Saturday, June 8, 2013

திருக்குறள் - உயரும் வழி

திருக்குறள் - உயரும் வழி 


வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பாத ஆள் யார் ? எல்லா உயிர்களும் உயர்வையே விரும்புகின்றன.

நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நல்ல புகழ் பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள்.

ஆனால் இந்த படிப்பு, பணம்,புகழ் எல்லாம் எப்படி வரும் ?

ஒரு நாள் இந்த கேள்வியை ஒரு மாணவன் திருவள்ளுவரிடம் கேட்டான்.

வள்ளுவர்: வா, நாம் அப்படி நடந்து கொண்டே இதை பற்றி பேசுவோம் என்றார்

இருவரும் அப்படியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அவர்கள் ஒரு குளத்தை கண்டார்கள். அதில் கொஞ்சம் தாமரை, அல்லி மலர்கள் இருந்தன.

வள்ளுவர்: தம்பி, இந்த குளம் எவ்வளவு ஆழம் இருக்கும் ?

மாணவன்: ஐயா ஒரு பத்து பதினைந்து அடி இருக்கும்.

வ: அப்படி என்றால் இந்த தாமரை செடிகளின் உயரம் எவ்வளவு இருக்கும் ?

மா: ஐயா, அதுவும் பத்து பதினைந்து அடி தான் இருக்கும்.

வ: சரி, இந்த தாமரையை இன்னும் கொஞ்சம் உயரமாக ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும் ?

மா: ஐயா, தாமரை கொடி போன்றது. அதை கொஞ்சம் மேலே தூக்கி, ஒரு கம்பில்  கட்டி வைத்து விட்டால் அதை பற்றிக் கொண்டு அது வளர்ந்து உயரமாகி விடும்


வ: சிரித்துக் கொண்டே, சரி, செய்து பார் என்றார்.

மாணவனும் குளத்தில் இறங்கி ஒரு தாமரை மலரை பிடித்து கொஞ்சம் லேசாக இழுத்தான்...அது கையோடு அறுந்து வந்து விட்டது. அதை தூக்கி குளத்தில் எறிந்து விட்டு, இன்னொரு பூவை அதே போல் சிறிது எச்சரிக்கையோடு இழுத்தான் . அதுவும் அதே போல் அறுந்து வந்து விட்டது.

மா: ஐயா, இது சரி வரவில்லை. நாளை இது பற்றி யோசித்து வந்து சொல்லுகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான்


மறு நாள், இருவரும் அதே குளத்திற்கு சென்றார்கள்.

முதல் நாள் பெய்த மழையில் குளத்தில் நாலைந்து அடி நீர் ஏறி இருந்தது. மலர்கள் எல்லாம்  அவ்வளவு தூரம் உயர்ந்து இருந்தது.

மாணவன் வள்ளுவரைப்  பார்த்தான்.

வள்ளுவர் அவனைப் பார்த்து சிரித்தார்.

தம்பி, நீர் எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவு தான் பூக்களின் உயரம் இருக்கும்.

மனிதனை இரண்டாக பிரித்துக் கொள்.

அகம். புறம் என்று .

அகம் எவ்வளவு வளர்கிறதோ, அந்த அளவுதான் புறம் வளரும்.

அகம் என்றால் - மனம். உன் மனம் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுதான் உன் வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கும்..

நிறைய பேர் உயர்வு பெற்றோர் மூலம், உறவினர் மூலம், நண்பர்கள் மூலம், இப்படி எங்கிருந்தோ வெளியில் இருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உயர்வு வெளியில் இருந்து வராது.

உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

மனம் உயர, வாழ்வு உயரும்.

அக வாழ்க்கை உயர, புற வாழக்கை உயரும். 

பாடல்

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு

பொருள் 

வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனைய உயர்வு.



Friday, June 7, 2013

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே

அபிராமி அந்தாதி - சிந்துர வண்ணப் பெண்ணே 


என் தலையில் இருப்பது எப்போதும் உன் பொன் போன்ற திருவடிகளே.

என் சிந்தனையில் எப்போதும் நிலைத்து இருப்பது உன் திரு மந்திரமே

சிவந்த பெண்ணே

உன்னுடைய அடியார்களுடன் கூடி முறையாக நான் பண்ணியது உன்னுடைய பரம ஆகம பக்தியே.

பாடல்


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே 
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- 
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே 
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

பொருள்


பிரகலாதன் - இறை உணர்வு - உணரத் தேயுமோ ?

பிரகலாதன் - இறை உணர்வு - உணரத் தேயுமோ ?




' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு,
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ?

ஒரு பொருளை நாம் மனதால் உணர முடியும் என்றால் அது நம் மனதுக்கு உட்பட்டது. அது நம் மனதிற்குள் அடங்கி விடுகிறது. 

ஏன் எல்லாம் நம் மனதிர்குள் அடங்க வேண்டும் ? அப்படி ஒன்றும் விதி இல்லையே ?

இறைவன் நம் நினைவுக்கும் மனதுக்கும் எட்டாதவன். 

அவன் மூன்று உலகும் ஆய், மூன்று குணங்களும் ஆய், எல்லா பொருளும் ஆய், எல்லோருமாய் ஆய், கணக்கில் அடங்காத அளவு வேறு வேறு உருவாக ஆகி, நீங்குதல் இல்லாத ஒரே நிலையில் உள்ளவன். 

அவனை தேவரும், முனிவரும் மனதிற்குள் அடங்கும்படி தேய்ந்து சின்னதாக ஆகாதவன். 

' "மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு, 
ஓவல்இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும்உணரத் தேயுமோ ? 


பொருள் 

திருக்குறள் - எண்ணிய எண்ணியாங்கு எய்துப

திருக்குறள் - எண்ணிய எண்ணியாங்கு எய்துப 




எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதை, அவர்கள் நினைத்தபடியே அடைவார்கள்.

யார் அடைவார்கள் ?

தாங்கள் எண்ணியதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை உறுதியாக செய்பவர்கள்.

ஒவ்வொரு குறளும் ஏழு வார்த்தைகள். அதில் தேவை இல்லாத வார்த்தைகளை வள்ளுவர் போடுவாரா ?

இந்த குறளில் எண்ணியாங்கு என்ற வார்த்தை எதற்கு ?

எண்ணிய எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்று சொன்னால் என்ன தவறு வந்து விடும் ?

எண்ணியாங்கு என்ற வார்த்தை ஏதோ சொல்ல வருகிறது.

சில உதாரணங்களை பார்ப்போம்.

சில பேர் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைப்பார்கள். பணக்காரன் என்றால்  எவ்வளவு ? பெரிய பங்களா ? சில பல ஏக்கர் நிலம் ? நகை நட்டு ? பேங்க் பாலன்ஸ் ? பில் கேட்ஸ் ஐ விட பணக்காரனாக வேண்டும் .... இப்படி எது எல்லாம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று  நினைத்தார்களோ அப்படி.

நல்லா படிக்கவேண்டும் நினைத்தால் எவ்வளவு ? பள்ளியிலேயே முதல் மாணவன் , மாநிலத்திலேயே முதல் மாணவன், இப்படி எப்படி நினைக்கிறார்களோ.

அதாவது நினைவு, கனவு, குறிக்கோள் பொத்தாம் பொதுவாக இல்லாமல் எது வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், அதை அடைய என்ன என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது  எளிது.

திட்டமிட்டால்,, அதன் படி உறுதியாக , அதனை செயல் படுத்த வேண்டும்.

அப்படி உறுதியாக செயல் படுத்தினால், அதை அடைய முடியும்

ஒரு வார்த்தை - எவ்வளவு அர்த்தம்!

Thursday, June 6, 2013

நல்வழி - விண்டாரைக் கொண்டாடும் வீடு

நல்வழி - விண்டாரைக்  கொண்டாடும் வீடு 


அவ்வையார்.

தமிழ் இலக்கிய உலகை கலக்கிய பெண் புலவர்.

ஆணாதிக்க சமுதாயத்தில், அதிலும், ஆண் புலவர்க்கள் நிறைந்திருந்த அந்த காலத்தில் (ஏன் இந்தக் காலத்திலும் தான்) இலக்கிய உலகை தன் பாட்டால் கலக்கிய பெண்.

மிக மிக எளிமையான பாடல்கள். அர்த்த செறிவு நிறைந்த பாடல்கள். நீங்கள் உங்கள் பள்ளி நாட்களில் இதில் சிலவற்றை படித்தும்  இருக்கலாம்.

தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும் உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.

வாழ்வில் மிகப் பெரிய வலி எது தெரியுமா - மரண வலி. மரணம் வரும் நேரம் இந்த உடல் அனுபவிக்கும் வலி. மூச்சு திணறும். இதயம் துடிக்க தவிக்கும். நாக்கு குழறும். நினவு வந்து வந்து போகும். கண் மங்கும்.

அது எல்லாவற்றிலும் பெரிய வலி. அந்த வலியில் இருந்து நீங்கள் துன்பப் படாமல் இருக்க வேண்டுமா ?

இந்த பாடலை படியுங்கள். அதில் சொன்ன மாதிரி செய்யுங்கள்.

பாடல்
 

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பொருள்

பிரகலாதன் இறை தத்துவம் - வேறு உணர் பித்தர்

பிரகலாதன் இறை தத்துவம் - வேறு உணர் பித்தர் 


வேதங்களின் முடிந்த முடிவுகளுக்கு அப்பாற்பட்டவன் அவன்.

அவனை யார் அறிவார்கள் ?

தன்னை தான் அறிந்த வித்தகர்கள் அவனை அறிவார்கள்

வேதம் என்ன சொல்லுகிறது ?

அவன் தான் ஆதி, அவன் தான் அந்தம், அவனே எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிப்பவன் என்று வேதம் கூறுகிறது.

அப்படி அல்ல என்று சொல்லும் பித்தர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பித்தர்கள் வீடு பேறு பெற மாட்டார்கள்.

பாடல்

சித்து என அரு மறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்
வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.


பொருள் 

Wednesday, June 5, 2013

பிரகலாதன் இறை தத்துவம் - பின் இலன் முன் இலன்

பிரகலாதன் இறை தத்துவம் - பின் இலன் முன் இலன் 


பிரகலாதன் இறைவனின் தன்மைகளை பற்றி கூறிக் கொண்டு போகிறான்.

ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை ஆழமான சிந்தனை கம்பனுக்கு இருந்திருக்கிறது. இது ஒரு தனிப் பட்ட மனிதனின் சிந்தனையாக இருந்திருக்க முடியாது. அவன் இருந்த காலத்தில் இந்த கேள்விகளும், இவற்றிற்கான பல் வேறு பதில்களும் இருந்திருக்கும்.

இந்த தமிழ் சமுதாயம் எவ்வளவு ஆழமாக சிந்திருக்கிறது. சிந்தித்து சிந்தித்து சில விடைகளை கண்டிருக்கிறது.

இறை சிந்தனை அவற்றில் ஒன்று.

இந்த உலகம் எப்போது , எங்கிருந்து வந்தது ?

இந்த உலகத்திற்கு தோற்றம் இருக்கும் என்றால், அதற்கு முடிவும் இருக்கும் அல்லவா ?

தோன்றுவதற்கு முன்னால் அது எங்கே எப்படி இருந்தது ?

முடியும் என்றால், முடிந்த பின்னால் எங்கே எப்படி முடியும் ?

இந்த உலகம் தானே தோன்றவில்லை என்றால் யார் தோற்றுவித்தது ?

அப்படி யாராவது தோற்றி வித்தார்கள் என்றால் அவன் அல்லது எது எப்போது தோன்றியது ?

சரி, இந்த உலகம் தோன்றி விட்டது...அது எப்படி நிலைத்து இருக்கிறது ? ஏன் அது தோன்றிய மாதிரியே மறைந்து விடவில்லை ?

இந்த உலகம் எல்லாம் அடிப்படையில் அணுவால் ஆனது என்று அறிவியல் கண்டு சொன்னது. பின் அணு அல்ல அடிப்படை, அதற்க்கும் கீழ் சில துகள்கள் இருக்கின்றன -- எலெக்ட்ரான், ப்ரோடான் போன்ற துகள்கள் இருக்கின்றன என்று சொன்னது. பின், இல்லை அது கூட அல்ல, அதற்கும் கீழே சில துகள்கள் இருக்கின்றன போசான், குவார்க் போன்ற துகள்கள் இருக்கின்றன என்கிறது.  இப்படியே போய்  கொண்டு இருந்தால் எதில் போய் முடியும் ? ஒரு வேளை இந்த உலகம் முழுதும் ஏதோ ஒரே ஒரு பொருளால் ஆனதுதான் என்ற முடிவுக்கு வருமோ ?

இது ஒரு புறம் இருக்க, பொருள்கள் எல்லாம் சக்தியால் ஆனது என்று ஐன்ஸ்டீன் நிருபித்தார். எல்லாம் ஒரே சக்தியால் ஆனது என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட முடிவு. அதில் ஒரு சந்தேகமும் இல்லை.

அப்படி என்றால் அந்த சக்தி எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறது. அந்த சக்தியால் தான் இந்த உலகம் உருவாக்கப் பட்டு இருக்கிறது. அந்த சக்தி எல்லா பொருள்களுக்கும் உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது, அதுவே பொருளாகவும் இருக்கிறது. பொருள்கள் சிதைந்து மீண்டும் சக்த்தியாக மாறி விடுகின்றன. இது அறிவியலின் இன்றைய சித்தாந்தம்.

இந்த உலகம் பெரு வெடிப்பில் (Big Bang ) இருந்து வெடித்து சிதறியது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. அந்த பெரு வெடிப்புக்குப் முன்னால் என்ன நடந்தது என்றால், அதை இந்த அறிவியல் அறியவே முடியாது என்று அறிவியல் நிருபிக்கிறது. மனிதனால் நிச்சயமாக தொடக்த்திற்கு முன்னால் என்ன நடந்தது என்று அறியவே முடியாது. இது சர்வ நிச்சயம்.

இந்த கருத்தை கம்பனும் சொல்கிறான்.


இந்த பாடலைப் பாருங்கள். பாடலின் சிந்தனை வீச்சும், ஆழமும், அதுக்கு மேலே தெரியலையே என்று ஒத்துக் கொள்ளும் நேர்மையும் சிலிர்க்க வைக்கும்

பாடல்


' "தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை -
தன்னுளே நின்று, தான் அவற்றுள் தங்குவான்,
பின் இலன் முன் இலன், ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ ?


பொருள்