Thursday, August 21, 2014

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே 


தலைவி சொல்கிறாள்.

இந்த உடையும், இந்த வளையல்களும் என்னுடையதாகத்தான் இருக்கும்..எப்போது என்றால் நந்தி வர்மன் எதிரிகளின் மேல் படை எடுத்துப் சென்றிருக்கும் பொழுது.

அப்படி அவன்  சண்டைக்குச் செல்ல வில்லை என்றால், என் அருகில் இருப்பான். அப்போது இந்த உடையும், இந்த வளையலும் என்னிடம் இருக்காது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

நந்தியின் வீரத்துக்கும் காதலுக்கும் கட்டியம் கூறும் பாடல்....

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது  

பொருள்

எனதே = என்னுடையதே

கலை = துகில், ஆடை

வளையும் = வளையலும்

என்னதே = என்னுடையதே

மன்னர் = மன்னனான

சினஏறு = சினம் கொண்ட காளை  அல்லது சிங்கம்

செந்தனிக்கோல் நந்தி = சிறப்பான செங்கோல் செலுத்தும் நந்தி

இனவேழம் = யானை போல

கோமறுகில்= கோபம் கொண்டு

சீறிக் = சீறி

குருக்கோட்டை = குருக்கோட்டை என்ற ஊரின் மேல்

வென்றாடும் = வெற்றிக் கொள்ள படை எடுத்துச் செல்ல

பூமறுகில் = பூமறுகில் (இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை )

போகாப் பொழுது = போன போது (செய்யா என்ற வாய்பாட்டு வினை. பெய்யா கொடுக்கும் மழை போல, கொய்யா பழம் போல )



சிவ புராணம் - மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

சிவ புராணம் - மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


எளிமையான  வரிகள்.

சிவ புராணத்தில் இந்த பகுதியை பல பேர் சொல்லும் போது ,இது தற்கால evolution theory யை அடி ஒற்றி இருக்கிறது என்று  சொல்லுவார்கள்.

பறவையில் இருந்து பாம்பு வந்ததா ? பின் கல் எப்படி வந்தது என்று சர்ச்சைகள்  வந்தன.

அது ஒரு புறம்  இருக்கட்டும்.

பிறந்தோம் , வளர்ந்தோம்...எப்படி வளர்ந்தோம்...

மனிதனாக  வளரலாம்.

பணம், பதவி, பொருள் , பெண், மண் என்று பேயாகத் திரியலாம்.

பலம் கொண்டு எல்லோரையும் அடக்கி ஆண்டு அதிகாரம் செலுத்தி
அரக்கர்களைப் போல மாறலாம்.

படித்து,ஞானம் பெற்று, தானம் செய்து, தவம் செய்து முனிவராய், தேவராய் ஆகலாம்.



பிறந்தோம். வளர்ந்தோம். இறந்தோம்.

இறந்த பின் உடலை புதைத்தோ எரித்தோ விடுவார்கள்.

உடல் மீண்டும் மண்ணாகப் போகும்.

அதில் புல் முளைக்கலாம். செடி முளைக்கலாம். மரம் முளைக்கலாம்.

அந்த செடியிலோ, மரத்திலோ புழுக்களும், பறவைகளும், பாம்புகளும் வாழலாம்.

என்னவாக ஆவோம். எப்படி ஆவோம் என்று நமக்கு என்ன தெரியும் ?

என்னனவோ செய்து, எப்படியெல்லாமோ ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்று மட்டும் உறுதி.

நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம். நேற்று மாதிரி இன்று இல்லை.  இன்று போல நாளை இருக்காது.

இப்படி ஒன்றில் இருந்து ஒன்றாய், இதிலிருந்து அதுவாய், அதில் இருந்து இதுவாய் மாறிக் கொண்டே போனால் இதற்கு முடிவுதான் என்ன ?

தான் ஒரு தொடர் சுழற்சியின் நடுவில் இருப்பதை அடிகள் உணர்ந்து...

"மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"  என்கிறார்.

எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய ஒன்று...திருவடி என்று எங்கெல்லாம் வருகிறதோ அது ஞானத்தையே  குறிக்கும்.

மெய்யான ஞானம் அடைந்து வீடு பேறு பெற்றேன் என்கிறார் அடிகள்



Wednesday, August 20, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல்

இராமாயணம் - இராவணன்  சீதை உரையாடல் 


இராவணனும் சீதையும் எப்படி பேசி இருப்பார்கள்.

சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். அவளைக் காண இராவணன் வருகிறான். அவளிடம் எப்படி பேசி இருப்பான் ? என்ன பேசி இருப்பான் ? அதற்கு சீதை என்ன மறுமொழி சொல்லி இருப்பாள் ?

சீதையைக் காண வருகிறான் இராவணன்...

அவன் வருவதே அவளை கலக்கியது என்கிறார் கம்பர்

ஒவ்வொரு பெண்ணிடம் ஒவ்வொன்று அழகாக இருக்கும். சிலருக்கு கண்கள், சிலருக்கு புருவம், சிலருக்கு நெற்றி, சிலருக்கு இதழ்கள், இடுப்பு என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று அழகாக இருக்கும்.

சிலபேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அவயங்கள் அழகாக அமைந்து விடலாம்.

உலகில் உள்ள அத்தனை அழகான அவயங்களையும் எடுத்து, அதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தாள் சீதை.

கொஞ்சம் அழகாய் இருந்தாலே நம் ஊர் பெண்களை பிடிக்க முடியாது. இத்தனை அழகு இருந்தால் அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் ?

ஆனால், சீதையிடம் தான் பெரிய அழகு என்ற ஆணவம் இல்லை, அகந்தை இல்லை...உலகில் உள்ள அத்தனை நல்ல குணங்களும் அவளிடம் இருந்தன.

அழகும், பண்பும் ஒன்றாக இருப்பது எவ்வளவு அபூர்வம்.

அவள் குரல் - இன்னிசை மாதிரி இருக்கும்.

அவள் இதழ்கள் - பவளம் போல சிறப்பு.

அப்படிப்பட்ட சீதையை தன இருபது கண்காலும் கண்டான் இராவணன். அவளுக்குள் ஒரு கலக்கத்தை உண்டாக்கினான்.

பாடல்


பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின்
                                          ஈட்ட,
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து
                                   இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவளை ஓர் கலக்கம்
                                      காண்பான்.

பொருள்

பண்களால் = இசைப் பாடல்களால்

கிளவி செய்து = கிளவி என்றால் மொழி. சீதையின் பேச்சு இன்னிசைப் பாடல் போல அவ்வளவு இனிமையாக இருக்கும்.

பவளத்தால் அதரம் ஆக்கி = பவளத்தால் இதழ் செய்து. பவளம் பட்டை தீட்ட தீட்ட ஒளி விடும்.


பெண்கள் ஆனார்க்குள் = பெண்கள் என்பவர்களுக்குள்

நல்ல உறுப்பு எலாம் = அழகான உறுப்புகள் எல்லாம் எடுத்து

பெருக்கின் = ஒன்று சேர்த்து, அவற்றை மேலும் மெருகூட்டி

ஈட்ட = செய்து

எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து = எண்ண முடியாத அளவு பெருமை வாந்த குணங்களை தொகுத்து

இயற்றினாளை = செய்தவளை

கண்களால் அரக்கன் கண்டான் = தன் இருபது கண்களால் இராவணன் கண்டான்

அவளை ஓர் கலக்கம் காண்பான் = அவளை ஒரு கலக்கு கலக்கினான்


Tuesday, August 19, 2014

தேவாரம் - இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ

தேவாரம் - இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ


எனக்காகவா நீ இத்தனையும் செய்தாய் ?

என்னை அன்பால் அணைத்துக் கொண்டாய். உன்னுடைய அருள் பார்வையால் என்னை நீர் ஆட்டினாய். நீ எவ்வளவு பெரிய ஆள், எனக்காக சாதாரண ஆளாக வந்தாய். என்னை ஆட் கொண்டாய். நான் செய்த பிழைகள் அனைத்தும் பொருத்தாய் . இத்தனையும் எனக்காகவா செய்தாய் ? உன் கருணையை என்னவென்று சொல்லுவேன் ....என்று உருகுகிறார் திரு நாவுக்கரசர்.

பாடல்  

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.

பொருள்

அத்தா = தந்தையே

உன் அடியேனை = உன் அடியவனான என்னை

அன்பால் ஆர்த்தாய் = அன்பால் அனைத்துக் கொண்டாய்

அருள்நோக்கில் = உன்னுடைய அருள் பார்வை என்ற 

தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் = தீர்த்த நீரால் என்னை நீராட்டினாய்

எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் = எவ்வளவு பெரிய ஆள் நீ. எனக்காக எளியவனாக வந்தாய்

எனை ஆண்டுகொண்டு = என்னை ஆட் கொண்டு

இரங்கி = என்பால் இரக்கம் கொண்டு

ஏன்றுகொண்டாய் = ஏற்றுக் கொண்டாய்

பித்தனேன் = பித்தனேன்

பேதையேன் = பேதையேன்

பேயேன் = பேயேன்

நாயேன் = நாயேன்

பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே = நான் செய்த பிழைகள் அனைத்தும் பொருத்தாய்

இத்தனையும் = இவை அனைத்தும்

எம் பரமோ = எனக்காகவா ?

ஐய ஐயோ = ஐய ஐயோ

எம்பெருமான் = எம் பெருமானே

திருக்கருணை இருந்தவாறே = உன் திருக்கருணை இவ்வாறு இருந்தது

.
இது மேலோட்டமாக நாம் அறியும் பொருள்.

எழுதியவர் நாவுக்கு அரசர். 


அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் =  பயத்தால் கூட இறைவனிடம் அடியவனாக இருக்கலாம். ஆனால், திருநாவுக்கரசரோ, அன்பால் அடிமை கொண்டாய்  என்கிறார்.  

அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் = நம் மேல் தான் எத்தனை அழுக்கு. காமம், கோபம்,  மோகம், மதம், பொறாமை, பொய், அழுக்காறு என்று ஆயிரம் அழுக்கு. அத்தனை அழுக்கையும் அவனுடைய அருள் பார்வை என்ற புனித நீரால் நீராட்டினான்.

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சம் என்னும் 
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவியின் மேல் 
ஆற்றை பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றை புனைந்தவன் பெருமான் மகன் கிருபாகரனே 

என்பார் அருணகிரி நாதர். பிரபஞ்சம் என்ற சேற்றை அள்ளி பூசிக் கொண்டு இருக்கிறோம்.

பித்தனேன் = ஒரு வழி நில்லாதவன்,

பேதையேன் = ஒன்றும் அறியாதவன் , முட்டாள்

பேயேன் = வீணாக அலைபவன்

நாயேன் = கீழானவன்

நாவுக்கரசர் இப்படி என்றால், நாம் எல்லாம் எப்படியோ.

பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே = இவ்வளவு மோசமானவன் செய்வதெல்லாம் பிழையாகத் தானே இருக்கும். அத்தனையும் பொறுத்தான்.

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ = அவரால் தாங்க முடியவில்லை. ஐயோ, எனக்காகவா இத்தனையும் என்று உருகுகிறார்.

எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.


சிவ புராணம் - புகழுமாறு ஒன்று அறியேன்

சிவ புராணம் - புகழுமாறு ஒன்று அறியேன் 



இன்று அறிவியல் "அனைத்தையும் விளக்கும் தத்துவம்" (A Theory of  Everything ) என்பது பற்றி  பேசுகிறது.

http://en.wikipedia.org/wiki/Theory_of_everything

அறிவியலில் இன்று பலப் பல தத்துவங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் விளக்கும் ஒரு தியரி இல்லை. புவி ஈர்ப்பு விசைக்கு ஒன்று, மின் காந்த சக்திக்கு ஒன்று, அணு விசைக்கு ஒன்று என்று பல்வேறு கோட்பாடுகள்  உள்ளன. சில சமயம் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும் உள்ளது.

உலகில் உள்ள அனைத்தையும் விளக்கும் கோட்பாடு எது என்று அறிவியல் மிகத் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறது.

மாணிக்க வாசகர்  சொல்கிறார், விண்ணிலும்,மண்ணிலும் நிறைந்து அனைத்திலும் விளங்கும் ஒளியாய் இருப்பவனே என்று இறைவனை  குறிப்பிடுகிறார்.

எங்கும் நிறைந்து, அனைத்தையும் விளக்கும் ஒளி அவன்.

உன்னுடைய அளவற்ற பெருமைகளில் ஒன்றைக் கூட அறியாமல், உன்னை புகழுகின்ற ஒன்றையும் நான் அறியவில்லையே என்று அவை அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.

பாடல்

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்


சீர் பிரித்த பின்

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கும் ஒளியாய் 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 


பொருள்

விண் நிறைந்து = விண்ணில் எங்கும் நிறைந்து

மண் நிறைந்து = விண்ணில் மட்டும் அல்ல, இந்த மண்ணிலும் நிறைந்து

மிக்காய் = இவற்றைத் தாண்டி அனைத்து இடத்திலும்

விளங்கும் = விளங்கும்

ஒளியாய் = ஒளி  போன்றவனே.அனைத்தையும் காட்டும் ஒளி போன்றவனே

எண் இறந்து = எண்ணிக்கை இல்லாமல். எண்ணிப் பார்க்க முடியாத

எல்லை இலாதானே = இது இப்படித்தான் என்ற வரை முறை கடந்தவனே

 நின் பெரும் சீர் = உன்னுடைய பெருமைகளை

பொல்லா வினையேன் = பொல்லாத வினைகளை உடைய நான்

 புகழுமாறு ஒன்று அறியேன் = புகழ்ந்து சொல்ல ஒன்றும் அறிய மாட்டேன் 

Monday, August 18, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள் - வாழ்க்கைத் துணை நலம்


வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இன்றுள்ள பெண்ணுரிமை போராட்டாக்காரர்கள் "அதெப்படி நாங்கள் என்ன துணை, கணவன் மட்டும் தான் main -ஆ" என்று கொடி பிடிக்கிறார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது, நம் கீழ்மையை அதன் மேல் ஏற்றக் கூடாது. திருக்குறளை விட, திருவள்ளுவரை விட தாங்கள் அறிவில் மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வதால் வரும் வினைகள் இவை.

நாம் யாரைத் துணையாகக் கொள்வோம் ?

நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?

துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க  வேண்டும்.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப்   பாட்டி. வாழ்க்கை நீண்ட பயணம். அதற்கு ஒரு நல்ல துணை வேண்டாமா ?

அபிராமி பட்டர் ஒரு படி மேலே போய் , துணை என்பது தெய்வம் என்கிறார்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்னுடைய துணை அபிராமி என்று அறிந்தேன் என்கிறார்.

பயந்த தனி வழிக்குத் துணை முருகனே என்கிறார் அருணகிரி நாதர்

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ என்பார் திருநாவுக்கரசர்.

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடை மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒன்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!

இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக  உயர்ந்தது.

துணை என்பது தாழ்ந்தது அல்ல.

மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர்  சொல்கிறார்.


மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 சீர் பிரித்த பின்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி தன்னைக் கொண்டான்
வளத்துக்கு தக்காள் வாழ்க்கைத் துணை

சீர் பிரித்த போது சற்று நீட்டியும் இருக்கிறேன், எளிதாகப் புரிந்து கொள்ள.

பொருள்

மனைக்குத் தக்க மாண்பு உடையள் ஆகி = வீட்டுக்கு ஏற்ற மாண்பு உடையவள் ஆகி

தன்னைக் கொண்டான் = தன்னை மணந்த கணவனின்

வளத்துக்கு தக்காள் = வளத்துக்கு தக்கபடி வாழ்பவள்

வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணைவி



மனைக்குத் தக்க மாண்பு என்றால் என்ன ?

பரிமேல் அழகர் சொல்கிறார் - துறவிகளுக்கு  உதவுவது, ஏழைகளுக்கு அன்னம்  அளிப்பது,விருந்தினர்களை உபசரிப்பது  போன்றது.

இது எல்லாம்  நல்லதுதான். இருந்தாலும், அதற்க்கு என்று ஒரு அளவு வேண்டாமா ? இருக்கின்ற செல்வத்தை எல்லாம் அள்ளி வழங்கி விட்டு பின் எப்படி குடும்பம்  நடத்துவது ?

எனவே அடுத்த வரியில் சொல்கிறார்

கணவனின் வளத்துக்கு தக்கபடி வாழ வேண்டும் என்று.

வீடு வேணும், கார் வேணும், பங்களா வேணும், நகை நட்டு வேண்டும் என்று நச்சரிக்கக்  கூடாது.

வளம் என்றால் வருமானம் மட்டும் அல்ல - சொத்து, நல்ல  பெயர்,செல்வாக்கு என்று அனைத்தும் அதில்  அடங்கும்.

குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகாமாக செலவு  செய்யாமல், சொத்துக்கு அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.

Sunday, August 17, 2014

திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே

திருப்புகழ் - இன்புற்று அன்புற்று அருள்வாயே 


பெண்ணாசை மனிதனை விடாமல் துரத்துகிறது. 

அருணகிரியானாதர்  பதறுகிறார்.

பெண்களின் மார்புகள்  எமனின் படை என்று பயப்படுகிறார்.

பெண்களின் பின்னால் சென்று மருளும் எனக்கு அருள்புரிவாய்  என்கிறார்.அதுவும், இன்புற்று , அன்புற்று அருள் புரிவாய் என்று  வேண்டுகிறார்.

சந்தனம் பூசிய, மணம் வீசும் பெண்கள். அவர்களின் மார்புகள் எமப் படை. அவர்களின் கண்களில் இருந்து என்னை காப்பாய். அவர்கள் கூந்தலில் மலர்களை சூடி இருக்கிறார்கள். அந்த பூக்களில் வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. அந்த கரிய கூந்தலில் மயங்கி விழும் என்னை காப்பாற்றி அருள் புரிவாய்.   

திருமாலின் மருகனே. சிவனின் மகனே எனக்கு அருள் புரிவாய். 

பாடல் 

பரிமள களபசு கந்தச் சந்தத்                  தனமானார்
படையம படையென அந்திக் குங்கட்       கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்      குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற்         றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற்            றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித்    தெறிவேலா
திரிபுர தகனமு வந்திக் குஞ்சற்               குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப்        பெருமாளே.


சீர் பிரித்த பின் 

பரிமள களப சுகந்த  சந்த தன மானார்
படை எமப்  படையென அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி  நிரை முரல் கொங்கும் கங்குல் குழலாலே
மறுகிடும்  மருளனை இன்புற்று அன்புற்று  அருள்வாயே
அரி திருமருக கடம்பத் தொங்கல் திருமார்பா
அலை குமு குமு என வெம்பக் கண்டித்து  எறிவேலா
திரிபுர தகனம் வந்திக்கும் சற்  குருநாதா
ஜெய ஜெய ஹர ஹர செந்திற் கந்தப்  பெருமாளே.


பொருள் 

பரிமள = மணம் வீசும் 

களப = கலவை (சந்தனம், ஜவ்வாது போன்ற பொருள்களின் கலவை )

சுகந்த = நறுமணம் வீசும் 

சந்த = அழகிய 

தன = மார்புகள்  

மானார் = பெண்கள் 

படை எமப்  படையென = அவர்கள் கொண்ட படை எமனின் படைப் போல உயிரை வாங்குபவை 

அந்திக்கும் = இணையும் 

கண் கடையாலே = ஓரக் கண்ணாலே 

வரி = வரி உள்ள 

அளி = வண்டுகள் 

நிரை முரல் = ரீங்காரம் இடும் 

கொங்கும் = வாசனை உள்ள 

கங்குல் = கரிய 

குழலாலே = முடியாலே 

மறுகிடும் = உருகிடும் 

மருளனை = மருள் கொண்ட என்னை 

இன்புற்று = இன்பத்துடன் 

அன்புற்று = அன்பு கொண்டு 

அருள்வாயே = அருள் புரிவாயே 

அரி = திருமால் 

திருமருக = மருமகனே 

கடம்பத் தொங்கல் = கடம்ப மாலை அணிந்த 

திருமார்பா = மார்பை உடையவனே 

அலை = கடலில் அலை 

குமு குமு என = குபு குபுவென 

வெம்பக் = கொதிக்க 

கண்டித்து = அதைக் கண்டித்து 

எறிவேலா = வேலை எறிந்தவனே 

திரிபுர = முப்புரங்களை 

தகனம் = எரித்த சிவன் 

வந்திக்கும் = வணங்கும் 

சற்  குருநாதா = குருநாதா 

ஜெய ஜெய ஹர ஹர = வெற்றி வெற்றி 

செந்திற் கந்தப்  பெருமாளே.= திருச்செந்தூரில் வாழும் பெருமாளே