Wednesday, November 20, 2013

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம்

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம் 


இதிகாசங்கள், வேதம் முதலிய மறை நூல்களில் உள்ளவற்றை விரித்து கூற வந்த நூல்கள்.

 சிறிதாக,கண்ணுக்குப் தெரியாதவற்றை பார்க்க உதவும் பூதக் கண்ணாடி (lens ) போல வேதங்களில் உள்ளவற்றை நாம் புரிந்து கொள்ள கதை வடிவில் எடுத்துத் தருவது புராணங்களும் இதிகாசங்களும்.

சத்யமேவ ஜெயதே என்ற ஒரு வரியை விரித்துச் சொன்னது அரிச்சந்திர புராணம். 

எல்லோரும் சகோதரர்களை போல ஒன்றாக அன்போடு வாழ  வேண்டும் என்று கூற வந்தது இராமாயணமும் மகாபாரதமும்.

இராமாயணம் அன்பின் பெருமையை நேரடியாக சொன்னது.

பாரதம் அன்பின்மையால் வரும் தீமைகளை எடுத்துச் சொன்னது. எனவே பாரதத்தை எதிர் மறை காப்பியம் என்று சொல்வாரும் உண்டு.

மகா பாரதத்தை ஐந்தாவது வேதம் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய உணமைகளை, கடமைகளை சொல்லித் தருவது பாரதம்.

பாரதத்தில் உள்ள பாடல்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

பலா பழம் சற்று கடினமானதுதான். அதற்காக அதன் சுவையான சுளைகளை விட்டு விட முடியுமா ?

முள் இருக்கும். கை எல்லாம் பிசு பிசு என்று ஒட்டும். ஆனால் பலா சுளை கிடைத்து விட்டால்  மத்தது எல்லாம் மறந்து விடும்.

சுளைகளை எடுத்து தருகிறேன். சுவைத்துப் பாருங்கள்.....:)

மகா பாரதத்தை பிள்ளையாரே மேரு மலையில் தன்னுடைய தந்தத்தை வைத்து எழுதினார் என்று ஒரு கதை உண்டு.

என்ன அர்த்தம் ?

கல்லின் மேல் எழுத்துக்கு நேர் என்று அவ்வை சொன்னது போல் என்று வரை இமய மலை இருக்குமோ அன்று வரை பாரதக் கதையும் இருக்கும்.

எழுதியது ஞானக் கடவுளான பிள்ளையார் என்று கூறுவது அது ஒரு மிக உயர்ந்த ஞான நூல் என்று அறிவுறுத்துவதர்க்காக.

வில்லி பாரதத்தின் சிறப்பு பாயிரம்....

நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ  ழுத்தாணிதன்
கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.

என்ன முள் குத்துகிறதா ? 

சீர் பிரிக்கலாம்  

நீடாழி உலகத்து  மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே 
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.


பொருள்


நீடாழி = ஆழி என்றால் கடல். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள. நீடாழி , நீண்ட கடலால் சூழப் பட்ட 

உலகத்து = உலகில்

மறை = வேதங்கள்

நாலோடு = நான்கோடு

ஐந்து = ஐந்தாவது வேதம்

என்று = என்று

நிலை நிற்கவே  = நிலைத்து நிற்கவே

வாடாத = தளராத

தவ = தவத்தையும்

வாய்மை = வாய்மையும்

முனி ராசன் = வியாசன்

மாபாரதம் = மா பாரதம்

சொன்ன நாள் = சொன்னபோது


ஏடாக = அதை எழுதும் ஏடாக

வட மேரு வெற்பாக = வடக்கில் உள்ள மேரு மலையும்

வங் = வன்மையான

கூர் எழுத்தாணி = கூர்மையான எழுத்தாணி 

தன் = தன்னுடைய

கோடாக = தந்தத்தை

எழுதும் = கொண்டு எழுதும்

பிரானைப் = பிரான் என்றால் பிரியாதவன். பக்தர்களை விட்டு என்றும் பிரியாதவன்

பணிந்து = பணிந்து

அன்பு கூர்வாம் = அன்பு செலுத்துவோம். பயம் இல்லை, பக்தி இல்லை ...இறைவன் மேல் அன்பு செலுத்துவோம்

அரோ = அசைச் சொல் 

Tuesday, November 19, 2013

பிரபந்தம் - முகத்தன கண்கள்

பிரபந்தம் - முகத்தன கண்கள் 



வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே

அந்த பெண்கள் வாசலில் மணலில் வீடு கட்டி, அழக்காக கோலம் போட்டிருக்கிறார்கள். கண்ணன் வந்து அதை பார்க்கும் சாக்கில் அந்த வீட்டையும் கோலத்தையும் அழித்துவிட்டுப் போகிறான்.

அந்த பெண்களுக்கு அப்ப கூட கண்ணன் மேல் கோபம் வர வில்லை. அவனை பார்த்து உள்ளம் உருகுகிறது. காரணம் அந்த கண்ணனின் கண்கள்.

பாடலை கொஞ்சம் சீர் பிரிப்போம்.

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திர படம் வீதிவாய் 
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி ஆகிலும் உந்தன் மேல் 
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோதம் ஒன்றும் இல்லோம் கண்டாய் 
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே 



பொருள்

வெள்ளை நுண் மணல் கொண்டு = வெண்மையான நுண்மையான மணலை கொண்டு

சிற்றில் = சின்ன இல் = சிறிய வீடு

விசித்திர படம் = வியக்கும் படம் , இங்கு கோலம் என்று கொள்ளலாம்

 வீதிவாய்  = வாசலில்


தெள்ளி = தெளித்து

நாங்கள் இழைத்த கோலம் = நாங்கள் வரைந்த கோலம்

அழித்தி ஆகிலும் = அழித்தாய் என்றாலும்

உந்தன் மேல் = உன் மேல்

உள்ளம் ஓடி உருகல் அல்லால் = உள்ளம் உருகி ஓடுதல் அல்லால்

உரோதம் = விரோதம்

 ஒன்றும் இல்லோம் கண்டாய் = ஒன்றும் இல்லை

கள்ள மாதவா = கள்ளத்தனம் கொண்ட மாதவா

கேசவா = கேசவா

உன் முகத்தன கண்கள் அல்லவே = உன் முகத்தில் உள்ளவை கண்கள் அல்லவே.


கோலத்தையும் வீட்டையும் அழித்ததற்காக வருத்தப் படவில்லை என்கிறாள் ஆண்டாள்.

இதற்கு ஒரு பாடலா ?

நாம் இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிறோம்.

கேட்டது எல்லாம் கிடைப்பது இல்லை.

மாறாக சில சமயம் துன்பம் வந்து சேர்வதும் உண்டு.

பண நஷ்டம், மனக்  கஷ்டம், உடல் நலக் குறைவு, எதிர்பார்த்தது நடக்காமல் போவது இப்படி ஏதோ வகையில் துன்பம் வந்து சேருகிறது.

அப்போது இறைவன் மேல் நமக்கு அன்பா வரும் ? கோபம் வரும் ... அவனை திட்டி தீர்ப்போம் ...

ஆண்டாள் சொல்கிறாள் ...கண்ணா நீ எனக்கு துன்பம் தந்தாலும் உன் மேல் கோபம் இல்லை....என் உள்ளம் உருகுகிறது என்கிறாள்.

பக்தி...காதல்....துன்பத்திலும் இன்பத்தை பார்க்கும்.



Sunday, November 17, 2013

இராமாயணம் - விதியினை நகுவன

இராமாயணம் - விதியினை நகுவன




விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.

நாட்டின் சிறப்பை, வளத்தை சொல்ல வந்த கம்பன் மேற்கண்டவாறு கூறுகிறான்.

அந்த ஊரில் பெண்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா ? (ஜொள்ளு விட தயாராகலாம்)


விதியினை நகுவன, அயில் விழி

அவர்களின் விழிகள் விதியை பார்த்து சிரிக்கும். விதி என்றால் அதை செய்யும் பிரமன். பிரமனும் மயங்குவான் அவர்கள் விழிகளை பார்த்து. "நானா இப்படி ஒரு அழகான விழிகளை படைத்தேன்" என்று பிரமனும் பிரமிப்பான். அந்த விழிகள் பிரமனை பார்த்து சிரிக்குமாம்.  அயில்  என்றால் கூர்மையான என்று பொருள்.

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப்  கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

என்பது கந்தரலங்காரம். அயில் வேலன் = கூர்மையான வேலை உள்ளவன் (=முருகன்)


பிடியின் கதியினை நகுவன, அவர் நடை

அந்த பெண்களின் நடை பெண் யானையின் நடையை பார்த்து சிரிக்கும். பெண் யானையின் நடை மெதுவாக இருக்கும். அழகாக இருக்கும். ".ஹ்ம்ம்...இதெல்லாம்  ஒரு நடையா .." என்று அந்த பெண்களின் நடை யானைகளின் நடையை பார்த்து சிரிக்கும்.


கமலப் பொதியினை நகுவன, புணர் முலை

அந்த பெண்களின் மார்புகள் தாமரை மொக்குகளை பார்த்து சிரிக்கும். தாமரை மலரும், கூம்பும்....ஆனால் அந்த பெண்களின் மார்புகள் அப்படி அல்ல..."உன்னை போய்  என் மார்புகளுக்கு உவமையாகச் சொல்கிறார்களே" என்று அந்த பெண்களின்  மார்புகள் தாமரை மொட்டுகளை பார்த்து நகைக்குமாம். "புணர் முலை" என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.


கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்

வானில் உள்ள நிலவை பழிக்கும் அவர்கள்  முகம். ஏன்? நிலவு வளரும் தேயும், அதில் கறை உண்டு...களங்கம் இல்லாத இந்த பெண்களின் முகம் நிலவை பார்த்து  சிரிக்கும். "நீ எனக்கு உவமையா " என்று.

Saturday, November 16, 2013

நல் வழி - எங்கே தேடுவது ?

நல் வழி - எங்கே தேடுவது ?



நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

உண்மையை,  இறைவனை,மெய் பொருளை, ஆத்மாவை எங்கே தேடுவது ?

மக்கள் எங்கெல்லாமோ தேடித் தேடி அலைகிறார்கள்...கோவிலில், சாமியார் மடங்களில், காட்டில், குகையில், புத்தகங்களில் என்று எல்லா இடங்களிலும் தேடித் அலைகிறார்கள்.

அவர்கள் தேடிக் கொண்டிருக்கட்டும்....

காட்டில் மரம் சுள்ளி எல்லாம் வெட்டப் போவார்கள்.  ,வெட்டிய பின் அதை எப்படி கட்டுவார்கள் தெரியுமா ? அதற்கென்று தனியாக ஒரு கயறு தேடி போக மாட்டார்கள். அவர்கள் வெட்டி எடுத்த மர பட்டை அல்லது நீண்ட புல் இவற்றை எடுத்து கயறு போல திரித்து கட்டுவார்கள்.

அது போல நீங்கள் தேடிக் கொண்டிருப்பது உங்களிடமே இருக்கிறது.




நன்றென்றும் = நல்லதும்

தீதென்றும் = தீதும்

நானென்றும் = நான் என்பதும்

தானென்றும் = தான் என்பதும்

அன்றென்றும் = அன்று என்பதும் 

ஆமென்றும் = உள்ளது என்பதும் 

ஆகாதே = ஆகாதே

நின்ற நிலை = இருந்த நிலை

தானதாந் தத்துவமாஞ் = தான் அது ஆம் தத்துவமாம் 

சம்பறுத்தார் = சம்பு அறுத்தார் = சம்பு என்பது ஒரு வகை புல்

யாக்கைக்குப் = கட்டுவதற்கு. யாக்குதல் என்றால்  கட்டுதல். யாக்கை என்றால் உடல். எலும்பு, தோல், இவற்றால் கட்டப் பட்டதால் அது யாக்கை எனப் பட்டது. எழுத்து, சீர், தளை இவற்றால் கட்டப் படும்

போனவா தேடும் பொருள் = போனவர்கள் தேடும் பொருள்



Friday, November 15, 2013

இராமாயணம் - மழைச் சாரல் வாழ்கை

இராமாயணம் -  மழைச் சாரல் வாழ்கை 



‘விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு அயர்ந்து நின்ற இராமனை தேற்றிக் கூறுகிறான் வசிட்டன்.

வானிலிருந்து விழும் மழைத் துளிகள் எத்தனை இருக்கும். இதுவரை விழுந்த துளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்.

ஒரு மழைத் துளி வரும்போதே தெரியும் அது தரையில் மோதி சிதறி தெறிக்கப் போகிறது என்று.

கீழிறங்கி வரும் போது அழகாக இருக்கும் ...அது வானவில்லை உண்டாக்கும்....ஆனால் வரும்போதே தெரியும் அதன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.

மழை நீர் கீழே விழுந்து சிதறி விட்டதே என்று யாராவது வருந்துவார்களா ?

அப்படி வருந்தினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரியதாய் இருக்கும்.


இராமா !, நீ இதற்காக (தசரதன் ) இறந்ததற்காக அழுவது உன் பெருமைக்கு இழுக்கு . அழுவதை விட்டு விட்டு அவனுக்கு உரிய நீர் கடனை செய்.

பொருள்

விண்ணு நீர்   = விண்ணில் இருந்து வரும் நீர் துளிகள்

மொக்குகளின் = அரும்புகள் போல இருக்கும்

விளியும் யாக்கையை = அழியும் உடலை

எண்ணி = நினைத்து

நீ =  நீ

அழுங்குதல்= வருந்துதல்

இழுதைப்பாலதால் = இழுக்கு ஆகும்

கண்ணின் நீர் = கண்ணீர் 

உகுத்தலின் = விடுவதால்

கண்டது இல்லை = கண்ட பயன் ஒன்றும் இல்லை.

போய் = நீ போய்

மண்ணு நீர் உகுத்தி = நீர்க் கடனை செய்

நீ மலர்க்கையால் = உன்னுடைய மலர் போன்ற கையால்

என்றான் = என்றான் வசிட்டன்

சாமாறே விரைகின்றேன் என்பார் மணி வாசகர். இறப்பதற்காக விரைவாக போய் கொண்டிருக்கிறேன்.



Wednesday, November 13, 2013

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?


பாண்டவர்களை அஸ்தினா புரத்தில் தான் கட்டிய மண்டபத்தை காண வரும்படி ஓலை அனுப்புகிறான் துரியோதனன்.

அந்த ஓலையை திருதராஷ்டிரனை கொண்டு கையெழுத்து இட வைக்கிறான்.

அந்த ஓலையை விதுரனிடம் கொடுத்து அனுப்புகிறான்.

ஓலையை பெற்ற தருமன், தம்பிகளிடம் கேட்கிறான் "போகலாமா , வேண்டாமா " என்று.

அர்ஜுனன் போக வேண்டாம் என்று கூறுகிறான் ....


பாடல்

தேற லார்தமைத் தேறலுந்தேறினர்த் தேறலா மையுமென்றும் 
மாற லாருடன் மலைதலு மாறுடன்மருவிவாழ் தலுமுன்னே 
ஆற லாதன வரசருக் கென்றுகொண்டரசநீ தியிற்சொன்னார் 
கூற லாதன சொல்வதென் செல்வதென்கொடியவ னருகென்றான்.

சீர் பிரிக்காமல் புரியாது....:)

தேறலார் தம்மை தேறலும் தேறினார் தேறலாமையும் என்றும் 
மாறலார் உடன் மலத்தலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே 
ஆறு அலாதன அரசர்க்கு என்று கொண்ட அரச நீதியில் சொன்னார் 
கூறலாதன சொல்வதென் செல்வதென் கொடியவன் அருகு என்றான் 

நம்பாதவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது
நட்பு கொண்டவர்களை நம்பாமல் இருக்கக் கூடாது
நண்பர்களோடு சண்டை போடக் கூடாது
பகைவர்களோடு நட்பு பாராட்டக் கூடாது
இவை அரசர்களுக்கு என்று சொல்லப் பட்ட வழி
இதை விட்டு அவனிடம் போவது என்ன ?


பொருள்

தேறலார் = நம் நம்பிக்கையில் தேராதவர்கள்

தம்மை = அவர்களை

தேறலும் = ஏற்றுக் கொள்ளுதலும்

தேறினார் = ஏற்றுக் கொண்டவர்களை (நண்பராக)

தேறலாமையும் = நம்பாமல் இருப்பதும்

என்றும் = எப்போதும்

மாறலார் உடன் = மாறாமல் ஒன்றாக நம்முடன் இருப்பவர்களிடம்

மலத்தலும் = சண்டை இடுதலும்


மாறுடன் = மாறு பட்டவர்களுடன் (பகைவர்களுடன் )

மருவி வாழ்தலும் = ஒன்றாக வாழ்தலும்

முன்னே  = முன்பே

ஆறு அலாதன = ஆறு என்றால் வழி. வழி அல்லாதன

அரசர்க்கு என்று கொண்ட = அரசர்களுக்கு என்று

அரச நீதியில் சொன்னார்  = அரச நீதியில் சொன்னார்

கூறலாதன சொல்வதென் = அதில் கூறாதவற்றை நீ (தருமனே) ஏன் சொல்கிறாய். அறம் இல்லாததை ஏன் கூறுகிறாய்

செல்வதென் = செல்வது என் ? ஏன் போக வேண்டும் ?

கொடியவன் அருகு என்றான் = கொடியவனான துரியோதனன் அருகில் என்றான்

கொடியவர்கள் கிட்ட கூட போகக் கூடாது.



இராமாயணம் - எது வரை விளக்கு எரியும் ?

இராமாயணம் -  எது வரை விளக்கு எரியும் ?




புண்ணிய நறு நெயில்,
    பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில்,
    விதி என் தீயினில்,
எண்ணிய விளக்கு அவை
    இரண்டும் எஞ்சினால்,
அண்ணலே! அவிவதற்கு
    ஐயம் யாவதோ? ‘‘

விளக்கு எதுவரை எரியும் ? திரியும் எண்ணையும் உள்ள வரை எரியும்...அதற்குப் பின் அணைந்து போகும். இதில் என்ன சந்தேகம் ?

நம் வாழ்க்கை என்று தீபம் நாம் செய்த புண்ணியம் என்ற எண்ணெய் , காலம் என்ற திரி இருக்கும் வரை ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

செய்த புண்ணியம் எல்லாம் நாம் அனுபவிக்க உதவுவது காலம் என்ற திரி.

புண்ணியத்தின் பலன் முடியும் போது வாழ்கை முடிந்து போகும்.

எண்ணையும், திரியும் தீர்ந்த விளக்கின் தீபம் போல....

பொருள்


புண்ணிய நறு நெயில் = புண்ணியம் என்ற நல்ல நெய்யும்

பொரு இல் = ஒப்பற்ற

காலம் ஆம் = காலம் என்ற

திண்ணிய திரியினில் = திடமான திரியில்

விதி என் தீயினில் = விதி என்ற தீயில் , தீபம்

எண்ணிய விளக்கு = உண்டான விளக்கு

அவை  இரண்டும் எஞ்சினால் = அவை இரண்டும் தீர்ந்து போனால்

அண்ணலே! = அண்ணலே 

அவிவதற்கு = அணைந்து போவதற்கு

ஐயம் யாவதோ? = சந்தேகம் ஏதும் உண்டோ ? (கிடையாது)

பாவம் செய்தால் அதை அனுபவிக்க வாழ்கை கிடையாதா ?

புண்ணியம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். நீண்ட நாள் வாழ வேண்டும் என்றால்  புண்ணியம் செய்யுங்கள்.

தசரதன் இறந்த செய்தி கேட்டு தளர்ந்த இராமனுக்கு ஆறுதலாக வசிட்டன் கூறியது.