Wednesday, January 29, 2014

இராமாயணம் - வயிற்றிடைவாயினர்

இராமாயணம் - வயிற்றிடைவாயினர்


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள்.

அவளைச் சுற்றி அரக்கியர் காவல் இருக்கின்றனர்.

அந்த அரக்கியர் எப்படி இருப்பார்கள் ? கம்பன் சொல்லுகிறான்...

"வாய் வயிற்றில் இருக்கும். நெற்றி வளைந்து இருக்கும். கண்கள் இரண்டும் ஏதோ குழ போல இருக்கும். கொடிய பார்வை. அவர்களின் பற்களுக்கு இடையே யானை, பேய், யாளி போன்றவை படுத்து உறங்கும். குகை போல பெரிய வாய்"

பாடல்

வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில் 
குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.

பொருள்


வயிற்றிடைவாயினர் = வாய் வயிற்றிக்கு இடையில் இருக்கும். அப்படி என்றால் என்ன அர்த்தம். வாயும் வயிறும் ஒன்றாக இருக்கும். எந்நேரமும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பர்கள். வாயில் போட்டு, மென்று தின்று, அது வயிற்றிற்கு போவதற்கு நேரம் ஆகும். வாயை வயிற்றில் வைத்து விட்டால் எப்படி இருக்கும் ? அரக்கியர் என்பவர் பெரும் தீனி தின்பவர்கள். அல்லது, பெரும் தீனி தின்பவர்கள் அரக்கர்கள்.

ஒரு படி மேலே போவோம். அரக்கர் என்பவர் புலன்களால் செலுத்தப் படுபவர்கள். சாப்பாட்டைக் கண்டால் உடனே அதை தின்ன வேண்டும்.

அழகான பெண்ணைக் கண்டால் அவளை அடைய வேண்டும், அவள் மாற்றான் மனைவியாக இருந்தாலும்.

புலன்களால் செலுத்தப் படும் யாரும் அரக்கர்/அரக்கியர் தான். 

வளைந்த நெற்றியில் = வளைந்த நெற்றியில்

குயிற்றியவிழியினர் = குழி பறித்து அதில் பதித்து வைத்ததை போன்ற கண்களைக் கொண்டவர்கள்

கொடிய நோக்கினர் = கொடூரமான பார்வை கொண்டவர்கள். கண்ணில் அருள் நோக்கம் வேண்டும்.

எயிற்றினுக்குஇடை இடை = பற்களுக்கு இடையே

யானை, யாளி, பேய் = யானை, யாளி, பேய்

துயில் கொள் = படுத்து தூங்கும்.

வெம் பிலன் என = பிலம் என்றால் குகை. வெம்பிலன் என்றால் பெரிய குகை

தொட்ட வாயினர் = போன்ற பெரிய திறந்த வாயினர். குகைக்கு ஏது கதவு. உள்ளே செல்லும் உணவுக்கும், வெளியே செல்லும் வார்த்தைகளுக்கும் ஒரு கட்டுபாடு  கிடையாது. அது அரக்க குணம்.

கம்பர் ஏதோ அரக்கர்களை சொல்லி விட்டு போகிறார் என்று நினைக்கக் கூடாது.

இந்த குணங்கள் அரக்கர்களுக்கு இருக்கும்.

இந்த குணங்கள் இருப்பர்வர்கள் அரக்கர்கள்.

நம்மில் எத்தனை அரக்கர்களோ ?



Tuesday, January 28, 2014

திருவாசகம் - இறைவன் கருணை வேண்டாம்

திருவாசகம் - இறைவன் கருணை வேண்டாம் 


மனித மனம் விசித்திரமானது. 

நல்லது என்று தெரிந்தும் அதை நாடாமல், கெட்டது என்று தெரிந்தும் சிலவற்றின் பின்னால் போகிறது. 

ரொம்ப பெரிய விஷயங்களுக்கு எல்லாம் போக வேண்டாம். 

நம் நடை முறை வாழ்க்கையை பார்ப்போம்....

இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் , காப்பி, டீ , ஐஸ் கிரீம் இது எல்லாம் உடலுக்கு கெடுதல் என்று தெரியும். விடுகிறோமா? 

பச்சை காய் கறிகள், பழங்கள் நல்லது என்று தெரியும், அதைத் தோடுகிரோமா ? இல்லையே 

இறை  உணர்வுக்கும்,உலக வாழ்க்கைக்கும் இடையில் கிடந்து  போராடுகிறோம்.

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் கிடந்து  அலைகிறோம் .  

கெட்டதை விட  முடியவில்லை.

நல்லதை நோக்கி போக முடியவில்லை. 

வாழக்கை ஒரு முடிவில்லா போராட்டமாக இருக்கிறது. 

நமக்கு மட்டும் இல்லை, மாணிக்க  வாசகருக்கும்.

இறைவன் தன் கருணையைத் தருகிறான். அது வேண்டாம் என்று விட்டு விட்டு , உலக இன்பங்களின் பால் அலையும் என்னை கை விட்டு விடாதே என்று இறைவனை கெஞ்சுகிறார் மணிவாசகர். 

பாடல் 


வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.


பொருள் 

வளர்கின்ற நின் கருணைக் = இறைவனின் கருணை நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

கையில் வாங்கவும் நீங்கி = கையில் வாங்கினேன், பின் அதை விட்டு விட்டு நீங்கினேன். வேண்டாம் என்று விட்டு விட்டு ஓடினேன் 

இப்பால் = இந்தப் பக்கம் 

மிளிர்கின்ற என்னை = உலக இன்பங்களில் திளைத்து மகிழ்ந்து இருக்கின்ற என்னை 

விடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே 

வெண் மதிக் கொழுந்து ஒன்று = சிவனின் தலையில் பிறைச் சந்திரன் இருக்கிறது. அது ஒரு கீற்று. அதைப் பார்க்க ஏதோ ஒரு மரத்தின்  தளிர் போல இருக்கிறதாம். கொழுந்து என்றால் இளம் தளிர். 

ஒளிர்கின்ற நீள் முடி = ஒளி பொருந்திய நீண்ட மூடி கொண்ட 

உத்தரகோசமங்கைக்கு அரசே = திரு உத்தர கோசை என்ற ஊருக்கு அரசனே 

தெளிகின்ற பொன்னும்  மின்னும் = சிறந்த பொன்னைப் போல மின்னும் 

அன்ன தோற்றச் செழும் சுடரே = தோற்றம் கொண்ட சுடர் விடும் ஒளியை போன்ற தோற்றம் கொண்டவனே 

Maanikka Vaasgar brings out the struggle between spiritual life and materialistic life in every one of us. 



Sunday, January 26, 2014

இராமாயணம் - சீதையை காணவில்லை

இராமாயணம் - சீதையை காணவில்லை 


அனுமன் இலங்கைக்கு போய்விட்டு வந்தான். எல்லோரும் ஆவலாய் காத்து இருக்கிறார்கள், அனுமன் நல்ல செய்தி கொண்டு வந்திருப்பான் என்ற நம்பிக்கையில்.

ஆனால், அனுமனோ, "நான் சீதையை காணவில்லை " என்கிறான்.

நிறைய பேர் "கண்டேன் சீதையை" என்று கூறினான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 முதற்கண், "கண்டேன் சீதையை" என்ற தொடர் கம்ப இராமாயணத்தில்  இல்லை.

அது மட்டும் அல்ல, சீதையை கண்டேன் என்று ஒரு வேளை அனுமன் கூறி இருந்தால், இராமன் மனதில் எழுகிறதோ இல்லையோ, மற்றவர்கள் மனதில் "சீதை எப்படி இருக்கிறாள்...கற்போடு இருக்கிறாளா " என்ற சந்தேகம் இழையோடலாம்.

அது அவ்வளவு நல்லது அல்ல.

அனுமன் சொல்கிறான் "நங்கையை கண்டேன் அல்லேன்"  என்றான்.

கேட்பவர்கள் மனதில் உடனே என்ன தோன்றும்?

சீதையை பார்க்க வில்லையா ? அப்ப என்னதான் பார்த்தாய் என்று கேட்கத் தோன்றும் அல்லவா ?

அந்த கேள்விக்கு விடையாக அனுமன் சொல்கிறான் " உயர்குடி பிறப்பு என்பதும்,  பொறுமை என்பதும், கற்பு என்பதும் ஒன்று சேர்ந்து இருக்கக் கண்டேன்"

இப்போது சீதையை கண்டது மட்டும் அல்ல, அவள் நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதும் சொல்ல முடிகிறது அல்லவா? அவள் எப்படி இருக்கிறாள் என்ற கேள்வி எழாமலேயே அதை சொல்லி முடிக்கிறான் அனுமன். 

பாடல்

விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
 நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்; 
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும், 
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்.


பொருள்

விற் = வில்

பெருந் = பெரிய , வலிய

தடந் தோள் வீர! = வீரமான தோள்களை கொண்ட வீரனே

வீங்கு நீர் = நிறைந்த நீரால் சூழப் பட்ட

இலங்கை = இலங்கை

வெற்பில் = திரிகூட மலையின் மேல் உள்ள இலங்கை

நற் பெருந் = நல்ல பெரிய

தவத்தள் = தவம் செய்தவளான

ஆய நங்கையைக் = பெண்ணை

கண்டேன் அல்லேன் = காணவில்லை

இற் பிறப்பு என்பது ஒன்றும் = உயர் குடிப் பிறப்பு என்பதும்

இரும் பொறை என்பது ஒன்றும் = பொறுமை என்ற ஒன்றும் 

கற்பு எனும் பெயரது ஒன்றும் = கற்பு என்ற ஒன்றும்

களி நடம் புரியக் கண்டேன் = மகிழ்வுடன் நடனம் புரியக் கண்டேன்



பெண்ணிற்கு இலக்கணம் மூன்று சொல்கிறான்....

குடிப் பிறப்பு, பொறுமை, கற்பு.  இந்த மூன்றும் இலங்கையில் ஒன்றாக ஒரு இடத்தில்  இருக்கும் என்றால் அது சீதையிடம் மட்டும் தான் இருக்கும் என்பது சொல்லாமல்  சொன்ன கருத்து. 


Saturday, January 25, 2014

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி 


எல்லா அற நூல்களும் ஏறக் குறைய ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை என்று கூறுகின்றன.

ஆனால் ஆசையை எப்படி விடுவது ?

அதற்கு முன்னால், ஆசை எப்படி வருகிறது என்று தெரிய வேண்டாமா ?

ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? மரக் கட்டை போல, ஒரு கல்லைப் போல வாழும் வாழக்கை ஒரு வாழ்க்கையா ?

எல்லாவற்றிற்கும் நாலு வரியில் பதில் சொல்கிறார் அருணகிரிநாதர்.

ஆசை புலன்கள் வழியாக வருகிறது.

புலன்கள் இருக்கும் வரை ஆசை இருக்கும். ஆசையை ஒழிக்க முடியாது. ஆசை, மனித இயற்கை.

ஆனால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அலையும் மனதை வேறொரு  ஆசை மேல் திருப்பலாம்.

அது, இறைவன் மேல் கொள்ளும் ஆசை. அப்படி இறைவன் மேல் ஆசை கொண்டால், மனம் உலக ஆசைகளை விட்டு விடும்.

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பொருள் 

கைவாய் = கையில் உள்ள

கதிர் வேல் = ஒளி வீசும் வேல்

முருகன் = முருகன்

கழல் பெற்று = திருவடிகளைப் பெற்று

உய்வாய் = வழி காண்பாய்

மனனே = மனமே

ஒழிவாய் ஒழிவாய் = விலகுவாய் விலகுவாய்

மெய் = உடல்

வாய் = வாய் (நாக்கு)

விழி = கண்

நாசியொடும் = மூக்கோடு

செவி ஆம் = காது என்ற


ஐவாய் =  ஐந்து புலன்கள்

வழி செல்லும் அவாவினையே = வழியாக செல்லும் ஆசைகளையே


திரு மந்திரம் - நிலையாமை

திரு மந்திரம் - நிலையாமை 


மரணம் என்பது நிச்சயம் என்று தெரிந்தாலும் , அது என்னோவோ இப்போதைக்கு இல்லை, என்றோ வரப் போகிறது என்று மனிதன் நினைக்கிறான். என்றோ என்றால் நாளையோ, நாளை மறுதினமோ, அடுத்த வாரமோ இல்லை...பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இருக்கிறது ஒவ்வொருவனும் நினைக்கிறான்.

ஏறக்குறைய நமக்கு இல்லை என்றே நினைக்கிறான்.

இருப்பது பொய் போவது மெய் என்ற நினைப்பிருந்தால் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடுவானா ?

நல்ல காரியங்களை அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறான்.

அன்றென்று எண்ணாமல் அறம் செய்க என்றார்  வள்ளுவர்.

நாம் சுற்றி முற்றி பார்த்தால் நம் நண்பர்களோ உறவினர்களோ அடிக்கடி இறப்பது போலத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக எப்போதோ நடப்பதால் நமக்கு மரணம் என்பதின் நினைப்பு அடிக்கடி வருவது இல்லை.

திருமூலர் சொல்கிறார்....நீ மற்றவர்களை பார்க்காதே...

நாள் தோறும் சூரியன் காலையில் எழுந்து மாலையில் மறைகிறது...ஒவ்வொரு நாளும்  அது பிறக்கிறது இறக்கிறது.

ஹா...சூரியன் என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்று சொன்னால் ... உங்கள் வீட்டு கன்றுக் குட்டியை பாருங்கள். கன்று பிறக்கிறது, தாய் பசு மறைகிறது....உங்களை சுத்தி பாருங்கள்....இயற்கை உயிர்களை நாளும் உண்டாக்குகிறது, மறைய வைக்கிறது....அவற்றை கண்டாவது  ....

வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்று உணர வேண்டும்.

நெருங்கியவர்கள் மறைந்தால் அது இயற்கையான ஒன்று என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்

நமக்கும் அதுதான் என்று எண்ணி இருக்கும் வரை நல்ல படியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்....

பாடல்

 
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.


சீர் பிரித்த பின்

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே 
விழக் கண்டும்  தேறார் விழியிலா மாந்தர்
குழக் கன்று  முத்து எருதை சில நாளில்
விழக் கண்டும்  தேறார் வியனுல கோரே.


பொருள்

கிழக்கு  = கிழக்கில்
எழுந்து = உதித்து
ஓடிய = மேல் நோக்கி எழுந்து
ஞாயிறு = சூரியன்
மேற்கே = மேற்கு திசையில் 
விழக் கண்டும் = மறைவது கண்டும்
தேறார் = அறிய மாட்டார்கள்
விழியிலா மாந்தர் = கண்ணிலாத மாந்தர்கள். சூரியன் எவ்வளவு பிரகாசமானவன், நாளும் இது நடக்கிறது. ஆனால் காண்பது இல்லை நாம்.
குழக் கன்று = குழந்தையான கன்று
மூத்து = வயதாகி
எருதை = எருதாக மாறி
சில நாளில் = சிறிது நாட்களில்
விழக் கண்டும் = இறந்து விழக் கண்டும்
தேறார் = அறிய மாட்டார்
வியனுல கோரே = இந்த உலக மாந்தரே



பிறந்தோம். வளர்ந்தோம். உழைத்தோம். நாலு காசு சம்பாதித்தோம். இறந்தோம்.

இது தானா வாழக்கை ?

சிந்தியுங்கள் என்கிறார் திருமூலர்

சமயம் கிடைக்கும் போது சிந்தியுங்கள்.



திருப் புகழ் - காகம் முற அருள்

திருப் புகழ் - காகம் முற அருள் 


மனைவியை மற்றவன் பார்த்தால் எவ்வளவு கோபம் வரும் ?

அதிலும், காம இச்சையோடு பார்த்தால் ?

அதிலும், அவளை தீண்டினால் ?

அதிலும், அவளை அவள் மார்பில் தீண்டினால் ? 

எவ்வளவு கோபம் வரும் ?

இராமாயணத்தில்,  இராமனும் சீதையும் சித்ர கூட மலைக்கு அருகில் மந்தாகினி நதிக் கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சீதையின் மடியில் இராமன் தலை வைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே வந்த இந்திரனின் மகன் சயந்தன் சீதை மேல் காமம் கொண்டான். 

தந்தை எவ்வழி , மகன் அவ்வழி. 

சீதையை எப்படியாவது தீண்டி விட வேண்டும் என்று நினைத்தான். 

ஒரு காகத்தின் வடிவை எடுத்து பறந்து வந்து அவள் மார்பை கொத்தினான். 

சீதையின் மார்பில் இருந்து இரத்தம் வந்தது. அசைந்தாலோ, சப்தம் எழுப்பினாலோ இராமனின் தூக்கத்திற்கு இடையுறாக இருக்கும் என்று எண்ணி அவள் அமைதியாக அந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டாள் . 

கண் விழித்துப் பார்த்த இராமன், சீதையின் மார்பில் இருந்து வழிந்த இரத்தத்தை கண்டு பதறி   காரணம் வினவினான். சீதை காகத்தை காண்பித்து, அந்த காகம் கொத்தியது என்றாள் . 

இராமன் புரிந்து கொண்டான். 

அருகில் இருந்த புல்லை எடுத்து மந்திரம் சொல்லி விடுத்தான். அது இராம பானமாக மாறி சயந்தனை மூவுலகும் துரத்தியது. அவனை காப்பார் யாரும் இல்லை. அவன் இராமனிடமே வந்து அடைக் கலம் புகுந்தான். 

சரண் என்று அடைந்தவனை அவன் எதிரியாக இருந்தால் கூட அவனை மன்னித்து  ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டவன் இராமன். 

சயந்தனுக்கு உயிர் பிச்சை அளித்து, "நான் மன்னிப்பேன், என் பாணம் மன்னிக்காது" என்று சொல்லி அந்த பானத்திற்கு சயந்தனின் ஒரு கண்ணை இலக்காக்கி அவனை காப்பாற்றினான்  இராமன்.

அந்த கதையை இரண்டு வரியில் சொல்கிறார் அருணகிரி.....


பாடல் 

காது மொருவிழி காக முற அருள்
                      மாய னரிதிரு                             மருகோனே

பொருள் 

காது =கொல்லென்று விடுத்த 

ஒரு விழி காகம் உற = ஒரு விழியை மட்டும் எடுத்து 
  
அருள் = அவனுக்கு உயிர் பிச்சை தந்து அருள் புரிந்த 

மாயன் = மாயங்கள் செய்ய வல்ல 


அரி = பாவங்களை போக்குபவன் 

திரு = உயர்ந்த, சிறந்த 

மருகோனே = மருமகனே 


இதையே பெரியாழ்வாரும் 

சித்திரகூ டத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகுந் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபய மென்றழைப்ப
அத்திரமே யதன்கண்ணை யறுத்ததுமோரடையாளம் 


விருந்தினர்களை உபசரிப்பது ஒரு பண்பு என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களை  காப்பதும் ஒரு பண்பு தான். ஏனோ அந்த பண்பு வழக்கொழிந்து போய் விட்டது. பழிக்குப் பழி என்று உலகம் புறப்பட்டு விட்டது. 

எவ்வளவு சண்டை. எவ்வளவு சிந்திய இரத்தங்கள். 

மன்னிக்கும் குணம் குறைந்து கொண்டே வருகிறது. 

இராமாயணம் படிப்பது அதன் இலக்கியம் நயம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல. .....


திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய்

திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய் 


இறை அருள் பெற்ற பின்னும் மனிதனின் குணம் மாறுவது இல்லை. அவரா, அப்படிச் செய்தார் என்று நாம் சிலரின் செயல்களை பற்றி ஆச்சரியப் படுகிறோம்.

மனிதன் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் அவன் இயற்கை குணம் மாறுவதே இல்லை.

இறை அருள் பெற்ற பின் ஏதோ புது மனிதர்கள் என்று நினைக்க  வேண்டாம்.அவர்களும் சாதாரண மனிதர்களே. நம்மை போலவே அவர்களுக்கும் ஆசா பாசங்கள்  இருக்கின்றன.

மாணிக்க வாசகர் சொல்கிறார்....

அழகான பெண்களின் மேல் கொண்ட ஆசையை, உன் அருள் பெற்ற பின்னும்,  நான் விடவில்லை. இருந்தும் நீ என்னை விட்டு விடாமல் அருள் செய்கிறாய். என்ன காரணம் ? என்று இறைவனை வினவுகிறார். 

இதையே சற்று மாற்றி யோசித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள்  புலப் படும்....

ஒன்று, பெண்ணாசை என்பது மிக மிக இயற்கையான ஒன்று. இறைவன் இயற்கைக்கு எதிரானவன் அல்ல. பெண்ணாசை கொண்டவர்களை அவன் வெறுத்து ஒதுக்குவது இல்லை.

இரண்டு, இறைவனை அடைய, அறிய, அவன் அருள் பெற பெண்ணாசை ஒன்றும் தடை இல்லை. எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி விட வேண்டும் என்று இல்லை.

பாடல்

கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?

உரை 

அழகான மார்பகங்களை கொண்ட பெண்களின் சிவந்த இதழ்களை விட மாட்டேன்  என்றாலும் என்னை விட்டு விட மாட்டாய், நான் உன் தொண்டில்  இருக்கிறேன், உனக்கு வெளியே இல்லை, உத்திரகோச மங்கைக்கு  அரசனே, நான் ஒரு  கள்வன்,இருந்தும் என்னை ஏன் நீ ஆட்கொண்டாய் ?

பத உரை 

கொள் ஏர் = அழகினை கொண்ட

பிளவு அகலாத் தடம் கொங்கையர் = இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் பிரிவே (பிளவு)  கிடையாது. அப்படி ஒட்டி இருக்கும். பெரிய மார்புகள்.

கொவ்வைச் செவ் வாய் = அப்படிப்பட்ட அழகிய பெண்களின் சிவந்த இதழ்களை

விள்ளேன் எனினும் = விட்டு விட மாட்டேன் என்றாலும்

விடுதி கண்டாய்? = நீ என்னை கை விட்டு வடமாட்டய்

நின் = உன்னுடைய

விழுத் = சிறந்த

தொழும்பின் = பணியில்

உள்ளேன் = இருக்கிறேன்

புறம் அல்லேன் = நான் உனக்கு வெளியன் அல்ல

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

கள்ளேன் = கள்ள மனம் கொண்ட நான்

ஒழியவும் = உன்னை விட்டு விலகி நின்றாலும்

கண்டு கொண்டு = என்னை கண்டு கொண்டு

ஆண்டது எக் காரணமே? = ஆட் கொண்டது என்ன காரணத்தினாலோ