Tuesday, August 26, 2014

சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 2

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 2

பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி


பொய்யாயின எல்லாம் எப்படி போகும் ? 

மணிவாசகர் சொல்கிறார் - அவனே "வந்து அருளினான்" என்று.

இறைவன் யார், அவன் எப்படி இருப்பான், கறுப்பா சிவப்பா, உயரமா குட்டையா என்று நமக்குத் தெரியாது. பின் எப்படி இறைவனை தேடிக் கண்டு அடைவது. 

நமக்கு அவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியும் அல்லவா ? 

அவனே வந்து அருள் செய்ததனால் பொய்யாயினவெல்லாம் போயிற்று. 

இதையே சொல்ல வந்த அருணகிரி நாதரும் 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"  என்றார்.


"அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே"

ஒளி வந்தால் இருள் தானே விலகும். நல்லறிவு வந்தால் அஞ்ஞானம் தானே விலகும். அப்படி அஞ்ஞானத்தை விலக்கும் நல்லறிவாக அவன் இருக்கிறான். 

சிவ புராணம் சிந்திக்க சிந்திக்க விரியும். 













Monday, August 25, 2014

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 3

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 3


சீதையை அசோக வனத்தில் சந்தித்து இராவணன் அவளிடம் பேசுகிறான்.

மிக மிக மரியாதையுடன்...பேசுகிறான். கடைசியில் "அம்மா " என்று முடிக்கிறான்.

தோல்வி என்றால் என்ன என்றே தெரியாத என்னை தோற்கச் செய்தீர்.
சந்திரனை கொண்டு என்னை சுடும் படி செய்தீர்
தென்றால் என் மேனி வேர்க்கும்படி செய்தீர்
வைரம் போன்ற வலிய என் தோள்களை மெலிய வைத்தீர்
மன்மதனை என்னை வெற்றி கொள்ளச் செய்து அவனை மகிழ்வித்தீர்
துன்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்.
தேவர்களின் அச்சத்தை போக்கி வைத்தீர்
இன்னும் என்னென்ன செய்து தீர்க்கப் போகிறீர்களோ ...அம்மா

பாடல்

தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில்
                                       வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர்
                                        அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர்
                                       அம்மா!

பொருள்

தோற்பித்தீர்; = என்னை தோற்கடித்தீர்

மதிக்கு மேனி சுடுவித்தீர் = சந்திரனைக் கொண்டு என் உடலை கொதிக்க வைத்தீர்

தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் = தென்றலைக் கொண்டு என்னை வேர்பித்தீர்

வயிரத் தோளை மெலிவித்தீர் = வைரம் போன்ற தோளை மெலிய வைத்தீர்

வேனில் வேளை ஆர்ப்பித்தீர் =இள வேனில் கால மன்மதனை வெற்றிக் கொள்ளச் செய்து ஆரவாரம் கொள்ள வைத்தீர்

என்னை இன்னல் அறிவித்தீர் = எனக்கு துன்பத்தை அறிமுகம் செய்து வைத்தீர்

அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் = அமரர்களின் அச்சத்தை போக்கினீர். இராவணன் மெலிந்தான், துன்பத்தில் உழல்கிறான், மன்மதனின் பானத்துக்கு இலக்காகி விட்டான் என்று தேவர்கள் மகிழ்ந்தார்கள்


இன்னம் = இன்னமும்

என் என் செய்வித்துத் தீர்திர் = என்னென்ன செய்து தீர்கப் போகிறீர்களோ

அம்மா! = அம்மா !


இதை விடவும் காதலை மென்மையாகச் சொல்ல முடியுமா என்ன ? இதை விட ஒரு மனிதன்  கீழே இறங்கி வர முடியுமா என்ன ?

ஒன்று மட்டும் தெரிகிறது....பெண் ஆணிடம் என்ன விரும்புகிறாள் என்று தெரிகிறது .....




சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 1

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 1




பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொருள்

வெய்யாய் = வெப்பமானவனே
தணியாய் = குளிர்சியாணவனே
இயமானனாம் = இதற்கு ஆத்மாவாக  நின்றவனே,நியமங்களாக  இருப்பவனே என்று பொருள் சொல்கிறார்கள்

விமலா = குற்றம் அற்றவனே

பொய்யாயின எல்லாம் = பொய்யாயினவெல்லாம்

போயகல வந்தருளி = அகன்று போய் விட வந்து அருள் செய்தவனே

மெய்ஞ்ஞானம் ஆகி = உண்மையான ஞானம் ஆக நின்று

மிளிர்கின்ற மெய்ச்சுடரே= ஒளி வீசும் உண்மையான சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் = எந்தவித ஞானமும் இல்லாதவன் நான்

இன்பப் பெருமானே = இன்பத்தின் உறைவிடமாய் இருப்பவனே

அஞ்ஞானம் தன்னை,  = அறியாமையை

அகல்விக்கும் நல்லறிவே = அகற்றிடும் நல் அறிவே


என்று மாணிக்க வாசகர் இறைவனை  புகழ்கிறார்.

மேலோட்டமான அர்த்தம் அவ்வளவுதான்.

சற்று ஆழமாக சிந்தித்தால்....


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி

அது என்ன போய் அகல ? போய் என்றாலே அகல்வது தானே. gate கதவு, நடு center , மாதிரி போய் அகல ?

ஆசையினால் துன்பம் வருகிறது என்று தெரிகிறது. அதை விட்டு விட வேண்டும் என்றும் தோன்றுகிறது. பல சமயங்களில் விட்டும் விடுகிறோம்.  உடல் விட்டாலும் மனம் விட மாட்டேன் என்று அடம்  பிடிக்கிறது.

இனிப்பு கெடுதல் என்று அறிவுக்குத் தெரிகிறது. விட்டும் விடுகிறோம். இருந்தாலும் மனம் விடுகிறதா ? இனிப்புப் பொருள்களை கண்டால் ஜொள்ளு விடுகிறது.

அறிவும் விட வேண்டும், மனமும் விட வேண்டும்.

முதலில் அறிவை விட்டு போக வேண்டும் பின் மனதை விட்டுப் போக வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

யாதனின் யாதனின் என்று இரண்டு முறையும்
அதனின் அதனின் என்று இரண்டு முறையும் சொல்கிறார்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன் என்று சொல்லி இருக்கலாம்.

மனமும் நீங்க வேண்டும். அறிவும் நீங்க வேண்டும்.

போய் அகல என்றால் புரிகிறது.

ஆனால் இந்த பொய்யாயின எல்லாம் என்று சொல்கிறாரே...அது என்ன பொய்யாயின ?

எது பொய் எது உண்மை என்று எப்படி அறிந்து கொள்வது ? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா?  யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாமா ?

அதையும் அவரே சொல்கிறார்

மேலும் சிந்திப்போம்


Sunday, August 24, 2014

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 2

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 2


அசோகவனத்தில் சீதையிடம் ஜொள்ளுகிறான் இராவணன்.

"நான் வஞ்ச மனம் கொண்டவன். பெண் போல வடிவுகொண்ட நஞ்சு தோய்ந்த அமுதத்தை உண்ண விரும்பினேன். உன்னை நாளும் உன் நினைவால் என் நெஞ்சு நொந்து தேய்ந்து போகிறது. சரி,இந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிரை விட்டு விடலாமா என்றால் அதற்கும் பயமாக இருக்கிறது. அடியவனான நான் உன் அடைக்கலம்.  அமுதின் வந்தீர்"

என்று புலம்புகிறான்.

நாயேன், அடியேன் என்று தன்னுடைய அத்தனை பெருமைகளையும் விட்டு விட்டு மிக மிக கீழிறங்கி வருகிறான்.

பாடல்

 வஞ்சனேன் எனக்கு நானே,
    மாதரார் வடிவு கொண்ட
நஞ்சுதோய் அமுதம் உண்பான்
    நச்சினேன்; நாளும் தேய்ந்த;
நெஞ்சு நொந்து உம்மை நாயேன்
    நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும்
    அடைக்கலம், அமுதின் வந்தீர்!

பொருள் 

 வஞ்சனேன் எனக்கு நானே = எனக்கு நானே வஞ்சனை செய்து கொள்கிறேன்

மாதரார் வடிவு கொண்ட = பெண் என்ற வடிவு கொண்ட

நஞ்சுதோய் அமுதம் = நஞ்சு தோய்ந்த அமுதத்தை

உண்பான் நச்சினேன் = உண்ண விரும்பினேன்

நாளும் தேய்ந்த = தினமும் தேய்ந்த

நெஞ்சு நொந்து = என் நெஞ்சம் நொந்து

உம்மை = உன்னை, உங்களை

நாயேன் = நாய் போன்றவனான நான்

நினைப்பு விட்டு, = நினைப்பு விட்டு

ஆவி நீக்க அஞ்சினேன்; = உயிரை விட அஞ்சினேன்

அடியனேன் நும் அடைக்கலம் = அடியேன் உங்கள் அடைக்கலம்

அமுதின் வந்தீர்! = அமுதத்தில் இருந்து வந்தவளே

இதில் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

நச்சினேன் . நச்சினேன் என்றால் விரும்பினேன். சிவனின் திருநாமங்களில் நச்சினார்க்கினியன் என்பதும் ஒன்று. விரும்பியவர்களுக்கு இனியவன்.

வேண்டிய ஒன்றை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு பெயர் நச்சரித்தல் (nagging ) என்று பெயர்.

நச்சு என்பது இரண்டு விதத்தில் பொருள் தருகிறது.

வினை வடிவில் அது விரும்புதல் என்ற பொருளைத் தருகிறது.

அதுவே பெயர் சொல்லாக வரும்போது "நஞ்சு" என்ற பொருளில் வருகிறது.

முதல் வரியில் நஞ்சு தோய்ந்த அமுதம் என்று வந்தது. அதை தொடர்ந்து நச்சினேன் என்ற தொடர் மிகப் பொருத்தமாக இருக்கிறது.

நச்சினேன் என்றால் விரும்பினேன்.

விரும்பும்படி இருந்தால் "நச்" சென்று இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

விரும்பும் படி இருப்பவர் - நச்சியார் அல்லது ஆதி நீண்டு நாச்சியார்.

"அமுதின் வந்தீர்" என்று தெரிந்து சொன்னானா அல்லது தெரியாமல் சொன்னானா என்று தெரியவில்லை. திருமகள் , அமுதத்தோடு சேர்ந்து பாற்கடலில் இருந்து தோன்றியவள். சீதை, திருமகளின் அவதாரம்.

உன் நினைப்பை விட்டால் இறந்து போவேன். இறப்பதற்கும் அச்சமாக இருக்கிறது.

காதல் படுத்தும் பாடு !







ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்

ஆத்திச் சூடி - அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் 


இரண்டாம் வகுப்பிலோ மூன்றாம் வகுப்பிலோ படித்தது.

மனப்பாடம் செய்து, ஒப்பித்து, மதிப்பெண்கள் வாங்கி எல்லாம் முடித்து வந்தாகி விட்டது.

இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது ?

அறம் செய்ய விரும்பு என்று சொன்ன அவ்வை ஏன் அடுத்த வரியில் ஆறுவது சினம் என்று சொன்னாள் ?

ஆறுவது காமம், ஆறுவது ஆசை என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஏன் சினத்தை சொல்ல வேண்டும் ?

அறம் செய்யும் போது கோபம்  வரும்.

ஏன் ?

அறம் என்பதற்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

ஒன்று தானம் செய்வது.

இன்னொன்று தர்ம , ஒழுக்க நெறிப்படி வாழ்வது.

முதலில் தானம் செய்வதைப் பற்றி  பார்ப்போம்.

ஒருவர் தான தர்மம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் உதவி பெற்றவன்  நாலு பேரிடத்தில் சொல்லுவான். அவர்களும் உதவி கேட்டு  வருவார்கள். நாளடைவில் இது ஒரு தொல்லையாகப் போய் விடும். காலம் கெட்ட  நேரத்தில் போன் செய்வார்கள். அடிக்கடி தொடர்பு கொண்டு நச்சரிப்பார்கள். உதவி செய்ய முடியாவிட்டால் , "ரொம்பத்தான் அலட்டிக்கிறான், நெனச்சா செய்ய முடியாதா, அவனுக்கு செஞ்சான், இவனுக்கு  செஞ்சான் எனக்கு மட்டும் செய்யவில்லை " என்று பேசத் தலைப் படுவார்கள்.

ஒரு கட்டத்தில் எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை.

என்னத்துக்கு தானம் செய்யப் போவானே , இத்தனை பேர் கிட்ட கெட்ட பேர் வாங்குவானே , ஒண்ணும் செய்ய வேண்டாம் என்று நினைக்கத் தோன்றும்.

எனவே பாட்டி சொன்னாள்

"ஆறுவது சினம்"

சினம் ஆறி விடும். நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு" அறம் செய்வதை வெறுத்து விடாதே என்று சொன்னாள் .

இரண்டாவதை எடுத்துக் கொண்டால்..

அற வழியில் நிற்பவர்களை இந்த உலகம் என்ன சொல்லும் ....

"பிழைக்கத் தெரியாத ஆள்", "அப்பாவி" , " சரியான ஏமாளி" என்றெல்லாம் பட்டம்  கொடுக்கும்.

அவர்கள் மேல் மட்டும் அல்ல, நம் மேலேயே நமக்கு கோபம் வரும்.

நாமும் மற்றவர்கள் மாதிரி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிடலாமா என்று  தோன்றும். அறத்தின் மேல் வெறுப்பு வரும்.

அவ்வை சொல்கிறாள் .... "ஆறுவது சினம்"....நீ தொடர்ந்து "அறம் செய்ய விரும்பு". அதை வெறுத்து விடாதே.


இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 1

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 1


அசோக வனத்துக்கு இராவணன் வருகிறான்.

வந்து, சீதையின் முன்னால் பொன்னால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து அவளிடம் பேசத் தொடங்குகிறான்.

பேசினான் என்பதை விட, கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்.

எப்போது தான் இந்த அடியேனுக்கு இரக்கம் காட்டுவாய் ? எப்போதுதான் இந்த இந்த நிலவுக்கும் சூரியனுக்கும் நான் வித்தியாசம் காண்பது, எப்போதுதான் நான் இந்த மன்மதனின் அம்புகளுக்கு பலி ஆகாமல் இருப்பது என்று மனதில் பட்டதை எல்லாம் எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘என்றுதான், அடியனேனுக்கு
    இரங்குவது? இந்து என்பான்
என்றுதான், இரவியோடும்
    வேற்றுமை தரெிவது என்பால்?
என்றுதான், அநங்க வாளிக்கு
    இலக்கு அலாது இருக்கல் ஆவது?
என்று, தான் உற்றது எல்லாம்
    இயம்புவான் எடுத்துக் கொண்டான்

பொருள் 

என்றுதான் = எப்போதுதான்
அடியனேனுக்கு = அடியவனான எனக்கு
இரங்குவது?  = இரக்கம் காட்டுவது ?

இந்து என்பான் = சந்திரன் என்பவன்

என்றுதான் = எப்போதுதான்

இரவியோடும் = சூரியனில் இருந்து

வேற்றுமை தெரிவது என்பால்? = வேற்றுமை காட்டுவது என்னிடம்

என்றுதான் = எப்போதுதான்

அநங்க வாளிக்கு = மன்மதனின் அம்புக்கு

இலக்கு அலாது இருக்கல் ஆவது? = இலக்கு ஆகாமல் நான் இருப்பது

என்று = என்று

தான் = அவன்

உற்றது எல்லாம் = மனதில் கொண்டதை எல்லாம்

இயம்புவான் எடுத்துக் கொண்டான் = சொல்லத் தொடங்கினான்.

இது பாட்டின் மேலோட்டமான பொருள்.

கொஞ்சம் உள்ளே போய் அதன் சுவையை அறிவோம்.

"அடியேன்" என்கிறான் இராவணன்.

இராவணன் யார் ?

முக்கோடி வாழ் நாளும்,
முயன்று உடைய பெரும் தவமும்,
எக்கோடி யாராலும் வெல்லப் படாய் என்ற வரமும்
நாரத முனிவர்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
திக்கொடு உலகு அனைத்தையும் வென்று அடக்கிய புய வலியும்

அது மட்டுமா

வாரணம் பொருத மார்பன்
வரையினை எடுத்த தோளன்
பத்துத் தலை
இருபது தோள்
சங்கரன் கொடுத்த வாள்

என்று அவன் பெருமை கணக்கில் அடங்காதது.

அவன், இந்த பெண்ணின் முன்னால் போய் "அடியேன் மேல் என்று தான் இரக்கம் கொள்வது " என்று கெஞ்சுகிறான்.

அவன் கைக்கு எட்டாத ஒன்றும் இந்த உலகில் இருக்கிறது. அது சீதையின் சம்மதம்.


என்றுதான், என்றுதான் என்று நான்கு முறை சொல்கிறான்.   

அதில் முதல் மூன்று முறை உள்ளதில் உள்ள 'தான்' என்ற சொல் அசைச் சொல்.

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாத சொல். பாடலில் இலக்கணம் மற்றும் ஒலி நயத்திற்காக சேர்ப்பது. 

என்றுதான் எனக்கு இரங்குவது என்ற தொடரில் 'தான்' என்ற சொல் இல்லா விட்டாலும்  அர்த்தம் மாறாது. 

"என்று எனக்கு இரங்குவது" என்றாலும் அதே பொருளைத்தான் தரும்.

"தான்" என்ற அகந்தை அர்த்தம் இல்லாதது தானே ?

கடைசியில் வரும் "என்று , தான் "  என்ற தொடர் "என்று, தான் நினைத்ததை சொல்லத் தொடங்கினான் " என்ற அர்த்தத்தில் வருகிறது. 

என்றுதான் எனக்கு இரங்குவது 
 
என்று - தான்   நினைத்ததை 

வார்த்தையில் விளையாடுகிறான் கம்பன். 

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய ஆளையும் காமம், காதல் எப்படி குழந்தையாக மாற்றி விடுகிறது ?

ஏன் என்று சிந்திப்போம். 

Friday, August 22, 2014

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - பாகம் 2 


கடவுளை எங்கே வைப்பது ?

சிலர் பூஜை அறையில் வைத்து இருப்பார்கள்.

சிலர் பர்சில் வைத்து இருப்பார்கள்.

சிலர் கழுத்தில் உள்ள டாலரில் மாட்டி தொங்க விட்டிருப்பார்கள்.

கையில், இடுப்பில் என்று எங்கெல்லாமோ இறைவன்.

கடவுளை மனதில், நெஞ்சில், கருத்தில் வைக்க வேண்டும். கக்கத்தில் வைக்கக் கூடாது.


எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.

என்பார்  பட்டினத்தார்.

இதைத்தான் மணிவாசகரும் ,


உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே


உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றவன் என்கிறார்.

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று சிவ புராணத்தில்  முன்னால்  குறிப்பிட்டார்.

ஞானிகள் எல்லோரும் ஒரே விதமாக சிந்தித்து இருக்கிறார்கள்.