என்று பெயர். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் இவர் எழுதியது. 

இவர் குழந்தையாக இருந்த போது, இவரின் தந்தை இவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை குளத்தின் படியில் இருத்திவிட்டு அவர் நீராடச் சென்றார்.

குழந்தை பசியால் அழுதது. 

குழந்தையின் பசி போக்க, உமா தேவி சிவனுடன் வந்து குழந்தைக்கு தன் மார்போடு அனைத்து பசி ஆற்றினாரம். 

தந்தை குளித்து வந்து பார்த்த போது, குழந்தையின் வாயின் ஓரம் பால் வடிந்து கொண்டு இருந்தது. 

யார் உனக்கு பால் தந்தது என்று கேட்ட போது வானை நோக்கி கை காட்டி, கீழ் கண்ட பாடலைப் பாடினார்.

மிக மிக அற்புதமான பாடல். 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி 
காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முன்னை நாள் உன்னை ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே


தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் காதில் அணியும் அணிகலன். அது எப்படி சிவனின் காதில் வரும் ? வந்தது அர்த்த நாரீஸ்வரர். ஆணும் பெண்ணும் கலந்த உருவம். தோடுடைய செவியன் என்றால் அது அர்த்த நாரியான சிவனை மட்டும் தான் குறிக்கும். என்ன ஒரு அழகான பதப் பிரயோகம்.

விடையேறியோர் = எருதின் மேல் ஏறி. ஒரு....

தூவெண்மதிசூடிக் = தூய்மையான வெண்மையான நிலவை சூடி

காடுடையசுட லைப்பொடிபூசி = காடு உடைய சுடலை பொடி பூசி = சுடு காட்டில் உள்ள சாம்பலை உடல் எங்கும் பூசி

யென் னுள்ளங்கவர் கள்வன் = என் உள்ளம் கவர் கள்வன். 

என் உள்ளத்தை கவர்ந்த கள்வன். 

இவரோ குழந்தை. இறவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. 

இறைவனை அடைய இவர் ஒன்றும் முயற்சி செய்யவில்லை. 

ஆனால் இறைவனே வந்து இவர் உள்ளத்தை கவர்ந்து சென்று விட்டான். 

திருடன் கேட்டு கொண்டா வந்து பொருளை எடுத்துச் செல்வான் ? கள்வன். 

"அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர்.

"யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே தர வேலவர் தந்ததினால்" என்பார் அருணகிரியார்

ஏடுடையமல ரான் = ஏடு உடைய மலரான் = இவர் பாடிய அந்த இடம் சீர்காழி. அதற்க்கு இன்னொரு பெயர் பிரமபுரம். பிரமன் சிவனை வழிபட்ட இடம். ஏடுடைய மலர் தாமரை. அதில் உள்ளவன் பிரமன்.

முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த = அவன் உன்னை முன்பு பணிந்து 

ஏத்த (புகழ). 

அருள் செய்த =அருள் செய்த 

பீடுடைய = பெருமை உடைய

பிரமாபுரம் மேவிய = பிரமாபுரத்தில் உள்ள

பெம்மா னிவனன்றே. = பெம்மான் இவனன்றே = பெம்மான் = பெரிய + அம்மான்.

அவன் அன்றே என்று சொல்லி இருக்கலாம். செய்யுள் தளை தட்டி இருக்காது. அவன் என்றால் எங்கோ இருப்பவன் என்று பொருள் படும். அவன் சேய்மைச் சுட்டு. 

இவன் அன்றே என்றால் இதோ இங்க இருக்கானே இவன் தான் என்று அருகில் இருப்பவரை கூறுவது. இவன் அண்மைச் சுட்டு.

Saturday, May 5, 2012

கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்


கம்ப இராமாயணம் - மனத்தால் அளந்தவள்


இராமனை கானகம் அனுப்பிவிட்டு திரும்பி வந்த குகன் ஒருபுறம் நிற்கிறான்.

மறுபுறம் பரதன், கோசலை, சுமித்தரை, கைகேயி நிற்கிறார்கள். 

முதலில் பரதன் மேல் சந்தேகப் பட்ட குகன் பின் அவனை "ஆயிரம் இராமர் நின் கேழ்வர் ஆவரோ" என்று பரதனை பாராட்டுகிறான்.

விதவை கோலத்தில் மூன்று பெண்கள், அன்பே உருவான மகன் பரதன், குகன்...எல்லோரும் ஒரு புள்ளியில். 

உணர்ச்சிகளின் குவியலான இடம்.

குகன் கைகேயியை பார்த்து "ஆர் இவர்" என்று கேட்கிறான்.

எப்படி ?

அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


அற்புத திருவந்தாதி - சுடுகாட்டுப் பேய்


சுடுகாட்டிலே ஒரு பேய்.

அது முதலில் சும்மா காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தது.

சும்மா இருக்க வேண்டியது தானே? 
அதுவோ பேய். 

பக்கத்தில் எரிந்து கொண்டு இருந்த ஒரு பிணத்தின் சிதையில் இருந்து ஒரு கொள்ளியை உருவியது.

அதில் இருந்த கரியை எடுத்து நசுக்கி, பொடியாக்கி முகத்தில் பூசிக் கொண்டது. 

எரிந்து கொண்டு இருந்த தணல் அல்லவா ? எங்கோ சூடு பட்டுக் கொண்டது.

சூடு தாங்கவில்லை. அதற்க்கு கோவம் வருகிறது. தலையை அங்கும் இங்கும் ஆட்டி கத்துகிறது. சிரிக்கிறது

அங்கும் இங்கும் துள்ளுகிறது. தீயை அணைக்க முயல்கிறது. 

அந்த சுடுகாட்டில் ஆடுகிறான், என் அப்பன் சிவன் என்கிறார் காரைக்கால் அம்மையார். 

யார் அந்த பேய் ?

நாம் தான் அந்தப் பேய். 

இந்த உலகம் தான் சுடுகாடு.

எங்கே சும்மா இருக்கிறோம் ? 

ஒவ்வொரு ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. 

அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையா இருக்கும். 

அப்புறம், சூடு தாங்காமல் எரியும்.

எல்லோரையும் கோவிக்கிறோம், கத்துகிறோம், 

எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

இத்தனயும் பார்த்து கொண்டு ஆனந்த நடனம் ஆடுகிறான் அவன்.

அர்த்தம் செறிந்த அந்த காரைக்கால் அம்மையாரின் பாடல் இதோ...

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி
கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையைவிள்ள 
எழுதி வெடுவெடென்னநக்கு வெருண்டு விலங்கு
பார்த்துத்துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 
முற்றுஞ் சுளிந்து பூழ்திஅள்ளி அவிக்க நின்றாடும்
 எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

கள்ளிக் கவட்டிடைக் = கள்ளிக் செடி புதருக்குள்



காலை நீட்டி = காலை நீட்டி



கடைக் கொள்ளி வாங்கி = கடைசியாக நீட்டி கொண்டு இருந்த கொள்ளியை எடுத்து


மசித்து மையை = அதை நசுக்கி, அதில் இருந்த கரியை எடுத்து



விள்ள எழுதி = விள்ள என்றால் எழுதும் மை. அந்த கரியால் எழுதி



வெடுவெடென்ன = பெரிய சிரிப்பு. அல்லது சூட்டில் உடல் வெடு வெடுவென நடுங்குதல்



நக்கு = உறுமி, ஆங்காரமாக சப்தமிட்டு



வெருண்டு = பயந்து



விலங்கு பார்த்துத் = குறுகிப் பார்த்து (தலையை ஆட்டி, கண்ணை சுருக்கிப் பார்த்து)



துள்ளிச் = அங்கும் இங்கும் துள்ளி, ஆட்டம் போட்டு, சூடு தாங்காமல் குதித்து



சுடலைச் = சுடுகாட்டில்



சுடுபிணத்தீச் = பிணத்தை எரிக்கின்ற தீயை



சுட்டிட முற்றுஞ் சுளிந்து = முழுவதும் அணைக்க

பூழ்தி அள்ளி அவிக்க = புழுதியை அள்ளி அந்த தீயின் மேல் போட்டு அதை அணைக்க


நின்றாடும் = அந்த சுடுகாட்டில் நின்று ஆடும்



எங்கள் அப்பனிடந் திரு ஆலங்காடே = எங்கள் தந்தை இருக்கும் திரு ஆலங்காடே