Friday, May 16, 2014

மண்டோதரி புலம்பல் - ஓர்அம்போ, உயிர் பருகிற்று

மண்டோதரி புலம்பல் - ஓர்அம்போ, உயிர் பருகிற்று


'
போரில் இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து மண்டோதரி புலம்புகிறாள்.

இராவணன் எவ்வளவு பெரிய வீரன் ? அவன் மார்பை குகைகள் போல ஒரு மானுடனின் அம்பு திறக்க முடியுமா ? ஒரு மனிதனுக்கு அவ்வளவு வீரமா ? இருக்க முடியாது என்ற சந்தேகம் இழையோடுகிறது...


பாடல்


ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்

தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று

வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!

ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ!


பொருள்


ஆரம் போர்  = ஆரம் போர்த்திய

திரு மார்பை = சிறந்த மார்பை

அகல் = அகன்ற

முழைகள் = குகைகள்

எனத் திறந்து = என்று திரிந்து

இவ் உலகுக்கு அப்பால் = இந்த உலகுக்கு அப்பால்

தூரம் போயின = வெகு தூரம் போயின

ஒருவன் = ஒருவனின்

சிலை = வில்லை

துரந்த சரங்களே = விட்டு விலகிய அம்புகள்

போரில் தோற்று = போரில் தோற்று

வீரம் போய் = வீரமெல்லாம் போய்

உரம் குறைந்து = வலிமை குறைந்து

வரம் குறைந்து =பெற்ற வரங்களின் வலிமை குறைந்து

வீழ்ந்தானே! = போரில் வீழ்ந்தானே

வேறே! = மேலும்

கெட்டேன்! = நான் கெட்டேன்

ஓர்அம்போ, = ஒரு அம்பா

உயிர் பருகிற்று = உயிரை பருகிற்று ?

இராவணனை? = இராவணனின்

மானுடவன் ஊற்றம் ஈதோ! = ஒரு மானிடனின் வலிமை இவ்வளவா ?

இராவணின் உயிரை எடுத்தது ஒரு அம்பு இல்லை, வேறு ஏதோ என்று அடுத்த  பாடலில் சொல்கிறாள்.....






Thursday, May 15, 2014

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை


மகான்களின் வாழ்வில் ஏதோ நிகழ்கிறது. அவர்கள் வாழ்கை அதற்குப்பின் மாறிப் போகிறது.

இறைவன் நேரில் வந்து அருள் செய்ததாக கூறுகிறார்கள். உபதேசம் செய்ததாக, ஆட் கொண்டதாக, அருள் புரிந்ததாக, சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய்  முருகன் ஜெப மாலை தந்ததாக கூறுகிறார். "செப மாலை தந்த சத் குரு நாதா, திருவாவினன் குடிப் பெருமாளே" என்பார்.

இங்கே மாணிக்க வாசகர்,

கண்ணப்பன் போல் என்னிடம் அன்பு இல்லை. இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டு எனக்கு ஒரு நல் வழியை காட்டினாய். உன்னுடைய கருணை வான் போல பரந்து விரிந்து அளவற்றது. அப்படிப் பட்ட , திருநீறு அணிந்த சிவனை நீ பாடு, அரச வண்டே

என்கிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!


பொருள் 


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பது  = ஒப்பிட்டு பார்க்கும் படி

ஓர் அன்பு = ஒரு உயர்வான அன்பு

இன்மை கண்டபின் = இல்லாமை கண்ட பின்பும்

என் அப்பன் = என் தந்தை போன்றவனும்

என் ஒப்பு இல் = என்னுடைய ஒப்பு இல்லாதவனும்

என்னையும் ஆட்கொண்டருளி = என்னையும் ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்து = எந்த வண்ணம் (வழி) நான் வாழ வேண்டும் என்று என்னைப் பணித்து

என்னை  = என்னை

`வா' என்ற வான் கருணைச் = வா என்று அழைத்து சேர்த்துக் கொண்ட வான் போன்ற கருணை

சுண்ணப் = பொடி  (திரு நீறு )

பொன் = பொன் போன்ற நிறம் உடைய

நீற்றற்கே = நிறம் கொண்டவற்கே

சென்று ஊதாய்; = சென்று பாடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே 

Wednesday, May 14, 2014

திருக்கோத்தும்பி - ஆனந்தத் தேன் சொரியும்

திருக்கோத்தும்பி -  ஆனந்தத் தேன் சொரியும்


உலக இன்பங்கள் சிறிது நேரத்தில், சிறிது காலத்தில் தீர்ந்து போய் விடுபவை. நீண்ட காலம் இன்பம் தரும் ஒன்று இல்லை.

எவ்வளவு பெரிய இன்பம் என்றாலும் மனம் சிறிது காலத்தில் சலித்து விடும்.

இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு தன்னிரக்கம் வரும்.


சில இன்பங்கள் பார்க்கும் போது இன்பம் தரும். சில இன்பங்கள் தொடும்போது இன்பம் தரும். சில இன்பங்கள் சுவைக்கும் போது இன்பம் தரும்.

சரி பார்க்கும் போது இன்பம் தருகிறதே என்று பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா ?

சுவைக்கும் போது இன்பம் தருகிறதே என்று எப்போதும் சுவைத்துக் கொண்டே இருக்க முடியுமா ?

எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத் தான்.

எப்போதெல்லாம் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதெல்லாம் நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்,
எப்போதேலாம் அதைப் பற்றி பேசுகிறோமோ, அப்போதெல்லாம் இன்பம்
அது மட்டும் அல்ல
அது மட்டும் அல்ல எல்லா நேரத்திலும், அனைத்து செயலிலும் இன்பத்தை மழையாக பொழிவது அவன் திருவடிகளே.

இந்த சின்ன பூவில் இருக்கும் தேனை விட்டு விட்டு அவன் திருவடியை நாடு என்று தும்பிக்குச்  சொல்கிறார். நமக்கும்தான்.

பாடல்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

தினைத்தனை உள்ளது = தினை அளவு சிறிய

ஓர் பூவினில் = ஒரு பூவில்

தேன் உண்ணாதே, = தேனை உண்ணாமல்

நினைத்தொறும், = நினைக்கும் ஒவ்வொரு பொழுதிலும்

காண்தொறும் = எப்போதெல்லாம் காண்கிறோமோ அப்போதெல்லாம்

பேசும்தொறும் = எப்போதெல்லாம் பேசுகிறோமோ அப்போதெல்லாம்

எப்போதும் = எல்லா சமயத்திலும்

அனைத்து எலும்பு உள் நெக = உடம்பில் உள்ள அனைத்து ஏலேம்புகளும் உருக

ஆனந்தத் தேன் சொரியும் = ஆனதமயமான தேனை பொழியும்

குனிப்பு உடையானுக்கே = குனிப்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம். ஒன்று நடனம். இன்னொன்று வளைக்கை. வளையல் அணிந்த கை. வளையல் அணிந்த கை உடையவன் அவன் ஒருவன் தான். மாதொரு பங்கன். அர்த்த நாரி.

சென்று ஊதாய் = சென்று ரீங்காரமிடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே

இது மேலோட்டமான பொருள்.

ஆழமான பொருள் என்ன ?

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தை உருவாகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனக்குள் தாயின் (பெண்ணின்) அம்சத்தையும், தந்தையின்  (ஆணின்) அம்சத்தையும் கொண்டு பிறக்கிறது.

நாளடைவில், இந்த சமுதாயம் ஆண் குழந்தை என்றால் பெண் அம்சத்தையும், பெண் குழந்தை என்றால் ஆண் அம்சத்தையும் அழுத்தி நாளடைவில் மறக்கடித்து  விடுகிறது.

நாம் பெரியவர்கள் ஆகும் போது குறை பட்டவர்களாகவே இருக்கிறோம். ஏதோ  ஒன்று நம்மில் குறைகிறது.  அந்த குறையை வெளியில் இருந்து இட்டு நிரப்ப முயல்கிறோம். என்னதான் இட்டு நிரப்பினாலும் அது நிறைய மாட்டேன்  என்கிறது.

நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும்.

ஆண் என்றால் அழுத்தி வைக்கப்பட்ட பெண் உணர்வு வெளி வர வேண்டும். ஒன்றாகக் கலக்க வேண்டும்.

அதே போல் பெண் என்றால் அவளுக்குள் அழுந்திக் கிடக்கும் ஆண் உணர்வு வெளி வர வேண்டும்.

ஆணுக்குள் இருக்கும் பெண்ணும், பெண்ணுக்குள் இருக்கும் ஆணும் ஒன்றாக சேரும்போது  உண்மையான , நிரந்தரமான இன்பம் பிறக்கிறது.


இதே கருத்தை நாவுக்கரசரும் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவற்றை இன்னொரு நாள்  பார்ப்போம்.


Tuesday, May 13, 2014

திருக்கோத்தும்பி - நான் யார் ?

திருக்கோத்தும்பி - நான் யார் ?


நான் யார் ?

நான் என்பது என் உடலா ? என் உள்ளமா ? என் நினைவுகளா ? என் அறிவா ? என் மனமா ? இவை அன்றி கண்ணுக்கு காணாத உயிரா ? ஆத்மாவா ?

எது நான் ?

நான் என்பது மாறிக்  .இருக்கிறது. இப்படி மாறும் நானில் மாறாத நான் யார் ?

காலம் காலமாக இந்த கேள்வி பெரிய பெரிய ஞானிகளை வாட்டி வதைத்து இருக்கிறது.

மாணிக்க வாசகரையும் இந்த கேள்வி விடவில்லை.

இருந்தாலும்,

இறைவா நீ என்னை ஆட்கொள்ளாவிட்டால்,  நானும்,என் அறிவும், என்ன ஆகியிருப்போம் ? என்னை இந்த உலகில் யார் அறிந்து இருப்பார்கள். உன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டதால் நான் பிழைத்தேன். அப்படிப் பட்ட சிவனின் தாமரை போன்ற பாதங்களில் சென்று நீ வணங்குவாய் என்று தேனியிடம் (தும்பி)  கூறுகிறார் அடிகள்.

பாடல்

நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

நான் ஆர்? = நான் யார்

என் உள்ளம் ஆர்? = என் உள்ளம் யார்

ஞானங்கள் ஆர்? = என் அறிவு என்பது என்ன

என்னை யார் அறிவார் = நான் என்று சொல்லும் என்னை , அது என்ன என்று யார் அறிந்து சொல்ல முடியும் ?


வானோர் பிரான் = வானவர்களின் தலைவன் (பிரியாதவன் என்பது பிரான் என்று ஆயிற்று)

என்னை ஆண்டிலனேல்? = என்னை ஆட்கொல்லா விட்டால்

மதி மயங்கி = மதி மயங்கி . சிவன் ஏன்  மணிவாசகரை ஆட்கொள்ளவேண்டும்? அதனால் சிவனுக்கு கிடப்பது என்ன ? ஒன்றும் இல்லை. ஏதோ மதி மயங்கி, என்னை ஆட் கொண்டு விட்டான் என்று அடக்கத்தோடு அடிகள். நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. அவன் என்னவோ மயக்கத்தில் எனக்கு அருள் செய்து விட்டான் என்கிறார்.


ஊன் ஆர் = மாமிசம் இருக்கும்

உடை தலையில் = உடைந்த மண்டை ஓட்டில்

உண் பலி = உணவு உண்ணும்

தேர் அம்பலவன் = அம்பலத்தில் ஆடும் அவனின்

தேன்  ஆர் = தேன் சொரியும்

கமலமே = தாமரை போன்ற திருப்பாதங்களில்

சென்று ஊதாய்; = சென்று ஊதாய்

கோத்தும்பீ! = அரச வண்டே

நான் என்ற  எண்ணமும்,அறிவும் இறை அருள் பெறும் போது நிறைவு பெறுகிறது.

இதையே வள்ளுவரும்

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்  என்றார்.

அறிவு, அருள் பெறும்போது அர்த்தம் பெறுகிறது



Monday, May 12, 2014

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு 


முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த பாடல் வயது வந்தவர்களுக்கு மட்டும்.  வயது வராதவர்கள், அல்லது ஆண் பெண் உடல் கூறு சம்பந்தப் பட்ட வார்த்தைகளால் சங்கப்படுபவர்கள் இதை மேலும் படிக்காமல் இருப்பது நல்லது.

தமயந்தியின் நினைவால் நளன்  .வாடுகிறான். காமம் அவனை சுட்டு எரிக்கிறது.

அந்த சூட்டை தணிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான்.

சூட்டுக்கு இதமாக ஏதாவது இளநீர் பருகலாம், கரும்புச் சாறு நல்லது, குளிர்ந்த நீர் குளத்தில் நீராடலாம், நல்ல நிழலில் போய் நிற்கலாம்....இவற்றால் இந்த காமம் என்ற சூட்டினால் விளைந்த தாகம் தீரலாம்....

பாடல்

கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளம் சொல்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் - மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ

வெய்தாமக் காம விடாய்.


பொருள்

கொங்கை இளநீரால் = (தமயந்தியின்) மார்புகள் என்ற இள நீரால்

குளிர்ந்த = குளிர்ச்சியான

இளம் = இளமையான

சொல்கரும்பால் = அவளுடைய சொல் என்ற கரும்பால்

பொங்கு = பொங்கி

சுழி = சுழித்து ஓடும்

என்னும் = என்ற

பூந்தடத்தில் = அவளுடைய தொப்பூழ் (வயறு)

மங்கை = பெண்

நறும் = வாசம் வீசும்

கொய் = கொய்த

தாம = மலர் சூடிய

வாசக் = வாசம் வீசும்

குழல் = குழல், தலை முடி

நிழற் கீழ்= நிழலின் கீழே. குழல் நிழல் தரலாம்....நிழல் போல குழலும் கருமையாக இருக்கும்.

ஆறேனோ = குளிர்வேனோ ?


வெய் = கொடுமையான

ஆம் = ஆன

காம விடாய். = காமத்தினால் வந்த தாகம்

அவள் மேல் எத்தனை ஆசை அவனுக்கு. உருகுகிறான்.




Sunday, May 11, 2014

மண்டோதரி புலம்பல் - இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்!

மண்டோதரி புலம்பல் - இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

போரில் இறந்து கிடக்கிறான் இராவணன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அவளால் நம்ப முடியவில்லை. இறந்து கிடப்பது இராவணன் தானா என்று சந்தேகம் வருகிறது அவளுக்கு. இராவனானாவது இறப்பதாவது என்று நினைத்து இருந்தவள் அவள். இறந்து கிடக்கும் இராவணனின் உடலைப் பார்த்த பின்னும் அவளால் நம்ப முடியவில்லை.  மண்ணின் மேல் கிடப்பது என் உயிர் நாயகனின் முகங்கள் தானா ? என்று கேட்கிறாள்.

ஐயோ எனக்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்து விட்டதே.  என் கணவன் எனக்கு முன்னால் இறந்து விட்டானே. இதுதானா என் கற்பின் பெருமை.

எவ்வளவோ படித்தான், தவம் செய்தான்,  தானம் செய்தான், கடைசியில் இராவணனுக்கு கிடைத்த பரிசு இது தானா ... இப்படி அனாதையாக மண்ணில் கிடக்கிறானே என்று துக்கம் தாளாமல் அழுகிறாள்.....




பாடல்

'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன் 
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ? 
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய  முகங்கள்தானோ? 
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

பொருள்

'அன்னேயோ! அன்னேயோ! = அம்மா, அம்மா

ஆ, = ஆ

கொடியேற்கு = கொடியவளான எனக்கு

அடுத்தவாறு! = நேர்ந்த கொடுமை என்ன

அரக்கர் வேந்தன் = அரக்கர் வேந்தன் (இராவணன்)


பின்னேயோ, இறப்பது? = அவனுக்கு பின்னாலா நான் இறப்பது ?

முன் பிடித்திருந்த  கருத்து அதுவும் பிடித்திலேனோ? = அவனுக்கு முன் நான் இறக்க வேண்டும் என்று நான் முன்பு நினைத்திருந்த கொள்கையும் 

முன்னேயோ விழுந்ததுவும் = எனக்கு முன்னால் விழுந்தது

முடித் தலையோ? = இவை முடி சூடிய தலைகல்தானா ?

படித் தலைய  முகங்கள்தானோ? = இவை என் ஆருயிர் நாயகனின் தலைகள் தானா ?


என்னேயோ, என்னேயோ, = என்னவோ, என்னவோ

இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ  = இராவணன் முடிந்த முடிவு இதுதானா ?

பாவம்! = பாவம்



இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென

இராமாயணம் - மண்டோதரி புலம்பல் - கடல் மேல் மின்னல் வீழ்ததென 


இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அரக்கியர்கள் எல்லோரும் அவன் மேல் விழுந்து அழுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.

மண்டோதரி புலம்பலில் நாம் சோகத்தையும், வாழ்வின் நிலையாமையும், ஆறாம் பிறழ்ந்த வாழ்வின் முடிவும், விதியின் வலியும் , இறைத் தத்துவங்களையும் காண முடியும்.



இராவணன் மேல் மண்டோதரி வந்து விழுகிறாள். கடல் மேல் மின்னல் விழுந்தது மாதிரி இருந்தது என்கிறான் கம்பன்.

என்ன உதாரணம் இது ?

இராவணின் மேனி பெரிய கரிய மேனி. கடல் போல. மண்டோதரி மின்னல் போல மெலிந்து, ஒளி பொருந்தியவள் என்பது ஒரு அர்த்தம்.

கடல் மேல் மின்னல் விழுந்தால் அதைப் பின் கடலில் இருந்து பிரித்து எடுக்க முடியாது என்பது ஒரு அர்த்தம்.

மின்னல் கடல் மேல் விழுந்தால், கடலுக்கு ஒன்றும் ஆகி விடாது. ஆனால், அதே மின்னல் வேறு எதன் மேல் விழுந்தாலும் அது எரிந்து சாம்பாலாகி விடும். பெண், கணவனோடு சேர்ந்தால் ஒரு குழப்பமும் இல்லை. மாறாக பிற ஆடவன் தீண்டினால், அவனை எரிக்கும் அவள் கற்பு.  கற்பின் பெருமையை சொல்லும் அர்த்தம் இன்னொன்று.


அப்படி மண்டோதரி புலம்பும் போது வாய் இல்லாத மரங்களும் மலைகளும் அதைக் கண்டு உருகின.



பாடல்

தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள், 
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து, 
இரங்கினள் - மயன் மகள், - இனைய பன்னினாள்: 

பொருள்

தரங்க நீர் = அலை கொண்ட நீர்

வேலையில் = கடலில்

தடித்து வீழந்தென = மின்னல் விழுந்தது போல

உரம் = வலிமை

கிளர் = பொங்கும்

மதுகையான் = இராவனைனிடம்

உருவின் உற்றனள் = உடலின் மேல் விழுந்து

மரங்களும் மலைகளும் உருக = மரங்களும் மலைகளும் உருக

வாய் திறந்து = வாய் திறந்து

இரங்கினள் = அழுதாள்

மயன் மகள் = மயனின் மகள்

இனைய பன்னினாள் = இவற்றை செய்தாள் . அதாவது பின் வரும் புலம்பலாகிய செயலைச் செய்தாள்.

பின் வரும் மண்டோதரியின் புலம்பலுக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன்.

மண்டோதரியின் வாயிலாக இராமனின் மன நிலை, கம்பனின் மன நிலை, இராவணன் மேல்  மண்டோதரி கொண்ட பாசம், அத்தனையும் வெளிப் படுகிறது.

அவற்றைப் பார்ப்போம்.