Wednesday, May 23, 2012

திருவிளையாடற் புராணம் - கடவுள் பெரியவனா ? சிறியவனா?


திருவிளையாடற் புராணம் - கடவுள் பெரியவனா ? சிறியவனா?


சிவனின் 64 விளையாடல்களை பற்றிய பாடல்களின் தொகுப்பு திரு விளையாடல் புராணம்.

பரஞ்சோதி முனிவர் எழுதியது.

16 அல்லது 17 ஆம் நூன்றாண்டில் எழுதப்பட்டது. 400 / 500 ஆண்டுகள் ஆகி விட்டது. 

இதில் இருந்து சில இனிய பாடல்களைப் பார்க்கலாம்.

கடவுள்.

அவன் அனைத்திற்குள்ளும் இருக்கிறான்.
அவனுக்குள் எல்லாம் இருக்கின்றன.

அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் என்று மணி வாசகர் சொன்ன மாதிரி.

அவன் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறான். அவனுக்குள் எல்லாம் இருக்கிறது என்றால் அவன் எப்படி இருப்பான் ?

பரஞ்சோதி முனிவர் காட்டுகிறார்....

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறம்பும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

அவன் மிகப் பெரியவன். இந்த அனைத்து அண்டங்களும் அவனுக்குள் அடங்கி இருக்கின்றன.

அவனுக்குள் அடங்கிய பின், அவனுடைய உருவத்தைப் பார்த்தால் இந்த அண்டங்கள் எல்லாம் அணு போல குட்டியாகத் தெரிகின்றன.

அவன் எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறான்.

அப்படி என்றால் அணுவுக்குள்ளும் இருப்பான் தானே ?

அப்படி அவன் அணுவுக்குள் போன பின்னே, அந்த அணு எல்லாம் அண்டம் மாதிரி பெரிதாகத் தெரியும்.

அவன் இந்த அனைத்து அண்டங்களுக்கும் உள்ளும், புறமும் இரண்டுமாய் இருக்கிறான்.

அப்படி இருந்தாலும், அவன் தனியாக இல்லை. இந்த அண்டங்களை எல்லாம் ஈன்ற அந்த சக்தி அவன் துணையாய் இருக்கிறாள் என்பர் அறிவுடைய நல்லவர்கள்.

அறிவும் இருக்கணும், நல்லவனாகவும் இருக்கணும். அப்பத்தான் அது புரியும்.

அண்டங்கள் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

அணுவாக =அணு மாதிரி சின்னதாகத் தெரிய

அணுக்களெல்லாம் = அணுவெல்லாம்

அண்டங்களாகப் = அண்டம் போல் பெரிதாய் தெரிய

பெரிதாய்ச் = பெரிதாகவும்

சிறிதாயினானும் = சிரியாதகவும்

அண்டங்கள் = இந்த உலகங்களுக்கு

உள்ளும் புறம்பும் = உள்ளும் புறமும்

கரியாயினானும் = சான்றாக உள்ளவனும்

அண்டங்கள் = இந்த உலகங்களை

ஈன்றாள் = பெற்றவள்

துணையென்பர் = அவனுக்கு துணை என்று சொல்வர்

அறிந்த நல்லோர் = அறிவுடைய நல்லவர்கள்


பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்


பெரிய புராணம் - ஆண் அடங்கும் இடம்

பனிக்காலம் காதலின் காலமோ ?

மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று கண்ணன் சொன்னது அதனால் தானோ?

துணை தேடும் காலம்.

காதலில் ஆண்டாள் கற்கண்டாய் உருகியதும் இந்த மார்கழிப் பனியில் தான்.


இங்கு அந்த குளிர் காலத்தில் வீடுகளில் என்ன நடக்கிறதென்று கூறுகிறார் சேக்கிழார்....

பனி பொழிகிறது. 

சூரியனும் வெளியே வரவில்லை.

தூரத்தில் மலைகள் எல்லாம் பனிப் போர்வை போத்தி இருக்கின்றன.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.

வெளியே போக யாருக்கு மனம் வரும்.

வீடுகளில் உள்ள மாடங்களில் பெண் புறாவும் ஆண் புறாவும் ஒன்றை ஒன்று தழுவி ஒடுங்கி ஒன்றாய் இருக்கின்றன.

வீட்டின் உள்ளே தங்கள் துணைவிகளோடு ஆண்கள் ஒன்றாய் இருந்தனர்.

சேக்கிழாரின் தமிழுக்கு உரை எழுதினால் அதன் இனிமை கெட்டு விடும் போல இருக்கிறது...அவ்வளவு இனிமையான பாடல்.
  

நீடியவப் பதிகளெலா நிரைமாடத்திறைகடொறும்
பேடையுடன் பவளக்காற் புறவொடுங்கப்பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார் துணைக்கலச வெம்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளு மணிமார்பு மடங்குவன.

சீர் பிரித்த பின்:

நீடிய அப் பதிகள் எல்லாம் நிரைமாடத்து, இறைகள் தொறும்
பேடையுடன் பவளக் கால் புறா ஒடுங்கபித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் 
ஆடவர் தம் பணைத் தோளும் மணி மார்பும் அடங்குவன


நீடிய = நீண்ட

அப் பதிகள் = அந்த ஊரில், அந்த இடத்தில் (எந்த இடம் என்றால் முந்தைய இரண்டு BLOG களைப் பாருங்கள்)

எல்லாம் = எல்லா இடத்தும்

நிரைமாடத்து, = நிறைந்த மாடங்களில்

இறைகள் தொறும்= இறை என்றால் கூண்டு மாதிரி ஒரு இடம் (இறப்பு என்று சொல்வது வழக்கம்)

பேடையுடன் = பெண் புறாவுடன்

பவளக் கால் = பவளம் போல் சிவந்த கால்களை உடைய

புறா ஒடுங்க = ஆண் புறா ஒடுங்க

பித்திகையின் = செண்பகம் போன்ற ஒரு வகை மலர்

தோடு அலர் = இதழ் மலரும்

மென் குழல் = மென்மையான குழலை கொண்ட

மடவார் = பெண்கள்

துணைக் கலச = இரண்டு கலசங்கள் ஒன்றாய் சேர்த்து வைத்தார் போன்ற

வெம் முலையுள் =

ஆடவர் தம் = ஆண்களின்

பணைத் தோளும் = பனை போன்ற கடினமான தோள்களும்

மணி மார்பும் = மணி போல ஒளி வீசும் மார்பும்

அடங்குவன = அடங்கின

பனியில் எது எல்லாம் அடங்கும் ?




Monday, May 21, 2012

பெரிய புராணம் - குளிரடிக்குதே


பெரிய புராணம் - குளிரடிக்குதே

சேக்கிழார் குளிர் பற்றி ஏன் இவ்வளவு சொல்கிறார் என்று அடுத்த blog இல் பார்க்கலாம்...

அதற்கு முன், எலும்புவரை எட்டிப் பாயும் குளிர் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்...

பயங்கர குளிர் காலம்.

நாள் எல்லாம் வாடைக் காற்று வீசிக் கொண்டு இருக்கிறது.

சோலைகளில் உள்ள செடி கொடிகளும் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

சூரியன் கூட குளிரில் நடுங்கி அப்பப்ப வருவதும் போவதுமாய் இருக்கிறான் என்றால் எவ்வளவு குளிர் என்று பார்த்துகொள்ளுங்கள்.

சேக்கிழார் ஏதோ Aarctic , Antaractic range க்கு build up தருகிறார்...தமிழ் நாட்டில் அடிக்கும் குளிருக்கு...

வாடை காற்று வீசும் அந்த பாடல்....
   

பெரிய புராணம் - பனியில் நனைந்த மலை மகள்


பெரிய புராணம் - பனியில் நனைந்த மலை மகள் 

தமிழ் இலக்கியத்தில் வர்ணைகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதலாம்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பனி விழும் மலைகளை பற்றி வர்ணிக்கிறார்.

படித்துப் பாருங்கள், காதோரம் குளிர் அடிக்கும்....

நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


நந்திக் கலம்பகம் - மழைக் காலம்


Balcony இல் உட்கார்ந்து வெளியே பார்க்கிறாள்.

அருகில் ஒரு பூங்கா.

மழை லேசாகப் பெய்கிறது.

பூங்காவில் உள்ள மலர்கள் எல்லாம் மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன.

அங்கு ஒரு மயில் மழையில் நனைந்து தோகை ஈரமாகி, குளிரில் உடல் வெட வெடக்க நிற்கிறது.

அவளுடைய காதலனை நினைக்கிறாள்.

அவன் அருகில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஏங்குகிறாள்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை கடந்து நம் மனதில் மழை அடிக்கும் அந்தப் பாடல்....

Sunday, May 20, 2012

நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


ஒரு நாள் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் (உ.வே.சா.) இரவு உணவு உண்ட பின் மாடியில் காற்றாட அமர்ந்திருந்தார்.

தூரத்தில் ஒரு பிச்சைக்காரன்

"ஊரைச் சுடுமோ, உலகம் தனை சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன்"

என்று பாடியது காதில் விழுந்தது.

அடுத்த வரி கேட்பதற்குள் அந்த பிச்சைக்காரன் வேறு தெருவுக்குள் நுழைந்து விட்டான்.

உ.வே. சா யோசிக்கிறார். எது ஊரையும், உலகையும் சுடும் என்று.

செய்த பாவமா ? எது என்று யோசித்தார். விடை கிடைக்கவில்லை.

சரி, அந்த பிச்சைக்காரனை தேடி கண்டு பிடிக்கலாம் என்று கிளம்பி விட்டார்.

அந்த பிச்சைக்காரன் பின்னால் தெரு தெருவாய் அலைந்தார்.

அந்த பிச்சைகாரனோ முதல் இரண்டு வரி தாண்டி பாடுவதாய் இல்லை.

நேரே அவனிடமே கேட்டு விட்டார்...அடுத்த இரண்டு வரிகளை பாடும்படி.

"பாட்டா...பசி உயிர் போகிறது என்றான் அந்த பிச்சைக்காரன்"

அவனுக்கு உணவு வாங்கித் தந்து அடுத்த இரண்டு வரியும் என்ன என்று குறித்துக்கொண்டு வந்தார்.

நந்தி கலம்பகத்தில் வரும் அந்த பாடல்....


காதலனை பிரிந்து தனித்து இருக்கிறாள் காதலி.

தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருக்கிறாள்.

நிலவைப் பார்க்கிறாள். அது கொதிக்கிறது.

இந்த நிலவு நம்மை மட்டும் தான் சுடுகிறதா இல்லை எல்லாரையும் சுடுகிறதா என்று யோசிக்கிறாள்...



ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா.

ஊரைச் சுடுமோ = இந்த ஊர் எல்லாம் சுடுமோ (என்றால் இந்த ஊரில் உள்ள எல்லோரையும் என்று பொருள்)

உலகம் தனைச்சுடுமோ = இந்த ஊர் மட்டும் அல்ல, உலகில் உள்ள எல்லோரையும் சுடுமோ?

யாரைச் சுடுமோ அறிகிலேன் = யார் யாரை எல்லாம் சுடுமோ, தெரியவில்லை

நேரே = நேரில் உள்ள இந்த நிலா

பொருப்பு = மலை முகடு, மலைத் தொடர்ச்சி போன்ற

வட்ட மானமுலைப் =

பூவையரே = பூவை சூடும் பெண்களே

இந்த நெருப்புவட்ட மான நிலா. = இந்த நெருப்பு வட்டமான நிலா


Do u have any suggestions on this blog ?

Do you have any suggestions ?

I have posted 136 blog entries of various poems from Tamil Literature.

What do you think about this blog ? Do you like it ? If so, what you like ?

If you do not like, what you do not like ?

Can you give me some suggestions to improve this blog?

You can post your views on the comments box below.

I made the comments anonymous. You can be rest assured of your privacy.

If you prefer, you can send your comments to my private e mail id rethin@hotmail.com.

Thanks for reading, for your feedback and your time.