Saturday, August 16, 2014

சிலப்பதிகாரம் - வினை விளை காலம்

சிலப்பதிகாரம் - வினை விளை காலம் 


மற்ற காப்பியங்களில் இருந்து சிலப்பதிகாரம் வித்தியாசப்பட்டது.

இதன் கதாநாயகன் கோவலன். கதாநாயகனுக்கு உரிய பெரிய வலிமையான குணங்கள் எதுவும் கிடையாது. முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து இருந்தது.

நடன மாதைக் (மாதவி) கண்டு சபலப் படுகிறான். அவள் பின்னே போகிறான். சொத்தை அழிக்கிறான்.

மானம் தாங்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான்.

சாதாரண நடுத்தர வீட்டு குடும்பத் தலைவன் போல, மனைவியின் நகையை விற்கப் போகிறான். போன இடத்தில் பொற் கொல்லானால் காட்டிக் கொடுக்கப்பட்டு (தவறாக) வெட்டுப்பட்டு உயிரை விடுகிறான்.

பெரிய பலசாலி இல்லை. பெரிய நண்பர்கள் கிடையாது.  சாதாரண மனிதன். பலவீனன். மனைவியிடம் மன்னிப்பு கேட்க்கிறான். அவள் காலைத் தொடுகிறான். செய்த செயலுக்கு வருந்துகிறான்.

இப்படிப் பட்ட ஒரு சாதாரண மனிதனை சுற்றி பிணையப்பட்ட கதை.

இளங்கோ அடிகள் விதியை  நம்புகிறார்.

வாழ்கை விதியின் வழிப்படி செல்கிறது. தனி மனிதன் அதை ஒன்று செய்ய முடியாது என்று சொல்லிச் செல்கிறார்.

கோவலன் மாதவியைக் கண்டது, அவள் மேல் மனதை பறி கொடுத்தது, கண்ணகி அதை கண்டிக்காமல் விட்டது, அவர்கள் மதுரை சென்றது, அந்த நேரத்தில் அரசியின் கொலுசு காணாமல் போனது, அதை அறியாமல் கோவலன் தன் மனைவியின் கொலுசை விற்கச் சென்றது, பாண்டிய மன்னன் விசாரிக்காமல் கொலை செய்யச் சொன்னது....எல்லாம் விதியின் போக்கு.... யார் என்ன செய்திருக்க முடியும் என்பது போல கதை செல்கிறது.

 

மிக மிக வித்தியாசமான கதை.

அந்தக் கதையில்...

காவலர்கள் அரசனிடம் , அரசியின் கால் சிலம்பை களவாடிய கள்வன் கிடைத்து விட்டான் என்று சொல்ல, தீர விசாரிக்காமால், அவனைக் கொன்று அந்த சிலம்பி கொண்டு வாருங்கள் என்று சொல்கிறான்.

பாடல்

வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்

பொருள்

வினைவிளை கால மாதலின் = வினை விளைகின்ற காலம் ஆதலின்.

யாவதும் = ஆவதும்

சினையலர் வேம்பன் = சினை என்றால் கிளை. கிளையில் பூத்த வேப்பம் பூவின் மாலையை அணிந்த பாண்டியன் 

தேரா னாகி = ஆராயாமல்

ஊர் காப்பாளரைக் கூவி = ஊர் காவலனைக் கூப்பிட்டு

ஈங்கென் = இங்கு என்

தாழ் பூங்கோதை = மனைவியின்

தன்காற் சிலம்பு = கால் சிலம்பை

கன்றிய கள்வன் = திருடிய கள்வன் 

கைய தாகில் = கையில் இருந்தால்

கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் = (அவனைக்) கொன்று சிலம்பை கொணர்க இங்கு என்றான்.

சற்று உன்னிப்பாக கவனித்தால், வார்த்தைகள் வாழ்கையை புரட்டிப் போட்டது விளங்கும்.

கன்றிய கள்வன் கையதாகில் = சிலம்பு அவன் கையில் இருந்தால் என்பது ஒரு அர்த்தம். திருடிய அந்த கள்வன் உங்கள் கையில் (அகப்பட்டு ) இருந்தால் என்பது இன்னொரு அர்த்தம்.

கொன்றச் சிலம்பு கொணர்க = கொன்ற என்பது கொண்ட என்று இருந்திருந்தால் , அவன் கொண்ட சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள் என்று  அர்த்தம் வரும். கொன்ற சிலம்பு கொணர்க என்றால் அவனை கொன்று அந்த சிலம்பை  கொண்டு வாருங்கள் என்று அர்த்தம் கொள்வது அவ்வளவு சரியாக இருக்காது.

எது எப்படியோ, வார்த்தைகள் தடம் மாறி, கோவலன் வாழ்க்கை பறி போனது.

அதற்கு காரணம் விதி விளையும் காலம் என்று விதி தான் காரணம் என்கிறார் இளங்கோ  அடிகள்.

வேறு எப்படிதான் இதை விளக்குவது ?


Friday, August 15, 2014

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ

கந்த புராணம் - அயன் ஆரும் உவப்பு உற்றாரோ 


சூரபத்மனின் கொடுமையால் அவதிப்பட்ட தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள்.

திருமால் "சிவன் தவத்தில் இருக்கிறான். அவர் தவம் முடித்து வந்தால், குமார சம்பவம் நிகழும். அவர் தவம் முடிய வேண்டும் என்றால், அது சாதாரண காரணம் இல்லை. மன்மதன் அவர் மேல் மலர் அம்புகளை போட்டால், அவர் தவம் கலையும் " என்று சொன்னார்.

அது கேட்ட பிரம தேவனும், மன்மதனை சிவன் மேல் அம்பு விட  அனுப்பினார்.மன்மதன் மறுத்தான். சிவன் தவம் கலைந்தால், அந்த கோபம் தன்னை என்ன செய்யுமோ என்று பயந்தான். போகாவிட்டால் இப்போதே சாபம் கொடுக்கப் போவதாக பிரமன் மிரட்டவே, வேறு வழியின்றி சென்றான்.

அவன் நினைத்தது போலவே, தவம் கலைந்த சிவன், தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து விட்டார்.

அங்கு வந்த இரதி புலம்புகிறாள்.

திருமாலுக்கு இரண்டு குமாரர்கள். ஒன்று பிரமன், மற்றவன் மன்மதன்.

இரதி சொல்கிறாள், "என் உயிரே நீ இறந்ததால், சொத்தில் ஒரு பங்கு குறைந்தது  என்று பிரமன் மகிழ்வான் " என்று.  நேரடியாகச் சொல்லவில்லை.

பாடலைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.....

பாடல்

செம் பதுமை திருக் குமரா தமியேனுக்குக் ஆர் உயிரே    திருமால் மைந்தா
சம்பரனுக்கு ஒரு பகைவா கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா
அம் பவளக் குன்று அனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவு உற்றாயே உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ அயன்
                        ஆரும் உவப்பு உற்றாரோ.

பொருள் 

செம் பதுமை = அழகான சிலை போன்ற

திருக் குமரா = சிறந்த இளையவனே

தமியேனுக்குக் ஆர் உயிரே = எனக்கு ஆருயிரே

திருமால் மைந்தா = திருமால் மைந்தா

சம்பரனுக்கு ஒரு பகைவா = சம்பரன் என்ற அரக்கனுக்கு பகைவனே

கன்னல் வரிச் சிலை பிடித்த தடக்கை வீரா = கரும்பு வில்லைப் பிடித்த வீரனே

அம் பவளக் குன்று அனைய = பவளக் குன்று போன்ற (சிவந்த பெரிய)

 சிவன் விழியால் = சிவனுடைய விழியால்

வெந்து = வெந்து

உடலம் அழிவு உற்றாயே = உடல் அழிந்தாயே

உம்பர்கள் தம் விழி எல்லாம் உறங்கிற்றோ = தேவர்கள் எல்லாம் இந்த கொடுமையைக் கண்டு கண் மூடி இருகிறார்களோ

அயன் ஆரும் உவப்பு உற்றாரோ = பிரமனும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறானோ

கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் படிக்க மிக மிக எளிமையானது. 

நேரம் இருப்பின், மூல நூலை படித்துப் பாருங்கள். 

தெள்ளு தமிழ் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். 


இராமாயணம் - புலியை மான் வெல்வதா ?

இராமாயணம் - புலியை மான் வெல்வதா ?


நம் மகனையோ மகளையோ நாம் கடைசியாக எப்போது கட்டி அணைத்து நம் அன்பை வெளிப் படுத்தி இருக்கிறோம் ?

தசரதன் இராமனை கட்டி அணைத்து , "தன் தோள்களால் இராமனின் தோள்களை அளந்தான் " என்பான் கம்பன்.

இந்திரசித்து போரில் இறந்து போனான் என்ற செய்தியைக் கேட்டவுடன் இராவணன் புலம்புகிறான்.

ஐயோ, என்னை தழுவிக் கொள்ள மாட்டாயா என்று அவனின் ஒரு தலை புலம்பியது. இன்னொரு தலையோ, புலியை மான் வெல்வதா என்று அரற்றியது. 

பாடல்

'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்கலையோ!' எனும், ஓர் தலை;
'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே!
செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை.

பொருள்

'எழுவின் = எழு என்றால் இரும்புத் தூண்.  இரும்புத் தூண் போன்ற

கோலம் எழுதிய தோள்களால் = சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் பூசிய தோள்களால்

தழுவிக் கொள்கலையோ! = தழுவிக் கொள்ள மாட்டாயா

எனும், ஓர் தலை = என்று புலம்பும் ஒரு தலை

'உழுவைப்  போத்தை  = ஆண் புலியை

உழை = பெண் மான்

உயிர் உண்பதே! = போராடி உயிரை பறிப்பதா ?

செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை = வீரம் பொருந்திய செழுமையான வில்லை ஏந்தியவனே என்று புலம்பும் ஒரு தலை



தேவாரம் - தோடுடைய செவியன் - பாகம் 2

தேவாரம் - தோடுடைய செவியன் - பாகம் 2

திரு ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக்  கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து  அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்  போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி

கீழ்கண்ட பாடலைப் பாடியது....

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்தபீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 
காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே
என்று கூறி அருளினார்.

பொருள்
தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்
விடை ஏறி = எருதின் மேல் ஏறி
ஓர் = ஒரு
தூ = தூய்மையான
வெண்  = வெண்மையான
மதி = நிலவை
 சூடிக் =  தலையில் சூடி
காடு உடைய = சுடு கட்டில் உள்ள
சுட லைப் = சாம்பலை
பொடி = பொடியாக
பூசி = உடல் எல்லாம் பூசி
என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்
ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்
உன்னை = உன்னை (சிவனை )
நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க
அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்
மேவிய = உள்ள
பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

---------------------------
பால் தந்தது பார்வதி. அவளைப் பற்றி ஒரு வரி கூட இல்லையே என்று கேள்வி  எழலாம்.
தோடுடைய செவியன் = தோடு என்பது பெண்கள் அணியும் காதணி. பெண்கள்    காதணியை அணிந்திருப்பவன் உலகிலேயே ஒருவன் மட்டும்தான். அவன் அர்த்தநாரியான சிவன். பார்வதி தனியாக வரவில்லை. சிவனோடு சேர்ந்து வந்தாள் . அர்தநாரியாக வந்தான் என்பதை  இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டார். "தோடுடைய செவியன்"

அது மட்டும் அல்ல, பிள்ளை அழுதபோது அதில் காதில் விழுந்து அவள் வந்தாள். எனவே, "தோடுடைய செவியன்" என்று செவியை முதலில் விளித்து  பாடினார்.
ஒவ்வொரு உயிரும் ஆணும் பெண்ணும் சேர்ந்த கலப்பில் வருவதுதான். நம் ஒவ்வொருவருக்குளும் ஆண் தன்மை, பெண் தன்மை இரண்டும் கலந்தே இருக்கும். நாயக , நாயகி பாவத்திற்கு ஆதாரமாக தோடுடைய செவியன் என்றார். 
சில பிள்ளைகளுக்கு அப்பாவிடம் அன்பு அதிகம் இருக்கும். சில பிள்ளைகளுக்கு அம்மாவிடம் அன்பு அதிகம் இருக்கும். இரண்டும் சரி விகிதத்தில் கலந்தால் பிள்ளைகள் மனம் அவர்கள் மேல் காதல் கொள்ளும். கோபம் மட்டும் கண்டிப்பை மட்டுமே காட்டும் தந்தைமேலும் சரி, எப்போதும் செல்லம் தரும் தாய் மேலும் சரி, பிள்ளைகளுக்கு  அதிக பிடிப்பு இருக்காது.  கண்டிப்பும் இருக்க வேண்டும், காதலும் இருக்க வேண்டும். 

இரண்டும் கலந்தால் "உள்ளம் கவர் கள்வன்" 
"தூவெண் மதி சூடி " = தூய்மையான வெண்மையான மதியை தலையில் சூடி. வெண்மை வெளியே தெரிவது. தூய்மை  உள்ளே உள்ளது. உள்ளும் புறமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது தூவெண் மதிசூடி என்ற தொடர். 
சுடலை பொடி பூசி = சுடலை என்றால் சுடு காடு. சுடு காட்டில் உள்ள சாம்பலை பூசி. அது என்ன சுடுகாட்டு சாம்பல் ? அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே 
சுடுகாட்டில் அவன் இருக்கிறான் . இறந்த பின் செல்லும் இடத்தில் அவன் இருக்கிறான். 
இறந்த பின், இறைவனால் என்ன பிரயோஜனம் ?

இறப்பது என்றால் என்ன ? உயிரை விடுவது அல்ல.
நான் என்ற ஆணவம் இறக்க வேண்டும்.  நான் என்ற ஆணவ மலம் இறந்த இடத்தில் அவன் நிற்கிறான். 

கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

அயல் மாண்டு = சுற்று சூழல் எல்லாம் இறந்து
அருவினை சுற்றமும் மாண்டு = வினை மாண்டு, சுற்றம் மாண்டு 
மயல் மாண்டு = உலகின் மேல் உள்ள ஆசை இறந்து 
வாசகம் மாண்டு = நான் படித்து சொல்ல வேண்டும் என்று நினைத்த வாசகங்கள் அனைத்தும் இறந்து 
செயல் மாண்ட = என்னுடைய செயலும் இறந்து 

இத்தனையும் இறந்ததை எண்ணி மாணிக்க வாசகர் எண்ணி வருந்தவில்லை. தெள்ளேணம் கொட்டாமோ என்று கொண்டாடுகிறார்.
எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்று எல்லாம் இழந்ததை நலம் என்கறார் அருணகிரி. 
நான் என்ற அது இறந்த இடத்தில் ஆனந்த நடனம் ஆடுபவன் அவன். அதை சொல்ல வருகிறார் ஞான சம்பந்தர் "காடுடைய சுடலை பொடி பூசி" என்றார். 





 

Thursday, August 14, 2014

தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன் 


திரு ஞான சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்  சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக்  கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து  அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்  போக்கினார்.

நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி

கீழ்கண்ட பாடலைப் பாடியது....

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

சீர் பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான்  அவனே

என்று கூறி அருளினார்.


பொருள்

தோடு உடைய செவியன் = தோடு உள்ள செவியன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய்மையான

வெண்  = வெண்மையான

மதி = நிலவை

 சூடிக் =  தலையில் சூடி

காடு உடைய = சுடு கட்டில் உள்ள

சுட லைப் = சாம்பலை

பொடி = பொடியாக

பூசி = உடல் எல்லாம் பூசி

என் உள்ளங் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = தாமரை மலரில் இருக்கும் பிரமன்

உன்னை = உன்னை (சிவனை )

நாள் பணிந்து  ஏத்த= அன்றொருநாள் பணிந்து துதிக்க

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் = பெருமை மிக்க பிரமபுரம்

மேவிய = உள்ள

பெம்மான் இவன் அன்றே = பெருமான் இவன் அல்லவோ

மிக மிக அருமையான  பாடல்.

இதற்குள் கொட்டிக் கிடக்கும் அர்த்தம் ஆயிரம்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான். ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க ஊற்று போல பொங்கி வரும் இதன் அர்த்தங்கள்.

அவை என்ன என்று பின் வரும் ப்ளாகில் சிந்திப்போம்.





Wednesday, August 13, 2014

இராமாயணம் - மகன் எனும் காதலன்

இராமாயணம் - மகன் எனும் காதலன் 


போரில் இறந்து போனான் இந்திரஜித்து. அந்த செய்தி கேட்டு புலம்புகிறான் இராவணன்.

மகன் என்று கூட சொல்ல வில்லை, காதலன் என்கிறான். அவ்வளவு அன்பு மகன் மேல்.

மகனே மகனே என்று பல முறை வாய் விட்டு அழைத்தான்.  ஒரு மானிடன் என் காதலனை கொன்று விட்டானே என்று அரற்றுகிறான்.

சீதை மேல் கொண்ட காமம், மகனை பலி கொண்டது.

இந்திரசித்து இறந்தான் என்ற செய்தி சொன்ன தூதர்களை வெட்டினான் இராவணன். அவர்களை கெட்டவர்கள் என்கிறான். கொன்றது மானிடர்கள் என்கிறான்.

அவன் அறிவுக்கு எட்டவில்லை - இத்தனை அழிவுக்கும் காரணம் அறம் பிறழ்ந்த அவன் வாழ்கை முறை என்று.


யார் யாரையோ நோகிறான்.

எல்லா துன்பத்திற்கும் காரணம் - எங்கோ அறம் பிறழ்ந்த வாழ்கை முறைதான். உடல் துன்பத்திற்கும், மன துன்பத்திற்கும் காரணம் அறம் தப்பிய வாழ்கை.

இராவணனுக்குத் தெரியவில்லை. இலக்குவன் தன் மண்கனை  கொன்றான் என்று நினைக்கிறான்.

நமக்கு வரும் துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் - நெறி அல்லா நெறி சென்ற வாழ்கை.

பாடல்

‘'கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல, என் காதலன்
பட்டு ஒழிந்தனனே!' எனும்; பல் முறை
விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால்.

பொருள்

கெட்ட தூதர் = என் மகன் இறந்தான் என்ற செய்தியை சொன்ன தூதர்கள் கெட்டவர்கள் 

கிளத்தினவாறு = சொல்லியவாறு

ஒரு கட்ட மானிடன் = துன்பம் தரும் ஒரு மானிடன்

கொல்ல = கொல்ல

என் காதலன் = என் காதலன்

பட்டு ஒழிந்தனனே!' = இறந்து போனானே

எனும்; = என்று சொல்வான்

பல் முறை = பல முறை

விட்டு அழைக்கும் = (வாய்) விட்டு அழைப்பான்

உழைக்கும்; வெதும்புமால் = வருந்துவான், நொந்துகொள்வான்



Tuesday, August 12, 2014

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே 


அவளை, அவன் அப்படி காதலித்தான். அவளோ முதலில் அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை. இருந்தும் அவன்  விடவில்லை.அவளுக்கு பரிசு பொருள் எல்லாம் வாங்கித் தருவான்.

நாள் ஆக நாள் ஆக அவளுக்கும் அவன் மேல் அன்பு பிறந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

அப்படியே  சிறிது நாள் சென்றது.

முதலில் இனித்த காதல், நாள் பட நாள் பட சுவாரசியம் குறையத் தொடங்கியது.

அவளை பார்க்க வருவது குறைந்தது. அவளோடு பேசும் நேரமும் குறைந்தது.

அவன் அவளை கெஞ்சியது போக, இப்போது அவள் அவனை கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

அந்த ஊரில், வண்டுகள் இருக்கும். அவை குளத்தில் மலரும் நீல மலர்களைத் தேடி வரும். அங்கே பெண்கள் நீராட , நீர் எடுக்க வருவார்கள். அவர்களின் முகம் நீரில் பட்டு பிரதிபலிக்கும்.

அந்த வண்டுகளுக்கு குழப்பம் . எது மலர் என்று ?

உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடும் வண்டுகளைக் கொண்டது எம் ஊர் என்கிறாள் தோழி.


 ஊடாடும் அர்த்தம் ... நீ நல்லவனா அல்லது மற்றவனா என்று தெரியாமல் தலைவி உன்னிடம் மனதை பறிகொடுத்து விட்டாள்

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

காதலராகிக் கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யாம் அறியோம் ஐய 
மாதரார் கண்ணு மதி நிழல்நீரிணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர்.


பொருள்


காதலராகிக் = காதலராகி

கழிக் கானற் = கடற்கரையில் உள்ள சோலையில்

கையுறை = பரிசுகள்

கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு எம் பின்னால் வந்தார்

ஏதிலர் = (இன்று) யாரோ போல

தாமாகி = அவர் ஆகி

யாம் இரப்ப  நிற்பதை = நாங்கள் வேண்டி நிற்பதை

யாம் அறியோம் ஐய = நாங்கள் அறியவில்லை ஐயா. இப்படியும் நடக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை ஐயா

மாதரார் கண்ணு = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலைக்  

நீரிணை கொண்டு = நீரினில் கொண்டு

மலர்ந்த = மலர்ந்த 

நீலப் போதும்  = போது என்றால் மலர். நீல மலர்களை

அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர் = அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எங்கள் ஊர்

கோவலனும் மாதவியும் தனித்து இருக்கும்போது , மாதவி பாடிய பாடல்