Tuesday, October 22, 2013

திருக்குறள் - வாயால் சொலல்

திருக்குறள் - வாயால் சொலல் 


எப்பவாவது யாரையாவது திட்டி இருக்கிறீர்களா ? எப்போதாவது பொய் சொல்லி இருக்கிறீர்களா ? பிறர் மனம் வருந்தும்படி பேசி இருக்கிறீர்களா ?

அவை எல்லாம் ஒழுக்கக் குறைவான செயலகள். 

ஒழுக்கம் உடையவர்கள் மறந்து கூட தீய சொற்களை வாயால் சொல்ல மாட்டார்கள். 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயால் சொலல்.

பொருள்


ஒழுக்க முடையவர்க்கு = ஒழுக்கம் உள்ளவர்களுக்கு 
ஒல்லாவே  = முடியாதே 
தீய  = தீய சொற்கள் 
வழுக்கியும் வாயால் சொலல் = தவறிக் கூட வாயால் சொல்லுதல் 

ஒழுக்கம் உடையவர்கள் நினைத்த்தால் கூட முடியாது தவறகா பேசுவது. வழுக்குதல் என்றால் தெரியாமல் , தன் கட்டுப் பாடு இல்லாமல் நடப்பது. அப்படி கூட நடக்காதாம். 

 

Sunday, October 20, 2013

திருக்குறள் - நல்லதும் தீயதும்

திருக்குறள் - நல்லதும் தீயதும் 


திருக்குறளில் சில குறள்கள் "அட" என்று ஆச்சரியப் பட வைக்கும். அப்படிப் பட்ட குறள் ஒன்று. 

செல்வம் செய்வதற்கு நல்லவையெல்லாம் தீயவை ஆகும் ; தீயவை எல்லாம் நல்லவை ஆகும் என்கிறார் வள்ளுவர். 

அதாவது, தீமை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியாது என்கிறார். அது மட்டும் அல்ல, நல்ல வழியில் செல்வம் சேர்க்க நினைத்தால், அது கூட தீயதாக போய் முடியும் என்கிறார். 

நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்

நல்லவை யெல்லாஅம் தீயவாம் = நல்லவை எல்லாம் தீயதாய் முடியும் 

தீயவும் = தீமைகளும் 

நல்லவாம் = நல்லாதாகும் 

செல்வம் செயற்கு = செல்வம் செய்வதற்கு 

நல்லதே செய்து, நேர்மையான வழியில் சென்று செல்வம் சேர்க்க நினைத்தாலும் அது தீயதாய் போய் விடும். 

தீமை செய்தாலும், அது நல்லதாக முடியும் செல்வம் சேர்க்கும் போது.

மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள். 

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம்

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம் 


இராமாயணம் போன்ற காப்பியங்களை படிக்கும் போது , கதை, அதன் போக்கு, கதை சொல்லும் பாங்கு, பாத்திர படைப்பு என்று இரசிக்கும் போது, அவற்றில் இருந்து சில பாடங்களும் கற்றுக் கொள்ளலாம். 

காப்பியங்கள் சம்பவங்களை சற்று மிகைப் படுத்தி கூறினாலும், அது நம் மனதில் படியா வைக்க கையாளும் ஒரு யுக்தி என்று கொள்ள வேண்டும். 

நமக்கு ஒரு சிக்கல் வந்தால், இந்த சூழ்நிலையில் இராமன் இருந்தால் என்ன செய்திருப்பான், சீதை இருந்திருந்தால் எனன் செய்திருப்பாள் என்று சிந்திக்கும்போது அந்த சிந்தனைகள் நமக்கு வழி காட்டியாக அமையலாம். 

வீட்டில், சில சமயம் சிக்கல்கள் வரலாம். வரும். 

அந்த மாதிரி சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் சிக்கலில் உள்ளவர்களை திட்டுவதோ, பயப் படுத்துவதோ கூடாது. அது அந்த சிக்கல்களை மேலும் அதிகப் படுத்திவிடும். 

சில வீடுகளில் , பிரசாய் என்று வந்து விட்டால் , அதை விவாதிக்கிறேன் பேர்வழி என்று கணவனும் மனைவியும் மேலும் சண்டை போட்டு அந்த பிரச்சனையோடு கணவன் மனைவி பிரச்சனையும் சேர்த்த்து விடுவார்கள். 

பிரச்சனையை எப்படி அணுகுவது, எப்படி விவாதிப்பது, எப்படி தீர்வு காண்பது என்று கம்பன் நமக்கு பாடம் எடுக்கிறான். 

இராமன், முடி புனைவது மாறிப் போகிறது. காட்டிற்கு போக வேண்டும். 

இது பிரச்னை. 

இதில் மிகவும் பாதிக்கப்பட போபவர்கள் யார் யார் ?

கோசலை (தாய்), சீதை (மனைவி), இலக்குவன் (தம்பி)...

இயவர்களிடம் இராமன் இந்த பிர்ச்சனையை எப்படி எடுத்துச் சொல்லி சமாளிக்கிறான் என்று பார்ப்போம். 

அதற்கு முன்னால் சற்று யோசித்துப் பாருங்கள் 

கோசலை வருந்துவாள், தயரதனிடம் அவள் சண்டை பிடிக்கலாம்....

சீதை இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம்....

இலக்குவன் சண்டை போடலாம். 

கதை எப்படி போனது என்று நமக்குத் தெரியும்....கதை வேறு மாதிரியும் போய் இருக்கலாம்...அப்படி போகாமல் இராமன் எப்படி மாற்றினான் என்று பார்ப்போம். 

அதற்கு அவனுக்கு மற்றவர்கள் எப்படி துணை செய்தார்கள், அல்லது அவனுக்கு தடையாக இருந்தார்கள்...என்றெல்லாம் நாம் பார்க்கப் போகிறோம்...

Saturday, October 19, 2013

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான்

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான் 


புகழ் அடைவதற்கு தானம் செய்வது சிறந்த வழி. தானம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல. நல்ல சொல், கல்வி தானம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

திருக்குறளில் புகழ் என்று ஒரு அதிகாரம். அது ஈகை என்ற அதிகாரத்தின் பின் வருகிறது. வள்ளுவர் ஏன் அப்படி வைத்தார் என்பதற்கு பரிமேலழகர் உரை எழுதுகிறார் 

"புகழ் என்பது இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது" 

ஈதலினால் புகழ் வரும். 

கர்ணனுக்கு எவ்வளவுதான் வலிமை இருந்தாலும், வித்தை இருந்தாலும் தன் குலம் பற்றி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. தகப்பன் பெயர் தெரியாதவன் என்று அவன் மேல் உள்ள பழி இருந்து கொண்டே இருந்தது. உள்ளுக்குள் அது அவனை அரித்துக் கொண்டு இருந்தது. 

அந்த பழியை போக்கி, புகழ் அடைய கர்ணன் தானம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது அவனது இயற்கை குணமாகி விட்டது. கடைசியில், உயிர் போகும் நேரத்தில், செய்த தானம் அத்னையும் கண்ணனுக்கு தானம் செய்தான். 

இது உண்மையா ? கர்ணன் தன் பழி போக்கவா தானம் செய்தான் ? அது அவனது பிறவி குணம் இல்லையா ? பழி போக்கவா தானம் செய்தான் ?

வில்லி புத்துராழ்வார் சொல்கிறார்..."புறம் சுவர் கோலம் செய்வான்" என்று. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கு , வெளி சுவரை அழகு படுத்தி வைப்பது மாதிரி, என்று அர்த்தம். 

துரியோதனன் சபை. கண்ணன் தூது வரப் போகிறான் என்ற செய்தி வந்திருக்கிறது. என்ன செய்வது என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது கர்ணன் சொல்கிறான் என்று ஆரம்பிக்கிறார் வில்லியார்...

பாடல் 

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து, எதிர்ந்த வேந்தர் 
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில், 
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும் 
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:

பொருள் 

இறைஞ்சிய = அடி பணிந்த 

வேந்தர்க்கு = அரசர்களுக்கு 

எல்லாம் = எல்லோருக்கும் 

இருப்பு அளித்து = (துரியோதனன்) அவர்கள் அமர இருக்கை தந்து 

எதிர்ந்த வேந்தர்  = துரியோதனை எதிர்த்த வேந்தர்களின் 

நிறம் செறி குருதி வேலான் = மார்பில் தன் வேலைப் பாய்ச்சி, அதனால் சிவந்த வேலைக் கொண்ட துரியோதான் 

நினைவினோடு இருந்தபோதில் = சிந்தித்துக் கொண்டு இருந்த போது  

அறம் செறி தானம் = அறம் நிறைந்த தானம். அதாவாது கெட்ட காரியத்துக்கு தானம் செய்து உதவ மாட்டான் கர்ணன் 

வண்மை = வீரம் அல்லது தியாகம் 

அளவிலாது அளித்து = அளவு இல்லாமல் அளித்து. இவ்வளவு தானம் செய்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள மாட்டான் கர்ணன். 

நாளும் = ஒவ்வொரு நாளும் 

புறம்  சுவர் கோலம் செய்வான் = வெளிச் சுவரை அழகு படுத்தும் கர்ணன் 

பூபதிக்கு உரைக்கலுற்றான் = அரசனான துரியோதனுக்கு சொல்லத் தொடங்கினான் 

Friday, October 18, 2013

திருக்குறள் - தூக்கம்

திருக்குறள் - தூக்கம் 


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

தூங்கிச் செயற்பால தூங்குக = தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் செய்ய வேண்டும் 
தூங்காது செய்யும் வினை, தூங்கற்க = தூங்காமல் செய்யும் வேலைகளை, தூங்காமல் செய்ய வேண்டும். 

அது என்ன தூங்கிச் செய்வது, தூங்காமால் செய்வது ?

வேலைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம் - நல்லவை, கெட்டவை என்று. 

கெட்ட காரியம் மனதில் தோன்றினால் , அதைத் தள்ளிப் போட வேண்டும். உடனே செய்து விடக் கூடாது. ஆறுவது சினம் என்றாள் அவ்வை. ஆறப் போட்டால் ஆறி விடும் சினம். கோபம் வந்தவுடன் ஏதாவது எழுதுவது, பேசுவது கூடாது. கொஞ்சம் தள்ளிப் போட வேண்டும். 

வர்ற ஆத்திரத்திக்கு அவனை அப்படியே வெட்டிப் போடலாம் என்று தோன்றும். உடனே செய்து விடக் கூடாது. தள்ளிப் போட்டால் அந்த ஆத்திரம் வடியும்.

அழகான பெண் தான்....தொடலாம் போல தோணும்...தொட்டு விடலாமா ?

அதேப் போல நல்ல எண்ணம், காரியம் தோன்றினால் உடனே செய்து விட வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. 

படிக்க வேண்டும் என்று நினைத்தால், உடனே படிக்க வேண்டும். அப்புறம் நாளைக்கு படிக்கலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. 

ஒன்றே செய்யவும், நன்றே செய்யவும் வேண்டும், அதுவும் இன்றே செய்ய வேண்டும், அதுவும் இன்னெ செய்ய வேண்டும். 

எந்த வேலையும் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் செய்ய வேண்டும். 

எல்லா வேலையும் உடனே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

Wednesday, October 16, 2013

இராமாயணம் - விதியும் தருமமும்

இராமாயணம் - விதியும் தருமமும் 


பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான். 

தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள். 

முன்னால் வீசி விரும் கவரி இல்லை. 

பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை. 
 
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள். 

இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது. 

விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது...வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது. 

விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது...இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது. 

பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது. 

இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான். 

பாடல் 

குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

பொருள் 

குழைக்கின்ற கவரி இன்றி = வீசப் படும் கவரி இல்லாமல் 
கொற்ற வெண்குடையும் இன்றி, = வெண் கொற்ற குடையும் இல்லாமல் 
இழைக்கின்ற விதி முன் செல்ல = வரைக்கின்ற விதி முன்னால் செல்ல 
தருமம் பின் இரங்கி ஏக, = தர்மம் பின்னால் இருந்து ஏங்க 
‘மழைக்குன்றம் அனையான் = மழை மேகங்களால் சூழப் பட்ட மலையை போன்ற இராமன் 
மௌலி  = மணி முடி , கிரீடம் 
கவித்தனன் வரும்’ என்று என்று = சூடி வரும் என்று 
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் = மகிழ்வோடு இருந்த (கோசலை யின் முன் 
ஒரு தமியன் சென்றான் = தனியாக சென்று நின்றான் 


குழைக்கின்ற கவரி இன்றி,
     கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
     தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
     கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
     ஒரு தமியன் சென்றான்.

Tuesday, October 15, 2013

இராமாயணம் - கணையாழியின் கதை

இராமாயணம் - கணையாழியின் கதை 


இராமன் கணையாழியை சீதையை காணச் சென்ற அனுமானிடம் கொடுத்து அனுப்பினான். சீதை அதைக் கண்டு மகிழ்ந்தாள். பின் , திரும்பி வந்த அனுமன் அந்த கணையாழியை இராமனிடம் திருப்பி தந்ததாக தெரியவில்லை. 

பதிநான்கு வருடம் முடிந்து இராமன் அயோத்தி வர வேண்டும். வரவில்லை. பரதன் தீயில் விழுந்து உயிரை விடுவேன் என்று துணிகிறான். 

எங்கே பரதன் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வானோ என்று பயந்து அனுமானை அனுப்புகிறான். 

அனுமன் நந்தியம்பதியை அடைந்து, பரதனை கண்டு, இராமன் வரும் செய்தியை சொல்லி அவனிடம் கணையாழியை காண்பிக்கிறான். 

பரதன் கணையாழியை கண்டு அடைந்த மகிழ்ச்சியை கம்பன் விவரிக்கிறான்....

பாடல் 


மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

பொருள்

மோதிரம் வாங்கித் = கணையாழியை வாங்கி 
தன் முகத்தின் மேலணைத்து = தம் முகத்தின் மேல் அணைத்து. அணைத்து என்பது இனிய பத பிரயோகம். 
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ = இராமன் நினைவாகவே பரதன் விரதம் பூண்டு இருந்தான். ஊன் உறக்கம் மறந்து, உடல் மெலிந்து காணப் பட்டான். இராமன் வந்தால், அவன் அன்பை பெரும் அளவிற்க்கு இவன் உடல் தாங்குமா என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த சந்தோஷத்திலேயே இவன் உயிரை விட்டு விடுவான்  

எனா ஓதினர் = என்று கூறியவர்கள் 

நாணுற = வெட்கப் படும்படி 

ஓங்கினான் = மகிழ்ச்சியில் உயர்ந்து பூரித்து எழுந்தான் 
தொழும் தூதனை = தன்னிடம் தொழுது நின்ற தூதனான அனுமானை 
முறைமுறை தொழுது துள்ளுவான் = மீண்டும் மீண்டும் தொழுது துள்ளுவான் 

கணையாழி கடைசியில் பரதனிடம் வந்து சேர்ந்தது. இராமாயணத்தில், அதன் பின் அந்த கணையாழி வேறு எங்கும் போக வில்லை. 

கணையாழி இரண்டாம் முறையாக உயிர் காத்தது....

அது சரி, அந்த கணையாழி இன்றும் பல்வேறு விதத்தில் இன்றும் நம்மிடம் நிலவி வருகிறது...அது எது தெரியுமா ?

நாளை அதைப் பற்றி சிந்திப்போம்....