Tuesday, June 10, 2014

இராமாயணம் - நிலம் தந்த திருமகள்

இராமாயணம் - நிலம் தந்த திருமகள் 


சீதை நிலத்தில் இருந்து பிறந்தாள் என்று படித்து இருக்கிறோம்.

ஏன் நிலம் சீதையை தந்தது என்று சூர்பனகை சொல்கிறாள்.

தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து திருமகள் தோன்றினாள். அதற்குப் போட்டியாக நில மகளும் நாமும் திருமகளுக்கு இணையான ஒரு பெண்ணைத் தர வேண்டும் என்று சீதையை  தந்ததாம்.

தேரின் மேல் பாகம் போல இடுப்பைக்  கொண்ட சீதை, தேவலோகத்திலும், மண்ணுலகிலும், கச்சணிந்த பெண்களின் வயிற்றில் பிறந்தவள் அல்ல. தாமரை பூவில் இருக்கும் திருமகளை, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது , அதில் வந்த சங்கில் இருந்து திருமகள் தோன்றினாள் . அதை விட சிறப்பாக மண் மகள் சீதையைத் தந்தாள் "

என்றாள்

பாடல்

“தேர் தந்த அல்குல் சீதை,
    தேவர்தம் உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார் தம்
    வயிறு தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத் தாளைத்
    தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது, அதனை வெல்வான்
    நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே.‘‘


பொருள்

“தேர் தந்த அல்குல் சீதை = தேரின் மேல் பாகம்  போல இடுப்பைக் கொண்ட சீதை
   
தேவர்தம் உலகின் = தேவர்களின் உலகிலும்

இம்பர் = இந்த மண் உலகிலும்

வார் தந்த கொங்கையார் தம் = கச்சை அணிந்த பெண்களின்

வயிறு தந்தாளும் அல்லள் = வயிற்றில் பிறந்தவள் அல்லள்

தார் தந்த கமலத் தாளைத் =  மலர்ந்த தாமரையில் இருக்கும் இலக்குமியை

தருக்கினர் = சண்டை போட்டவர்கள் (தேவர்களும் அசுரர்களும் )

கடையச் = கடைந்த போது

 சங்க நீர் தந்தது = சங்கில் உள்ள நீரில் இருந்து வந்தவள் இலக்குமி

அதனை வெல்வான் = அதை வெல்லும் படி

நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே. = நிலம் சீதையைத் தந்தது.

இலக்குமியை விட சிறந்தவள் சீதை.

சூர்பனகையின் வர்ணனையால் இராவணன் சீதை மேல் மோகம் கொள்கிறான். அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவனை கிறங்க அடிக்க வேண்டும் என்றால்  சீதை எப்படி இருக்க வேண்டும் ? அதை தன் வார்த்தைகளில் கொண்டு வருகிறாள் சூர்பனகை.

இன்னும் சில பாடல்கள் இருக்கின்றன.

அதன் பின் இராவணன் காமத்தில் படும் பாட்டை கம்பன் சொல்லுவான். அந்த காம வேதனையிலும் சில வாழ்க்கை பாடங்களை நமக்கு உணர்த்துவான் கம்பன். "காமத்தை வெல்வது எப்படி " என்பது அதில் ஒரு பாடம்,

இரண்டையும்  பார்ப்போம்.

Monday, June 9, 2014

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல 


மேய்ப்பவன் இல்லாத மாடு என்ன செய்யும் ? அது பாட்டுக்கு போகும், கண்ணில் கண்டதை தின்னும், நிற்கும், போகும் இடம் தெரியாமல் அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும். ஒதுங்க இடம் கிடையாது.

அது போல நான் அலைகிறேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. தினமும், வேலைக்குப் போகிறேன், சம்பாதிக்கிறேன், செலவழிக்கிறேன்...சேமிக்கிறேன்...எதுக்கு இதெல்லாம் செய்கிறேன் என்று ஒன்றும் தெரியவில்லை. நீ எனக்கு அருள்வாய் என்று நினைத்து இருந்தேன். அதுவும் பெரிய ஏமாற்றமாகப் போய் விடும் போல் இருக்கிறது. தயவு செய்து என்னை வா என்று அழைத்து எனக்கு அருள் புரிவாய் என்று குழைகிறார் மணிவாசகர்

பாடல்

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென் றருளாயே.



சீர் பிரித்த பின்

இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன் என்றென்றே ஏமாந்து இருப்பேனை 
அருங் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார் இல்லாத மாடு ஆவேனோ நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று  அருளாயே.


பொருள்

இரங்கும் நமக்கு = நம் மேல் இரக்கப்பட்டு

அம்பலக்கூத்தன் = அம்பலத்தில் ஆடும் கூத்தன்

என்றென்றே = என்று என்றே. எப்போது எப்போது என்று

ஏமாந்து இருப்பேனை = ஏமாந்து இருப்பேனை
 
அருங் கற்பனை = அருமையான மந்திரம்

கற்பித்து = சொல்லித்தந்து

ஆண்டாய் = ஆட்கொண்டாய்

ஆள்வார் = மேய்ப்பவன்

இல்லாத மாடு ஆவேனோ = இல்லாத மாடு போல ஆவேனோ?

நெருங்கும் = உன் அருகில் இருக்கும்

அடியார்களும் = அடியவர்களும்

நீயும் = நீயும்

 நின்று  = இருந்து

நிலாவி = விளங்கி

விளையாடும் = விளையாடும்

மருங்கே சார்ந்து வர = அருகில் சேர்ந்து வர

எங்கள் வாழ்வே = எங்களின் வாழ்க்கை போன்றவனே

வா என்று  அருளாயே = வா என்று எங்களுக்கு அருள் புரிவாயே

மாடு என்பதற்கு செல்வம் என்று ஒரு பொருளும் உண்டு.  செல்வத்தை சரியான வழியில்   பராமரிக்கா விட்டால் அதனால் வரும் தீமைகள் அதிகம். 

நமக்கு கிடைத்த வாழ்க்கை ஒரு மிகப் பெரிய செல்வம். அதை சரி வர பயன் படுத்த  வேண்டும். 

செய்கிறோமா ?


இராமாயணம் - தீமை செய்யாமல் இருக்க

இராமாயணம் - தீமை செய்யாமல் இருக்க 


சீதையைப் பற்றி சூர்பனகை மேலும் இராவணனிடம் கூறுகிறாள்.

பெண்ணின் அன்பும்,  நெருக்கமும், பாசமும் ஆணை தீய வழியில் செல்லாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அவளின் கோபமும், வஞ்சமும், பேராசையும் அவனை தீய வழியில் செலுத்தவும் கூடியது.

சீதை பக்கத்தில் இருந்தால், நீ அவளிடமே எந்நேரமும் இருப்பாய். வேறு எந்த தீங்கும் செய்ய மாட்டாய் என்கிறாள் சூர்பனகை இராவணனிடம். இராவணனை கட்டிப் போடும் அழகு சீதையின் அழகு.

அழகான, அன்பான பெண் அருகில் இருந்தால், வேறு என்ன வேண்டும் ?


"சீதையின் பேச்சு குழந்தையின் மழலை போல்  இருக்கும்.நீ அவளைப் பெற்றப் பின், உன் செல்வம் அனைத்தையும் அவளுக்கே கொடுத்து விடுவாய். உனக்கு நல்லதையே சொல்லுகிறேன். நீ அப்படி அவளிடம் அடிமை பட்டு கிடப்பதால் உன் அரண்மனையில் உள்ள மற்ற பெண்களை கவனிக்க மாட்டாய். அதனால், நான் அவர்களுக்கு நல்லது செய்யவில்லை "

என்கிறாள்.

பாடல்

'பிள்ளைபோல் பேச்சினாளைப் 
     பெற்றபின், பிழைக்கலாற்றாய்; 
கொள்ளை மா நிதியம் எல்லாம் 
     அவளுக்கே கொடுத்தி; ஐய! 
வள்ளலே! உனக்கு நல்லேன்; 
     மற்று, நின் மனையில் வாழும் 
கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் 
     கேடு சூழ்கின்றேன் அன்றே?

பொருள்

'பிள்ளைபோல் பேச்சினாளைப் = பிள்ளை போல் மழலை மொழி பேசுபவளை

பெற்றபின், = நீ அடைந்த பின்

 பிழைக்கலாற்றாய் = நீ பிழையே செய்ய மாட்டாய். எப்போதும் அவள் அருகிலேயே இருப்பாய்.  எனவே,வேறு எதுவும் செய்ய மாட்டாய்.

கொள்ளை = கொட்டிக் கிடக்கும்

மா நிதியம் எல்லாம் = பெரிய செல்வங்களை எல்லாம்

அவளுக்கே கொடுத்தி = அவளிடமே கொடுத்து விடுவாய்

ஐய! = ஐயனே

வள்ளலே! = வள்ளலே

உனக்கு நல்லேன் = உனக்கு நான் நல்லது சொல்லுகிறேன்

மற்று = மற்றபடி

நின் மனையில் வாழும் = உன் அரண்மனையில் வாழும்

கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் = கிளி போல பேசும் பெண்களுக்கு எல்லாம்

கேடு சூழ்கின்றேன் அன்றே? = கெடுதல் செய்கின்றேன்.

இந்த பாட்டில் இரண்டு அர்த்தம் தொனிக்கும் படி கம்பன் கவி புனைந்து  இருக்கிறான்.

"கொள்ளை மா நிதியம் " - கொள்ளை கொள்ளையாக கொட்டிக் கிடக்கும் செல்வங்கள் என்பது ஒரு அர்த்தம்.   கொள்ளை போகப் போகும் செல்வங்கள் என்று இன்னொரு அர்த்தம்.

"நின் மனையில் வாழும் கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு   சூழ்கின்றேன் சூழ்கின்றேன் " - நீ எப்போதும் சீதையிடமே இருப்பதால் மற்ற பெண்களை  கவனிக்காமல் விடுவதால் அவர்களுக்கு கேடு என்பது ஒரு அர்த்தம். இராமனிடம் சண்டையிட்டு நீ இறந்து போவாய், அதனால் அவர்களுக்கு  கேடு என்பது இன்னொரு அர்த்தம்.

கேடு வருவதற்கு முன்னே வார்த்தைகள் அப்படி வந்து விழுகின்றன.

எப்போதும் நல்லதே சொல்ல வேண்டும்.

யார் கண்டது , சொல்லியது ஒரு வேளை பலித்து விட்டால் ? சூர்பனகை சொல்லியது   பலித்தது.


பிரபந்தம் - ஐம்புலன்களை அருள் எனும் வாளால் வெட்டி எறிந்து

பிரபந்தம் - ஐம்புலன்களை அருள் எனும் வாளால் வெட்டி எறிந்து 



மனைவியும் மக்களும் எவ்வளவு தூரம் உதவுவார்கள். ஏதோ கொஞ்ச காலம், கொஞ்ச நேரம் உதவி செய்வார்கள். பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போய் விடுவார்கள். மனைவி அலுப்பாள்.

முடியாத காலத்தில் அவர்கள் உதவுவார்கள் என்று கனவு காணக் கூடாது.

அவர்களை விடுங்கள்...அவர்கள் நமக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஆசா பாசங்கள் இருக்கின்றன.

நம்முடைய புலன்களே நமக்கு உதவி செய்யாது. கண் சரியாகத் தெரியாது, காது சரியாகக் கேட்காது.

நம் புலன்களே நமக்குத் துணை இல்லை.

நம் மனைவி மக்கள் நமக்குத் துணை இல்லை.

இதை எல்லாம் அறிந்து கொண்டு உன் திருவடி வந்து அடைந்தேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

பாடல்

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.


சீர் பிரித்த பின்

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவா 
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒரு வாள் உருவி 
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே.

பொருள்

பிறிந்தேன் = பிரிந்து வந்தேன்

பெற்ற மக்கள் = பெற்ற பிள்ளைகள்

பெண்டிர் = மனைவி

என்று  = என்று

இவர் = இவர்கள்

பின் உதவா  = பின்னாளில் உதவ மாட்டார்கள் என்று

அறிந்தேன் = அறிந்தேன்

நீ பணித்த = நீ அளித்த

அருள் என்னும் ஒரு வாள் உருவி = அருள் என்ற வாள் உருவி

எறிந்தேன் = வெட்டினேன்

ஐம்புலன்கள் = ஐந்து புலன்களை  (அவை தரும் இன்பங்களை)

இடர் தீர = துன்பம் தீர

வெறிந்து வந்து = ஆர்வத்துடன்

செறிந்தேன் = அடைந்தேன்

நின்னடிக்கே = உன் திருவடிகளுக்கே

திரு விண்ணகர் மேயவனே = விண்ணகரம் என்ற திருத்தலத்தில் உறைபவனே

"..கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா  கச்சி ஏகம்பனே..." என்று பட்டினத்தாரும் புலம்பினார்.....





Sunday, June 8, 2014

நந்திக் கலம்பகம் - குனிந்து பார்

நந்திக் கலம்பகம் - குனிந்து பார் 


அவள் மிக மிக அழகான இளம் பெண்.

பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் அழகு கொண்டவள்.

அவள் தகப்பனோ வயதானவன். வலிமை குன்றியவன். ஏழ்மையில் இருக்கிறான். 

அந்தப் பெண்ணை மணமுடிக்க வேண்டி பெண் கேட்டு அண்டை நாட்டு மன்னன் தூது அனுப்பி இருக்கிறான்.

கிழவன் தானே, என்ன செய்து விட முடியும் என்ற நினைப்பில்.

அந்த கிழவன் சொல்கிறான்....

"என்னிடம் இருப்பது ஒரு அம்புதான், வில்லும் ஒடிந்து போய் இருக்கிறது, அந்த ஒடிந்த வில்லிலும் நாண் அறுந்து போய் இருக்கிறது, நானோ வயதான கிழவன் என்று எண்ணியா உன் மன்னன் என் மகளை பெண் கேட்டு உன்னை தூதாக அனுப்பி இருக்கிறான் ? நந்தி மன்னன் இருக்கும் இந்த நாட்டில், என் வீட்டை கொஞ்சம் குனிந்து பார் ....என் குடிசையை சுற்றி வேலி போட்டு இருப்பது யானை தந்தங்கள் "

அப்பேற்பட்ட வீர  குடும்பம்என்பதை சொல்லாமல் சொல்கிறான்.


பாடல்

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

பொருள்


அம்பொன்று = ஒரே ஒரு அம்புதான் இருக்கிறது

வில்லொடிதல்= வில்லோ ஒடிந்து போய் இருக்கிறது

நாணறுதல் = நாண் அறுந்து போய் இருக்கிறது

நான்கிழவன் = நானோ கிழவன்

அசைந்தேன் = அசைய முடியாமல் இருக்கிறேன்

என்றோ = என்றா

வம்பொன்று குழலாளை  = பொன் போன்ற குழலை உடைய என் பெண்ணை

மணம்பேசி = திருமணம் பேசி

வரவிடுத்தார் = வரும்படி உன்னை அனுப்பி இருக்கிறார்

 மன்னர் தூதா! = மன்னனின் தூதனே

செம்பொன்செய் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

மணிமாடத் = மணி மாடங்களை கொண்ட

தெள்ளாற்றின் = தெள்ளிய ஆற்றின் கரையில் உள்ள

நந்திபதம் சேரார் = நந்தி அரசாளும் இடத்திற்கு வரமாட்டார்

ஆனைக் கொம்(பு) = யானையின் தந்தம்

ஒன்றோ = ஒன்றா, (இல்லை பல இருக்கிறது )

நம்குடிலின் = எங்கள் குடிசையின்

குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே. = குறுக்கும் நெடுக்கும் இருக்கிறது...நீ சற்று குனிந்து பார்



இராமாயணம் - அமுதில் நனைந்த சொற்கள்

இராமாயணம் - அமுதில் நனைந்த சொற்கள் 


சீதையின் அழகை வர்ணிக்கிறாள் சூர்பனகை.

ஒரு பெண்ணை இன்னொரு பெண் அழகி என்று ஒத்துக் கொள்வது என்பது நடவாத காரியம்.  சூர்பனகை என்ற ஒரு பெண், சீதை என்ற இன்னொரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறாள் என்றால் சீதையின் அழகு அப்படி இருந்திருக்க வேண்டும்.


"மேகம் போல இருக்கும் அவளின் பின்னிய கூந்தல். அந்த கூந்தலை பிரித்து விட்டாலோ மழை போல இருக்கும். அவளுடைய பாதம் பஞ்சு போல இருக்கும். பவளம் போல இருக்கும் அவளின் விரல்கள். அமுதில் தோய்ந்து வந்தது போல இருக்கும் அவளின் பேச்சு. குறை இல்லாத தாமரை போல தாமரை போல இருக்கும் அவள் முகம். அவளின் கண்கள் கடல் போல இருக்கும் "

பாடல்

“மஞ்சு ஒக்கும் அளக ஓதி;
    மழை ஒக்கும் வடித்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய
    பவளத்தை விரல்கள் ஒக்கும்;
அம் சொற்கள் அமுதில் அள்ளிக்
    கொண்டவள் வதனம், ஐய!
கஞ்சத்தின் அளவிற்றேனும்,
    கடலினும் பெரிய கண்கள்.‘‘

பொருள்

“மஞ்சு ஒக்கும் அளக ஓதி = முடிந்த கூந்தல் மேகத்தைப் போல இருக்கும்

மழை ஒக்கும் வடித்த கூந்தல்; = மழை போல இருக்கும் விரித்த கூந்தல்

பஞ்சு ஒக்கும் அடிகள் = அவளுடைய பாதங்கள் பஞ்சு போல இருக்கும்

செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும் = சிறந்த பவளத்தைப் போன்ற விரல்கள்

அம் சொற்கள் = அவளின் சொற்கள்

அமுதில் அள்ளிக் = அமுதில் தோய்ந்து வந்தவை

கொண்டவள் வதனம், ஐய! = அவள் முகம் இருக்கிறதே

கஞ்சத்தின் அளவிற்றேனும் = தாமரை போன்றது

கடலினும் பெரிய கண்கள்.  = கடலை விட பெரிய கண்கள். கடலின் ஆழம் அறிந்தவர் யார். அதற்குள் என்னென்ன இருக்கிறது என்று யார்க்குத் தெரியும் ? அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டு கரையோரம் லேசாக அலை அடிக்கும். அந்த சலனமா கடல் ? கடலுக்குள் மலை உண்டு, எரிமலை உண்டு, பெரிய பெரிய திமிங்கலங்கள் உண்டு, முத்து பவளம் போன்ற உயர்ந்த கற்கள் உண்டு...மர்மம் நிறைந்தது கடல். பெண்களின் கண்களும் அப்படித்தான். கம்பர் ஒரு படி மேலே போய் கடலை விட பெரிய கண்கள் என்கிறார்.


சீதையின் அழகை சொல்ல வந்த சூர்பனகை , சீதையின் பேச்சில் வந்து விழும் சொற்கள் அமுதில் தோய்ந்து வந்ததைப் போல இருக்குமாம். அவ்வளவு இனிமை. சொற்களின் இனிமையில் இருந்து கம்பன் விடு படவே இல்லை. கவிச் சக்கரவர்த்தி அல்லவா ?

அழகாகப் பேசுங்கள். அழகாவும் இருப்பீர்கள். 


Saturday, June 7, 2014

இராமாயணம் - சீதையின் அழகு - திருமகளும் சேடி ஆக மாட்டாள்

இராமாயணம் - சீதையின் அழகு - திருமகளும் சேடி ஆக மாட்டாள் 


சீதையின் அழகை சூர்பனகை இராவணனிடம் எடுத்துச் சொல்கிறாள்.

அண்ணனின் மனதில் காமத்தை மூட்டுகிறாள் தங்கை. நெருடலான விஷயம்.

அவளின் வலி, அவளின் அவமானம்...அவளை அந்த நிலைக்கு தள்ளியது என்று நினைக்கலாம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இரண்டு பெண் பாத்திரங்கள் இராமாயணக் கதையை நகர்த்த உதவுகின்றன. ஒன்று கூனி, மற்றொன்று சூர்பனகை.

கூனி , இராமனை காட்டுக்கு அனுப்பினாள் .

காட்டுக்கு வந்த இராமனை இலங்கைக்கு வரவழைத்தாள் சூர்பனகை.

இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்....


நாம் எத்தனையோ இலக்கியங்களில் , சினிமா பாடல்களில், அயல் நாட்டு இலக்கியங்களில் கதாநாயகிகள் வர்ணிக்கப்பட்டு இருப்பதை வாசித்தும் கேட்டும் இருக்கிறோம்.

கம்பன் சீதையை வர்ணிப்பதைப் பார்ப்போம்.....

உலகிலேயே மிக அழகானவள் திருமகள்.  பாற்கடலில் தோன்றியவள். அந்தத்  திருமகள் ஒருத்தியிடம் பணிபெண்ணாக இருக்கிறாள் என்றாள் அந்த பெண்ணின் அழகு எப்படி இருக்கும் ?

ஒரு படி மேலே போய் , திருமகள் பணிப் பெண்ணாகக் கூட இருக்க தகுதி இல்லாதவள் என்று நினைக்கும் படி ஒருத்தி இருந்தாள் அவள் எப்படி இருக்க வேண்டும்.  அவள் தான் சீதை என்று ஆரம்பிக்கிறாள் சூர்பனகை.


காமரம் என்ற இசை தொனிக்கும் பாடல்,  கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களை சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி அழகாக இருக்கும் சீதையை பற்றி நான் எப்படி சொல்ல முடியும் என்று சூர்பனகை ஆரம்பிக்கிறாள்.

பாடல்

காமரம் முரலும் பாடல், கள், எனக் 
     கனிந்த இன் சொல்; 
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் 
     அணங்கு ஆம்" என்னத் 
தாமரை இருந்த தையல், சேடி 
     ஆம் தரமும் அல்லள்; 
யாம் உரை வழங்கும் என்பது 

     ஏழைமைப்பாலது அன்றோ?

பொருள்

காமரம் முரலும் பாடல் = காமரம் என்ற பண் இசை தொனிக்கும் பாடல்

கள்  எனக் கனிந்த இன் சொல்; = கள்ளை போல மயக்கும் இனிய கனிவான சொற்கள்.  உண்ட பின் மயக்கம் தரும், சுகம் தரும் கள்ளைப் போல அவள் சொற்கள் அவ்வளவு மயக்கம் தரக் கூடியவை


தே மலர் நிறைந்த கூந்தல் = தேன் நிறைந்த மலர்கள் சூடிய கூந்தல் 


"தேவர்க்கும்      அணங்கு ஆம்" என்னத் = தேவ லோக பெண்களே கண்டு வியக்கும்

தாமரை இருந்த தையல் = தாமரை மலரில் இருந்த திருமகள்

சேடி ஆம் தரமும் அல்லள் = சேடிப் பெண்ணாகக் கூட வரக் கூடிய தகுதி இல்லை

யாம் உரை வழங்கும் என்பது = அப்பேற்பட்ட அழகான சீதையைப் பற்றி நான் சொல்லுவது என்பது


ஏழைமைப்பாலது அன்றோ? = என்னுடைய அறியாமை அன்றோ

பெண்ணின் அழகை சொல்ல வந்த கம்பன், அவளின் பேச்சை முதலில் வைக்கிறான். கள் என கனிந்த இனிய சொற்களைக் கொண்டவள் என்று.

பெண்களுக்கு இயற்கையிலேயே இனிய குரல் வளம் உண்டு. பல இடங்களில் சீதையின் பேச்சைப் பற்றி கூறுவான் கம்பன். கிளி போன்ற பேச்சு, மழலை போன்ற பேச்சு  என்றெல்லாம்.

இங்கும் அவளின் பேச்சுத் தன்மையில் இருந்து ஆரம்பிக்கிறான்.

பாடலில் பாடம் இருக்கிறது.

பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் பேச்சு சாமர்த்தியம் வேண்டும்.

இனிமையாக பேசுவது ஒரு அழகு. ஒரு வசீகரம்.

உடல் அழகை விட பேச்சு அழகு கட்டிப் போடும்.

சிந்திப்போம்.