Tuesday, June 16, 2015

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?

நள வெண்பா - என்னைப் போல யார் துன்பப் பட்டார்கள் ?


நமக்கு ஒரு துன்பம் வரும்போது, "ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நிகழ்கிறது...நான் என்ன பாவம் செய்தேன்...யார் குடியையும் கெடுத்தேனா, பொய் சொன்னேனா, கொலை களவு செய்தேனா...எல்லாருக்கும் நல்லது தானே செய்தேன்...எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை " என்று மனம் சோர்ந்து வாடிப் போவோம்.

அந்த மாதிரி சமயங்களில் இலக்கியங்கள் ஆறுதலும் தேறுதலும் தருகின்றன.

எப்படி ?

முதலாவது, நமக்கு வந்த துன்பங்கள் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. நம்மை விடவும் அதிகமான, மிக அதிகமான துன்பங்கள் அடைந்தோர் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அதைப் பார்க்கும் போது நம் துன்பம் அப்படி ஒன்றும் தாங்க முடியாத ஒன்று அல்ல என்று தோன்றும்.

இரண்டாவது, அப்படி துன்பம் வந்தபோது அதை அந்த இலக்கியத்தில் வந்த கதா பாத்திரங்கள் எப்படி சமாளித்தன என்று கூறி நம்மை வழி நடத்தும்.

இப்படி நம் மனதுக்கு இலக்கியங்கள் இதம் தரும்.

மகா பாரதம்.

இதிகாசங்கள் மூன்று.

இராமாயணம், மகா பாரதம், சிவ இரகசியம்.

இதில் மகா பாரதத்துக்கு மட்டும் தான் மகா என்ற அடை மொழி உண்டு.

ஏன் என்றால் அதில் இல்லாத தர்மம் இல்லை.

தர்மன் சூதாடி, நாடு நகரம் எல்லாம் இழந்து, அவமானப் பட்டு, காட்டில் வந்து இருக்கிறான்.

ஒன்றல்ல, இரண்டல்ல பன்னிரண்டு வருடங்கள்.

யோசித்துப் பாருங்கள், ஒரு சக்ரவர்த்தி, அத்தனையும் இழந்து, காட்டில் வாழ்வது என்றால் எப்படி இருக்கும்.

அதிலும் ஒரு நன்மை விழைந்தது. பலப் பல முனிவர்களும், சான்றோர்களும் தருமனை  சந்தித்து அவனுக்கு ஆறுதலும், தேறுதலும் , உபதேசமும் செய்தார்கள்.

12 வருடங்கள். மிகப் பெரிய ஞானிகள் தந்த அரிய பெரிய அறிவுரைகள். யாருக்குக் கிடைக்கும்.

அப்படி கிடைத்த ஒன்று தான் நளவெண்பா.

தருமன், வியாச முனிவரிடம் கேட்கிறான்....

"கண்ணை இழந்து, மாய சூது ஆடி, மண்ணை இழந்து, காட்டுக்குப் போய் , என்னை போல துன்பப் பட்டவர்கள் யாரும் உண்டா "

என்று வருந்தி வினவுகிறான்.

அப்போது , தருமனுக்கு அவனை விட துன்பப் பட்ட நள மன்னனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

நள வெண்பா....படிக்கப் படிக்கப் திகட்டாத பாடல்கள்.

மிக எளிமையான, இனிமையான, மனித உணர்வுகளை அழகாகச் சொல்லும் வெண்பாக்கள்.

படிக்கும் போது நம்மை மிக மகிழச் செய்யும் பாடல்கள். அருமையான உதாரணங்கள், அற்புதமான சொற் தெரிவுகள்....

காதல், ஊடல், கூடல், வெட்கம், நாணம், பரிவு, பிரிவு, துயரம், ஏக்கம் என்று கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அத்தனை நுணக்கமான உணர்வுகளை படம் பிடிக்கும் நூல்.

அதிலிருந்து சில பாடல்கள் இன்னும் வரும் ப்ளாகில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

பொருள்

கண்ணிழந்து = கண்ணை இழந்து. இங்கே கண் என்று கூறியது அறிவை. அறிவுக் கண்ணை. கண் பார்க்க உதவுகிறது. அது போல அறிவும் உண்மையைக் காண உதவுகிறது.

 மாயக்  = மாயமான

கவறாடிக் = கறவு + ஆடி = சூது ஆடி

காவலர் தாம் = அரசர்கள் தான்

மண்ணிழந்து = மண்ணை இழந்து

போந்து = போய்

வனம் = காட்டை

நண்ணி  = சேர்ந்து

விண்ணிழந்த = வானில் இருந்து விழும்

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூல் = பூனூலை அணிந்த

மார்ப  = மார்பனே (வியாசனே )

மேதினியில் = உலகில்

வேறுண்டோ = வேறு யாராவது இருக்கிறார்களா

என்போல் = என்னைபோல

உழந்தார் இடர்.= துன்பத்தில் உழன்றவர்கள் ?

என்னமோ தனக்கு மட்டும் தான் துன்பம் வந்தது போல் நம்மை போலவே தருமனும் நினைக்கிறான்.

வியாசன் சொல்லத் தொடங்குகிறான்.

என்னவென்று மேலும் சிந்திப்போம்



Monday, June 15, 2015

பிரபந்தம் - மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவனே

பிரபந்தம் - மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவனே 


என்ன வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்...

நிறைய செல்வம்,  நல்ல ஆரோக்கியம், புகழ், அதிகாரம், செல்வாக்கு...வேண்டும் என்று கேட்போம். அதுவும் அந்த செல்வம் குறையக் கூடாது. செலவழிக்க செலவழிக்க அப்படியே இருந்து கொண்டு இருக்க வேண்டும்.

மரணத்திற்குப் பின், மேல் உலகம் போன பின், அந்த ஊரிலும், செல்வம், புகழ், அதிகாரம், செல்வாக்கு வேண்டும் என்று கேட்போம்.

இந்த இரண்டையும் கொடுத்தாலும் வேண்டாம் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

இது வேண்டாமாம்.

இதை விட பெரிதாக என்ன கேட்டு விடப் போகிறார் என்று பார்த்தால், வேங்கட மலையில் உள்ள குளத்தில் மீனாக பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

மகான்களுக்கு செல்வத்தில் பற்று இல்லை. அதிகாரம், புகழ், பெண், இதில் எல்லாம் பற்று இல்லை.  இறைவனோடு சம்பந்தப் பட்டிருக்க வேண்டும், அவன் கூடவே  இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பாடல்

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

பொருள்


ஆனாத = குறையாத

செல்வத் = செல்வத்தோடு

அரம்பையர்கள் தற் சூழ = அரம்பையர்கள் போன்ற தேவ மாதர்கள் சூழ

வானாளும் = தேவ லோகத்தை ஆளும்

செல்வமும் = செல்வமும்

மண்ணரசும் = மண்ணில் பெரிய அரசும்

யான் வேண்டேன் = நான் வேண்ட மாட்டேன்

தேனார் = தென் சொரியும்

பூஞ் = பூக்கள் நிறைந்த

சோலைத் =  சோலைகள் நிறைந்த

திருவேங்க டச்சுனையில் = திரு வேங்கட மலையில் உள்ள குளத்தில்

மீனாய்ப் = மீனாகப்

பிறக்கும் = பிறக்கும்

விதியுடையே னாவேனே = விதி உடையவன் ஆவனே.

முந்தைய பாசுரத்தில் குருகாய் (நாரையாக ) பிறக்கும் படி வேண்டினார்.

நாரைக்கு சிறகு இருக்கிறது. பறந்து வேறு மலைக்குப் போய் விடலாம். குளத்தில் நீர் வற்றினால் நாரை பறந்து போய் விடும்.  துன்பம் வந்த காலத்தில் இறைவனே இல்லை, இறைவன் இரக்கம் இல்லாதவன் என்று அவனை வைபவர்களும் உண்டு.  அது போல் துன்பம் வந்த காலத்தில் விட்டு விட்டு ஓடி  விடாமல், எப்போதும் அவன் கூடவே இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

குளத்தில் உள்ள மீன் , நீர் வற்றினாலும் அதிலேயே கிடந்து மடியும். குளம் விட்டு குளம்  போகாது. எனவே எப்போதும் வேங்கட மலையிலேயே இருக்கும் பேற்றினை வேண்டுகிறார்.



Sunday, June 14, 2015

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்

அறநெறிச்சாரம் - அற நூல்களைப் படிக்க வேண்டும்


நம் முன்னால் எத்தனை விதமான நூல்கள் இருக்கின்றன.

ஒரு புத்தகக் கடைக்குப் போனால் என்னென்ன வகை புத்தகங்கள் இருக்கின்றன ?

மர்ம நாவல்கள், சண்டை நாவல்கள், thrillers , என்று ஒரு வகை.

ஆசையை தூண்டும், காமத்தை தூண்டும், வகையான நூல்கள் இன்னொரு வகை.

இது போக மக்களை குழப்பும் ஏனைய நூல்கள். வாரப் பத்திரிகைகள், மாத நாவல்கள், என்று பலவிதமான நூல்கள்.

"மக்களை நல் வழிப் படுத்த, மக்களின் நிலையை உயர்த்த, மக்களுக்கு நல்லது கெட்டதை சொல்ல உள்ள புத்தகங்கள் மிக மிக குறைவு. அவற்றை தேடி கண்டு பிடித்து படிப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவர்களே பிறவி என்ற துன்பத்தை கடந்து போகும் பேறு பெற்றவர்கள்."


பாடல்

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

சீர் பிரித்த பின்

மற உரையும்  காமத்து உரையும் மயங்கிய 
பிற உரையும் மல்கிய ஞாலத்து அற உரை 
கேட்கும் திரு உடையோரே பிறவியை
நீக்கும் திரு உடையோர் .

பொருள்

மற உரையும் = சண்டை, சச்சரவு, அடி தடி என்று உரைக்கும் நூல்கள்

காமத்து உரையும் = காமம் மற்றும் ஆசையைத் தூண்டும் நூல்களும்

மயங்கிய = அறிவை மயக்கும்

பிற உரையும் = மற்ற பிற நூல்களும்

மல்கிய = நிறைந்து கிடக்கும்

ஞாலத்து = இந்த உலகில்

அற உரை = அறத்தை சொல்லும் நூல்களை

கேட்கும் = படித்தும் , கேட்டு அறியும்

திரு உடையோரே = புண்ணியம் உடையவர்களே

பிறவியை நீக்கும் = பிறவியை நீக்கும்

திரு உடையோர் = புண்ணியம் உடையவர்கள்

குப்பைகளை தள்ளி விட்டு, நல்லதை தேடி, கண்டு பிடித்து, படியுங்கள்.

பிறவி பிணியை போக்கும் அரு மருந்து அதுவே ஆகும்.

Saturday, June 13, 2015

இராமாயணம் - பிறவியின் பகைவன்

இராமாயணம் - பிறவியின் பகைவன் 



இறைவனை யாரும் கண்டதில்லை. இறைவனைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப் பட்டிருக்கிறோம். அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று தெரியாது.

அப்படி இருக்கும் போது , காணாத ஒன்றின் மேல் எப்படி அன்பு, பக்தி எல்லாம் வரும் ?

வீடணன் எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாய் இல்லை. இராவணனை விட்டு விட்டு இராமனிடம் செல்வதாக முடிவு செய்து விட்டான்.

"நான் இராமனை இதற்கு முன்னாள் பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. ஆனாலும் அவன் மேல் அன்பு தோன்றக் காரணம் எதுவும் தெரியவில்லை. எலும்பு வரைக் குளிர்கிறது. நெஞ்சு உருகுகிறது. இந்த புன்மையான பிறவியின் பகைவன் அவன் போலும் "

என்று உருகுகிறான்.

பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்

'முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டதில்லை

கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி முன்பு கேட்டது கூட இல்லை

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு வரக் காரணம் தெரியவில்லை

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்

நெஞ்சு உருகுமேல் = என் மனம் உருகுகிறது

அவன் = இராமன்

புன் புறப் பிறவியின் = புன்மையான பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது .

காணவும் இல்லை.

கேட்கவும் இல்லை.

இருந்தும் அன்பு பிறக்கிறது.

எனவேதான் அரக்க குலத்தில் பிறந்த வீடணனை விபீஷண ஆழ்வார் என்று கொண்டாடுகிறது வைணவம்.

நம்புங்கள், காண்பீர்கள்.

You will see it, when you believe it.



திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.

திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.


முந்தைய ப்ளாகில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். அதில் வரும் ஒரு வரி, "கற்பனவும் இனி அமையும்" என்பது.

அதன் அர்த்தம் என்ன ?

கற்பனவும் + இனி + அமையும் = இனி மேல் கற்க வேண்டியது ஒன்றும் இல்லை. நூல்களை கற்று பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது என்ற தொனியில். படித்தது எல்லாம் போதும். இது வரை படித்தது போதும்...இறைவன் என்பவன் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்ல என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

அமையும் என்ற சொல்ல அபிராமி பட்டரும் கையாண்டிருக்கிறார்.....


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

என்ற பாடலில்


உலகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்றல்ல.

பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லுவார்

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்"  என்று.

இறைவனை உணர முடியும். ஓத முடியாது.

அதாவது, படித்து புரிந்து கொள்ள முடியாது. உணர முடியும்.

கன்றை ஈன்ற பசு எப்படி தன் கன்றை உணர்கிறதோ அப்படி. பசு படித்து அறிவது அல்ல. ஆனாலும் அது உணர்கிறது.

பிறிதொரு இடத்தில் மாணிக்க வாசகர் சொல்லுவார்.


சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


சொல்லிய பாட்டின் பொருள் "உணர்ந்து" சொல்லுவார் என்றார்.

சொல்லிய பாட்டின் பொருள் "அறிந்து " சொல்லுவார் என்று சொல்லவில்லை.

இறை என்பது தனி மனித அனுபவம்.

மனித அறிவுக்கு எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டிய ஒன்று இறை அனுபவம்.


சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

என்பார் மணிவாசகர்.

சொல்லும், பதமும், சித்தமும் செல்லாத இடம் அது.


பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும்

பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும் 


இன்பமும் நிம்மதியும் எங்கு இருக்கிறது ?

சேவை செய்வதில் இருக்கிறது. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் மனதில் ஒரு திருப்தி, நிம்மதி, சுகம் எப்போது வரும் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது . பலன் கருதா உதவி செய்யும் போது இன்பம் பிறக்கும்.

எனக்கு, எனக்கு என்று ஆலாய் பறந்து பணம் சேர்த்துக் கொண்டே இருந்தால் செல்வம் பெருகும், ஆனால் இன்பம் பெருகுமா ?

பக்தி மார்கத்தில் இதை இறைவனுக்கு அடிமை செய்வது என்று சொல்கிறார்கள். அடிமை என்றால் ஏதோ கேவலமான வார்த்தை இல்லை. பலன் எதுவும் எதிர் பார்க்காமல், அவனுக்கு என்று செய்வது. அவ்வளவுதான்.

எல்லோருமே அவன் குழந்தைகள் தானே ? அவனுக்குச் செய்தால் என்ன, அவன் குழந்தைகளுக்குச் செய்தால் என்ன ?

பிரதி பலன் எதிர்பாராமல் பிறருக்குச் செய்யும் உதவி, அவனுக்குச் செய்யும் பக்திதான்.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடு, செல்வம் கொடு, பட்டம் , பதவி கொடு என்று கேட்போம்.

குலசேகர ஆழ்வார் இதையெல்லாம் வேண்டாம் என்று ஆண்டவனை வேண்டுகிறார்.

இந்த உடல் இருக்கிறதே, ஒவ்வொரு நாளும் மாமிசத்தால் எடை ஏறிக் கொண்டே போகிறது.  வேண்டாம் இந்த உடலே வேண்டாம்.  பெருமாளே உனக்கு அடிமை செய்வது மட்டும் தான் வேண்டும். திருவேங்கட மலையில் உள்ள கோனேரி என்ற தீர்த்தத்தில் குருகு (நாரை) ஆக பிறப்பதையே வேண்டுவேன் என்கிறார்.

பாடல்

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

சீர் பிரித்த பின்

ஊன் ஏறு  செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ்  வென்றான் அடிமை  திறம் அல்லாமல் 
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

பொருள் 

ஊன் ஏறு = மாமிசம் ஏறும்

செல்வத்து = செல்வத்துடன் கூடிய

உடற் பிறவி  = இந்த உடலை

யான் வேண்டேன் = நான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ்  = ஏழு காளைகளை

 வென்றான்  = வென்ற கண்ணனின்

அடிமை  திறம் அல்லாமல் = அடிமை செய்யும் தொழில் அல்லாமால்

கூன் ஏறு சங்கம் = வளைந்த சங்கை

இடத்தான் தன் = இடக்கையில் கொண்ட

வேங்கடத்து = திரு வேங்கட மலையில்

கோனேரி = கோனேரி என்ற தீர்த்தத்தில்

வாழும் = வாழும்

குருகாய்ப் பிறப்பேனே = நாரையாகப் பிறக்கும் படி வேண்டுவேன்

அது என்ன மனிதப் பிறவியை வேண்டாம், ஆனால் நாரையாகப் பிறக்க வேண்டும் என்கிறாரே ஆழ்வார் என்று நமக்குத் தோன்றும்.

மனிதப் பிறவியை விட நாரை உயர்ந்ததா ?

இல்லை. ஆனால், விலங்குகளிடம் பேராசை இல்லை, பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை, அளவுக்கு அதிகமாக உண்பது இல்லை, மிக எளிமையாக வாழ வேண்டும் என்று சொல்ல வருகிறார் ஆழ்வார்.

இதே கருத்தை மாணிக்க வாசகரிலும் நாம் பார்க்கலாம்.

இவர் நாரையாக பிறக்க வேண்டும் என்றார் ,அவர் கன்றை ஈன்ற பசுவைப் போல ஆக வேண்டும்  என்றார்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

(கற்றா = கன்றை ஈன்ற ஆ , பசு )

நாரை,  நீர் இருக்கும் வரை இருக்கும். நீர் வற்றிப் போனால் திருவேங்கட மலையை விட்டுப்   போய்விடுமே ...என்ற சந்தேகம் ஆழ்வாருக்கு வருகிறது.

அதற்கு அடுத்த பாசுரத்தில் சொல்கிறார் ஆழ்வார்....



Friday, June 12, 2015

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?


நம்பிக்கை.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு செல்வம், அதிகாரம், இருந்தாலும்...வாழ்வில் சில நேரம் வரும்...நம்பிக்கை தளரும் நேரம் வரும்....

அத்தனை செல்வமும், அதிகாரமும், உறவும், நட்பும் உதவாமல் போகும் காலம் வரும்.

நம் பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று சில நேரம் வரும்.

நம்பிக்கை தளரும். என்னால் முடியாது என்று மனமும் உடலும் சோர்ந்து போகும் நேரம் வரும்.

என்ன செய்வது ? யாரைக் கேட்பது, யார் உதவுவார்கள், எப்படி சமாளிப்பது என்று திகைக்கும் காலம் வரும்.

அந்த நேரத்தில் நம்பிக்கையை ஊட்ட நம் இலக்கியங்கள் உதவுகின்றன.

இறைவனை நம்பு. அவன் உனக்கு உதவே காத்து இருக்கிறான்...அவனுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்று படித்துப்  படித்து சொல்கின்றன.

அப்படி ஒரு நெருக்கடி பாண்டவர்களுக்கு வந்தது.....

பாண்டவர்கள் வன வாசம் செய்யும் காலம்.

அந்த நேரத்தில் துருவாசர் என்ற முனிவர் தன் சீடர்கள் புடை சூழ துரியோதனின் அரண்மனைக்கு வந்தார். துரியோதனனும் அவரை நன்றாக உபசரித்தான். அதில் மகிழ்ந்த அவர், "உனக்கு என்ன வேண்டும் " என்று கேட்டார்.

"முனிவரே, எப்படி இங்கு வந்து விருந்து உண்டு எங்களை மகிழ்வித்தீர்களோ, அதே போல் பாண்டவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பாண்டவர்களோ வனத்தில் இருக்கிறார்கள். முனிவரின் கூட்டமோ பெரியது. எப்படியும் பாண்டவர்களால் முனிவரின் கூட்டத்திற்கு உணவளிக்க முடியாது. அதனால் சினம் கொண்டு முனிவர் அவர்களை   சபிப்பார்...பாண்டவர்கள் நல்லா கஷ்டப்பட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படி கேட்டான் துரியோதனன்.

முனிவரும் தன் மாணவ குழாத்துடன் பாண்டவர்கள் இருக்கும் இடம் வந்தார்.

பாண்டவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். பாண்டவர்களில் புத்திசாலி சகாதேவன்.

அவன் சொன்னான் "கண்ணனை அழைப்போம்...அவன்தான் நம்மை காக்க முடியும் " என்று.

கண்ணன் இருப்பது துவாரகையில். பாண்டவர்கள் இருப்பதோ கானகத்தில். முனிவர் குளிக்கப் போய் இருக்கிறார். அவர் குளித்து வருவதற்குள் கண்ணன் வந்து  இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.

முதலில் கண்ணனுக்கு எப்படி செய்தி அனுப்புவது ?

இறைவன் , தன்னை யார் எப்போது எங்கு அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பானாம். கூப்பிட்ட உடனே ஓடி வந்து விடுவானாம்.

தருமன் , கண்ணனை நினைத்தவுடன் உடனே அவன் மனத்தில் வந்து நின்றானாம்.

பாடல்

தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக, 
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை 
                           அறத்தின் மகன்; 
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்' 
                           என நின்ற 
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை 
                           வந்து உதித்தானே.

பொருள்

தப்பு ஓதாமல் = தவறாக எதையும் பேசாத (தருமன்)

தம்பியர்க்கும் = தம்பிகளுக்கும்

தருமக் கொடிக்கும் = தர்மமே கொடியாக வந்தது போல் இருந்த பாஞ்சாலிக்கும்

இதமாக = இதமாக

அப்போது = அந்த நேரத்தில்

உணரும்படி = தன்னை உணரும்படி கண்ணனிடம் வேண்டினான்

உணர்ந்தான் =  அதை உணர்ந்தான். யார் ?

அசோதை மகனை = யசோதை மகன்

அறத்தின் மகன்= தர்மத்தின் மகன் (தர்ம புத்திரன்)

'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
                           என நின்ற = எப்போது , யாவர், எவ்விடத்தில் என்னை நினைப்பார்கள்  என்று இருக்கும்

ஒப்பு ஓத அரியான் = தனக்கு ஒப்பு இல்லாத , வாசித்து அறியமுடியாத அவன்

உதிட்டிரன் தன் = தர்ம புத்திரனின்

உளப்போதிடை = உள்ளித்தில்

வந்து உதித்தானே = வந்து உதித்தான்


நம்புங்கள். அதுதான் வாழ்க்கை.