Saturday, June 6, 2015

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான்

பிரபந்தம் - ஒன்றும் உணரேன் நான் 



பாடல்

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

கொஞ்சம் சீர்  பிரிப்போம் 

என்று கடல்கடைந்தது ? எவ்வுலகம் நீர் ஏற்றது,
ஒன்றும் அதனை உணரேன்  நான், - அன்று
தடைத்து உ டைத்துக் கண்படுத்த ஆழி, இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்.

பொருள்

என்று கடல்கடைந்தது ? = கடலை கடைந்தது எப்போது ?

எவ்வுலகம் நீர் ஏற்றது = எந்த உலகத்துக்காக மாவலியிடம் நீர் ஏற்றது (தானம் பெற்றது)

ஒன்றும் அதனை உணரேன்  நான் = அதெல்லாம் எனக்குத் தெரியாது

அன்று = அன்றொரு நாள்

தடைத்து  உ டைத்துக் = தடைகளை உடைத்து (இலங்கை செல்ல)

கண்படுத்த = நீ துயில் கொள்ளும்

ஆழி இது = கடல் இது ,

நீ = நீ

படைத்து = படைத்து

இடந்து = இகழ்ந்து (தோண்டி எடுத்து )

உண்டு =பிரளய காலத்தில் உண்டு 

உமிழ்ந்த பார் = பின் உமிழ்ந்த பார்

மேலோட்டமாக பார்த்தால் இது தான் பொருள்.  பெரியவர்களின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
 
சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 


அந்தக் காலத்தை விட இப்போது அநியாயங்களும், அநீதிகளும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இருந்தும் ஆழ்வார்களும், நாயனமார்களும் இப்போது ஏன் வருவது இல்லை?

இன்று தான் அவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இருந்தும் பெரியவர்கள் யாரும் உதிப்பாதாகக் காணோம்.

மக்கள் அறம் எது, நீதி எது, தர்மம் எது என்று அறியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களை வழி நடத்த ஏன் பெரியவர்கள் யாரும் தோன்ற மாட்டேன் என்கிறார்கள் ?

எப்போதோ சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அது இன்றைக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.  கீதையும், குறளும் , வேதங்களும், உபநிஷத்துக்களும் நடை முறைக்கு சாத்தியமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

தேவாரமும் , திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் இன்று நம் வாழ்க்கைக்கு துணை செய்யுமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

பொய்கை ஆழ்வார் விடை சொல்கிறார்.

பாற்கடலை எப்போது கடைந்தார்கள்  ?

மாவலியிடம் மூன்று அடியை எப்போது தானமாகப் பெற்றான் ?

இலங்கைக்கு எப்போது பாலம் கட்டியது ?

யாருக்குத் தெரியும் ?

ஆனால் , அது இன்றுபோல் இருக்கிறது.

இதோ இந்த கடல் இன்றும் யாரோ கடைவது போல அலை பொங்குகிறது. நுரை பொங்குகிறது.

அன்று மூவடியால் அளந்த உலகம் இதோ இந்த உலகம்தான்.

என்றோ உண்டு, அகழ்ந்து எடுத்து, உமிழ்ந்தது இந்த உலகம்தான்.

நீங்கள் நிற்கும், அமர்ந்து இருக்கும் இந்தத் தரைதான் உலகளந்த பெருமாள் அன்று அளந்தது.

அவை எல்லாம் முடிந்து போனது மாதிரி  இருந்தாலும்,இன்று வரை அவற்றுள்   ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பக்தியும், தெளிந்த அறிவும் இருந்தால் காலம் மறைந்து போகும். அன்று நடந்தது இன்று நடப்பது போல இருக்கும்.

அன்று சொன்ன கீதை இன்று சொல்வது போல இருக்கும்.

எதுவும் முடிந்து போகவில்லை. அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.

சிந்திப்போம்.





Friday, June 5, 2015

திருவாசகம் - நெறி அல்லா நெறி

திருவாசகம் - நெறி அல்லா நெறி 


நமக்கு கை கால்கள் நன்றாக இருக்கிறது, கண் தெரிகிறது, மற்ற உறுப்புகள் எல்லாம் சரியாக இயங்குகின்றன, அமைதியான இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்,  பெற்றோர்கள், அன்பான உடன் பிறப்பு, தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் படித்திருக்கிறோம்...

இது எல்லாம்  சம்பாதித்துப் பெற்றதா ?

எப்படியோ நமக்கு கிடைத்தது. நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை இவை எல்லாம்  கிடைக்க.

பின் எப்படி இவை நமக்கு கிடைத்தது ? என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர். "அச்சோவே" என்று அவருக்கு ஆச்சரியம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும்....

வெளிய விட்ட மூச்சு மீண்டும் உள்ளே போகிறது...அட !

பசிக்கிறது, சாப்பிடுகிறோம்...அதுவே செரிமானமாகி விடுகிறது...அட !

வாழ்வில் எத்தனை ஆச்சரியங்கள் ....

இது போக இறை அருளும் கிடைத்து விட்டால் ? ஆச்சிரியதிற்கு அளவே இல்லை.

அச்சோவே என்று பத்து பாடல் பாடி இருக்கிறார் மணிவாசகப் பெருந்தகை...அத்தனையும்  ஆச்சரியம்தான்

அதில் இரண்டாவது பாடல்...

இந்த வாழ்வின் குறிக் கோள் என்ன ? எதற்காகப் பிறந்தோம் ? என்ன செய்யப் படித்தோம் ? இந்த  வேலை,  கல்யாணம், பிள்ளைகள், சொத்து, சம்பாத்தியம் எல்லாம் எதற்காக ? இந்த வாழ்வின் குறிக்கோள் (objective ) என்ன ?

எதற்காக இறைவன் அல்லது இயற்கை நம்மைப் படைத்தது ? நம் மூலம் அது என்ன  நினைக்கிறது ?

ஒன்றும் இல்லை.

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று   கிடையாது. நீங்களாகவே கற்பித்துக் கொண்டால்தான் உண்டு. அப்படி நீங்கள் நினைக்கும் அர்த்தமும் மாறிக் கொண்டே இருக்கும்.
   
வாழ்கையை ரொம்ப தீவிரமாக (serious ) எடுத்துக் கொண்டு சிரமப் படாதீர்கள். இது ஒரு விளையாட்டு. அவ்வளவுதான்.

இறைவனுக்கு அல்லது  இயற்கைக்கு ஒரு  குறிகோளும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுக்குத்தான்.

இதில் என்ன நான் பெரியவன், சிறியவன், உயர்ந்தவன் , தாழ்ந்தவன்,  உள்ளவன்,இல்லாதவன் என்று அடி தடி சண்டை.

விளையாட்டாக எடுத்துக் கொண்டு போங்கள் . வாழ்கை லேசாக இருக்கும்.

மணிவாசகர் .சொல்கிறார்..இறைவனுக்கே ஒரு குறிக்கோளும் கிடையாதாம். சும்மா  கூத்து அடித்துக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கே இல்லை  என்றால் நீங்கள் ஏன்  கவலைப் படுகிறீர்கள். ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருங்கள்.

சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

பாடல்

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பொருள்

நெறியல்லா நெறிதன்னை = நெறி  அல்லாத நெறி தன்னை. நெறி என்றால் வழி. வழி அல்லாத வழி என்றால் என்ன ? பெரியவர்கள் எது சொன்னாலும் நல்லதையே சொல்லுவார்கள். நினைப்பார்கள். அவர்கள் நெறி என்று சொன்னால் அது நல்ல நெறியையே குறிக்கும். எனவே "அல்லாத நெறி" என்றால்  தீய வழி. " நல்ல வழி அல்லாதவழியை " அதாவது தீய வழியை.  தீய வழி என்று  கூட தன் வாயால் சொல்ல மறுக்கிறார் மணிவாசகர்.  தீய வழி என்று சொன்னால்,  அது என்ன வழி என்று குதர்க்கம் பேசும் ஆட்கள் இருப்பார்கள். அது எப்படி தீய வழி ஆகும் என்று தர்க்கம் பண்ணுவார்கள். எனவே, நல்ல வழியை மட்டும் சொல்லி விட்டு, அது அல்லாதது தீய வழி என்று சொல்கிறார் அவர்.

தீமைகளை விவரித்துச் சொல்லக் கூடாது. ஏன் என்றால், அப்படி விவரித்துச் சொன்னால் , நாளடைவில் நமக்கு அதில் ஒரு ருசி வந்துவிடும். அப்படி செய்து பார்த்தால்  என்ன என்று  தோன்றும். ஒரே முறை செய்து பார்ப்போம் என்று மனம் நினைக்கும்.   எனவே தான் "நெறி அல்லாத நெறி தன்னை" என்றார். 

வழியே ஏகுக , வழியே மீளுக என்றாள் ஔவைப் பாட்டி.

நல்ல வழியில் போய் , நல்ல வழியில் திரும்பி வா என்று அர்த்தம்.

வழியே என்று தானே சொன்னாள் , நல்ல வழி என்று சொல்லவில்லையே என்று வாதம் பண்ணக் கூடாது. வழி என்று பெரியவர்கள் சொன்னால் அது நல்ல  வழிதான்.


நெறியாக நினைவேனைச் = அதையே நெறியாக நினைக்கும் என்னை. நெறி அல்லாத  நெறியை, நெறியாக நினைக்கும் என்னை. அதாவது, நல்ல வழி இல்லாத வழியை நல்ல வழி என்று நினைக்கும் என்னை.


சிறுநெறிகள் சேராமே = சிறு நெறிகள் சேராமே. சிற்றின்பத்தை அடையும் வழியில் செல்லாமல் 

திருவருளே சேரும்வண்ணம் =  திருவருளே சேரும் வண்ணம்

குறியொன்றும் இல்லாத கூத்தன் = ஒரு குறிக்கோளும் இல்லாத கூத்தன். ஒரு நோக்கமும் இல்லாமால் ஆடிக் கொண்டிருக்கிறான்.  ஆனந்தம்,ஆட்டம் வருகிறது. அவ்வளவுதான்.

தன் கூத்தையெனக் = அவனுடைய கூத்தை

அறியும் வண்ணம் = நான் அறிந்து கொள்ளும் படி

அருளியவா றார் பெறுவார்= அருளியவாறு யார் பெறுவார்

 அச்சோவே = அய்யோ  !

நான் அறிந்து கொண்டது மாதிரி யார்  அறிந்து கொள்வார் என்று ஆச்சரியப் படுகிறார்.

நல்ல வழியில் சென்றால் கூத்தனின் கூத்து  புரியும்.

சிற்றின்பத்தை நோக்கிப் போகாமல் இருக்கும் வழி சரியான வழி.

செல்லத் தொடங்குகள்...எல்லாம் புரிபடும்.




Thursday, June 4, 2015

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 2

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 2


துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.

துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?

குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.

எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.

நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.

அறிவியல் என்ன செய்கிறது ?

அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.

இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.

எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.

எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

சரி.

ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.

நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?

இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.

இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.

நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.

குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.

இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு  என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற  நிறைவான  எண்ணம் வருகிறது.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.

பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

பொருள்

வையம் = உலகம், பூமி

தகளியா = விளக்காக

வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே

நெய்யாக = நெய்யாக

வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே

விளக்காக = அந்த விளக்கின் சுடராக

செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய

ஆழி யானடிக்கே  = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே

சூட்டினேஞ் = சூட்டினேன்

சொன் மாலை = சொற்களால் ஆன மாலை

இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.


துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார்  ஆழ்வார்.

பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப்  பெரிதாக.

உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக

இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.

முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள்.

இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ?

இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.

==================== பாகம் 2 ============================================

உலகமே விளக்கு. 
கடல் நீரே அந்த விளக்கில் இட்ட நெய்.
சூரியனே அந்த விளக்கின் சுடர் 

இதை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

இந்த உவமைகளால என்ன சொல்ல வருகிறார் ஆழ்வார் ?

சூரியன் - நித்தம் நித்தம் எழுகிறது, வெளிச்சம் தருகிறது. மழை பொழிவிக்கிறது, மாலையில் மறைகிறது. அது பாட்டுக்கு தன் கடமையை செய்து கொண்டு  இருக்கிறது. யார் இருக்கிறார்கள், யார் இல்லை, யார் என்ன சொல்லுவார்கள் என்றெல்லாம் அது பார்ப்பது இல்லை. தன் கடமையைச் செய்கிறது. அதற்கு பிரதி பலனாக அது வேறு ஒன்றையும் எதிர்பார்ப்பது இல்லை. 

கடைமையைச் செய். பலனில் நாட்டம் வைக்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னது போல.

இது கர்ம யோகம். 

 கடல் - எத்தனை மழை பொழிந்தாலும் அது பொங்கி வழிவது இல்லை. மழையே பெய்யாவிட்டாலும் வற்றி  வறண்டு போவது இல்லை. இன்பத்தில் ஆடுவது இல்லை, துன்பத்தில் துவள்வது இல்லை. ஒரே திட சிந்தையுடன் அது இருக்கிறது. 

ஸ்தித பிரஞன் என்று கீதையில் கண்ணன் சொன்னது போல.

இது ஞான யோகம். 

இந்த விளக்கை ஏற்றியது 

செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன்

சிவந்த சுடர் விடும் சக்கரத்தைக் கொண்ட அவனின் திருவடிகளில் சூட்டினேன் என்றார்.

இது பக்தி யோகம்.

கடைமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே,
இன்பத்திலும் துன்பத்திலும் கலங்காமல் உறுதியாக இரு
அவன் மேல் பக்தி செய்

ஒரே பாடலில் கீதையின் சாரம்சத்தை கொண்டு தருகிறார் ஆழ்வார்.

மீண்டும் ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள்.

ஆழ்வார் தீட்டிய கோலம் புரியும். அதில் உள்ள ஆழ்ந்த அர்த்தம் புரியும்.

இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால், வாழ்வில் துன்பம் , இடராழி வருமா என்ன ?


இப்படி ஒவ்வொரு பாடலும் தன்னுள் ஆழ்ந்த கருத்துகளை சுமந்து கொண்டு இருக்கின்றன.

எப்போது அனைத்தையும் படிக்கப் போகிறீர்கள் ?

Wednesday, June 3, 2015

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1

பிரபந்தம் - வையம் தகளியாக - துன்பம் இல்லாத வாழ்வு வாழ - பாகம் 1


துன்பங்கள் யாருக்கும் வேண்டாம். ஆனாலும், எல்லோருக்கும் துன்பம் வருகிறது.

துன்பம் ஏன் வருகிறது ? அந்த துன்பத்தை எப்படி வராமல் தடுத்துக் கொள்வது ? துன்பம் இல்லாத வாழ்வை எப்படி வாழ்வது ?

குறுகிய மனதால் துன்பம் வருகிறது. நான் , எனது என்ற எண்ணங்களால் துன்பம் வருகிறது.

எனக்கு வேண்டும், எனக்கு மட்டும் வேண்டும், அவனுக்குக் கிடைக்கக் கூடாது, என் வீடு, என் பிள்ளை, என் குடும்பம் , என் நாடு , என் மதம் என்று பல்வேறு பிரிவினைகளால் நமக்குத் துன்பம் வருகிறது.

நம் பாட முறைகள், அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இந்த எண்ணங்களை வலுப் படுத்துகிறது.

அறிவியல் என்ன செய்கிறது ?

அது பொருள்களை ஆராய முற்படுகிறது. ஆராயும் போது அது பொருள்களை பிரித்துக் கொண்டே போகிறது. முதலில் அணு, பின் அதற்குள் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், நியுட்ரான் என்று போகிறது. பின் அவற்றையும் உடைத்துப் பிரித்து உள்ளே செல்கிறது.

இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் நுணுக்கமாக ஆராய்வதே அறிவியலின் வேலை.

எத்தனை அறிவியல் துறைகள்? பிரிந்து பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இதில் சிக்கல் என்ன என்றால், அதிகமாக இவற்றைப் படித்து படித்து நம் மனமும் மூளையும் எதையும் இதே முறையில் ஆராய தொடங்குகிறது.

எதைக் கொடுத்தாலும் பியித்து பிரித்து போட்டு விடுகிறோம். மனமும் அறிவும் சுருங்கிப் போய் விடுகிறது.

எந்த பிரச்னை என்றாலும் அதை சரியாக பிரித்தால் தான் அதற்கு ஒரு தீர்வு காண முடியும்.

சரி.

ஆனால், வாழ்கை என்பது பிரச்சனையா ? வாழ்க்கையில் பிரச்னைகள் வரலாம். ஆனால், வாழ்கையே பிரச்னை அல்ல.

நமக்குத் தெரிந்ததெல்லாம் அறிவியல், கணிதம், தர்க சாஸ்திரம் (logic ). இதை வைத்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். வாழ்கையை எப்படி வாழ்வது ?

இங்குதான் ஆன்மீகமும் இலக்கியமும் வருகின்றன.

இவை இரண்டும் வாழ்கை என்பது ஒரு பிரமாண்டமான ஒன்று, அனைத்தையும் சேர்த்தது, ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று சொல்ல வருகிறது.

நம் அறிவையும், மனதையும் விசாலமாக்க வருகின்றன.

குறுகிய வட்டத்துக்குள் இருந்து நம்மை விடுவித்து மிகப் பெரிய ஒரு பிரமாண்டத்தை நமக்குக் காட்டுகின்றன.

இந்த பிரமாண்டம் , விஸ்வரூபம் புரியும்போது நான், எனது என்பவை மிக மிகச் சிறியது ஆகி மறைந்தே போகின்றன. நாமும் இந்த பிரமாண்டத்தின் ஒரு கூறு  என்று அறிகிறோம். பிரிவினைகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற  நிறைவான  எண்ணம் வருகிறது.

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி , முதல் திரு மொழி, முதல் பாசுரம் அப்படி ஒரு பிரமாண்டத்தை நமக்குத் தீட்டிக் காட்டுகிறது.

இந்த உலகமே அகல் விளக்காக, இந்த கடல்நீர் எல்லாம் அந்த விளக்கில் இடும் நெய்யாக, சூரியனே அந்த விளக்கின் சுடராக இருக்க , அப்படி ஒரு விளக்கை ஏற்றினேன், என் துயரமெல்லாம் நீங்க வேண்டி என்கிறார்.

பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.

பொருள்

வையம் = உலகம், பூமி

தகளியா = விளக்காக

வார்கடலே = ஆர் + கடலே = ஆர்பரிக்கும் கடலே

நெய்யாக = நெய்யாக

வெய்ய கதிரோன் = வெம்மையான கதிரோனே

விளக்காக = அந்த விளக்கின் சுடராக

செய்ய சுடர் = சிவந்த சுடரைக் கொண்ட, ஒளி பொருந்திய

ஆழி யானடிக்கே  = ஆழியான் அடிக்கே, திருமாலின் திருவடிகளுக்கே

சூட்டினேஞ் = சூட்டினேன் 

சொன் மாலை = சொற்களால் ஆன மாலை

இடராழி நீங்குகவே என்று = இடர் + ஆழி + நீங்குவே என்று. இடர் என்றால் துன்பம். துன்பம் என்ற கடல் நீங்க வேண்டி.


துன்பம் என்ற கடல் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறார்  ஆழ்வார். 

பெரிதாக சிந்தியுங்கள். மிக மிகப்  பெரிதாக.

உலகமே விளக்காக. கடலே நெய்யாக. சூரியனே சுடராக

இப்படி ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். இதை மனதில் நிறுத்துங்கள்.

முடிந்த நேரம் எல்லாம் இந்த பாசுரத்தை உணர்ந்து சொல்லுங்கள். 

இந்த பிரமாண்டம் விளங்குகிராதா ? மனம் விரிகிறதா ? 

இந்த பாசுரம் இன்னும் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது. அதை மேலும் சிந்திப்போம்.

 

Sunday, May 31, 2015

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்


நாம் ஒன்றைச் செய்ய முடிவு செய்யும்போது, அது அல்லாத மற்றவற்றை செய்வதில்லை என்ற முடிவையும் எடுக்கிறோம்.

அடுத்த ஒரு மணி நேரம் டிவி பார்ப்பது என்று முடிவு செய்து விட்டால், அடுத்த ஒரு மணி நேரம் படிப்பது இல்லை, உடற் பயிற்சி செய்வது இல்லை, என்று எத்தனையோ விஷயங்களை செய்வது இல்லை என்பதும் முடிவு செய்யப் படுகிறது அல்லவா.

அதே போல், நாம் ஒன்றை படிக்கிறோம் என்று முடிவு செய்து விட்டால், அந்த ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் படிப்பது இல்லை என்றும் முடிவு செய்கிறோம்.

எஞ்சினீரிங் படிப்பது என்றால் மருத்துவம் படிப்பது அல்ல, சட்டம் படிப்பது இல்லை, வணிகம் படிப்பது இல்லை என்று முடிவு செய்கிறோம்.

உலகில் ஒன்றைப் படிப்பது என்றால், ஒரு கோடி விஷயத்தை படிக்காமல் விடுவோம்.

கற்பது என்பது கல்லாமையும் அடங்கியது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் மிக மிக கொடுமையானது எது என்றால் வறுமை.

 கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

என்பார் ஔவையார். வறுமையின் கொடுமை அதை அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

அந்த வறுமையை போக்க அபிராமியின் பாதங்களைப் பற்றுங்கள் என்று அழைக்கிறார் அபிராமி பட்டர்.

பாடல்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பொருள்

இல்லாமை சொல்லி = என்னிடம் இல்லை என்று  சொல்லி

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = கேவலப் பட்டு

நில்லாமை = நிற்காமல் இருப்பதை

 நினைகுவிரேல் = நீங்கள் நினைத்தால்

நித்தம் = தினமும்

நீடு தவம் = நீண்ட தவம்

கல்லாமை = கல்லாமல் இருப்பது

கற்ற கயவர் தம்பால் = அதைக் கற்ற கயவர்களிடம்

ஒரு காலத்தும் = எப்போதும்

செல்லாமை வைத்த = செல்லாமல் காக்கும்

திரிபுரை = அபிராமியின்

பாதங்கள் சேர்மின்களே = பாதங்களை அடையுங்கள்.

இல்லாமை என்று கூறும்போது, அது செல்வம் இல்லாமை மட்டும் இல்லை, கல்வி, ஆரோகியம், அதிகாரம், புகழ், மதிப்பு, என்று எந்த ஒரு இல்லாமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவள் பாதங்களைப் பற்றுங்கள், இல்லை என்று சொல்லி நீங்கள் இன்னொருவரிடம்  செல்ல வேண்டியது இருக்காது. எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

அது என்ன "கல்லாமை கற்ற கயவர்"

நாம் ஏதோ படித்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறோம். நாம் படிக்காததையும், படித்தையும் வைத்துப் பார்த்தால் தெரியும் நாம் படித்தது எவ்வளவு, படிக்காமல் விட்டது எவ்வளவு என்று.

நாம், கல்லாமையைக் கற்று இருக்கிறோம்.

அறியாமையை அறிந்து இருக்கிறோம்.

மேலும், நம் கல்வி நம்மை எங்கே இட்டுச் செல்கிறது ?  

"நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால்"

நீண்ட தவத்தை கற்காத  கயவர் தம்பால். எதையெதையோ கற்கிறோம். நீண்ட தவத்தை கற்க வேண்டும் என்கிறார் பட்டர்.

 


Thursday, May 28, 2015

பிரபந்தம் - மனச் சுடரை தூண்டும் மலை

சிலர் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் கோவிலுக்குப் போய் இறைவனிடம் வேண்டுவார்கள். எனக்கு அது வேண்டும், எது வேண்டும், என்று வேண்டிக் கொள்வார்கள்.

வேண்டியது கிடைத்தவுடன், இறைவனை மறந்து விடுவார்கள். அடுத்த தேவை வரும் வரை, அந்த நினைவே கிடையாது.

வேறு சிலர், "எனக்கு வேண்டியதெல்லாம் நீ தந்திருக்கிறாய், நன்றி " என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.  போய் விட்டு வருகிறேன் என்று விடை பெற்றுச் செல்வார்கள்.

வேறு சிலரோ, தேவையும் இல்லை, நன்றியும் இல்லை,  பக்தி மட்டும் மனதில் இருக்கும். இறைவனை தொழுவது மட்டும் தான் உண்டு. அதற்கு பிரதி பலனாக ஒன்றையும் கேட்பது இல்லை.

இவர்களைப் பற்றி பொய்கை ஆழ்வார் கூறுகிறார்

பாடல்  

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.


எழுவார் = கேட்டது கிடைத்தவுடன் எழுந்து போய் விடுவார்கள்

விடைகொள்வார் = சில பேர் சொல்லிக் கொண்டு போவார்கள்.

ஈன்துழா யானை = இனிய துளசி மாலை அணிந்தவனை

வழுவா வகை = குற்றமில்லாத வகை. குற்றமில்லாத என்பதற்கு வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காத என்று பொருள் சொல்கிறார்கள். 

நினைந்து = நினைத்து

வைகல்  தொழுவார் = எப்போதும் வணங்குவார்கள்

வினைச்சுடரை = வினை என்னும் தீயை

நந்துவிக்கும் = அணைக்கும்

வேங்கடமே = திருவேங்கட மலை

வானோர் = வானோர்

மனச்சுடரைத் தூண்டும் மலை = மனதில் உள்ள சுடரை தூண்டும் மலை

வினையான சுடரை அவிப்பவனும் அவன்.

மனதில் உள்ள சுடரை தூண்டி அதை பிரகாசிக்கச் செய்வதும் அவன்.

 


Wednesday, May 27, 2015

அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்

அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்



ஒரு பெண்ணை காதலிப்பவன் அவனுடைய காதலியை காணாமல் எப்படி தவிப்பான்.

காலையில் எழுந்தவுடன், அவள் இந்நேரம் எழுந்திருப்பாளா , பல் விளக்கி இருப்பாளா,  குளித்து, கல்லூரிக்குப் போக தயாராகி இருப்பாளா, இப்போது மதியம் உணவு  உண்டிருப்பாளா , இப்ப வீட்டுக்கு வந்திருப்பாள், இப்ப படித்துக் கொண்டிருப்பாள், இப்ப படுக்கப் போய் இருப்பாள், இப்ப தூங்கி இருப்பாள் என்று எந்நேரமும் அவள் நினைவாகவே இருப்பான் அல்லவா ?

பட்டரும் அதே போல அபிராமியின் நினைவாகவே இருக்கிறார்...எந்நேரமும் அவள் நினைவுதான் அவருக்கு.

நிற்கும் போதும்,
படுத்து இருக்கும் போதும்,
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லும் போதும்

அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை"

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மணிவாசகர் சொன்ன மாதிரி சதா சர்வ காலமும் அவள் நினைப்பே.

 அன்பு, காதல் , பக்தி எல்லாம் படித்து விளங்காது. அது ஒரு அனுபவம். அனுபவம் இருந்தால் புரியும். இல்லை என்றால் அது என்னவென்றே விளங்காது.

பக்தியை புத்தகத்தில் தேடக் கூடாது.

"எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே"  என்கிறார் பட்டர்.

எழுதாத வேதம் அவள் பாதங்கள். சொல்லி விளங்க வைக்க முடியாது. ஒருவர் பெற்ற அனுபவத்தை எழுத்தில் இறக்கி வைக்க முடியாது.

நினைக்க நினைக்க அவர் மனத்தில் ஆனந்தம் பொங்குகிறது.

பாடல்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

பொருள்


நின்றும் = நிற்கும் போதும்

இருந்தும்  = உட்கார்ந்து இருக்கும் போதும்

கிடந்தும் = படுத்து கிடக்கும் போதும்

நடந்தும் = நடக்கும் போதும்


நினைப்பதுன்னை = நான் நினைப்பது உன்னைத்தான்

என்றும் வணங்குவது = நான் எப்போதும் வணங்குவது

உன்மலர்த்தாள்!  = உன் மலர் போன்ற திருவடிகளைத்தான்

எழுதா மறையின் = எழுதாத வேதத்தின்

ஒன்றும் அரும் பொருளே! = ஒன்றான அரிய பொருளே . "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.

அருளே!  = அருள் வடிவானவளே

உமையே! = தூய்மையானவளே

இமயத்து அன்றும் பிறந்தவளே!  = பர்வத இராஜனுக்கு மகளாக பிறந்தவளே

அழியாமுத்தி ஆனந்தமே! = அழியாத முக்தியும் ஆனந்தமும் ஆனவளே

சொல்லித் தெரியாது காமம்.
சொன்னாலும் தெரியாது காதல்.
பக்தியும் அப்படித்தான் 

உணர்ந்து பாருங்கள்.