Thursday, March 20, 2014

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ

நீத்தல் விண்ணப்பம் - மரத்தில் இட்ட தீ 


மரம் என்னவோ பெரிய மரம் தான்.

தீ என்னவோ சின்ன தீ தான்.

தீயை மரத்தில் வைத்தால் என்ன ஆகும் ? முதலில் மெதுவாக எரியும். நேரம் செல்ல செல்ல அந்த மரமே விறகாக தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த மரத்தை முழுவதும் எரித்து கரியாக்கிவிடும்....அது போல

இந்த புலன் ஆசைகள் என்ற தீ, உடல் என்ற மரத்தை மெல்ல மெல்ல எரித்து சாம்பாலாக்கி விடும்.

புலனாசைகளால் வெந்து நீராவோம்.

அப்படி வெந்து நொந்து இருக்கும் என்னை விட்டு விடாதே என்று பதறுகிறார் மணிவாசகர்.

பாடல்

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே


பொருள் 

பொதும்பு உறு = மரப் பொந்தினை அடைந்த 

தீப்போல் = தீயைப் போல

புகைந்து எரிய = புகை விட்டு எரிய

புலன் தீக் கதுவ = புலன்களாகிய தீ பற்றிக் கொள்ள, பற்றிக் கொள்ள

வெதும்புறுவேனை = வெதும்பி துன்பப் படுபவனான என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விரை ஆர் = மணம் வீசும் 

நறவம் = தேன்

ததும்பும் = ததும்பும்

மந்தாரத்தில் = மந்தாரம் என்ற மலரில்

தாரம் பயின்று, = இசை பயின்று

மந்தம் = மந்தமாகிய இசையை

முரல் வண்டு = ரீங்காரமிடும் வண்டு

அதும்பும், = அழுந்தும்

கொழும் தேன் = செழுமையான தேன்

அவிர் சடை = விளங்கும் சடையை கொண்ட

வானத்து அடல் அரைசே =  வானில் உள்ள வீரமிக்க அரசே

மரமே தீயை வைத்துக் கொள்வது போல, நமக்கு நாமே தீயை வைத்துக் கொள்கிறோம்.

எரிவது தெரியாமல், அதுவே சுகம் என்று இருக்கிறோம்.





Tuesday, March 18, 2014

சுந்தர காண்டம் - அறிமுகம்

சுந்தர காண்டம் - அறிமுகம் 


இராமாயணத்தில் மிக முக்கியமான பகுதி சுந்தர காண்டம்.

சுந்தர காண்டம் படித்தால் துன்பங்கள் எல்லாம் விலகி மனதில் அமைதி பிறக்கும் என்பது ஐதீகம்.

துன்பம் இல்லாத மனிதன் யார் ?

உறவுகள், பணம், வேலை, ஆரோக்கியம்,  பிள்ளைகள், கணவன், மனைவி, அண்டை , அயல், அலுவலகம் என்று ஆயிரம் வழிகளில் துன்பம் வருகிறது.

நம் துன்பம் எப்போது குறையும் ?

நம்மை விட அதிக துன்பம் உள்ளவர்களைப் பார்க்கும் போது , நம் துன்பம் அவ்வளவு பெரியதில்லை என்ற ஆறுதல் பிறக்கும். அவர்கள் அவ்வளவு பெரிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சமாளித்து வாழ்கிறார்கள் என்றால் நாம் ஏன் நமக்கு வந்த துன்பத்தை தாங்க முடியாது ? நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

இராமனுக்கு வராத துன்பமா ?

ஓர் இரவில் , சக்ரவர்த்தியாக வேண்டியவன் முடி துறந்தது மட்டும் அல்ல, காட்டுக்கும்  போக வேண்டி வந்தது என்றால் அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கும்.

ஒரு பத்து ரூபாய் தொலைந்து விட்டால் எவ்வளவு வருத்தப் படுவோம்.

ஒரு இராஜ்யத்தையே தொலைத்து விட்டால் ? தாங்க முடியுமா நம்மால் ?

துன்பத்தில் பெரிய துன்பம் நமக்கு வரும் துன்பங்கள் அல்ல....நம்மால் மற்றவர்களுக்கு  வரும் துன்பம்.

நம்மால் நம் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உடன் பிறப்போ துன்பப் பட்டால்  அது சகிக்க முடியாத துன்பம். நமக்கு வரும் துன்பத்தை நாம் தாங்கிக்  கொள்ளாலாம். நம்மால் மற்றவர்கள் படும் துன்பத்தை தாங்க முடியாது.

சீதையும், இலக்குவனும் இராமன் பொருட்டு கானகம் வந்தார்கள். அது இராமனுக்கு எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கும் ?

அதையும் தாங்கிக் கொண்டான்.

கானகம் போன இடத்திலாவது நிம்மதி உண்டா என்றால் - இல்லை.

கட்டிய மனைவியை மற்றவன் தூக்கிப் போனான்.

மனைவியைப் பறி  கொடுத்தான்.

துன்பம் மேலும் கூடியது.

அதையும் தாங்கிக் கொண்டான்.

அவன் பொருட்டு ஜடாயு உயிர் விட்டான்.

அதையும் தாங்கிக் கொண்டான்.

சக்கரவர்த்தி குமாரன், சுக்ரீவன் என்ற வானரத்திடம் உதவி வேண்டும் என்று கையேந்தி  நின்றான்.

இவ்வளவு துன்பமும் யாருக்கு ?

திருமாலின் அவதாரம் - தசரதனின் குமாரன் - ஜனகனின் மருமகன் - வசிட்டனின் சீடன் - பரசுராமனின் உரம் உருவியவன் - விச்வாமித்ரனின் வேள்வி காத்தவன் .....

அவனுக்கு இவ்வளவு துன்பங்கள் என்றால் , நாம் எல்லாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை -  அந்த துன்பங்கள் இராமனையும் விட்டு வைக்க வில்லை.

துன்பம் வந்த போது இராமன் என்ன செய்தான் ? எப்படி அவற்றை சமாளித்தான் ?

வாழ்க்கையில் நமக்கும் துன்பம் வரும்.

அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று சொல்லித்தரும் பகுதி சுந்தர காண்டம்.


சுந்தர காண்டம் பற்றி மேலும் பார்ப்போம்.



Monday, March 17, 2014

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம்

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம் 


யுத்த காண்டம்.

மாலையில் இராமன் கடற் கரையில் தனிமையில் இருக்கிறான்.

யுத்தம் வரப் போகிறது. எப்படி சண்டை இட வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய இடம்.

இராமனை சீதையின் நினைவு வாட்டுகிறது.

அவளைப் பற்றி நினைக்கிறான்.   அவன் உடல் சோர்வு அடைகிறது. காமத்தில் மெலிகிரான் .

அவன் மார்பும் தோளும் எவ்வளவு வலிமை மிக்கவை ? மேரு மலையை மத்தாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, மேரு மலை சாய்ந்தது. அதை பிடித்து நிறுத்த யாராலும் முடியவில்லை. அவர்களுக்கு வாலி உதவினான். அப்படிப்பட்ட பலம் கொண்ட வாலியின் நெஞ்சை ஒரே அம்பால் துளைத்த வலிமை கொண்டவன் இராமன்.

அது மட்டுமா ?

கரன் என்ற அரக்கனின் உயிரை கொண்டவன்.

அது மட்டுமா ?

ஏழு மரா மரங்களை ஒரே அம்பால் துளைத்த தோள் வலி கொண்டவன் இராமன்.

அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இராமனின் மார்பை மன்மதனின் அம்பு துளைத்தது.

அது மட்டும் அல்ல,

நிலவின் ஒளி என்ற வாளும் அவன் நெஞ்சில் பாய்ந்தது.

பாடல்

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய 
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன் 
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 

பொருள்

கரத்தொடும் = கையினால்

பாழி = வலிமையான, பெரிய

மாக் கடல் = பெரிய கடல்

கடைந்துளான் = கடைந்தவன் (வாலி)

உரத்தொடும் = அவன் வலிமையையும்

கரனொடும் = கரன் என்ற அரக்கனின் உயிரையும்

உயர ஓங்கிய = நீண்டு உயர்ந்து வளர்ந்த

மரத்தொடும் = மரா மரங்களையும்

தொளைத்தவன் மார்பில் = துளைத்தவன் மார்பில்

மன்மதன் = மன்மதன்

சரத்தொடும் = மலர் அம்புகளோடு

பாய்ந்தது = பாய்ந்தது

நிலவின் = நிலாவின்

தாரை வாள் = ஒளி என்ற வாள்

ஆணை செலுத்துவதும், அவனை சோர்வடையச் செய்வதும் - பெண் தான்.

எவ்வளவு பெரிய வலிமையான ஆளாக இருந்தாலும் (இராமன் உட்பட) பெண் மேல் கொண்ட  அன்பு / காதல் / காமம் ஆணை மென்மையாக்குகிறது.


பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத

 பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத 


அழுவது ஒரு அழகா ?

அழகுதான் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

திரு ஞான சம்பந்த நாயனாரை அறிமுகப் படுத்தும் முதல் பாடல்.

ஞான சம்பந்தர் என்ற குழந்தை அழுததாம்.

எதற்கு அழுதது ?

பசித்து பாலுக்கு அழவில்லை....பின் எதற்கு அழுதது ?

வேத நெறி தழைத்து ஓங்கவும்,
சைவத் துறை விளங்கவும்,
பூதப் பரமபரை பொலியவும்

ஞான சம்பந்தர் என்ற குழந்தை வாய் மலர்ந்து அழுதது.

பாடல்

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 

பொருள்

வேத நெறி = வேதங்களில் சொல்லப் பட்ட நெறிகள்

தழைத்து ஓங்க = தழைத்து ஓங்க

மிகு = மிகுந்த

சைவத் துறை விளங்கப் = சைவத் துறை விளங்க

பூத பரம்பரை = பூதப் பரம்பரை என்றால் இந்த அனைத்து உயிர்களும்

பொலியப் = சிறப்புடன் வாழ

புனித வாய் = புனிதம் நிறைந்த வாய்

மலர்ந்து அழுத = மலர்ந்து அழுத

சீத = குளிர்ந்த

வள = வளமையுள்ள

வயல்= வயல்கள்

புகலித் = சீர்காழி என்ற ஊரில்

திருஞான சம்பந்தர் = திருஞான சம்பந்தர்

பாத மலர் = பாதம் என்ற மலரை

தலைக் கொண்டு = தலையில் சூடிக் கொண்டு

திருத் தொண்டு பரவுவாம் = உயர்ந்த தொண்டை பரப்புவோம்

 
வேத நெறி தழைத்து ஓங்க .....மனிதன் பொல்லாதவன். நல்லது எதைத் தந்தாலும்  அதை குழப்பி, தானும் குழம்பி, அதை தன் சுயநலத்துக்கு பயன் படுத்திக்  கொள்வான். இதனால், மற்றவர்கள் எது சரி எது தவறு என்று குழம்புவார்கள்.  குரங்கு கை பூமாலை போல, எதை தந்தாலும் தன் குற்றங்களை அதில்  ஏற்றி, தன் சாமர்த்தியத்தை காட்டுகிறேன் என்று பாலில் நஞ்சைக் கலக்கும்  வேலையில் அவன் தேர்ந்தவன். இதனால் , உயர்ந்த  கோட்பாடுகளில்  களைகள் சேர்ந்து விடுகின்றன. உண்மை எது பொய் எது என்று தெரியாத குழப்பம்  வருகிறது. களைகளை நீக்கி , வேத நெறிகள் தழைத்து ஓங்கவும். 



சைவத் துறை விளங்கவும்: சமயம் என்ற ஆறு இறைவன் என்ற கடலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆற்றில் பல கிளைகள். ஒவ்வொரு  கிளைக்கும் பல துறைகள்  உள்ளன.அதில் சைவத் துறை விளங்க அவர்  மலர் வாய் திறந்து அழுதார். 

பூதப் பரம்பரை பொலிய : சைவத் துறை என்றால் அது சைவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் அது பொது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா உயிர்களுக்கும்  பொது அது. எனவே பூதப் பரம்பரை பொலிய என்றார். எல்லா உயிர்களும்  சிறந்து வாழ வேண்டும் என்ற அளவற்ற கருணை. 

புனித வாய்: பார்வதியிடம் ஞானப் பால் உண்பதற்கு முன்பே அது புனித வாய் என்றார். விட்ட குறை தொட்ட குறை என முன் பிறப்பில் கொண்ட இறை உணர்வு  கொண்டு  பிறந்தார்.

Saturday, March 15, 2014

இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி

இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி


இராமனும் சீதையும் வனத்தில் நடந்து செல்கிறார்கள். இராமன் இயற்கை காட்சிகளை சீதைக்கு காட்டிக் கொண்டே வருகிறான்.

"பெரிய யானைகளை அப்படியே விழுங்கும் மலைப் பாம்புகள், முனிவர்கள் மலையில் ஏறுவதற்கு எளிதாக படிகட்டுகள் போல வளைந்து வளைந்து கிடப்பதை பார் " என்று சீதைக்கு காட்டுகிறான்.

பாடல்

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன-பாராய்! 

பொருள்

இடி கொள் = இடியை விழுங்கியதைப் போல் சப்தம் எழுப்பும்

வேழத்தை = யானைகளை 

எயிற்றொடும் =  எயிறு என்றால் பல். இங்கு தந்தம்.

எடுத்து = எடுத்து

 உடன் விழுங்கும் = அப்படியே விழுங்கும்

கடிய மாசுணம் = வலிமை மிக்க மலைப் பாம்புகள்

கற்று அறிந்தவர் = கற்று அறிந்தவர்கள்

என அடங்கிச் = போல அடங்கி

சடை கொள் சென்னியர் = சடை கொண்ட முனிவர்கள்

தாழ்வு இலர் = தாழ்வு இல்லாதாவர்கள்

தாம் மிதித்து ஏறப் = அவர்கள் மிதித்து ஏற

படிகளாம் = படிகளாக

எனத் தாழ்வரை = என தாழ்ந்து

கிடப்பன-பாராய் = கிடப்பதைப் பார்

கற்று - அறிந்தவர் என்று இரண்டு வார்த்தைகளை கம்பன் போடுகிறான்.

கல்வி வேறு , அறிவு வேறு.

கல்வி கற்று, பின் அறிவு பெற்றவர்கள் அடங்கி இருப்பார்கள்.

அடக்கம் இல்லாதவர்களைப் பார்த்தால், ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்  கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று.

அடக்கம் அறிவின் இலட்சணம்.

இரண்டாவது, அறிவு தவத்திற்கு ஒரு படி கீழே.

தவம், அறிவைத் தாண்டி மேலே போகிறது.

முதலில் கல்வி, பின் அறிவு, அதையும் தாண்டி தவம்.


திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?

திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?


நமக்கு வரும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், எதைச் செய்வது, எதை செய்யக் கூடாது என்று அறியாமல் குழம்புவதுதான்.

இந்த வேலையில் சேரலாமா வேண்டாமா ? இந்த course ஐ எடுக்கலாமா வேண்டாமா ? உடற் பயிற்சி மையத்தில் சேரலாமா வேண்டாமா ?

சரி எப்படியோ, பல பேரிடம் கேட்டு மண்டையை உடைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், எடுத்த முடிவை எப்படி செயல் படுத்துவது.

ஒரு மாதிரி மண்டையைக் குழப்பி ஒரு வேலையில் சேர்ந்து விட்டோம், அல்லது ஒரு course இல் சேர்ந்து விட்டோம், அடுத்து என்ன செய்வது ?

இத்தனை சிக்கலான கேள்விக்கு இரண்டே வரிகளில்  தருகிறார் வள்ளுவர்.....

முதலில் பாடலைப் பார்ப்போம்.


என்று மொருவுதல் வேண்டும் புகழொடு  
நன்றி பயவா வினை


சீர் பிரித்த பின்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழோடு நன்றி தரதா செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

அர்த்தம் என்னவோ அவ்வளவுதான். ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள் .

எந்த வேலையை செய்தாலும் பயனும் வர வேண்டும், புகழும் வர வேண்டும் . அப்படி பட்ட  வேலையைதத் தான் செய்ய வேண்டும். அப்படி புகழும் பயனும் தராத  வேலையைச் செய்யக் கூடாது.

அது என்ன பயன், புகழ் ?

எந்த வேலையை செய்தாலும், நமக்கு அதில் ஒரு பலன் கிடைக்கும்.

படித்து , பரீட்சை எழுதினால் அதற்கு தகுந்த மதிப்பெண் வரும்.

புகழ் வர வேண்டும் என்றால்  என்ன செய்ய வேண்டும் ?

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும்,  அகில இந்திய அளவில் முதலாவதாக வர வேண்டும்....

அதற்கு என்ன செய்ய வேண்டும்  ? அதிகமாக உழைக்க வேண்டும்.

கொஞ்சமாக உழைத்தால் பயன் கிடைக்கும்.

மிக மிகக்  கடினமாக உழைத்தால் புகழ் கிடைக்கும்.

அப்படி புகழும் பயனும் கிடைக்காத செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

எதையும் மிக மிக சிறப்பாக செய்து பழக வேண்டும்.

யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், புகழ் பெற என்ன செய்ய வேண்டும் என்று.



நாலடியார் - ஊடலும் உப்பும்

நாலடியார் - ஊடலும் உப்பும் 


ஊடல் என்பது உப்பு போல.

அது இல்லாவிட்டால் உணவு சுவைக்காது.

சரி, அதுதானே உணவுக்கு சுவை சேர்க்கிறது என்று நினைத்து, சற்று அதிகமாக உணவில் உப்பை சேர்த்தால், உணவை வாயில் வைக்க முடியாது.

மிக மிக எச்சரிக்கையோடு உப்பை சேர்க்க வேண்டும்.

விலை மலிவு தான் என்று அள்ளிப் போடக் கூடாது.

ஊடல் கொள்வது எளிதுதானே என்று எப்ப பார்த்தாலும் துணைவன் அல்லது துணைவியோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

சமைப்பவர்களுக்குத் தெரியும், உணவில் உப்பு சற்று கூடி விட்டால் அதை சரி செய்வது எவ்வளவு கடினம் என்று. என்ன தான் சரி செய்தாலும் உணவில் நல்ல சுவை வராது. ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருக்கும்.

ஊடலும் அப்படித்தான். சற்று கூடி விட்டால் வாழ்க்கை நெருடத் தொடங்கிவிடும்.

எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் சுவையின் அளவைப் பொருத்தது. சிலருக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும். சிலருக்கு கொஞ்சம் குறைய வேண்டும். சுவை அறிந்து உப்பை சேர்க்க வேண்டும்.

எனவே தான், இலையின் ஓரத்தில் உப்பை வைத்து விடுவார்கள். யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளட்டும் என்று.

ஊடலும் அது போலத்தான். சுவை அறிந்து சேர்க்க வேண்டும்.

"அவளை கண்டு , அவளை அணைக்கா விட்டால் அவள் வாடிப் போவாள். கண்ட பின், கொஞ்சம் ஊடல் கொள்வாள். அந்த ஊடல் காதலில் உப்பு போல. ஊடல், காதலில் ஒரு வழி"

பாடல்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

பொருள்

முயங்காக்காற் = அவளை கண்டு அணைக்கா விட்டால் 

பாயும் = உடனே பாய்ந்து வரும் 

பசலை = பிரிவு துயரில், பெண்ணின் உடல் நிறம் மாறும் என்கிறார்கள். நிறம் மாறுமோ இல்லையோ, கொஞ்சம் வாடிப் போகும் என்று கொள்ளலாம்.

மற் றூடி = மற்று ஓடி = மற்ற படி ஊடல் கொண்டு

உயங்காக் கால் = உயங்குதல் என்றால் வாடுதல், மெலிதல், சோர்தல் என்று பொருள். ஊடல் கொண்டு வாடாவிட்டால் 

உப்பின்றாம் காமம் = காமம் உப்பு சப்பு இல்லாமல் போய் விடும்


வயங்கு = வயங்குதல் என்றால் ஒளி வீதல். சிறந்து இருத்தல் 

கோதம் = ஓதம் = ஓதம் என்றால் கடலின் நீர் பெருக்கம். சில சமயம் கடல் நீர் பொங்கி ஆற்றில் உள் நோக்கி வரும். அந்த மாதிரி இடங்களுக்கு  ஓதம் பொங்கும் முகம் என்று பெயர்.  (Backwaters )

நில்லாத் =  நில்லாமல்

திரையலைக்கும் = திரை என்றால் அலை. அலை அடித்துக் கொண்டே இருக்கும்

நீள்கழித் = நீண்ட ஆற்றின் கரை

தண் = குளிர்ச்சி உடைய

சேர்ப்ப! = தலைவா

புல்லாப் = புல்லுதல் என்றால் அணுகுதல், அணைத்தல் 

புலப்பதோர் = புலத்தல் என்றால் ஊடுதல்

ஆறு = வழி

ஊடலும் கூட கூடலுக்கு ஒரு வழிதான் என்கிறது நாலடியார்.